திசைதேர் வெள்ளம் - 74

bowபோர்முரசு ஒலிக்கத்தொடங்கியதுமே சுருதகீர்த்தி அந்நாள்வரை அத்தருணத்தில் ஒருபோதும் உணர்ந்திராத ஒரு தயக்கத்தை தன் உள்ளத்திலும் உடலிலும் உணர்ந்தான். தேரை பின்நகர்த்தி படைகளுக்குள் புதைந்துவிட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அவ்வெண்ணத்தை உடலுக்குக் கொண்டுசென்று அசைவுகளாகவோ சொல்லாகவோ மாற்ற முடியாமையினால் உறைந்ததுபோல் அவன் நின்றான். அவன் ஆணைக்கு காத்திராமலேயே தேர்ப்பாகன் தேரை முன்னணிக்கு கொண்டுசென்றான். எதிர்க்காற்றின் தண்மை அத்தனை உளச்சோர்விலும் வருடி ஆற்றும் வல்லமைகொண்டிருந்ததை எண்ணி வியந்தான். வெம்மைகொண்ட எண்ணங்களின்மீதே அது தொடுவதுபோலிருந்தது.

எதிரில் கௌரவப் படையிலிருந்து எழுந்து வந்த அம்புகள் அவனைக் கடந்து சென்றன. சில அம்புகள் அவன் தேர்த்தூண்களிலும் கவசங்களிலும் முட்டி ஒலியெழுப்பி சிதறி விழுந்தன. ஒவ்வொரு அம்பும் ஒவ்வொரு சொல்லை உதிர்த்து விழுந்தது. சலித்துக்கொண்டன, விம்மின, உறுமின, கசப்புடன் சூள்கொட்டின, சிறுமியர்போல் நகைத்தன, ஆம் என்றன, இல்லை என்றன, மேலும் என்றன, நான் நான் என்றன. அவற்றை அறியாதவன்போல் விழி மலைத்து ஒரு கையில் வில்லும் மறுகையில் எடுத்த முதல் அம்புமாக அவன் அசைவழிந்து நின்றான். தேரின் அசைவுகளுக்கேற்ப அவன் உடல் கட்டித்தொங்கவிடப்பட்ட அணிப்பட்டம்போல் திரும்பியது.

வழக்கம்போல ஓரிரு கணங்களுக்குள்ளேயே போர் முற்றாக மூண்டுவிட்டிருந்தது. போர் மூண்ட ஒருகணத்துக்குப் பின் நோக்குகையில் அப்போர் நெடுநாட்களாக அதே விசையுடன் அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல் தோன்றும் விந்தையை அவன் பலமுறை உணர்ந்திருந்தான். அவ்வண்ணமெனில் அதற்கு முந்தைய கணம் வரை அப்போர் எங்கோ நிகழ்ந்துகொண்டிருந்திருக்கிறது. அவர்களின் உள்ளத்தில், கனவுகளில் அது அறுபடுவதே இல்லை. அது ஏதோ வடிவில் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. “போருக்கும் காமத்துக்கும் எவருக்கும் பயிற்சி தேவைப்படுவதில்லை” என்ற கிருபரின் சொல் குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவன் நினைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திற்குள் காமத்தையும் போரையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். புணராப் பெண்களாலும், கொல்லப்படாத எதிரிகளாலும் ஆனது ஆண்மகனின் அகம்.”

அவன் சூழ நோக்கிக்கொண்டு தேரில் நின்றான். ஒவ்வொருவரும் அதற்கு முன்பு முகத்திலோ உடலிலோ இல்லாதிருந்த வெறியை கொண்டுவந்து நிறைத்திருந்தார்கள். கூச்சலிட்டபடி, வசைபாடியபடி, இளிவரலாடியபடி, வெறியுடன் பற்களை நெரித்தபடி அம்புகளை தொடுத்தனர். கதைகளைச் சுழற்றி எதிரியை அறைந்தனர். நீள்வேல்களை உடல் வளைத்து வீசினர். உழலைத்தடிகளையும் கொக்கிக்கயிறுகளையும் நீள்பிடிக் கோடரிகளையும் கொண்டு போரிட்டனர். ஒவ்வொரு முறை படைக்கலமெழுகையிலும் அவர்களின் முகத்தில் குவிந்த வெறுப்பை, அப்படைக்கலம் சென்றடைந்தபோது மின்னிச்சென்ற களிப்பை நோக்கி நின்றபோது அந்த முகங்களை முன்னர் கண்டதே இல்லை என்று தோன்றியது. மென்மயிர்த் தோலை உரித்தகற்றி வெற்றுத்தசை தெரிய கிடத்தப்பட்டிருக்கும் வேட்டைவிலங்கு போலிருந்தது மானுடம் அங்கே.

சற்று நேரத்திற்குப் பிறகே பாகன் அவன் போரிடவில்லை என்பதை தெரிந்துகொண்டு “இளவரசே!” என்றான். அக்குரலால் அவன் திகைத்து “செல்க!” என்று ஆணையிட்டான். தேர் போர்முகப்பின் கொந்தளிப்புக்குள் நுழைந்ததும் அவன் தன் வில்லை நிலைநிறுத்தி நாணிழுத்து அம்புகளை ஏவத் தொடங்கினான். அந்த அம்புகளால் உயிரிழப்போர் அறிக, அவை அவ்வாறு எண்ணப்படவில்லை! அவற்றை தொடுத்தவன் கொலையாளி அல்ல. அவன் தோள்கள் முன்னோர்களால் எப்போதோ முடுக்கப்பட்ட கைவிடுபடைகள். அவர்களின் வஞ்சம் தலைமுறைகளாக தசைகளில் காத்திருந்தது. கண்களும் கைகளும் ஒத்திசைந்தன. பாகனும் தேரும் அதில் இணைந்தனர். அவன் அந்த நடனத்தில் முற்றிலும் கலந்தான். முழுமையாகவே தன்னை இழக்கையில் அடையும் விடுதலையில் அலைகொண்டான்.

ஒவ்வொரு முறையும் தோள் இறுகி அம்பு நெகிழ்கையில் தன்னுள்ளிருந்து ஒன்று வெளியேறுவதை உணர்வதுண்டு. எவரிடமோ எதையோ சொல்லிவிட்டதுபோல். அடுத்த அம்பை எடுக்கையில் அதற்குரிய நுண்சொல்லை உரைத்து அதில் தன்னுள்ளத்தை ஏற்றுகையில் அச்சொற்களினூடாக அத்தருணத்தில் தன் அகம் வடிவெடுப்பதை உணர்வதுண்டு. போர் அதன் அத்தனை இழப்புகளுடனும் அத்தனை வெறுமையுடனும் வெறும் களியாட்டென்றே அவனுக்கு தோன்றியது. ஒவ்வொரு நாளும் போருக்கெழுகையில் வெறுமையும், போர்முடிகையில் நிறைவும், பின்னிரவில் தனிமையும் துயரும், காலையின் முதல் விழிப்பில் ஊக்கமும் எதிர்பார்ப்பும் என அவன் அகம் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

அன்று உணர்ந்த முழு முற்றான அயன்மையை ஒருபோதும் உணர்ந்ததில்லை. அது அவன் கைகளில் எடையென ஏறி அமர்ந்திருந்தது. அவன் உள்ளத்தில் ஒவ்வொரு சொல்லும் தன்னை பிசின்போல் பற்றியிருந்த சொல்லின்மையிலிருந்து பிதுங்கி வெளிவர வேண்டியிருந்தது. அம்புகளுக்குரிய நுண்சொற்களில் ஒன்றைக்கூட அவன் முழுமையாக சொல்லவில்லை. வெற்றுப் பயிற்சியினால் அவன் அம்புகளை ஏவிக்கொண்டிருந்தான். போருக்கு வெற்றுப் பயிற்சியே போதும் என அவன் அறிந்தான். பயிற்சி என்பது ஒவ்வொன்றிலும் இருந்து உள்ளத்தை விடுவிப்பது. உள்ளம் அனைத்தையும் உதறி வேறெங்கோ திளைக்க செயலாற்றுவது.

போர் மூண்டதுமே பீஷ்மரும் அர்ஜுனரும் வெவ்வேறு இலக்குகளை தங்களுக்கென தெரிவு செய்துகொண்டனர். பீஷ்மர் திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் எதிர்த்துக்கொண்டு அம்புகளால் அவர்களை அறைந்து அணுஅணுவாக பின்னடையச் செய்தபடி வலப்பக்கம் சென்றுகொண்டிருந்தார். இடப்பக்கம் பூரிசிரவஸையும் ஜயத்ரதனையும் அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தார் பார்த்தர். தந்தையின் பின்படையாக அமைந்த வில்லவர் வளையத்தின் வலது எல்லையில் சுருதகீர்த்தி நின்றிருந்தான். மறு எல்லையில் சுருதசேனன் அமைந்திருந்தான். அதற்கு அப்பால் அபிமன்யூ சல்யரை எதிர்கொண்டான்.

போர் விசைகொண்டபோது தந்தையும் பீஷ்மரும் எதிர் திசைகளில் முன்னேற ஒரு மாபெரும் வட்டம் சுழல்வதாகத் தோன்றியது. படைகளை அவர்கள் தங்களுடன் இழுத்துச்சென்றார்கள். புயலின் சுழி. சுழியே விசையின் மையம். ஆனால் அது தான் நிகழ்வதை அன்றி எதையும் நிகழ்த்துவதில்லை, விளிம்புகளுக்கு அப்பால் தன்னில் ஆழ்ந்திருக்கிறது. அதன் நடுவே இருந்த வெற்றிடத்தில் விசையொன்று திரள்வதாக. அங்கே எதுவோ ஒன்று வந்தமர்வதற்கான பீடம் ஒருங்குகிறது. அவன் உள்ளம் அவ்வெண்ணத்தால் பதைப்பொன்றை அடைந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் அணுகிக்கொண்டும் இருக்கிறார்கள். மெல்ல இவ்வட்டம் சிறிதாகும். அதன் மையத்தில் அது நிகழும்.

அக்கணம் உருவான மெய்ப்புக்குளிர் அவனை சிலகணங்கள் வில் தாழ்த்த வைத்தது. எத்தனை தெளிவாக இதை உணர முடிகிறது! இன்று அது நிகழும்! அம்புகளால் எதிரிலிருந்த கௌரவத் தேர்வில்லவர்களை மீண்டும் மீண்டும் அடித்து பின்னடையச் செய்துகொண்டிருக்கும்போது அவன் உள்ளம் பீஷ்மரிலும் பார்த்தரிலுமே மாறி மாறி சென்றுகொண்டிருந்தது. பின்பொரு கணத்தில் எதிர்பாராதபடி நெஞ்சில் கூரிய ஈட்டியால் குத்தப்பட்டதுபோல் அவன் சிகண்டியை நினைவு கூர்ந்தான். பார்த்தருக்குப் பின்புறம் சென்ற தேரில் சிகண்டி அத்தேரால் சற்றே மறைக்கப்பட்டதுபோல் நின்றிருந்தார். அவர் முழு விசையுடன் போர்புரியவில்லை என்பது தெரிந்தது. தந்தையும் முழு விசையுடன் போர்புரிகிறாரா என்பது ஐயமாகவே இருந்தது.

அவன் பீஷ்மரை திரும்பிப்பார்த்தான். அவரும் முழு விசையுடன் போர்புரியவில்லை. விஞ்சுவதில்லாது நன்கறிந்ததும், ஒவ்வொரு நாளும் பயில்வதும் சலிப்பூட்டுவதுமான ஒரு செயலை உளமொன்றாது இயற்றுவது போலிருந்தார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் போலும். அருகிருந்த வில்லவனின் விழிகளை அவன் பார்த்தான். அவன் பீஷ்மரை நோக்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. திரும்பி இன்னொருவனை பார்த்தபோது அவனும் பார்த்தரை நோக்கிவிட்டு பீஷ்மரை பார்ப்பதை அறிந்தான். அது உளமயக்கா என்று எண்ணினான். அங்கிருந்த அனைத்துப் படைவீரர்களும் இளைய பாண்டவரையும் பீஷ்மரையுமே மாறி மாறி நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

அந்தப் பொழுது வந்தணையவிருக்கிறது. இன்று அந்திமுரசு ஒலிப்பதற்குள். அல்லது இன்னும் சற்று நேரத்தில். ஒருவேளை அடுத்த கணமே. ஒவ்வொரு கணமுமென போரை நிகழ்த்தியபடி அதை எதிர்பார்த்திருந்தான். பீஷ்மரால் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் மேலும் மேலும் பின்னடைய அவர் பாண்டவப் படைகளுக்குள் புகுந்து ஊடுருவிச் சென்றார். பூரிசிரவஸ் பார்த்தரின் அம்பு இடையில் தைக்க தேரில் மல்லாந்து விழுந்தான். அவனுடைய கால்குறடு தெறித்தது. அவன் தேர்ப்பாகன் தேரை பின்னெடுத்துச் செல்ல அங்கு கிருபர் தன் அம்புகளுடன் வந்தார். வருகையிலேயே அம்புகளால் அறைந்து காற்றையே முள்வேலியாக்கியபடி அணுகினார்.

பார்த்தரின் விசை மட்டுப்பட்டது. அவருடைய இடப்பக்கம் நின்றிருந்த வில்லவன் அலறி விழுந்தான். மீண்டும் மீண்டுமென துணைவில்லவரை அறைந்து வீழ்த்திக்கொண்டே இருந்தார் கிருபர். பார்த்தரின் நோக்கு அரைக்கணமேனும் அதை நோக்கி திரும்புமென்றால் அவர் அம்பு வந்து அறையும் என்று தெரிந்தது. ஆனால் தந்தையின் விழி கிருபரிலேயே நிலைகொண்டிருப்பதை சுருதகீர்த்தி கண்டான். கிருபரிலல்ல, அவர் விழிகளில். அவர் விழிகளிலும் அல்ல, அவருள் உறையும் சித்தத்தின் கூர்முனையில். அரைவிழி மூடியது போலிருந்தன இளைய யாதவரின் கண்கள். அவர்கள் அங்கே ஊழ்கத்திலென திகழ்ந்தனர்.

சுருதகீர்த்தி தந்தையின் வலப்பக்கம் சென்று ஜயத்ரதனை இடைவிடாத அம்புகளால் அறைந்து அவனை தன்னை நோக்கி திரும்ப வைத்தான். பார்த்தர் கிருபரை அம்புகளால் அறைந்து நிலைக்கச்செய்து பின்னர் மெல்ல மெல்ல புறம் தள்ளத்தொடங்கினார். மீண்டும் பார்த்தரின் வில்லவர் படை கௌரவப் படைக்குள் புகுந்து உள்ளே சென்றது. உருகும் மெழுகை கொதிக்கும் இரும்புக்கழி என கௌரவரை இருபுறமும் அகற்றி இளைய யாதவர் செலுத்திய தேர் முன்னால் சென்றது. ஜயத்ரதன் தன்னை பார்க்கவில்லை என்பதை சுருதகீர்த்தி உணர்ந்தான். அவன் நோக்கு பார்த்தரிலும் அப்பால் எங்கோ தெரிந்த மீன் கொடியிலுமே இருந்தது. எப்படி இது அனைத்தும் அனைவருக்கும் தெரிகிறது? எவரேனும் ஒருவர் உணர்ந்து பிறருக்கு சொல்லியிருக்கலாம் என்றாலும் ஒரு படை முழுக்க இது பரவுவது எளிதா?

முதலில் அவன் உடலில் கோள்மயிர் உருவாகியது. பின்னரே அவன் அந்த எண்ணத்தை அடைந்தான். முந்தையநாள் கனவில் அவர்கள் அனைவரும் அதை பார்த்திருக்கக்கூடும். அங்கு நிகழ்ந்த ஒவ்வொரு பெருநிகழ்வையும் அத்தனை வீரர்களும் எவ்வாறோ முன்னுணர்ந்திருந்தனர். முன்னரே நிகழ்ந்த ஒன்று மீண்டும் நிகழ்வதுபோல் அப்போர் என்று வெவ்வேறு முறை எளிய வீரர்களும் தேர்வலரும் அவனிடம் கூறியிருந்தனர். தாங்கள் அன்று இறப்போமெனும் உட்சொல் எழாது எவரும் அக்களத்திற்கு வரவில்லை. ஆகவே மீண்டு செல்கையில் எவருக்கும் உயிரோடிருப்பதன் திகைப்பு ஏற்படவில்லை. ஒருநாள் ஈட்டப்பட்டது என்னும் உவகை மட்டுமே இருந்தது.

கடோத்கஜன் துரியோதனனுடனும் துச்சாதனனுடனும் போர்புரிந்துகொண்டிருக்கும் செய்தியை முரசுகள் அறிவித்தன. பீஷ்மரின் முன்னிருந்து திருஷ்டத்யும்னன் விலகி மைய ஆணைமாடத்திற்குள் சென்றான். பீஷ்மரை செறுக்க சுருதசேனனும் சுதசோமனும் சென்றனர். “பீஷ்மரை சென்று தடுத்து நிறுத்துக… இனிமேலும் அவர் நம் படைக்குள் செல்லலாகாது” என்று அபிமன்யூவுக்கு திருஷ்டத்யும்னனின் ஆணை வானில் ஒலித்தது. அந்தப் போரில் மீள மீள நிகழ்வதொன்றே. எவருக்கு எவர் இணை, எத்தனை பேரை சேர்த்தால் எவர் நிகர் என்ற கணக்குகள். ஒரு மாபெரும் துலாத்தட்டில் மாறி மாறி வீரர்களை அள்ளி வைத்து அதன் முள் நடுங்கி இருபுறமும் ஆடுவதை பார்த்துக்கொண்டிருத்தல்.

பீஷ்மருக்கு எவரும் இணையல்ல என்று உணர்ந்தமையால் பாண்டவப் படையின் வெவ்வேறு வீரர்களை அவருக்கு முன் அள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு நிறைகொண்டு அவர் கடந்துசென்றார். ஒருபக்கம் வெல்லமுடியாதவர், நிகரற்றவர் என்று தெரிந்துகொண்டே இருந்தாலும் எங்கோ அவர் சரிகிறார் என்ற எண்ணமும் இருந்தது. மீண்டும் அவன் ஏதோ ஒன்றில் உளம்முட்டிக்கொள்ள திடுக்கிட்டு எண்ண ஒழுக்கை திருப்பிக்கொண்டான்.   நின்று துள்ளுவதை அவன் திகைப்புடன் பார்த்தான். “வில்லவர்களை வீழ்த்துக! சூழ்ந்துகொள்ளலை உடைத்துச்செல்க!” என முழவுகள் ஆணையொலித்தன.

திருஷ்டத்யும்னனின் முரசு துடிப்பு கொண்டது. “செறுத்து நிறுத்துக! பிதாமகர் பீஷ்மரை செறுத்து நிறுத்துக! பிதாமகர் வெறி கொண்டிருக்கிறார்! முழு விசையை அடைந்துள்ளார்! நம் படையின் தேர்ந்த வில்லவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்துக!” என்று ஒலித்தது. சுருதகீர்த்தி திகைத்து திரும்பிப் பார்த்தான். முழவோசை அவனுக்கான ஆணையை ஒலித்தது. “சுருதகீர்த்தி பீஷ்மரை நோக்கி செல்க! சுருதகீர்த்தி பீஷ்மரை நோக்கி செல்க!” அவன் பாகனிடம் “பிதாமகரை நோக்கி!” என்றான். அவன் சொல்வதற்கு முன்னரே தேரைத் திருப்பி படைகளினூடாக பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றான் பாகன்.

பிதாமகர் பீஷ்மர் சலித்த, ஆர்வமற்ற நிலையிலிருந்து அனல்பட்ட களிறு அலறி விசைகொள்வதுபோல் கொலைவெறி அடைந்திருந்தார். தொலைவிலேயே அவரது தேர் சென்ற தடத்தை பார்க்க இயன்றது. தேர்கள் உடைந்து சிதறிக்கிடந்தன. விண்ணிலிருந்து உதிர்ந்தவைபோல நிலம் முழுக்கப் பரவி வில்லவர்களின் உடல்கள் கிடந்தன. சிதறல்களே எஞ்சியிருந்த நெடுஞ்சாலை. அங்கிருந்த ஒவ்வொன்றிலும் அவருடைய எழுந்த பெருஞ்சினத்தை நோக்க முடிந்தது. நோக்க நோக்க அவன் நெஞ்சு அச்சத்திலும் வியப்பிலும் பதறத் தொடங்கியது. ஒற்றை வீரர் தன் ஆற்றலால் அவ்வளவு பெரிய அழிவை உருவாக்க முடியுமா? எனில் அவருள் எத்தனை பெரிய சீற்றம் எழுந்திருக்கவேண்டும்? ஊனுடலுக்குள் அத்தனை அனலெழுந்தால் தாங்குமா?

முதல்நாள் முதல் பீஷ்மர் பாண்டவப் படைகளில் பேரழிவை உருவாக்கிக்கொண்டுதானிருந்தார். என்றும் அவர் வில்கொண்டுசென்ற தடம் தெளிந்தே தெரிந்தது. ஆனால் அன்று உருவாக்கிய அழிவுக்கு இணையே இல்லை என்று தோன்றியது. அவர் ஒருவரையும் எஞ்சவிடவில்லை. பலர் பின்னடைகையில் கொல்லப்பட்டிருந்தனர். பலர் முதுகில் அம்பு தறைத்துச் சரிந்திருந்தனர். எளிய காலாள்படையினர். பயிலாத இளமைந்தர். அஞ்சியமைந்த முதியோர். அத்தனை முகங்களிலும் திகைப்பு இருப்பதுபோல அவனுக்குப் பட்டது. பீஷ்மர் உருவில் பிறிதொரு தெய்வம் எழுந்திருக்குமா என்ன? எட்டுத் தெய்வங்கள் குடிகொண்டது அவர் உடல் என்பார்கள். எட்டுத் தெய்வங்களும் அகன்ற பீடத்தில் எழுந்தருளியதா ஏழாமுலகத்து இருள்தெய்வம்?

“சூழ்ந்துகொள்க! பிதாமகரை சூழ்ந்துகொள்க! தடுத்து நிறுத்துக! காலாட்படையினரும் பிறரும் அவர் முன்னிலிருந்து விலகுக! அவர் அம்புகளின் எல்லைக்குள் கவசமணிந்த வில்லவர் மட்டுமே நின்றிருக்கவேண்டும்!” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை வந்துகொண்டிருந்தது. அவன் பீஷ்மரை சென்றடைந்தான். பீஷ்மரின் கைகளின் விசையை அவன் எப்போதுமே வியந்துதான் நோக்குவான். அன்று அவர் விழிதொட முடியாத விரைவுகொண்டிருந்தார். ஆனால் அவரிடம் எப்போதுமிருக்கும் நடன இசைவு அகன்றிருந்தது. சுழலியால் அலைமோதிக்கொண்டிருக்கும் மரம் போலிருந்தார்.

பீஷ்மரின் முன்னிருந்து சதானீகன் அம்புபட்டு விழுந்து தேரில் பின்னடைந்தான். சுருதசேனனின் தேர் உடைந்தது. அவனை தேடிவந்த அம்புகளிலிருந்து காக்க பாகன் தேரை திருப்பினான். சுருதசேனன் நிலைசாய்ந்து அம்புடன் எழுவதற்குள் அவனை பீஷ்மரின் அம்புகள் தாக்கி தேரிலிருந்து அப்பால் விழச் செய்தன. பிரதிவிந்தியனை பீஷ்மரின் அம்புகள் தாக்குவதற்குள் நாணொலியுடன் அபிமன்யூ பீஷ்மரை தன் அம்புகளால் எதிர்கொண்டான். சுருதகீர்த்தி மறுபுறம் சென்று பீஷ்மரை தாக்கினான். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் களத்திற்கு வந்தனர். நால்வரும் நான்கு திசைகளிலிருந்து அவரைத் தாக்க பீஷ்மர் தன் தேர்த்தட்டில் நின்றபடியே சுழன்று அவர்கள் அனைவரின் அம்புகளையும் தடுத்தார்.

அவர்களால் பீஷ்மரை அம்புகளால் தொடவே முடியவில்லை. அவருடைய அம்புகளிடமிருந்து தங்களைக் காக்கவே அவர்கள் போராட வேண்டியிருந்தது. அம்புகளின் வடிவுக்கும் வகைமைக்கும் எவ்வொழுங்கும் இருக்கவில்லை. மலையிடிந்து சரிவதுபோல பெரும்பாறைகளும் கூழாங்கற்களுமென அவை பெய்தன. கட்டற்ற வெறிக்கு இயற்கைவல்லமைகளின் ஆற்றல் அமையும் என்பதை சுருதகீர்த்தி கண்டான். புயலையோ காட்டுநெருப்பையோ எதிர்கொள்வதுபோல இயலாததுதான் அது. அத்தனை ஆற்றலையும் அள்ளி வீசுவது, வெடித்தெரிந்து அணைவது. ஆகவே நெடும்பொழுது இவ்விசை நீடிக்காது. இது அணையும். ஓயும். வேறுவழியே இல்லை. பயிற்சியும் இசைவும் ஆற்றலை வீணாக்காது வெளிப்படுத்துவதற்கே. இது மதகுத்திறப்பல்ல, கரையுடைப்பு. இதோ முடிந்துவிடும். அதுவரை நின்றிருக்கவேண்டும். அது ஒன்றே இலக்கு.

வில்லவர்கள் பீஷ்மரின் அம்புகள்பட்டு ஓசையின்றி விழுந்தனர். ஒற்றை நாணில் ஏழு அம்புகளை, பன்னிரு அம்புகளை, இருபத்துநான்கு அம்புகளை அவர் செலுத்தினார். தேர்த்தட்டில் காற்றுச் சகடையென நோக்கற்கரிய விசையில் அவர் சுழல்வதாகத் தோன்றியது. இருபத்துநான்கு அம்புகளை ஒற்றை நாணிலிழுத்து முழு விசையில் சுற்ற அவை ஒவ்வொன்றும் தனித்தனியான திசையும் இலக்கும் கொண்டிருப்பதை முதன்முறையாக அவன் பார்த்தான். ஒரு வீரன் அவ்வாறு களத்தில் போரிட்டிருக்கிறான் என்பதை கதையில் சூதன் சொன்னால் அக்கணமே சிரித்து கைவீசி அவன் அதை புறக்கணித்திருப்பான். போரென்பது எப்போதுமே மானுட எல்லைகளின் உச்சமென்பதனால் எல்லாச் செயல்களும் அருஞ்செயல்களே என்பார்கள். அருஞ்செயல்களின் எல்லையை எப்போதும் புதிய மானுடன் ஒருவன் வந்து கடக்கிறான். அதிமானுடர்கள் உருவாகும் களம் இது. ஆயினும் அது நம்புவதற்கு அரியதாக, நோக்கி அறிகையிலேயே இயல்வதல்ல என்று தோன்றியது.

பீஷ்மரின் அம்புகள் அவன் தேரிலும் கவசங்களிலும் அறைந்தன. சீழ்க்கை ஓசையிட்டபடி அவனைக் கடந்து சென்றன. சிற்றம்புகளின் பெருந்தொகையை அனுப்பி அவற்றால் படைவீரர்கள் நிலையழிந்திருக்கையில் விழிதொடமுடியாத விசையில் பேரம்பொன்றை எடுத்து முன்னரே இலக்குதேரப்பட்ட வீரன் ஒருவனின் நெஞ்சைப் பிளந்து வீழ்த்துவது அவரது போர்முறையாக இருந்தது. அவர் முன் சரிந்து விழுந்த தேர்களும் உடல்களுமே அவருக்கான கோட்டைக் காப்பென ஆயின. அந்த எல்லை விரிந்து அகலுந்தோறும் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் அனுப்பிய அம்புகள அவரை சென்றடைய இயலவில்லை. ஆனால் அவர் அனுப்பிய அம்புகள் வந்து அவர்களின் அணுக்க வில்லவர்களை ஒவ்வொருவராக வீழ்த்தின.

அவரது கை தன் கையைவிட ஒருமடங்கு நீளம் மிகையானது. தன்னைவிட ஒருமடங்கு உயரமானவர். அவர் வில் அவரைவிட மிகப் பெரியது. ஆகவே அவர் இழுத்து நாணேற்றுகையில் எறிவேலைவிட நீளம் கொண்டிருந்தது அம்பு. அவருக்கும் பிறருக்குமான இடைவெளியைக் கடந்துவந்து தாக்குகையில் முழு விசையுடன் அது இருந்தது. அவன் அனுப்பிய அம்புகள் அனைத்தும் அவரை அடைவதற்குள்ளாகவே விசையழிந்து வளைந்து நிலம்பட்டன. அல்லது தளர்ந்தவைபோல் அவர் காலடியில் சென்று விழுந்தன.

அவரை எவ்வகையிலும் தடுக்க இயலாதென்று அவன் உணரத்தொடங்கினான். அவரது கைகளின் நீளம் அல்ல, அம்புகளின் அளவுமல்ல, அவையென வெளிப்படும் பிறிதொன்று அங்கே நின்றிருந்தது. அவர்கள் அனைவரையும்விட மிகப் பெரியது. எவ்வகையிலும் எதிர்கொள்ள முடியாதது. அணுகுதலே இயலாது. இந்த நெடிய உடலில் எழுந்திருக்கும் அது தனக்குரிய உடலொன்றை உருவாக்கிக்கொண்டது. எத்தனை பொங்கியிருந்தால் இமையம் தனக்கென அத்தனை பேருடலை கொண்டிருக்கும் என்னும் கவிச்சொல் நினைவிலெழுந்தது. அணுகவே முடியாது. ஆம், ஒருவேளை கொன்று வீழ்த்தினாலும் வெல்லமுடியாது.