திசைதேர் வெள்ளம் - 51

bowயுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன் அளித்த ஓலையை படைத்தலைவன் தீர்க்கபாகு படித்தான். யுதிஷ்டிரர் முகவாயை தடவியபடி அதை கேட்டிருந்தார். அவர் மிகவும் தளர்ந்திருந்தார். பீமனும் தளர்ந்தவன்போலிருந்தான். வழக்கமாக அவையில் நின்றுகொண்டிருக்கும் அவன் பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான்.

முந்தையநாள் போரிலும் பாண்டவப் படைகளுக்கு மிகப் பெரிய இழப்புகள் அமைந்திருந்தன. பிரியதர்சனும் உத்தமௌஜனும் சத்ருஞ்ஜயனும் சுமித்ரனும் பாஞ்சால்யனும் சுரதனும் களம்பட்டதை தீர்க்கபாகு வாசித்தபோது துருபதர் பெருமூச்சுவிட்டார். அந்த ஓசை அவை முழுக்க கேட்டது. உத்தரமல்லநாட்டு தீர்க்கதந்தன் பெயர் சொல்லப்பட்டபோது துருபதரின் இருமலோசை கேட்டது. அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தன் வசுதனனும் இளையோன் நீலனும் கொல்லப்பட்டதை படித்தபோது நடுவே துருபதரின் இருமலோசை மட்டும் உரக்க ஒலித்தது. படைத்தலைவன் சற்று நிறுத்தி அவரை நோக்கினான். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று துருபதரை அணுகி ஏதோ சொல்ல அவர் கைநீட்டி மறுத்தார். “மாண்டவர்கள் விண்ணின் ஒளியில் நிறைவுகொள்க! வீரர் பொன்னுலகு அவர்களுக்கு அமைக!” என்று படைத்தலைவன் படித்தான். அவையினர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர்.

அரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் இறந்த செய்தியை சொன்னதும் அரக்கர் குடித்தலைவர்கள் தங்கள் கோல்களை மேலே தூக்கி “மண்ணுள் உறங்குக! மண்ணுள் உறங்குக!” என்றனர். நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் படைத்தலைவன் நினைவுகூர்ந்தான். “மண்ணுள் உறங்குக! மண்ணுள் உறங்குக!” என நிஷாதர்களும் கிராதர்களும் வாழ்த்துரைத்தனர். மாண்டவர்களின் பெயர்கள் வந்துகொண்டே இருந்தன. துருபதர் இருமிக்கொண்டிருந்தார். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று அவரிடம் அழுந்தப்பேசி அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். அவர் தொய்ந்த தோள்களும் நடுங்கும் கால்களுமாக செல்வதை அவை நோக்கி அமர்ந்திருந்தது.

யுதிஷ்டிரர் “நமக்கு பேரிழப்பு…” என்றார். சாத்யகி “நிகராகவே அவர்களுக்கும் இழப்புகள் உண்டு… நேற்று நம் இளையவர் பீமசேனர் கௌரவ மைந்தர்கள் இருநூற்றிமுப்பதேழுபேரை கொன்றார். அபிமன்யூ நாற்பத்துநான்கு பேரை கொன்றார். கௌரவர்கள் திருதசந்தனும் ஜராசந்தனும் துராதாரனும் விசாலாக்‌ஷனும் சுஹஸ்தனும் வாதவேகனும் பீமவிக்ரமனும் கொல்லப்பட்டார்கள். மகாபாகு, சித்ராங்கன், சித்ரகுண்டலன், பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன்…” என்று தொடர யுதிஷ்டிரர் “போதும்!” என்று தலையை பற்றிக்கொண்டு சொன்னார். சாத்யகி அமரப்போக சிகண்டி “அல்ல. இளையோனே, நீ சொல்க! இது போரவை. நம் களவெற்றியைச் சொல்ல நாம் ஏன் அஞ்சவேண்டும்? சொல்க!” என்றார். சாத்யகி யுதிஷ்டிரரை நோக்கியபின் “தீர்க்கபாகுவும் சுவீரியவானும் சுவர்ச்சஸும் ஆதித்யகேதுவும் துஷ்பராஜயனும் அபராஜிதனும் சாருசித்ரனும் சராசனனும் சத்யசந்தனும் சதாசுவாக்கும் நேற்று கொல்லப்பட்டார்கள்” என்றான். “இத்தனை கௌரவர்கள் இதற்கு முன் பலியானதில்லை. ஏற்கெனவே அவர்கள் உளம் தளர்ந்திருக்கிறார்கள். மீண்டெழுவார்கள் என்று தோன்றவில்லை.”

ஆனால் பீமன் எந்த உணர்வையும் காட்டவில்லை. அங்கே நிகழ்ந்த உரையாடல்களை அவன் செவிகொண்டதாகவே தெரியவில்லை. “நம் படைசூழ்கையை திருஷ்டத்யும்னன் விளக்கட்டும்” என்று குந்திபோஜர் சொன்னார். திருஷ்டத்யும்னன் மின்கதிர்சூழ்கையின் அமைப்பைப் பற்றி விளக்கினான். நெடுந்தொலைவுக்கு உச்சவிசையில் குறைந்த நேரத்தில் தொடர்ச்சி அறுபடாது செல்லும் தன்மைகொண்டது அது. அதற்குரிய எவ்வடிவையும் எடுக்கலாம். கிளை பிரியலாம், வளைந்து சவுக்குச்சுழற்சியாகலாம், அம்பென நீண்டும் பாயலாம். அவன் அதை விளக்கியபோது எவரும் மாற்று உரைக்கவில்லை. ஐயங்களும் எழவில்லை. ஒவ்வொருவரும் சோர்வுற்றிருந்தனர். வேறு எவரோ இருமத்தொடங்கினார்கள். படைசூழ்கையை அவை ஏற்று ஓலையில் யுதிஷ்டிரர் கைச்சாத்திட்டதும் மீண்டும் அமைதி நிலவியது.

யுதிஷ்டிரர் யுயுத்ஸுவை பார்த்தார். யுயுத்ஸு எழுந்து தலைவணங்கி “அவையோரே, நம்முடன் படையில் சேர்வதற்காக உத்தர விதர்ப்பத்தின் போஜகடகத்தை ஆளும் அரசர் ருக்மி இன்று காலை நம் படைகளுக்குள் வந்துள்ளார். அவர் இளைய யாதவரை சந்தித்து வணங்கி ஒப்புதல் பெற்றுள்ளார். அவர் அவைக்கு வர ஒப்புதல் கோருகிறேன்” என்றான். மூன்றே சொற்றொடர்களில் அனைத்தையும் சொல்லிவிடவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். ருக்மியின் பெயரைச் சொன்னதுமே எழுந்த எதிர்ப்பு இளைய யாதவரின் பெயரால் இல்லாமலாகியது. சிகண்டி “அவருடைய நோக்கத்தை நான் ஐயப்படுகிறேன்” என்றார். அந்த நேரடிக் கூற்று அவையை திகைக்கச் செய்தது. யுதிஷ்டிரர் சினத்துடன் “அதை முடிவு செய்யவேண்டியவர் இளைய யாதவர், நாமல்ல” என்றார். “படையில் சேர்த்துக்கொள்ள வேண்டியவர் தாங்கள்” என்றார் சிகண்டி. “இல்லை, அதுவும் இளைய யாதவரின் முடிவே” என்றார் யுதிஷ்டிரர்.

அவையின் நோக்கு முழுக்க விதர்ப்ப இளவரசர்களை நோக்கி திரும்பியது. ருக்மரதனும் ருக்மகேதுவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ருக்மபாகுவும் ருக்மநேத்ரனும் அவைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் குழம்பிய முகத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். நகுலன் “விதர்ப்பர்கள் இதைப்பற்றி தங்கள் எண்ணத்தை சொல்லலாம்” என்றான். ருக்மரதன் “நாங்கள் சொல்வதற்கேதுமில்லை. முடிவை அரசரே எடுக்கட்டும். அதற்கு எனக்கு முழு ஒப்புதலே” என்றான். சிலகணங்கள் மீண்டும் அவை தயங்கியது. அந்தத் தயக்கம் ஏன் என்று யுயுத்ஸுவுக்கு புரியவில்லை. திருஷ்டத்யும்னன் “அவ்வாறெனில் விதர்ப்ப அரசரை அவைக்கு அழைக்கலாமல்லவா?” என்றான். யுதிஷ்டிரர் ஒப்புதலளித்து தலையசைக்க சகதேவன் எழுந்து வாயிலுக்குச் சென்று நின்றான்.

ருக்மி உள்ளே வந்ததும் சகதேவன் தலைவணங்கி “விதர்ப்பத்தின் அரசருக்கு நல்வரவு… இந்த அவை தங்கள் வருகையால் நிறைவுகொள்கிறது” என்றான். ருக்மி அவனை வலக்கை தூக்கி வாழ்த்தி “நன்று திகழ்க!” என்றபின் யுதிஷ்டிரரை வணங்கி “உத்தரவிதர்ப்பத்தின் போஜகடகத்தின் அரசனாகிய ருக்மியின் வணக்கம். வெற்றியும் சிறப்புகளும் திகழ்க!” என்றான். யுதிஷ்டிரர் தலைவணங்கினார். சகதேவன் அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தான். யுதிஷ்டிரர் “தாங்கள் இங்கே படையுடன் வந்திருப்பதாக சொல்லப்பட்டது. தங்கள் படைகளை நமது படைகளுடன் இணைந்துகொள்ள ஆணையிடும் ஓலை இப்போதே அளிக்கப்படும்” என்றார். ருக்மி கையசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.

யுதிஷ்டிரர் “விதர்ப்பப் படைகள் முன்னரே எங்குள்ளனவோ அவற்றுடன் போஜகடகத்தின் படைகளும் இணைந்துகொள்வதே நன்று. அவர்களுடைய குழூஉக்குறிகளும் போர்முறைகளும் ஒன்றே என்பதனால் இணைந்து போரிட இயலும்” என்றார். ருக்மரதன் எழுந்து “நாங்கள் சிறு படை என்பதனால் விராடப் படைப்பிரிவில்தான் இணைந்துகொண்டோம். விராடர்களின் மண்மறைவுக்குப் பின் விராடப் படைகள் ஏழாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு தலைமையின்கீழ் அமைக்கப்பட்டன. எங்களை இப்போது பாணாசுரரின் மைந்தர் சக்ரர் தலைமைதாங்கும் பதினேழாம் படைப்பிரிவுடன் இணைத்திருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “நன்று, அவர் ஆற்றல்மிக்கவர். விதர்ப்பத்தின் படைகள் அவரால் ஒருங்கிணைக்கப்படட்டும்” என்றார்.

ருக்மி சினத்துடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள்? விதர்ப்பப் படைகள் அசுரர்களால் நடத்தப்படுகின்றனவா?” என்றான். தன் இளையோனை நோக்கி திரும்பி “இதை அவையில் எழுந்து நின்று சொல்ல உனக்கு நாணமில்லையா? நீ பீஷ்மகரின் குருதியில் எழுந்தவன்தானா? கீழ்மகனே, அசுரருக்குக் கீழே படைக்கலமெடுத்து நிற்கிறாயென்றால் நீ அசுரனுக்கும் கீழோன்!” என்று கூவினான். “விதர்ப்பரே, இங்கே குலமல்ல திறனே நோக்கப்படுகிறது. சக்ரர் பாரதம்கண்ட பெருவீரர்களில் ஒருவர்” என்றார் யுதிஷ்டிரர். “அவனைவிட ஆற்றல்கொண்ட கரடிகளும் குரங்குகளும் காட்டில் இருக்கலாம். அவை நடத்துமா படையை? ஷத்ரியன் குலத்தால் உருவாக்கப்படுபவன், முறைமைகளால் நிலைகொள்பவன், குலமிழந்த ஷத்ரியன் வெறும் படைபயின்ற விலங்கே” என்றான் ருக்மி.

சகதேவன் “விதர்ப்பரே, உளம்கனியுங்கள். உங்கள் எண்ணத்தை புரிந்துகொள்கிறேன். இனி அப்படைகள் அனைத்துக்கும் நீங்களே தலைமைகொள்க! உங்கள் கீழ் சக்ரர் திகழ்வார்” என்றான். “அசுரர்களை நான் வழிநடத்தவியலாது” என்றான் ருக்மி. “ஒரு தனிப் படைப்பிரிவாக செயல்படும் அளவுக்கு உங்கள் படை பெரிதல்ல…” என்று சகதேவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “ஒவ்வொரு குலமும் தனியாக செயல்படுவதற்கு படைத்தலைமையின் ஒப்புதல் இல்லை. அது படைகளின் ஒருமையை முற்றழிப்பது” என்றான். ருக்மி “இங்கே என்ன நிகழ்கிறது? அஸ்தினபுரியின் குலப்பூசல் என எண்ணினேன். அரக்கர்களையும் அசுரர்களையும் கொண்டா அதை நிகழ்த்துகிறீர்கள்? என்ன கீழ்மை!” என்றான்.

பீமன் “விதர்ப்பரே, எங்கள் தரப்பில் படைகொண்டு நிற்பவர்கள் பெரும்பாலும் அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதருமே. நீங்கள் விரும்பும் தூய ஷத்ரியக் குடிகள் அங்குதான் உள்ளனர். அங்கேயே நீங்கள் செல்லலாம்” என்றான். சம்பராசுரரின் மைந்தன் கீர்த்திமான் “அங்கே சேர்த்துக்கொள்ளப்படாமல்தான் இங்கே வந்திருக்கிறார்!” என்றான். “யாரடா அவன்? இழிசொல் உரைத்தவன் எவன்?” என ருக்மி திரும்பினான். “நான்தான். என் பெயர் கீர்த்திமான், சம்பராசுரரின் மைந்தன்” என்றான். “விதர்ப்பரே, நீங்கள் போற்றும் பெருங்குலத்தார் உங்களை ஏற்கவியலாது என அனுப்பிவிட்டனர். ஆகவே நீங்கள் குலப்பெருமையை சற்றே இழக்கத்தானே வேண்டும்?” அவையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.

“விதர்ப்பம் என்றும் தன் பெருமையை இழக்காது!” என்று ருக்மி கூவினான். “நாங்கள் பாரதவர்ஷத்தின் தொன்மையான அரசகுலம். தொல்புகழ் தமயந்தி பிறந்து மும்முடிசூடி அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுதாண்ட பெருமை கொண்டது. அப்பெருமையே எங்கள் பெருஞ்செல்வம். எந்நிலையிலும் அதை நாங்கள் விட்டுத்தரப் போவதில்லை.” முதிய கிராதமன்னர் கூர்மர் “அவ்வாறென்றால் நீங்கள் இந்தத் தரப்பில் நின்று போர்புரிய இயலாது, விதர்ப்பரே. இப்போரில் நாங்கள் வெல்வோம். அதன் பின் எங்கள் அனைவருக்குமே அவையமர்வில் நிகரிடம் அளிக்க பாண்டவப் பேரரசர் யுதிஷ்டிரர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றார். ருக்மி சீற்றத்துடன் யுதிஷ்டிரரை நோக்கி “அது எவ்வாறு இயலும்? குடிகளை வகுத்து கடமைகளை அளிப்பது வேதம். வேதத்தை மறுக்கிறீர்களா?” என்றான். “இளைய யாதவர் வேதமுடிபை முன்வைக்கிறார் என்றே நான் அறிந்திருக்கிறேன். வேதமறுப்பை என்றால் அதற்கு என் வாள் எழாது!”

“நீங்கள் இதை அவரிடமே கேட்கலாம், விதர்ப்பரே” என்றார் யுதிஷ்டிரர். “நான் இனி சொல்வதற்கொன்றுமில்லை. இந்தப் போர் ஏற்கெனவே முழுமையாக மூண்டுவிட்டது. இதில் எவருக்கும் எத்திசையிலும் பின்னகர்வு இனி இயல்வது அல்ல. நீங்கள் முடிவெடுக்கலாம்.” ருக்மி “முடிவெடுக்கிறேன்… அதற்கு முன் நான் அவரிடமே அதைப்பற்றி பேசவேண்டும்” என்றபின் திரும்பி தன் இளையவர்களை நோக்கி “கிளம்புங்கள் என்னுடன்… நீங்கள் பீஷ்மகரின் குருதியில் பிறந்தவர்கள் என்றால் இப்போதே கிளம்புக!” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். “கீழ்மக்களே, என்ன தயங்குகிறீர்கள்? நீங்கள் ஷத்ரியர்கள் என்றால் கிளம்புங்கள்!” என்றான் ருக்மி. “நாங்கள் எந்தையின் ஆணையை ஏற்று வந்தவர்கள். அவருடைய ஆணைக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று ருக்மரதன் சொன்னான்.

ருக்மி கையோங்கியபடி அவனை அடிப்பதுபோல் சென்று தயங்கி நின்று “இதன் விளைவு என்ன என்று அறிவீர்களா? ஏற்கெனவே அனைத்துப் பெருமைகளையும் இழந்து அவைச்சிறுமை கொண்டு நின்றிருக்கிறது நம் குடி… அசுரருக்கும் அரக்கருக்கும் அடிமைப்பணி செய்தீர்கள் என்றால் நீங்கள் ஷத்ரியர் முன் தலைநிமிர்ந்து நிற்க இயலாது” என்றான். “நம் குடிப்பெருமைக்காகவே நான் இத்தனைநாள் நோன்புகொண்டேன். இங்கே வந்ததும் அதற்காகவே. நான் கொண்ட அனைத்தையும் இழக்கும் கீழ்மையை இவர்கள் எனக்கு அளிப்பார்கள் என்றால் அதை ஏற்க இயலாது…” என்றான். பேசமுடியாமல் அவனுக்கு மூச்சிரைத்தது.

ருக்மரதன் “மூத்தவரே, நீங்கள் கொண்ட சினம் குடிப்பெருமையின் அழிவால் அல்ல. அது உங்கள் ஆணவத்தால் மட்டுமே. நீங்கள் உங்களை இளைய பாண்டவர் அர்ஜுனனுக்கு நிகரான வில்லவராக எண்ணிக்கொள்கிறீர்கள். இளைய யாதவரின் எதிரியாக உங்களை நிறுத்திக்கொள்வதன் வழியாக அவருக்கு நிகரான பெருமையை அடைய எண்ணுகிறீர்கள்” என்றான். ருக்மி அச்சொற்களை நம்பமுடியாமல் நோக்கி நின்றான். “உங்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றியையும் அடைந்தீர்கள். இளைய யாதவருடன் உங்களை இணைத்துக்கொண்டமையால் நீங்களும் அவைகளில் பேசப்படுகிறீர்கள். இளைய யாதவரின் எதிரிகளால் அவ்வப்போது புகழவும்படுகிறீர்கள். பெரிய எதிரிகளை ஈட்டிக்கொள்வது பெரியவர்களாக ஆவதற்கான குறுக்குவழிகளில் ஒன்று.”

ருக்மி கட்டற்ற வெறிகொண்டு உறுமியபடி ருக்மரதனை அடிப்பதற்காக பாய்ந்தான். அவனை சாத்யகி பிடித்துக்கொண்டான். “இது அரசவை. இங்கே அத்துமீறுதல் குற்றம்” என்று சாத்யகி சொன்னான். ருக்மி நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் குரலே மேலெழவில்லை. “ஒவ்வாமை கொண்டீர் என்றால் வெளியேறுக, விதர்ப்பரே!” என்றான் சாத்யகி. ருக்மியின் குரல் உடைந்து அழுகையோசை கலந்தது என ஒலித்தது. “இழிமகனே, இது என் வஞ்சினம். இது என் வஞ்சினம் என இந்த அவை அறிக! நீ என் எதிரி. உன் நெஞ்சுபிளப்பேன்… என்னைப் பழித்த உன் நாவை இழுத்துப் பறித்தெடுப்பேன்.” ருக்மரதன் “வஞ்சினங்களால் வாழ்பவர் நீங்கள்… உங்கள் முந்தைய வஞ்சினங்களுக்குப் பின் என்னிடம் வருக!” என்றான்.

ருக்மகேது “மூத்தவரே, எதன்பொருட்டு இந்த வெறி? நம் குடியின் பேரரசி தமயந்தியைப் பற்றி சொன்னீர்கள். அவள் மணந்துகொண்ட நளன் நிஷாதன் என்பதை ஏன் மறந்தீர்கள்? அவர்களிருவரின் குருதியே நம்மில் ஓடுவது. வேண்டாம்! இந்த வெற்றுச்சினங்களால் நீங்கள் வீணாகி அழிகிறீர்கள்” என்றான். ருக்மி “உங்கள் அனைவருக்கும் மேல் நின்றிருக்கும் என் வஞ்சினம்! ஆணை!” என்றபின் வெளியே சென்றான். அவையில் இருந்து சினக்குரல்களும் இளிவரல் ஓசைகளும் கலந்த முழக்கம் எழுந்தது. “அவர் இந்நாடகத்தை இங்கே நடத்தும்பொருட்டே வந்துள்ளார் போலும்!” என்றான் திருஷ்டத்யும்னன். “அல்ல, பாஞ்சாலரே. அவருடைய இயல்பு அது. எங்கேனும் பற்றி ஏறி எரிந்து தழலாடிக்கொண்டே இருப்பதே அவருடைய வாழ்க்கை” என்றான் ருக்மகேது. “அவர் தன்னைப்பற்றி மிகைமதிப்பீடு கொண்டிருக்கிறார். அத்தகையோர் புண்பட்டபடியே இருப்பார்கள், ஏனென்றால் அம்மதிப்பீட்டை உலகம் அவர்களுக்கு அளிப்பதில்லை” என்றான் சகதேவன்.

bowயுயுத்ஸு ருக்மியுடன் வெளியே சென்று “விதர்ப்பரே, நீங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு இங்கே வந்தீர்கள் என எண்ணினேன். நீங்கள் இந்தப் போர்த்திரட்சியின் எல்லா அரசவைகளிலும் கலந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், ஆனால் இங்கே நிகழ்வது இது என நான் எண்ணியிருக்கவில்லை. கீழ்மக்களை திரட்டுகிறீர்கள் என நான் அறிவேன். ஷத்ரியர்களை அவர்களுக்கு அடிமைப்பணி செய்ய அனுப்புவீர்கள் என எண்ணியிருக்கவில்லை” என்றான் ருக்மி. “நான் அவரை பார்க்க விரும்புகிறேன். அவரிடம் கேட்டுவிட்டே செல்வேன். இதனால் அவர் அடையவிழைவதென்ன என்று… ஆம். அதை கேட்காமல் சென்றால் என் நெஞ்சு அணையாது.”

அவன் சென்று தன் புரவியில் ஏறிக்கொள்ள யுயுத்ஸுவும் புரவியில் தொடர்ந்தான். ருக்மி வழியில் புரவியை இழுத்து நிறுத்தி “இந்த நிலத்தில் அரசுகள் அமைந்திருக்கும் அடித்தளத்தை அசைக்கிறார். இங்குள்ள அரசகுலங்கள் அனைத்தும் சரியும். இங்குள்ள நெறிகள் முற்றாக அழியும். வேதமும் நெறிகளும் புரப்போரின்றி மறையும். தெய்வங்கள் அவியிலாது விடப்படும். மூதாதையர் நீரிலாது அமைவர். அதைத்தான் விழைகிறாரா அவர்?” என்றான். யுயுத்ஸு “இங்கு அனைவரும் அறிந்தது ஒன்றுண்டு. குருதிக்கலப்பற்ற ஷத்ரியர் இங்கு எவர்? பாண்டவர்களும் கௌரவர்களும்கூட சர்மிஷ்டையின் கொடிவழியினரே” என்றான். “நீங்கள் அடிபணிந்த இளைய யாதவரின் மைந்தரும் பெயர்மைந்தரும் அசுரர்குடியில் மணம்கொண்டவர்கள்.”

ருக்மி தளர்ந்து “ஆம், நான் ஏன் அதை எண்ணாமல் இருந்தேன்? என் அறிவழிந்துவிட்டது. இது குருதிக்கலப்பாளர்களின் படை. இதில் எனக்கு இடமில்லை. சினத்தில் நான் அனைத்தையும் மறந்துவிட்டேன்” என்றான். கடிவாளத்தைப் பற்றிக் கசக்கியபடி புரவிமேல் அமர்ந்திருந்தான். தலையை அசைத்து “நான் அறிந்த யுகம் அழிகிறது போலும். கலியுகம் எழுகிறது என்றனர் நிமித்திகர். குலக்கலப்புகளின் யுகம். நெறிமயக்கங்களின் யுகம். அதில் எனக்கு இடமில்லை. நான் என் நெறிகள் திகழும் உலகிலேயே வாழ விழைகிறேன். அது சின்னஞ்சிறு வட்டமாக இருப்பினும்” என்றான்.

பின்னர் புரவியை திரும்பிக்கொண்டு “அவரிடம் சென்று அதை கேட்பதில் பொருளில்லை. அவர் எண்ணிச்செய்வதே இவையனைத்தும். அவருக்கு ஷத்ரியர் அவைகளில் இடமளிக்கப்படவில்லை. அதனால்தான் சிசுபாலனை கொன்றார். அந்த வஞ்சத்தை இழிசினரைத் திரட்டி ஷத்ரியக் குடிகளை அழித்து தீர்த்துக்கொள்கிறார்” என்றான். அவன் மீண்டும் சினம் கொண்டான். பற்களைக் கடித்து “ஆனால் அவர் எண்ணுவது நிகழாது. இப்போர் முடிந்ததும் அசுரரும் ஷத்ரியரும் இணைந்த அரசகுடிகள் உருவாகும் என்றும் அவர்களுக்கு தலைக்குடியாக தன் கொடிவழியினர் அமைவார்கள் என்றும் எண்ணுகிறார். ஆனால் வேதம் அதை ஒப்பாது. வேதம் நின்றுகொல்லும் வஞ்சம் கொண்டது” என்றான்.

யுயுத்ஸு “வேதமுடிபுதான் வேதத்தின் விதை. அது முளைத்தெழும் புதிய வேதமே நாராயணவேதம். அது மெய்மையை மட்டுமே தன்னியல்பெனக் கொண்டது” என்றான். “வீண்சொற்கள்…” என கைவீசித் தடுத்த ருக்மி “இனி இங்கே எனக்கு இடமில்லை. நான் கிளம்புகிறேன்” என்று புரவியைத் தட்டி விரைவுகொண்டு அகன்றுசென்றான். அப்புரவியின் வால் சுழல்வதை யுயுத்ஸு நோக்கி நின்றான். என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. அவன் சென்றுமறைந்த பின்னர் புரவியை திருப்பியபோது அதை இளைய யாதவரிடம் சொல்வதே முறை என்று தோன்றியது.

அவன் இளைய யாதவரின் குடில்முற்றத்தை அடைந்தபோது தொலைவிலேயே அவர் கவசங்களை அணிந்துகொண்டிருப்பதை கண்டான். நேமிதரன் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதுமே இளைய யாதவர் அருகே வரும்படி கையசைத்தார். அவன் புரவியிலிருந்து இறங்கி எவ்வண்ணம் அந்நிகழ்வுகளை தொகுத்துச் சொல்வது என எண்ணியபடி சென்றான். அவருடைய புன்னகையைக் கண்டதும் அவருக்கு முன்னரே தெரியுமா என்னும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கு வழியே இல்லையே என குழம்பினான்.

இளைய யாதவர் “எனக்கு செய்தி வரவில்லை. ஆனால் எச்செய்தி வரும் என அறிவேன், தார்த்தராஷ்டிரரே” என்றார். யுயுத்ஸு உள்ளம் எளிதாகி புன்னகை புரிந்து “குலப்பெருமை” என்றான். “நன்று” என்றார். “படைகளுடன் திரும்பச்செல்கிறார்” என்றான் யுயுத்ஸு. “அவர் இப்போரில் கலந்துகொள்ளாமலிருப்பதனால் அவரோ விதர்ப்பமோ காக்கப்படவில்லை” என்றார் இளைய யாதவர். “போருக்குப் பின் நாம் அவர்களை தாக்குவோமா?” என்றான் யுயுத்ஸு. “நான் அதை சொல்லவில்லை. அவருடைய அவ்வியல்பாலேயே அழிவை நோக்கி செல்லவேண்டியவர் என்றேன்” என்றார் இளைய யாதவர்.

யுயுத்ஸு “அரசே, நான் ஒன்றை மட்டுமே அறிய விழைகிறேன். இன்று காலை இளைய பாண்டவரின் குடிலில் நிகழ்ந்தது நாடகமா?” என்றான். “நாடகம் என்றால் அனைத்துமே அவ்வாறுதான். அவர் என்னைக் கண்டதும் அடைந்த உணர்வெழுச்சி மெய்யானது. மீண்டும் இங்கு வந்திருந்தால்கூட அதே உணர்ச்சி எழுந்திருக்க வாய்ப்புண்டு” என்றார் இளைய யாதவர். “தங்கள் உணர்ச்சி?” என்றான் யுயுத்ஸு. “அதுவும் மெய்யானதே. நான் விழிநீர்களுக்கு முன் அறிவிலாதோன்” என்றார் இளைய யாதவர்.

காவியம் – சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்