திசைதேர் வெள்ளம் - 52

bowஅவந்தி நாட்டு அரசன் விந்தன் தன் தேரில் கௌரவப் படையின் எட்டாவது அக்ஷௌகிணியின் இரண்டாம் நிரையில் வில்லுடன் நின்றிருந்தான். சற்று அப்பால் அவனுடைய இரட்டையனும் அவந்தியின் இணையரசனுமாகிய அனுவிந்தன் அவனைப் போலவே கவசங்கள் அணிந்து, அவனுடையதே போன்ற தேரில் நின்றிருந்தான். விந்தன் அனுவிந்தனைவிட ஓரிரு நொடிகளே அகவையில் முந்தியவன். அந்த ஒரு நொடி அவன் அன்னையால் அவனுக்கு சொல்லப்பட்டது. உலகுக்கும் அவளால்தான் அது சொல்லப்பட்டது. தன் உள்ளத்தால் அவன் அதை பெருக்கிக்கொண்டான். நாழிகையும் நாளும் ஆண்டும் என்றாக்கி ஒரு முழு வாழ்நாள் என்றே வளர்த்துக்கொண்டான். தன்னை மூத்தவன் என்றும் இளையோனிடமிருந்து மதிப்பையும் வணக்கத்தையும் பெறவேண்டியவன் என்றும் கருதிக்கொண்டான்.

அந்த ஒரு கணமே அவனுக்கு மணிமுடியை அளித்தது. பட்டத்தரசியின் முதல் பேற்றில் ஆண் இரட்டையர் பிறந்துவிட்டால் அக்குழவிகளில் பிந்தி வருவதை கொன்றுவிடுவது அரசகுல வழக்கமாக இருந்தது. விந்தனும் அனுவிந்தனும் உடல்தழுவி ஒற்றையுடலென வெளிவந்தனர். அவ்வாறு நிகழுமென்றால், இரு குழவியும் சேர்ந்தே மண்ணிழியும் என்றால், இரு குழவிகளையும் அருகருகே போட்டு இரண்டுக்கும் பொதுவாக ஒரு பொற்கணையாழியை நூலில் கட்டி ஆடவிடுகையில் எந்தக் குழவியின் விழி முதலில் அந்தக் கணையாழியை பார்க்கிறதோ அதுவே அரசனென்று ஆகும் விழைவெனும் தகுதியைக் கொண்டது என்று முடிவெடுப்பது மரபு. அவர்களிருவரையும் அவ்வாறு படுக்கையில் படுக்க வைத்து பொன் மணி காட்டியபோது இருவருமே ஒரே தருணத்தில் அதை நோக்கி விழிசலித்தனர். வாயில் விரல் வைத்தபோது இருவரும் ஒரே விசையில் அதை நோக்கி தலையெழுப்பினர். உள்ளங்கால்களை கைகளால் வருடி நோக்கியபோது இருவருமே உடல் விதிர்க்க கால்களை விலக்கி தொட்ட கையை உதைத்தனர்.

சூழ நின்றிருந்த வயற்றாட்டிகள் திகைத்தனர். “அனைத்திலும் இணையானவர்கள், அரசி” என்று முதுவயற்றாட்டி காளிகை சொன்னாள். அன்னை இரு குழந்தைகளையும் மாறிமாறி நோக்கியபின் விந்தனைத் தொட்டு “இவன் ஒருகணம் மூத்தவன்” என்றாள். வயற்றாட்டி ஏதோ சொல்லவர உரத்த குரலில் “இவன் ஒருகணம் மூத்தவன்! ஆம், இவனே மூத்தவன்!” என்று அவள் சொன்னாள். வயற்றாட்டி “ஆம் அரசி, இவரே மூத்தவர்” என்றாள். வெளியே சென்று அங்கு காத்து நின்றிருந்த அரசரிடம் “இரட்டையர்! ஒருவர் ஒருகணம் மூத்தவர்!” என்று அறிவித்தாள். அரசரின் விழிகள் மாறுபட்டன. அருகே நின்றிருந்த அமைச்சர் “இரட்டையர் என்றால்…” என்று தொடங்க வயற்றாட்டி “ஒருவர் ஒருகணம் மூத்தவர்” என்று மீண்டும் சொன்னாள். அரசர் “ஆம்! ஒருகணம் எனினும் அது தெய்வங்களால் அளிக்கப்பட்ட பொழுது. அம்முடிவை எடுத்த நம் குடித்தெய்வங்களை வணங்குவோம்!” என்றார்.

அவந்தியின் எட்டு குடித்தலைவர்களுக்கும் பட்டத்து இளவரசர்கள் இரட்டையராக இருப்பது எதிர்காலத்தில் பெரும்பிழையென ஆகக்கூடும் என ஐயமிருந்தது. முன்வரலாறுகள் தீய விளைவுகளையே காட்டின என நூலறிந்தோர் கூறினர். நிமித்திகர்களும் நன்று சொல்லவில்லை. ஊரில் அதைப் பற்றிய பேச்சுகள் இருப்பதை ஒற்றர்கள் அவந்தியின் அரசரிடம் வந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆயினும் ஒருகணம் மூத்தவன் என்ற ஒற்றை வரியால் அரசி அவ்விருவரையும் காத்தாள். அவர்கள் இருவரும் ஆடிப்பாவைகளென வளர்ந்தனர். களிப்போரில், சொல்லவையில், கானாடலில் ஒருவரை ஒருவர் முற்றிலும் நிகர்த்தனர். ஒருவனை மற்றவன் என்று பெற்றஅன்னையும் எண்ணும் வண்ணம் ஒன்றுபோல் இருந்தனர்.

அன்னையே அவர்களிடம் ஆள்மாறி உரையாடினாள். ஒருமுறை விந்தனிடம் “இளையவனே, நீ ஒருகணம் இளையவன் என்பதை உன்னுள் வாழும் ஏதோ ஒன்று எதிர்க்கிறது என்று நான் அறிவேன். அதை வெல்க! ஒருகணமும் அது உன் எண்ணங்களையும் செயல்களையும் ஆட்டிவைக்கலாகாது. எவ்வகையிலோ உன் மூத்தவன் உன்னுள் வாழும் அவ்வெண்ணத்தை அறிந்துகொண்டிருப்பான் என்பதை உணர்ந்துகொள். அது அங்கிருக்கும் வரை நீ அவனுக்கு எதிரியாவாய். உடன்பிறந்தாரைப்போல சிறந்த எதிரி பிறிதெவருமில்லை. ஆகவே அவ்வெதிர்ப்பு நாளுமென பெருகும். அழியா வஞ்சமென்றாகும். உன் நீண்ட வாழ்நாளுக்காகவும் என் முதல் மைந்தன் பழி சூடலாகாது என்பதற்காகவும் இதை சொல்கிறேன்” என்றாள்.

சற்று துணுக்குற்றாலும் விந்தன் அத்தருணத்தில் தான் விந்தன் என்பதை அன்னைக்கு அறிவிக்காமல் “அவ்வண்ணமே, அன்னையே. என்றும் நான் இளையோன் என்றே இருப்பேன்” என்றான். ஆனால் அதன் பின் அனுவிந்தனில் உறையும் அந்த மீறலை ஒவ்வொரு கணமும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். எந்த அவையிலும் அவன் ஒரு சொல்லெடுத்தால் மறுகணமே அதன் நீட்சியென்றோ மறுப்பென்றோ அனுவிந்தனின் சொல் எழுந்தது. அவன் செய்த எதையும் அனுவிந்தன் செய்யாமல் இருந்ததில்லை. ஒருமுறை காட்டில் எதிர்வந்த பன்றியொன்றின் மீது அம்பு தொடுத்து பன்றி வீழ்ந்ததும் ஏதோ ஒரு எண்ணம் தோன்ற விந்தன் தன் ஏவலனை அழைத்து அதில் எத்தனை அம்புகள் தைத்திருக்கின்றன என்று பார்க்கச்சொன்னான். “பன்னிரு அம்புகள், அரசே!” என்றான் ஏவலன். அவர்கள் இருவர் அம்புகளிலும் வெவ்வேறு அடையாளங்கள் உண்டு. “அவை எவருடையதென்று பார்” என்று அவன் சொன்னதும் ஏவலன் புன்னகைத்து “பார்க்கவேண்டியதே இல்லை. ஆறம்புகள் தங்களுடையவை ஆறம்புகள் தங்கள் இளையவருடையவை” என்றான். கைசுட்டி அவனை அகற்றிவிட்டு விந்தன் புரவியில் மேலே சென்றான்.

அன்று காட்டில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து வேட்டை உணவை உண்டு ஓய்வெடுக்கையில் விந்தன் அனுவிந்தனிடம் “இளையோனே, நான் இயற்றும் ஒவ்வொன்றையும் நீயும் இயற்றியாக வேண்டுமென்று ஏன் எண்ணுகிறாய்? என் சொல்லும் செயலும் ஒருமுறைகூட உன்னில் மீண்டும் நிகழாதிருந்ததில்லை” என்றான். அனுவிந்தன் நகைத்து “இதை மட்டுமே தாங்கள் நோக்கியிருக்கிறீர்கள். தாங்கள் சொன்ன இதையே நானும் சொல்ல இயலும். ஒரு சொல்லோ செயலோ என்னிலிருந்து வெளிப்பட்டால் அதன் தொடர்ச்சியும் மறுப்பும் உங்களிடமிருந்து உடனே வெளிப்படுகிறது. நான் சொன்ன ஒரு சொல்லையேனும் சொல்லாமல் நீங்கள் இதுநாள் வரை இருந்ததில்லை” என்றான். சீற்றத்துடன் விந்தன் “நான் மூத்தவன், என்னை நீதான் தொடர்கிறாய்” என்றான். “தங்களைவிட ஒரு மாத்திரை உடல்விசையும் உளவிசையும் மிகுந்தவன் நான். ஆகவேதான் தாங்கள் என்னை தொடர்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றான் அனுவிந்தன். எழும் சினத்தை அடக்கிக்கொண்டு விந்தன் மேலும் சொல்லெடுக்காமல் தவிர்த்தான்.

அதன் பிறகு அவன் அனுவிந்தனுடன் இணைந்து இருப்பதை பெரும்பாலும் தவிர்த்தான். அரசவையில் அவனுக்கும் அனுவிந்தனுக்கும் இரு வேறு இருக்கைகள் போடப்பட்டன. களரியில் வேறுவேறு பொழுதுகளில் முற்றிலும் வேறு ஆசிரியர்களிடம் பயின்றனர். ஆண்டுக்கு இருமுறை அவந்தியில் நடக்கும் அரச கொலுத்தோற்றத்தில் மட்டுமே அவர்களிருவரும் அருகருகே அமர்ந்தனர். அப்போதும் தான் பட்டத்து இளவரசன் என்பதனால் தன்னுடைய மணிமுடியில் சற்று பெரியதாக மேலும் ஒரு வைரம் பதித்தாகவேண்டுமென்றும் தோற்றத்தில் தான் தனித்துத் தெரிந்தாக வேண்டுமென்றும் அவன் அணிச்சேவகரிடம் ஆணையிட்டான் ஆயினும் அவனை அனுவிந்தன் என்று எண்ணி பேசுபவர்கள் ஒவ்வொரு நாளும் இருந்தனர். ஏவலரோ குடிகளோ அவ்வாறு பேசினால் அக்கணமே அவன் சினம்கொண்டு அவர்களை எதிர்கொண்டான். எளியோரை தண்டித்தான், பெரியவர்களை சிறுமைசெய்தான். ஆனால் தந்தையும் தாயும் ஒவ்வொரு நாளும் அப்பிழையை இயற்றுகையில் அவனால் அதற்கு மறுமொழி சொல்ல இயலவில்லை.

இருவரும் படைக்கலக்கல்வி முடித்து குண்டலம் அணிந்ததும் அவன் முதலமைச்சர் வில்வரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து தாங்கள் இருவரும் ஒரே நகரியில் இணையான அரசுநிலையில் இருப்பதை விரும்பவில்லை என்றும் இருவரும் எப்போதும் பிரிந்தே இருப்பதற்கான அமைப்பை உருவாக்குவதே அவந்தியின் எதிர்காலத்திற்கு நல்லதென்றும் சொன்னான். அவரே அதை முன்னரே உணர்ந்திருந்தார். “ஆம், நான் எண்ணியவைதான் இவை. அரசரிடம் நானே கூறுகிறேன்” என்றார். “ஒவ்வொருநாளும் உங்களுக்குள் உருவாகிவரும் அகல்வை உணர்கிறேன். விலகல் உருவானதுமே முற்றகல்வு நிகழ்ந்ததென்றால் இடரில்லை. விலகலை ஒவ்வொரு நாளும் இருவரும் எண்ணி வளர்க்கிறீர்கள். இனி கசப்புகளையும், பகைமையையும் உருவாக்கிக்கொள்வீர்கள். உளவிலகல் திறந்த புண், அது சீழ்பிடிப்பதற்கு காத்திருக்கிறது” என்றார் வில்வர்.

வில்வரின் சொல்லை அரசர் ஏற்றார். விந்தன் அவந்தியின் பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டான். அனுவிந்தனுக்கு உத்தர அவந்தியின் பிரபாவதி நகர் தலைநகராக அளிக்கப்பட்டு அங்கு அரசனின் ஆணைக்கோல் கொண்டவனாக ஆட்சி செய்ய அனுப்பப்பட்டான். அதன் பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை குடிமூத்தார் வணக்கத்தின்பொருட்டு மட்டுமே அனுவிந்தன் தலைநகருக்கு வந்தான். அன்று அந்தியில் கூடும் குடிசூழ் அவையில் மட்டுமே அவன் விந்தனின் அருகே அரசத்தோற்றம் கொண்டு அமர்ந்தான். அன்று மட்டுமே அவர்கள் ஒருவரோடொருவர் ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டனர். அப்போதும் ஒருவர் விழியை ஒருவர் நோக்கிக்கொள்ளவில்லை. அவர்களிடையே ஒரு வெறுப்புச் சொல்கூட பேசப்பட்டதில்லை. ஒருமுறைகூட முகம்கசந்த நோக்கு எழுந்ததில்லை. ஆகவே அவ்விலக்கம் மேலும் அழுத்தமானதாக இருந்தது. அவர்கள் அவ்விலக்கத்தையே நாணுபவர்கள்போல அத்தருணத்தை சில நொடிகளில் கடந்துசெல்ல விழைந்தார்கள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் அனுவிந்தனைப் பற்றிய செய்திகள் விந்தனின் செவியை வந்தடைந்தன. அவை எவ்வாறு தன்னை தேடி வருகின்றன என்று அவன் எண்ணி வியந்ததுண்டு. பின்னர் தெரிந்துகொண்டான், பல்லாயிரம் சொற்களில் அனுவிந்தனைப் பற்றிய சொற்களை மட்டும் தொட்டெடுக்கும் நுண்செவியொன்று தனக்கிருப்பதை. நகருலா செல்லும்போது சந்தையில் பலநூறுபேர் கலந்து பேசும் கலைந்த முழக்கத்தின் நடுவே அனுவிந்தர் என்ற சொல் ஒலிக்குமென்றால் அவன் உள்ளம் அங்கு நோக்கி சென்றது. அனுவிந்தனிடமிருந்து தனக்கு விடுதலையில்லை என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அமைச்சரிடம் “இதுநாள்வரை அவனிடமிருந்து உளம் விலக முயன்றேன். அது இயலாதென்று இப்போது தெரிகிறது. என் ஆற்றலனைத்தும் அம்முயற்சியிலேயே வீணாகின்றன. நான் முழுமைகொண்டு ஆற்றலுடன் எழ என்ன செய்யவேண்டும்?” என்றான்.

வில்வர் “அரசநெறியின்படி நீங்கள் அவரை அழிக்கவேண்டும். ஆனால் ஒருதுளியும் எஞ்சாது அழிக்கத்தக்க எதிரியையே அழிக்கவேண்டும் என்கின்றன நூல்கள். அவரை அழித்தால் ஒன்றுணர்வீர்கள், உங்கள் ஆற்றலில் பாதி அழிந்திருக்கும். ஏனென்றால் அவர் உங்களில் பாதி. உங்களில் எஞ்சும் பாதி அனைத்து இடங்களிலும் நிலைபிறழ்ந்திருக்கும்” என்றார். “ஆகவே ஒன்றே செய்யக்கூடுவது, அவரை விழுங்கி நீங்களாக ஆக்கிக்கொள்வது. ஒருவரை விழுங்கி நாமாக்கிக்கொள்வதற்குரிய சிறந்த வழி என்பது அன்புதான்” என்றார் வில்வர். “அன்பா? அவனிடமா?” என்று விந்தன் கேட்டான். “அன்பிலாத ஒன்றையே இருபத்திரண்டு ஆண்டுகளாக கணமும் எண்ணிக்கொண்டிருக்க இயலுமா என்ன? அவ்வாறு எண்ணிக்கொண்டிருப்பதனாலேயே அவர் மேல் நம்முள் அன்பு எழாதிருந்திருக்குமா என்ன? ஒரு தொழுவில் அருகருகே கட்டப்பட்டால் எந்தப் புரவியும் ஒரு வாரத்திற்குள் உடல் ஒருங்கிணைவும் உள இசைவும் கொள்வதை கொட்டில்காவலர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்றார் வில்வர்.

விந்தன் சோர்ந்து இருக்கையில் சாய்ந்தான். “அவர் மேல் நீங்கள் கொண்ட அன்பை மறைப்பவை இரண்டு கூறுகளே. ஒன்று உங்கள் முதன்மையை அவர் முழுதேற்கிறாரா எனும் ஐயம். பிறிதொன்று உங்கள் முடிக்கும் உங்கள் கொடிவழியின் உரிமைக்கும் எதிராக அவரோ அவர் குடியோ குருதியினரோ எழுவார்களோ எனும் அச்சம்.” விந்தன் “அவை மெய்யான அச்சங்கள்தானே? அதுதானே உலகத்தியற்கை?” என்றான். “ஆம், மீள மீள உடன்பிறந்தாரின் உரிமைப்போர் பாரதவர்ஷத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருபோதும் அது ஓயாது. இன்று அவர் உங்களுக்கு சொல்லளிக்கலாம், ஆனால் வரும் தலைமுறையினரை அவர் சொல் ஆளுமென சொல்லவியலாது. ஆயினும் அனைத்தையும் தெய்வங்களுக்கு ஒப்படைத்து உங்கள் இளையோனை ஆரத்தழுவிக்கொள்வதொன்றே இத்தருணத்தில் செய்யக்கூடுவது” என்றார் வில்வர்.

“நான் என்ன செய்ய வேண்டும் இப்போது?” என்றான் விந்தன். “அமைச்சனாக நான் சொல்வது படைகொண்டுசென்று அவரை வென்று உங்களை முழுதமைத்துக்கொள்ளுங்கள். அவரைக் கொன்று, அவர் இருந்த தடயங்களே இல்லாமல் செய்யுங்கள். ஒரு சொல்கூட அவருடையதென இப்புவியில் எஞ்சலாகாது. அவருக்கிருந்த அனைத்தையும் நீங்கள் அடையுங்கள். அவரை இழந்தமையால் உருவான குறைவுகளை ஈட்டி நிறையுங்கள்” என்றார் வில்வர். “அந்தணனாக நான் சொல்வது அவரை அள்ளி அணைத்து அருகமரச் செய்யுங்கள். அவர் உங்கள் மணிமுடிக்கும் கோலுக்கும் விழைவு கொண்டால் அதை அவருக்கே உளமுவந்து அளியுங்கள். அவர் உங்கள் தலையறுத்திடத் துணிந்தால் தலைகொடுக்கும் கனிவை அடையுங்கள். தமையன் என்பவன் அணுக்கம் கொண்ட தந்தையே” என்றார் வில்வர்.

விந்தன் சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.  வில்வர் “நீங்கள் தமையனென்றானால் அவர் உங்கள் தம்பி என்றாவார். கௌரவ நூற்றுவர் எப்படி ஓருடலும் ஓர் எண்ணமுமாக இருக்கிறார்கள் அறிவீர்களா? அந்நூற்றுவரில் ஒருவர் சென்று துரியோதனரிடம் மூத்தவரே அம்மணிமுடியையும் செங்கோலையும் எனக்கு அளியுங்கள் என்று கேட்பார் என்றால், ஏன் அவ்வாறு அவர் உள்ளாழத்தில் விழைகிறார் என்று தெரிந்தால், மறுஎண்ணமின்றி எழுந்து அவற்றை தம்பிக்கு அளிக்கும் தகைமை கொண்டவர் துரியோதனர். அதை நன்கறிவர் தம்பியர். ஆகவே அத்தம்பியர் அவருக்காக இந்நாநிலத்தை வெல்வார்கள். தேவையெனில் களத்தில் வீழ்வார்கள்” என்றார் வில்வர்.

“இது வீண் பேச்சு. மண்விழைவு கொள்ளாத ஷத்ரியன் எங்குளான்?” என்றபடி விந்தன் எழுந்தான். “மண்விழைவும் பொருள்விழைவும் ஷத்ரியர்களை ஆக்குகின்றன. ஆனால் பேரரசர்கள் உறவின் ஆற்றலால் தங்கள் அரியணையை உறுதி செய்துகொண்டவர்கள். ஒருவனுக்காக பல்லாயிரம் பேர் உயிர் கொடுக்கத் துணிகையிலேயே அவன் பேரரசனாகிறான். எவரும் வீணாக உயிர் கொடுப்பதில்லை. ஒருவனுக்காக அத்தனை பேர் உயிர் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கான தகுதியை எங்கோ அவன் ஈட்டிக்கொண்டிருக்கிறான் என்றே பொருள்” என்றார் வில்வர். “அவர்களுக்காக அவன் உயிர்கொடுப்பான் என்பதே அத்தகுதி.” “வீண்பேச்சு, எந்த விலங்கும் தன் தலையை தானே எதிரிக்கு கொடுப்பதில்லை” என்றபடி அவன் வெளியே சென்றான்.

ஆனால் அன்று இரவு முழுக்க விந்தன் அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். எண்ண எண்ண நம்பிக்கையின்மையும் கசப்பும்தான் பெருகின. ஆனால் அவன் துணைவி சுதமதி “அமைச்சர் சொல்வதே நன்று என நினைக்கிறேன்” என்றாள். “நீங்கள் உங்கள் தம்பியை உடனமர்த்தி இணைநிலை அளிக்கும்போது மட்டுமே ஆற்றல் கொண்டவர்களாகிறீர்கள். இப்போது இருவருக்குமிடையே இருக்கும் தொலைவு அச்சுறுத்துவது. இதை மாளவரோ விதர்ப்பரோ பயன்படுத்திக்கொள்வார்கள் என்றால் மிக எளிதாக நம் நாட்டை இரண்டாக உடைத்துவிட முடியும்” என்றாள். அவ்வெண்ணம் ஏற்கெனவே விந்தனிடம் இருந்தது என்பதனால் அவனை அச்சொற்கள் அறைந்தன. “அவ்வண்ணம் அவர் எதிரியானால் உங்களை நீங்களே எதிர்ப்பவராவீர்கள்” என்றாள் சுதமதி.

சினந்தெழுந்து “இது தொல்புகழ் அவந்தி! கார்த்தவீரியனின் குருதியில் ஜயத்வஜனின் குடியென எழுந்தது என் அரசகுடி. ஒருபோதும் இது வீழாது. நீ பிறந்தெழுந்த மச்சநாட்டு குடிப்போர்களை இங்கு எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்று கைவீசி அவளை விலக்கி மேலாடையை எடுத்து அகத்தளத்திலிருந்து வெளியேறி தன் அறைக்கு வந்தான். மூக்குவழி வார மது அருந்தியபடி அரண்மனை மஞ்சத்தில் கிடக்கையில் அவள் சொற்களே அவன் உள்ளத்தை சூழ்ந்துகொண்டிருந்தன. அவை முற்றிலும் உண்மை என்று அவன் அறிந்தான். காலையில் எழுந்து சிப்ரையின் ஒழுக்கின்மேல் பெருகிய காற்றில் வெண்பறவைகள் மிதந்துசெல்வதை நோக்கி நின்றிருந்தபோது ஒரு முடிவுக்கு வந்தான். அந்தக் காலை அத்தனை இனிதாக, அமைதியாக இருந்ததனால் மட்டுமே அவன் அகம் சென்றடைந்தது அம்முடிவு.

அமைச்சரை தன் அறைக்கு அழைத்து “தங்கள் எண்ணத்தையே நானும் உளம்கொண்டிருக்கிறேன், அமைச்சரே. நாம் இப்போது என்ன செய்யலாம்?” என்று உசாவினான். “இங்கு குடிமூத்தாருக்கான ஒரு பலிபூசனை நிகழவிருக்கிறது. அதற்கு அனுவிந்தரை அழையுங்கள். அவருக்கு இணையாக அரசமருங்கள். இணையரசர் அவரென்று உங்கள் நாவால் நீங்களே அறிவியுங்கள். அனுவிந்தர் இனி தனிநகர் கொண்டு எல்லையில் அமரக்கூடாது. இங்கு உங்கள் உடனிருக்கட்டும். அரசப் பொறுப்புகளை, படைகளை, கருவூலத்தை அனைத்தையுமே அவருக்கும் உரிமையாக்குங்கள். எதுவும் எஞ்சவிடவேண்டியதில்லை. தயக்கமோ ஐயமோ இன்றி இதை செய்ய முடிந்தால் உங்கள் இணையாற்றல் என்று உடனிருக்கும் தம்பி ஒருவரை பெறுவீர்கள். அவரும் நீங்களேதான் என்பதனால் உங்கள் ஆற்றலனைத்தும் முழுமை பெறுவதை காண்பீர்கள்.” “அவனை நான் எவ்வாறு நம்புவது?” என்று விந்தன் கேட்டான். “உறவை நம்புவதும் தெய்வத்தை நம்புவதும் ஊழை நம்புவதும் ஒன்றே” என்றார் வில்வர்.

உஜ்ஜயினியிலிருந்து தமையனின் அழைப்பு வந்தபோது அனுவிந்தன் வியப்பும் ஐயமும் கொண்டதாகவும் தன் அணுக்கர்களை அழைத்து அரண்மனையில் அவையில் அமர்ந்து அவ்வழைப்பின் பின்னுள்ள நோக்கமென்ன என்று உசாவியதாகவும் ஒற்றர் செய்தி வந்தது. அவன் அணுக்கர்களில் நால்வர் அது அனுவிந்தனை கொல்லவோ சிறைப்படுத்தவோ செய்யப்பட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என்றனர். ஒருபோதும் தலைநகரைவிட்டு செல்லக்கூடாதென்றும், தன் படைகளனைத்தையும் எல்லைகளிலிருந்து அழைத்து சூழ்ந்து நிறுத்தி உறுதியான காவலுக்குள்தான் அவன் என்றுமிருக்கவேண்டும் என்றும் இரு படைத்தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் அங்கு அவனுடைய அமைச்சராக இருந்த சுதபஸ் “அரசே, ஐயம்கொள்ளத் தொடங்கினால் எஞ்சிய வாழ்நாள் முழுக்க ஐயத்தை பெருக்குவீர்கள். ஐயம் நஞ்சென அனைத்து எண்ணங்களிலும் ஊடாடும். உங்கள் செயல்கள் அனைத்திலும் ஊடாடும். நீங்கள் பார்ப்பவை அனைத்தும் திரிபடையும். உங்கள் மூத்தவருக்கும் உங்களுக்குமிடையே ஒருபோதும் உறவு சீரடையாது. இன்று ஒரு துளி ஐயம்கொண்டீர்கள் என்றால் அவந்தியை இரண்டாக உடைக்கும் பணியை தொடங்கிவிட்டீர்கள் என்று மட்டுமே பொருள். உடைந்த அவந்தி வாழ இயலாது. இரு துண்டுகளையும் மாளவமும் விதர்ப்பமும் எடுத்துக்கொள்ளும். நீங்கள் இருவருமே அண்டை அரசர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டுபவர்களாக மாறுவீர்கள். உங்கள் கொடிவழியினர் தொழும்பர்களாவார்கள். இவை அனைத்தும் தேவையெனில் இம்முடிவை எடுங்கள். இக்கணம் உங்களுடையது” என்றார்.

அனுவிந்தன் அரியணையில் தளர்ந்து அமைந்து உளம்தவித்தபின் நொய்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும், அமைச்சரே? நீங்களே பொறுப்பேற்று சொல்லுங்கள்” என்றான். “அந்தணர் உலகியலுக்கு பொறுப்பேற்கலாகாது. தங்கள் சொல்லுக்கு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ஆயினும் இத்தருணத்தில் இவ்வரசியலுக்கு முழுப் பொறுப்பேற்று சொல்கிறேன், சென்று உங்கள் மூத்தவரின் காலடியில் அமர்க! அவர் உங்கள் தலைமேல் மணிமுடியை வைக்கலாம். கழுவேற்ற ஆணையிடவும் செய்யலாம். எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தெய்வங்களிடம் நாம் கொண்டுள்ள உறவும் அத்தகையதல்லவா? அழிக்கும் ஆற்றலும் உரிமையும் கொண்டவரின் அன்பு பேராற்றல் கொண்டது” என்றார் சுதபஸ்.

மறுநாள் அனுவிந்தன் தன் படைகளுடன் கிளம்பி உஜ்ஜயினிக்கு வந்தான். அவனை அரண்மனை முகப்பில் எதிர்கொண்ட விந்தன் இரு கைகளையும் விரித்து நெஞ்சோடு தழுவி “இதுநாள்வரை அறியாத ஐயங்களாலும் அச்சங்களாலும் ஆட்டுவிக்கப்பட்டேன், இளையவனே. அவ்வெடையை எத்தனை நாள் சுமப்பதென்று என் உள்ளம் தவித்தது. என்னால் ஒருகணமும் நிறைவுற்று அமரவோ உறங்கவோ இயலவில்லை. கவலைகள் மிகுந்து தாள முடியாமல் ஆகும்போது ஒருகணத்தில் முழுக் கவலையையும் நம்மிலிருந்து இறக்கி விட்டுவிடுகிறோம். அதைத்தான் செய்யவேண்டுமென்று எண்ணினேன். ஆகவேதான் உன்னை அழைத்தேன்” என்றான். அவன் காய்ச்சல்கண்டவன்போல் நடுங்கிக்கொண்டிருந்தான்.

கண்ணீருடன் கைகூப்பி நின்ற அனுவிந்தனை தோள்பற்றி முகம் நோக்கி விந்தன் சொன்னான் “எந்தச் சுற்றுச்சொல்லும் இல்லாமல் நேரடியாகவே இதை உரைக்கிறேன். இன்றுவரை என் அரியணைக்கும் கோலுக்கும் நீ விழைவு கொள்வாய் என்றும் என் கொடிவழியினருக்கு குருதியினரின் எதிர்ப்பிருக்குமோ என்றும் நான் கொண்ட ஐயமே என்னை ஆட்டிவைத்தது. இன்று உன்னை என் இணையரசனாக அரியணையில் அமர்த்த முடிவு செய்திருக்கிறேன். நீயோ உன் கொடிவழியினரோ விரும்பினால் முழுதுரிமையையும்கூட பெறமுடியும். எனக்கு மாற்றுச் சொல்லில்லை.” அழுதபடி சரிந்து அமர்ந்து தலையை விந்தனின் பாதங்களில் வைத்து “மூத்தவரே, இணையரசன் என்றல்ல தங்கள் இளையோன் என்றும் அடிமையென்றும் இருப்பதே எனக்கு உகந்தது” என்றான் அனுவிந்தன். விழிநீருடன் அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டான் விந்தன்.

அந்தச் சொற்கள் அக்கணத்தில் தன் நாவில் ஏன் எழுந்தன என்று அவன் பின்னர் எண்ணி நோக்கியதுண்டு. முற்றத்திற்குச் சென்று நிற்கும்வரை ஐயமும் அலைக்கழிப்பும் கொண்டவனாகவே இருந்தான். பிழை நிகழ்ந்துவிடக்கூடும் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுத்துக்கொண்டிருந்தது. முற்றத்திலிருந்து மீண்டும் தன் அவை நோக்கி திரும்பி இளையோனை அங்கு வரச்சொல்லிவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு அவ்வெண்ணத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே அனுவிந்தன் முற்றத்திற்குள் நுழைந்தான். கைவிரித்து அவனை நெஞ்சுதழுவ அழைத்ததுகூட அவன் எண்ணியதனால் அல்ல, அவன் உடலே அதை நிகழ்த்தியது என்று தோன்றியது. நெஞ்சோடு அவன் உடலை அழுத்திக்கொண்டபோது அவன் உள்ளிலிருந்து பிறிதொருவன் எழுந்ததுபோல சொற்கள் கூறப்பட்டன.

அமைச்சரிடம் அதைப்பற்றி கேட்டான். “நீங்கள் இருவரும் உடலால் இணைந்தவர்கள், அரசே. ஒவ்வொரு நாளும் உடல் தழுவிக்கொள்க! ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் தொட்டுக்கொள்க! எங்கு அமர்ந்திருந்தாலும் உங்கள் உடல்கள் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். சொற்களால் உணராததை தொடுகையால் பகிர்வீர்கள். கருவறைக்குள் நீங்கள் ஒன்றென இருந்தீர்கள். அங்கு அவ்வாறு இருந்த பெருமகிழ்வையும் முழு விடுதலையையும் இங்கும் உணர்வீர்கள். இரட்டையர் என்று இருப்பது பெரும்பேறு. இருவரும் ஒன்றாக முடியுமெனில் அதுவே பெருங்களிப்பு” என்றார் வில்வர்.

ஓரிரு நாட்களில் விந்தன் கண்டுகொண்டான் அனுவிந்தன் அருகிருக்கையில் தன் உள்ளம் கொள்ளும் பெரும் விடுதலையை. உடற்தசைகள் அனைத்தையும் அழுத்தியிருந்த எடைகள் விலகின. களிப்பும் சிரிப்பும் கொண்டவனாக அவன் மாறினான். அரசி “உங்கள் முகத்தில் இப்புன்னகையை நான் என்றுமே பார்த்ததில்லை” என்றாள். ஏவலர்கள் அவனை அணுகுகையிலேயே முகத்தில் புன்னகை விரிய வணங்கினர். குடிகள் அவன் பெருங்கருணையுடன் மட்டுமே அவையமர்ந்து முடிவுகள் சொல்வதாக சொன்னார்கள். அறத்தின் தெய்வம் அவனுள்ளில் இருந்து எழுந்துவிட்டதென்று சூதர்கள் கூறினார்கள். இளையோன் வாள் என்றும் மூத்தவர் அதன் பொற்பிடி என்றும் கவிஞர் பாடினர். அவர்கள் இருவரின் ஆட்சியில் அவந்தி வெற்றியும் புகழும் அடைந்தது.

தொலைவில் போர் தொடங்கவிருப்பதற்கான முரசுகள் முழங்கின. அனுவிந்தன் திரும்பி அவனிடம் செல்வோம் என்று கைகாட்டினான். விந்தன் “இளையோனே, இப்போரில் நாம் எந்த இழப்புமின்றி திரும்ப உளம் கொண்டுள்ளோம். இன்று மாலை போர் நிறுத்தம் குறித்து தார்த்தராஷ்டிரரிடம் பேச விரும்புகிறோம். அதை எண்ணி உன் அம்புகள் எழட்டும்” என்றான். பேரோசையுடன் கௌரவப் படைகள் பாய்ந்து முன்னெழுந்து பாண்டவப் படையுடன் முட்டிக் கலந்தன.

காவியம்- சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்

வெண்முரசு விவாதங்கள்