செந்நா வேங்கை - 69

tigஉத்தரன் வெளியே நடந்தபோது சகதேவன் அவனுக்குப் பின்னால் வந்து தோள்தொட்டு “என்னுடன் வருக, விராடரே” என்றான். உத்தரன் அத்தொடுகையால் நெகிழ்வடைந்து “ஆம், ஆணை” என்றான். “கௌரவகுல மூத்தவர் என்னை பார்க்க வருகிறார். அவர் போருக்கு நாள்குறிக்க விழைகிறார் என்று அறிகிறேன். அதை நான் செய்யும்போது நீங்களும் உடனிருக்கவேண்டும்.” உத்தரன் விழிவினாவுடன் பேசாமல் நின்றான். புன்னகையுடன் “என் செயலுக்கு நீங்கள் சான்று” என்றான் சகதேவன்.

உத்தரன் “பாண்டவரே, அவ்வாறு நீங்கள் சான்றை உருவாக்கிக் கொள்ளவேண்டுமா? உங்கள் சொல் ஒருபோதும் பிழைக்காது என அறியாதோர் எவர்?” என்றான். “நேர்மையில் அனலோனுக்கு நிகரானவன் என்றாலும் பிறரை பாதிக்கும் செயல்களுக்கு உரிய சான்றுகளை வைத்திருக்கவேண்டும்” என்று சகதேவன் புன்னகைத்தான். “எவருக்காக இச்சான்று? உங்கள் மூத்தோருக்காகவா?” என்றான் உத்தரன். “முதன்மையாக படைகளுக்கு. பல்லாயிரம் விழிகளும் செவிகளும் கொண்ட பேருரு அது. பாண்டவகுடியின் படைகளுக்கு வெளியே நின்றிருப்பது விராடம். எங்கள் படைக்கூட்டின் அரசர்களில் ஒருவர் உடனிருப்பது நன்று” என்ற சகதேவன் “அத்துடன் இது என் மூத்தவருக்காகவும்தான். மானுட உள்ளத்தை அறிந்தவர்கள் அதை எந்நிலையிலும் முழுமையாக நம்பமாட்டார்கள்” என்றான்.

அவர்கள் வெளியே சென்று புரவிகளில் ஏறிக்கொண்டார்கள். சகதேவன் “நான் என் பாடிவீட்டுக்கு செல்கிறேன். நீங்கள் படைமுகப்புக்குச் சென்று கௌரவ மூத்தவரை முறைப்படி வரவேற்று என்னிடம் அழைத்து வாருங்கள். நிமித்திகன் தன் இடத்தில் காத்திருப்பதே முறை” என்றான். உத்தரன் தலைவணங்கினான். சகதேவன் தன் படைப்பிரிவை நோக்கி பிரிந்துசெல்ல அவன் நோக்கி நின்றான். என்ன நிகழ்கிறதென்றே அவனுக்கு புரியவில்லை. அனைத்தும் ஒருவகை கேலிக்கூத்துகளாக தோன்றின. பெருந்தன்மைகளை, நெறிச்சார்புகளை எவரிடம் காட்டிக்கொள்கிறார்கள்? ஒவ்வொன்றும் உயர்நடத்தையாகவும் போர்சூழ்ச்சியாகவும் ஒரேதருணத்தில் தோன்றும் விந்தைதான் என்ன?

அவன் படைமுகப்புக்குச் சென்றபோது அங்கே திருஷ்டத்யும்னன் ஏற்கெனவே காத்திருப்பதை கண்டான். அவன் அருகே சென்று வணங்கினான். திருஷ்டத்யும்னன் உளம் உடைந்தவன் போலிருந்தான். உடல் முழுமையாக தளர்ந்து முதுமை குடியேறியதுபோல தெரிந்தது. உத்தரன் “என்னிடம் அரசரை தன்னிடம் அழைத்துவரும்படி இளைய பாண்டவர் பணித்தார்” என்றான். “ஆம், அதை செய்ய என்னால் இயலாது. அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். நீங்கள் வந்தது நன்று” என்றான் திருஷ்டத்யும்னன்.

வெயில் ஏறிவந்தது. வியர்வை வழிய கண்கள் கூசின. விடாய் எழ உத்தரன் திரும்பி நோக்கினான். ஏவலன் கொண்டுவந்த நீர்க்குடுவையை வாயிலிருந்து எடுக்காமல் அருந்தினான். திருஷ்டத்யும்னன் விடாய்கொண்ட பறவைபோல தொண்டை அசைய சற்றே வாய் திறந்து நின்றிருந்தான். “நீர் வேண்டுமா?” என்றான் உத்தரன். அவன் வேண்டாம் என தலையசைத்தான். படைகள் வெயிலில் உருகியவைபோல வழிந்துகிடந்தன. அசைவில்லாதவை போலவும் அசைவன போலவும் விழிமயங்கச் செய்தன.

மறுஎல்லையில் முரசொலி எழுந்தது. “அவர்கள்தான்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று உத்தரன் சால்வையைச் சீரமைத்தான். திருஷ்டத்யும்னன் “என்னென்ன முறைமைகள் என்றே தெரியவில்லை. இவ்வகை நடத்தைகள் இதற்குமுன் போர்முனைகளில் இருந்திருக்காது… இதில் எவருக்கு உளநிலை பிறழ்ந்துள்ளது என்றே தெரியவில்லை” என்றான். படைவீரர்கள் அனைவருக்கும் என்ன நிகழ்கிறதென்று தெரிந்திருக்கிறது என்று உத்தரன் உய்த்துக்கொண்டான். அவர்கள் எப்படியோ செய்திகளை அறிகிறார்கள். உடல்களை இணைக்கும் நுண்வடிவ உள்ளம் ஒன்று அவர்களின் விழிசெவி கடந்து காற்றென ஒளியென சூழ்ந்திருக்கிறது.

திருஷ்டத்யும்னன் கைகாட்ட பாண்டவர் பக்கம் வரவேற்பு முரசுகள் முழங்கத் தொடங்கின. யானைகள் என கொம்புகள் பிளிறியடங்கின. மறுபக்கமிருந்து ஒற்றைத்தேர் அரவுக்கொடி பறக்க வெயிலில் ஒளிரும் செம்புழுதியை சிறகெனச் சூடியபடி வந்தது. அணுகும் பறவையின் அலகுபோல அதை இழுத்த ஒற்றைப்புரவி கழுத்தை முன்னால் நீட்டி கூர்கொண்டு பெருகியது. விரைவழிந்து சிறகுகள் மடக்கி நிலத்தமரும் பறவையென நின்றது. புழுதிமுகிலை காற்று பிரித்து தள்ளிச் சுழற்றி கொண்டுசென்றது. திருஷ்டத்யும்னன் கைகூப்பி வணங்கியபடி முன்னால் சென்றான். உடன் உத்தரன் நடந்தான்.

தேரிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் கைகளைக் கூப்பியபடி இறங்கினர். துச்சாதனன் கையில் ஒரு மரவுரிப்பை வைத்திருந்தான். துரியோதனன் எளிய வெண்ணிற ஆடை அணிந்து தோல்கச்சை கட்டியிருந்தான். அணிகளேதும் இல்லாத கரிய உடல் வியர்வையில் நீராடிவரும் எருமைத்தோல் என மின்னியது. விழிகளும் பற்களும் மட்டும் வெண்மையுடன் தெரிந்தன. திருஷ்டத்யும்னன் துரியோதனனை அணுகி குனிந்து கால்தொட்டு சென்னிசூடி “வாழ்த்துக, மூத்தவரே!” என்றன். “நலம் சூழ்க!” என்று தலைதொட்டு வாழ்த்திய துரியோதனன் “பாஞ்சாலர் நலமாக உள்ளார் அல்லவா?” என்றான். “ஆம், நலம். அங்கு மூத்தவர் அனைவரும் நலமென எண்ணுகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். துச்சாதனனிடம் சென்று தாள்தொட்டு வணங்கினான். அவன் திருஷ்டத்யும்னனின் தலைமேல் கைவைத்து வாழ்த்தினான்.

உத்தரன் அருகணைந்து வணங்கி “அஸ்தினபுரியின் அரசருக்கு வணக்கம். உங்கள் உடன்குருதியினரின் படைக்கு உங்கள் வாழ்த்துக்கள் அமைக!” என்றான். துரியோதனன் முகம் மலர்ந்து “விராடர்… நாம் களத்தில் சந்தித்திருக்கிறோம்” என்றான். “ஆம்” என்றபோது உத்தரன் முகம் சிவந்தான். “உங்களை அழைத்துச்செல்லும் பொறுப்பு இவருக்குரியது” என்றான் திருஷ்டத்யும்னன். “நன்று” என துரியோதனன் தன் பெரிய கையை உத்தரனின் தோள்மேல் வைத்தான். உத்தரன் என்னவென்றறியாமல் மெய்ப்பு கொண்டான். அவன் கால்கள் தளர்ந்தன. அக்கணம் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி துரியோதனன் அழைத்தால் சென்றுவிடுவோம் என்று தோன்றியது. ஏன்? அது வெறும்தொடுகை அல்ல. அத்தகைய அணுக்கத்தை அவன் எவரிடமும் உணர்ந்ததில்லை. அறியா இளமையில் விராடரிடம் அதை உணர்ந்திருக்கலாம். அது தந்தையின் தொடுகைதான். உளம்நிறைந்த கலப்பற்ற பேரன்பு திகழ்வதனாலேயே தெய்வச்சொல்போல் எண்ணும்தோறும் பொருள் நிறைந்தது.

இனி ஒருபோதும் இக்கணத்திலிருந்து என் உள்ளம் விடுபடப்போவதில்லை. எந்தையே, என் உளமுருகுவதை அறிவீர்களா? நான் என்றும் காத்திருந்தவர் நீங்கள் என்று உணர்ந்தீர்களா? அவன் விழிநீர் வந்த கண்களை சரித்து இமைகொட்டி உலரச்செய்தான். என்ன விந்தை இது! முழுப்பித்து. பித்து அன்றி வேறில்லை. ஒரு தொடுகையில் நான் முற்றாக என்னை இழந்திருக்கிறேன். இதை நானே நேற்று அறிந்திருந்தால் நகைத்திருப்பேன். ஆனால் இத்தொடுகை மானுடருக்குரியதல்ல. ஆம், இது தெய்வத்தின் தொடுகை.

துரியோதனன் “அன்று களத்தில் அஞ்சிக்கொண்டிருந்தீர். இன்று உம்மை வென்று எழுந்துவிட்டீர்… இனி நீர் வெல்ல ஏதுமில்லை” என்றான். “அரசே…” என்றபோது உத்தரன் குரல் உடைந்தது. “என்னை நீங்கள் ஒருமையில் அழைக்கலாம். உங்கள் தம்பியர் நூற்றுவரில் ஒருவனாக…” துரியோதனன் நகைத்து “தம்பியர் நூற்றுவரல்ல, அதனினும் பலர்” என்றான். உத்தரன் மீண்டும் மெய்ப்பு கொண்டான். துரியோதனன் அவன் தோளைப்பற்றி “நீர் எனக்கு கீசகரை நினைவுறுத்துகிறீர். நான் மணத்தன்னேற்பரங்குகளில் அவரை கண்டிருக்கிறேன். தோள்கோக்க விழைந்திருந்தேன். உமது முகம் அவருடையது” என்றான்.

அவர்கள் வந்த தேரில் உத்தரன் ஏறினான். முன்னோக்கு வீரர் வழிகாட்ட தேர் படைகளினூடாக செல்கையில் அவன் எங்கிருக்கிறோம் என்றறியாத பேருவகையில் உடல் திளைக்க நின்றுகொண்டிருந்தான். துரியோதனன் சூழ்ந்து நின்றிருந்த பாண்டவப் படைகளை நோக்கவில்லை. உத்தரன் ஒரு வீரனின் விழியை பார்த்தான். அதிலிருந்தது பணிவு என்று தெரிந்ததும் விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் நோக்குவது மானுடனை அல்ல, தெய்வ உருவை என்று தோன்றியதும் திரும்பி துரியோதனனை பார்த்தான். நிகர்கொண்ட உடல். செதுக்கப்பட்டதுபோல சீர்முகம். விழியொளி. அசைவுகளின் அமைதி. இவர் மானுடரே அல்ல என்றிருக்குமா? தெய்வமேதானா?

சகதேவனின் பாசறை முன் தேர் நின்றது. உத்தரன் இறங்கி நின்று தொழுது “வருக, அரசே!” என்றான். துரியோதனன் இறங்கியதும் துச்சாதனன் கூடவே இறங்கி நிழலென நின்றிருந்தான். உத்தரன் தன் விழிகளை சந்தித்ததும் துச்சாதனன் புன்னகைத்தான். உத்தரன் பதறி விலக்கிக்கொண்டான். தன் உள்ளத்திலெழுந்த நெகிழ்ச்சியை அவன் உணர்ந்துவிட்டான் என தெரிந்தது. அப்படி எத்தனையோ உள்ளங்களை பார்த்திருப்பான். சகதேவனின் குடில்முன் நின்றிருந்த நிர்மித்ரன் கைகூப்பியபடி அணுகினான். அவன் குனிந்து துரியோதனனின் தாள்தொட அவனை அள்ளி அணைத்தபடி “மெலிந்திருக்கிறாய்” என்றான். நிர்மித்ரன் தலைகுனிந்து “நாளும் படைக்கலப்பயிற்சி” என்றான். “உணவுண்பதற்கு என்ன? உண்பவர் இளைப்பதில்லை” என்றான் துரியோதனன். நிர்மித்ரனின் தோள்களை அழுத்தி “பயிற்சியும் பெரிதாக இல்லை” என்று துச்சாதனனிடம் சொன்னான்.

தணிந்த குரலில் நிர்மித்ரன் “தந்தை காத்திருக்கிறார், மூத்த தந்தையே” என்றான். “இவ்வழி, அரசே” என உத்தரன் அழைத்துச் சென்றான். நிர்மித்ரன் அவர்கள் வந்திருப்பதை உள்ளே சென்று அறிவித்தான். உள்ளறைக்குள் இருந்து சகதேவன் கைகூப்பியபடி வெளியே வந்து “அஸ்தினபுரியின் அரசருக்கு நல்வரவு” என்றான். துரியோதனனின் கால்தொட்டு வணங்க அவனை தலையில் கைவைத்து துரியோதனன் வாழ்த்தினான். துச்சாதனனையும் வணங்கி வாழ்த்துகொண்டு “வருக, மூத்தவரே!” என்றான் சகதேவன்.

குடிலை நிறைக்கும் பேருடலுடன் உள்ளே சென்றபடி “இளையோனே, உன்னைப் பார்த்து சில நிமித்தக்குறிப்புகள் உசாவிச்செல்லலாம் என்று வந்தேன்” என்றான் துரியோதனன். “உனையன்றி எவரையும் நான் முழுக்க நம்பவியலாதென்று உணர்ந்தேன்.” சகதேவன் “அது என் நல்லூழ். தங்கள் அளி” என்று கைகாட்டினான். உள்ளே விரித்திடப்பட்ட மான்தோலில் துரியோதனன் அமர அருகே துச்சாதனன் அமர்ந்தான். எதிரில் மரவுரியில் சகதேவன் அமர்ந்தான். குடில் முகப்பில் உத்தரன் நின்றான். அறைக்குள் ஒளி வரும்பொருட்டு நிர்மித்ரன் மறுபக்கச் சாளரத்தை திறந்தான்.

“முகமன்கள் இன்றி சொல்லவேண்டியிருக்கிறது, இளையோனே. போர் தொடங்கவிருக்கிறது, இன்னும் சிலநாட்களில். நான் போர்தொடங்குவதெனில் அதற்குரிய சிறந்த பொழுது எது? அதை நீ கணித்துச் சொல்லவேண்டும்.” சகதேவன் “சிறந்த பொழுது எனில் தாங்கள் எண்ணுவதென்ன?” என்றான். துச்சாதனன் “நாங்கள் வெல்வதற்குரிய பொழுது” என்றான். சகதேவன் “மூத்தவரே, போர் என்றல்ல அனைத்துச் செயல்களும் ஊழின் ஆடலே. ஊழ் என்பது நாம் கண்முன் காணும் பல்லாயிரம் பொருள்விசைகள். பல்லாயிரம் பல்லாயிரம் உளவிசைகள். பலகோடி இணைவுகள். முடிவிலா தகவுகள். அவையனைத்துக்கும் அப்பாலென நின்றிருக்கும் அறியவொண்ணா நோக்கம்” என்று சொன்னான்.

“எந்த நிமித்திகனும் வருவதுரைக்க முடியாது என்று உணர்ந்தவனே நல்ல நிமித்திகன். அவன் உரைக்கக் கூடுவது ஊழின் போக்கை. அதன் விசைகளின் கூட்டை. அதிலிருந்து உய்த்தறிந்து அவன் சிலவற்றை சொல்கிறான்” என்றான் சகதேவன். துரியோதனன் “நானும் அதை அறிவேன். நிமித்திகர் தெய்வங்களல்ல. நான் கோருவது நற்பொழுதை மட்டுமே. இப்போரை நான் என் முழுத்திறனாலும் நிகழ்த்தவேண்டும். ஒருதுளியும் எஞ்சாமல் என்னுள் இயல்வன அனைத்தும் வெளிப்பட்டு நிறைவடையவேண்டும். அதற்குரிய களமே இது. அதன்பொருட்டே நன்னிமித்தம் கோருகிறேன்” என்றான்.

சகதேவன் புன்னகைத்து “ஆம், அதற்கான பொழுதை நான் உரைக்கவியலும்” என்றான். “உங்கள் பிறவிநூலும் உடன்பிறந்தார் அனைவரின் பிறவிநூலும் என்னிடம் உள்ளன. அவற்றைத் தொகுத்து எண்களாலான ஒரு கோலமென்றாக்கி வைத்திருக்கிறேன்” என்றான். அருகிருந்த ஆமாடப்பெட்டியை திறந்து அதற்குள் இருந்து ஆட்டுத்தோலால் ஆன சுவடிச்சுருள் ஒன்றை எடுத்து விரித்து நீவி தன் முன் வைத்தான். “பிதாமகர் பீஷ்மர், ஆசிரியர்களான துரோணர், கிருபர், நண்பர் அங்கநாட்டரசர், துணைவர்களான சல்யர், அஸ்வத்தாமர், ஜயத்ரதர், பூரிசிரவஸ், கிருதவர்மர் ஆகியோரின் பிறவிநூல்களையும் கணித்து ஒற்றைச் சுவடியென சுருக்கியிருக்கிறேன்” என்று இன்னொரு சுவடியைப் பிரித்து தன் முன் வைத்தான்.

அவற்றில் அவன் விரல்கள் சுழித்தும் தயங்கியும் விசைகொண்டும் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் கண்களை மூடிக்கொண்டு விரலோட்டினான். விரல் இயல்பான விசையுடன் சுழன்றுகொண்டிருக்க சுவடிகளை விலக்கிவிட்டு தன் முன் தரையில் சுட்டுவிரலால் வரைந்தான். உதடுகள் நுண்சொல்லில் நடுங்கிக்கொண்டிருக்க மெல்ல விழிகள் சரிந்து முகம் ஊழ்கநிலை கொள்ள தன்னுள் ஆழ்ந்தான். துரியோதனன் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். பெருமூச்சொன்று எழ உத்தரன் அதை அடக்கினான்.

சகதேவன் விழிதிறந்து மூச்சொலியாக “ஓம்!” என்றான். “நலம் திகழ்க!” என சொல்கொண்டு “தெய்வங்கள் உடனிருக்கட்டும். மூத்தார் நிறைவுகொள்ளட்டும். மூத்த கௌரவரே, நாளை மறுநாள் புலரியில் போர் தொடங்குக! அது ஆடிமாதம் தேய்பிறை முதல்நாள். உங்களுக்குரிய தேவனாகிய கலி முழு வடிவுகொண்டு எழும் பொழுது அது” என்றான். “ஒவ்வொருநாளுமென உங்கள் தேவன் உங்களை முழுதாள்வான். பதினெட்டு நாட்கள் உங்களை அவன் தன் பேருருவென்றே நிறுத்துவான். உங்கள் மண்நிகழ்நோக்கம் நிறைவேறும். எச்சமில்லாது இவ்வாழ்வை நிறைவுசெய்தவராவீர். இப்புவியில் மானுடர் பெறும் வெற்றிகளில் முதன்மையானது தன்னறம் முழுமைகொள்ளும் பெருவாழ்வே” என்றான் சகதேவன்.

“ஆடி நன்று. காற்றுகளின் மாதம்” என்றான் துச்சாதனன். “ஆடிக்குரிய தெய்வங்கள் கலியும் கொற்றவையும். இப்போர் அவர்களுக்குள் நிகழ்வது. தெய்வங்கள் ஆடுக இனி!” என்றான் சகதேவன். துரியோதனன் கைகூப்பி “அவ்வாறே ஆகுக!” என்றான். பின்னர் துச்சாதனனை நோக்கி திரும்ப அவன் தன் கையிலிருந்த மரவுரிப்பையில் இருந்து சிறு மரத்தாலத்தை எடுத்து அதில் தன் கணையாழி ஒன்றை வைத்தான். “இது நிமித்திகருக்கு அஸ்தினபுரியின் அரசனின் பரிசு. ஏற்றருள்க!” என அளித்தான். சகதேவன் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான்.

துரியோதனன் கைகூப்பியபடி எழுந்து “விடைகொள்கிறோம், இளையோனே. களத்தில் காண்போம்” என்றான். சகதேவன் எழுந்து “தங்கள் வருகையால் பெருமைகொண்டேன், மூத்தவரே” என்றான். துரியோதனன் “நீ நற்துயில் கொள்வதில்லை என எண்ணுகிறேன். விழிகளுக்குக் கீழே கருமை படிந்துள்ளது” என்றான். சகதேவன் புன்னகைத்தான். துரியோதனன் “உங்கள் படைகள் புதிய வீரர்களால் ஆனவை என்றாலும் நன்கு அணிகொண்டுள்ளன. படைத்தலைவர்களிடம் என் பாராட்டுதல்களை தெரிவி” என்றான். சகதேவன் “அவர்களுக்கு அது பெருமதிப்பு” என்றான்.

அவர்கள் வெளியே சென்றனர். சகதேவன் கைகூப்பியபடி உள்ளேயே நின்றான். உடன் சென்ற உத்தரனை நோக்கி புன்னகைத்த துரியோதனன் “நாம் பிறிதொரு தருணத்தில் சந்தித்துக்கொண்டிருக்கலாம், இளையோனே. ஆனால் இவ்வண்ணமாவது இது நிகழ்ந்தது நன்று” என்றபின் உத்தரனின் தோளை வளைத்து மெல்ல தழுவினான். உத்தரன் நிலத்தில் மண்டியிட்டு “என்னை வாழ்த்துக, அரசே!” என்றான். “புகழ்கொள்க!” என்று துரியோதனன் வாழ்த்தினான். அவர்களுடன் தேரை நோக்கி செல்கையில் உத்தரன் நடுங்கிக்கொண்டிருந்தான்.

tigதுரியோதனனும் துச்சாதனனும் ஏறிய தேர் புழுதி எழ நீரில் விழுந்த நாணயம் மூழ்குவதைப்போல் சென்று மறுபக்கப் படைப்பெருக்கில் மறைவதை நோக்கியபடி நின்றபோது உத்தரன் அரியதோர் இழப்புணர்வை அடைந்தான். வெறும் குருதியின் பொருட்டு இங்கே நின்றிருக்கிறேன் என்று அவன் அகம் அரற்றியது. மானுடரை குருதி முழுமையாக இணைக்கமுடியும் என்றால் ஏன் அறங்களென்று மண்ணில் சிலவற்றை அமைத்தன தெய்வங்கள்? அவன் பெருமூச்சுடன் திரும்பி நடந்தான். அவன் அருகே நின்றிருந்த திருஷ்டத்யும்னன் “இனி எதையுமே எண்ணவேண்டியதில்லை. நம்மை முற்றாக தோற்கடித்துவிட்டுச் செல்கிறார் கௌரவ மூத்தவர்” என்றான்.

உத்தரன் வெறுமனே நோக்கினான். “இன்று அவையிலிருந்து வந்ததுமே நோக்கினேன். எந்தப் படைவீரன் முகத்திலும் போர்வீரனுக்குரிய தோற்றம் இல்லை. இந்திரவிழவுக்கு எழுந்தவர்கள் போலிருக்கிறார்கள் மூடர்கள். பெரும்பாலானவர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். குடியால் சிவந்து களைத்த கண்கள். ஒருவரோடொருவர் ஏளனமும் நகையாட்டுமாக சொல்லெடுக்கிறார்கள்” என்றான். “இவர்களால் போரிட இயலாது. ஐயமே தேவையில்லை. போர் அறிவிக்கப்படுமென்றால் தங்களை அரசர் யுதிஷ்டிரர் ஏமாற்றிவிட்டதாகவே உணர்வார்கள்.”

அவனுடைய முகத்தை நோக்காமல் உத்தரன் நடந்தான். தளர்ந்த குரலில் “செய்வதற்கொன்றுமில்லை. போர் முடிந்துவிட்டது. ஆம்…” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “எப்போது பாஞ்சாலத்து ஷத்ரியவீரர்கள் விலைப்பெண்டிரை படைக்குள் கொண்டுவந்தார்களோ அப்போதே போரை இழந்துவிட்டோம்… நாளைமறுநாள் ஆடித் தேய்பிறை முதல்நாள் போர் அல்லவா? பீஷ்ம பிதாமகர் பெருவில்லை ஏந்தியபடி வந்து படைமுகம் நின்று நாணொலி எழுப்பும்போது இங்கிருப்பவர்கள் அவருக்கு வாழ்த்துகூவியபடி சென்று கூடுவார்கள்…”

உத்தரன் “நாம் என்ன செய்ய இயலும் அதற்கு? எந்தப் போரும் படைகளின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெல்வதையும் தோற்பதையும் படைகளின் ஆழுள்ளத்தில் வாழும் தெய்வங்கள் முன்னரே முடிவெடுத்துவிடுகின்றன என்பார்கள்” என்றான். “ஆம், ஆனால் இப்போதும்கூட இளைய யாதவர் ஏதேனும் செய்ய முடியும். அவருடைய போர் இது. அவர் ஒருபோதும் தோற்கமாட்டார் என்ற நம்பிக்கையையே இறுதிப் பற்றுக்கோடென கொண்டுள்ளேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “இத்தனை பெரும்போர் இவ்வளவு நுட்பமாக ஒருங்கமைவது தெய்வங்களின் விழைவாலேயே. நாம் அஞ்சுவதிலும் விழைவதிலும் பொருளில்லை. அதை சொல்லிச் சொல்லி என்னை எழுப்பிக்கொள்கிறேன். ஆனால் என் ஆழம் துவண்டுகிடக்கிறது.”

தொலைவில் வந்த ஸ்வேதனைக் கண்டு உத்தரனின் அகம் திடுக்கிட்டது. முதற்கணம் உளம் திடுக்கிட்டது தன்னையே ஆடியில் கண்டதுபோல் தோன்றியமையால் எனத் தோன்ற அவனிடம் தன் சாயல் உள்ளதா என விழிகளால் வருடிநோக்கினான். அவன் அசைவுகளில் மட்டுமே தான் இருப்பதை கண்டுகொண்டான். ஸ்வேதன் புரவியில் இருந்து இறங்கி தலைவணங்கி “ஆணைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன, இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் ஆர்வமின்றி “நன்று” என்றான். உத்தரன் ஸ்வேதனிடம் “இளையோன் எங்குளான்?” என்றான். ஸ்வேதன் “அவனுக்கு அடுமனையில் பொறுப்பு” என்றான்.

ஸ்வேதனிடம் “அந்த நாகன் எங்குளான்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அவனுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறான்” என்றான் ஸ்வேதன். “அவனை புரவிகளால் மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவன் உடலில் நாகமணம் வீசுகிறது.” உத்தரன் “அவர்கள் நாகநஞ்சு உண்பவர்கள். குருதியில் நஞ்சு ஊறியிருக்கும்” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைக்க அவன் திரும்பிச் சென்றான். உத்தரன் ஒரு படபடப்பை உணர்ந்தான். “என்ன?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “இல்லை… ஒரு நிலையழிவு” என்றான் உத்தரன். “என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். உத்தரன் “அறியேன்” என்றான்.

அவர்கள் புரவிகளில் ஏறினர். “நிகழ்ந்தவற்றை அரசரிடம் சொல்வோம். இப்போது அங்கே படைத்தலைவர்கள் அனைவரும் கூடியிருப்பார்கள். போர் நாளைமறுநாள் தொடங்குமென்றால் நமக்கும் பொழுதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். உத்தரன் அந்தப் படபடப்பு ஏன் என்று உணர்ந்தான். அவன் புரவியை இழுத்ததை உணர்ந்த திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்கி “என்ன?” என்றான். “அவனுக்குப் பின்னால் ஒரு நிழலை கண்டேன்” என்றான் உத்தரன். “நிழல்தானே?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், ஆனால் வெறும் நிழல் அல்ல அது. அது பிறிதொன்று… அவன் அசைவுக்கேற்ப அது அசையவில்லை.”

திருஷ்டத்யும்னன் ஏளனத்துடன் உதட்டை சுழித்தான். “அல்ல, பாஞ்சாலரே. நீங்கள் ஷத்ரியர். உங்கள் விழிகளுக்கு அது தென்படாது. நான் இன்னமும் மலைக்குடி குருதி கொண்டவன். நான் பார்க்கிறேன். அந்நிழல்கள் ஒளியால் உருவாகின்றவை அல்ல. அவை மானுடரை தொடர்பவை. வளர்ந்தும் குறுகியும் எப்போதும் உடனிருப்பவை. அவை பேருருக்கொண்டு எழுகையில் அவர்கள் அதில் ஒரு துளியென்று ஆகிவிட்டிருப்பார்கள்.” திருஷ்டத்யும்னன் “போர்முனை இது. எளிய உளமயக்குகளுக்கு இடமில்லை இங்கே” என்றான். உத்தரன் பெருமூச்சுவிட்டான். “அவனுக்காக அஞ்சுகிறீர், விராடரே. உம் குருதியின் தழுவல் அது” என்றான் திருஷ்டத்யும்னன். “நீர் செய்யவேண்டியது ஒன்றே. உம் தந்தையிடம் சொல்க! இங்கேயே அவர் இவ்விருவரையும் தன் மைந்தராக ஏற்றுக்கொள்ளலாம். வேண்டுமென்றால் ஒரு சிறு சடங்கினூடாகவே அதை முழுமைப்படுத்தலாம்.”

உத்தரன் பேசாமல் வந்தான். “சொல்க!” என்றான் திருஷ்டத்யும்னன். “எந்தை அதற்கு ஒப்புவார் என நான் நினைக்கவில்லை” என்றான் உத்தரன். “நீர் பேசிப்பாரும்” என்றான் திருஷ்டத்யும்னன்.  “நான் அவரிடம் பேசுவதில்லை” என்றான் உத்தரன். “நான் பேசுகிறேன்… அல்லது எந்தையிடம் பேசும்படி சொல்கிறேன்.” உத்தரன் ஒன்றும் சொல்லவில்லை. “அவர்கள் இணை அகவையர். இருவருமே பாண்டவர்களுக்கு மகற்கொடை செய்தவர்கள். அவர்களால் பேசிக்கொள்ள முடியும்” என்றான் திருஷ்டத்யும்னன்.

உத்தரன் மறுமொழி சொல்லாமல் படைகளை நோக்கியபடியே சென்றுகொண்டிருந்தான். அவனால் ஒவ்வொரு முகத்தையும் தனித்தனியாக பார்க்கமுடிந்தது. எவர் முகத்திலும் அச்சமோ பதற்றமோ தென்படவில்லை. அனைவரும் முன்பிருந்ததுபோலவே களியாட்டுமுகம் கொண்டிருந்தார்கள். அனைவரும் துரியோதனன் போருக்கு நாள்குறித்துச் சென்றிருப்பதை அறிந்திருப்பார்கள். ஆனால் எவரும் அதை நம்பவில்லை. அப்படி போருக்கு நாள்குறிப்பதே இந்தப் படைசூழ்கையை முடித்துக்கொள்ளவிருக்கிறார்கள் என்று பொருள்படக்கூடும்.

ஒரு படைவீரன் தட்டிகளுக்கு சாயத்தால் எண்களிட்டுக்கொண்டிருந்தான். “என்ன செய்கிறாய்?” என்றான் உத்தரன். “எஞ்சிய தரைப்பலகைகளையும் தட்டிகளையும் கொண்டு இந்தக் குடில் அமைக்கப்பட்டது, இளவரசே. இதை கழற்றி எடுத்துக்கொண்டு சென்று மீண்டும் அமைக்கும்போது இவ்வெண்கள் தேவைப்படும்” என்றான் படைவீரன். உத்தரனின் விழிகளை திருஷ்டத்யும்னனின் விழிகள் சந்தித்தன. “நம் பொழுது அணுகுகிறது” என்று அவன் வேறுதிசை நோக்கியபடி சொன்னான்.

சற்று தொலைவு சென்றபின் திருஷ்டத்யும்னன் நின்று “சகதேவன் குறித்துக்கொடுத்த நாள் அவர்களுக்கு வெற்றியை அளிக்கும் என்றாரா?” என்றான். “அதை எவரும் சொல்லவியலாது என்றார். அப்பொழுதில் தொடங்கும் போரில் முதற்கௌரவர் தன் முழுமையை வெளிப்படுத்துவார் என்று மட்டுமே சொன்னார்” என்றான் உத்தரன். திருஷ்டத்யும்னன் மேலும் எதையோ சொல்ல விழைந்தான். ஆகவே புரவியை விரைவிலாது நடக்கச்செய்து வேறெங்கோ நோக்கியபடி பொழுதை நீட்டினான். உத்தரன் காத்திருந்தான்.

திருஷ்டத்யும்னன் “அவர் உம்மை தோள்தழுவியபோது எவ்வாறு உணர்ந்தீர்?” என்றான். உத்தரன் “எந்தை என” என்றான். மறுகணம் அவனே தன் உணர்வை கண்டுகொண்டான். “பெருந்தந்தைக்கான ஏக்கம் அனைத்து மைந்தரிடமும் உண்டு. நான் என் மதிப்பை ஈட்டாத தந்தைக்கு பிறந்தவன். கௌரவ மூத்தவரின் தொடுகையில் என் மூதாதையரை உணர்ந்தேன்.” திருஷ்டத்யும்னன் “அவர் அழைத்திருந்தால் சென்றிருப்பீரா?” என்றான். உத்தரன் “அவர் அவ்வாறு எவரையும் அழைக்கமாட்டார்” என்றான். “அழைத்தால்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அழைத்தால் அக்கணமே செல்வேன்… அது என் தெய்வத்தின் ஆணைக்கு நிகர்” என்றான் உத்தரன்.

திருஷ்டத்யும்னன் சீற்றம் கொள்வான் என உத்தரன் எண்ணினான். அவன் புரவியில் உடல் தொய்ந்திருக்க பேசாமல் செல்வதை கண்டபோது எப்படி சீற்றம்கொள்ள முடியும் என்று தோன்றியது. யுதிஷ்டிரரின் பாடிவீட்டை அணுகுவதுவரை திருஷ்டத்யும்னன் மேலும் பேசவில்லை. அப்பால் படைமாளிகையின் ஒழுக்கை கண்டதும் கடிவாளத்தைப் பற்றியபடி நின்று “மெய்யுரைப்பதென்றால் நானும் அவ்வண்ணமே எண்ணினேன், விராடரே” என்றான். “தன் விழைவையும் வஞ்சத்தையும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளிக்காமல் நின்றிருப்பதில் தெய்வங்களுக்குரிய நிமிர்வு ஒன்று உள்ளது… அத்தகையவர் பெருந்தந்தை என்பதில் ஐயமில்லை.”

உத்தரன் அவன் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளாமல் நின்றான். திருஷ்டத்யும்னன் புரவியை ஓட்டி முன்னால் சென்று யுதிஷ்டிரரின் மாளிகை முகப்பில் தன்னை எதிர்கொண்ட யௌதேயனிடம் ஒரு சில சொற்களை உரைத்து கடந்துசெல்வதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான்.