கார்கடல் - 81

ele1அர்ஜுனன் மண்ணில் விழுந்து புரண்டு கூச்சலிட அவனை நோக்கி ஓடிவந்த மருத்துவ ஏவலர் “அவர் உடலின் அனலை அணையுங்கள்… நீர்! நீர் எங்கே?” என்று கூவினார். இடப்பக்கமிருந்து நகுலனும் வலப்பக்கமிருந்து சகதேவனும் அவனை நோக்கி ஓடிவந்தனர். சகதேவன் அர்ஜுனனை அணுகி குனிந்தான். நகுலனிடம் “நீர் கொண்டுவருக! நீர்!” என்று கூச்சலிட்டார் ஏவலர். நகுலன் அக்கணமே திரும்பி அருகே நின்றிருந்த வெண்புரவியின் கழுத்தை தன் உடைவாளால் வெட்டி அதை கால்பற்றி கவிழ்த்துத் தூக்கி குடம்போலச் சரித்து செங்கொப்புளங்களுடன் உப்புமணம் கொண்ட வெம்மையுடன் ஊறிக்கொட்டிய குருதியை அர்ஜுனனின் மேல் ஊற்றினான். “நன்கு ஊற்றுக… அனைத்து இடங்களிலும்!” என்று முதிய மருத்துவர் காதரர் ஓடிவந்தபடியே கூவினார். “கவசங்கள் மேலும் ஊற்றுக… அவை அனல்கொண்டு பழுத்திருக்கும்.” வெம்மையேறிய கலத்தில் விழுந்ததுபோல் குருதி புகைந்து ஓசையிட்டது. கீழே கிடந்த குதிரைகளின் உடல்களில் அசைவிருந்தவற்றை எல்லாம் தூக்கி வெட்டி அவன் மேல் குருதிபொழியச் செய்தனர்.

அனல் அவிந்ததும் அர்ஜுனன் முனகியபடி ஏதோ சொன்னான். அவன் உடலெங்கும் மயிர் பொசுங்கியிருந்தது. அவன் தாடியின் ஒரு புறம் கருகி கன்னத்துடன் ஒட்டியிருக்க குழல் கற்றைகள் எரிந்து சுருண்டிருந்தன. இமைப்பீலிகள்கூட கருகி மறைந்திருந்தன. முகத்தோல் சிவந்து அழன்று கழுத்திலும் காதுக்குப் பின்னும் கொப்புளங்கள் எழுந்துகொண்டிருந்தன. அவனை தொடப்போன மருத்துவ உதவியாளரை நோக்கி முதிய மருத்துவர் காதரர் “கருதுக! மிகக் கருதுக! கைகள் சிவந்த தோலில் பட்டுவிடலாகாது. தோல் வழன்றுவிடக்கூடாது” என்றார். “பட்டு அல்லது இலை. வேறெதிலும் அவர் உடல் படக்கூடாது… பட்டு கொண்டுவருக… ஓடிச்சென்று பட்டு கொண்டுவருக!” இரு ஏவலர் விரைவதற்குள் சகதேவன் நிலத்தில் கொடிக்கம்பம் சரிய விழுந்து பரவியிருந்த பட்டுக்கொடியை எடுத்துவந்தான். அர்ஜுனன் உடல் அளவுக்கே அது பெரிதாக இருந்தது.

காதரர் அர்ஜுனனை மெல்லப்புரட்டி அதில் இட்டுத் தூக்கி அப்பால் கொண்டுசென்றார். அதற்குள் மருத்துவப்பொருட்களுடன் சகடம் அணுகி வந்தது. அதிலிருந்த கொப்பரையில் மூலிகைகள் சேர்த்து வற்றவைத்த குழம்புடன் கலந்த தேன்விழுது நிறைந்திருந்தது. அதை மயிற்பீலிகளால் தொட்டு அவன் முகத்திலும் கழுத்திலும் தோளிலும் பூசினர். “குருதி நன்று… தேனும் ஒரு குருதியே” என்றார் காதரர். அர்ஜுனன் தேன்குருதி விழுதால் மூடப்பட்டு கருமைகொண்டான். ஏவலர் அவன் கவசங்களைக் கழற்றி அகற்றி உள்ளிருந்த ஆடைகளை மெல்ல கிழித்தெடுத்தனர். ஆடை பொசுங்கி உடலுடன் ஒட்டியிருந்தது. காதரர் “மெல்ல, தோல் உடன் வந்துவிடலாகாது. தோலுடன் ஆடை இணைந்திருந்தால் அவ்வண்ணமே விடுக… பொருக்காக பின்னர் எழட்டும்” என்றார். கைகால்கள் நடுங்க குனிந்து நோக்கிய சகதேவனிடம் “கவசங்களிருந்தமையால் உடல் முற்றிலும் வெந்து போகாது தப்பினார்… கவசங்களை உடலுடன் இணைத்த மரவுரிப்பஞ்சுகள் காத்தன” என்றார்.

இளைய யாதவர் மெல்லிய நடையில் ஓசையிலாமல் வந்து அவன் அருகே இடையில் கைவைத்து கூர்ந்து நோக்கியபடி நின்றார். அவர் நோக்கு பட்டதனால் என அர்ஜுனனின் விழியிமைகள் அதிர்ந்தன. முகம் சொல்லுக்கெழுவதுபோல் அசைவுகொண்டது. கண்களைத் திறந்து இளைய யாதவரை சில கணங்கள் நோக்கினான். மீண்டும் இமைகள் மூடின. துடிப்பு கொண்டு திறந்தன. அவன் சகதேவனிடம் “மூத்தவர் எப்படி இருக்கிறார்?” என்றான். “அங்கர் முன்னிருந்து அவர் அம்புகள் பட்டு பின்வாங்கிவிட்டார்” என்றான் சகதேவன். “அங்கரை இப்போது எவர் எதிர்கொள்கிறார்?” என்றான் அர்ஜுனன். சகதேவன் “இப்போது அவரை எவரும் எதிர்கொள்ளவில்லை, மூத்தவரே…” என்றான்.

அவனை சொல்விளங்காததுபோல் சற்றுநேரம் பார்த்த பின் அர்ஜுனன் உரக்க “கர்ணன் நம் படைகளை…” என்றபடி கையூன்றி எழமுயன்று கையில் வலியை உணர்ந்து திரும்பப் படுத்தான். “ஆம் மூத்தவரே, கர்ணனும் துரோணரும் எந்தத் தடையுமிலாதவர்களாக நமது படைகளை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து விலகி ஓடுவதொன்றையே போரென இப்போது நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்” என்று சகதேவன் கசப்புடன் சொன்னான். “அத்தனை விசை மிக்க அம்புகளை இதுவரை எவரும் களத்தில் எழுப்பவில்லை. அவை அம்புகளே அல்ல, அனல்குவைகள், நச்சுப்பெருக்குகள். நம் படைகள் எரிந்தழிகின்றன” என்று நகுலன் சொன்னான்.

அர்ஜுனன் மெல்லிய விதிர்ப்புடன் நினைவுகூர்ந்து “நிர்மித்ரன், சர்வதன்… அவர்களிருவரும் என்ன ஆனார்கள்?” என்றான். “இருவரும் அனல் பட்டு தோல் வெந்திருக்கிறார்கள். இருவருக்கும் நினைவு மீளவில்லை. செய்தி அறிந்து அரசர் அங்கு சென்றிருக்கிறார்” என்று சகதேவன் கூறினான். “யாதவரே, என்ன நிகழ்கிறது? இன்றுடன் இப்போர் முடிவடைந்துவிடுமா?” என்று அர்ஜுனன் கேட்டான். இளைய யாதவர் “போர் முடிவுற வேண்டுமெனில் நீங்கள் ஐவரும் இறக்க வேண்டும். ஐவரும் ஐவர் மைந்தரும் இன்னும் உயிருடன்தான் எஞ்சுகிறீர்கள்” என்றார். “ஆனால் முயல்களைப்போல் படைப்பிரிவுகளுக்குப் பின்னால் வந்து பதுங்கிக்கொண்டிருக்கிறோம். உலர்ந்த நாணல் போலிருக்கிறது இப்படை. அதை எரித்தழித்தபடி வந்துகொண்டிருக்கிறார்கள். நெடும்பொழுது இங்கு இவ்வண்ணம் ஒளிந்திருக்க இயலாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“உனது அம்புகள் என்ன ஆயின?” என்று இளைய யாதவர் கேட்டார். “நீ உன்னிடம் எஞ்சுவது என எதையும் உணரவில்லையா?” என்றார். அர்ஜுனன் விழி தாழ்த்தி “எஞ்சியது இருந்தது. அது எப்போரிலும் படைக்கலமென நான் எடுக்கவேண்டியதல்ல என்று உணர்ந்தேன்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் அவனை பார்த்துக்கொண்டிருக்க அவன் விழிகளை மூடி பெருமூச்சுவிட்டான். சகதேவன் “இனி என்ன செய்வது?” என்றான். “அவரை நாம் களத்தில் வென்றாகவேண்டும். இல்லையேல் இன்றுடன் போர் முடியக்கூடும். எப்பொழுதிலும் துரோணர் படையணிகளை கடந்துவந்து நம் ஐவரில் ஒருவரை சிறைபற்றக்கூடும். பலமுறை மூத்தவரை பிணைகொள்ள அவர் முயன்றிருக்கிறார். அவரைப் பிணைத்து திருஷ்டத்யும்னனைப்போல் தேர்க்காலில் கட்டி இழுத்தாரெனில் அதன் பின் நாம் இப்புவி முழுதையும் வென்றாலும் இழிவு குறைவதில்லை.”

இளைய யாதவர் “போருக்கென எழுந்தபின் எதிரியை களவெற்றியால் மட்டுமே கடக்க இயலும். ஒவ்வொருவரிடமும் எஞ்சியிருக்கும் ஆற்றலென்ன என்று பாருங்கள். அவற்றைக்கொண்டு அவரை எதிர்த்து நில்லுங்கள்” என்றார். சகதேவன் தலையசைத்து “எங்கள் எவரிடமும் அவரை எதிர்கொள்ள எந்த அம்பும் இல்லை. மூத்தவரிடம் இல்லாத அம்பு எதையும் நாங்கள் எப்போதுமே கொண்டிருக்கவில்லை. அவரை நம்பியே களம்புகுந்தோம்” என்றான். பின்னர் கசப்புடன் “இனி ஒன்றே செய்வதற்குள்ளது, ஆட்கொண்டு, பலி பெற்று, குடி முற்றழித்து, நெஞ்சில் ஆடும் அக்கொடுந்தெய்வத்தை எதிர்கொள்ள பூசகர் அம்முறையையே நாடுகிறார்கள். சென்று வணங்கி அதனிடமே அதை வென்று அகற்ற நாம் செய்ய வேண்டியதென்ன என்று கேட்பது. ஆசிரியர் என துரோணர் அவரே உளம் கனிந்து நமக்கு வாழ்வளித்தால் மட்டுமே இனி மீட்சி” என்றான்.

இளைய யாதவர் “அவர் அதை முன்னரே அளித்துவிட்டார். நாம் இப்போரை தொடங்குவதற்கு முன்பு அவரைப் பணிந்து அச்சொல்லை பெற்றுவிட்டோம்” என்றார். திடுக்கிட்டவனாக சகதேவன் திரும்பிப்பார்த்தான். “அவர் அன்று சொன்ன சொற்களை நினைவுகூர்க!” என்றார் இளைய யாதவர். சகதேவனின் விழிகள் மாறின. அர்ஜுனன் கையூன்றி எழுந்தமர்ந்து “ஆம், அச்சொற்களை நான் நினைவுகூர்கிறேன். ஆனால்…” என்றபின் திகைப்பில் சற்றே வாய் திறந்து உறைந்து பின்னர் மீண்டு “அஸ்வத்தாமனா?” என்றான். “ஆம், ஆனால்…” என்றபின் உரக்க “வேண்டாம், அது எளிதல்ல. ஆசிரியரின் அனைத்து ஆற்றல்களும் கொண்டவன் அவன். அதற்கப்பால் அவன் ஈட்டிக்கொண்ட சில பேரம்புகளும் அவனிடம் இருக்கக்கூடும். அவனை உடனே வெல்வது நம்மால் இயலாது” என்றான்.

“முழுமையாக அஸ்வத்தாமனை வெல்ல இப்புவியில் எவராலும் இயலாதென்று உணர்க!” என்று இளைய யாதவர் சொன்னார். “ஏனென்றால் அவனில் கூர்கொண்டிருப்பது துரோணர். துரோணரின் அலைபாய்தல்கள் இல்லாத துரோணர் அஸ்வத்தாமன். மைந்தரில் தந்தையின் பிழைகள் பெருகி எழுவதுண்டு. பிழைகளை திருத்திக்கொண்டு தந்தையின் அகம் திகழ்வதுமுண்டு.” தயக்கத்துடன் “அவ்வாறெனில்…” என்று சகதேவன் சொல்ல “மாளவர்களின் யானை ஒன்று உள்ளது… அதன் பெயர் அஸ்வத்தாமன்” என்று இளைய யாதவர் சொன்னார். அவரது திட்டத்தை புரிந்துகொண்டு இருவரும் அமைதி அடைந்தனர். சகதேவன் “அதை கொன்று அவரிடம் அஸ்வத்தாமர் இறந்துவிட்டாரென்றும் உரைக்கலாம். ஆனால் அவர் அதை ஏற்கப்போவதில்லை. களத்தில் மிக எளிய செயல் அது. ஒரு தூதனை அனுப்பி அஸ்வத்தாமன் எங்கிருக்கிறான் என்று நோக்கினால் மட்டும் போதும். ஒரு முரசொலியே போதும்” என்றான்.

இளைய யாதவர் “நமக்குத் தேவை கால்நாழிகைப் பொழுது” என்றார். “அவர் வில்தாழ்த்தி அமைந்தால் போதும்…” சகதேவன் “அதை அவரே உரைத்தார். அம்பு முனைகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி கள நிமித்தம் நோக்கும் கலை வழியாக அவர் அதை உணர்ந்திருந்ததாக சொன்னார்.” இளைய யாதவர் “அஸ்வத்தாமனை நகுலனும் சகதேவனும் சாத்யகியும் இணைந்து களத்தில் மறு எல்லை நோக்கி அகற்றிக்கொண்டு செல்க! அங்கிருந்து செய்தி வர அரை நாழிகைப்பொழுதேனும் ஆகும்” என்றார். “ஆனால்…” என்று மீண்டும் சொல்லெடுத்த சகதேவனிடம் “அவர் நகுலனையோ பார்த்தனையோ நம்ப மாட்டார். நீ சொன்னால் நம்பக்கூடும்” என்றார். பின்னர் “ஒருவேளை உன்னையும் நம்பாமலாகலாம். முழுமையாக இப்புவியில் அவர் நம்புபவர் ஒருவரே” என்றார்.

அர்ஜுனன் “மூத்தவர் பொய்யுரைக்க மாட்டார்” என்றான். சகதேவன் “ஆம், அப்பழியை நாம் அவருக்கு அளிக்கலாகாது” என்றான். இளைய யாதவர் “அவர் பொய்யுரைக்கலாகாது என்பதன் பொருட்டே அந்த யானையை கொல்கிறோம். அவர் உரைப்பது அஸ்வத்தாமனெனும் யானையின் இறப்பையே” என்றார். சகதேவன் சொல்லெடுக்க முயல இடைமறித்து “அஸ்வத்தாமன் களம்பட்டான் என்றுரைத்த பின் துரோணர் செவிகொள்ளா கீழ்ஒலியில் மாளவர்களின் யானையாகிய அஸ்வத்தாமன் என்று அவர் சேர்த்துக்கொள்ளட்டும். அது பொய்யல்ல” என்றார். சகதேவன் மெல்ல நகைத்து “பொய்யையும் மெய்யையும் அறிபவை நெடுந்தொலைவில் உள்ள தெய்வங்கள் அல்ல, ஒவ்வொருவரின் உள்ளத்தில் அமைந்தவை” என்றான்.

நகுலன் உரக்க “பிறிதொரு வழியில்லை” என்றான். இளைய யாதவர் “அஸ்வத்தாமனின் இறப்பை அவர் யுதிஷ்டிரரின் நாவிலிருந்து கேட்பாரெனில் அம்பு தாழ்த்தி தேர்த்தட்டில் அமர்வார். அவ்வாறல்ல என்று அவருக்கு செய்தி வந்து சேர அரைநாழிகைப் பொழுதாகும். அது போதும் அவரை வென்றெழுவதற்கு. இத்தருணத்தில் பார்த்தன் செய்வதற்கு பிறிதொன்றில்லை” என்றார். “சற்று முன் அவரை வெல்ல பிறிதொரு வழியை உரைத்தீர்கள், யாதவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவரைவிட மேலெழுந்து வெல்லும்படி சொன்னேன். அது உன்னால் இயலவில்லை. எனவே அவரைவிட கீழே இழிந்து கொல்லும்படி இப்போது சொல்லுகிறேன். கொன்றே ஆகவேண்டுமெனில் இவ்விரண்டு வழியே உள்ளது” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் இரு கைகளையும் கோத்து முறுகப் பற்றியபடி வெறுமனே அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “அவரை கொன்றோமெனில் இப்போரில் வெல்வோம். இதுவரை நாம் கொன்ற அனைவரையும் அவ்வெற்றியால் நிறைவுறச் செய்வோம். இங்கு தோற்றோமெனில் பீஷ்மரை வீழ்த்தியதும் நமக்கு பழியென்றேயாகும். பாதி வழி சென்ற பின் மீள்வது முழுச் செலவின் துயரையும் இழிவையும் ஏற்றுக்கொள்வதே” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “ஆனால் அவர் என் ஆசிரியர்” என்றான். “இப்போது அவர் உன் ஆசிரியர் அல்ல. அவர் கற்பித்த அனைத்தையும் நீ திருப்பி அளித்துவிட்டாய். அவருடைய ஒரு சொல்லும் உன்னிடம் இல்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “அவரை கால் தொட்டு வணங்காமல் என் நாட்களை நான் தொடங்கியதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “முதல் நாள் முதல் அம்பை எடுக்கையிலும் அவர் காலை என் அகம் வணங்கியது.”

புன்னகை விரிய “இறுதி அம்பைத் தொடுக்கையிலும் அவ்வாறே அவர் கால் உன் நெஞ்சில் நிற்கட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “பார்த்தா, இந்தக் களத்தில் அடையும் அனைத்து தத்தளிப்புகளும் வெறும் ஆணவம் என்றுணர்க! பீஷ்ம பிதாமகரை வீழ்த்திய பின்னர் நீ அஞ்சும் பழியென இப்புவியில் வேறொன்று உள்ளதா?” சகதேவன் “ஆம் மூத்தவரே, நாம் இனி எதன் முன்னும் தயங்கி நிற்க வேண்டியதில்லை. உடல் பொசுங்கி வெறும் தசைக்குவியலென இக்களம் நிறைத்து படுத்திருக்கும் நமது படைவீரர்களின் பொருட்டே நாம் இனி எழவேண்டும். இவர்கள் அனைவரும் நம் அம்புகளையும் ஆற்றலையும் நம்பி இங்கு வந்தவர்கள். அவர்களுக்கு நாம் செய்யும் கடன் ஒன்றுண்டு” என்றான்.

அர்ஜுனன் எரிச்சலுடன் கைவீசி “என்ன சொல்கிறாய்? மூத்தவர் இதற்கு ஒப்புவாரா?” என்றான். “அவர் ஒப்புவார்” என்று சகதேவன் சொன்னான். “என்ன சொல்கிறாய்?” என்று பற்களை இறுக்கியபடி அர்ஜுனன் கேட்டான். “இதுவரை எதற்கும் அவர் ஒப்புதல் அளிக்காமலிருந்ததில்லை. அறுதியாக அவரை ஆளும் ஒன்றே பிற அனைத்தையும் வென்று நிற்கிறது. பல்லாயிரம் முறை துணியால் சுற்றப்பட்டிருந்தாலும் உள்ளிருக்கும் கூர்வாள் ஒருகணத்தில் வெளிவந்துவிடுமென்று ஒரு காவியச்சொல் உள்ளது” என்றான் சகதேவன். அர்ஜுனன் “இதை நீயே அவரிடம் சொல்” என்றான். “நான் சொல்கிறேன். என் சொற்களை அவர் செவிகொள்வார்” என்ற பின் சகதேவன் புன்னகைத்து “அவருக்கு ஒவ்வாதனவற்றை நான் சொன்னால் பிறிதொருவருடன் உசாவுவார்” என்றான்.

“அவரே இங்கு வந்துகொண்டிருக்கிறார்” என்று இளைய யாதவர் சொன்னார். “செய்தி வந்ததா?” என்று சகதேவன் கேட்டான். “அவர் தன் மைந்தரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். துரோணரால் உடல் வெந்து கிடக்கும் தன் மைந்தரை பார்த்த பின் அவர் பிறிதெங்கும் செல்லமாட்டார். சினமும் அழுகையுமாக இங்குதான் வருவார்” என்று இளைய யாதவர் சொன்னார். தொலைவில் தேரின் ஓசை கேட்டது. சகதேவன் புன்னகையுடன் “ஆம், இங்குதான் வந்துகொண்டிருக்கிறார். தேரோசையிலேயே அவருடைய சீற்றம் தெரிகிறது” என்றான்.

யுதிஷ்டிரர் குதித்து இறங்கி ஓடி அவர்களை நோக்கி வந்தார். “யாதவனே, நாம் என்ன செய்யப்போகிறோம்? இவ்வண்ணம் நம் மைந்தரை அனலில் வேகவிடப்போகிறோமா? நாங்கள் வில்லெடுத்தது எங்களுக்காக அல்ல, உனக்காக. உன் ஆற்றலை நம்பியே இங்கே போர்புரிகிறோம். எங்களை கைவிட்டுவிட்டாயா? எங்கள் தோல்வியிலிருந்து எழுந்து நீ எங்கே செல்லமுடியும்?” என்றார். அர்ஜுனனை அணுகி “பார்த்தா, அரிய அம்புகள் கொண்டிருக்கிறாய் என்று உன்னை நம்பினேன். நீ அருகிருந்தும் என் மைந்தர் அங்கே வெந்துகிடக்கிறார்கள். நீ இங்கே கிடக்கிறாய். நான் நம்பியவர்கள் எல்லாம் என்னை கைவிட்டால் எங்கு செல்வேன்? இந்தக் களத்தில் நான் அழிந்தால் தாழ்வில்லை, என் மைந்தர்கள் வெந்துகிடக்கிறார்கள். என்னால் என் மைந்தர் அழியவிருக்கிறார்கள்” என்றார்.

இளைய யாதவர் “அரசே, நாம் துரோணரை கொன்றாகவேண்டும்” என்றார். “ஆம், கொன்றே ஆகவேண்டும். இன்று. இன்னும் ஒரு நாழிகைக்குள். இனி அவருடைய அம்பால் நம் படைகள் உருகி அழியக்கூடாது. நம் மைந்தர்கள் இறந்துவிடக்கூடாது” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அரசே, அவரை வெல்ல உங்கள் இளையவரால் மட்டுமே இயலும். ஆகவே இவரை களம்கொண்டு சென்றேன். இவர் ஆவநாழியிலுள்ள அனைத்து அம்புகளும் ஒழிந்தன. இவரால் அவரை எதிர்கொள்ள முடியவில்லை” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று யுதிஷ்டிரர் தளர்ந்தார். “அவரை எதிர்கொள்ள முடியாது. ஆசிரியர் கடல், மாணவர் அலைகள் என்பார்கள்.” இளைய யாதவர் “ஆசிரியரை மாணவர் வெல்லும் தருணங்கள் உண்டு” என்றார். “ஆசிரியரை கடந்துசெல்லவேண்டும். பெருமையால், இயலாதெனின் சிறுமையால்.” யுதிஷ்டிரர் “எவ்வண்ணமேனும் அவரை கொன்றாகவேண்டும்… உடனே கொன்றாகவேண்டும்” என்றார். “உங்கள் இளையவரால் அவரை மீறி மேலெழ இயலவில்லை. கீழிறங்கி வெல்லும் வழி ஒன்று உள்ளது. அதை சொல்லிக்கொண்டிருந்தேன்.”

“என்ன?” என குரல் தாழ விழி சுருங்க யுதிஷ்டிரர் கேட்டார். “அரசே, நீங்கள் நினைவுகூர்வீர்கள் என நினைக்கிறேன். நாம் போருக்கு முன் சென்று பிதாமகரையும் ஆசிரியர்களையும் வணங்கி சொல்கொண்டோம். அப்போது ஆசிரியர் உரைத்தது என்ன?” யுதிஷ்டிரர் சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் ஒரு தருணம் உண்டு என்றார் ஆசிரியர்” என்றார். “ஆம், யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் தருணம்… அது எப்போது?” அருகே நின்றிருந்த நகுலன் “தீரமுடியாத நோய் கொள்ளும்போது. அல்லது தாளவொண்ணா துயர் அணுகும்போது” என்றான். “அதையே அவரை வெல்லும் வழி என கொள்ளலாம். அவர் தன் போரை தானே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால் அவர் நோயுறவேண்டும். அது நம்மால் இயலாது. துயருறவேண்டும். அது நம்மால் இயலும்.”

“எவ்வண்ணம்?” என யுதிஷ்டிரர் கேட்டார். “நீங்கள் உள்ளூர உணர்ந்துவிட்டீர்கள், அரசே” என்றார் இளைய யாதவர். “அவரை பெருந்துயர் கொள்ளச்செய்வது ஒன்றே.” யுதிஷ்டிரர் ”ஆனால் நம்மால் அஸ்வத்தாமனை எளிதில் வெல்லமுடியாது…” என்றார். “வெல்லவே முடியாதென்றே கொள்க!” என்றார் இளைய யாதவர். “ஆகவே நாம் பிறிதொரு அஸ்வத்தாமனை கொல்வோம். அவன் இறப்பை அறிவிப்போம்.” யுதிஷ்டிரர் “யார்?” என்றார். “மாளவர்களின் யானை” என்றார் இளைய யாதவர். “அது இத்தருணத்திற்காகவே அப்பெயருடன் பிறந்து வளர்ந்து இக்களம் வரை வந்துள்ளது.” யுதிஷ்டிரர் “ஆனால்…” என்றார். “நீங்கள் அந்த யானையின் இறப்பை களத்தில் அறிவிக்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “தன் மைந்தனின் இறப்பு அது என துரோணர் எண்ணினால் அது நம் பிழை அல்ல.” யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “அது கருதாப் பிழை என்றே கருதப்படும். பழி என்றல்ல.”

“ஆற்றுவதை அறிந்திருப்பதே பழியை அளிப்பது, எனக்கு சொல்நெறியை கற்பிக்கவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “வேறு வழியில்லை மூத்தவரே, நம் படைகள் பொசுங்கி அழிகின்றன. இன்னும் சற்றுபொழுதில் நாம் எஞ்சுவோமா என்றே தெரியவில்லை” என்றான் சகதேவன். நகுலன் அருகணைந்து “எங்களுக்காக அல்ல, நமது படைகளுக்காக, மைந்தருக்காக” என்றான். யுதிஷ்டிரர் எண்ணியிராக் கணத்தில் “நான் சொல்கிறேன்” என்றார். சகதேவன் சற்று திகைத்து பின் “அதனால் உங்கள் உள்ளம் எத்தனை துயருறும் என அறிவோம்” என்றான். “இல்லை, என் உள்ளம் சற்றும் துயருறவில்லை. உண்மையில் துயருக்காகவும் ஒவ்வாமைக்காகவும் நான் என் உள்ளத்தையே கூர்ந்து நோக்கினேன். அது குளிர்ந்து அசைவிழந்து கிடக்கிறது. துரோணர் களம்படுவார் என்றால் நாம் தப்பிவிடக்கூடும் என்னும் எண்ணம் ஆறுதலையே அளிக்கிறது” என்றார் யுதிஷ்டிரர்.

பின்னர் இளைய யாதவரிடம் “நான் அனைத்தையும் இழந்துவிட்டேனா, யாதவனே?” என்றார். “சில திரைகளை கிழித்துக்கொண்டு எழுகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “நான் நெறிபிழைப்பதில் மகிழ்வுறுபவனாகவும் ஆகக்கூடும்…” என்றார் யுதிஷ்டிரர். “அது நிகழாது…” என்று இளைய யாதவர் சொன்னார். “கடந்துசெல்வதெப்படி என்று கற்றுக்கொள்வீர்கள். அரசே, இப்புவியில் மானுடர் கற்றுக்கொள்ளும் அனைத்து அறிதல்களையும் கடந்துசெல்லும் வழி என்னும் ஒற்றை சொல்லில் வகுத்துவிடலாம்.”

“ஆம்” என யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம்.” நகுலனிடம் திரும்பி “உன் உளமென்ன, இளையோனே?” என்றார். “மூத்தவரே, இனி என்னால் உங்கள் சங்கையே அறுக்கமுடியும். இளைய யாதவரையே முதுகில் குத்தி வீழ்த்த முடியும். இக்களத்தில் இனி நான் செய்யக்கூடாதது என ஏதுமில்லை” என நகுலன் சொன்னான். முகம்சுளிக்க வலிப்பென கழுத்துத் தசைகள் இழுபட “நான் இப்பிறவியில் இயற்றக்கூடிய கீழ்மையின் எல்லையை சற்றுமுன் சென்றடைந்தேன். நின்றிருந்த புரவியின் கழுத்தை வெட்டி அதன் குருதியால் மூத்தவரின் உடல் அனலை ஆற்றினேன். அஸ்வமேதம் என ஏன் வைத்தார்கள் என்று இன்று புரிகிறது. தான் ஊரும் பட்டத்துப்புரவியை வெட்டி தெய்வங்களுக்கு அளிப்பவன் இங்குள்ள அனைத்தையும் கடந்துசெல்கிறான். பின்னர் அவன் இங்கே அஞ்சுவதற்கும் இழப்பதற்கும் ஏதுமில்லை” என்ற நகுலன் வாயில் ஊறிய மிச்சிலை துப்பிய பின் திரும்பிச்சென்றான்.