வெய்யோன் - 70

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 7

உண்டாட்டிலிருந்து கிளம்பி தன் மாளிகைமுகப்பில் தேரிறங்கி மஞ்சத்தறை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் தன் உடல் எடை கூடிக்கூடி வந்ததைப்போல் உணர்ந்தான் கர்ணன். ஒவ்வொரு படியிலும் நின்று கைப்பிடியை பற்றிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். நீண்ட இடைநாழியை கண்டதும் அதன் மறுஎல்லையில் இருந்த தன் அறைவரைக்கும் செல்லமுடியுமா என்று எண்ணி தயங்கினான். இருமுறை குமட்டினான்.

அவனை தொலைவிலேயே கண்ட சிவதர் சிற்றடிகளுடன் விரைந்து அவனை அணுகி அவனருகே நின்றார். அவனை பிடிக்க அவர் முயலவில்லை. அவன் அவரது தோளை பற்றிக்கொண்டு மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்தான். ஏப்பம் விட்டு சற்று துப்பியபின் “அந்த அரவுரிச்சுவடி எங்கே?” என்றான். “என்ன?” என்றார் சிவதர். “அரவுரி… அரவுரியை வெட்டி சுவடியாக்கி… அதில் நாகங்களின் கதை…” என்றான். “எங்குள்ளது?” என்று சிவதர் கேட்டார். “அரவுரியை… அரவுரி வெள்ளி நிறமானது. அதில்…” குமட்டலை ஆவியாக வெளியேற்றி “நாகங்களின் கதை… நீலநிறமான எழுத்துக்கள்…”

அவன் சரியும் இமைகளை தூக்கி சிவதரை நோக்கி புன்னகைசெய்து “ஆனால் அவையெல்லாம் நாகங்கள். நாகமுட்டைகள். நாகக்குழவிகள். நாகங்களைக்கொண்டே அவற்றை எழுதியிருந்தனர்…” என்றான். “அவர்களை நான் பார்த்தேன் சிவதரே.” சிவதர் “எவரை?” என்றார் திகைப்புடன். “நாகர்களை. இந்த நகருக்கு அடியிலேயே வளைகளில் உரகநாகர்கள் வாழ்கிறார்கள். இந்நகர் முழுக்க பரவிச்செல்லும் கரவுப்பாதைகள் அவர்களுக்குள்ளன. எங்குவேண்டுமென்றாலும் அவர்கள் எழமுடியும். வேர்களைப்போல…”

சிவதர் “வருக அரசே, களைத்திருக்கிறீர்கள்” என்று அழைத்துச்சென்றார். அவன் மஞ்சத்தறை வாயிலில் நின்றிருந்த காவலன் தலைவணங்கினான். சிவதர் கதவைத்திறந்து அவனை உள்ளே செல்லும்படி கைகாட்டினார். காலை உள்ளே வைத்ததுமே அவன் “ஆ!” என மூச்சொலி எழுப்பி பின்னடைந்தான். அவன் அறைக்குள் சுவர்மூலையில் முழங்கால் மடித்து உடற்குவியல் என ஒரு சிற்றுருவ நாகன் அமர்ந்திருந்தான். தலையில் நாகபடக் கொந்தை அணிந்து கல்மாலை நெஞ்சிலிட்டு அரவுத்தோலாடை அணிந்தவன்.

“என்ன?” என்றார் சிவதர். “அறைக்குள்… நாகன்” என்றான் கர்ணன். எட்டிப்பார்த்துவிட்டு “நிழல்தான்…” என்ற சிவதர் அவனை கைபற்றி உள்ளே கொண்டுசென்றார். “நிழலா? நான் நினைத்தேன்…” என்றபடி அவன் அறையை நன்கு நோக்கினான். அவன் நாகனென எண்ணியது நிலைப்பீடத்தின் நிழல்தான். பிறைக்குள் தனிச்சுடராக நெய்விளக்கு எரிந்தது. மஞ்சம் வெண்பட்டு விரிக்கப்பட்டு காத்திருந்தது. குறுபீடத்தில் குளிர்நீர்க்குடம். சாளரத்துக்கு அப்பால் மகிழ்காட்டின் மரங்களின் மேல்பகுதி இலைக்குவைகள் இருளுக்குள் இருளென மகிழ்ந்து கொப்பளித்தன. காற்று சலசலத்தோடுவது ஒரு மெல்லிய குரலென ஒலித்தது.

அவன் மேலாடையை விலக்கி எடுத்து குறுபீடத்திலிட்டார் சிவதர். அவன் மஞ்சத்திலமர்ந்ததும் குறடுகளை கழற்றி அகற்றினார். கற்கள் பதித்த கங்கணங்களையும் தோள்வளைகளையும் கழற்றினார். மார்பின் மணியாரத்தை தலைவழியாக எடுத்து அதில் சிக்கிய மயிரிழைகளை அகற்றினார். “அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வரமுடியும்” என்று கர்ணன் சிவந்த கண்களுடன் சொன்னான். “அவர்களுக்கு தடைகளே இல்லை.” அவன் கண்களை மூடிக்கொண்டு மெல்ல படுத்தான். சிவதர் அவன் விரல்களிலிருந்து கணையாழிகளை ஒவ்வொன்றாக உருவினார். அணிகளை அருகிருந்த ஆமையோட்டுப்பெட்டியில் இட்டு பிறைக்குள் வைத்தார்.

“நீர் அருந்துகிறீர்களா?” என்றார் சிவதர். கர்ணன் மெல்ல குறட்டை விட்டான். “அரசே!” என்றார் சிவதர். அவன் சப்புக்கொட்டி முனகினான். சிவதர் நுனிக்கால்களில் நடந்து மெல்ல வெளியேறினார். அவர் வெளியேறுவதை கர்ணன் தன் துயிலுக்குள் நோக்கிக்கொண்டிருந்தான். அவர் கதவை மூடியதும் அருகே அறைமூலையில் இருந்த நாகன் அவனை நோக்கி புன்னகைசெய்து “போய்விட்டார்” என்றான்.

கர்ணன் திடுக்கிட்டு எழுந்து மஞ்சத்தில் அமர்ந்தான். “நீங்களா?” என்றான். காளிகர் “ஆம், நான் உங்களை சந்திக்க விழைந்தேன்” என்றார். கர்ணன் அறையை நோக்கி “எப்படி இதற்குள் வந்தீர்கள்?” என்றான். “எங்களுக்குரிய வழிகளைப்பற்றி சொன்னீர்களே! நாங்கள் வேர்கள். வேர்நுழையும் விரிசல்களில்லாத அமைப்பு ஏதும் இங்கில்லை.” கர்ணன் சுற்றிலும் நோக்கி “இல்லை, இங்கு வர வழியே இல்லை” என்றான். “விரிசல்கள் உங்கள் சித்தத்தில் இருக்கக்கூடாதா என்ன? நீங்கள் இன்னும் எங்கள் குகையறைக்குள்தான் இருக்கிறீர்கள்.”

கர்ணன் “இல்லை… நான் இந்திரவிழவுக்குச் சென்றேன். அங்கதநாடகம் கண்டேன். உண்டாட்டில் மகிழ்ந்தேன்” என்றான். “ஆம், அவையும் உண்மை. ஆனால் வேறுவகை உண்மை” என்றார் காளிகர். “நான் எங்கிருக்கிறேன்? உண்மையில் உங்களை நான் காண்கிறேனா? இல்லை இவை என் சித்தக்குழப்பங்களா?” என்றான் கர்ணன். “ஏனென்றால் சற்றுமுன்புவரை நான் உங்களை சந்தித்ததெல்லாம் முன்பு ஏதோ காவியத்தில் கேட்டவை நினைவில் மீண்டது போலிருக்கிறது.”

“இருக்கலாம். நாகப்பிரபாவம் என்னும் பெருங்காவியத்தில் இதே நிகழ்ச்சி உள்ளது. ஆனால் அது நாகோத்ஃபேதத்தை அழித்து அங்கு எழுந்த பெருநகரான மகோதயபுரத்தை பற்றியது. அதன் அடியாழத்தில் வாழும் உரகநாகர்களை காணச்செல்கிறான் அதன் கதைத்தலைவனாகிய அருணன்…” கர்ணன் பதற்றத்துடன் “ஆம், இப்போது நன்கு நினைவுகூர்கிறேன். வேசரநாட்டில் என் ஆசிரியருடன் மழைக்காலத்தில் மலைக்குகை ஒன்றில் தங்கியிருக்கையில் முதியசூதன் அவருக்கு இக்காவியத்தை சொன்னான்” என்றான்.

அவன் பரபரப்புகொண்டு எழுந்து நின்றான். “நான் சற்றுநேரத்திலேயே துயின்றுவிட்டேன். ஆனால் துயிலுக்குள் அதை கேட்டுக்கொண்டிருந்தேன். மழையொலியும் காவியச்சொற்களும் கலந்து என்னுள் பொழிந்து சொட்டி ஓய்ந்தன. அதில் நான் கேட்ட சொற்கள்தான் அனைத்தும்… ஒவ்வொரு விவரிப்பும் ஒவ்வொரு கூற்றும் அப்படியே அந்நூலில் கேட்டவை.” அவன் திகைத்து “இவ்வறைக்குள் நீங்கள் வந்து அமர்ந்திருக்கும் காட்சியும் அக்காவியத்தில் உள்ளதே…” என்றான். காளிகர் நகைத்து “ஆம்” என்றார். “நான் எங்கிருக்கிறேன்?” என்றான் கர்ணன். “காவியத்திற்குள்” என்றார் காளிகர்.

கர்ணன் வாயிலை நோக்கினான். சிவதரை அழைக்க விரும்பி கைகளை தூக்கப்போனான். “அவர் சென்றுவிட்டார். தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடுகிறார்” என்றார் காளிகர். அப்போது அவனும் அவர் நுழைவதை கண்டான். உண்மையில் கண்டானா? உளமயக்கா? ஆனால் அவர் அங்கே அமர்ந்திருந்தார். கைநீட்டினால் தொடமுடியும். அவன் உடல் தளர்ந்தான். “அஞ்சவேண்டியதில்லை அங்கரே. உங்களிடம் பேசவே வந்தேன்” என்றார். “ஏன்?” என்றான் கர்ணன். “ஏனென்றால் நீங்கள் எங்களவர்.”

“இல்லை, நான்…” என கர்ணன் வாயெடுக்க “நீங்கள் வீழ்த்தப்பட்டவர், எங்களைப்போலவே” என்றார் காளிகர். “எங்களைப்போலவே உட்கரந்த வஞ்சம் கொண்டவர்.” கர்ணன் சினத்துடன் “இல்லை” என்றான். காளிகர் அதை நோக்காமல் “அனைத்து ஆற்றல்களிருந்தும் தோற்கடிக்கப்பட்டவர். அறத்தால் அழிந்தவர்.” கர்ணன் “நான் அழியவில்லை. என் கையில் வில் இன்னமும் தாழவில்லை” என்றான். “வஞ்சமில்லையேல் ஏன் இன்று முட்டக்குடித்தீர்கள்? மேலும் மேலுமென மதுவை வாங்கிக்கொண்டே இருந்தீர்கள்!”

அவன் பெருமூச்சுவிட்டபடி அமர்ந்தான். தலையை கைகளால் பற்றிக்கொண்டான். “ஏனென்றால், இன்று ஒருதுளி கருணையால் நீங்கள் முற்றாக வீழ்த்தப்பட்டீர்கள். அதை வஞ்சத்தால் வென்று சென்றீர்கள். கருணை, பெருந்தன்மை, அன்பு. உங்களைச்சூழ்ந்து நச்சுமுனைகொண்ட அம்புகளாக அவையல்லவா நின்றுள்ளன?” கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “அறிக அங்கரே! வஞ்சம்போல் ஆற்றல் அளிப்பது பிறிதொன்றில்லை.”

நாகத்தின் சீறல்போன்ற ஒலியில் “நீங்கள் எங்களவர். நீங்கள் பிறப்பதற்குள்ளாகவே தேர்வுசெய்யப்பட்டுவிட்டீர்கள்” என்றார் காளிகர். கர்ணன் மூச்சடைக்கும் ஒலியில் “எவரால்?” என்றான். “சொல்லுங்கள், நீங்கள் அறிவீர்கள்…” காளிகர் புன்னகை செய்தார். “நான் சொல்லவந்தது எங்கள் கதையை.” கர்ணன் அவரை இமைக்காது நோக்கினான். நாகவிழிகள், கைக்குழந்தையின் சிறுவிரல்நகம்போல மெல்லிய ஒளிகொண்ட இரு முத்துக்கள். அவன் விழிதிருப்ப விழைந்தான். அவ்விழைவு வேறெங்கோ ஓர் எண்ணமாக ஓடிக்கொண்டிருந்ததை அறிந்தான்.

“இன்று கேட்டீர்கள், எங்கள் குலமழிந்த கதையை” என்றார் காளிகர். “சொல்லப்படுகையில் அனைத்தும் எத்தனை எளிதாகிவிடுகின்றன. சொல்லை மானுடர் கண்டடைந்ததே அனைத்தையும் எளிதாக்கிக் கொள்வதற்காகத்தான். சொல்லப்படுகையில் ஒவ்வொன்றும் எல்லைகொண்டுவிடுகின்றன. மலைகளை கூழாங்கற்களாக்கி விளையாடும் மைந்தரென மாறிவிடுகின்றனர் அனைவரும். ஆகவேதான் மாவீரரை, மாதவத்தாரை, மூத்தோரை, மூன்றுதெய்வங்களை விட கவிஞர்கள் இங்கு போற்றப்படுகிறார்கள்” என்றார் காளிகர்.

“வாழ்ந்தோர் அனைவரும் மறக்கப்படுகிறார்கள். மண் அனைத்தையும் உண்டுசெரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கல் கூட இன்றி மாநகர்கள் மறைகின்றன. ஆனால் உரியமுறையில் சொல்லப்பட்ட சொல் அழிவதில்லை. அருமணி என, தெய்வத்திரு என நெஞ்சோடணைத்து கொண்டுசெல்கிறார்கள். ஏனென்றால் அவை எல்லையின்மையின் இருளுக்கு கால்தளையும் செவித்துளையும் இட்டு இழுத்துக் கொண்டுவந்து நம் முற்றத்தில் நிறுத்துகின்றன. அங்குசம் கொண்டு அடிபணியச் செய்யலாம். கொட்டில்களில் கட்டிப்போட்டு தீனியிட்டு வளர்க்கலாம். ஏறி அமர்ந்து நகருலா செல்லலாம்.”

கர்ணன் அவரை நோக்கிக்கொண்டு நெஞ்சில் சொல்லென ஏதுமிலாது அமர்ந்திருந்தான். “அங்கு நிகழ்ந்தது போரல்ல, கொலையாட்டு” என்றார் காளிகர். “நினைவு சென்று தொடமுடியாத காலத்தில் அங்கே குடிவந்தனர் தட்சநாகர்கள். அக்காட்டின் எல்லையெனச் சூழ்ந்திருந்த மூன்று சிற்றாறுகளுக்கும் யமுனைக்கும் அப்பால் செல்ல அவர்களுக்கு குடிவிலக்கு இருந்தது. கதைகளெனக்கூட பிறநிலங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் விழைந்த அனைத்தும் அக்காட்டுக்குள்ளேயே இருந்தன. இன்னுணவும் மயல்மதுவும் அளவின்றி கிடைத்தன. உண்டாட்டும் காதல்களியாட்டுமே அவர்களின் வாழ்வென்றிருந்தது.”

எதிரிகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. முதல் எதிரியென அவர்களின் தொல்குடிநினைவிலிருந்த அனலை அவர்கள் விண்ணெழும் மின்கதிர்வடிவிலன்றி பார்த்ததில்லை. கோடையிலும் நின்று மழைபெய்யும் காண்டவத்தில் எரியெழுவதும் இயல்வதல்ல. எனவே அவர்களுக்கு போர்த்தொழில் தெரிந்திருக்கவில்லை. தங்களுக்குள் பூசலிடுவதற்குரிய நச்சுநாணல்கள் அன்றி படைக்கலமென ஏதும் இருக்கவுமில்லை. தந்தையென்றும் அரசனென்றும் தெய்வமென்றும் விண்ணிலிருந்த இந்திரன் அவர்களை புரந்தான். அவன் மண்வடிவாக அமைந்து தட்சகுடியின் அரசர்கள் அவர்களை ஆண்டனர்.

அரசே, சத்யயுகத்தில் இந்நிலம்நிறைத்து ஆண்டிருந்த நாகர்குலங்கள் அனைத்தும் முன்னரே துவாபர யுகத்திலேயே சூரிய, சந்திர குலத்து முடிவேந்தரால் முற்றழிக்கப்பட்டிருந்தன. வடபுலமாண்ட வாசுகியும் தட்சரும் கீழைமண்ணின் ஐராவதரும் நடுநிலமாண்ட கௌரவ்யரும் தென்னிலமாண்ட திருதராஷ்டிரரும் குலம்சிறுத்து காடுகளுக்குள் மறைந்தொடுங்கினர். அஞ்சி ஓடியவர் அணிந்த இழைகளிலிருந்து உதிர்ந்து புதருக்குள் கிடந்த அருமணி என உரகதட்சர்கள் மட்டும் காண்டவத்திற்குள் பிறர் அறியாது வாழ்ந்தனர்.

ஒவ்வொரு குலமும் அதில் முந்தியெழும் முதற்குடியால் அழிக்கப்படவேண்டுமென்பது இப்புடவி படைத்தவனின் அரசியல். தன்வாலை தான் கொத்தி நஞ்சூட்டிய நாகத்தலையின் கதையை சொல்கிறேன், கேட்டறிக! நாகோத்ஃபேதத்தில் பிறந்து ஐங்குலமென விரிந்த நாகர்களில் முதன்மையானது வாசுகி குலம். பிலக்‌ஷசிலையென்னும் பெருநகர் சமைத்து புவியாண்டனர் நந்தனில் தொடங்கிய வாசுகியர்.

கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரணன், கக்ஷகன், காலந்தகன் ஆகிய மாமன்னர்களின் நிரையிலெழுந்தவர் பெருவல்லமைகொண்ட ஸ்வேதகி என்னும் மன்னர். நிகரற்ற வில்வல்லமைகொண்டவர். மூன்று பெருநீர் நதிக்கரைகளின்மேல் மறுப்பற்ற ஆட்சி செய்தவர்.

வடவெல்லைப் பனிமலைமுதல் தென்னெல்லை கடலலை வரை அவரது கொடிபறந்தது. வெள்ளிமுடி அமர்ந்த வெய்விழியன் அவர்களின் குலமுதல்தெய்வம். அவர்களை அஞ்சின நூற்றெட்டு காடுகளில் வாழ்ந்த அசுரர் குலங்கள், தெற்கே பெருநகர்களை அமைத்து ஆண்ட அரக்கர்குடிகள், பெருநதிப்படுகைகளில் வாழ்ந்த நால்வருணக் கொடிவழியினர்.

அனலவனை குலமுதலோன் எனக் கொண்ட பிருகுகுலத்து அந்தணர் ஒருவர் சிந்துவின் பெருக்கில் படகிலேறி பிலக்‌ஷசிலைக்கு வந்திறங்கினார். நால்வேதங்களும் ஆறுநெறிகளும் மூன்று தத்துவங்களும் கற்றுத்தெளிந்தவர். சொற்களைத் தீட்டி அருமணிகளென்றாக்கியவர். காலத்திரை விலக்கி நோக்கும் கண்கள் கொண்டவர்.

அறிவரை எதிர்கொண்டு அவையமரச் செய்தார் ஸ்வேதகி. முகமனும் முறைமையும் முடிந்தபின் அரசரிடம் அந்தணர் சொன்னார் “அரசே, உன் நற்செய்கைகளால் மகிழ்ந்தேன். வருணனில் சார்ஷணிக்குப் பிறந்த வாருணிபிருகுவிற்கு புலோமையில் பிறந்தவர் என் மூதாதையான சியவனர். அவர் கொடிவழியில் வந்த சௌனகரின் மைந்தர் வஜ்ரவாக்கின் மகன் வஜ்ரகேது என என்னை அவைவைக்கிறேன். இவ்வரசவையில் என் சொல்லில் என் மூதாதையர் அமர்க!”

“அனல்குடி வந்தவன் நான். அரசர்களின் கொடிகளில் தழல் பறப்பதை விழைபவன். ஆனால் இங்கு வந்தபோதே உம் அரியணைக்குமேல் பறக்கும் இரட்டை அரவுக்கொடி சாளரம் நிறைத்து வரும் பெருங்காற்றிலும் பறக்காது துவண்டிருப்பதை கண்டேன். உம் உள்ளத்தில் உறைந்த துயரை அறிகிறேன். அதை குறித்து நீர் என்னிடம் ஒரே ஒரு வினாவை மட்டும் கேட்கலாம்” என்றார் வஜ்ரகேது.

ஸ்வேதகி வணங்கி “ஆம், அந்தணரே. இது என் அகம். நான் ஐங்குலத்தின் முதலரசனாக இங்கு அரியணை அமர்ந்திருக்கிறேன். ஆனால் என் உள்ளம் குளிர்ந்து நீரிலூறிய மரவுரியென கிடக்கிறது. என் இடைப்பசியும், வயிற்றுப்பசியும், சொற்பசியும், சித்தப்பசியும் அணைந்துகிடக்கின்றன. விழிகளில் ஒளியில்லை. என் கனவுகளில் அசைவிலாது கிடக்கும் கரும்பாறைகளை மட்டுமே காண்கிறேன்” என்றார்.

“நேற்று நான் கண்ட கனவொன்றில் நான் இறந்து உறைந்து கிடந்தேன். என்னைச் சூழ்ந்திருந்தவர்கள் நான் இறந்திருப்பதையே அறியாமல் இயல்பாக பேசிக்கொண்டிருந்தனர். என்மேல் ஈக்கள் வந்தமர்ந்தன. என் உடல் உப்பிக்கொண்டே இருந்தது. வியர்த்து விழித்துக்கொண்டு ஏங்கி அமர்ந்திருந்தேன். இருள் விலகியபோதுதான் நகரில் நீங்கள் வந்திறங்கியிருக்கும் செய்தி வந்தது. உங்களிடம் என் வினவுக்கான விடையிருக்குமென எண்ணினேன். அவ்வினாவையே இங்கு வைக்கிறேன். இக்கொடி பறக்க நான் என்ன செய்யவேண்டும்?”

“அரசே, மன்னர்கள் நெருப்பைப்போல. எரிந்து பரவாத நெருப்பு அணைந்துபோகும் என்றறிக! நீங்கள் உங்கள் குலநெறிகளில் சேற்றில் களிறு என சிக்கியிருக்கிறீர்கள். ஐங்குலத்தலைவராக நீங்கள் அமரும்வரை இந்த நகரெல்லைக்கு அப்பால் நீங்கள் விரியமுடியாது. விரியாமையால் அணையத்தொடங்கிவிட்டீர்கள்” என்றார் அந்தணர்.

“நான் செய்யவேண்டியது என்ன?” என்றார் ஸ்வேதகி. “பாரதவர்ஷத்தின் வரலாறெங்கும் அனைத்துக் குலத்தலைவர்களும் செய்வதைத்தான். சிறகு முளைத்தபின் பட்டாம்பூச்சி கூட்டுக்குள் இருப்பதில்லை. குலமூப்பு அடைந்தபின் அரசராவதே வழி. அரசர்கள் பேரரசர்களாகவேண்டும். பேரரசர்கள் சக்ரவர்த்திகளாகவேண்டும். சக்ரவர்த்திகளோ அரசு துறந்து அரசப்படிவர்களாகி முழுமைபெறவேண்டும். விண்ணில் அவர்களுக்கான பீடம் ஒருங்கியிருக்கும்.”

“இங்கிருக்கிறீர்கள் நீங்கள். எளியமானுடராக. கோல்கொண்டு முடிசூடி அறம் நாட்டி கொடையளித்து புகழ்விரிந்து இப்புவியை ஆண்டு நீங்கள் விண்ணேற வேண்டாமா? மண்ணாண்டு விண்ணமர்ந்த சக்ரவர்த்திகளான பிருதுவும், யயாதியும் அமர்ந்திருக்கும் விண்ணுலகில் அல்லவா உங்களுக்கும் பீடம் அமையவேண்டும்? இங்கு இவ்வண்ணம் உதிர்ந்தால் உங்கள் பிறப்பு பொருளற்றதாகும்.”

“நான் என்ன செய்யவேண்டும்?” என்றார் ஸ்வேதக வாசுகி. “அதற்குரிய வழிகளையும் முன்னோர் இங்கு அமைத்திருக்கின்றனர். மகாசத்ர வேள்வி ஒன்றை தொடங்குக! அதில் உங்களை வேள்விக்காவலராக அமர்த்துக! உங்கள் ஐங்குலங்களும் அங்கே வந்து உங்களை முடியுடை முதல்மன்னராக ஏற்று வேள்விமுறை செய்யவேண்டும். அசுரர்களும், அவுணர்களும், அரக்கர்களும் வந்து உங்கள் கோல்வணங்கி அடிக்காணிக்கை அளிக்கவேண்டும். சத்ரவேள்வி என்பது அதைச்செய்யும் அரசரின் வெண்குடை நிலைபெறுவதற்கான வழி என அறிக!”

“உங்கள் அடிபணிந்து திறையளிக்காத அனைவரும் உங்கள் எதிரிகள். அவர்களின் ஊர்களை உங்கள் படைகள் சூழட்டும். அவர்களின் ஊர்களை வென்று கருவூலங்களை கொள்ளையிடட்டும். திறைச்செல்வமும் கொள்ளைச்செல்வமும் உங்கள் கருவூலத்தை நிறைக்கட்டும். அதைக்கொண்டு ஏழு வகை அறங்களை இயற்றுக! உங்கள் நிலமெங்கும் நீர்வளம் நிலைநிறுத்துக! ஊர்களெங்கும் ஆலயங்கள் அமையட்டும். குடிகள்தோறும் கல்விச்சாலைகள் நிறைக! வழிகளெங்கும் அன்னசாலைகள் அமைக! பெருநூல் பயிலும் புலவர் அவை சிறக்கட்டும்! வேள்விச்சாலைகளில் வேதச்சொல் ஒலிக்கட்டும். முனிவர்களின் தவச்சாலைகள் மேல் தெய்வங்கள் வந்திறங்கச் செய்க! உங்கள் அரசை விண்ணவரும் மண்ணவரும் வாழ்த்துவர். வைரமுடிசூடி வெண்குடை கவித்து சக்ரவர்த்தி என்று அமர்க!”

“ஆம், அவ்வாறே செய்கிறேன்” என்றார் ஸ்வேதக வாசுகி. பிலக்‌ஷசிலையில் வட்டவடிவமான பெருமுற்றம் நடுவே பன்னிரண்டாயிரம் தூண்கள் கொண்ட வேள்விக்கூடம் அமைந்தது. அதில் வஜ்ரகேதுவின் தலைமையில் ஆயிரம் வேள்விக்கொடையர் அமர்ந்து அழியாச்சொல் ஓதி அவியிட்டு தேவர்களை மண்ணிறக்கினர். ஐங்குலத்துக்கும் அசுரருக்கும் அவுணருக்கும் அரக்கருக்கும் வேள்விச்செய்தி அளிக்கப்பட்டது. வந்து அடிபணியாதவர்கள்மேல் ஸ்வேதக வாசுகியின் நாகப்படையினர் கொடிகொண்டு எழுந்தனர்.

நூறு போர்களாக நூறாண்டுகாலம் நடந்தது அந்த வேள்வி என்கின்றன கதைகள். ஸ்வேதக வாசுகிக்குப்பின் அவர் மைந்தர் உபநந்த வாசுகி அவ்வேள்வியை நடத்தினார். கடல்தேரும் ஆறுகளைப்போல நெய்க்குடங்கள் ஏந்திய படகுகளும் வண்டிகளும் பிலக்‌ஷசிலைக்கு சென்றுகொண்டிருந்தன. நாளும்பகலும் முறியாதெழுந்த வேள்விப்புகையால் ஆயிரம் அவியளிப்போர் விழியிழந்தனர் என்கின்றன கதைகள்.

ஏழு பெரும்போர்களில் தோற்றடங்கிய ஐங்குலங்களும் ஸ்வேதக வாசுகியை முழுதேற்றன. பதினாறு ஜனபதங்களும் பதினெட்டு அரக்கர்குடிகளும் நூற்றெட்டு அசுரகுடிகளும் அவரை தங்கள் அரசரென்றன. உபநந்த வாசுகியின் மைந்தர் ஸ்வேதக வாசுகியை வேள்விப்பீடத்தில் அமர்த்தி மகாசத்ர வேள்வியை முடித்து வெண்குடை நாட்டி சத்ரபதி என்று அறிவிக்க வஜ்ரகேதுவின் மாணவர் ஸ்யவனர் அவையமர்ந்தார். அடிபணிந்த அனைவரும் தங்கள் கொடியும் முடியும் சூடி அவைநிறைத்திருந்தனர்.

புள்குறியும் விண்மீன்குறியும் ஒலிக்குறியும் ஒளிக்குறியும் தேர்ந்த நிமித்திகர் “அரசே, சத்ரவேள்வி முடிவடையவில்லை. உங்கள் குலத்திலேயே உங்களை முழுதேற்காத ஒரு கிளை எங்கோ உள்ளது” என்றனர். “தன் குலத்தால் முழுதேற்கப்படாத எவரும் முடிமன்னராக முடியாது. முடியணியாதவர் கொடிகொண்டு செல்லவும் கூடாதென்றறிக!”

சினந்தெழுந்த ஸ்வேதகி தன் அமைச்சர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி சினந்து “எவர்? எஞ்சியிருக்கும் என் கிளை எது?” என்று கூவினார். “அரசே, ஐங்கிளையும் எழுபத்தாறு கிளைகளாகப் பிரிந்து பன்னிரண்டாயிரம் குடிகளென்றாகி பதினெட்டாயிரம் ஊர்களில் வாழ்கின்றன. அனைவரும் அடிபணிந்து தாள்வில் தாழ்த்தி தலையளித்துவிட்டனர். எவரும் எஞ்சவில்லை” என்றார் தலைமை அமைச்சர் சிம்ஹபாகு.

“அறியோம். எங்கள் குறிகள் பிழைப்பதில்லை. எங்கோ எஞ்சியிருக்கிறது ஒரு குலம்” என்றனர் நிமித்திகர். “பாரதவர்ஷமெங்கும் மழையென மூடிப்பெய்து பரவி மீண்டுள்ளது எமது படை. எங்கும் எவரும் இனி எஞ்ச வாய்ப்பில்லை” என்றார் படைத்தலைவர் வீரசேனர். “எங்கள் சொல் பிழைப்பதென்றால் விண் இடிவதற்கு நிகர்” என்றனர் நிமித்திகர்.

வேதியர்தலைவர் ஸ்யவனர் “அரசே, உங்கள் குடிகளில் முதியவர் எவரோ அவரை அழையுங்கள். அவரிடம் கேளுங்கள்” என்றார். அமைச்சரின் ஆணைக்கேற்ப நூற்றைம்பது வயதான முதுநாகர் கோகர்ணர் அவரது நான்காம் தலைமுறைப் பெயரர்களால் துணிமஞ்சலில் சுமந்து கொண்டுவரப்பட்டார். அவையமர்ந்த கோகர்ணர் செவியும் கண்ணும் அனலவிந்து காலமிழந்து சூழலழிந்து கரிமூடிய கனலென இருந்தார். அவர் இளம்பெயரர் கோகர்ணர் ஏழுமுறை உரக்கக் கூவி வினாக்களை கேட்க அவர் முனகிச்சொன்ன மறுமொழிகளை இன்னொரு பெயரர் கோகர்ணர் செவிகொடுத்துக் கேட்டு அவை நோக்கி சொன்னார்.

பன்னிரு வினாக்கள் இலக்கடையாது விழுந்தன. பன்னிரண்டாவது வினாவுக்கும் பொருத்தமில்லாத மறுமொழி இருளில் இருந்து எழுந்து வந்தது. ஆனால் அது அவர்கள் தேடிய சொல்லாக இருந்தது. “எந்தையர் படைகொண்டு சென்றனர். தட்சர்களை வென்றனர். வென்று முடியாது மீண்டனர். எஞ்சும் ஒரு துளி நச்சு எங்கோ உள்ளது” என்றார் முதியவர்.

அவர் சொல்லில் இருந்தே அவர்கள் சூரியனின் மைந்தரான தட்சசிலையின் நாகர்குலத்து அரசர் மகாபுண்டரரின் இளையமைந்தர் அருணர் குலப்பகை கொண்டு நகர் நீங்கிய கதையை அறிந்தனர். அருணர் அமைத்த தட்சபுரத்தை நந்தவாசுகியின் தலைமையில் ஐங்குலநாகர்கள் படை சூழ்ந்ததையும் பன்னிருமுறை போரிட்டும் முழுதும் வெல்லாமல் போர்நிறை செய்ததையும் உணர்ந்தனர்.

“நாடகன்ற தட்சர்கள் எங்கோ உள்ளனர். அவர்களை கண்டறிக!” என்றார் ஸ்வேதகி. “அவர்களை நிலம்சூழ்ந்து அறியமுடியாது. எனவே சொல்சூழ்ந்து அறிக!” என்றார் ஸ்யவனர். எழுதப்பட்ட பாடப்பட்ட சொல்லப்பட்ட நினைக்கப்பட்ட அனைத்துக் கதைகளையும் தேர்ந்து அதனூடாக நுண்தடம் கண்டடைந்து காண்டவப்பெருங்காட்டில் புதைந்துவாழ்ந்த தட்சர்களை கண்டடைந்தனர்.

பிண்டக தட்சரின் கொடிவழி வந்த நூற்றாறாவது தட்சர் காமிகரின் ஆட்சியில் அங்கு வாழ்ந்த நாகர்களை அவர்களின் சொல் சென்றடையவே இல்லை. தங்கள் காட்டுக்கு வெளியே பிறமானுடர் வாழ்வதையே அவர்கள் அறிந்திருக்கவில்லை. அங்கே சென்று மீண்ட ஒற்றர் அது அணுகலாகாத பெருங்காடு என்றனர். நச்சு வேரோடி, நச்சு முளைத்து, நச்சு தழைத்து, நச்சு இழைந்து, நச்சு நடந்து, நச்சு பறக்கும் நிலம் அது.

அந்நிலத்தை வெல்லும்வரை தன் சத்ரவேள்வியை முடிக்கமுடியாதென்று உணர்ந்த ஸ்வேதகி பன்னிருநாட்கள் தன் குடித்தெய்வமாகிய முக்கண்ணனை நோக்கி தவமியற்றினார். “எந்தையே, இவ்வேள்வியை முடிக்கும் வழியென்ன என்று அருள்க!” என்று கோரினார். “இனி அந்தணர் இதை ஆற்றமுடியாதென்றறிக! அருந்தவத்து முனிவர் துர்வாசரின் தாள் பணிக! அவர் வந்தமைந்தால் இவ்வேள்வி முடியும்” என்றார் பனிமலைமுடியமர்ந்த பாந்தள் அணியிழையர்.

ஸ்வேதகி தன் பன்னிரண்டு அமைச்சர்களுடன் ஐம்பத்தாறு முதுவேதியரை ஐந்துநதிகள் ஓடிய பாஞ்சாலத்திற்கு அனுப்பினார். அங்கே ஐங்குலத்தின் முதலாவதான துர்வாசமரபின் முதல்படிவர் துர்வாசரின் குருகுலத்தை அடைந்து தாள்பணிந்தார். சிவன் சொல் என்பதனால் துர்வாசரும் அதற்குப் பணிந்து அவர்கள் கொண்டு வந்த வரிசையும் பரிசிலும் பெற்று உடன்கிளம்பி வந்தார்.

துர்வாசர் தலைமையில் சத்ரவேள்வி நடந்தது. அவியுண்ட மழைமுகில்களால் பிலக்‌ஷசிலைமேல் அன்றாடம் மழைபொழிந்தது. ஆனால் பன்னிருமுறை படைகொண்டுசென்றும் தட்சர்களின் காண்டவக்காட்டை வெல்ல ஸ்வேதக வாசுகியின் படைகளால் முடியவில்லை. அங்கே இழைமுறியாது பொழிந்த பெருமழையின் நீர்க்கோட்டையை நெருப்பும் கடக்கமுடியாதென்று அறிந்தனர்.

உளம்சோர்ந்த ஸ்வேதக வாசுகி துர்வாசருக்கு வேள்விக்கொடை அளித்து சத்ரவேள்வியை நிறுத்திக்கொண்டார். சத்ரபதியாகாமல் நெஞ்சு குன்றி உடல்சோர்ந்து உயிர்துறந்தார். காண்டவத்தை வெல்லும் அவரது கனவு அவருடன் சிதையேறியது. அப்பெருங்காட்டை மீண்டும் அனைவரும் மறந்தனர்.

ஆனால் துர்வாச குருமரபு அதை மறக்கவில்லை. அவர்களின் சொல்லில் என்றுமிருந்தது காண்டவமெனும் நச்சுக்காடு. தன் ஆறுவயதில் துருபதனின் மகள் திரௌபதி பாஞ்சால ஐங்குலத்து முதற்குருவான துர்வாசரை காணவந்தாள். அடிபணிந்து திறையளித்து சொல்கேட்க அவள் அமர்ந்தபோது துர்வாசர் அவளிடம் குளிர்மழைக் காண்டவத்தை எரித்தழிக்கவேண்டும் என்றும் அங்கொரு பெருநகர் அமைத்து ஐங்குலத்துக் கொடியை அம்மாளிகை முகட்டில் பறக்கவிடவேண்டும் என்றும் சொன்னார்.

VEYYON_EPI_70

“காண்டவத்தை வெல்வதுவரை துர்வாச குருமரபின் சொல் முழுமையடைவதில்லை இளவரசி” என்றார் துர்வாசர். “ஐங்குலத்து முதன்மையே உன்னை பாரதவர்ஷத்தின் அரசியாக்குமென்றறிக! ஐங்குலம் வெல்ல எங்கள் ஆசிரியர் எடுத்த பணி முழுமையடைந்தாகவேண்டும்.” அவர் தாள்பணிந்து “ஆம், அவ்வாறே ஆற்றுகிறேன். ஆணை” என்றாள் திரௌபதி. “நான் செல்லவேண்டிய பாதை என்ன? சொல்க!” “இளவரசி, எரிவஞ்சம் உன் உள்ளுறைக! உரிய கைகளை உனக்கு காலமே காட்டும்” என்றார் துர்வாசர்.

“அரசே, அன்று எழுந்த எண்ணம் எழுந்து எரியெனச்சூழ்ந்து அழித்தது காண்டவத்தை. அறிக!” என்றார் காளிகர்.