வெய்யோன் - 18

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 6

துரியோதனன் அறைக்குள் நுழைந்தபடி மெல்ல ஏப்பம் விட்டான். ஆடைமாற்றச் சென்றபோது அவன் சற்று யவனமது அருந்தியிருக்கவேண்டும் என்றும் அதை பானுமதி அறிந்துவிடக்கூடாதென்பதற்காகவே அவன் வாயில் அந்த சுக்குமிளகுதிப்பிலி கலவையை மென்றுகொண்டிருந்தான் என்றும் உள எழுச்சியுடன் பேசினான் என்றும் கர்ணன் உய்த்தறிந்தான். ஆனால் அறைக்குள் நுழைந்தபோது எச்சரிக்கையுணர்வாலேயே ஏப்பம் எழுந்துவிட்டது. பானுமதியின் முகம் சிவந்ததைக் கண்டு அவன் சிரிப்பை அடக்கியபடி நோக்கினான். துரியோதனன் சற்று உளம்குன்றி பார்வையைச் சரித்து கர்ணனை பார்த்தான். அவன் தன்னை மீட்கவேண்டும் என்பதுபோல.

கர்ணன் “ஏப்பம் வருகிறதே? உணவருந்தினீர்களோ?” என்றான். துரியோதனன் திடுக்கிட்டு “ஆமாம், இல்லை, சுக்குதான்… ஏனென்றால் தொண்டை” என்றபின் பானுமதியை பார்த்துவிட்டு கர்ணனை நோக்கி பற்களை கடித்தான். “ஆமாம், நீர்கோளுக்கு சுக்கு நல்லது” என்றான். சுபாகு உரக்க “அதைத்தான் நானும் சொன்னேன். யவனமது அருந்துவதைவிட சுக்குநீர் அருந்தலாமே என்று… ஆனால்” என்றபின் திகைத்து பானுமதியை பார்த்தான். அவள் சினந்து எழுந்து தன் மேலாடையை அணிந்தபடி அறையைவிட்டுச் செல்ல முயல துரியோதனன் சென்று அவளை மறித்து “என்ன இது? இப்போது என்ன நடந்துவிட்டது? ஒரே ஒரு, இல்லை அரைக்கோப்பை… அதுகூட… சினம்கொள்ளாதே…” என்றான்.

“நான் சினம் கொள்ளவில்லை. மதுவுண்டவர்களிடம் அரசியல் பேசுமளவுக்கு மதியின்மை எனக்கில்லை… நீங்களே பேசிக்கொள்ளுங்கள். எனக்கு பணிகள் உள்ளன” என்றாள். “இல்லை பானு. அது மதுவே இல்லை. வெறும் பழச்சாறு. நான் இனிமேல் அதைக்கூட அருந்துவதாக இல்லை” என்றான் துரியோதனன். துச்சலன் “நாங்களிருவரும் அதை அருந்துவதே இல்லை அரசி” என்றான். சுபாகு “ஆம், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” என்றான். துரியோதனன் கடும் சினத்துடன் திரும்பி அவர்களை நோக்க சுபாகு துச்சலனுக்குப் பின்னால் அறியாமல் தன் உடலை மறைக்க முயன்றான். துச்சலன் திகைத்து “ஆனால் மது அருந்துவது ஒன்றும் பிழையில்லை. அரசர்கள்…” என்றான்.

துரியோதனன் மேலும் சினம்கொள்ள துச்சலன் அப்படியே நிறுத்திவிட்டு கர்ணனை நோக்கினான். அந்த விழிகளில் இருந்த இறைஞ்சுதலைக் கண்ட கர்ணன் வாய்க்குள் நகைத்தபடி பார்வையை திருப்பினான். “சரி. நான் என்ன செய்யவேண்டும்? உண்ட மதுவை போய் வாயுமிழ்ந்துவிட்டு வரவா? தெரியாமல் நடந்துவிட்டது. ஆடை மாற்றிக்கொண்டிருந்தேன். பணியாளன் வந்து…” என்று சொல்ல பானுமதி சீறி “ஊட்டிவிட்டானா?” என்றாள். “ஆம், அதாவது… ஊட்டிவிடவில்லை… ஆனால்…” என்றபின் துரியோதனன் மீண்டும் கர்ணனை நோக்கினான்.

கர்ணன் “பெரிய அளவில் மது அருந்தவில்லை என்றே நினைக்கிறேன் பானு” என்றான். “மூத்தவரே, நீங்கள் சொல்லிக்கூட இவர் கேட்கவில்லை என்றால் நான் என்னதான் செய்வது?” என்று பானுமதி கண்களில் நீருடன் கேட்டாள். “நான் சொல்லிக்கொள்கிறேன். அவர் கேட்பார்…” என்றான் கர்ணன். துரியோதனன் “நான் என்ன செய்வது? எனக்கு இந்த அன்றாட அரசாடல் பெரும் சலிப்பையே உருவாக்குகிறது. எல்லைப்பகுதி சிற்றூரில் ஓடையில் நீர் வந்தாலென்ன வராவிட்டாலென்ன? போரால் தீர்க்கப்படும் இடர்கள் மட்டுமே என்னை கவர்கின்றன. அவை அன்றாடம் வருவதுமில்லை” என்றான் துரியோதனன்.

“நீங்கள் அஸ்தினபுரியின் அரசர். உங்களால் தீர்க்கப்படவேண்டியவை அனைத்து சிக்கல்களும்” என்றாள் பானுமதி. “நானேதான் தீர்க்கவேண்டுமா? நீ இருக்கிறாயே… நீதான் அஸ்தினபுரியின் சக்ரவர்த்தினி” என்றான் துரியோதனன். கர்ணன் “ஆம் பானு, அவர் என்னதான் சொன்னாலும் குடிகள் நீ ஒரு சொல் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். நீ சொல்லாதவரை அந்தச் சிக்கல் முடிவதுமில்லை. இந்நாடு உன்னால்தான் ஆளப்படுகிறது” என்றான்.

பானுமதி முகம் மலர்ந்து “இருக்கலாம். ஆனால் அதற்காக அரசர் அரியணை அமர்ந்து கொட்டாவி விடவேண்டுமா என்ன?” என்றாள். “இனிமேல் இல்லை” என்றான் துரியோதனன். “என்ன இல்லை?” என்றாள் அவள். “இனிமேல் கொட்டாவி விடமாட்டேன்” என்றான். அவள் சிரித்துவிட்டாள்.

அந்தச் சிரிப்பால் ஊக்கம் பெற்ற துச்சலன் “கொட்டாவி விட்டால் தீயஆவிகள் நம் உடலைவிட்டு வெளியே செல்கின்றன… அதை அடக்கினால் அவை உடலிலேயே தங்கிவிடும் என்று மருத்துவர் சொல்கிறார்கள்” என்றான். கர்ணன் “இல்லை, அவை கீழாவியாக வெளியே சென்றுவிடும்” என்றான். துச்சலன் ஐயத்துடன் சுபாகுவை நோக்கிவிட்டு “இருக்கலாம்… ஆனால்” என்றான். கர்ணன் “ஆனால் கீழாவிகளை அவையில் வெளியேற்றுவது மேலும் பிழை” என்றான். சுபாகு “அதை வெல்ல தமையனால் இயலாது” என்று சொல்ல பானுமதி சினந்து “போதும். என்ன பேச்சு இது?” என்றாள்.

தருணத்தை உணர்ந்த துரியோதனன் வெடித்துச் சிரித்து “ஆம்… இளையவன் எப்போதும் ஆவிகள் சூழ தெரிகிறான்” என்றான். துச்சலனும் கூச்சத்துடன் உடன் நகைத்தான். பானுமதி பேச்சை மாற்ற “நான் ஒரு முதன்மையான செய்தியை பேசவிழைந்தேன். ஆகவேதான் இங்கே இருந்தேன்” என்றாள். மிகையான எழுச்சியுடன்  முகத்தை வைத்தபடி “என்ன செய்தி? பேசுவோமே” என்றான் துரியோதனன். ஓரக்கண்ணால் கர்ணனை நோக்கி விழியசைவால் தப்பிவிட்டேன் என்றான். கர்ணன் புன்னகைக்க இரு உன்னை பிறகு பேசிக்கொள்கிறேன் என்று விழிக்குறிப்பு காட்டினான்.

ஆடும் திரைச்சீலைகளின் வண்ணம் மாறியது. உள்ளே இளம்காற்று வந்து அறைச்சுவர்களை தழுவிச்சென்றது. பானுமதி தன் கூந்தலிழையை சீரமைத்தாள். தூண்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பித்தளைக் கவசங்களில் தெரிந்த சாளரத்து நீள்வடிவங்களை, காற்றில் மெல்ல திறந்தசைந்த அறைக்கதவுகளை நோக்கியபடி கர்ணன் அமர்ந்திருந்தான். அவள் பேசப்போவது அவனைப்பற்றி என அவனுடைய உள்ளுணர்வு சொன்னது.

மீசையை நீவியபடி கால்நீட்டிய துரியோதனன் தம்பியரை நோக்கி “நன்று! அரசவையில் பார்ப்போம். இன்று காலை நான் சொன்னதற்கு மகதத்தின் செய்தி வந்தபின் முடிவெடுப்போம்” என்றான். அவர்கள் பானுமதியை நோக்கக்கண்டு “இளையவர் இருக்கலாமா கூடாதா?” என்றான் துரியோதனன். “அவர்கள் தங்கள் நிழல் வடிவங்கள் அல்லவா?” என்றாள் பானுமதி நகைத்தபடி. துச்சலன் புன்னகைத்து “ஆம். ஆனால் இது உச்சிப்போது. ஆகையால் மிகவும் குறுகியிருக்கிறோம்” என்றான். சுபாகு பேரொலி எழுப்பி சிரித்தான். துரியோதனன் கர்ணனை நோக்கி “பார்த்தாயா? நகைச்சுவை உணர்வும் இவர்களுக்கு மிகுதி” என்றான்.

சுபாகு “நாங்கள் இங்கிருப்பதனால் மூத்தவர் அடிக்கடி நகைக்கிறார். அது நன்று” என்றான். துச்சலனும் சிரித்து “ஆம், அதற்காகவே நானும் இங்கிருக்கிறேன்” என்றான். பானுமதி “மூத்தவரே, தங்களுடன் நான் ஒன்று பேச விழைகிறேன்” என்றாள். “இவ்வளவு நேரம் பேசிக்கொண்டுதானே இருந்தீர்கள்?” என்றான் துரியோதனன். “ஏதாவது போர்ச்செய்தி என்றால் சொல்லவே வேண்டாம். நாம் உடனே கிளம்பிவிடலாம். அரண்மனைக்குள் அமர்ந்து குடித்து தூங்கி சலித்துவிட்டேன்.” “இல்லை, இது வேறு செய்தி” என்றாள்.

“சொல். அரசியல் சூழ்ச்சி என்றால் கொஞ்சம் ஆர்வத்துடன் கேட்பேன். காவியமோ நெறி நூலோ என்றால் நான் படுத்து சற்று துயில்கிறேன்” என்றான். பானுமதி “நான் மூத்தவரின் மணம் பற்றி பேசவிருக்கிறேன்” என்றாள். “அதைப் பற்றித்தானே இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தீர்கள்?” என்றான் துரியோதனன். “இல்லை. அவர் மணம் முடிக்கப்போகும் ஷத்ரியப் பெண்ணைப்பற்றி பேசப்போகிறேன்.” துரியோதனன் “ஆம், நான் அதை மறந்துவிட்டேன். கலிங்கத்துக்கு செய்தி அனுப்பியிருந்தோமே?” என்றான்.

“கலிங்கத்திற்கா?” என்றான் கர்ணன். பானுமதி “ஆம், உபகலிங்கன் சித்ராங்கதனுக்கு…” என்றாள். துரியோதனன் “உண்மையில் எனக்குத்தெரியவில்லை, உபகலிங்கன் என்றால் யார்?” என்றான். “திரௌபதியின் மணநிகழ்வுக்கு ஒருவன் வந்திருந்தான். பெரிய மொந்தைபோல வயிறுள்ளவன்…” பானுமதி “கலிங்கம் இப்போது இருநாடுகளாக உள்ளது அரசே. கலிங்கத்தின் பேரரசர் ஸ்ருதாயுஷுக்கு இரு மைந்தர்கள். தலைநகர் தண்டபுரத்தை ஆள்பவர் மூத்தவராகிய ருதாயு. இளையவராகிய சித்ராங்கதர் ராஜபுரத்தை ஆள்கிறார்.”

துரியோதனன் “ஓ” என்றான். “சித்ராங்கதனுக்கு இருமகள்கள். இளைய அரசியின் மகள் சுப்ரியையை மூத்தவருக்கு மணம் முடித்து தரமுடியுமா என்று கோரி ஒரு செய்தியை நான் அனுப்பியிருந்தேன்.” கர்ணன் “செய்திகள் அனுப்பத் தொடங்கி நெடுநாட்களாகின்றன. மறுமொழி இருந்திருக்காதே?” என்றான் துரியோதனன் “முன்பு ஓர் இளவரசியை கேட்டு அனுப்பினோமே. அவள் பெயரும் சுப்ரியை அல்லவா?” என்றான். “ஆம், அவள் புளிந்த இளவரசி. நம் தூதை மறுத்து அவளை காம்பிலிக்கு மணமுடித்து அனுப்பினார் அவள் தந்தை. அவள் இரு மைந்தருக்கும் தாயாகிவிட்டாள்”

துரியோதனன் “சுப்ரியை என்னும் பெயர் இவனை வலம் வருகிறது” என்றான். கர்ணன் ”வீண்முயற்சி” என்றான்.”இம்முறை செய்தியுடன் ஒரு பரிசையும் வாக்களித்திருந்தேன்” என்றாள் பானுமதி. “என்ன பரிசு?” என்று துரியோதனன் உடலை நெளித்து சோம்பல் முறித்தபடி கேட்டான். “இளையவளை அங்க நாட்டரசருக்கு பட்டத்தரசியாக அளிப்பதென்றால் மூத்தவள் சுதர்சனையை அஸ்தினபுரியின் அரசர் தன் துணைவியாக கொள்வார். அவ்வாறென்றால் மட்டுமே இம்மணம் நிகழும் என்றிருந்தேன்.”

ஒருகணம் புரியாமல் உடலை அசைத்த துரியோதனன் அசைவிழந்து இருமுறை இமைத்தபின் சட்டென்று எழுந்து “என்ன சொல்கிறாய்?” என்றான். பின்னர் திரும்பி “இவள் என்ன சொன்னாள்?” என்று கர்ணனிடம் கேட்டான். கர்ணன் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். சுபாகு “நான் சொல்கிறேன். தங்களுக்கு இரண்டாவது மனைவியாக கலிங்க மன்னர் சித்ராங்கதனின் மகள் சுதர்சனையை மணமுடித்து வைக்க பட்டத்தரசி முயல்கிறார்” என்றான். துச்சலன் “ஆம், அப்படி மணமுடிப்பதற்கு நிகராக மூத்தவர் கர்ணனுக்கு இளையவர் மணமுடிக்கப்படுவார்” என்றான்.

துரியோதனன் உரக்க “என்ன இது? என்னிடம் கேட்காமலா இச்செய்தியை அனுப்பினாய்?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “எனக்கு இது ஒன்றே வழி என்று தெரிந்தது. உபகலிங்கன் தன் மூத்தவரை அஞ்சிக்கொண்டிருக்கிறார். ருதாயு மகதனுடன் மணவுறவு கொண்டவர். அஸ்தினபுரிக்கு மகளை அளிப்பதன் வழியாக அவர் மூத்தவரை விஞ்சிவிடமுடியும்.” துரியோதனன் “இது ஒரு போதும் நடக்காது. நீ அறிவாய்” என்று கூவினான்.

அவள் கையசைத்து “நான் அறிவேன்” என்றாள். “உங்களுக்கு துணைவியாகவும் அன்னைக்கு நிகரெனவும் நான் இங்கிருப்பதை நான் மட்டுமல்ல, இவ்வரண்மனையில் அனைவரும் அறிவார்கள். அரசே, காதலுக்காக மணமுடிக்கும் வழக்கம் ஷத்ரியருக்கு இல்லை. அனைத்து மணங்களும் அரசியல் மணங்களே. இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும்” என்றாள். “இல்லை பானு. நீ…” என்று அவன் கைகளை விரித்தபடி அவளை நோக்கி செல்ல அவள் அவன் வலக்கையைப் பற்றி தன் நெஞ்சில் வைத்து “எனக்காக அல்ல அரசே. இது தங்கள் துணைவருக்காக” என்றாள்.

துரியோதனன் ஒரு கணம் செயலற்று நின்றபின் திரும்பி கர்ணனைப் பார்த்து “இவனுக்காகவா?” என்றான். “ஆம். இது வரை நாற்பது அரசர்களிடம் செய்தி அனுப்பிவிட்டோம். எவரும் அவருக்கு பெண் கொடுக்க சித்தமாக இல்லை. இவ்வாக்குறுதி அளிக்கப்பட்டால் உறுதியாக சித்ராங்கதன் ஒப்புக்கொள்வார் என்று எண்ணினேன்… அந்நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது” என்றாள் பானுமதி. துரியோதனன் தன் தொடையில் அறைந்து “நாம் படைகொண்டு செல்வோம். சித்ராங்கதனைக் கொன்று அப்பெண்ணை எடுத்து வருவோம். அதற்காக நான் பிறிதொரு பெண்ணை எண்ணுவதா? அது அப்பெண்ணுக்கு நாம் இழைக்கும் தீங்கு. என் உள்ளத்தில் பிறிதொரு பெண் இல்லை” என்றான்.

“நான் அதை அறிவேன். எப்போதும் அது அங்ஙனமே இருக்கும் என்றும் அறிவேன் ஆனால் ஆண்களின் அன்பு பகிர்வதற்கு எளியது” என்றாள் பானுமதி. “அவளை மணம் கொண்டு வந்தபின் அவள் உங்களுக்கு உகந்தவள் என்பதை நீங்களே உணர்வீர்கள்.” துரியோதனன் “இல்லை… ஒருபோதும் அது நிகழப்போவதில்லை” என்றபின் பதைப்புடன் திரும்பச் சென்று தன் இருக்கையில் அமர்ந்து “என்ன இது? எனக்கொன்றும் புரியவில்லை” என்றான். பானுமதி “வெறுமனே அச்செய்தியை நான் அனுப்பவில்லை. சுதர்சனை தங்கள் மேல் காதல் கொண்டிருக்கிறாள் என்ற செய்தியை சூதர்கள் வழி அறிந்தேன். அதனால்தான் அவளுக்கு முதலில் செய்தியனுப்பியபின் அவள் தந்தைக்கு முறைப்படி தூதனுப்பினேன்” என்றாள்.

“நீங்கள் ராஜபுரத்துக்குச் சென்று அவளை சிறையெடுத்துச் செல்வதாக முன்பொரு எண்ணமிருந்தது. அதை அறிந்த நாள் முதலே உங்கள் பெருந்தோள்களை சித்திரமாக எழுதி தன் மஞ்சத்தருகே வைத்து நோக்கி விழிவளர்பவள் அவள் என்றார்கள். அப்பெருங்காதலை புறக்கணிப்பதற்கு எனக்கு உரிமையில்லை என்று உணர்ந்தேன். ஒருவகையில் எனக்கு முன்னரே உங்களை தன் கொழுநனாக வரித்துக் கொண்டவள் அவள். அவள் இங்கு வரட்டும். எனக்கு நிகராக அரியணையில் அமரட்டும்” என்றாள்.

18

சினத்துடன் தலையசைத்து துரியோதனன் “அப்பேச்சை நான் கேட்கவே விழையவில்லை” என்றான். “இது உங்கள் கடமை. உங்கள் துணைவருக்காகவும் அவளுக்காகவும் செய்தாகவேண்டியது” என்றாள் பானுமதி. “அவள் இங்கு வந்தபின் அவளை நான் ஏறிட்டும் பார்க்கவில்லை என்றால் என்ன செய்வாய்? அவளை அணுகவே என்னால் முடியவில்லை என்றால் என்ன செய்வாய்?” என்றான் துரியோதனன். “முடியும்” என்றாள் பானுமதி. “ஏனெனில் அவள் பெருங்காதல் கொண்டவள். அத்தகைய காதலை தவிர்க்க எந்த ஆண்மகனாலும் முடியாது. எக்கணம் அவள் கண்களை நீங்கள் பார்க்கிறீர்களோ அதன் பின் உங்கள் உள்ளத்தில் அவள் இடம் பெறுவாள்.”

“இந்தப் பேச்சையே எடுக்கவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். கர்ணன் “பானு, உனது விழைவை நான் அறிந்து கொண்டேன். ஆனால் இதுவல்ல அதற்குரிய வழி. விட்டுவிடு” என்றான். பானுமதி துரியோதனனிடம் “நான் கேட்பது ஒன்றே. அரசே, உங்கள் தோழர் ஷத்ரியப் பெண்ணை மணக்க இது ஒன்றே வழி என்றால் அவர் பொருட்டு இதை செய்வீர்களா மாட்டீர்களா?” என்றாள். துரியோதனன் ஏதோ சொல்ல முயல “வேறெதுவும் வேண்டாம்… இதற்கு மட்டும் மறுமொழி சொல்லுங்கள். இது ஒன்றே வழி என்றால் செய்வீர்களா?” என்றாள்.

துரியோதனன் கர்ணனை நோக்கியபடி “நான் அவன் பொருட்டு எதையும் செய்வேன்” என்றான். “அரசே, படை கொண்டு சென்று கலிங்கத்தை வெல்வது எளிதல்ல. இன்று மகதமும் வங்கமும் இருபக்கமும் அவர்களுக்கு துணை நிற்கிறார்கள். நமது படைகளோ அஸ்தினபுரியிலிருந்து இந்திரப்பிரஸ்தம் பிரிந்தவுடன் பாதியாகிவிட்டன. படைகொண்டு சென்று நாம் பாரதவர்ஷத்தை வெல்லும் நாள் வரும். ஆனால் அது இப்போதல்ல. இப்போது நமக்கு இருப்பது அரசுசூழ்தல் மட்டுமே” என்றாள். நீள்மூச்சுடன் அவன் தோள்தளர்ந்து “சொல்! என்ன செய்வது?” என்றான். “அவளை நீங்கள் மணப்பீர்கள் என்றால் இளையவளை அளிக்க ஒப்புதல் என்று ஓலை வந்துள்ளது.”

துரியோதனன் மீசையை நீவியபடி “அவ்வாறே ஆகட்டும். ஓர் அரசமகள் வந்தால் மட்டுமே அங்கத்து மக்கள் கர்ணனை முழுமையாக ஏற்பார்கள். அவனை ஏற்க உளத்தயக்கம் கொண்டவர்கள்கூட அரசமகளைப் பணிந்து அவளிடமிருந்து ஆணைபெற்றுக்கொள்வார்கள். அந்த உளநாடகம் அங்குள்ள ஷத்ரியர்களுக்கு தேவைப்படும்” என்றான். “ஆம், கலிங்கன் மகளுடன் இவர் அங்க நாட்டுக்குள் சென்றால் அங்கு அரியணை அமர்ந்து முடிசூடி குடை கவிழ்ப்பதில் எந்தத் தடையும் இருக்காது” என்றாள் பானுமதி.

“என்ன சொல்கிறாய்?” என்றபடி கர்ணன் எழுந்தான். “இதை நான் ஏற்பேன் என நினைக்கிறாயா?” துரியோதனன் திரும்பி “முதல்கொந்தளிப்புக்குப் பின் எண்ணிப்பார்க்கையில் இவள் சொல்வதே சரி என்று நானும் உணர்கிறேன் கர்ணா. நீ கலிங்கனின் மகளை மணந்து கொள். அங்கமும் கலிங்கமும் ஒரு குருதியில் பிறந்த ஐந்து நாடுகள் என்பதை இப்போதுதானே கேட்டோம். அவற்றில் அங்கம் முதன்மையானது. கலிங்கம் வல்லமை மிக்கது. நீ கலிங்கன் மகளை மணப்பதென்பது உன் குருதியை புராணநோக்கிலும் உறுதிப்படுத்தும்” என்றான்.

“கலிங்கத்து இளவரசிக்கு அங்கத்தில் நிகரற்ற முழுதேற்பே அமையும்” என்றாள் பானுமதி. “அவள் குருதி வழியால் உங்களுக்கு கலிங்கமும் துணை நிற்பார்கள் என்றால் பிற மூவரும் உங்களை ஏற்றே ஆகவேண்டும். உங்கள் ஐவரின் கூட்டு பாரத வர்ஷத்தின் மிகப்பெரும் வல்லமையாக அமையும்.” கர்ணன் பேசமுற்படுவதற்குள் துரியோதனன் “கர்ணா, நீ கொண்ட அனைத்து மறுப்புகளையும் வென்று பிறிதொரு சொல்லற்ற அரசனாக ஆவதற்கான வழி இதுவே” என்றபின் திரும்பி “நன்று சிந்தித்து முடிவெடுத்திருக்கிறாய் பானு” என்றான்.

“இல்லை, இதை நான் ஏற்க மாட்டேன்” என்றான் கர்ணன். உரத்த குரலில் “இது என் ஆணை. இது இங்கே நிகழப்போகிறது” என்றான் துரியோதனன். துச்சலன் “ஆம், நானும் அது நன்று என்றே எண்ணுகிறேன். நமக்கு இன்னொரு அரசி அமைவதில் என்ன தடை? அங்கருக்கும் உகந்த துணைவி அமைகிறார்” என்றான். சுபாகு “நானும் அதையே எண்ணிக் கொண்டிருந்தேன். இங்கே நம்முடைய அரசவையிலேயே ஏவலரும் வினைவலரும் மூத்தவரின் துணைவியைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். சூதர்மகனுக்கு உகந்த சவுக்கு அவள் என்று நம் அமைச்சர் ஒருவர் சொல்வதை நானே கேட்டேன். அவ்வண்ணம் என்றால் அங்கர் எப்படி அவளை ஏற்பார்கள்? கலிங்க அரசியை அவர்களால் மறுக்கவே முடியாது” என்றான்.

“கலிங்க இளவரசியை மணமுடித்து இங்கு அஸ்தினபுரியில் சடங்கு முறைமைகளை முழுமை செய்தபின் கலிங்க அரசின் தூதர் ஒருபுறமும் அஸ்தினபுரியின் தூதர் மறுபுறமும் வர அவர் அவைபுகுந்தால் அங்க நாட்டில் எந்த குலத்தவரும் எதிர் நிற்கமாட்டார்கள்” என்றான் துச்சலன். கர்ணன் “நான் சொல்லவிருப்பது…” என்று தொடங்க “சொல்லவிருப்பது ஏதுமில்லை. இதற்கு நீங்கள் உடன்பட்டேயாக வேண்டும். அஸ்தினபுரியின் அவையில் அன்று பிறிதொரு ஷத்ரிய இளவரசியை மணம் கொள்வதைப் பற்றி சொன்னபோது நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள். அஸ்தினபுரியின் அவையிலேயே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள இது ஒன்றே வழி” என்றாள் பானுமதி.

தளர்ந்தவன் என கர்ணன் கைகளை தொங்கவிட்டு “அவ்வாறே ஆகுக!” என்றான். துரியோதனன் “வந்திருக்கும் செய்தி என்ன?” என்றான். “இன்று காலைதான் செய்தி வந்தது. நேற்று அதை அனுப்பியிருக்கிறார்கள். மூத்தவளை தாங்கள் மணம்கொண்டு இணையரசியாக அவை அமர்த்துவதோடு உபகலிங்கத்துடன் எல்லா வகையான படைத்துணைக்கோடலுக்கும் உடன்படுவதாயின் இளையவளை அங்கருக்கு அளிக்க அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்கிறார்கள்.” துரியோதனன் “ஒப்புதலே என்று செய்தி அனுப்பு” என்றான். கர்ணன் “அதற்கு முன் அனைத்தையும் விதுரருக்கும் அறிவித்து ஒரு சொல் கேட்பது நன்று” என்றான்.

பானுமதி “ஆம், அதையே நானும் எண்ணினேன். தங்களிடம் பேசிவிட்டு செய்தியை அவரிடம் பேசலாமென்றிருந்தேன்” என்றாள். துரியோதனன் “விதுரரை இங்கே வரும்படி சொல்” என்றான். சுபாகுவும் துச்சலனும் தலைவணங்கி வெளியே சென்றார்கள். துரியோதனன் பெருமூச்சுடன் “இத்தனை எளிதாக இச்சிக்கல் முடியுமென நினைக்கவில்லை” என்றான்.

பிறகு தலையை கையால் நீவியபடி “ஆனால் என் உள்ளம் நிலைகுலைந்திருக்கிறது. ஏன் என்றே தெரியவில்லை” என்றான். கர்ணன் “நீ உன்னுள் அமைதியை உணர்கிறாயா?” என்று பானுமதியிடம் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள். அவன் அவளுடைய சிறிய கண்களை நேரடியாக நோக்கினான். அங்கே சிரிப்பே ஒளிவிட்டது. “சொல்” என்றான். “ஆம், அதில் எந்த ஐயமும் இல்லை” என்றாள். அவன் அவளை சற்றுநேரம் நோக்கியபின் திரும்பிக்கொண்டான்.

அறைக்குள் காற்றின் ஓசைமட்டும் நிறைந்திருந்தது. துரியோதனன் “உண்மையில் வேறுவழியே இல்லையா? வேறு சிறிய ஷத்ரியர்களை நாம் வெல்லமுடியாதா?” என்றான். பானுமதி “அவர்கள் எவருக்கும் கலிங்க அரசிக்கு கிடைக்கும் இடம் அங்கத்தில் அமையாது அரசே” என்றாள். துரியோதனன் தலையை நீவி மீசையை முறுக்கியபடி “நான் அமைதியிழந்திருக்கிறேன்” என்றான். “ஏனென்றால் நீங்கள் அஞ்சுகிறீர்கள். அந்தப் பெண் வந்தால் உண்மையிலேயே அவளையும் விரும்பத் தொடங்கிவிடுவீர்கள் என எண்ணுகிறீர்கள்” என்றான் கர்ணன்.

“வாயைமூடு!” என்று துரியோதனன் சீறினான். பானுமதி “எதற்காக இந்தப் பேச்சு? நாம் ஒருவரை ஒருவர் துயரப்படுத்தி கொண்டாட விழைகிறோமா?” என்றாள். கர்ணன் “இல்லை, நாம் உண்மைகளை எதிர்கொண்டாகவேண்டும்… இப்போது ஒன்றின்பொருட்டு ஒருமுடிவை எடுத்தபின் வாழ்நாளெல்லாம் துயர்கொள்வதில் பொருளில்லை” என்றான். “அப்படி இறுதிவரை கணித்து எவரும் எம்முடிவையும் எடுக்கமுடியாது” என்றாள் பானுமதி. துரியோதனன் மீண்டும் தன் தலையை கோதிவிட்டு பெருமூச்சுவிட்டான். சற்றுநேரம் மீண்டும் அமைதி நிலவியது.

காலடியோசைகள் கேட்டபோது துரியோதனன் ஆறுதல்கொண்டவனைப்போல உடல் இளகினான். கர்ணனும் அசைந்து பெருமூச்சுவிட்டான். கதவு திறந்து சுபாகு “அமைச்சர் விதுரர்” என்றான். துரியோதனன் கைகாட்டியதும் அவன் கதவைத் திறந்து விதுரரை உள்ளே அழைத்தான். அவர் வந்து “அரசரை வணங்குகிறேன்” என்றார். துரியோதனன் “ஆசிரியருக்கு தலைவணங்குகிறேன். இங்கே ஓர் எண்ணத்தை பானுமதி சொன்னாள். அதைப்பற்றி…” என்று தொடங்கியதும் இடைமறித்த விதுரர் “நான் வரும்வழியிலேயே சுபாகுவிடம் கேட்டறிந்தேன். அரசே, உங்களை இளையகலிங்கன் ஏமாற்றிவிட்டான்” என்றார்.

பானுமதி “சொல்லுங்கள்” என்று படபடப்பை மறைத்தபடி கேட்டாள். “உங்களுக்கு வந்த செய்தி நான்குநாட்களுக்கு முன்னரே அனுப்பப்பட்டுவிட்டது. அச்செய்தியை அனுப்பிவிட்டு உடனடியாக இளையகலிங்கன் தன் இரு மகள்களுக்கும் ஏற்புமணம் ஒருக்கியிருக்கிறான். நாளை காலையில் ராஜபுரத்தில் நிகழும் மணநிகழ்வில் கங்கைப்பகுதிச் சிற்றரசர்கள் கலந்துகொள்கிறார்கள். மூத்தவளை ஜராசந்தனும் இளையவளை சிந்துநாட்டரசர் ஜயத்ரதரும் மணக்கவிருப்பதாக உளவுச்செய்திகள் சொல்கின்றன. அதன்பொருட்டே அந்நிகழ்ச்சி அமைக்கப்படவிருக்கிறது.”

“எப்போது இச்செய்தி வந்தது?” என்றாள் பானுமதி. அவள் குரலில் இருந்த நடுக்கத்தை கர்ணன் அறிந்தான். விதுரர் “நேற்றிரவு” என்றார். “உங்கள் தூது சென்ற செய்தியை நான் அறிந்திருந்தேன். உங்களுக்கு உபகலிங்கன் அனுப்பிய செய்தியை சற்றுமுன் சுபாகு சொல்லித்தான் அறிந்தேன். திட்டமென்ன என்று புரிந்துகொண்டேன்.” பானுமதி திரும்பி துரியோதனனிடம் “அதுவும் நன்றே. ஏற்புமணம் என்றால் எந்தவகையிலும் எவரும் மறுசொல் எடுக்கமுடியாது. அரசே, நீங்களிருவரும் சென்று அப்பெண்களை சிறைகொண்டு வருக!” என்றாள்.

“ஆனால், ஒரே இரவில்…” என்று விதுரர் தொடங்க “படை ஏதும் வேண்டியதில்லை. இருவர் மட்டிலும் செல்லட்டும். விரைவுப்படகுகள் ஓர் இரவில் கொண்டுசென்று சேர்த்துவிடும்…” என்றாள் பானுமதி. “மூத்தவரின் வில்லின் ஆற்றலை அவர்கள் அறியட்டும். அவர் பெண்ணைக் கவர்ந்து வந்தபின் எந்த ஷத்ரியர் எதிர்த்து வந்தாலும் களத்தில் சந்திப்போம்.” துரியோதனன் உரக்க நகைத்தபடி தொடையில் அறைந்து “ஆம், இதுதான் நான் விழைந்தது. கர்ணா, உடனே கிளம்புவோம். தம்பி, சென்று அனைத்தையும் சித்தமாக்கு. அரைநாழிகையில் நாங்கள் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றான்.