வெய்யோன் - 12

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 9

கர்ணன் இளநீராடி மெல்லிய வெண்ணிறஆடை அணிந்து வெண்முத்தாரங்களும் காக்கைச்சிறகுக் குழலில் ஒரு மணியாரமும் சூடி சித்தமானபோது சிவதர் ஓசையின்றி வந்து தலைவணங்கி “இளைய அரசியிடம் செய்தியை அறிவித்தேன்” என்றார். “அரசியிடமா?” என்றான் கர்ணன். “இல்லை, வழக்கம் போல அச்செவிலியிடம்தான்” என்றார் சிவதர். மேலும் அவர் சொல்வதற்காக அவன் காத்து நின்றான். “அரசியிடம் சொல்லி ஒப்புதல் பெற்று வருவதாக சென்றார். மீண்டு வரவேயில்லை. நெடுநேரம் நின்றிருந்தபின் நான் திரும்பினேன்” என்றார்.

கர்ணன் சில கணங்கள் நின்றபின் “நான் சென்று பார்க்கிறேன்” என்றான். “தாங்கள் செல்லாமல் தவிர்ப்பதே நன்று என்று நான் நினைக்கிறேன்” என்றார் சிவதர். கர்ணன் புன்னகைத்து “சிவதரே, அவள் உள்ளம் செல்லும் வழி எனக்குத் தெரியும். இன்று மூத்தவள் அறைக்கு முன் வெளியே நான் காத்திருந்ததை அறிந்திருப்பாள். தனக்காக நான் வருகிறேனா என்று பார்க்கவே இதை நடிக்கிறாள். சென்று வருகிறேன்” என்றான்.

கர்ணனின் முகத்தைப் பார்த்தபடி சிலகணங்கள் உறைந்து உதடுகள் அசைய உயிர்கொண்ட சிவதர் “தாங்கள் இருவருக்குமாகவும் இறங்கிச் செல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் அரசே” என்றார். “உண்மை. களத்தில் அன்றி பிற இடங்களில் அனைத்தும் இறங்கிச் செல்வதே என் வழக்கம். எப்போதும் என் தரப்பு நியாயங்களைவிட அவர்களின் உணர்வுகளே எனக்கு முதன்மையாக தெரிகின்றன” என்றான் கர்ணன். “மூத்தவள் மணிமுடி மறுக்கப்பட்டதால் அநீதி இழைக்கப்பட்டவள். ஒவ்வொரு அவையிலும் அவளே மூத்தவள் என்றும் ஆனால் சூதர்மகள் என்பதால் மணிமுடி கிடைக்கப்பெறாதவள் என்பதும் சொல்லப்படாத பெருஞ்சொல்லாக நின்றுகொண்டிருப்பதை அவள் உணர்கிறாள். அத்துயரை நானன்றி வேறு யார் அருகணைந்து அறியமுடியும்?”

சிவதர் “ஆனால்…” என்று தொடங்க அவன் அவரை பார்க்காமல் “நூறுநூறு முறை அவளை என் நெஞ்சோடு அணைத்து உன் துயரை நான் அறிகிறேன், என்னை பொறுத்தருள்க என்று சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் நெஞ்சில் தலைசேர்த்து உடல் ஒடுக்கி விம்மி அழுவாள். கண்ணீர் ஓய்ந்ததும் மீளமீள இன்சொற்களால் எனக்கு உறுதி சொல்வாள். ஆனால் எளியபெண். மறுநாளே எழும் ஓர் அவமதிப்பு போதும், நெஞ்சுள் புண்படுவாள். மீண்டும் அதையே நிகழ்த்துவாள். முடிவின்றி அவளிடம் பணிந்து செல்வதையும் பொறுத்தருளக்கோருவதையுமே இதுநாள் வரை செய்து வந்திருக்கிறேன். இனியும் அதையே செய்ய வேண்டியிருக்குமென்று உணர்கிறேன்” என்றான்.

பெருமூச்சுடன் அவன் தொடர்ந்தான் “இளையவள் பிறிதொருவகையில் அநீதி இழைக்கப்பட்டவள். தன்னை மணங்கொண்டு முடிசூட்டி அரியணையமர்த்தும் ஷத்ரிய இளவரசனுக்காக கனவுகளுடன் காத்திருந்தவள். நகர் புகுந்து அவளை கவர்ந்து வந்தோம். சூதன்மகனுக்கு மணமகளான தன் இழிவை இத்தனை நாளாகியும் அவளால் கடக்க முடியவில்லை. காமத்தில் தன்னை மறந்து என்னுடன் இருந்தாலும்கூட சித்தம் விழிப்புற்றதும் கசந்து விலகுவதே அவள் இயல்பு.”

கசந்த புன்னகையுடன் சிவதரை நோக்கி திரும்பி “ஒருமுறை உன் முகம் ஏன் அப்படி சுளிக்கின்றது என்று கேட்டேன். சீறி முகம் சிவந்து என்னை நோக்கி என்னவென்றா, குதிரைச் சாணி மணம் கமழ்கிறது, அதனால் என்றாள். அவள் உளம் சுருங்குவதை என்னால் உணர முடிந்தது. அவளிடமும் மீண்டும் மீண்டும் பொறுத்தருளவே கோருகிறேன். இச்சதுரங்கத்தில் அதையும் நான் ஆடவேண்டியிருக்கிறது” என்றான்.

சிவதர் “தாங்கள் அரசர். அதை எண்ண மறுக்கிறீர்கள். ஓர் அரசன் தன் செயலுக்கு பொறுத்தருளக் கோருவதென்றால் ஒவ்வொருநாளும் அதற்கன்றி பிறிது எச்செயலுக்கும் நேரமிருக்காது. உழவன் வயலில் வாழும் சிற்றுயிர்களிடம் தனித்தனியாக பொறுத்தருளும்படி கோரமுடியுமா என்ன? ஏர் இறக்குகையில் மண் தொட்டு சென்னி சூடி விண்ணோக்கி தெய்வங்களிடம் பொறுத்தருளும்படி ஒருமுறை கூறலாம். அவ்வளவே” என்றார். “அவன் விளைவிக்கும் உணவு ஆற்றும் பசி அவன் செய்யும் கொலைகளை தெய்வங்களின் கண்களுக்கு எளியதாக்கும். பசிப்பிணி நீக்கும் உழவருக்கு தான்யலட்சுமி ஆளும் பொன்னுலகு உண்டு என்பது முன்சொல்.”

“ஆம். நானும் அதை அறிவேன். ஆனால் இவ்வண்ணமே என்னால் இருக்க முடிகிறது. நேற்று உஜ்ஜயினிக்குச் சென்ற வணிகவண்டியை தடுத்து கொள்ளையிட்ட திருடர்குழுத் தலைவன் ஒருவனை தலை கொய்ய என் வீரர்களுக்கு ஆணையிட்டேன். அவனை அவர்கள் இழுத்துச் சென்றபோது அவையிலிருந்த தனது மைந்தனையும் மனையாட்டியையும் திரும்பி நோக்கியபடியே சென்றான். கண்கள் நிறைந்து வழிய இருவரும் கைகூப்பி அசையாது நின்றிருந்தனர். சிவதரே, எழுந்து அவர்கள் காலடி பணிந்து என்னை பொறுத்தருள்க என்று கேட்க வேண்டும்போல் உணர்ந்தேன்” என்றான் கர்ணன்.

சிவதர் ஏதோ சொல்ல வாயெடுக்க “உங்கள் எண்ணம் புரிகிறது. களை கொய்யாது பயிர் வளர்க்கலாகாது. ஆனால் ஒரு களையும் தனித்திருப்பதில்லை. பயிரோடு சேர்த்தே களை பிடுங்க வேண்டியிருக்கிறது. நான் கொன்றது திருடனை மட்டுமல்ல, ஒரு தந்தையையும் கூட” என்றான் கர்ணன். சிவதர் “அரசே, அம்மைந்தனுக்கு நீங்கள் கொடையளித்தீர்கள். அவன் கல்வி பயிலவும் நல்வாழ்வு பெறவும் வழி அமைத்தீர்கள். அதற்கப்பால் ஒரு அரசன் செய்வதற்கொன்றுமில்லை” என்றார்.

“அவன் விழிகளுக்கு அவன் தந்தையைக் கொன்றவன் நான். தனித்திருக்கையில் தந்தை என்று அவன் உணர்கையில் அவ்வெண்ணம் அவனுள் எழாதிருக்காது” என்று கர்ணன் சொன்னான். “எழும். ஆகவேதான் அரசனை அனைத்து மானுடர்களிடமிருந்தும் ஒரு படி மேலேற்றி அமைத்தனர் முன்னோர். அவனது அரியணை பிறர் தலைக்கு மேல் அமரவேண்டுமென்று மேடை கட்டினர். சூரியனும் சந்திரனும் நெருப்பும் அவன் மூதாதையர் என்று வகுத்தனர். அந்த அரியணையில் நீங்கள் அமர்ந்திருக்கும் வரை எவரும் உங்களை கொலைகாரன் என்று எண்ணப்போவதில்லை. இறங்கி மண்ணில் நின்று ஒரு சொல் எளிய மானுடராக உரைத்துவிட்டீர்கள் என்றால் காத்திருந்த பார்ப்புப்பேய்கள் போல் அனைத்துப் பழிகளும் வந்து உங்கள் மேல் படியும்” என்றார் சிவதர்.

கர்ணன் “ஆம், உண்மை” என்றபின் “மது எனும் மாயத்தை கண்டடைந்த மூதாதை ஒரு மன்னனாகவே இருக்க வேண்டும். நாளெல்லாம் அவன் மேல் வந்து பொழியும் பழிகளையும் புகழ்மொழிகளையும் கழுவிவிட்டு இரவில் எடையிழந்து துயில அது அவனுக்கு தேவைப்பட்டிருக்கும்” என்றான். “இப்போது தங்கள் சித்தம் செயல்கூருடன் இருக்க வேண்டியுள்ளது. மதுவருந்தி இளைய அரசியின் அரண்மனைக்குச் செல்வது உகந்ததல்ல” என்றார் சிவதர். “அவள் விழிகளை மதுவின்றி என்னால் நோக்க முடியும் என்று தோன்றவில்லை” என்றான் கர்ணன்.

“இல்லை அரசே” என சிவதர் தொடங்க “ஒரு குவளை மது போதும் சிவதரே. என்னை திரட்டிக் கொள்வேன்” என்றான் கர்ணன். சிவதர் “அது தேவையில்லை அரசே. தாங்கள் அங்கு இழிவுபடுத்தப்படுவீர்களோ என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. மதுவுண்டால் அதுவே அவர்களுக்கு ஒரு தூண்டுதல் என்று ஆகும்” என்றார். கர்ணன் “நீர் சொல்வது சரிதான். பார்ப்போம்” என்றான். திரும்பி சால்வையை எடுத்து அணிந்துகொண்டு “இன்றைய நாள் மிக நீண்டது. இது எப்போது அணையும் என்றிருக்கிறது” என்றான். சிவதர் “இரவு ஒரு கருஞ்சிறகுப்பறவை என்பது சூதர் சொல்” என்றார். அவன் அதை நோக்கவில்லை.

“செல்வோம்” என்று சொல்லி அவன் இடைநாழியில் நடக்க சிவதர் அவனைத் தொடர்ந்து வந்தபடி “தாங்கள் செல்வது சரி. ஆனால் காத்திருக்க வேண்டியதில்லை” என்றார். “ஏன்? மூத்தவள் வாயிலில் காத்திருக்கவில்லையா?” என்றான் கர்ணன். “மூத்தவர் சூதப்பெண். அடங்காத மனைவி முன் காத்திருந்த எளிய கணவனாக அங்கிருந்தீர்கள். இவர் கலிங்க இளவரசி. ஷத்ரியப்பெண் முன் பணிந்து நிற்கும் சூதனாக இங்கிருப்பீர்கள்” என்றார். “இங்கே நீங்கள் இழிவடைவதை விரும்புவது கலிங்கம்…”

கர்ணன் “இந்த மாற்றுருவையும் அணிந்து பார்ப்போமே” என்றான். “எப்போது விளையாடுகிறீர்கள் எப்போது போராடுகிறீர்கள் என்று என்னால் அறியமுடிவதே இல்லை” என்றார் சிவதர். கர்ணன் சிரித்து “எப்போது விளையாடுகிறேன்? அதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்” என்றான். சிவதர் பெருமூச்சுடன் சொல்லடக்கிக்கொண்டார். அவர்களின் குறடுகளின் ஒலிகள் உரையாடல் போல ஒலித்தன. வினாவிடை என. சொல் மறு சொல் என. தங்களையே எண்ணி அளப்பவை என.

இடைநாழியைக் கடந்து அரண்மனையிலிருந்து மரப்பட்டைக்கூரையிடப்பட்ட நீண்ட இடைநாழியால் இணைக்கப்பட்டிருந்த அரசிகளுக்குரிய மூன்றடுக்கு மாளிகையை அவர்கள் அணுகினர். தனியாக சுவர்வளைப்பு கொண்டிருந்த அதன் முகப்புவாயிலில் கலிங்கத்திலிருந்து வந்த காவலர் வேலும் வாளும் ஏந்தி காவலிருந்தனர். அவர்களுக்கென சிறு தங்குமாடங்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. கர்ணனைக் கண்டதும் காவலர் தலைவன் எழுந்து தலைவணங்கி “அங்க நாட்டரசருக்கு நல்வரவு” என்றான். சிவதர் அங்கேயே நின்றுவிட்டார். அவரை ஒரு முறை திரும்பிப் பார்த்தபின் கர்ணன் உள்ளே சென்றான்.

இரண்டாவது வாயிலில் கலிங்கத்து சேடிப்பெண்கள் எழுவர் காவல் இருந்தனர். பெரிய பட்டாடையை மார்பின் குறுக்கே அணிந்து அதன்மேல் வெள்ளிச்சரம் இட்டிருந்த தலைவி அவனை வணங்கி “அரசியர் மாளிகைக்கு வரவு சிறப்பதாக! தங்கள் வருகையை அரசியாருக்கு அறிவிக்கிறேன்” என்றாள். அவன் தலையசைக்க அவள் மிகப்பெரிய இடையை அசைத்தபடி மெல்ல திரும்பிச்சென்றாள். அவள் தொடைகளுக்குப் பொருந்தாமல் காலடிகள் மிகச்சிறியவையாக இருந்தன. அவள் ஏறிச்செல்லும் ஒலி படிக்கட்டிலும் மேலே இடைநாழியிலும் கேட்டது.

இடையில் கைவைத்து உடல் சற்றே சரித்து அவன் நின்றான். காலடிகள் கேட்டன. அவன் நோக்கியபோது இரு கைகளையும் வீசி தலைநிமிர்த்தி சுப்ரியையின் முதன்மைச்செவிலி சரபை வந்தாள். அவளுக்குப் பின்னால் தலைவி அவனை நோக்கி விழி நிலைக்க நடந்து வந்தாள். ஆணவம் கொண்ட சீர் நடையுடன் வந்த சரபை “தங்கள் வருகையை அரசிக்கு அறிவித்துள்ளேன் அரசே” என்றாள். முகமன் சொல்லவில்லை. கர்ணன் அவள் மறுசொல்லெடுக்க காத்து நின்றான். ஆனால் அவள் தலை வணங்கி முதுகைக்காட்டித் திரும்பி உள்ளே சென்றாள். ஒரு கணம் தயங்கி நின்றபின் அவன் அவளுடன் உள்ளே சென்றான்.

அவள் அவனை அழைத்துச் சென்று எட்டு பெரிய பீடங்கள் அமைந்த நீள்சதுர வடிவக் கூடத்தில் சாளரத்தருகே போடப்பட்ட மையப் பீடத்தில் அமரும்படி கைகாட்டினாள். பீடம் முனகி ஒலிக்க எடையுடன் அவன் அமர்ந்ததும் தலைவணங்கி வெளியேறினாள். கர்ணன் தனக்குப் பின்னால் காற்றில் திரைச்சீலை நிலையழிந்து அசைவதை உணர்ந்தபடி அங்கு காத்திருந்தான். எங்கோ ஒரு பறவையின் தும்மல் போன்ற ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

திரைச்சீலையின் நெளிவு நிலைத்திருப்பதை எண்ணங்கள் நெடுந்தொலைவு சென்று மீண்டபிறகுதான் கர்ணன் உணர்ந்தான். எப்போதோ கங்கையிலிருந்து வரும் காற்று முற்றிலும் நின்றுவிட்டிருந்தது. அதுவரை அம்மாளிகையின் அனைத்து ஒலிகளையும் முன்னும் பின்னும் அலைத்து உரையாடிக்கொண்டிருந்த காற்றின் இன்மையால் அவை அனைத்தும் மேலும் ஆழம் கொண்டு மறைந்துவிட்டவை போலிருந்தன. ஒலியின்மை உள்ளத்தின் சொற்பெருக்கை தாளமுடியாததாக ஆக்கியது. கர்ணன் எழுந்து கைகால்களை நீட்டியபடி அறைக்குள் மெல்ல நடந்தான்.

எவரையேனும் வரவழைத்து சற்று யவனமது கொண்டுவரச் சொல்லி அருந்தினால் என்ன என்ற எண்ணம் வந்தபின் தலையசைத்து அதை தடுத்தான். கிளம்பிச் சென்றால் என்ன என்று தோன்றியது ஆனால் அரசியைப் பார்த்துவிட்டு செல்வதே உகந்தது என்ற எண்ணம் மீண்டும் வந்தது. அவன் செல்வது சினத்தினால் என்று தோன்றக்கூடும். அவள் அவனை காக்கவைக்கிறாள். அதை அவள் செய்வாள் என்பதை முன்னரே உணர்ந்தபின்னர்தான் அவன் அங்கு வந்தான். அவள் முகம் நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் அவன் அமர்ந்தான்.

மீண்டும் சித்தம் இழுபட்டு காலத்துக்கு இணையான கோடாக மாறியது. எங்கோ காற்று ஓசையிட்டது. இலைகளின் இரைச்சல். சாளரக்கதவுகளின் ஓசை. உலோகத்தாழ்களின் சிலம்பல். அவன் விழிப்பு கொண்டு எழுந்து கைகளை விரித்து உடலை நீட்டினான். நெடுநேரமாகியிருந்தது. அவன் சித்தமெங்கும் தென்னகத்துப் பெருநதிகளின் ஒளிப்பெருக்குதான் ஓடிக்கொண்டிருந்தது. தீராப்பெருஞ்சினத்துடன் சருகுகளை மிதித்து ஏகும் பரசுராமரின் வெண்கால்கள். அவற்றில் படிந்த புழுதி. உலர்ந்த குருதிப்பொடி படிந்த நக இடுக்குகள்.

12

அவன் இடைநாழிக்கு வந்தபோது அங்கு செவிலி நின்றிருந்தாள். அவள் அப்போதிருந்தே அங்குதான் நின்றிருந்தாள் என்பதை அவள் விழிகளில் இருந்து உணர்ந்து “அரசி அங்கு என்ன செய்கிறாள்?” என்றான். “அரசிக்கு உடல் நலமில்லை. தாங்கள் துயில்வது போல் தோன்றியது விழித்துக் கொண்டதும் சொல்லலாம் என்று இங்கு காத்து நின்றிருந்தேன்” என்றாள். ஒரு கணம் தன்னில் எழுந்த சினத்தைக் கடந்து “அவள் உடல் நலத்துக்கென்ன?” என்றான். “கருவுற்றதின் களைப்புதான். இன்று மட்டும் பதினைந்து முறை வாயுமிழ்ந்து விட்டார்” என்றாள்.

கர்ணன் ஒருகணம் அதை முழுமையாக நம்பி உளம் மலர்ந்தான். “மருத்துவர்கள் பார்க்கிறார்களா?” என்றான். “ஆம். கலிங்க மருத்துவர்கள் அவர்களை செவ்வனே நோக்குகிறார்கள்” என்றாள் அவள். “அரண்மனை மருத்துவரை அனுப்புகிறேன்” என்றான் கர்ணன். “இல்லை, இங்குள்ள மருத்துவர் எங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. நாங்கள் பீதர்களிடமிருந்து கற்ற நுண்ணிய மருத்துவ முறைகளின்படி உடலைப் பேணுபவர்கள்” என்றாள். அவன் அவள் கண்களை நோக்கினான். உடல் தளர்ந்தது. அவள் விழிகளை திருப்பிக்கொண்டாள். இனி ஒன்றும் அறிவதற்கில்லை என நினைத்தான்.

சிலகணங்கள் அசைவற்று நின்றபின் திரும்பி “நான் அவளை பார்த்துவிட்டு செல்கிறேன். உடல் நலமற்ற நிலையில் நான் அவளைப் பார்ப்பதை அவள் விரும்பக்கூடும்” என்றான் கர்ணன். செவிலி “அதையே நான் சொன்னேன். பார்க்க விருப்பமில்லை. உடல் நலம் தேறியபின் அரசியே தங்களை அழைத்து செய்தி அனுப்புவதாக சொன்னார்” என்றாள். சற்றே குரல் உரக்க “நான் அவளை பார்க்க வேண்டும்” என்றான் கர்ணன். அவள் குரலும் உரத்து ஒலித்தது “அரசியின் ஆணையை நான் மீற முடியாது.”

அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. அதிலிருந்த நுண்ணிய நகைப்பை அவன் கண்டான். அது உளமயக்கா? இல்லை. அதை அவன் உள்ளத்தின் நுண்முனை ஒன்று தொட்டு அறிந்தது. எதை அறியாவிட்டாலும் அதிரதன் மைந்தன் அவமதிப்புகளை தவறவிடுவதே இல்லை. புன்னகையுடன் “நான் அவள் சொல்வதை புரிந்துகொண்டேன் என்று அவளிடம் சொல்” என்றான். செவிலி “ஆம், ஆணை” என்றாள். “அரசி நலமடைந்ததும் தங்களை சந்திக்கும் நேரத்தை அறிவிப்பார்.” பெருமூச்சுடன் “அவ்வண்ணமே” என்றபின் கர்ணன் திரும்பி நடந்தான்.

அவள் பின்னால் வந்து “கலிங்க அரசியை சந்திக்க வருகையில் தாங்கள் அமைச்சரை செய்திசொல்ல அனுப்பியிருக்கலாம் அரசே” என்றாள். அவன் சினத்துடன் திரும்ப “கலிங்க அரசகுலத்தவரை சூதர்கள் எட்டு அடி தொலைவில் நின்று நோக்குவதே வழக்கம். சூத்திரர் நான்கு அடி தொலைவிலும் வைசியர் இரண்டடித் தொலைவிலும் நிற்பார்கள். அந்தணர் மட்டுமே தொட்டுரையாட முடியும்” என்றாள் சரபை. அவன் உதடுகள் மெல்ல பிரிவதைக் கண்டு அவள் புன்னகையுடன் “நெறிகளை மீறுவதை அவர்கள் அரசமறுப்பு என்றே சொல்வார்கள். ஷத்ரியராகிய தங்கள் செய்தியுடன் சூதனாகிய சிவதர் வருவது முறையல்ல” என்றாள்.

இதழ் வரை வந்த ஏதோ ஒன்றை அடக்கி படிகளில் இறங்கி கூடத்துக்கு வந்தான் கர்ணன். சிற்றடிகள் ஒலிக்க அவனைத் தொடர்ந்து வந்த செவிலி “நாளை முதல் அரசியின் கரு வாழ்வதற்கான பூசனைகளும் கொடைகளும் வேள்விகளும் நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்காக நிதியை அரண்மனைக் கருவூலம் ஒதுக்குமென்று எதிர்பார்க்கிறார்கள்” என்றாள். தன்னை மீறித் திரும்பிய கர்ணன் உரத்தகுரலில் “கருவுருவாகவில்லை என்று நான் அறிவேன். இல்லாத கருவுக்கு அவ்வண்ணம் கருவூலத்தை செலவழிப்பதை நான் ஏற்க முடியாது” என்றான்.

செவிலி “கலிங்க நாட்டைப் பொறுத்தவரை கரு உருவாகியுள்ளது. தாங்கள் விரும்பினால் கலிங்க நாடே கருவூலத்திலிருந்து இக்கொடைகளை நிகழ்த்தும்” என்றாள். அவன் குரல் தாழ “கலிங்கத்துக்கு செய்தி அனுப்பிவிட்டீர்களா?” என்றான். “முறைப்படி அரசச்செய்தி தாங்கள்தான் அனுப்பவேண்டும். ஆனால் பெண்ணறைச் செய்தியை நேற்றே எங்கள் அரசி கலிங்கத்துக்கு அனுப்பிவிட்டார்கள்” என்றாள் சரபை.

திகைப்புடன் “நேற்றா?” என்றான் கர்ணன். அவள் உதடுகள் கேலிநகைப்பில் வளைய “பறவை அல்லவா? அது எங்கேனும் கிளையமர்ந்து ஒரு நாள் பிந்திகூட செல்லலாமே. செய்தியில் நாட்குறிப்பு நேற்றென்றே உள்ளது” என்றாள். அயர்வுடன் “இவற்றை யார் இங்கு அமர்ந்து நிகழ்த்துகிறார்கள்?” என்றான் கர்ணன். “கலிங்கம் என்பது கலிங்க நாட்டு மண்ணில் மட்டுமல்ல” என்றாள் அவள்.

கர்ணன் ஒன்றும் சொல்லாமல் திரும்ப அவள் பின்னால் வந்து “அங்கரே, கருவூலத்தை திறப்பதே நன்று. அங்க நாட்டின் தலைநகரில் கலிங்க நாணயங்கள் கொடையாக அளிக்கப்பட்டால் அதுவும் சூதர் சொல்லாக பரவும்” என்றாள். கர்ணன் திரும்பி, “வென்றபடியே செல்கிறீர்கள்” என்றான். அவள் புன்னகைத்தாள். கர்ணன் “பிறரது வெற்றிகள் எனக்கொரு பொருட்டாக அல்லாமல் ஆகிவிட்டிருக்கின்றன செவிலியே. பார்ப்போம்” என்றபின் வெளியே நடந்தான்.

காவலர் மாடத்தைக் கடந்து வெளிவந்தபோது அங்கு சிவதர் அவனுக்காக காத்து நின்றார். இயல்பாக புன்னகைத்து “கொற்றவை பூசனைக்கு பிந்திவிட்டோம் அல்லவா?” என்றான் கர்ணன். சிவதர் “ஆம்” என்றபின் ”நகரெங்கும் இளவரசரின் பிறப்பு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார். “யார் அறிவித்தது, ஹரிதரா?” என்றான். “இல்லை. அதற்கு முன்னரே சூதர்கள் பாடத்தொடங்கி விட்டனர். பிறக்கவிருப்பவன் கதிரவனின் மைந்தன் என்றும் நேற்று இரவில் ஒரு கணம் ஒரு சூரியக் கதிர் வந்து கலிங்க அரசியின் அரண்மனை முகடுகளை ஒளிவிடச் செய்ததாகவும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.”

கர்ணன் புன்னகையுடன் “ஒரு மாயக்கதை இருந்தால் சேதி பரவுதல் எளிதென்று அறிந்திருக்கிறார்கள்” என்றான். சிவதர் “ஆம், அரசுசூழ் கலையை இளவரசி பிழையறக் கற்றிருக்கிறார்கள்” என்றார். “அரசு சூழ்தலில் நற்செயல் என ஏதேனும் உண்டா சிவதரே?” என்றான் கர்ணன். “உண்டு, அதற்கு எதையும் கற்கவேண்டியதில்லை” என்று சிவதர் சொன்னார். கர்ணன் சிரித்துக்கொண்டு “நற்செயல் செய்தபின் அதிலிருந்து விடுபடுவதற்கு அரசு சூழ்தலின் அனைத்துத் திறன்களும் தேவையாகுமென நினைக்கிறேன்” என்றான்.

அவனைத் தொடர்ந்து நடந்தபடி சிவதர் “சிந்து நாட்டு அரசருக்கு பறவைத்தூது சென்றிருக்கிறது” என்றார். கர்ணன் நின்று “ஜயத்ரதனுக்கா?” என்றான். அவன் உடல் சற்று குறுகியது. அவரது கண்களை நோக்க முடியாமல் விழி அலைய “எங்கிருந்து? சுப்ரியையிடமிருந்தா?” என்றான். “ஆம், முதற் செய்தியே அவருக்குத்தான்” என்றார் சிவதர். அவன் தன் உடலை உள்ளத்தால் பற்றி முழுவிசையாலும் திருப்பி அவரை நோக்கினான். அவர் விழிகளை சந்தித்தான். அவை மெல்லிய துயருடன் இருந்தன.

புன்னகைத்தபடி கர்ணன் “கருவுற்ற பெண்கள் காதலர்களைத்தான் எண்ணிக்கொள்வார்கள் என்று ஒரு சூதர்பாடல் உண்டல்லவா?” என்றான். சிவதர் விழிதாழ்த்தினார். “நானே அதை கண்டிருக்கிறேன். தன் குழந்தையை முதற்காதலனிடம் காட்டுவதை பெண்கள் மிக விழைகிறார்கள்.” சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. “துயர்கொள்ளவேண்டாம் சிவதரே. அவன் இல்லாத கருவுக்காக உளம் நெகிழ்வான் என நினைக்கையில் எனக்கு நகைக்கவே தோன்றுகிறது” என்று சொல்லி அவர் தோளை தொட்டுவிட்டு விலகிச் சென்றான்.