வண்ணக்கடல் - 7

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்

[ 4 ]

தசைகளில் குடியிருக்கும் நாகங்களை துரியோதனன் இளமையில் ஒருநாள் கனவுகண்டு திடுக்கிட்டு விழிக்கையில் அறிந்தான். அவனருகே கிடந்த கனத்த கருநாகம் உடல் முறுக்கி நெளிந்து படமெடுத்து முகமருகே வந்தது. மயிர்கூச்செறிய அவன் எழுந்தமர்ந்தபோது அது தன் வலக்கை என்று உணர்ந்தான். இடக்கையின் நாகம் மெல்ல நெளிந்து புரண்டு வயிற்றை நோக்கி வந்தது. இருகால்களாக நீண்டிருந்த நாகங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உரசிக்கொண்டன. துடிக்கும் நெஞ்சுடன் மூச்சுவாங்க சிலகணங்கள் அமர்ந்திருந்தான். நாழிகைவிளக்கு அணைந்து இருள் பரவியிருந்த துயில்கூடத்துக்குள் அவனைச்சூழ்ந்து படுத்திருந்த கௌரவர்களின் கைகால்களாக நாகக்கூட்டங்கள் இருளில் பின்னி முயங்கி நெளிந்து கிடந்தன.

சுடரைத் தூண்டி பற்றவைத்து திரும்பி தன் தம்பியரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருக்கையில் துரியோதனன் அறிந்தான், நாகங்களின் அழிவின்மையை. எழுந்துசென்று நீர் அருந்தி கைகளில் முகம் தாழ்த்தி அமர்ந்திருந்தான். வெளியே சாளரத்துக்கு அப்பால் நாகப்பேருடல் எழுப்பி நின்றிருந்த மரங்கள் காற்றில்படமெடுத்தாடிக்கொண்டிருந்தன. துச்சாதனன் எழுந்து தன் மஞ்சத்திலேயே அமர்ந்துகொண்டு “மூத்தவரே” என்றான். அவனுடைய மெல்லிய ஒளிபரவிய கரிய விழிகளை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். நாகங்கள் இறுகிய தோள்கள். ஆனால் அவன் விழிகள் பேரன்புகொண்டு பணிந்த நாய்களுக்குரியவை. “மூத்தவரே” என்று துச்சாதனன் மேலும் எழுந்த குரலில் அழைத்தான்.

துரியோதனன் எழுந்து தன் மேலாடையை எடுத்து கச்சையாகக் கட்டிக்கொண்டான். “எங்கு செல்கிறீர்கள் மூத்தவரே?” என்று துச்சாதனன் கேட்டதை பொருட்படுத்தாமல் எழுந்து தம்பியரின் படுக்கைகளைக் கடந்து வெளியே சென்றான். துச்சாதனன் நிழல்போல ஓசையின்றி அவனுக்குப்பின்னால் வந்தான். அவனுடைய காலடியோசைகூட தன் காலடிகளுடன் இணைந்துவிட்டது போலிருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவன் உடனிருப்பதை துரியோதனன் அறிவதில்லை. எப்போதெல்லாம் அவன் தன் உதடுகளுக்கப்பால் பேசிக்கொள்ளவேண்டும் என்று உணர்ந்தானோ அப்போதெல்லாம் அருகே பணிந்த கூர்விழிகளுடன் துச்சாதனன் நின்றிருப்பதைப் பார்ப்பான்.

வடபுலத்தில் யானைக்கோட்டத்தில் குட்டி ஈன்ற பிடியானைகள் சில மட்டுமே நின்றிருந்தன. யானைகள் நிலையழியலாகாது என்பதற்காக அங்கே பந்தங்களை வைப்பதில்லை. கீற்றுநிலவின் ஒளியில் கரிய நிழலுருவங்கள் அசைந்துகொண்டிருந்தன. மூத்தபிடியானையாகிய காலகீர்த்தி அழுத்தமான உறுமலோசைமூலம் பிற யானைகளுக்கு அறிவிக்க அவை அவனை நோக்கித்திரும்பின. இரண்டு குட்டிகள் சிறிய துதிக்கைகளைத் தூக்கி நுனிநெளித்து வாசனைகொண்டபடி அவனை நோக்கி எட்டு எடுத்து வைக்க ‘வேண்டாம்’ என அன்னையர் இருவர் மெல்ல அவர்களை அடக்கினர்.

துரியோதனன் அனுமன் ஆலயத்துக்கு முன் சிலகணங்கள் நின்றபின் திரும்பி மீண்டும் நடந்தான். வடக்குக் கோட்டைவாயில் மூடியிருக்க திட்டிவாயில் திறந்திருந்தது. அதனருகே நான்கு காவல்வீரர்கள் மரவுரிப்போர்வை போர்த்தி வேல்களுடன் அமர்ந்து தரையில் களம் வரைந்து காய்பரப்பி தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். காலடியோசை கேட்டு நிமிர்ந்த முதியவன் “இளவரசர்” என மெல்லியகுரலில் சொன்னபடி வேலுடன் எழுந்தான். பிறரும் எழுந்து தலைவணங்கி நின்றனர். துரியோதனன் கோட்டைவாயிலைக் கடந்து சென்றான்.

வெளியே வளைந்துசென்ற புராணகங்கையின் அடர்காட்டுக்குள் சிறிய பாதைகள் கிளைபிரிந்து பரவியிருக்க அவற்றுக்கு இருபக்கமும் காந்தாரப்படைகளின் குடில்கள் மரவீடுகளாகவும் மண்வீடுகளாகவும் மாறி சிற்றூர்களாகப் பெருத்து காட்டை நிறைத்திருந்தன. காட்டுவிலங்குகளை எச்சரிக்கும் பொறுப்புள்ள காந்தாரத்து நாய்கள் அவர்களைக் கண்டதும் எம்பிக்குதித்து குரைத்தபடி ஓடிவந்தன. காதுகளை முன்னால் நீட்டி அவர்களின் வாசம் பெற்றபின் குரல்தாழ்த்தி மெல்ல உறுமத்தொடங்கின. குடிகள் தோறும் குரைத்தெழுந்த நாய்களெல்லாம் குரலவித்து உறுமின.

குடிவரிசையைக் கடந்ததுமே பாதை இலைதழைத்த புதர்களும் கொடிமாலைகள் சூடிய பெருமரங்களும் செறிந்த ஈரக்காட்டுக்குள் சென்று புதைந்து மறைந்தது. காலடிப் பாதையின் இரு மருங்கும் சுவர்போல எழுந்த புதர்களின் இலைநுனிகள் பனியீரத்துடன் அவனை வருடின. காட்டுக்குள் மரங்களுக்குமேல் இரு பந்தங்களின் ஒளியின் அலைவை துரியோதனன் கண்டான். மிக அப்பால் சற்று உயரத்தில் இன்னொரு பந்தம் அலைந்து அதற்குப்பதிலுரைத்தது. துரியோதனன் மேலும் நடந்தபோது நான்காவது பந்தம் ஒன்று வலப்பக்கம் எழுந்து சுழன்றது. ஒரு உரத்த குரல் “யாரது?” என்று வினவியது.

“அஸ்தினபுரியின் இளையமன்னர்!” என்று துச்சாதனன் உரத்தகுரலில் பதிலளித்தான். சிலகணங்கள் அமைதிக்குப்பின் இன்னொரு குரல் “யார்?” என்றது. துச்சாதனன் மீண்டும் பதிலளித்தபோது மரத்தின் மேல் கட்டப்பட்ட காவல்மாடத்திலிருந்து பந்தத்துடன் இறங்கிய ஒருவன் புதர்களுக்கு மீதாக இழுத்துக்கட்டப்பட்ட இரு கனத்த வடங்கள் வழியாக விரைந்து நடந்து அவர்களருகே வந்து இறங்கினான். “அரசே, தாங்களா?” என்றான்.

“ஆம், இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றான் துரியோதனன். “அரசே, என் பெயர் கச்சன். அனைத்தையும் பின்னர் விளக்குகிறேன். இங்கே தரையில் நடக்கக்கூடாது. வடத்தில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றான் கச்சன். அவர்கள் வடத்தில் ஏறி ஒருவடத்தைப்பற்றிக்கொண்டு இன்னொன்றில் கால்வைத்து புதர்களின் இலைத்தழைப்புக்குமேல் நடந்து காவல்மாடம் நோக்கிச் சென்றனர். “நாங்கள் இங்கே மதகளிறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோம் அரசே” என்றான் கச்சன்.

“எங்குசென்றது அது?” என்று துரியோதனன் கேட்டான். “அரசே, இங்கே புராணகங்கையின் நெடுங்காட்டுக்குள்தான் யானைகளை இரவாட விடுவோம். அவை மேயவும் புணரவும் காடு தேவை. காலையில் அவை திரும்பிவிடும். சென்ற பதினைந்து நாட்களாக சியாமன் என்னும் பெருங்களிறு திரும்பிவரவில்லை. அதைத்தான் இரவும் பகலுமாக தேடிக்கொண்டிருக்கிறோம்.” அவர்கள் உயர்ந்த மரத்தின் கவை மீது கட்டப்பட்டிருந்த சிறு குருவிக்கூடு போன்ற காவல்மாடத்தை அடைந்தனர். அங்கிருந்த காவலன் வணங்கி “அஸ்தினபுரிக்கரசை வணங்குகிறேன். பாகர்களில் நூற்றுவர்தலைவனாகிய என்பெயர் பாசன்” என்றான்.

“அந்தக் களிறு எங்கு சென்றிருக்கும்?” என்றான் துரியோதனன். “அரசே, யானைகளின் கழுத்தில் வெண்கல மணியைக் கட்டித்தான் காட்டுக்குள் விடுகிறோம். அந்த மணியோசை அவற்றுக்கு நகரையும் அங்குள்ள மக்களையும் குருதிச்சுற்றத்தையும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். காடு யானைகளுக்கு இறையளித்துள்ள களம். அங்குள்ள ஒவ்வொன்றும் அவற்றுக்குள் உறையும் முதல்பெரும் மதங்கத்தை மீட்டுக்கொண்டுவரக்கூடியவை. பச்சைஇலைவாசமும் மண்மணமும் நீரோசையும் காற்றொலியும் கரும்பாறைகளும் வெண்மேகங்களும் அவற்றுக்கு நாமளித்துள்ள மனிதத்தன்மையை அழித்து விலங்குகளாக்கிவிடும். அவற்றிலிருந்து காப்பது வெண்கலமணியில் உறையும் மோதினி என்னும் நகர்த்தெய்வம்” என்றான் பாசன்.

“அஸ்தினபுரியின் நகர்த்தெய்வமான ஹஸ்தினியின் ஏழு மகள்களில் அவள் ஆறாமவள். இடக்கையில் மணியும் வலக்கையில் சுடரும் ஏந்தி பீடத்தில் அமர்ந்திருப்பவள். மணிநாவில் வாழும் அவள் ஒவ்வொரு கணமும் அஸ்தினபுரி அஸ்தினபுரி என யானையின் காதில் சொல்லிக்கொண்டே இருப்பாள். அந்த மாபெரும் சரடை அறுத்துச்செல்ல யானைகளால் முடிவதில்லை. ஒற்றை உருத்திராக்கமாலையின் மணிகள் போலத்தான் அவை காட்டுக்குள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டு அரைவட்ட வடிவத்தில் பரவி மேயும். மெல்லிய குரலோசையால், காதொலியால், வாசனையால் அவை இணைந்திருக்கும்” என்றான் பாசன்.

“அதிகாலையின் முதல்கதிர் எழுகையில் இங்கே வடக்குவாயிலுக்குமேல் உள்ள ஸ்ரீஹஸ்தம் என்னும் பெரிய கண்டாமணி ஓசையெழுப்பத்தொடங்கியதுமே காட்டுப்புதர்களுக்குள் விரிந்து சென்ற அந்த அரைவட்ட கருமாலையின் விரிந்த இரு நுனிகளும் ஒன்றையொன்று கண்டுகொண்டு சுருங்கி ஒற்றைத்திரளாக ஆகும். நிரைவகுத்து காட்டுக்குள் இருந்து எழுந்துவரும் கரிய கங்கைப்பெருக்கு போல கோட்டைவாயிலுக்கு அவையே வந்துவிடும். அவற்றின் மணியோசை அலையோசைபோல பெருகி வருவதைக் கண்டு நாங்கள் அவற்றை எதிர்கொண்டழைத்து நீராட்டக் கொண்டுசெல்வோம்” பாசன் சொன்னான்.

“ஆனால் மதம் கொண்ட சில களிறுகள் அச்சரடிலிருந்து அறுந்து தெறித்து காட்டுக்குள் சென்றுவிடுவதுண்டு. அவற்றைத் தொடரும் மணியோசையில் இருந்து தப்புவதற்கென்று அவை மேலும் மேலும் அடர்காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கும். மரங்களில் தந்தம் பூட்டி உரித்தும் கரும்பாறைகளில் மத்தகம் முட்டிப்பெயர்த்தும் கால்களால் மண்ணைக்கிளறி புரட்டியும் தடமிட்டபடி அவை செல்லும் வழியை நாங்கள் பின் தொடர்ந்துசெல்வோம். கழுத்துமணியின் ஓசை பசும் இருளுக்குள் கேட்டுக்கொண்டிருக்கும்” என்று அவன் தொடர்ந்தான்.

“மதகளிறு மானுடரோடு கண்பார்க்காது. வாசனையை மட்டுமே அதன் துதிக்கையில் குடியிருக்கும் வாயுதேவன் அறிவான். அதைச்சூழ்ந்துகொண்டு மரங்களில் அமர்ந்து மணியோசையை எழுப்புவோம். மணியோசை கேட்டு அது சினந்து மரங்களை முட்டிப்பெயர்த்தும் துதி தூக்கி சின்னம் விளித்தும் வெறிகொண்டாடும். பின்பு மெல்ல மத்தகம் தாழ்த்தி மண்ணில் கொம்புகுத்தும். வடங்களை வீசி அதை கண்ணியில் சிக்கவைப்போம். மரங்களுடன் பிணைத்து மதமிறங்கும் வரை காவலிட்டபின் வேறு களிறுகளைக் கொண்டுவந்து அதைப் பற்றி மீட்டுக்கொண்டுவருவோம். ஏழுநாட்களுக்குமேல் எந்த மதகளிறும் காட்டுக்குள் சென்றதில்லை. சியாமன் பதினைந்து நாளாகியும் மீளவில்லை.”

“ஏன்?” என்றான் துரியோதனன். கச்சன் “அதன் கழுத்துமணியை நேற்று காட்டுக்குள் ஒரு உடைந்த வேங்கை மரத்தடியில் கண்டெடுத்தோம். வேங்கையில் மத்தகம் பூட்டி முறித்து வீழ்த்துகையில் அந்த மணியும் தெறித்திருக்கிறது” என்றான் பாசன். “அப்படியென்றால் அது இப்போது மோதினியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டது இல்லையா?” என்றான் துரியோதனன்.

“ஆம், அரசே. காட்டுயானையை ஆள்பவை ஏழு வனதெய்வங்கள். பாறைகளின் தெய்வமான கிருஷ்ணை, மரங்களின் தெய்வமான ஹரிதை, நீரின் தெய்வமான நீலி, மேகங்களின் தெய்வமான சியாமை, குளிர்காற்றின் தெய்வமான மாருதை, புல்லின் தெய்வமான திருஷ்ணை, துதிக்கையில் குடியிருக்கும் பெருநாகமான சக்தை. அவை ஏழையும் வென்று அடக்கி ஆள்பவள் மோதினி. அவள் நீங்கிவிட்டால் யானை முழுமையாகவே அந்த ஏழு அன்னையரின் ஆட்சியில் இருக்கிறது. ஏழு சண்டிகள். ஏழு பிரசண்டிகள். ஏழு கட்டற்ற பேராற்றல்கள்!”

“அவர்கள் ஏறியமர்ந்திருக்கும் யானையின் மத்தகம் பிற யானைகளின் மத்தகங்களை விட உயர்ந்திருக்கும். அதன் விழிகளில் பாலாடை படிந்ததுபோல மதவெறி பரவியிருக்கும் என்கின்றன நூல்கள்…” பாசன் சொன்னான். “மானுட உலகுக்கு அப்பாலிருக்கிறது அது. நம் சொற்கள் எவையும் அதைச் சென்றடைய முடியாது. அதை வென்றடக்கவேண்டும். இல்லை கொன்றழிக்கவேண்டும்… அதற்காகவே நூறு பாகர்கள் கொண்ட படை காட்டுக்குள் வலையாக விரிந்துசென்றுகொண்டிருக்கிறது.”

“அந்த யானையை நான் பார்க்க விழைகிறேன்” என்றான் துரியோதனன். “அரசே, அதை நாங்கள் வென்றடக்கி நகருக்குள் கொண்டுவருகிறோம்” என்றான் கச்சன். “நான் காணவிழைவது அந்த யானையை அல்ல. ஏழன்னையர் ஏறியமர்ந்த காட்டரசனை” என்றான் துரியோதனன். பாசன் “…ஆனால்” என சொல்லவந்தபின் தலையசைத்தான். “நான் அந்த துதிக்கையில் குடியிருக்கும் சக்தையை காணவிரும்புகிறேன். என் தோள்களை அவள் அறிகிறாளா என்று நான் பார்க்கவேண்டும்.” இருபாகர்களும் திகைத்தவர்களாக திரும்பிப்பார்த்தனர்.

அன்று இரவும் முழுப்பகலும் அவர்கள் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தனர். புராணகங்கையின் காடு நீண்டு வளைந்து இருபக்கமும் உயர்ந்து ஏறிய மண்மேட்டுக்கு நடுவே வடக்கு நோக்கி எழுந்து சென்றுகொண்டே இருந்தது. அதன் நிலம் ஈரக்களிமண்ணாலானதாக, இடைவெளியின்றி பச்சைப்புல் செறிந்ததாக இரவின் நுண்ணிய பூச்சிகள் ஆவியென எழுந்து ரீங்கரித்துப் பறப்பதாக இருந்தது. நிலம் சரிந்து சென்று தெளிந்த நீர் தேங்கிய வட்டவடிவமான சதுப்புக்குட்டையாக ஆகியது. அதைச்சுற்றி கோரைகளும் தர்ப்பையும் செறிந்து வளர்ந்திருக்க நீரின் அடியில் விரிந்த மென்சேற்றுக்கதுப்பில் மெல்லிய புள்ளிகளும் கோலங்களுமாக பூச்சிகள் ஊர்ந்த தடம் தெரிந்தது.

“இந்நிலத்தில் யானையும் பன்றியும் எருமையும் அன்றி பிற விலங்குகள் நடக்க முடியாது. எங்கும் சேற்றுக்குழிகள்” என்றான் முதுபாகனான சம்பன். மரங்களில் இருந்து மரங்களுக்குக் கட்டப்பட்ட வடங்கள் வழியாகவே அவர்கள் சென்றனர். கீழே அவர்களின் நிழல்விழுந்த சேற்றுக்குட்டைகளின் தெள்ளிய நீர்ப்படலத்தை நீர்த்தவ்விப்பூச்சிகள் புல்லரிக்கச் செய்தன. சிறியபச்சைத்தவளைகள் புல்நுனிகளில் ஆடி எம்பி பாய்ந்தோடிய தடம் நீரில் அலையலையாக எழுந்து மிதக்கும் சருகுகளையும் சுள்ளிகளையும் கரையோர புல்பிசிறுகளையும் அலைபாயச் செய்தது.

வடங்களை அவிழ்த்து சுருட்டி எடுத்து மீண்டும் வீசிக் கட்டியபடி மரங்கள் வழியாகவே அவர்கள் சென்றனர். கீழே அடர்ந்த பேய்க்கரும்புப் படப்பு நடுவே யானை வகுந்துசென்ற பாதை தெரிந்தது. கூர்மன் என்னும் மெல்லிய பாகன் கயிற்றில் தொங்கி இறங்கிச்சென்று ஆடியபடி அந்தப்பாதையை கூர்ந்து நோக்கி மேலே பார்த்து “பிண்டம் கிடக்கிறது… சியாமனின் வாசனை” என்றான். பாசன் தலையசைத்து மேலே வரும்படி சொல்லி கையாட்டினான்.

அன்றிரவும் கடந்தபின்னர் மறுநாள் விடிகாலையில் அவர்கள் காட்டுக்கு நடுவே ஒளியுடன் தேங்கிக்கிடந்த ஆழமற்ற சேற்றுக்குட்டையை ஒட்டிய யானைப்புல் செறிவுக்குள் சியாமன் நின்றிருப்பதை அடையாளம் கண்டனர். அவர்கள் அதை அறிவதற்குள்ளாகவே அது அவர்களை அறிந்து துதிக்கை தூக்கி மெல்ல உறுமியது. புல்லுக்குள் அதன் மண்படிந்த மத்தகமும் முதுகும் மட்டும் தெரிந்தது. துதிக்கை படமெடுத்து மேலெழுந்தது. “சியாமன்!” என்றான் பாசன். “அவன் நம்மை நோக்கி வருகிறானா, விலகிச்செல்கிறானா என்பதுதான் முதன்மையானது.”

யானைக்குமேல் பறந்த சிறிய தவிட்டுக்குருவிகளைக்கொண்டே அது இருக்குமிடத்தை உணர முடிந்தது. சேற்றுக்குள் ஓங்கி நின்ற நீர்மருதமரத்தை நோக்கி மெல்லிய கயிற்றை வீசி கண்ணியிட்டபின் அதன் வழியாக மறுபக்கம் சென்ற கூர்மன் அதில் தொற்றி ஏறியபின் அந்தச் சரடு வழியாகவே வடங்களை இழுத்து மரத்தில் கட்டினான். வடத்தின் மேல் சென்ற போது யானைசென்ற வழியில் கரியசேறு நெகிழ்ந்து புரண்டிருப்பதைக் காணமுடிந்தது. அவற்றில் குருவிகள் எழுந்தமர்ந்து கொண்டிருந்தன.

யானைக்குமேலேயே அவர்கள் சென்றனர். அது மேலே துதிக்கை தூக்கியபின் குட்டைக்குள் சென்று இறங்கியது. குட்டையின் ஆழமற்ற நீர் கருமையாகச் சேறு கலங்கி நொதிக்கும் வாசனை எழ அது நீரில் துதிக்கை தூக்கியபடி நீந்தி மறுபக்கம் சென்று அங்கே கோரைப்புல்லுக்குள் புகுந்து ஏறி அங்கு நின்றிருந்த பெரிய வேங்கைமரத்தின் கீழ் நின்றுகொண்டது. நீருக்குள் சுருண்ட பெருநாகத்தின் உடல்போல வேர்கள் மண்ணுக்குள்ளும் வெளியிலுமாக புடைத்தெழுந்திருக்க கரிய அடிமரத்துடன் தாழ்ந்த கிளைகளுடன் நின்ற வேங்கை காற்றில் அலையடித்துக்கொண்டிருந்தது.

நீர்மருதமரத்தில் அமர்ந்தபடி அவர்கள் அதைப்பார்த்துக்கொண்டிருந்தனர். பாசன் மெல்லிய மூங்கிலை வாயில் வைத்து மும்முறை சீழ்க்கையடித்தான். தொலைவில் மறுசீழ்க்கை கேட்டது. காடு வழியாக பிறபாகர்கள் வருவதை காணமுடிந்தது. துரியோதனன் “நான் அதனருகே செல்கிறேன்” என்றான். “அரசே!” என்று பாசன் மூச்சுக்குள் கூவி கைநீட்ட துரியோதனன் ‘ம்ம்’ என அவனை விலக்கிவிட்டு மரத்தில் படர்ந்தேறியிருந்த கொடிவழியாக கீழே இறங்கினான். அவனைத்தொடர்ந்து துச்சாதனனும் இறங்கிக்கொண்டான்.

கீழே அவன் முழங்கால் மூழ்கும் அளவு கருஞ்சேறு படிந்திருந்தது. பாதங்கள் பட்டு புல்தோகைகள் சரிய தவளைகள் எம்பின. அவனைக் கண்டு சியாமன் செவி கோட்டி ஒலிகூர்ந்தபின் மிக மெல்ல உறுமியது. அவன் அதை நோக்கியபடி மெல்ல முன்னால் சென்றான். அதை நோக்கும்தோறும் அதன் மத்தகம் பெரிதாகி அவனை அணுகியதுபோலத் தோன்றியது. அதன் நெற்றிக்குழிக்கு கீழே வழிந்த மதத்தில் ஈக்கள் மொய்த்துச்சுற்றிவருவதை, கண்களின் வெண்ணிறமான பீளை வாய்நோக்கி வழிந்திருப்பதை, மத்தகத்தின் கூரிய மயிரை, துதிக்கையின் சேற்றுவெடிப்பு போன்ற தசையடுக்குகளை அவன் கண்டான்.

அதன் துதிக்கை எழுந்து அவனை நோக்கி நீண்டு மெல்ல அசைந்தது. அதிலெழுந்த சக்தை வல்லமை மிக்க தசைகளை நெளித்தபடி சோம்பல் முறித்தாள். துரியோதனன் திடமான காலடிகளுடன் அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். யானை தலையைக் குலுக்கி மெல்ல உறுமியபடி ஒரு காலை முன்னால் எடுத்து வைத்தது. சினம் கொண்டெழுந்த சக்தை நெளிந்து சுருண்டு வெண்தந்தத்தைப் பற்றிக்கொண்டு வழுக்கி ஒழுகியிறங்கினாள். அவன் மேலும் நடந்தபோது அலையென எழுந்த சக்தை மேலே சிறுபடம் தூக்கியபடி அவனை நோக்கி வந்தாள். அவளுடைய பிளிறலை அவன் கேட்டான்.

“நீ இங்கே நில்!” என்றான் துரியோதனன். “நான் உடனிருப்பேன்” என்று துச்சாதனன் மெல்லிய குரலில் பதிலிறுத்தான். “இது என் ஆணை!” என்றான் துரியோதனன். “இதில் மட்டும் நான் அன்னையின் ஆணைக்கே கட்டுப்பட்டவன் என அறிவீர் மூத்தவரே” என்று துச்சாதனன் அதே ஒலியில் சொன்னான். துரியோதனன் யானை மேலிருந்து கண்களை விலக்காமல் மேலும் முன்னகர்ந்து சென்றுகொண்டிருந்தான். யானை மீண்டும் மும்முறை கொம்புகுலுக்கியது. சக்தை காற்றில் சுழன்று சாட்டையென அருகே நின்ற இரு மரங்களை அறைந்தது. வெறியுடன் நெளிந்து கொந்தளித்தது.

தன்னை நோக்கி வந்த சக்தையை துரியோதனன் காணும் கணத்திலேயே அதன் அறையை வாங்கி அவன் தெறித்து தரையில் படர்ந்து கிடந்த கோரைப்புல் மெத்தைமேல் சென்று விழுந்தான். அதே கணத்தில் துச்சாதனன் உரக்கக் கூவியபடி பாய்ந்து கீழே கிடந்த மட்கிய மரத்தடியை எடுத்து யானையின் முகத்தில் அடித்தான். சக்தை அதைத் தட்டி தூள்களாக்கி வீழ்த்திவிட்டு துச்சாதனனை நோக்கிச் சென்ற கணத்துக்குள் துரியோதனன் எழுந்து அதை நோக்கிப் பாய்ந்தான். அவன் தோள்களிலெழுந்த இரு நாகங்கள் சக்தையுடன் பின்னிக்கொண்டன.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

திகைத்த சக்தை தசைநெளிய அவற்றைச் சுழற்றிப் பிடித்து இறுக்க முயன்றபடி காற்றில் சுழன்றது. அதை இருநாகங்களும் பிடித்து வளைத்து தந்தங்களை நோக்கிக்கொண்டுசென்றன. சக்தை தன் முழுவல்லமையாலும் இரு நாகங்களையும் விலக்கி அகற்ற முயன்றது. தசைகள் தசைகளை அறிந்தன. ஆற்றல் ஆற்றலை அறிந்த உச்சத்தில் பிளிறியபடி யானை கால்பரப்பி திகைத்து நின்றது.

யானையின் விழிகளை துரியோதனன் அருகே கண்டான். கம்பிகள் போன்ற இமைமுடிகளால் மூடப்பட்ட சிறிய கருநீர்க்குழிகளுக்குள் ஆழத்தில் ஓர் ஒளி மின்னி அணைந்தது. துதிக்கை தளர்ந்து அவன்மீதான பிடியை விட்டதும் அவன் சரிந்து விழுந்து யானையின் தந்தங்களைப்பற்றிக்கொண்டான். யானை கால்களை பின்னால் எடுத்துவைத்து இன்னொரு முறை பிளிறியது. அவன் அந்த தந்தங்களைப் பற்றியபடி “அன்னையரே, அடங்குக. இது என் ஆணை!” என்றான். யானை மீண்டும் சின்னம் விளித்தபின் மேலும் இரண்டு அடிகள் பின்னாலெடுத்துவைத்தது. மரங்களிலிருந்து வடங்களுடன் பாகர்கள் கீழிறங்கினர்.

நான்கு பெருநாகங்கள் ஒன்றையொன்று தழுவிப் பின்னி நழுவி வழிந்து மீண்டும் தழுவிக்கொள்வதை துரியோதனன் பார்த்துக்கொண்டிருந்தான். தழுவலே நாகங்களின் மொழி. உடலே நாக்கானவை அவை. இரு பெரும் கருநாகங்கள் இரு பொன்னிறநாகங்கள். கவ்விக்கொள்ளும் வேர்கள். உரசிக்கொள்ளும் மரக்கிளைகள். கலக்கும் நீரோடைகள். இருவரும் மீதமொன்றிலாதபடி பேசிவிட்டவர்கள் போலிருந்தனர். திருதராஷ்டிரர் பெருமூச்சு விட்டபோது பீமன் சூழலை அறிந்து சற்று விலகி “வாழ்த்தப்பட்டவனானேன் தந்தையே. இனி இப்புவியில் நான் அடைவதற்கொன்றுமில்லை” என்றான்.

“பாண்டு… பாண்டு!” என்று வேறெங்கோ தன் ஊமைவிழிகளைத் திருப்பிக்கொண்டு திருதராஷ்டிரர் முனகினார். “பாண்டு… என் தம்பி” மீண்டும் பெருமூச்சுடன் பீமனை இழுத்து தன் உடலுடன் அணைத்துக்கொண்டார். “உன் முதற் படைக்கலம் உன் கைமுட்டிகளே. பின்னர் கதை. வேறெதையும் தீண்டாதே” என்றார். “பிற அனைத்து படைக்கலங்களிலும் ஏதோ சூது இருக்கிறது. விலங்குகள் அவற்றைப் புரிந்துகொள்வதில்லை. கதை களங்கமற்றது. நேரடியானது. எந்த மிருகமும் அதைப் புரிந்துகொள்ளும். அதுவே உண்மையான ஆற்றல்கொண்டவனின் படைக்கலம்.”

“தங்கள் ஆணை தந்தையே” என்றான் பீமன். “டேய் விப்ரா, மூடா” என்று திருதராஷ்டிரர் அழைத்தார். “அரசே” என்றான் விப்ரன். “என்னுடைய கதையை இவனுக்கு அளிக்கச்சொல். இனி இவன் அதில்தான் பயிற்சிபெறவேண்டும்…” விப்ரன் தலைவணங்கி “ஆவன செய்கிறேன் அரசே” என்றான். பீமனின் இரு தோள்களிலும் தன் கைகளை வைத்து தலையை ஆட்டி புன்னகைசெய்த திருதராஷ்டிரர் “டேய் சஞ்சயா” என்றார். “எங்களைப்பார்க்க எப்படி இருக்கிறது?”

“இருவரும் ஒருவருக்குள் ஒருவர் எதையோ தேடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது அரசே. அணைக்கும் கைகள் உடலை துழாவித்துழாவித் திறந்துபார்க்கத் தவிப்பவை போலிருக்கின்றன.” திருதராஷ்டிரர் உரக்க நகைத்து “ஆம், இவன் என் தம்பி பாண்டு எனக்கு விட்டுச்சென்ற பொற்பேழை. இதற்குள் ஏதோ மந்தணச்செய்தி ஒன்றுள்ளது. இவனைத் தொட்டதுமே அதை நான் அறிந்துகொண்டுவிட்டேன். ஆனால் இப்பேழையின் மூடியைத் திறக்கும் வழி தெரியவில்லை” என்றார்.

“அரசே, விதைகளும் பேழைகளே. அவற்றுள் வாழும் மந்தணம் உயிர்பெறுகையில் அவை தாங்களாகவே திறந்துகொள்கின்றன” என்றான் சஞ்சயன். “ஆம்… ஆகா… அற்புதமாகச் சொல்லிவிடுகிறாய் மூடா… சூதர்களில் நீயே வியாசன்.” தலையை அசைத்து “ஆம். வரட்டும். காத்திருக்கிறேன். இந்தச் சிறுபேழைக்குள் என் தம்பி விட்டுச்சென்றது என்ன என்று காண்கிறேன்” என்றார் திருதராஷ்டிரர்.

விப்ரன் மெல்ல “அரசே, மைந்தர்கள் களைத்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் ஓய்வெடுக்கட்டும். மைந்தா”‘ என்றார் திருதராஷ்டிரர். “தந்தையே” என்று துரியோதனன் வணங்கினான். “உன் சிற்றன்னையிடம் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவி. இந்நாடும் அரண்மனையும் அவள் பாதங்களுக்குரியவை என்று நான் சொன்னதாகச் சொல்!” துரியோதனன் “ஆணை” என்றான்.

புஷ்பகோஷ்டத்திலிருந்து துரியோதனன் வெளியே வந்ததும் அரண்மனை முற்றத்தில் முகபடாமணிந்து துதிக்கை சுழற்றி நின்ற சியாமன் மெல்ல உறுமியபடி துதிக்கையை நீட்டியது. அதன் அருகே சென்று நீண்ட பெருந்தந்தங்களைப் பற்றிக்கொண்டு அப்பால் சேவகர் சூழ வெளியே வந்த பாண்டவர்களை நோக்கியபடி நின்றான். துச்சாதனன் அவனருகே வந்து நின்று “தந்தை அவனுடன் விளையாடியிருக்கக் கூடாது மூத்தவரே. அவன் இனி தந்தையையே எதிர்கொண்டவன் என்று புகழப்பெறுவான்” என்றான். துரியோதனன் அவன் இடையை வளைத்த சியாமனின் துதிக்கையில் அடித்தான்.

“பெருந்தோள்கள் கொண்டவன் என்பதில் ஐயமில்லை. ஆனால் காட்டில் வாழ்ந்தவன். வித்தை அறியாதவன்” என்று துச்சாதனன் மேலும் சொன்னான். “நீ அவனிடம் சென்று வடக்கு அரங்குக்கு வந்து என்னுடன் கைகோர்க்கமுடியுமா என்று கேள்” என்றான் துரியோதனன். துச்சாதனன் முகம் மலர்ந்து “ஆம் மூத்தவரே, நான் இதை எதிர்பார்த்தேன். தாங்கள் அவனுக்கு அவன் இடமென்ன என்று அறிவித்தாகவேண்டும்” என்றான். “இதோ செல்கிறேன்.”

அவன் நிமிர்ந்த செருக்குடன் கைவீசிச் செல்வதை துரியோதனன் நோக்கி நின்றான். துச்சாதனன் சொற்களைக்கேட்டு பீமன் தலை திருப்பி அவனைப்பார்த்தான். பின்னர் படியிறங்கி முற்றத்தில் கனத்த கால்களை வைத்து நடந்து அவனை நோக்கி வந்தான். பொன்னிற நாகங்கள் எதையும் வளைக்காமல் நிமிர்ந்திருக்கையில் அவை உணரும் வெறுமையில் சலித்து இறுகி நெளிந்து மெல்ல புரண்டன. அவன் தன் உடலில் இருந்து இரு நாகங்கள் திமிறி எழுவதை அறிந்தான். அவை தலைகோத்து இறுக்கி தசைபுடைத்து அதிர்ந்தன.

பீமன் அருகே வந்து தலைவணங்கினான். “மூத்தவரே, தந்தையிடம் கைகோர்த்து அவர் அருளைப்பெற்றேன். இனி தங்களுடன் கைகோர்க்கும் நல்லூழ் எனக்களிக்கப்பட்டுள்ளது என்றறிந்தேன். என்னை வாழ்த்துங்கள்” என்று சொல்லி அவன் தலைவணங்கினான். கை தூக்கி அவனை வாழ்த்திவிட்டு “இன்றுமாலை, வடக்கு அரங்குக்கு வா. அங்கே நாம் சந்திப்போம்” என்றபின் அவன் விழிகளைப் பார்க்காமல் திரும்பி தந்தங்களில் எம்பி ஏறி மத்தகத்தில் அமர்ந்துகொண்டான்.