வண்ணக்கடல் - 66

பகுதி ஒன்பது : பொன்னகரம்

[ 8 ]

அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய உடல்கொண்ட மனிதர் இறங்கி துறைமேடையில் நின்றார். இடையில் கட்டப்பட்ட மான்தோல் ஆடையில் ஒருபிடி தர்ப்பையைச் செருகியிருந்ததைக் கண்டு அவர் பிராமணரோ என எண்ணிய துறையின் வினைவலர் மணிக்குண்டலங்களையும் மார்பில் கிடந்த செம்மணியாரத்தையும் கண்டு ஷத்ரியரோ என்றும் ஐயுற்றனர்.

துறைத்தலைவன் அவரைக் கண்டு பணிந்து “அடியேன் வினைவலர்த்தலைவன் தாம்ரன். தாங்கள் யாரென நான் அறியலாமா?” என்றான். “அஸ்தினபுரியின் படைக்கல ஆசிரியராகிய என் பெயர் துரோணர். நான் பரத்வாஜரின் மைந்தன். அக்னிவேசகுருகுலத்தைச் சேர்ந்தவன்” என்றார் அவர். தாம்ரன் அவரது பாதங்களைப் பணிந்து “ஆசாரியார் எழுந்தருளும் பேறுகொண்டது இந்த பழையநகரம். வருக!” என்று அழைத்துக்கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றான். ஒரு வினைவலனை துரோணர் வரும் செய்தியை அரசருக்கு அறிவிக்கும்படி சொல்லி அனுப்பினான்.

செல்லும் வழியிலேயே அவர் யாரென அனைவரும் அறிந்துகொண்டனர். பெரு அணிநிரை என அவருக்குப்பின் ஹிரண்யபதத்தின் மக்கள் திரண்டு வந்தனர். யாரோ ஒருவர் “துரோணர், நம் இளவரசரின் ஆசிரியர்…” என்றார். “நம் இளவரசரை வாழ்த்த வந்திருக்கிறார்” என்றது இன்னொரு குரல். அந்தத் திரள் அரண்மனை முற்றத்தை அடைந்தபோது ஹிரண்யதனுஸ் கைகளை தலைக்குமேல் கூப்பியபடி இருபக்கமும் சித்ரகரும் பத்மரும் துணைவர வந்து பாதங்களைப் பணிந்து முகமன் சொல்லி வரவேற்றார். “இந்நகரம் இன்று அணிகொண்டது. எங்கள் குலம் பெருமைகொண்டது” என்றார். துரோணரை வரவேற்று தன் அவைக்களத்துக்கு கொண்டு சென்றார்.

கருடகுடியின் அனைத்துக் குலமூத்தார்களும் தங்கள் குடிக்கோல்களுடன் புலித்தோலாடை அணிந்து செங்கழுகின் இறகுசூடிய தலையணியுடன் வந்து துரோணரை வணங்கினர். ஹிரண்யதனுஸ் அவரை புலித்தோல் விரிக்கப்பட்ட உயர்ந்த பீடத்தில் அமரச்செய்து பாதங்களை நறுநீரால் கழுவச்செய்து இன்சுவை நீரும் உணவும் அளித்தார். ஆனால் அரசி சுவர்ணை வந்து மெல்லியகுரலில் “குருநாதருக்கு நல்வரவு” என்று சொல்லிவிட்டு விலகி நின்றுகொண்டாள். துரோணர் வந்தது ஏகலவ்யனை வாழ்த்தத்தான் என்று குலமூத்தார் மெல்லியகுரலில் மாறிமாறி பேசிக்கொண்டனர்.

துரோணர் வந்தது முதல் இறுக்கமான முகத்துடன் மிகச்சில சொற்கள் மட்டுமே பேசி எவர் கண்களையும் சந்திக்காமல் இருந்தார். தாம்பூலம் அணிந்ததும் மெல்லியகுரலில் “நான் என் மாணவன் ஏகலவ்யனைப் பார்க்க விழைகிறேன்” என்றார். “அவன் இங்கில்லை குருநாதரே. மேலைக்காட்டிலேயே வாழ்கிறான். தங்கள் வரவை அறிவித்து அழைத்துவரச்சொல்லி வீரனை அனுப்பியிருக்கிறேன்” என்றார் ஹிரண்யதனுஸ். சற்றுநேரத்தில் ஏகலவ்யன் மூச்சிரைக்க ஓடி அரண்மனைக்கு வந்தான். “என் மைந்தன் அரண்மனைக்கு வந்து நான்கு வருடங்களாகின்றன குருநாதரே. தங்கள் அருளால் அவன் மீண்டு வந்திருக்கிறான்…” என்று விழிநீருடன் சொன்னார் ஹிரண்யதனுஸ்.

அரண்மனை வாயிலில் நின்று மூச்சிரைத்த ஏகலவ்யன் உள்ளே ஓடிவந்து தன் ஐந்து உடல்முகப்பும் மண்ணில் படிய விழுந்து வணங்கினான். துரோணர் “நலம்பெறுக! எழு” என்று சொல்லும் வரை அங்கேயே கிடந்தான். எழுந்தபோது அவன் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து மார்பில் படிந்திருந்த மண்ணைச் சேறாக்கி கோடுபோல வழிந்தது. சடைபிடித்த தாடியில் நீர்த்துளிகள் ஒட்டியிருந்து மின்னின. உதடுகள் துடிக்க நடுங்கும் கைகளைக் குவித்து அவற்றின்மேல் தன் நெற்றிசேர்த்து தோள்களைக் குறுக்கி அமர்ந்திருந்தான். விசும்புவதுபோன்ற ஒலியுடன் அவன் உடல் அவ்வப்போது அதிர்ந்தது.

“நீ என் மாணவன் என்று சொன்னதாக அஸ்தினபுரியின் வீரர்கள் வந்து உரைத்தனர்” என்றார் துரோணர். “உன்னை நான் திருப்பி அனுப்பினேன். நீ என் மாணவனல்ல என்றேன். உன் நிகரற்ற வீரம் என்னிடம் பயின்றதையே காட்டுகிறது என்றனர். எனவேதான் கிளம்பி வந்தேன்.” ஏகலவ்யன் மலர்ந்த முகத்துடன் “ஆம் குருநாதரே, நான் தங்கள் மாணவன். என் கலை தங்களுடையதே” என்றான். “அதைக் காட்டு” என்றார் துரோணர் புருவங்களைச் சுருக்கியபடி.

ஏகலவ்யன் திரும்பிநோக்கினான். கை நீட்டி அங்கிருந்த மூங்கில்தட்டியின் இரு நரம்புகளைக்கிழித்தெடுத்து ஒன்றை வானில் வீசி அதே விரைவில் நிமிர்ந்தே நோக்காமல் மறுநரம்பை வீசினான். முதல் நரம்பை இரண்டாம் நரம்பு கிழித்து இரண்டும் வந்து அவர்கள் முன் விழுந்தன. துரோணர் “அஸ்த்ரபுடம்” என்று சொன்னார். “ஆம், நான் மட்டுமே அதை உனக்குக் கற்பித்திருக்கமுடியும். இன்று என் மாணவன் அர்ஜுனனுக்கு மட்டுமே அதை நான் கற்பித்திருக்கிறேன்” என்றார். “நீ இதை எப்படிக் கற்றாய்?”

ஏகலவ்யன் “அன்று நான் தங்களைச் சந்தித்து மீண்டபோது தங்கள் படிமம் என்னுடன் வந்தது குருநாதரே. அது என்னை வழிநடத்தியது. நான் கோருவதனைத்தையும் எனக்குக் கற்பித்தது. தாங்கள் அறிந்த அனைத்தையும் நான் அவ்வண்ணம் அறிந்துகொண்டேன்” என்றான். “தங்களை பிரியலாகாதென்பதற்காக நான் ஒவ்வொரு கணமும் நதிக்கரையிலேயே வாழ்ந்தேன். தங்கள் விழிதொடும் தொலைவுக்கப்பால் தங்கள் மொழிதொடும் தொலைவுக்கப்பால் நான் ஒரு முறைகூட விலகிச்செல்லவில்லை.”

துரோணர் திகைத்தவர் போல சில கணங்கள் அமர்ந்திருந்தபின் “ஒருமுறை நீ கூழாங்கல் ஒன்றை நோக்கி நாணலை எறிந்தபோது நான் கூழாங்கல்லின் சிறியமுனையையே தாக்கவேண்டும் என்று சொன்னேனா?” என்றார். “அப்போது உன்னருகே வெண்சிறகுகள் கொண்ட இரு காட்டுவாத்துகள் நின்றிருந்தன. அப்பால் மரக்கிளையில் இரு காகங்கள் நோக்கியிருந்தன. தொலைவில் ஒரு சந்தையில் எவரோ புதிய மீன் புதிய மீன் என்று கூவினர்.” துரோணரின் முகமும் உடலும் பதறிக்கொண்டிருந்தன.

“ஆம், ஆம் குருநாதரே. நெடுங்காலம் முன்பு. அந்த நாளை நான் நன்கு நினைவுறுகிறேன். அன்றுதான் நீங்கள் என் தோளைத் தொட்டீர்கள். உங்கள் பேரன்புப் புன்னகையை கண்டு நான் கண்ணீர் விட்டு அழுதேன்” என்றான் ஏகலவ்யன். “அப்படியென்றால் நீங்கள்தான் எனக்குக் கற்பித்தீர்கள். இங்கே வந்தீர்கள்… இங்கே வந்தீர்களல்லவா குருநாதரே?” துரோணர் பெருமூச்சுவிட்டு “ஆம், கனவில்” என்றார். “பலமுறை வந்திருக்கிறேன். பலமுறை உன்னை ஆரத்தழுவியிருக்கிறேன். உச்சி முகர்ந்திருக்கிறேன். உன்னைப்போல் ஒரு மாணவனைப் பெற்ற நல்லூழுக்காக விழிநீர் சிந்தியிருக்கிறேன். நீயே என் முதல் மாணவன் என்றிருக்கிறேன்.”

அவையினர் பேரொலி எழுப்பினர். ஹிரண்யதனுஸ் தன் நெஞ்சில் கைவைத்து விம்மி அழுதார். சுவர்ணை கூரிய விழிகளை துரோணர் மேல் நாட்டி அசையாமல் நின்றிருந்தாள். “தங்கள் வாழ்த்துக்களால் நானும் என் மூதாதையரும் பெருமைபெற்றோம் குருநாதரே. மண்ணுக்குள் என் மூத்தார் மகாபலியும் ஹிரண்யகசிபுவும் இப்போது மெய்சிலிர்த்துக்கொள்கிறார்கள். அதோ, அந்த மரங்களெல்லாம் காற்றில் உலைவது அதனால்தான்” என்றான் ஏகலவ்யன். சுவர்ணை “மைந்தா, உன் குருநாதருக்கு இந்த நாட்டின் அனைத்து நிலத்திலும் மூன்றில் ஒருபங்கை குருகாணிக்கையாகக் கொடு” என்றாள்.

அவளைத் திரும்பி நோக்கிய ஹிரண்யதனுஸ் “குருகாணிக்கையை நாமா சொல்வது? ஆசிரியரே சொல்லட்டும்” என்றார். சுவர்ணை “மைந்தா, காணிக்கையை உன் நாவால் சொல்லிவிடு” என வழக்கத்துக்கு மீறிய உரத்தகுரலில் சொன்னாள். ஹிரண்யதனுஸ் சினந்து திரும்பி நோக்கி “பெண்புத்தியைக் காட்டாதே. சபை நடுவே பெண்கள் பேசுவதற்கு ஏன் ஷத்ரியர் ஒப்புக்கொள்வதில்லை என்று இப்போது தெரிகிறது… குருநாதர் அவரது காணிக்கையை அவர்நாவாலேயே சொல்லட்டும்” என்றார்.

துரோணர் “ஆம், நான் காணிக்கை பெறாமல் உன் கல்வி முழுமைபெறாது. நான் கோரும் காணிக்கையை நீ அளிக்கவேண்டும்” என்றார். “கேளுங்கள் குருநாதரே, நீங்கள் எதைக்கோரினாலும் அக்கணமே அளிப்பேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றான் ஏகலவ்யன். துரோணர் “நான் கோருவது…” என்று தயங்க “என் மைந்தன் தாங்கள் கோருவதை அளிப்பான் குருநாதரே” என்றார் ஹிரண்யதனுஸ். அவையினரும் உரத்த ஒருமைக்குரலில் “ஆம் ஆம் ஆம்” என்றனர்.

துரோணர் “சென்றவாரம் என் முதல்மாணவனாக நான் அறிவித்த அர்ஜுனன் என்முன் வந்தான்” என்றார் துரோணர். “அவனன்றி எனக்கு வேறு முதல்மாணவர் உள்ளனரா என்று கண்ணீருடன் கேட்டான். அவன் மட்டுமே அறிந்த போர்க்கலைகளை எல்லாம் எப்படி நான் பிறிதொருவனுக்குக் கற்பித்தேன் என்று கேட்டான். நான் எவருக்கும் கற்பிக்கவில்லை என்றேன். மலைவேடன் ஒருவனுக்கு நீங்கள் வில்வித்தை கற்பித்தீர்கள், வில்வேதத்தின் உச்சங்களில் ஒன்றாகிய சப்தசரம் என்னும் வித்தையை அவன் அறிந்திருக்கிறான். என் வீரர்களே அதற்குச் சான்று என்று சொல்லி அவன் கூவினான். அவன் உடன்பிறந்தார் இருவரும் அவனருகே நின்றிருந்தனர்.”

“என் முதல் மாணவன் அவனே என்றும், அவனுக்கு மட்டுமே என் அம்புகள் அனைத்தையும் கற்பிப்பேன் என்றும் அஸ்தினபுரியின் உறவினருக்கும் தொண்டருக்கும் மட்டுமே வில்வித்தை கற்பிப்பேன் என்றும் ஆணையிட்டவன் நான். அச்சொற்களைக் கேட்டு திகைத்துச் சோர்ந்து நின்றேன். அவனுடன் வந்த அவனுடைய தமையனாகிய பீமன் நீயும் உன் குலமும் மகதத்தின் சிற்றரசர்கள் என்றும் அஸ்தினபுரிக்கு எதிராக வெல்லமுடியா வில்லொன்றை நான் ஒருக்கிவிட்டதாகவும் சொல்லி என்னைக் கடிந்தான். உண்ணும் நீர்மேல் இட்ட ஆணையை மீறிய நீர் எப்படி எங்கள் குருநாதராக முடியும் என்று கூவினான்.”

“பொறுத்தருள்க குருநாதரே… நான் அறியாமல் செய்தபிழை” என்றான் ஏகலவ்யன். “ஆம், என் கனவில் நானும் அப்பிழையைச் செய்தேன்” என்றார் துரோணர். “அதைச் சீர்செய்யவே நான் வந்தேன். என் முதல்மாணவன் என்றும் அர்ஜுனனே. அஸ்தினபுரிக்கு எதிராகவும் அர்ஜுனன் வில்லுக்கு எதிராகவும் என் கலை பயின்ற ஒரு வில் நிற்பதை நான் ஒப்ப மாட்டேன்” என்றார் துரோணர். “குருநாதரே, அவன் ஒருபோதும் அர்ஜுனன் முன் நிற்கமாட்டான், மகதத்தை ஏற்கமாட்டான். அவ்வுறுதிகளை இப்போதே குருகாணிக்கையாக அளிப்பான்” என்று சுவர்ணை கூவினாள். “மைந்தா, அந்தக் குடுவை நீரை எடுத்து உன் கைகளில் விட்டு அவ்வாக்குறுதியை குருநாதருக்கு அளி!”

“நீ சற்று பேசாமல் இரு” என்று சினத்துடன் ஹிரண்யதனுஸ் கூவினார். “குருநாதரே, தாங்கள் தங்கள் குருகாணிக்கையை கோருங்கள். இதோ என் மைந்தன், என் நிலம், என் குலம்.” துரோணர் நிமிர்ந்து ஏகலவ்யனை உற்று நோக்கி “உன் வலதுகையின் கட்டைவிரலை எனக்கு குருகாணிக்கையாகக் கொடு!” என்றார். ஹிரண்யதனுஸ் தீப்பட்டது போல பாய்ந்தெழுந்து “குருநாதரே!” என்றார். ஆனால் அக்கணத்திலேயே ஏகலவ்யன் “ஆணை குருநாதரே” என்றபடி அருகே நின்ற வீரன் ஒருவனின் வாளை எடுத்து தன் கட்டைவிரலை ஓங்கி வெட்டி தெறித்த துண்டை எடுத்து இருகைகளாலும் துரோணர் முன் நீட்டினான்.

சபைமுற்றத்தில் பசுங்குருதியின் நெடி எழுந்தது. ஊற்றுபோல குருதி தெறித்து முற்றமெங்கும் சொட்டி முத்துக்களாக உருண்டது. துரோணர் திரும்பி நோக்காமல் அந்த விரலை தன் இடக்கை விரலால் தொட்டு விட்டு எழுந்து “என்றும் புகழுடன் இரு. உன் விற்கலை வளரட்டும்” என்றார். ஹிரண்யதனுஸ் உரத்தகுரலில் “நில்லுங்கள் குருநாதரே. நீங்கள் செய்தது எந்த அறத்தின்பாற்படும்? இதென்ன ஷத்ரிய அறமா? பணிந்தவனைத் துறத்தலா ஷத்ரிய அறம்? இல்லை பிராமண அறமா? அளித்த ஞானத்தை திருப்பிக்கோரும் பிராமணன் போல் இழிமகன் எவன்?” என்றார்.

“இது கடன்பட்டோனின் அறம் அரசனே” என்று பற்களை இறுகக் கடித்து கழுத்து நரம்புகள் அதிர துரோணர் சொன்னார். “பிராமணனோ ஷத்ரியனோ அல்லாதவனின் அறம்.” ஹிரண்யதனுஸ் குரல் உடைந்தது. கண்ணீருடன் “ஏன் இதைச்செய்தீர்கள்? சொல்லுங்கள் குருநாதரே, இப்பெரும் பழியை இம்மண்ணில் சொல்லுள்ள அளவும் சுமப்பீர்களே? இப்பெரும் விலையை அளித்து நீங்கள் அடையப்போவதென்ன?” என்றார்.

“நானறிந்த நரக வெம்மையில் என் மைந்தன் வாடலாகாது. அது ஒன்றே என் இலக்கு. அதை நிகழ்த்துவது எதுவோ அதுவே என் அறம்… நான் புறந்தள்ளப்பட்ட பிராமணன். மண்ணாளாத ஷத்ரியன். நாளை என் மைந்தன் அப்படி வாழலாகாது. அவனுக்குக் கீழே அரியணையும் மேலே வெண்குடையும் இருக்கவேண்டும். எந்தச்சபையிலும் அவன் எழுந்து நின்று பேசவேண்டும். இதோ இந்தத் தோள்களில் இத்தனை வருடங்களாக இருந்துகொண்டிருக்கும் ஒடுக்கம் அவன் தோள்களில் வரக்கூடாது. ஆம், அதற்காக நான் எப்பழியையும் சுமப்பேன். எந்நரகிலும் ஏரிவேன்” துரோணர் உதடுகளைச் சுழித்து நகைத்தார். “நான் அறியாத நரகத்தழல் இனியா என்னை நோக்கி வரவிருக்கிறது?”

திரும்பி வாயிலை நோக்கிச் சென்ற துரோணரை சுவர்ணையின் குரல் தடுத்தது. “நில்லுங்கள் உத்தமரே” என்றாள் அவள். அவர் திரும்பி அவளுடைய ஈரம் நிறைந்து ஒளிவிட்ட விழிகளைப் பார்த்தார். அவர் உடல் குளிர்க்காற்று பட்டதுபோல சிலிர்த்தது. “இங்கு நீர் செய்த பழிக்காக என் குலத்து மூதன்னையர் அனைவரின் சொற்களையும் கொண்டு நான் தீச்சொல்லிடுகிறேன். எந்த மைந்தனுக்காக நீர் இதைச் செய்தீரோ அந்த மைந்தனுக்காக புத்திரசோகத்தில் நீர் உயிர்துறப்பீர். எந்த மாணவனுக்காக இப்பழியை ஆற்றினீரோ அந்த மாணவனின் வில்திறத்தாலேயே நீர் இறப்பீர். ஷத்ரிய வீரருக்குரிய இறப்பை அடையும் நல்லூழும் உமக்கிருக்காது.” துரோணர் உடல் நடுங்கத் தொடங்கியது.

சுவர்ணை உரக்கக் கூவினாள் “மீளாப் பெருநரகத்தில் உமது மைந்தனை நீரே அனுப்பியவராவீர். வாழையடி வாழையாக வரும் தலைமுறைகளின் எள்ளும் நீரும் உமக்குக் கிடைக்காது. உமது மைந்தன் சொற்களாலேயே நீர் பழிக்கப்படுவீர்.” துரோணர் கண்களில் நீருடன் கைகூப்பி “தாயே!” என்றார். “ஆம், இச்சொற்கள் என்றுமழியாதிருக்கட்டும். இச்சொற்களை தெய்வங்களும் மீறாதிருக்கட்டும். அதன்பொருட்டு இங்கே இச்சொற்களையே என் இறுதிச்சொற்களாக்குகிறேன். நவகண்டம்! நவகண்டம்! நவகண்டம்!”

அவையினர் குரல்கேட்டு உணர்ந்து எழுவதற்குள் அவள் தன் கையில் தோன்றிய ஒளிரும் குறுங்கத்தியால் தன் கழுத்தை வெட்டிக்கொண்டு மூச்சும் குருதியும் கொப்புளங்களாகத் தெறிக்க கைகால்கள் இழுத்துக்கொள்ள தள்ளாடி முன்னால் சரிந்துவிழுந்தாள். “சுவர்ணை! என் தாயே!” என்று கூவியபடி ஹிரண்யதனுஸ் ஓடிச்சென்று அவளை அள்ளி மார்புடன் சேர்த்துக்கொண்டார். அவர் உடலில் அவளுடைய கொழுங்குருதி வழிந்தது. அவையினர் அவர்களைச்சுற்றி சூழ்ந்துகொள்ள ஏகலவ்யன் அங்கேயே அப்படியே குனிந்து குருதி சொட்டிய கட்டைவிரல் வெட்டுடன் அமர்ந்திருந்தான்.

சித்ரகர் மெல்லிய குரலில் “உத்தமரே, உங்கள் பணி முடிந்தது… நீங்கள் செல்லலாம்” என்றார். தாள்ளாடிய நடையுடன் வெளியே முற்றத்திற்கு இறங்கி கூடிநின்றிருந்த கூட்டம் நடுவே நடந்து சந்தைமுற்றத்தைக் கடந்து ஹிரண்யவாகா நதிக்கரையை அடைந்தார் துரோணர். அவர் வருவதைக் கண்ட படகுக்காரர்கள் ஏறிக்கொண்டார்கள். அவர் படகை நெருங்கி நீரில் மிதந்த அதன் கயிற்றைப்பற்றியபடி நடந்தபோது நீரைக் குனிந்து நோக்கினார். அதில் எழுந்த தன் படிமத்தைக் கண்டு பேரச்சத்துடன் குழறிக்கூவியபடி கைகள் இழுத்துக்கொள்ள பின்னால் ஓடி சேற்றில் மல்லாந்து விழுந்தார். அவர் உடலில் வலிப்பு கூடியது.

அவரைத் தூக்கி படகில் படுக்கச்செய்தனர். அவர் வாயில் வழிந்த நுரையுடன் தலையை ஆட்டியபடி பலகையில் கிடந்தார். கண்களில் இருந்து நீர் வழிந்து காதுகளை நிறைத்துக்கொண்டே இருந்தது. பற்கள் கடித்த உதடுகள் குருதி வழிய கிழிந்திருந்தன. ரதம் ஏறிச்சென்ற நாகம் போல அவர் நெளிந்துகொண்டே இருந்தார். பாய்விரித்து நதியில் எழுந்தது படகு.

அன்று மாலையே பதினெட்டு குலமூதாதையரும் அன்னையரும் கூடி முழவுகளும் கொம்புகளும் குழல்களும் இசைக்க வாழ்த்தொலிகளுடன் சுவர்ணையை ஹிரண்யவாகா நதிக்கரைக்குக் கொண்டுசென்று புதைத்தனர். அவளுடைய முகம் மண்ணில் புதைந்து மறையக்கண்டதும் “மூதன்னை வாழ்க! பேரன்னை மண்புகுக!” என்று அனைவரும் கண்ணீருடன் வாழ்த்தொலி எழுப்பிக் கூவினர். அன்னைக்கு முதற்பிடி மண்ணிட்ட ஏகலவ்யன் தலைகுனிந்து அசைவிழந்து நின்றிருந்தான்.

மூன்றாம் நாள் அன்னைக்கு அவளைப் புதைத்த மேட்டின்மேல் தன் கழுத்தை தான் வெட்டி நிற்கும் நவகண்டச்சிலை ஒன்றை அமைத்து பூசனைசெய்தனர் குலப்பூசகர். எரிபந்தம் நாட்டி கள்ளும் ஊனும் படைத்து செம்மலர் மாலை சூட்டி குறுமுழவை மீட்டி அவள் புகழ் பாடி அவளே என்றும் குலத்துக்குக் காப்பாகி நிற்கவேண்டும் என வேண்டினர். மூதன்னை மாயையுடன் அவளும் அருகமர்ந்து அருள்பொழியவேண்டுமென்று கோரினர்.

அவளுடைய பன்னிரண்டாம் நாள் பட்டினி நோன்பு வரை ஏகலவ்யன் ஒருசொல் கூட பேசாமல் மாளிகையின் திண்ணையில் தனித்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனை அனைவரும் தவிர்த்தே சென்றனர். பட்டினி நோன்பு முடிந்து அவைமுற்றத்தில் முழுக்குலமும் கூடி புளித்த கஞ்சியை பகிர்ந்து அருந்தியபோது இடக்காலும் கையும் செயலிழந்து படுக்கையில் வீழ்ந்து கிடந்த ஹிரண்யதனுஸை இருவர் தூக்கி அமரச்செய்தனர். கண்ணீர் வழிந்து மார்பில் சொட்ட அவர் கஞ்சியைக் குடித்தார்.

அப்போது குளித்து ஈரம் சொட்டும் குழலுடன் கனத்த மரவுரி உடையுடன் ஏகலவ்யன் உள்ளே வந்தான். அவன் கையில் பெரிய மூன்றுநாண்கொண்ட வில் இருந்தது. “இன்றுமுதல் இக்குலத்தின் அரசன் நான். அசுரகுலமாகிய நாம் மலரோ இலையோ கிளையோ தடியோ அல்ல, நாம் வேர். பறவையோ மிருகமோ மீனோ பாம்போ அல்ல. என்றுமழியாத புழுக்கள். இதோ என் ஆணை, இன்றுமுதல் நமது வில்வேதம் நான்குவிரல் கொண்டது. நம் குலத்துக்கு நானே குருநாதனுமாவேன்” என்றான்.

207

ஓவியம்: ஷண்முகவேல்

அக்கணமே அங்கிருந்த அத்தனை இளையோரும் தங்கள் கத்திகளை எடுத்து வலக்கையின் கட்டைவிரலை வெட்டி முற்றத்திலிட்டனர். பொருளிழந்த ஒற்றைவிழியுடன் கட்டைவிரல்கள் குருதி வழிய மண்ணில் விழுந்துகிடந்தன. குருதி பொங்கிய கைகளைத் தூக்கிய கருடகுடியினர் “மூதாதையர் வாழ்க! அழியாப்புகழ் அசுரகுலம் வாழ்க!” என்று கூவினர்.