வண்ணக்கடல் - 57

பகுதி எட்டு : கதிரெழுநகர்

[ 9 ]

அதிகாலையில் கங்கைக்குச் சென்றுகொண்டிருந்த துரோணரின் இருபக்கமும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் நடந்துகொண்டிருக்க அவர்களுக்கு சற்றுப்பின்னால் கர்ணன் நடந்துசென்றான். “ஸ்மிருதிகள் என்பவை நினைத்திருக்கப்படவேண்டியவை. ஏனென்றால் நினைத்திருக்கப்பட்டால் மட்டுமே அவை நீடிக்கின்றன. மண்ணில் எவருமே நினைத்திருக்காவிட்டாலும் நீடிக்குமென்றால் மட்டுமே அவை சுருதிகள் எனப்படும்” துரோணர் சொன்னார். “பதினெண்மர் மானுடருக்கு ஸ்மிருதிகளை அருளியிருக்கிறார்கள். முதல் நெறிநூல் முதல்மூர்த்தியான விஷ்ணுவால் ஆக்கப்பட்டது என்பார்கள். அத்ரி, ஹரிதர், யாக்ஞவால்கியர், அங்கிரஸ், யமன், ஆபஸ்தம்பர், சம்விரதர், காத்யாயனர், பிரஹஸ்பதி, பராசரர், வியாசர், சங்கர், லிகிதர், தக்ஷர், கௌதமர், சதபதர், வசிஷ்டர் எனும் வரிசையில் இறுதி ஸ்மிருதி மனுவால் ஆக்கப்பட்டது.”

“ஸ்மிருதிகளனைத்தும் சொல்வது ஒன்றே. அதை அறம் எனலாம். சொல்லும் கோணங்களும் செல்லும் வழிகளுமே மாறுபடுகின்றன என்பார்கள். ஒவ்வொரு யுகத்துக்கும் உரிய ஸ்மிருதிகள் வேறு. மாறுவதனாலேயே ஸ்மிருதிகள் வாழ்கின்றன, மாறாத தன்மையால் சுருதிகள் வாழ்கின்றன. ஸ்மிருதிகளை சுருதிகளுக்கு நிகராக்குபவன் மாறா இருளை அடைகிறான்” துரோணர் சொன்னார். “ஸ்மிருதிகள் ஆடலுக்காக வகுக்கப்பட்ட களங்கள். அவை ஆடலை நெறிப்படுத்துகின்றன. ஆடலுக்குப்பின் அவை அழிக்கப்பட்டாகவேண்டும்.” கங்கையை அடைந்ததும் அவர் நின்று விட அர்ஜுனன் அவர் கையில் இருந்த மரவுரியாடையை வாங்கிக்கொண்டான். அவர் இருகைகளையும் கூப்பி வணங்கினார்.

அவர் நீரில் இறங்கியதும் அர்ஜுனன் தானும் நீரில் இறங்கினான். அஸ்வத்தாமன் இறங்கி தந்தையின் அருகே நின்றுகொண்டான். கர்ணன் படிகளில் கால்வைக்காமல் பக்கவாட்டில் நாணல்புதர்கள் வழியாக இறங்கி நீர் விளிம்பை அடைந்து நீரில் கால்படாமல் கால்மடித்து அமர்ந்துகொண்டான். மூழ்கி எழுந்து நீர் சொட்ட நின்று கைகளில் நீர் இறைத்து நுண்சொல் உரைத்து மூதாதையரையும் தெய்வங்களையும் வணங்கியபின் மீண்டும் மூழ்கி எழுந்த துரோணர் முந்தைய சொற்களின் தொடர்ச்சியாக பேசத்தொடங்கினார்.

“உயிர்க்குலங்களுக்குள் உள்ளுறைந்திருக்கும் பிரம்மத்தின் ஆணைகளை அறிந்து மானுடவாழ்க்கையை ஆளும் நெறிகளை வகுத்தளித்தனர் ஸ்மிருதிகளை இயற்றிய முன்னோர். பறவைகளிலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மிருகங்களிலிருந்தும் புழுக்களிலிருந்தும் நெறிகள் கண்டடையப்படுகின்றன. ஒவ்வொரு காலத்திலும் ஸ்மிருதிகள் மாறிக்கொண்டிருப்பது அதனால்தான். முன்பு கிருதயுதகத்தில் மானுடருக்கு அளிக்கப்பட்டவை பறவைகளின் ஸ்மிருதிகள். அவர்கள் உணவுண்ணவும் கூடுகட்டவும் இரவணையவும் மட்டுமே மண்ணுக்கு வந்தனர். அவர்கள் வாழ்ந்த வானம் இடங்களென்றும் திசைகளென்றும் பிரிக்கப்படாததாக இருந்தது. மானுடர் அவர்களின் சிறகுகளினாலேயே அளவிடப்பட்டனர். அவர்கள் விண்ணிலெழும் உயரத்தினாலேயே மதிக்கப்பட்டனர்.”

“திரேதாயுகத்தில் பூச்சிகளிலிருந்து நெறிகள் எடுக்கப்பட்டன. சிறகுகள் குறுகினாலும் அவர்களும் வானில்தான் இருந்தனர். இசையே அவர்களின் மொழியாக இருந்தது. சேற்றிலும் அழுகலிலும் பிறந்து புழுக்களாக நெளிந்தாலும் தவம் செய்து அவர்கள் ஒளிரும் சிறகுகளைப் பெற்றனர். ஆயிரம் கண்களுடன் விண்ணிலெழுந்து முடிவிலியில் திளைத்தனர். உறவின் பெருவல்லமை அவர்களைக் காத்தது. அன்று மானுடர் ஒற்றைப்பெரும் பிரக்ஞையாக இப்பூமியை மும்முறை சூழ்ந்து நிறைந்திருந்தனர்.”

துரோணர் தொடர்ந்தார் “இந்த துவாபரயுகத்தில் மிருகங்களிடமிருந்து நெறிகள் கண்டடையப்பட்டுள்ளன. ஒவ்வொரு மிருகமும் மண்ணை தன்னுடையதென எல்லைவகுத்துக்கொண்டிருக்கிறது. நிறைவில்லாது சுற்றிவந்து தன் எல்லைகளைக் காக்கிறது, பிற எல்லைகளுக்குள் நுழைவதைக் கனவுகாண்கிறது. மிருகங்களின் கண்கள் பிறமிருகங்களை கூர்ந்தறியும் திறன்கொண்டவை. அவற்றின் நகங்கள் பிற மிருகங்களுடன் சமராடுவதற்குரியவை. அவற்றின் கால்கள் வெல்லவும் தப்பவும் வடிவம் கொண்டவை. மிருகம் மிருகத்தின் மீதான அச்சத்தாலேயே தன் அகத்தையும் புறத்தையும் அடைந்திருக்கிறது. ஆனால் தன் தனிமையில் அமர்ந்து அது வானை நோக்கி ஏங்குகிறது. சிறகுகளை கனவுகாண்கிறது.”

“கலியுகத்தின் நெறிகள் புழுக்களிலிருந்து கண்டடையப்பட்டுள்ளன. எதில் பிறந்தார்களோ அதையே உண்டு அதிலேயே மடிவார்கள் மனிதர்கள். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஒற்றைப்பேருடலாக நெளிந்தாலும் எவரும் பிறரை அறியமாட்டார்கள். சிறியதை பெரியது உண்ணும். பசியெடுத்தால் மைந்தரை பெற்றோரும் பெற்றோரை மைந்தரும் உண்பார்கள். விழியிருந்தாலும் அவர்களால் வானைப்பார்க்கவே முடியாது” துரோணர் சொன்னார். நீராடி முடித்து மரவுரியால் தலைதுவட்டிவிட்டு அர்ஜுனன் கையில் கொடுத்துவிட்டு நடந்தார். மரவுரியை விரைந்து நீரில் தோய்த்துப் பிழிந்துகொண்டு துரோணர் பின்னால் ஓடினான் அர்ஜுனன். புதருக்குள் இருந்து எழுந்து அவரைத் தொடர்ந்து சென்றான் கர்ணன்.

அவனை அங்கு வரச்சொன்னவள் ராதை. கிருபரின் குருகுலத்தில் பீமனின் ரதம் சகட ஒலியுடன் தெருவிற்குச் சென்றபின்னர்தான் கர்ணன் எழுந்தான். இரும்புக்குண்டுகளை உடலில் கட்டித்தொங்கவிடப்பட்டதுபோல கால்களைத் தூக்கிவைத்து தளர்ந்து நடந்தான். எவர் விழிகளையும் பார்க்காமல் வெளியே சென்று ரதசாலையை அடைந்து கால்களாலேயே செலுத்தப்பட்டு நடந்தான். கிருபரோ பிறரோ அவனை நோக்கி வரவில்லை. மக்கள் நெரிந்து கொண்டிருந்த அஸ்தினபுரியின் சாலைகள் வழியாக நடந்துவந்து வடக்குவாயிலை அடைந்திருப்பதைக் கண்டான். நெடுமூச்சுடன் வெளியே சென்று காந்தாரத்தினரின் குடில்நிரைகள் வழியாகச் சென்று புராணகங்கைக்குள் நுழைந்தான்.

நான்குநாள் அவன் புராணகங்கையின் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். எங்கிருக்கிறோமென உணராதவனாக, ஓடைகளிலும் சுனைகளிலும் முகம் தெரியும்போதெல்லாம் அமிலத்தைக் கழுவுபவன் போல நீரை அள்ளி அள்ளிவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு சென்றபடியே இருந்தான். நான்காம்நாள் இளங்கதிர்வேளையில் காட்டுச்சுனை ஒன்றில் குனிந்து முகம் கழுவிக்கொண்டபோது அவன் தன் நீர்ப்படிமத்தைக் கண்டான். விண்மீன்கள் எனச்சுடர்ந்த தன் மணிக்குண்டலங்களையும் பொன்னொளிர்ந்த கவசத்தையும் திகைப்புடன் நோக்கி பின்னகர்ந்தான். பின் மீண்டும் வந்து அதை நோக்கி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தான்.

அன்று இரவு அவன் தன் இல்லத்துக்குத் திரும்பிவந்த போது அகல்விளக்கின் சுடர்முத்துடன் திண்ணையில் அமர்ந்திருந்த ராதையைக் கண்டான். அவன் ஒன்றும்பேசாமல் அவளருகே அமர்ந்துகொண்டான். அவள் எழுந்து சென்று அவனுக்கு அப்பங்களையும் கீரைப்பருப்புக் கூட்டையும் எடுத்துவந்தாள். அவன் ஒருசொல்கூட பேசாமல் உண்டுவிட்டு திண்ணையிலேயே படுத்துக்கொண்டான். ராதை வந்து அவன் தலைமாட்டில் அமர்ந்தாள். அவன் கண்களை மூடி அவளை உணர்ந்துகொண்டிருந்தான்.

“கருமணம் மாறாத உன்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்தேன்” என்று ராதை இருளில் மெல்ல பேசத்தொடங்கினாள். “காலையிளவெயில் உன்மேல் பட்டுச் சுடர்ந்தபோது உன் மீது பரவிய நீர்த்துளிகள் காதுகளில் ஒளிக்குண்டலங்கள் போல் தோன்றின. மார்பில் சுடரெழும் கவசங்களாக இருந்தன. நீ அவற்றுடன் பிறந்தவன்.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். “உன்னை நீராட்டும்போதெல்லாம் அதைக் கண்டிருக்கிறேன். நீ சூதனல்ல, விண்ணுலாவும் சூரியனின் மைந்தன். ஆகவே ஷத்ரியன்.”

கர்ணன் சொல்லமுற்படுவதற்குள் ராதை சொன்னாள் “நீ துரோணரிடம் சென்று சேர்ந்துகொள். உனக்கு வில்வேதம் கற்பிக்கும் நல்லூழ் அவருக்கிருக்குமென்றால் அவர் உனக்கு ஆசிரியராவார். ஆனால் ஒன்றை உணர்ந்துகொள். உனக்குரிய ஆசிரியன் உன்னைக் கண்டடைவான். வில் உன் கையில் முழுமை பெறும். அதில் எனக்கு ஐயமே இல்லை.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். “நாளையே கிளம்பு” என்றாள் ராதை.

அன்று இரவு அவன் துரோணரின் குருகுலத்தில் அவரது குடில்வாயிலில் வந்து அமர்ந்துகொண்டான். அவனுடைய சித்தத்தின் அழைப்பை தன் கனவுக்குள் கண்டு அவர் எழுந்துகொண்டார். குடிலின் படலைத் திறந்து வெளியே வந்து வாயிலில் நின்று கண்கள் இருளில் மின்ன அவனை நோக்கினார். கர்ணன் தன் இரு கைகளையும் விரித்து “கல்வியை ஈயுங்கள் ஆசிரியரே!” என மெல்லிய குரலில் சொன்னான். துரோணர் அசைவில்லாமல் அங்கேயே நின்றிருந்தார். அவரது குழல்கற்றை காற்றில் பறந்துகொண்டிருந்தது. அவன் தன் விரித்த கரங்களுடன் அசையா நிழலென அமர்ந்திருந்தான்.

அவர் திரும்பி உள்ளே செல்லப்போனார். பின்னர் திரும்பி அருகே வந்து “நீ யார்?” என்றார். “நான் அங்கநாட்டு குதிரைச்சூதர் அதிரதனின் மைந்தன், என் பெயர் வசுஷேணன்” என்றான் கர்ணன். “இங்கே நான் ஷத்ரியர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு துரோணர் திரும்பினார். கர்ணன் “நான் சூதனின் உடலுக்குள் வாழும் ஷத்ரியன் குருநாதரே” என்றான். துரோணரின் உடலில் காற்றுச்சுடரென ஓர் அசைவு சென்றுமறைந்தது. சினத்துடன் திரும்பி “மூடா, உனக்கெதற்கு வில்வேதம்? அதைக்கொண்டு நீ செய்யப்போவதென்ன?” என்றார்.

“என் ஆன்மா எரிந்துகொண்டிருக்கிறது குருநாதரே. அவமதிப்பை அடைந்த ஆண்மை கொண்டவன் அறியும் நரகத்துக்கு நிகரென எதையும் தெய்வங்கள் படைக்கவில்லை.” துரோணர் உரக்க “ஆம், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய நரகத்தைப் படைத்தே மண்ணுக்கனுப்புகின்றன தெய்வங்கள். அந்நரகத்தில் இருந்து மானுடன் எதனாலும் தப்ப முடியாது. உன் சிதையில் நீ எரிந்தடங்கியாகவேண்டும் என்பதே உன் விதி… செல்” என்றார். அவரது உடல் பதறிக்கொண்டிருந்தது. “அவமதிக்கப்பட்டவனுக்கு இன்பம் இல்லை, வெற்றி இல்லை, ஞானமும் வீடுபேறும் இல்லை. மூடா, அவன் அடையும் அனைத்தும் அந்த அடியற்ற இருண்ட பிலத்தில் விழுந்து மறைந்துகொண்டே இருக்கும்… போ, இனி என் கண்முன் வராதே” என்றபின் குடிலுக்குள் திரும்பிச்செல்லமுயன்றார்.

“குருநாதரே, இனி என்னால் ஒருகணமேனும் துயிலமுடியாது. என் முகத்தில் வழிந்த அவமதிப்பின் எச்சிலை பல்லாயிரம் முறை கழுவிவிட்டேன். அது அங்கே கற்செதுக்கு போல பதிந்துவிட்டது. ஆறாப்புண் என என் அகம் சீழ்கட்டி அழுகிக்கொண்டிருக்கிறது. இவ்வுடலையே ஒரு பெரும் மலக்குவியலாக உணர்கிறேன். ஒருவன் தன் உடலையே அருவருப்பானென்றால் அவனால் எப்படி உணவுண்ண முடியும்? எப்படி மைந்தர்களையும் மலர்களையும் தீண்டமுடியும்? எப்படி நான் என தன் நெஞ்சைத் தொட்டு எண்ண முடியும்? குருநாதரே, உடலெனில் உடல், உயிரெனில் உயிர், ஏழ்பிறவிக்கடனெனில் அது, தங்கள் பாதங்களில் வைக்கிறேன். என்னை ஏற்றருளுங்கள். என்னை விடுவியுங்கள்.”

துரோணர் சிலகணங்கள் அசைவின்றி நின்றுவிட்டு பெருமூச்சுடன் திரும்பியபோது அவரது குரல் மாறிவிட்டிருந்தது. ஏளனத்தில் வளைந்த உதடுகளுடன் “மூடா, அந்த அவமதிப்பில் இருந்து நீ வில்வேதத்தால் மீளமுடியுமா என்ன? நான்குவேதங்களையும் கற்றாலும் இவ்வுலகையே வென்றாலும் அந்த அவமதிப்பின் நாற்றம் உன் ஆன்மாவிலிருந்து நீங்குமா?” என்றார். கர்ணன் கண்ணீர் வழியும் விழிகளுடன் தலைதூக்கி நோக்கினான். துரோணர் “நீங்காது. நான் சொல்கிறேன் கேள், ஒருபோதும் நீங்காது. நீ செய்யக்கூடுவது ஒன்றே. சென்று இக்காட்டில் ஒரு சிதை கூட்டு. எரிதழலில் ஏறு. சாம்பலும் வெள்ளெலும்புகளுமாக எஞ்சு. உன் ஆன்மா விண்ணிலெழும்போது மட்டுமே நீ விடுதலை அடைவாய்” என்றார்.

அடைத்த குரலைச் செருமியபடி துரோணர் சொன்னார் “ஏனென்றால் இவையனைத்தும் இம்மண்ணில் எழுந்தவை. மண்ணின் அனைத்து மலினங்களையும் எரித்து நீறாக்க நெருப்பால் மட்டுமே முடியும்.” கர்ணன் “ஆம்” என்று எழுந்தான். “உன் உடல் எரிந்து நிணமுருகும்போது உன்மேல் இந்த விதியைச் சுமத்தியவர் எவரோ அவர் மீது ஆயிரம்பிறவியின் தீச்சொல் சென்று விழும்… அவர்கள் விதைத்தவற்றை அவர்கள் நூறுமேனி அறுவடைசெய்வார்கள். செல்க!” என்றார் துரோணர். கர்ணன் திகைத்து திரும்பி “குருநாதரே, அது நிகழலாகாது” என்றான். “ஏன்?” என்றார் துரோணர். கர்ணன் தலைகுனிந்து “எவர் மேலும் தீச்சொல்லாக நான் மாற விரும்பவில்லை” என்றான்.

துரோணர் கையைத் தூக்கி ஏதோ சொல்லவந்தபின் தாழ்த்திக்கொண்டார். கர்ணன் திரும்பிச்செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “வசுஷேணா, நில்!” என்றார். “உன்னை நான் மாணவனாக ஏற்கிறேன்” என்றார். கர்ணன் திரும்பி மலர்ந்த முகத்துடன் நோக்கினான். “நீ இங்கே இருக்கலாம். சூதர்களுக்கு நான் நேரடியாக கற்பிக்க முடியாது. என் சொற்களை நீ கேட்டறிவதற்குத் தடையில்லை” என்றார். கர்ணன் அவர் அருகே வந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

மறுநாள் துரோணர் தன் மாணவர்களைக் கூட்டி தென்நெருப்பை வளர்த்து அதைச்சுற்றி அவர்களை அமரச்செய்தார். எரியைச் சான்றாக்கி கர்ணன் “எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்கும் கோலுக்கும் என் வில் குடிமை செய்யும். ஆணை! ஆணை! ஆணை!” என்று சூளுரைத்தான். “இனி இக்குருகுலத்தின் சூதனாக இவன் இருப்பான். குருகுலத்தின் அனைத்து ஏவல்பணிகளையும் செய்ய இவன் கடமைப்பட்டவன். நான் சொல்லும் அனைத்துச் சொற்களையும் செவிமடுக்கும் உரிமையை இவனுக்களிக்கிறேன்” என்றார் துரோணர்.

குடிலை அடைந்ததும் துரோணர் ஈர ஆடைகளைக் களைந்து உலர்ந்தவற்றை அணிந்தபடியே பேசிக்கொண்டிருந்தார். “யோகநூல் அஷ்டமனோகுணங்களால் ஆனதே இப்புடவி என்கின்றது. பரத்வம், அபரத்வம், சங்கியா, பரிமாணம், பிரதக்த்வம், சம்யோகம், விபாகம், வேகம் என்பவை அவை. புறஇருப்புதான் நாம் பொருட்களில் அறியும் முதல் இயல்பு. அகஇருப்பு என்பது அதன் நீட்சி. அவையே பரம், அபரம் என்றாகின்றன. பொருள்நிரையை நம் சித்தம் தொடும்போது எண்ணிக்கை உருவாகிறது. அவற்றை நம் விழியும் கையும் தொட்டறிவதே பரிணாமம். அவை முடிவிலியில் இருந்துகொண்டிருப்பதே பிரதக்த்வம். அவை இணைவது சம்யோகம், பிரிவது விபாகம், அவைகொள்ளும் அசைவே வேகம்.”

“புறப்பொருளாக விரிந்துள்ள இப்புடவி இந்த எட்டு இயல்புகளால் ஆனது. இவ்வெட்டையும் மானுடனின் அகஇயல்புகள் என்று யோகம் வகுக்கிறது. ஆனால் வில்வேதம் ஒன்பது மனோகுணங்களை வகுக்கிறது” என்றார் துரோணர். “அந்த ஒன்பதாவது மனோகுணம் என்ன என்று சொல்லமுடியுமா?” உடையை அணிந்தபடி அவர் வந்து திண்ணையில் அஸ்வத்தாமன் போட்ட மரவுரியில் அமர்ந்துகொண்டார். அர்ஜுனன் அவரது பாதங்களை மரவுரியால் துடைத்தபடி வெறுமனே நோக்கினான். அஸ்வத்தாமன் ஓரக்கண்ணால் அர்ஜுனனை நோக்கியபின் “தெரியவில்லை தந்தையே” என்றான். கர்ணனை நோக்காமல் “பிறரும் சொல்லலாம்” என்றார் துரோணர்.

முற்றத்தில் அமர்ந்திருந்த கர்ணன் மெல்லியகுரலில் “அஃபாவம்” என்றான். துரோணர் புன்னகையுடன் தாடியை நீவியபடி “ம்ம்?” என்றார். “இன்மையும் ஒரு மனோகுணம். அதுவும் பருப்பொருளின் இயல்பாக வெளியே திகழும்.” துரோணர் தலையை அசைத்து “எப்படி அதை அறிந்தாய்?” என்றார். கர்ணன் “கங்கைக்கரையின் நாணல்காட்டில் பன்றி கிடந்த இடம் நாணலால் ஆன குகைபோல ஆகி தொலைவில் நிற்கையில் இருண்ட பன்றியாகவே தெரிவதைக் கண்டிருக்கிறேன்” என்றான். துரோணர் அஸ்வத்தாமனிடம் “அறியப்படும் அனைத்தும் இங்கே உள்ளன. இயற்கையைவிட பெரிய குரு எவருமில்லை. விழிகளையும் செவிகளையும் திறந்துகொள்ளுங்கள்” என்றபின் கண்களை மூடிக்கொண்டார்.

அர்ஜுனன் ஓசையின்றி எழுந்து சமையல் குடில் நோக்கிச் சென்று அடுப்பில் துரோணருக்கான உணவை ஒருக்கத்தொடங்கினான். கர்ணன் எழுந்து சென்று விறகுச்சுள்ளிகளைக் கொண்டுவந்து சமையல்குடிலுக்கு அருகே குவித்தான். அர்ஜுனன் கர்ணனின் விழிகளைச் சந்திப்பதை தவிர்த்து விரைவாக பணியாற்றிக்கொண்டிருக்க அவன் சித்தம் தன் ஒவ்வொரு அசைவையும் தொடர்வதை கர்ணன் உணர்ந்துகொண்டிருந்தான். வெளியே வந்த அர்ஜுனன் “பாளை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல கர்ணன் திரும்பி குறுங்காட்டுக்குள் ஓடி அங்குநின்ற பாக்குமரத்தில் பழுத்துநின்ற பாளையை கயிற்றை வீசிப்பிடித்து வெட்டி எடுத்துக்கொண்டு ஓடிவந்தான். அதைக் கழுவி தொன்னையாக்கி அதில் கொதிக்கும் வஜ்ரதானிய கஞ்சியை அள்ளி வைத்தான் அர்ஜுனன்.

அஸ்வத்தாமன் தந்தையின் மிதியடிகளைத் துடைத்து எடுத்து வைத்தபின் அவரது வில்லையும் அம்புகளையும் எடுத்துவைத்தான். துரோணர் விழிதிறந்ததும் அர்ஜுனன் பணிந்து நிற்க அவர் கையசைத்தார். திரும்பி கர்ணனை நோக்கியபின் அர்ஜுனனிடம் “சூதமைந்தன் உணவருந்தட்டும்” என்றார். அர்ஜுனன் விழிகள் கர்ணனை வந்து தொட்டுச்சென்றன. அவன் குடிலுக்குள் சென்று பாளைத்தொன்னையில் கஞ்சியை எடுத்து வெளியே வைத்தான். கர்ணன் விரைந்து அதைக்குடித்து ஓடைநீரில் கைகளையும் வாயையும் கழுவி விட்டு வந்தபோது துரோணர் கஞ்சியைக் குடித்துவிட்டு குடிலுக்கு முன் கயிற்றுக்கட்டிலில் கால்களை நீட்டி படுத்திருந்தார். உணவருந்திவிட்டு வந்த அஸ்வத்தாமன் அவர் அருகே அமர்ந்து சுவடி ஒன்றை வாசிக்க அர்ஜுனன் அவருக்கு விசிறியால் வீசிக்கொண்டிருந்தான்.

கர்ணன் அப்பால் மகிழமரத்தடியில் காத்து நின்றான். துரோணர் கண்விழித்து அவனை நோக்கி “என் கால்நகங்கள் வளர்ந்துவிட்டன” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். கர்ணன் முகம் மலர்ந்து அருகே வந்து மண்ணில் மண்டியிட்டு கூரிய அம்பொன்றை எடுத்து அவரது கால்களின் நகங்களை வெட்டத்தொடங்கினான். நீரோடையில் கல்விழுந்ததுபோல அஸ்வத்தாமனின் வாசிப்பு ஒருகணம் வளைந்து செல்வதை கர்ணன் உணர்ந்தான். ஒருகால் நகத்தைவெட்டியபின் அம்புநுனியால் கூர்மையாக்கி வாயால் ஊதி தூள்களைக் களைந்து1விட்டு அடுத்த காலை குழந்தையை எடுப்பதுபோல எடுத்து மார்பருகே வைத்துக்கொண்டு அவன் நிமிர்ந்தபோது அர்ஜுனனின் சினம்நிறைந்த விழிகள் அவன் விழிகளை சந்தித்துச் சென்றன. அவன் திகைப்புடன் அஸ்வத்தாமனை நோக்க அவன் விழிகளிலும் அம்புநுனிகளைக் கண்டான்.

கர்ணன் வந்த முதல்நாள் துரோணர் மதிய உணவுக்குப்பின் கண்ணயர்ந்ததும் கர்ணன் எழுந்து காட்டுக்குள் சென்றபோது அர்ஜுனன் அவன் பின்னால் வந்தான். கைகளைத் தூக்கியபடி “நில்!” என நெருங்கி வந்து “யார் நீ?” என்றான். “நான்…” என கர்ணன் சொல்லத்தொடங்க “நீ எளிய சூதன் அல்ல. உன்னை நான் முதலில் கண்ட கணத்தை நினைவுகூர்கிறேன். உன் தலைக்குப்பின் சூரியவட்டம் மணிமுடிபோல அமர்ந்திருந்தது. அவ்வொளியில் நீ காதுகளில் மணிக்குண்டலங்களும் மார்பில் பொற்கவசமும் அணிந்தவன் போலிருந்தாய்” என்றான் அர்ஜுனன். கர்ணன் பணிந்த குரலில் “நான் சூதன். என் அகம் வில்வேதத்தை நாடுவதனால் இங்கு வந்தேன்” என்றான்.

“இல்லை, நீ சூதனல்ல. உன்னைக் காணும் எவரும் அதைச் சொல்லமுடியும். சொல், உன் நோக்கம் என்ன?” என்றான் அர்ஜுனன். கர்ணன் “மன்னிக்கவேண்டும் இளவரசே” என்று சொல்லத்தொடங்க அர்ஜுனன் “நீ ஏதோ இளவரசன் அல்லது கந்தர்வன். உன் நோக்கம் என்ன? ஏன் சூதனென்று சொல்கிறாய்? சொல்! இல்லையேல்…” என்று சினத்துடன் முன்னால் வந்தான். கர்ணன் அவன் விழிகளை நோக்கி “பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரனாவதற்காக…” என்றான். அர்ஜுனன் திகைத்து விரிந்த வாயுடன் நிற்க கர்ணன் கசப்பு நிறைந்த புன்னகையுடன் “ஆம், அதற்காக மட்டும்தான்…” என்றபடி திரும்பி நடந்துசென்றான்.

அதன்பின் ஒருமுறைகூட அர்ஜுனன் அவன் கண்களை நோக்கிப் பேசியதில்லை. ஆனால் ஒவ்வொரு கணமும் கண்ணாலும் கருத்தாலும் அவனையே நோக்கிக்கொண்டிருந்தான். துயிலிலும் அர்ஜுனனின் பார்வையை கர்ணன் தன்மேல் உணர்ந்தான். அப்பார்வையை நோக்கியபடி மெல்ல நடந்து அவனருகே சென்றபோது அவனுடைய கனவுக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். அர்ஜுனனின் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் ஒவ்வொரு அசைவும் அவன் முகத்தின் அத்தனை உணர்வசைவுகளும் தன்னுள் பல்லாயிரம்கோடி சித்திரங்களாக பதிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். அர்ஜுனன் எண்ணும்போதே அவன் வில்லை எடுப்பதை அவன் அறிந்தான். அவன் வில்குலைக்கும்போதே அவன் தொடவிருக்கும் அம்பை அவன் சித்தம் தொட்டது. அம்புக்கு முன் அவ்விலக்கை அவன் விழிகள் தொட்டன. தானறியாத எதுவும் அவனுள் நிகழமுடியாதென்று உணர்ந்தபோதே ஒன்றையும் அறிந்துகொண்டான், அவனறியாத ஏதும் தனக்குள்ளும் இல்லை.

ஆடிப்பாவைகள் போல ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டிருந்தனர் அவர்கள். ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர் அகத்தே நடித்தனர். ஒருவர் விழிகள் இன்னொருவர் விழிகளைத் தொட்டதுமே அவை ஊடுருவிச்செல்லும் தடையின்மை இருவரையும் அச்சுறுத்த பதறி விலகிக்கொண்டனர். துரோணர் அர்ஜுனனுக்கு பயிற்சி அளிக்கையில் அப்பால் நின்றிருக்கும் கர்ணனும் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் எண்ணத்தையும் கற்றுக்கொண்டிருந்தான். அவன் அருகே வந்து நின்ற அஸ்வத்தாமன் “அவனைவிட நீ கற்றுக்கொள்கிறாய்” என்றான். கர்ணன் திகைப்புடன் திரும்பி நோக்கி “நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். அஸ்வத்தாமன் மேலும் விரிந்த புன்னகையுடன் “எதிரியே நம்மை முற்றறிந்தவன்” என்றான்.

“எதிரியா? நான் எளிய சூதன்” என்றான் கர்ணன். “நீ சூதன் அல்ல. எளியவனும் அல்ல. என்றோ ஒருநாள் அவனை கொலைவேலுடன் களத்தில் எதிர்கொள்ளப்போகிறவன் நான்தான் என எண்ணியிருந்தேன். இப்போது அறிகிறேன், அது நீதான். அவன் தலை களத்தில் விழுமெனில் அது உன் அம்பினாலேயே.” கர்ணன் மூச்சுத்திணற “இல்லை” என்றான். அஸ்வத்தாமன் புன்னகையுடன் “ஆம், அதுதான் ஊழ்” என்றான். “இல்லை, நான் அதற்கென வரவில்லை…” என்றான். “ஆம் நான் அதை அறிவேன். உன்னைப்பற்றி நான் கிருபரின் குருகுலத்தில் கேட்டறிந்தேன். நீ ஷத்ரியனாக வாழ விழைகிறாய். ஒரு மண்ணைவென்று முடிசூடி மன்னர்நிரையில் நிற்க விழைகிறாய். ஆனால் அவ்விழைவை உன்னுள் நட்டு வளர்க்கும் ஊழ் நினைப்பது பிறிதொன்று…”

துரோணர் திரும்பி அஸ்வத்தாமனை அழைக்க அவன் புன்னகையுடன் எழுந்து சென்றான். அர்ஜுனன் வந்து சற்று அப்பால் வில்லுடன் நின்றுகொண்டான். கர்ணன் அவன் நிற்பதை உணர்ந்தபடி நோக்கி நின்றான். அர்ஜுனன் எதிர்பாராதபடி “துரோணாசாரியாரின் முதல்மாணவன் நானே என்று அவர் சூளுரைத்திருக்கிறார். எனக்கு அளிப்பவற்றை முழுக்க உனக்கு அளிக்கமாட்டார்” என்றான். கர்ணன் திரும்பியபோது அர்ஜுனன் தூரத்தில் விழிநாட்டி கண்களைச் சுருக்கி நின்றிருந்தான். “இளவரசே, குருநாதர் ஒரு கனிமரம். நாம் மூவரும் அதில் அமர்ந்திருக்கிறோம்… அதிலிருந்து எழுந்து எத்தனைதொலைவுக்குச் சிறகடிக்கிறோம் என்பது நம் ஆற்றலைப் பொறுத்தது. பார்ப்போம்” என்றான்.

அர்ஜுனன் சினத்துடன் திரும்பி “ஒருநாள் உன் தலையை நான் களத்தில் உருட்டுவேன்” என்றான். கர்ணன் புன்னகையுடன் “அஸ்தினபுரியில் நாணேற்றி நிறுத்தப்பட்ட கைவிடுபடைப்பொறிகள் நாமனைவரும். அத்தனை அம்புகளும் எதிர்காலம் நோக்கியே நிலைகொள்கின்றன இளவரசே” என்றான். அர்ஜுனன் அச்சொற்களை முற்றிலும் வாங்கிக்கொண்டு திரும்பி அவனை நோக்கினான். “இப்போது உணர்கிறேன், என்னை நிகரற்ற வில்லாளியாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவன் நீ” என்றான். கர்ணன் புன்னகையுடன் “ஆம், நானும் அதையே உணர்கிறேன்” என்றான்.

துரோணர் விழித்தெழுந்து ‘ஓம்’ என்று சொல்லி கைகளை நோக்கியபடி அக்கணமே பேசத்தொடங்கினார் “அஷ்டகரணங்கள் அறிவாயில்களை நூல்கள் வகுத்துரைக்கின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், சங்கல்பம், நிச்சயம், அபிமானம், அவதாரணம். நாமறியும் உண்மை என்பது ஒன்றன்பின் ஒன்றாக எட்டு நிலங்களைக் கடந்து வரும் நீரோடை போன்றது. நாம் உண்ணும் ஒவ்வொரு வாய் நீரிலும் எட்டுநிலங்களின் உப்பு கரைந்துள்ளது.” மூவரும் செவிகளாகி நிற்க துரோணர் எழுந்து மரவுரியை தோளில் இட்டு இடையில் கச்சையை இறுக்கியபடி குறுங்காட்டை நோக்கிச் சென்றார்.

“இதோ என தொட்டறிவது மனம். அறிந்தவற்றை அடுக்குவது புத்தி. அடுக்கியதை தொகுத்துக்கொள்வது சித்தம். அதில் வேண்டியதை குறித்துக்கொள்வது அகங்காரம். அதைக்கொண்டு வருவதை வகுப்பது சங்கல்பம். அதற்கெனக் கொள்ளும் உறுதியே நிச்சயம். அதன்மூலம் எழும் தன்முனைப்பே அபிமானம். இவ்வேழு கரணங்களாலும் நம்முள் வந்த உண்மையை நமது உண்மையாக நாம் ஆக்கிக்கொள்வதை அவதாரணம் என்கின்றன நூல்கள்.” குறுங்காட்டில் எட்டு நீரோடைகள் ஓசையின்றி ஒளியாக வழிந்து சென்றுகொண்டிருந்த இடத்தை அடைந்து நின்றார்.

“வில்லெடுங்கள்!” என்றார் துரோணர். மூவரும் வில்லெடுத்து நாணேற்றியதும் “விழிதூக்காமல் மேலே செல்லும் பறவைகளில் ஒன்றை வீழ்த்துக!” என்றார். நீரோடையில் தெரிந்த பறவைநிழல்களைக் கண்டு குறிபார்த்து மூவரும் அம்புகளைத் தொடுத்தனர். கர்ணனின் அம்புமட்டும் பறவையுடன் கீழே வந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் கழுத்து ஒடிந்த நாரை இருமுறை எம்பியபின் அடங்கியது. துரோணர் திரும்பி அர்ஜுனனிடம் “என்ன பிழை செய்தாய் என்று அறிவாயா?” என்றார். அர்ஜுனன் திகைப்பு நிறைந்த விழிகளுடன் நின்றான். “சூதமைந்தா, நீ சொல்!” என்றார் துரோணர்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

கர்ணன் “மேலே செல்லும் பறவைகளின் நிழல் ஓடைகளில் வரிசையாகத் தெரிந்துசெல்லும் முறையை வைத்து மூவருமே அவற்றின் பறத்தல் விரைவை கணித்தோம். ஆனால் ஐந்து ஓடைகளில் ஒன்றில் ஓடுவது கலங்கல் நீர். அது நீர்ப்படிமத்தை சற்றே வளைத்துக்காட்டும். அச்சிறு வேறுபாடு வானின் வெளியில் நெடுந்தொலைவு. அதை அவர்கள் கணிக்க மறந்துவிட்டனர்” என்றான்.

துரோணர் புன்னகையுடன் “ஆம், அதன்பெயரே அவதாரணப்பிழை” என்றார். “மனம் எனும் அறிதலில் இருந்து சங்கல்பம் எனும் பிழை. புத்தியில் இருந்து நிச்சயம் எனும் பிழை. அகங்காரத்தில் இருந்து அபிமானம் என்னும் பிழை. சித்தத்தில் இருந்து அவதாரணம் என்னும் பிழை. நான்கு அறிவாயில்களுடன் அவை உருவாக்கும் நான்கு பிழைகளையும் சேர்த்து கரணங்கள் எட்டு என்றவன் மெய்ஞானி. இளையோரே, இப்புடவி என்பதே ஒரு மாபெரும் பிழைத்தோற்றமன்றி வேறல்ல.”

“அம்புடன் களம்நிற்பவன் தான் ஒரு மாபெரும் கனவிலிருப்பதை உணர்வான். விரிகனவை எதிர்கொள்கிறது கூர்கனவு. கனவைப் பகுக்க கனவின் விதிகளையே கண்டறிந்தனர் வில்வேத ஞானியர். அவர்கள் வாழ்க!” துரோணர் அந்த நாரையை கைகாட்டிவிட்டு காட்டுக்குள் நடந்து சென்றார். அஸ்வத்தாமன் மட்டும் அவர் பின்னால் சென்றான்.

வெண்முரசு விவாதங்கள்ச்