வண்ணக்கடல் - 25

பகுதி ஐந்து : நெற்குவைநகர்

[ 5 ]

தான்யகடகத்தின் அறச்சாலைக்கு இளநாகனும் கீகடரும் விஸ்வகரும் அஸ்வரும் இரவில் வந்துசேர்ந்தனர். பகல்முழுக்க நகரத்தில் அலைந்து மக்கள் கூடுமிடங்களில் பாடிப்பெற்ற நாணயங்களுக்கு உடனடியாகக் குடித்து உண்டு கண்சோர்ந்து ஒரு நெல்கொட்டகையில் படுத்துத் துயின்று மாலைகவிந்தபின் விழித்துக்கொண்டு அந்தி கனக்கும்வரை மீண்டும் அங்காடியில் சுற்றியலைந்து களைத்தபின் அங்காடியிலேயே ஒரு வணிகரிடம் கேட்டு அறச்சாலையை அறிந்து அங்கே வந்து சேர்ந்தனர்.

அவர்கள் வரும்போது நள்ளிரவாகி நகர் அடங்கியிருந்தபோதிலும் அறச்சாலையின் பொறுப்பாளர்களாக இருந்த நல்லமரும் அவர் துணைவி சிக்கம்மையும் அவர்களின் முதற்குரல் கேட்டபோதே எழுந்து “வருக விருந்தினரே” என எதிர்க்குரல் கொடுத்தனர். கையில் அகல்விளக்குடன் வந்த நல்லமர் “ஏழூர் வணிகர்குழுவின் அறச்சாலை தங்கள் வருகையால் மகிழ்கிறது உத்தமர்களே” என்று முகமன் சொன்னார். சிக்கம்மை உள்ளே சென்று அடுப்பைப் பற்றவைத்த எரிமணம் எழுந்தது. “எளியவன் பெயர் நல்லமன். என் கிருஷ்ணையால் பேணப்படும் வணிகர் குலத்தவன்” என்றார்.

கீகடர் “நாங்கள் இரவுணவில்லாமல் துயில்வதை பொருட்படுத்தாதவர்கள் நல்லமரே. தாங்களும் துணைவியும் எங்களுக்காக துயில்களையவேண்டியதில்லை. நாங்கள் தேடுவது யாழை பாதுகாப்பாக வைத்து தலைசாய்க்கும் இடத்தை மட்டுமே” என்றார். “இரவுணவில்லாமல் ஒருவர் இவ்வறச்சாலையில் துயின்றால் நாங்கள் எங்கள் தெய்வங்களுக்கு எப்படி பொறுப்புசொல்வோம் சூதர்களே? சற்று அமருங்கள். அரைநாழிகைக்குள் இனிய உணவு ஒருக்கமாகியிருக்கும்” என்றார் நல்லமர். அவர்கள் குளிர்ந்த கல்திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டார்கள்.

அரைநாழிகைக்குள்ளாகவே சூடான அவல்பிட்டும் அக்காரவிழுதிட்டுப் புரட்டிய அரிசியுருண்டைகளும் ஆவியெழும் சுக்குநீரும் கமுகுப்பாளை தட்டில் அவர்களுக்குப் பரிமாறப்பட்டன. “உணவை அமுதென அறிந்தவன் முதல் ஞானி” என்றார் கீகடர். “காலத்துடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது உணவு. உணவை காலம் வெல்லும் கணமே இறப்பு.” இளநாகன் அக்காரஉருண்டையை பிட்டுத்தின்றபடி “இவர்கள் இரவில் ஊனுணவு விலக்கும் நெறிகொண்டவர்களோ?” என்றான். கீகடர் நகைத்து “தமிழகத்தின் நாவிழைவை காட்டிவிட்டீர் பாணரே” என்றார்.

விஸ்வகர் திரும்பி அறச்சாலைக்குள் தென்மேற்கு மூலையில் கல்பீடத்தில் இரண்டு அகல்விளக்குகள் நடுவே அமர்ந்த கோலத்தில் இருந்த ஐந்து தெய்வச்சிலைகளை சுட்டிக்காட்டி “அவ்வுருக்களை முன்பு கண்டிருக்கிறீரா?” என்றார். இளநாகன் அவற்றைநோக்கியபடி எழுந்து “ஆம், மூதூர்மதுரையிலும் நெல்வேலியிலும் திருச்சீரலைவாயிலும் வணிகர்கள் இவ்வுருக்களை வழிபடக்கண்டிருக்கிறேன். அவர்களின் ஊழ்கப்படிவர்கள்” என்றான்.

மண்ணால் செய்யப்பட்டு கருவண்ணம் பூசப்பட்டிருந்த அச்சிலைகள் ஆடைகளும் அணிகளும் ஏதுமின்றி கால்களை தாமரையிதழென மடித்து அதன்மேல் கைகளை தாமரை அல்லியென வைத்து விழிமூடி தம்முள் தாம் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருந்தன. நடுவே இருந்த சிலையின் பீடத்தில் நின்றவடிவில் புள்ளிருக்கை பெருத்த மாகாளை முத்திரை இருந்தது. இடப்பக்கத்துப் படிவரின் தலைக்குப்பின்னால் ஐந்துதலை நாகம் பத்திவிரித்து நின்றது. “மையத்தில் இருப்பவர் ரிஷபர். ஐந்துதலைநாகம் குடைபிடித்திருப்பவர் பார்ஸ்வர். அவருக்கு அப்பாலிருப்பவர் மல்லிநாதர். வலப்பக்கம் பிறைமுத்திரையுடன் இருப்பவர் சந்திரப்பிரபர். அவருக்கப்பால் ஆழிமுத்திரையுடன் இருப்பவர் நேமிநாதர். அவர்கள் ஐவரையும் வணங்கும் தொல்நெறி ஒன்று வடக்கே காந்தாரம் முதல் தெற்கே குமரிமுனை ஈறாக வணிகரிடம் வாழ்கிறது, அதை அவர்கள் அருகநெறி என்கிறார்கள்” என்றார் விஸ்வகர்.

“அவர்களின் புராணங்களின்படி இப்பூமியை ஆளும் காலம் இருபத்துநான்காயிரம் வருடங்கள் கொண்ட யுகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தயுகத்தின் முதல் மனிதர் காளையர். அவரே மானுடரில் முதல்வர். ஆநிரை பேணுதல், வேளாண்மை, இல்லம் அமைத்தல் என்னும் முத்தொழிலையும் அவரே மானுடகுலத்துக்குக் கற்பித்தார். கொல்லாமை, வாய்மை, கள்ளுண்ணாமை, புலனடக்கம், துறவு என்னும் ஐந்து நெறிகளை அவர் மானுடர்க்களித்தார். அந்நெறிகளை வலியுறுத்தி மானுடரை நெறிப்படுத்த பெரும்படிவர்கள் மண்ணுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஐவரை இதுவரை மானுடர் அறிந்திருக்கிறார்கள். அவர்களே இவர்கள்” விஸ்வகர் சொன்னார். “இப்பெருநெறி இன்று பாரதவர்ஷம் முழுதுமுள்ள அனைத்து வணிகர்களையும் குலமோ நாடோ விலக்காமல் ஒன்றாக்குகிறது.”

கீகடர் நகைத்தபடி “கையில் படைக்கலமேந்தா சூள் கொண்டிருப்பதனால் எங்கும் எக்குடியும் அவர்களை எதிர்ப்பதில்லை. ஆகவே அனைத்து வணிகர்களும் இன்று இந்நெறியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். பொருள்நலன் உள்ள நெறிபோல வணிகர்களைக் கவர்வது வேறேது?” என்றார். “தங்கள் செல்வத்தில் சிறுபகுதியை அளித்து வணிகவழிகள் தோறும் அன்னசாலையும் அறச்சாலையும் அமைக்கிறார்கள். அறம் இனிது. அவ்வறம் வழிகளை எளிதாக்கி பொருளீட்ட உதவுவது அதனினும் இனிது.” விஸ்வகர் கைகளைத்தூக்கி கொட்டாவி விட்டபடி “நான் விவாதிக்க விரும்பவில்லை கீகடரே. வேள்விநெருப்பில் கொட்டும் உணவை விட பசிநெருப்பில் கொட்டும் உணவு நேராக விண்ணவரை அடைகிறதென்று எண்ணுபவன் நான்” என்றார்.

அவர்கள் திண்ணைகளிலேயே நல்லமர் அளித்த பனம்பாய்களை விரித்து படுத்துக்கொண்டனர். மென்மரத்தாலான தலையணையில் முகம் சேர்த்து படுத்துக்கொண்டு அகல்சுடரில் அமர்ந்திருந்த படிவர்களை நோக்கிக்கொண்டு விழிமயங்கினான் இளநாகன். ஐந்து வெண்ணிற யானைகள் கிருஷ்ணையின் நீல நீரில் இருந்து அலைபிளந்து எழுவதைக் கண்டான். அவை கைகளில் வெண்தாமரை மலரை ஏந்தி தான்யகடகத்தின் புழுதித்தெருவில் நீர்சொட்டித் தடம் நீள வந்தன. அறச்சாலைக்குள் நுழைந்து ஐந்து படிவர்கள் முன் நின்று மலர்களை அவர்களின் பாதங்களில் வைத்து துதிக்கை தூக்கி வணங்கின. மணியோசையுடன் யானைகளின் பெருவயிறுகள் முரசுத்தோல்பரப்புகள் என அதிரும் குரலோசையும் எழுந்தன. அவை கனத்த மானுடக்குரல்போல சொற்களால் ஆனவையாக இருந்தன.

இளநாகன் விழித்து எழுந்து திண்ணையில் அமர்ந்துகொண்டு உள்ளே நோக்கியபோது வெண்ணிற ஆடை அணிந்த எழுவர் படிவர்களுக்கு மலரணிபூசனை செய்துகொண்டிருந்தனர். மணியோசையும் ஏழுகுரல்கள் தங்கள் நெஞ்சுக்குள் முழங்கிய மந்திரஓசையும் இணைந்து அந்த நீண்ட கூடத்தை நிறைத்திருந்தன. இளநாகன் எழுந்து அறச்சாலைக்குப்பின்னால் சென்று அங்கே இருந்த கிணற்றில் நீர் இறைத்து நீராடினான். கையெட்டும் தொலைவில் நிறைந்து கிடந்த கிணறு கிருஷ்ணையின் விழி என அவனுக்குத் தோன்றியது. கிருஷ்ணையின் நீருக்குரிய எடையும் சுண்ணப்பாறைகளின் சுவையும் கொண்டிருந்தது.

ஈர உடையுடன் அவன் மீண்டும் கூடத்தில் நுழைந்தபோது பூசை முடிந்துவிட்டிருந்தது. மேலும் ஐந்து வணிகர்கள் வந்து அமர்ந்திருந்தனர். மலரணிதல் முடிந்ததும் அவர்கள் ஒவ்வொருவராக வந்து சிலைகள் முன் முழந்தாளிட்டமர்ந்து மரப்பலகையில் விரிக்கப்பட்ட வெண்ணிற அரிசியில் சுவஸ்திகை குறியை சுட்டுவிரலால் வரைந்து வணங்கினர். பீடங்களுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த மண்கலயங்களில் இருந்து குங்கிலியப்புகை இளநீலச்சுருள்களாக எழுந்துகொண்டிருந்தது. வெண்கலப்பானைபோல முற்றிலும் முண்டனம்செய்யப்பட்ட செந்நிறத்தலை கொண்ட முதியவர் அனைவருக்கும் வெல்லமும் பொரியும் தேங்காய்த்துருவலும் கலந்த படையலுணவை கைநிறைய மும்முறை அள்ளி அளிக்க அனைவரும் பணிந்து இரு கைநீட்டிப் பெற்று விலகினர்.

இளநாகன் கைகளை நீட்டியதும் அவர் “இளம்பாணரே, உம் அன்னை குடியிருக்கும் வீட்டில் ஐந்துவகை குப்பைகள் சேரவிடுவீரா என்ன?” என்றார். இளநாகன் அவர் சொல்லவருவதை உணர்ந்து புன்னகைசெய்து “அன்னைக்கு உகந்த ஐந்துவகை உணவுகள் அவை முனிவரே. அவள் உண்டாடிச் செல்லும்போது சிந்திய மிச்சில்களே குப்பைகளாகின்றன” என்றான். அவர் சிரித்து “நீர் சொல் தேர்ந்தவர் பாணரே. உம்முடன் சொல்லாடுவது எவருக்கும் அரிது” என்றார். “ஆனால் அழியாத அருகஞானத்தை சொல்லவேண்டியது என் பணி. ஆகவே சொல்கிறேன். தன் திறனால் வாழ்வதே மெய்வாழ்வு. பிறர் வாழ்வையும் திறனையும் கொண்டும் அழித்தும் வாழ்வது வீண்வாழ்வு. ஐவகை நெறிகளும் ஒன்றையே இலக்காக்குகின்றன. பிற உயிர்களின் நலன்களை எவ்வகையிலும் கொள்ளாமல் அழிக்காமல் வாழும் முறைமையை” என்றார்.

“என்னை நாகநந்தி என்பர்” என்றார் படிவர். “வடக்கே விதர்பநாட்டைச் சேர்ந்த நான் அவ்வாழ்வில் ஒரு வணிகன். வாழ்வை வாழ்ந்து வாழ்வை அறிந்தபின் அதைச் சொல்லும்பொருட்டு இவ்வண்ணமானேன். வாழ்வுடன் என்னைப்பிணைக்கும் ஒவ்வொன்றையும் பிழுது அகற்றினேன். என் முடிகளை, என் தேவைகளை, என் விழைவுகளை, உணர்வுகளை. அவற்றினூடாக என் ஆணவத்தை. இறுதியாக எஞ்சியிருப்பது நான் இங்கிருக்கிறேன் இவ்வண்ணமிருக்கிறேன் என்னும் உணர்வு. அதையும் வெல்லும்போது நான் முழுமையடைவேன். அதுவரை அறிந்தவற்றைச் சொல்லி அருகரடியில் வாழ்கிறேன்” என்றார்.

“இளம்பாணரே, பிற உயிரைக்கொல்பவன் தனக்காக பிறிதை அழிக்கிறான். பொய்யுரைப்பவன் பிறர் அடைந்தவற்றை தான் கவரும்பொருட்டே அதைச்செய்கிறான். புலன்விழைவுகளை நாடுபவன் அவ்விரண்டையும் செய்யாமலிருக்க முடியாது. கள்ளுண்பவன் புலன்கள் மேல் அறிவின் ஆட்சியை முற்றிலும் இழக்கிறான்” என்றார் நாகநந்தி. “பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வெல்லும் விருப்புடனேயே காலூன்றி எழுகிறது. உலகை வெல்லவே ஒவ்வொரு புல்லும் இதழ் விரிக்கிறது. ஆனால் மானுடன் வெல்வதற்குரியது ஒன்றே, அது அவன் அகம். தன்னை வென்றவனே மாவீரன் எனப்படுகிறான். மாவீரனுக்குரிய அரிய பரிசிலை ஒவ்வொரு ஆன்மாவிலும் ஒளித்துவைத்து அனுப்பியிருக்கிறது மானுடனைப்படைத்த இயற்கை.”

இளநாகனுக்குள் மெல்லிய நகை ஒன்று விரிந்தது. “ஆம் உத்தமரே, நானும் தாங்கள் சொல்வதைப்போல ஐந்நெறிகொண்ட பலரைக் கண்டிருக்கிறேன். அவர்கள் வாய்மை பேணி தூய்மை பேணாதவர்கள். கொலைவாள்முன் நின்றாலும் ஊனும் கள்ளும் தீண்டாதவர்கள். ஆகவே அவர்கள் மிக எளிதாக வீடுபேறடைகிறார்கள்.” அவன் கண்களை நோக்கியபடி நாகநந்தி அமைதியாக இருந்தார். “அவர்களை கூட்டம் கூட்டமாக நகரச்சாலை வழியாக வீடுபேறுநிலையத்துக்கு கொண்டுசெல்கிறார்கள். அங்கே அவர்களை படிவரடி சேர்க்கும் பலிபீடம் உள்ளது. உத்தமரே, அவர்கள் தங்கள் என்பும் தோலும் பிறர்க்கு என்னும் அன்புகொண்டவர்கள். அவர்களின் குரல்செவிக்கினியது. ஊன் நாவுக்கினியது.”

நாகநந்தி மாறாத புன்னகையுடன் “நீர் இளம்பாணர் என்பதை நிறுவுகிறீர். இத்தனைநாள் இவ்வறநெறியைச் சொல்லும் நான் இதே கூற்றை இதற்கு முன் கேட்டிருக்கமாட்டேன் என எண்ணுமளவுக்கு இன்னும் தன்முனைப்பு கொண்டிருக்கிறீர்… வாழ்க” என்றார். “இளைஞரே, கொலைத்தொழில் செய்து வாழும் சிம்மங்கள் கூட மகிழ்வுடனிருக்கையில் வெள்ளாட்டுச்செச்சை போல மைந்தருடனும் உறவுடனும் கூடி கருணையும் அன்பும் கொண்டுதான் இலங்குகின்றன. சிறுமகிழ்வுக்கே கொலைமறுப்பும் அன்பும் தேவை எனில் பெருமகிழ்வுக்கு அவை எத்துணை பெரியதாகவேண்டுமென்று மட்டும் சிந்தியுங்கள்.”

“ஊனுணவை உண்ணும் விலங்குகள் இயற்கையால் அல்லவா படைக்கப்பட்டுள்ளன?” என்றான் இளநாகன். “ஆம், மலம் தின்னும் விலங்குகளும் உண்டு. நாம் எது நம்மை வாழவைக்குமோ அதை மட்டும் கற்றுக்கொண்டால் போதுமல்லவா?” என்றார் நாகநந்தி. இளநாகன் அவரது அடங்கிய குரலுக்குள் இருப்பது வாதிட்டுத்தேர்ந்த அறிஞன் என்பதைக் கண்டுகொண்டு அடுத்த சொல் எழாது தற்காத்துக்கொண்டான். நாகநந்தி புன்னகையுடன் “நாம் விவாதிப்பதை முடித்துக்கொண்டு முற்றறத்தின் நெறிகளைப்பற்றி பேசுவோமா?” என்றார்.

“ஆம்” என்றான் இளநாகன். “சிறியவரே, இப்புடவி மூவாமுதலா முழுமை கொண்டது. இது எதனாலும் ஆக்கப்பட்டதில்லை. எதனாலும் அழிக்கப்படுவதும் அல்ல. இங்கு அழிந்தபின் எஞ்சுவதும் புடவியே என்பதனால் புடவி அழிவற்றதென்றாகிறது. அழிவற்றது இல்லாமலிருக்கும் நிலை இருக்கவியலாது. ஆகவே அது தோன்றியிருக்கவும் முடியாது” என்றார் நாகநந்தி. “என்றுமிருக்கும் இது இயங்குவதை நாம் காண்கிறோம். இயங்குவதனால்தான் நாம் அதை அறிகிறோம். இதில் இயக்கமென ஒன்று உள்ளதென்பதனாலேயே அவ்வியக்கத்திற்குள் செயல்படும் முறைமை என ஒன்றும் உண்டு என உய்த்துணரலாம்.”

“ஏனென்றால் முறைமையின்றி ஏதும் எங்கும் இயங்கமுடியாது. முறைமையற்ற இயக்கமென நாம் எண்ணுவதெல்லாம் நாமறியாத முறைமைகளைப்பற்றி மட்டுமே. நாம் அறிபவை எல்லாம் அம்முறைமையின் சில கூறுகளைத்தான். நம் இருப்பாலேயே அம்முறைமையை தனித்தனியாக அறிகிறோம். நெருப்பு சுடுமென்பதும் நீர் குளிர்வதென்பதும் நம் அறிதல்நெறிகள். நமக்கு அப்பால் அந்நெறிகளனைத்துமாக உள்ள அது ஒன்றே. அதை முதல்முடிவில்லா, அதுவிதுவில்லா முறைமை என்று சொல்லலாம். அதையே நாங்கள் ஊழ் என்கிறோம். சிற்றெறும்பையும் விண்கோள்களையும் இயக்குவது ஊழ். பிறப்பையும் இறப்பையும் நிகழ்த்துவது அது.”

“நீர்க்குமிழியின் வடிவமும் திசையும் அதிர்வும் ஒளியும் செலவும் அழிவும் முற்றிலும் பேராற்றின் இயல்புகளால் ஆனவை. நீர்க்குமிழியென்று ஒன்றில்லை. ஆறே உள்ளது. ஆனால் நீர்க்குமிழியை மட்டும் காண்போமென்றால் அதற்கொரு இருப்புப் பொருளும் உள்ளது. நீர்வழிப்படும் குமிழி இவ்வாழ்க்கை. நீர்ப்பெருக்கே ஊழ்” என்றார் நாகநந்தி. “கருக்குழிக்குள் எழும் ஒரு குழந்தை ஊழ்ப்பெருவெள்ளத்தில் ஒரு குமிழி என்றறிந்தவன் அறியாமையை கடக்கிறான். அறியாமையின் விளைவான ஐயம் அச்சம் தனிமை ஆகியவற்றை வெல்கிறான். அவற்றை வென்றவனே வீரன். அவனே அறிவன். தன்னை நதியென்றுணர்ந்த குமிழியை நாங்கள் வாலறிவன் என்கிறோம். பெரும்படிவராக சிலையமைத்து வழிபடுகிறோம்.”

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

“பசி என்பது இன்மை, அதை உணவே அழிக்கமுடியும். துயரம் என்பது அறியாமை, அதை மெய்யறிவு மட்டுமே நீக்கமுடியும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று நாகநந்தி கூறிமுடித்தார். இளநாகன் “தங்கள் சொற்கள் என்னுள் விதைகளாகுக அடிகளே” என்று சொல்லி அவரை வணங்கினான். அவர் “நலம் திகழ்க! இனிய பயணங்கள் அமைக! அறிதலுக்கப்பாலுள்ளவற்றை உணரும் அறிவும் அமைக!” என வாழ்த்தினார்.

இளநாகன் திரும்பி வந்து முற்றத்து காலைவெயிலில் ஒளிரும் சிறகுகளுடன் எழுந்து சுழன்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான தும்பிகளை நோக்கிக்கொண்டிருந்தான். ஊழின் துளிகள். காலக்கொப்புளங்கள். அப்பாலெழுந்த அசைவில்லா மாடங்களும் அவ்வண்ணமே. ஒரு கணம் எழுந்த கட்டற்ற பெருந்திகைப்பு அவன் உடலை சிலிர்க்கச்செய்தது. தான் அறியாமலேயே எழுந்து நின்றுவிட்டான். பின்பு மீண்டும் அமர்ந்துகொண்டான். அந்தப் பெருந்திகைப்பை நீட்டி நீட்டி வெட்டவெளியாக்கி அந்தப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் அறிந்தவிந்த படிவர்கள். திரும்பி மடியில் கை மலர விழிகுவிய அமர்ந்திருக்கும் ஐவரையும் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

நன்றாக வெயில் ஒளிவிடத்தொடங்கியபின்னர்தான் கீகடர் எழுந்தார். அவருக்கு முன்னரே எழுந்து குளித்துக்கொண்டிருந்த மற்ற சூதர்களுடன் அவரும் சென்று சேர்ந்துகொண்டார். அஸ்வர் வந்து “பாணரே, இங்கு காலையில் இனிய உணவு அளிக்கிறார்கள். வறுத்த அரிசியை பொடித்து கடுகும் கறிவேப்பிலையும் எள்ளெண்ணையில் தாளித்துக் கிண்டி இறக்கும் மாவுணவு. அதன் வாசனை நெஞ்சை அடைக்கச்செய்கிறது” என்றார். “திருவிடத்தின் உணவு அது. வேசரத்தைக் கடந்தால் அதை எண்ணிப்பார்க்க மட்டுமே முடியும். வருக!” இளநாகன் புன்னகைத்துக்கொண்டு எழுந்தான். “குயிலின் ஆன்மா குரலில் உணவின் ஆன்மா வாசனையில் என்பார்கள் இளம்பாணரே” என்றார் அஸ்வர்.

அடுமனையில் நீண்டவரிசையாக உணவுக்காக அயல்நாட்டு வணிகர்கள் அமர்ந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் முண்டனம்செய்த தலையும் நீட்டப்பட்ட தொள்ளைக்காதும் வெண்ணிற ஆடைகளும் கொண்டிருந்தனர். காதுகளில் குழைகளும் மார்பில் மகரகண்டியும் அணிந்த பெருவணிகர்கள் ஐயம் திகழ்ந்த கண்களால் பிறரை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த இளம் வணிகர்கள் ஒவ்வொன்றையும் பேரார்வத்துடன் நோக்கினர். பந்தியில் அவர்கள் அமர்ந்துகொண்டதும் கமுகுப்பாளைத் தட்டுகளை வைத்துக்கொண்டே சென்ற பணியாள் “புண்ணியம்! புண்ணியம்!” என்று முணுமுணுத்தான். “இந்த உணவை உண்பதன் வழியாக ஏதேனும் நன்மை உண்டென்றால் அது இவ்வறச்சாலை அடையும் புண்ணியம் மட்டுமே” என்றார் கீகடர். “ஊனுணவு என் உடலின் ஊன்வெளியைக் கண்டு நதியில் இணையும் சிற்றாறென உவகை கொள்கிறது… இவ்வுணவைக் கண்டு தன்னிடம் பால்குடிக்கவரும் மான்குட்டியைக் கண்ட அன்னைப்புலிபோல என் உடல் திகைக்கிறது.”

விஸ்வகர் “பரிசாரகரே, அந்த மாவுணவு அண்டாவின் அடியில் எஞ்சியிருக்கும் செந்நிறமான காந்தலை மட்டும் சட்டுவத்தால் சுரண்டி எனக்களியுங்கள்” என்றார். “ஏன்?” என்றான் அவன். “ஏனென்றால் எனக்கு காவியத்தில் ஆர்வமில்லை. நான் தத்துவத்தையே விரும்புகிறேன்” என்றார். அவன் திகைத்து “தத்துவம் என ஏதும் இங்கில்லையே” என்றான். “சற்றுக்கருகியிருந்தாலும் குற்றமில்லை. தத்துவம் புகைவது இயல்பே” என்றார் விஸ்வகர். “அது உலருமேயன்றி அழுகாது. அதில் உயிர்கள் வாழாது.”

கீகடர் உரக்க நகைத்தபோதுதான் அவர்கள் தன்னை நகையாடுகிறார்கள் என்பது பணியாளனுக்குத் தெரிந்தது. “சமையலறையில் ஊழ் நின்றிருக்கிறது” என்றார் அஸ்வர். “அது அரிசியையும் வெல்லத்தையும் கலக்கிறது. நீரை கொதிக்கச்செய்கிறது. ஊழ்வினை உருத்துவந்து நம்மை ஊட்டுகிறது.” கீகடர் உரக்கநகைத்து பணியாளிடம் “அங்குள்ள ஊழை நான் உப்பக்கம் கண்டுவிட்டேன் என்று சொல்லும்” என்றார். “ஆகட்டும்” என்றான் அவன்.

அவர்கள் உண்டு எழுந்து நடந்தபோது பணியாளர்கள் நால்வர் வந்து பின்னால் நோக்கி நின்றனர். ஒருவன் மெல்ல “வடபுலத்துச் சூதர்கள். அஸ்தினபுரிக்காரர்கள்” என்றது இளநாகன் காதில் விழுந்தது. கீகடர் “நமக்காக உயிர்துறந்த உயிர்களின் ஆன்மாக்களை நிறைவடையச்செய்யும் பொறுப்பு நமக்குள்ளது விஸ்வகரே. நாம் வணிகர்சாலைக்குச் செல்வோம்” என்றார்.

சாலை வழியாக நடக்கையில் விஸ்வகர் நின்று “பீமனையும் துரியோதனனையும் சுற்றிவரிந்து கட்டியிருக்கும் அந்த ஊழை நான் காண்கிறேன். ஒருவனுக்கு வீரசொர்க்கம். இன்னொருவனுக்கு கீர்த்தி. ஆகா! இருவருமே வாழ்த்தப்பட்டவர்கள்” என்றார். “ஷத்ரியர்கள் அனைவருமே வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு இரண்டில் ஒன்று இருக்கிறது” என்றார் கீகடர். “ஆனால் நல்ல ஷத்ரியன் என்பவன் காய்கறியைப்போல. நறுக்கப்படும்போதே அவன் முழுமை அடைகிறான்.”

அவர்கள் சிரித்துக்கொண்டே சென்றனர். விஸ்வகர் “எனக்கென்ன தோன்றுகிறதென்றால் ஊழுக்குச் சிறந்த உவமை புல்தான்” என்றார். “புல் இவ்வுலகை நிறைத்திருக்கிறது. நெல்லாகி உணவூட்டுகிறது. கரும்பாகி இனிக்கிறது. பசுக்களின் பாலாகி அமுதூட்டுகிறது. குழலாகி இசைக்கிறது. அம்பும் வில்லுமாகி கொல்கிறது. விறகாகி எரிக்கிறது. மண்ணை மூடிப்பொதிந்திருக்கும் உயிராற்றல் என்றால் அது புல் அல்லவா?”  “ஊழ்விசை என்பது உமக்கு புல்லுக்கு நிகர் என்கிறீர்?” என்றார் கீகடர். இருகைகளையும் விரித்து உரக்க “ஊழே, முடிவிலியின் கணையாழியே, பிரம்மத்தின் முடிச்சுருளே, நீ எனக்கு புல்! இதோ சொல்கிறேன், நீ எனக்கு புழுதி” என்றார்.

அக்கணமே திகைத்து நின்று கைகளை இறக்கி இளநாகனிடம் “நாக்கு பல்லில் கடிபடுவது போல என் அகத்தில் இக்கணம் ஒன்றை அறிந்தேன்” என்றார். “என்ன?” என்றான் இளநாகன். “நான் இன்னும் சிலகணங்களில் இறக்கவிருக்கிறேன். என்னைக்கொல்பவன் பல்லாண்டுகளுக்கு முன்னரே பிறந்து இந்த அங்காடியில் காத்திருக்கிறான்” என்றார் கீகடர். விஸ்வகர் “மூடத்தனம்” என்றார்.

“ஆம்… முழுமூடத்தனம்… அவனுக்கு காவிய இலக்கணமே தெரியாது. நாமெல்லாம் எத்தனை தர்க்க ஒழுங்கும் அழகொழுங்கும் கொண்ட ஆக்கங்களைப் படைக்கிறோம்!” என்று கீகடர் சிரித்தார். “மூடன்! மூடன்! தன் அறிவின்மையை மறைக்கவே ஊழ் என்னும் பொருளிலா விளக்கத்தை வைத்திருக்கிறான்.” நிலைகொள்ளாது திரும்பிய இளநாகன் அந்த வெண்ணிற எருதைப் பார்த்தான்.