திசைதேர் வெள்ளம் - 79

bowயுதிஷ்டிரர் நின்று பீஷ்மரின் படுகளத்தை நோக்கி “அது ஓர் விண்ணூர்திபோல் உள்ளது. அவரை அழைத்துச்செல்ல வந்தது” என்றார். சுபாகு “ஆம்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” என்றார். பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். “எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்று பீமன் சொன்னான்.

யுதிஷ்டிரர் அவனை வெறுமனே நோக்கிவிட்டு முன்னால் நடந்தார். அவர்கள் பீஷ்மரின் படுகளத்திற்குள் நுழைந்தனர். அங்கே பீடத்தில் அமர்ந்து சாத்தனும் ஆதனும் மருந்தரைப்பதை நோக்கிக்கொண்டிருந்த வஜ்ரர் எழுந்து வணங்கினார். சுபாகு “எப்படி இருக்கிறார்?” என்றான். “அவ்வண்ணமே…” என்றார் வஜ்ரர். “இன்னும் பல நாட்கள் இப்படியே மாற்றமின்றி செல்லக்கூடும்” என்றான் சாத்தன். “மூச்சும் நெஞ்சுத்துடிப்பும் சீரடைந்துள்ளது.” யுதிஷ்டிரர் “அவரிடம் எங்கள் வரவை அறிவிப்பது இயலுமா?” என்றார். “ஆம், துயிலில் சொற்கள் சென்றுசேரும். எல்லா சொற்களுமல்ல, அந்த ஆழம் எவற்றை தெரிவுசெய்கிறதோ அவை மட்டும். செவிகளில் உங்கள் வரவை சொல்லுங்கள்” என்றான் சாத்தன்.

யுதிஷ்டிரர் கூப்பிய கைகளுடன் பீஷ்மரின் அருகே சென்றார். பீஷ்மரின் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் என்னும் சொல்லை சுபாகு கண்டான். யுதிஷ்டிரர் “என்ன சொல்கிறார்?” என்றார். “அது வெறும் உதட்டசைவு” என்றான் சுபாகு. யுதிஷ்டிரர் அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்து செவிகளில் “பிதாமகரே, நான் யுதிஷ்டிரன். பிதாமகரே, உங்கள் பெயர்மைந்தனாகிய யுதிஷ்டிரன். பிதாமகரே, உங்களைப் பார்க்க வந்துள்ளேன். என்னை வாழ்த்துக!” என்றார். பீஷ்மரின் விழியிமைகள் அதிர்ந்தன. “கேட்கிறார்” என்றார் வஜ்ரர். “பிதாமகரே, என்னை வாழ்த்துக! என் பணிவை ஏற்றுக்கொள்க, தந்தையே!” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரர் சொன்னார். குரல் அழுகையால் உடைய “என் தலை தங்கள் கால்களில் அமைகிறது. நான் ஆற்றிய அனைத்துப் பிழைகளையும் பொறுத்தருள்க!” என்றார்.

பீஷ்மரின் இமைகளுக்குள் விழிகள் ஓடுவது தெரிந்தது. யுதிஷ்டிரர் தளர்ந்தவராக பீஷ்மரின் அருகே அமர்ந்தார். அவர் தோள்கள் குலுங்கின. மூச்சொலியும் கேவல்களுமாக அழுதார். “அரசே!” என்றான் சுபாகு. “மூத்தவரே!” என்று பீமன் அழைத்தான். பின்னர் சகதேவனிடம் கண்காட்டினான். சகதேவனும் நகுலனும் விழிநீர் வார நின்றிருந்தனர். சகதேவன் குனிந்து யுதிஷ்டிரரின் தோளைத் தொட்டு “மூத்தவரே” என்றான். யுதிஷ்டிரர் உடல்குலுங்க அழுதபடி கையூன்றி எழுந்தார். மூச்சால் அலைக்கழிந்த உடலுடன் தோள்குறுக்கி நடந்துசென்று பீஷ்மரின் பாதங்களில் தன் தலையை மும்முறை வைத்து எடுத்தார்.

எழுந்து விலகியபோது அவருடைய ஒரு கால் இழுத்துக்கொண்டு விறைத்து நின்றது. கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர்ந்தன. பற்களைக் கடித்து தலையை குனிந்தபடி நடந்து தள்ளாடி விழப்போனார். சகதேவன் பாய்ந்து அவரை தோள்பற்றி பிடித்துக்கொண்டான். அவர் அவன் கையிலமையாது மேலும் சரிந்தபோது சாத்தன் ஒரு பெட்டியை எடுத்துப்போட்டான். அவர் அதில் அமர்ந்து இரு கைகளாலும் தலையை பற்றியபடி குனிந்துகொண்டார். பீமன் சென்று பிதாமகரின் செவிகளில் “நான் பீமன், பிதாமகரே. உங்கள் வாழ்த்துகொள்ள வந்தேன்” என்றான். இமைகள் மட்டும் அசைந்தன. உதடுகள் அச்சொல்லில் நிலைகொண்டிருந்தன. பீமன் அவர் பாதங்களை வணங்கி விலகினான்.

உரத்த விக்கல் ஓசை எழுந்ததைக் கேட்டு சுபாகு திரும்பிப் பார்த்தான். யுதிஷ்டிரர் மூச்சுத்திணற உடல்துள்ள அதிர்ந்துகொண்டிருந்தார். சாத்தனும் வஜ்ரரும் அவரை பிடித்தனர். சாத்தன் அவர் நெஞ்சை அழுத்தி தடவினான். கழுத்து இறுக்கப்பட்டவரைப்போல் யுதிஷ்டிரரின் உடல் துடித்தது. வாயின் ஓரத்தில் நுரைவழிய அவர் வலிப்பு கொண்டார். விழிகள் மேலேறியிருக்க வெண்பற்கள் உதடுகளை அழுந்தக் கவ்வியிருந்தன. கைகள் விரல்சுருட்டி இறுகியிருந்தன. வஜ்ரர் அவரைப் பற்றி மெல்ல நிலத்தில் ஒருக்களித்து படுக்கச்செய்தார். சகதேவன் நீர்க்குடுவையை எடுக்க “வேண்டாம்” என்றார் வஜ்ரர். வலிப்புடன் விசைகொண்ட இருமல்கள் யுதிஷ்டிரரின் உடலை உலுக்கின. கமறி மூச்சிளைத்து மெல்ல அவர் அடங்கியதும் உடைந்த தேர்ப்பீடம் ஒன்றை அவருக்கு தலைக்கு அணையாக வைத்தார் வஜ்ரர். மெல்லிய குரலில் “சற்றுநேரம் மூச்சு ஒழுங்கமையட்டும். அதன்பின் இன்னீர் கொடுப்போம்” என்றார்.

சகதேவன் அர்ஜுனனிடம் “மூத்தவரே” என்றான். அர்ஜுனன் பீஷ்மரை நோக்கவில்லை என்று தோன்றியது. யுதிஷ்டிரரின் துடிப்பையும் நோக்கவில்லை. எதையுமே நோக்காமல் விழிகள் இருளை வெறிக்க நின்றிருந்தான். “மூத்தவரே” என்றான் சகதேவன். “என்ன?” என்று அர்ஜுனன் கலைந்து திரும்பி நோக்கினான். “வணங்குக!” என்றான் சகதேவன். “ஆம்” என்றபின் அர்ஜுனன் சென்று பீஷ்மரின் காதருகே “நான் அர்ஜுனன். உங்கள் மைந்தன் வந்துள்ளேன்” என்றான். பீஷ்மரிடம் மெல்லிய இமையசைவன்றி ஏதும் வெளிப்படவில்லை. அவன் அவருடைய கால்களை தலைசூடிவிட்டு விலகினான்.

நகுலனும் சகதேவனும் பீஷ்மரை வணங்கினர். வஜ்ரர் “அவர் அறிந்துகொண்டிருக்கிறார்” என்றார். யுதிஷ்டிரர் முனகினார். சாத்தன் சென்று அவருக்கு சிறுகுவளையில் தேன் சேர்த்த நீரை அளித்தான். விடாய்கொண்ட உதடுகளுடன் அவர் அதை அருந்தினார். அவருக்குள் நீர் நுழையும் ஓசை அந்த அமைதியில் தெளிவாக கேட்டது. எவரோ எதுவோ சொல்வதுபோலிருந்தது. அங்கே உருவிலியாக எழுந்த தெய்வத்தின் குரல் என. சுபாகு மெய்ப்பு கொண்டான். “பார்த்தன்” என மீண்டும் அக்குரல் ஒலித்தபோது அது பீஷ்மரின் வாயிலிருந்து எனத் தெரிந்தது.

“செல்க! மூத்தவரே, அருகணைக!” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் கையூன்றி எழுந்தமர்ந்தார். தலை ஆடிக்கொண்டிருக்க அவர்களை நோக்கினார். அர்ஜுனன் தயங்கிய காலடிகளுடன் அருகே சென்று அவர் அருகே மண்டியிட்டான். “பிதாமகரே, நான் அர்ஜுனன். உங்கள் பெயர்மைந்தன்” என்றான். அம்புகள் மேல் அமைந்திருந்த பீஷ்மரின் வலக்கையில் நடுவிரல் துடித்தது. அதில் குருதி கருமையான பிசினாகப் படிந்திருந்தது. உள்ளங்கையிலும் முழங்கையிலும் மட்டும் நான்கு அம்புகளின் முனைகள் பதிந்திருந்தன. அவற்றைச் சுற்றி தசை சிவந்து நரம்புகள் புடைத்து எழுந்திருந்தன.

“கையருகே செல்க!” என்றான் சகதேவன். “நான் பார்த்தன், பிதாமகரே. உங்கள் சொல்லுக்காக வந்துள்ளேன். உங்கள் அடிபணிகிறேன்” என்றான் அர்ஜுனன். “ம்ம்” என்று பீஷ்மர் மிக ஆழத்தில் எங்கோ இருந்து முனகினார். “பார்த்தன்!” என ஒரு சொல் எழுந்தது. அவர் குரல்தானா என ஐயமெழுந்தது. “அவர் கையருகே செல்க!” என அர்ஜுனனின் தோளை தொட்டான் சகதேவன். அர்ஜுனன் அந்தக் கையின் அருகே சென்றான். பீஷ்மர் தன் கையை மேலே தூக்க முயன்றார். அது துடிப்பு கொண்டதே ஒழிய அசையவில்லை.

“அந்தக் கையை தூக்கி உங்கள் தலைமேல் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான் சாத்தன். அர்ஜுனன் தயங்கினான். “அவர் எண்ணுவது அதையே. செய்க!” என்றான் சாத்தன். அர்ஜுனன் தன் தலையை அந்தக் கையருகே கொண்டுசென்றான். மிக மெல்ல அதை தூக்கி தன் தலைமேல் வைத்தான். “பார்த்தன்!” என்று பீஷ்மர் சொன்னார். அவர் கை உயிரற்றதுபோல் அவன் தலைமேல் கிடந்தது. “பார்த்தன்!” என மீண்டும் தொண்டை கமறுவதுபோன்ற ஒலியுடன் சொன்னார். “வெல்க! மெய்மையை கண்டடைக!” என்றார். அவன் உடலில் மெல்லிய துடிப்பு ஒன்று நிகழ்ந்தது. அவன் தலையை அம்புமுனை ஒன்றின்மேல் சாய்த்துக்கொண்டான்.

வஜ்ரர் பீஷ்மரின் கையைத் தூக்கி மீண்டும் அம்புகள் மேல் வைத்தார். “செல்க… அவருக்கு மீண்டும் துயில்மருந்து அளிக்கவேண்டும்” என்றார். கையை நிலத்தில் ஊன்றி அர்ஜுனன் எழுந்துகொண்டான். இடையில் கையை வைத்துக்கொண்டு நின்று நீள்மூச்செறிந்தபடி வானை நோக்கினான். சுபாகு “செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சாத்தனின் கைகளை பற்றிக்கொண்டு எழுந்து நின்றார். அவர் முகம் தெளிந்திருந்தது. சகதேவன் “விடைகொள்கிறோம், மருத்துவர்களே” என்றான். வஜ்ரர் “நலம் சூழ்க!” என்றார்.

அவர்கள் வெளியே வந்ததும் புதுக் காற்றை ஏற்றவர்கள்போல் முகம்தெளிந்தனர். நீள்மூச்சுகள் ஒலித்தன. யுதிஷ்டிரர் “பிதாமகரின் வாழ்த்து நம்மனைவருக்கும்தான். நம் துயரை அவர் அறிந்திருக்கிறார்” என்றார். சகதேவன் “தந்தை அறியாத எதுவும் மைந்தருக்கில்லை” என்றான். அவர்கள் நடந்தபோது அந்தக் காலடியோசை உரக்க ஒலித்து உளநிலையை குலைத்தது. யுதிஷ்டிரர் அண்ணாந்து நோக்கி விண்மீன்களை பார்த்தார். பின்னர் நீள்மூச்சுடன் முன்னால் நடந்தார்.

சற்றே பின்னடைந்த பீமன் “இந்த மருத்துவரையா அபிமன்யூவைப் பார்க்க அனுப்புகிறேன் என்றாய்?” என்று சுபாகுவிடம் கேட்டான். “ஆம், அந்த இரு இளையோரும் உயிரின் நெறி அறிந்தவர்கள். உடலை ஆள்பவர்கள்” என்றான் சுபாகு. “உன் தமையனிடம் பேசிவிட்டு அவர்களில் ஒருவனை அனுப்பு. அபிமன்யூவுக்கு அவர்களின் மருந்துதவி தேவைப்படுகிறது. அவன் உடலில் இரண்டு புண்கள் ஆழமானவை” என்றான் பீமன். “ஆணை, மூத்தவரே” என்றான் சுபாகு. “பிதாமகர் தன் சிறுமைந்தனுக்களித்த கொடைகள் அவை. உயிர்குடிக்காதவை, உடல்வருத்துபவை” என்றான் பீமன்.

அவர்கள் மீண்டும் படைமுகப்பை வந்தடைந்தனர். காவல்நிலையில் முதிய சூதர் தன் முழவை மடியில் வைத்து தலை தொங்கிக்கொண்டிருக்க துயிலில் இருந்தார். சுபாகு நோக்குவதை பார்த்த காவலர்தலைவன் “மொந்தை நிறைய கள்ளை கொடுத்தேன். அதில் அகிபீனாவையும் சேர்த்தேன்… நாளை காலைவரை ஓசையெழாது” என்றான். யுதிஷ்டிரர் புன்னகைத்து “திறன்மிக்க சொல்லாளர். தென்னகத்து வேடர்கள் அம்புகளில் நஞ்சுபூசும் கலை தேர்ந்தவர்கள் என்பார்கள். வேட்டைவிலங்கு மயங்கிவிழவேண்டும், ஆனால் அதன் ஊனில் நஞ்சு ஏறிவிடக்கூடாது. அந்த அளவு அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் சொல்நஞ்சுக் கலைதேர்ந்தவர்” என்றார்.

அவர்கள் படைநடுவே உள்ள வெளியை அடைந்தனர். அங்கே தேர்கள் காத்து நின்றிருந்தன. யுதிஷ்டிரர் “மறவா உதவி இது இளையோனே, நன்று சூழ்க!” என அவனை வாழ்த்த சுபாகு அவருக்கு தலைவணங்கினான். பீமன் அவன் தலையைத் தொட்டு வாழ்த்திவிட்டு தேரிலேறிக்கொண்டான். நகுலனும் சகதேவனும் அவன் கால்களைத் தொட்டு வணங்கினர். அவன் வாழ்த்துச்சொற்களை முணுமுணுத்தான். அர்ஜுனன் தேரிலேறும் முன் அவனை நோக்கினான். அவன் ஏதோ சொல்ல விழைவதை விழிகளில் கண்டுவிட்டிருந்தான்.

சுபாகு “மூத்தவரே” என தாழ்ந்த குரலில் அழைத்தான். “என் மைந்தன் சுஜயன், உங்களுக்கு அவன் முகம்கூட நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவன் தந்தையென உங்களையே உளம்கொண்டிருந்தான்.” அர்ஜுனனின் முகம் உறைந்திருந்தது. “நீராடுகையில் அவனுக்காக ஒரு கைப்பிடி நீரள்ளி விடுங்கள், மூத்தவரே. சென்று நிறைக மைந்தா என ஒரு சொல் உரையுங்கள். இப்புவியில் இருந்து இனி அவன் எதிர்பார்க்க வேறேதுமில்லை.” கண்ணீர் கோக்க சுபாகு விழிகளை தாழ்த்திக்கொண்டான். அர்ஜுனன் வெறுமனே தலையசைத்துவிட்டு தேரிலேறிக்கொண்டான்.

bowசுபாகு தன் புரவியிலேறிக்கொண்டு திரும்பி கௌரவப் படைகளுக்குள் நுழைந்தான். புரவியை தளர்நடையில் விட்டு அதன் மேல் உடலை சற்று சரித்து அமர்ந்திருந்தான். அப்போது தேவைப்பட்டது துயில்தான். எங்கு படுத்தாலும் துயில்கொள்ள முடியும் என்று தோன்றியது. அவன் புரவி மேலேயே துயில்கொள்வதை அவனே நோக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான். எதிரே பூரிசிரவஸ் வந்து “எங்கு செல்கிறீர்?” என்றான். “நான் பாண்டவர்களை பார்க்கச் சென்றிருந்தேன்” என்று சுபாகு சொன்னான். “நானும் அவர்களை பார்க்கத்தானே சென்றிருந்தேன்?” என்றான் பூரிசிரவஸ். “அதெப்படி?” என்று வியந்த சுபாகு உடனே விழித்துக்கொண்டான்.

அவனுக்குப் பின்னால் புரவிக்குளம்படி ஓசை கேட்டது. பந்தவெளிச்சத்தில் பூரிசிரவஸ் அணுகுவது தெரிந்தது. அவனருகே வந்த பூரிசிரவஸ் “வணங்குகிறேன், மூத்தவரே. நான் உங்களை அழைத்துக்கொண்டிருந்தேன்” என்றான். சுபாகு “அரசியரை பார்த்துவிட்டு வருகிறீரா?” என்றான். “ஆம், தூது முடிந்து இப்போதுதான் நம் படைகளுக்குள் நுழைந்தேன்” என்றான் பூரிசிரவஸ். சுபாகு ஏதும் கேட்கவில்லை. ஆனால் பூரிசிரவஸ் அவனே தொடர்ந்தான். “நான் செல்வதற்கு முன்னரே அவர்களுக்கு செய்தி சென்றடைந்துவிட்டிருந்தது. அவர்களுக்கு முறையாக விரிவான களச்செய்திகள் சென்றுகொண்டிருக்கின்றன. போர் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே நாழிகைக்கு ஒருமுறையேனும் செய்திகள் அவர்களை சென்றடைகின்றன.”

“ஆம், அதற்காகத்தானே வந்திருக்கிறார்கள்?” என்றான் சுபாகு. “நான் சென்றபோது என் வருகையும் முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. என்னை சிறிய கூடமொன்றுக்குள் கொண்டுசென்றார்கள். அங்கே முன்னரே இரு அரசியரும் வந்து அமர்ந்திருந்தனர். இருவருமே இறுகிய முகத்துடன் இருந்தனர். யாதவப் பேரரசி முகத்திரை அணிந்திருந்தார். நான் செய்தியை முறைமைச் சொற்களில் உரைத்தேன். யாதவப் பேரரசி “எங்கள் குலத்து மூத்தவர் அவர். அவர் வீழ்ச்சிக்காக வருந்துகிறேன். பாண்டுவின் குருதியினர் அவருக்கு கடமைப்பட்டவர்கள்” என்று முறைமைச் சொல் உரைத்தார்” என்றான் பூரிசிரவஸ்.

“இது வெறும் சடங்கே” என்றான் சுபாகு. “ஆம், ஆனால் விந்தையான ஒன்று நிகழ்ந்தது. அதைத்தான் இதுவரை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான் பூரிசிரவஸ். “மூத்தவரே, பாஞ்சாலத்து அரசி மறுமொழி எதையும் உரைக்கவில்லை. அவருடைய தலையாடை முகத்தின்மேல் சரிந்திருந்தது. மங்கிய விளக்கொளியில் முகம் தெளிவுறவில்லை. அவர் அங்கிருக்கவில்லை என்னும் உள்ளுணர்வை நான் அடைந்தபடியே இருந்தேன். அது அவரல்ல, வேறு எவரையோ அரசியென கொண்டுவந்திருக்கிறார்கள் என. ஆனால் சேடியோ தோழியோ அல்ல. அந்த நிமிர்வு அவர்களுக்கு அமையாது. நான் அவரை சிலமுறை பார்த்துள்ளேன். உடலால் அவரேதான். அந்த விந்தையுணர்ச்சியை என்னால் விளக்க இயலவில்லை.”

“யாதவப் பேரரசி பாஞ்சாலத்து அரசி மறுமொழி சொல்வார் என காத்திருந்தார். அவர் மறுமொழி சொல்லிவிட்டால் அந்தச் செய்திநிகழ்வு நிறைவுற்று நான் கிளம்ப முடியும். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. நான் மீண்டும் என் செய்தியை சொன்னேன். சற்று அழுத்தியே சொன்னேன். பிதாமகரான பீஷ்மர் பாஞ்சாலராகிய சிகண்டியாலும் அர்ஜுனராலும் களத்தில் வீழ்த்தப்பட்டார். இறப்புநிலையில் படுகளத்தில் படுத்திருக்கிறார். அவர் எழுவது அரிது என்றனர் மருத்துவர் என்றேன். அப்போதும் பாஞ்சாலத்தரசி ஒன்றும் சொல்லவில்லை. யாதவப் பேரரசி மெல்ல கனைத்தார். அது செவிகொள்ளப்படாதபோது மேலும் ஒருமுறை ஓசையுடன் கனைத்தார். பாஞ்சாலத்தரசி அசைவிலாது அமர்ந்திருந்தார். அவர் ஆடை மட்டும் இளங்காற்றில் சற்றே நெளிந்தது.”

சுபாகு புரவியை நிறுத்திவிட்டு நோக்கினான். பூரிசிரவஸ் சொன்னான் “பாஞ்சாலத்து அரசி, உன் மறுமொழிக்காக பால்ஹிகர் காத்திருக்கிறார் என்று யாதவப் பேரரசி சொன்னார். நான் பாஞ்சாலத்து அரசி அறிக, பீஷ்மர் களம்சரிந்தார். அவரை வீழ்த்தியவர்கள் பாஞ்சாலராகிய சிகண்டியும் இளைய பாண்டவர் அர்ஜுனனும். அவர் நூறு அம்புகள் உடல்துளைக்க களத்தில் கிடக்கிறார். அவர் எழுவதரிது என்றேன். அவர் புலி உறுமுவதுபோல் ஓசையெழுப்பினார். நான் எண்ணியிராத தருணத்தில் எழுந்தார். அவர் தலையிலிருந்து ஆடை நழுவி விழ அவர் முகத்தை விளக்கொளியில் நன்கு கண்டேன்.”

பதற்றமான சொற்களால் பூரிசிரவஸ் தொடர்ந்தான். “அவர் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. முகம் காய்ச்சல் கண்டது போலிருந்தது. ஆம் அவன் வீழ்ந்தான். என் மைந்தனின் கையால் வீழ்ந்தான். வென்றது என் வஞ்சம். பெண்பழி நின்றுகொல்லும் என்று அறிக இவ்வுலகு என்றார். நான் திகைப்புடன் யாதவப் பேரரசியை பார்த்தேன். அவரும் திகைத்ததுபோலிருந்தார். ஆனால் விரைவிலேயே தன்னை மீட்டுக்கொண்டு எழுந்துசென்று பாஞ்சாலத்து அரசியை தோள்பற்றி மெல்ல உலுக்கி பாஞ்சாலத்து அரசி, உன் சொற்கள் எதிர்நோக்கப்படுகின்றன என்றார். பாஞ்சாலத்து அரசி துயில்கலைந்து விழித்துக்கொண்டவர்போல சிறு அதிர்வுடன் மீண்டு என்னை நோக்கினார்.”

“உன் செய்தியை சொல்க பாஞ்சாலத்து அரசி என்று யாதவப் பேரரசி சொன்னார். பாஞ்சாலத்து அரசி என்னை நோக்கியபின் என்ன செய்தி என்றார். நான் யாதவப் பேரரசியை நோக்கினேன். சொல் என அவர் விழிகாட்டினார். நான் மீண்டும் சொன்னேன். பாஞ்சாலத்து அரசி ஆம், அவர் என் மைந்தரின் மூதாதை. என் குருதிவழி அவருக்கு நீர்க்கடன் பொறுப்புள்ளது. எங்கள் விழிநீர் அவரை சேர்க. அவர் விண்புகுந்தால் எங்கள் நீரும் அன்னமும் அவரை சென்றடைக என்றார். நான் தலைவணங்கி அவ்வண்ணமே அரசி என்றேன். இருவருக்கும் மீண்டும் தலைதாழ்த்தி பின்னடிவைத்து வெளியே வந்தேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

அவர்கள் இருவரும் புரவிகளில் இணையாக சென்றனர். “அவர் சிகண்டியை தன் மைந்தன் என்றார்!” என்று பூரிசிரவஸ் மீண்டும் சொன்னான். சுபாகு ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் நெடுநேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. புரவிக்குளம்படிகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. தொலைவில் காவல்மாடம் ஒன்றில் விளக்கொளி தெரிந்தது. பூரிசிரவஸ் “அது பார்பாரிகனின் மாடம். அவன் அங்கிருந்துதான் போரை பார்க்கிறான்” என்றான். சுபாகு “ஆம், நான் பலமுறை அதை கடந்துசென்றுள்ளேன். மேலே கூர்ந்துநோக்கியதில்லை” என்றான். “இளவரசரின் ஆணைப்படி அவன் அங்கேயே இருக்கிறான். நீர் மட்டுமே அருந்துகிறான். அந்த மாடத்திலிருந்து கீழே இறங்குவதில்லை. துயில்கொள்வதுமில்லை” என்றான் பூரிசிரவஸ். சுபாகு அவனை அறியாமலேயே புரவியை அந்த மாடம் நோக்கி செலுத்தினான். அதை அணுகி புரவியை நிறுத்திவிட்டு இறங்கி மேலே பார்த்தான். பின்னர் நூலேணியில் ஏறி மேலே சென்றான். பூரிசிரவஸ் மேலே வரவில்லை.

சுபாகு பார்பாரிகனின் அருகே சென்று நின்றான். பார்பாரிகன் ஒரு மரப்பீடத்தில் அமர்ந்திருந்தான். அவன் உடல் மெலிந்திருக்கவில்லை. அமர்ந்திருக்கையிலேயே சுபாகுவின் உயரமிருந்தான். பெரிய விழிகளால் குருக்ஷேத்ரத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சுபாகு வந்ததை அறிந்ததாகத் தெரியவில்லை. “இடும்பரே, நான் சுபாகு, கௌரவன்” என்று அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். பார்பாரிகன் திரும்பி அவனை நோக்கினான். அவ்விழிகளின் கடந்த நோக்கு சுபாகுவை அச்சம்போன்ற ஒரு பதைப்பை அடையச்செய்தது. அல்லது மிக உயரத்திலிருந்து கீழே விழுவதைப்போல.

“இடும்பரே, இரவிலும் எதை பார்க்கிறீர்?” என்று சுபாகு கேட்டான். “இரவு இறந்தவர்களுக்குரியது” என்று பார்பாரிகன் சொன்னான். “இறந்தவர்களை பார்க்கிறீர்களா?” என்றான் சுபாகு. “ஆம்” என்றான் பார்பாரிகன். “அவர்கள் இங்குள்ளார்களா?” என்றான் சுபாகு. அதற்கு பார்பாரிகன் மறுமொழி சொல்லவில்லை. “அரக்கரே, சொல்க! என் உடன்பிறந்தார் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் துயருற்றிருக்கிறார்களா? அவர்கள் எங்களை எண்ணி வருந்துகிறார்களா?” பார்பாரிகன் “ஆம், துயருற்றிருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் பதற்றம் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எந்நேரமும் உங்கள் மூத்தவரை சூழ்ந்திருக்கிறார்கள்.”

“அனைவருமா? எவருமே விண்ணேறவில்லையா?” என்றான் சுபாகு. “மானுடர் விண்புகுவதற்கு இரண்டு நிறைவுகள் வேண்டும். இங்கு அவர்களின் பிறவிப்பணி முடியவேண்டும். இங்கிருந்து அவர்களை விண்ணேற்றும் அன்னமும் நீரும் செல்லவேண்டும்” என்றான் பார்பாரிகன். “அவர்களின் பிறவிப்பணி என்ன? அவர்களுக்கு எவர் நீரளிப்பார்கள்?” பார்பாரிகன் சில கணங்கள் அமைதியாக இருந்தான். பின்னர் “அவர்களிடம் உங்கள் வினாவை கேட்டேன். இக்குருக்ஷேத்ரம் நிறைவடைகையில் அவர்களின் பிறவிப்பணி முடியும் என்கிறார்கள். அவர்களுக்கு நீரளிப்பது எவர் என அப்போதே முடிவாகும்” என்றான்.

கடுமையான நீர்விடாயில் என நெஞ்சு பதைக்க சுபாகு அவனை நோக்கிக்கொண்டு சொல்லொழிந்து நின்றான். பின்னர் மூச்சைத் திரட்டி சொல்லென்றாக்கி “இடும்பரே” என அழைத்தான். “சொல்க, என் மைந்தன் சுஜயன் இங்குள்ளானா?” பார்பாரிகன் “இல்லை” என்றான். சுபாகு பதைப்புடன் “ஏன்?” என்றான். “அவன் நிறைவுற்றுவிட்டான். ஆகவே விண்புகுந்துவிட்டான்.” பார்பாரிகனின் பெரிய முகத்தை நோக்கி சுபாகு குனிந்தான். கொந்தளிப்பில் நெளிந்த உதடுகளுடன் “நிறைவென்பது என்ன?” என்றான்.

“கருபுகும் பார்த்திவப் பரமாணுவில் வந்தமையும் உயிர் ஒரு வினாவை கொண்டுள்ளது. வாழ்வென்பது அவ்வினாவின் வளர்ச்சி” என்றான் பார்பாரிகன். “அதன் விடையைக் கண்டடையும் உயிர் நிறைவடைகிறது. அவ்விடை எஞ்சியிருக்குமென்றால் மீண்டும் பிறக்கிறது.” சுபாகு “என் மைந்தன் அவன் விடையை கண்டடைந்துவிட்டானா?” என்றான். “ஆம், வினாக்கள் கோடிகோடி. விடை ஒன்றே. வினாக்களுக்கேற்ப உருக்கொள்வது அது” என்று பார்பாரிகன் சொன்னான். மேலும் என்ன கேட்பது என அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் கேட்பதற்கு ஏதோ எஞ்சியுமிருந்தது.

அவன் இறங்கிவிடலாமென எண்ணினான். உடல் திரும்புவதற்குள் உளம் திரும்பியது. அவ்வசைவில் அது வினாவை அடைந்தது. “இடும்பரே, என் மைந்தன் எப்போது விண்புகுந்தான்?” என்றான். “இன்று” என்றான் பார்பாரிகன். “எப்போது?” என்றான் சுபாகு. “அவன் களத்தில் அர்ஜுனனுடன் இருந்தான். பீஷ்மர் மேல் அர்ஜுனனின் முதல் அம்பு பட்ட கணமே மறைந்தான்” என்றான் பார்பாரிகன். கைகளை நெஞ்சுடன் சேர்த்துக் கூப்பியபடி சுபாகு அதை கேட்டுக்கொண்டு நின்றான். பின்னர் தன்னிலை உணர்ந்து வணங்கிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கினான். நூலேணியில் இறங்கும்போது அவன் கால்களும் கைகளும் நடுங்கிக்கொண்டிருந்தன.