திசைதேர் வெள்ளம் - 15

bowஅசங்கன் காவல்மேடையை நோக்கி சென்றபோது உலோகப்பரப்புகள் மின்னும் அளவுக்கு காற்றில் ஒளியிருந்தது. கதிரவன் மறைந்த பின்னரும் முகில்களின் மேற்குமுகங்கள் மிளிர்ந்துகொண்டிருந்தன. படைகள் சிறுகுழுக்களாக பிரிந்து தங்கள் அணியமைவுகளை நோக்கி சென்றுகொண்டிருக்க அதுவரை எழுந்துகொண்டிருந்த போர்முழக்கம் காற்று திசைமாறுவதுபோல் பிரிந்து கலைவோசையாக மாறிச் சூழ்ந்தது. மரப்பலகை விரிக்கப்பட்ட படைப்பாதைகளினூடாக புண்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வண்டிகள் சகட ஒலியுடன் கடந்து சென்றன. போரூழியர்களுக்கான ஆணைகளை இடும் சிறுகொம்புகள் குருவிகள்போல செவிகீறும் ஒலியெழுப்பின. அவ்வொலிகளால் களம் இணைத்து நெய்யப்பட்டது. அசங்கன் ஒரு பெரிய சிலந்திவலை என அவ்வொலி சாவுப்பரப்பென அகன்றிருந்த குருக்ஷேத்ரத்தை மூடுவதாக உள்ளத்தால் உணர்ந்தான்.

வண்டிகள் பின்கட்டையுடன் நுகம் முட்ட சென்றுகொண்டிருந்த ஏழு பாதைகளை நின்று, காத்து, இடைகண்டு கடந்து அவன் காவல் மாடத்தை அடைந்தான். அவனைக் கண்டதும் மேலிருந்த காவலன் எழுந்து சங்கொலி எழுப்பிய பின் தன் வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு மறுபக்கம் வழியாக இறங்கிச் சென்றான். அசங்கனின் நரம்புகள் தளர்வுற்று உடற்தசைகள் மெல்லிய உளைச்சலுடன் தொய்ந்திருந்தன. கணுமூங்கிலைப் பற்றி ஏறும்போது எலும்புகள் உரசிக்கொள்வதுபோல் வலித்தன. இருமுறை நின்று மூச்செறிந்து மேலே சென்றான். மேலே செல்லுந்தோறும் காற்றின் வெம்மை மாறுபடுவதை காதுமடல்களில் உணர்ந்தான்.

அசங்கன் மேலேறி காவல் மாடத்தின் சிறிய சதுரப்பரப்பை அடைந்தான். அங்கு மரக்குடைவுக்கலத்தில் குடிநீர் வைக்கப்பட்டிருந்ததையே அவன் நா முதலில் நாடியது. தன் வில்லையும் அம்புத்தூளியையும் தூணில் தொங்கவிட்டு, வேலை சாய்த்து வைத்துவிட்டு நீர் அருந்தினான். மூங்கில் நீட்சியில் உடலெடையை வைத்து கைகளைக் கட்டி நின்றதுபோல் அமர்ந்தான். மேலெழுந்ததும் கீழே நிறைந்திருந்த குருதியும் சீழும் கலந்த கெடுமணம் சற்றே குறைந்து நெஞ்சு ஆறுதல் கொண்டது. குமட்டி அதிர்ந்துகொண்டிருந்த வயிறு சற்றே அமைந்தது.

அங்கிருந்து பார்த்தபோது இரு படைகளும் மேலும் மேலுமென விலகி தங்களுக்குள் சுருங்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. சேறு உலர்ந்து வெடிப்பதுபோல் படைப்பெருக்கின் நடுவே நூற்றுக்கணக்கான பாதைகள் உருவாயின. அவை பெருகி ஒன்றுடன் ஒன்று இணைந்தன. பின் நேராகி வகுக்கப்பட்ட வயல்வரப்புகளென்றாயின. நாற்றுநிரைபோல படையணிகள். அவற்றுக்குள் மேலும் மேலும் சிறிய அணிகளாக தங்களை தொகுத்துக்கொண்ட படைவீரர்கள் ஆங்காங்கே அமர்ந்தும் படுத்தும் ஓய்வு கொள்ளத்தொடங்கினர்.

அவன் பெருமூச்சுவிட்டபடி மருத்துவநிலைகளை நோக்கி ஒழுகிச் சென்றுகொண்டிருந்த வண்டிநிரைகளை பார்த்தான். முந்தைய நாள் புண்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துவிட்டிருந்தமையால் இப்போது செல்பவர்களுக்கு இடம் தேடுவது அரிதானதாக இருக்காது என்று தோன்றியது. இரண்டு நாள் போரிலேயே பாண்டவப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருந்தது. இனிவரும் போரில் தொடர்ந்து கொன்று குவிக்கப்பட்டாலும்கூட புண்பட்டோரும் இறந்தோரும் எண்ணிக்கை குறைவாகவே இருப்பார்கள் என்று அவன் மேலும் கசப்புடன் எண்ணிக்கொண்டான். தன் உடலில் குடியேறிய குமட்டல் உள்ளத்தில் உணர்வாக மாறி எல்லா எண்ணங்களுடனும் கலந்துவிட்டிருந்ததை அறிந்தான்.

மருத்துவநிலைக்குச் சென்று பார்க்கவேண்டுமென்று அவன் உள்ளம் விழைந்தது. ஆனால் பகல் அவனுக்கு அயலாகிவிட்டிருந்தது. விடிந்ததுமே படைகளுக்குப் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த இடையளவு உயரமான தோல் கூடாரங்களுக்குள் புகுந்துகொண்டு துயிலவேண்டுமென்று ஆணை. இரவில் பணியாற்ற வேண்டிய மருத்துவர்களும் ஏவலரும் சுடலைப் பணியாளர்களும் பிறரும் பகலில் எங்கும் நடமாடக்கூடாது, துயின்றே ஆகவேண்டுமென்று ஏவலர் படைகளை ஆண்ட சிகண்டியின் பிறழ்விலா ஆணை இருந்தது. முதல்நாள் போரில் எழுந்து செவிகளைத் துளைத்து, உடலெங்கும் விதிர்ந்து, வயிற்றையும் நெஞ்சையும் அதிரவைத்த பெருமுழக்கத்தால் அவனால் சற்றும் துயில இயலவில்லை. அவ்வோசையில் அவன் மிதந்து அலைந்தான். அவனுள் அது போர்வெளி ஒன்றை உருவாக்கியது.

பலமுறை எழுந்து அமர்ந்தான். அவனருகே படுத்திருந்த முதுகாவலர் உக்ரர் “எழுந்தமர்வது தண்டனைக்குரியது. படுத்துக்கொள்ளுங்கள், இளவரசே” என்றார். “என்னால் துயில முடியவில்லை. இப்போரொலி என்னை பித்தனாக்குகிறது” என்றான். “இன்று எவராலும் துயில இயலாது, ஏனெனில் இவ்வொலி புதியது. நாளை பெரும்பாலானவர்கள் துயின்றுவிடுவார்கள். இவ்வொலியை நம் துயிலுக்குரிய தெய்வங்கள் புரிந்துகொண்டுவிடும்” என்றார் அவர். பதைக்கும் குரலில் “அங்கு பல்லாயிரவர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். “ஆம், அதனால் என்ன? போரென அறிந்துதானே இங்கு வந்தோம்?” என்றார் அவர். அசங்கன் பற்களை ஓசையெழக் கடித்து உள்ளங்கையில் நகங்கள் புதையுமளவுக்கு இறுகப்பற்றி குனிந்து அமர்ந்திருந்தான்.

“அகிபீனா இருக்கிறது, உண்கிறீர்களா?” என்றார் உக்ரர். “இல்லை, வேண்டாம்” என்றான். உக்ரர் “போரை நடத்துவதாயினும் இதுவன்றி எவரும் களம் நின்றாட இயலாது. கொல்வதும் அதுவே, வலி தாங்கச்செய்து உயிர் பிழைக்க வைப்பதும் அதுவே” என்றார். கையூன்றி எழுந்து தன் சிறு தோல்பையிலிருந்து கரிய உருளை ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டி “வாயிலிட்டு அதக்கிக்கொள்ளுங்கள். கரைந்து ஊறும் எச்சிலை மட்டும் விழுங்கிக்கொண்டிருங்கள்” என்றார். “வேண்டாம்” என்றான். “வெல்லமிட்டு உருட்டப்பட்டது. இனிய சுவையுடையது. உங்கள் உள்ளம் இப்போது கொடுங்காற்றில் கொடிக்கூறை என பறந்துகொண்டிருக்கும். அதை எடைகொண்டு அமையவைக்க இதனால் இயலும்” என்றார். அவன் பேசாமல் அமர்ந்திருக்க “தயங்கவேண்டாம். தங்கள் தந்தை உட்பட இந்தப் போரில் அகிபீனா உண்ணாத எவருமில்லை” என்றார்.

அவன் ஏன் தயங்கினான் என்பது அவனுக்கு தெரிந்தது. அதை வாங்கி கையில் உருட்டிப்பார்த்தான். ஆட்டுப்புழுக்கை போலிருந்தது. அவர் புன்னகைத்து “ஆட்டுப்புழுக்கை போலவேதான். ஆட்டுப்புழுக்கையின் அளவே ஒரு மாத்திரை என்பார்கள். உண்ணுங்கள்” என்றார். அவன் அதை தன் வாயிலிட்டு உதடுகளை மூடிக்கொண்டு மீண்டும் படுத்தான். வெல்லத்தின் முதற்சுவைக்குப் பிறகு மென்கசப்பு கொண்ட தழைச்சுவை எழுந்தது. தழை உண்ட ஆட்டின் புழுக்கை. மெல்லிய குமட்டல் எழுந்தாலும் இனிப்பு அதை உணவென்று ஆக்கியது. வழுவழுப்பான எச்சில் சுரந்து தொண்டையை நனைத்தது. அதை அவன் விழுங்கிக்கொண்டே இருந்தான்.

கண்ணை மூடியபோது ஓசைகள் மிக அருகிலெனத் தெரிந்தன. கூடாரங்களுக்கு மேல் அம்புகள் பறந்து செல்வது போலவும் அலறி விழுபவர்கள் கூடாரத்தை சுற்றியே சிதறிக்கிடப்பது போலவும் தோன்றியது. கூடாரத்தின் கீழ்விளிம்புகளினுடாக குருதி ஊறி உள்ளே வருகிறது. தரையில் நனைந்துகொண்டிருக்கும் செங்குருதி. அதன் வெம்மை எழும் குமிழியுடைவுகளின் மெல்லிய ஓசை. மண்ணில் அது ஊறி இறங்குவது வெங்கல்லில் நீர் கொதித்து மறைவதுபோல ஒலித்தது. குருதி வழிந்து அவன் உடலை நோக்கி வளைந்து வந்தது. அவன் எழ விரும்பினான். அவன் உடல் முற்றாக உதிர்ந்து சிதறி தனித்தனித் துண்டுகளாக கிடந்தது. அதை குருதி தழுவியது. அவன் படுத்திருந்த மண்பரப்பு சேறாகி நெகிழ்ந்து அவன் உடலை வாங்கிக்கொண்டது. குருதியில் அவன் மிதந்து கிடந்தான்.

வெம்மையான குருதி வியர்வைபோல் அவன் உடலை முற்றாக மூடியது. ஓசைகள் மிகத் தொலைவிலென அகன்று சென்றுவிட்டிருந்தன. வேறெங்கோ நிகழ்கின்றது போர். அவன் தன் கைகால்கள் துண்டாகி குடிலுக்குள் வெவ்வேறு மூலைகளிலாக கிடப்பதை உணர்ந்தான். அந்தக் கால்களின்மேல் கடிக்கும் கொசுக்களை உணரமுடிந்தது. தலை எடைமிக்க இரும்புக்குண்டென முருக்கு மரத்தடியாலான தலையணைமேல் படிந்திருந்தது. அதை அசைக்க எண்ணினான். அவ்வெடை கழுத்தை தெறிக்க வைத்தது. இருண்ட வானை பார்த்தபடி படுத்திருந்தான். இது வானல்ல, தோல் கூடாரத்தின் அடிப்பரப்பு. ஆனால் அங்கு விண்மீன்கள் எப்படி வந்தன? விண்மீன்களின் ஒளிகள் நீண்ட வெள்ளிச்சரடுகளாக நீண்டு வந்தன. அவன் உடலை அம்புகளாக துளைத்தன. மண்ணுடன் அவனை அசையவிடாமல் தைத்தன. ஒளிரும் வெள்ளிக்கம்பிகள். கூரியவை, குளிர்ந்தவை. விண்மீன்களுக்கு நடுவே இருக்கும் இருளுக்குள் எவரோ அசைகிறார்கள். வான்படலத்தைக் கிழித்து உதிர முயல்கிறார்கள்.

மேலும் மேலும் விண்மீன்களை அள்ளிப்பரப்பினர். எவரோ “மூன்று” என்றார். என்ன சொல்கிறார்? “மூன்று!” என்று மிக அருகில் ஒலித்தது மீண்டும் ஒரு குரல். “மூன்று.” அதற்கு என்ன பொருள்? மூன்று! மூன்று! மூன்று என்பது ஓர் எண். அதன் பொருளென்ன? மூன்று என்பது ஒரு சொல். ஒரு சொல் எப்படி எண்ணிக்கையை குறிக்கிறது? ஒற்றைச்சொல்லில் எப்படி பல்லாயிரங்களை குறிக்கமுடிகிறது? மூன்று! மீண்டும் அவன் மூன்று என உணர்ந்தபோது ஓசைகள் மாறுபட்டிருந்தன. அவனருகே உக்ரர் எழுந்து அமர்ந்திருந்தார். அவன் பதறி “என்ன? என்ன?” என்றான். வேலுடன் பெரும்படை ஒன்று வாயிலில் நின்றுள்ளதா என்ன? கொலைவெறியுடன் அவனுக்காக வந்தவர்கள்?

“பொழுதணையத் தொடங்குகிறது. இன்னும் சற்று நேரத்தில் படை பின்வாங்குவதற்குரிய முரசுகள் ஒலிக்கும்” என்றார் உக்ரர். “எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். அவர் கூடாரத்தின் சிறிய ஊசித்துளையினூடாக உள்ளே விழுந்து கிடந்த ஒளிக்கோட்டின் சாய்வை சுட்டிக்காட்டினார். அவன் “நான் துயின்றுவிட்டேனா?” என்றான். “ஆழ்துயில்” என்றார். கரிய பற்கள் தெரிய சிரித்து “முதல்முறையாக அகிபீனாவை எடுக்கிறீர்கள். ஆகவே நற்பயன் கிடைத்துள்ளது” என்றார். அசங்கன் சோர்வுடன் “நான் துயின்றிருக்கக்கூடாது” என்றான். “ஏன்?” என்று அவர் கேட்டார். “போர்! அதை பார்க்கவே இத்தனை தொலைவு வந்தேன். இது ஓர் அருந்தருணம்.”

உக்ரர் புன்னகைத்து “உங்களுக்கான தருணம் வாய்க்கவேண்டும். அப்போது திகட்டத் திகட்ட பார்ப்பீர்கள்” என்றார். “என்னை காக்க எண்ணுகிறார் திருஷ்டத்யும்னர். ஆகவேதான் காவலுக்கு அனுப்பியிருக்கிறார்” என்றான். உக்ரர் “சென்றவர்களில் மீண்டவர்கள் குறைவு. இன்னும் சில நாட்கள் கடக்கையில் இங்குள்ள ஏவலர்களிடம்கூட படைக்கலத்தை அளித்து போர்முகப்புக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தோன்றுகிறது” என்றார். வாய்விட்டு நகைத்து “ஆகவே உங்களுக்கும் வாய்ப்பு வரும். கலங்கவேண்டாம். நாமெல்லாம் களப்பலியாவது தெய்வங்களுக்கு உகந்ததோ இல்லையோ அரசர்களுக்கு தேவையானது” என்றார்.

அவன் கையூன்றி எழுந்தபோது உடலுக்குள் திரவங்கள் குலுங்க கூடாரம் படகென மிதந்தது. “முதலில் சற்று குமட்டும். வாயுமிழத் தோன்றினால் உமிழ்ந்துவிடுங்கள். நிறைய வெல்லமிட்டு ஒரு மொந்தை புளிப்புநீர் அருந்தினால் உடலிலிருந்து அகிபீனா வெளியே செல்லும்” என்றார். “தெளிந்துவிடுவேனா?” என்றான். “இல்லை, அகிபீனா உடலிலிருந்து செல்ல ஒரு முழு நாளாகும். ஆனால் அது உடலில் இருப்பது நல்லது. மேலே காவலுக்கு அமர்கையில் காலத்தை அது அழுத்தி சுருட்டி அளிக்கும்” என்றார் உக்ரர். “நான் காவலுக்கு நன்கு பழகியிருக்கிறேன்” என்றான் அசங்கன். “ஆம். ஆனால் போர் முடிந்த இரவின் காவலுக்கு இன்னும் பழகவில்லை” என்றபின் உக்ரர் மீண்டும் புன்னகைத்தார். அவனை சிறுகுழவியெனக் கருதும் புன்னகை. அவன் எரிச்சலுடன் திரும்பிக்கொண்டான்.

அவன் வெளியே சென்று முகங்கழுவ குனிந்தபோது வயிறு குமட்டி உடல் உலுக்கியது. மும்முறை வாயுமிழ்ந்து கொப்பளித்த பின் கண்கள் சுழல அங்கு அருகிலேயே மரத்தடியில் அமர்ந்து தலையை அடிமரத்தில் சாய்த்துக்கொண்டான். உக்ரர் அவரே சென்று பெரிய மொந்தை நிறைய புளித்தநீர் கொண்டுவந்து அளித்தார். அதை பார்த்ததுமே அவன் வயிறு குமட்டியது. “வேண்டாம்” என்றான். “அருந்துக! இது உங்கள் ஆற்றலை மீட்டளிக்கும். அருந்தாமல் உங்களால் காவல்மாடத்தில் கணுமூங்கில்மேல் ஏற முடியாது” என்றார்.

அவன் அதை வாங்கி இரு கைகளாலும் பற்றி முகர்ந்தான். மீண்டும் வயிறு குமட்டி எழுந்தது. அவன் முகம் சுளிப்பதைக் கண்டு “முதல் மிடறு வயிற்றுக்குள் இருக்கும் அமிலத்தை கரைக்கும். அதன் பின்னர்தான் விடாய் எழும்” என்றார். அவன் கண்களை மூடிக்கொண்டு இரு மிடறு விழுங்கினான். வயிற்றுக்குள் நெருப்பின் அலை ஒன்றெழுந்து கொப்பளித்து அடங்கியது. அவர் கூறியது போலவே விடாய் எழுந்து மேலும் மேலுமென நீர் கேட்டது. அவன் முழுக் கொப்பரையையும் குடித்து நிலத்தில் வைத்து வாயை துடைத்தபின் கண்களை மூடி அமர்ந்தான். “சில கணங்களில் உடலெங்கும் இந்த நீர் சென்று நெருப்பை அணையவைப்பதை காண்பீர்கள்” என்றார் உக்ரர்.

நன்கு வியர்த்து மெல்லிய தலைசுற்றலுடன் அவன் விழிதிறந்தபோது அருகில் உக்ரர் இல்லை. மரத்தைப் பற்றியபடி எழுந்து நின்றான். உடல் நிலைகொண்டுவிட்டதுபோலத் தோன்றியது. ஆனால் கால்களைத் தூக்கி வைத்தபோது ஒவ்வொரு அடிக்கும் காற்றில் எழுந்து மிதந்து நெடுந்தொலைவு செல்வதுபோல எண்ணினான். பலரை தலைக்குமேல் கடந்து காலூன்றுவதுபோல. வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு கணுமூங்கிலருகே சென்று நின்றான்.

பின்னர் உணர்ந்தபோது காவல் மாடத்தின்மேல் இருந்தான். சூழ நோக்கியபோது பந்தங்கள் ஒவ்வொன்றாக எரிந்துகொண்டிருப்பதை கண்டான். பல்லாயிரம் மானுட உடல்கள் விழுந்து கிடக்கும் பெரும்பரப்பு. அதை எந்த எண்ணமுமில்லாமல் நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் திரும்பி மறுபுறம் காடுகளுக்குள்ளிருந்து விளக்கொளிச் சரடுகளாக வந்துகொண்டிருந்த கிராதர்களையும் நிஷாதர்களையும் பார்த்தான். பின்னர் உணர்ந்தபோது ஓசைகள் அடங்க தென்மேற்கே சிதைநெருப்புகள் காட்டுத்தீபோல எழுந்து தழலாடுவதை பார்த்தான். தீ சிதறிச் சிதறி கிழிந்து வானில் எழ விழிவிலக்கவொண்ணாது நோக்கிக்கொண்டிருந்தான். ஒருமுறை நோக்கினால் அதிலிருந்து விலக நெடுநேரமாயிற்று. பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள். பின்னர் தன்னை உணர்ந்தபோது வானில் ஒளி எழுந்திருந்தது.

அவன் உடலை எடை தாளா கணுக்கால்கள் தெறிக்க, நிலையழிந்து தோள்கள் ஊசலாட சுமந்து சென்று தன் குடிலை அடைந்தான். அங்கிருந்த உக்ரர் அவனை நோக்கி புன்னகைத்து “அகிபீனா இன்று தங்களுக்கு தேவைப்படுமா, இளவரசே?” என்றார். “ஆம், வேண்டும்” என்று அவன் சொன்னான். “அது இன்றி துயில இயலாது.” உக்ரர் கனிவுடன் “எடுத்துவைத்திருக்கிறேன்” என்றார். “என் இளையோர்… அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். “போரில் உறவுகளுக்கு பொருளேதுமில்லை. எங்கிருந்தாலும் அவர்களுக்கும் எவரேனும் அகிபீனா அளித்திருப்பார்கள். உண்க!” என்றபடி அவர் சிறிய கரிய உருளையை எடுத்து அளித்தார். அவன் அதை வாங்கி வாயிலிட்டு அதக்கியபடி கண்களை மூடி படுத்துக்கொண்டான்.

அதன் இனிய சாறு உடலுக்குள் ஒழுகி இறங்கியது. அவன் படுத்திருந்த தரை மெல்லிய ஊன்பரப்பென்றாயிற்று. மூச்சுவிடும் பசுவின் வயிற்றின்மேல் படுத்திருப்பதுபோல அசைந்தது. எங்கோ முரசொலிகள் எழுந்தன. அம்புகளின் சிறகதிர்வு. அலையோசை. பாறைகள்மேல் அலைத்து மலைச்சரிவில் இறங்கிச்செல்லும் நீர்ப்பெருக்கின் ஓசை. அவன் கண்களுக்குள் ஒரு ஒளிப்புள்ளியை பார்த்தான். மின்மினிபோல அது எழுந்து எழுந்து பறந்து சுழன்றது. உள்ளத்தால் அதை பற்ற முயன்றான். அது எழுந்து இருளில் விழுவதுபோல் தொலைவுக்குச் சென்றது. அதை தொடர்ந்து அவனும் சென்றான். செல்லச் செல்ல விசை கூடிக்கொண்டே சென்றது. முடிவிலி நோக்கி அவன் விழுந்துகொண்டே இருந்தான்.

விழித்துக்கொண்டபோது முதலில் திரும்பி விழிதுழாவி அந்த ஒளிச் சரடைத்தான் பார்த்தான். முந்தைய நாள் போலவே வெள்ளிக்கம்பியென அது நிலத்தில் ஊன்றி நின்றிருந்தது. விரல் நீட்டி அதன் முனையை கையிலேந்தினான். விரல்கள் குருதி நனைந்ததுபோல் சிவந்திருந்தன. ஆனால் உள்ளங்கையில் ஒரு வெள்ளிநாணயம். உக்ரர் “பொழுதாகிறது, இளவரசே” என்றார். “ஆம்” என்றபடி அவன் எழுந்துகொண்டான். அன்று குமட்டலெடுக்கவில்லை. புளிநீர் அருந்தியபோது உடல் ஆற்றலை மீட்டெடுத்தது. வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது தன் இளையவரை பார்த்தான். அவர்கள் தலைவணங்கி முகமனுரைத்தனர். “எந்தக் காவல்மாடம்?” என்று அவன் சாந்தனிடம் கேட்டான். “வடமேற்கு, எட்டு” என்று அவன் சொன்னான். அவன் விழிகள் அவனறிந்த சாந்தனை காட்டவில்லை.

உத்ஃபுதன் “நாம் போர்முகத்துக்கு செல்லபோவதில்லையா, மூத்தவரே?” என்றான். “படையில் நமது பணியை நாம் வகுக்க இயலாது. எப்பணியாயினும் அதை முற்றிலும் சிறப்பென முடிப்பது நமது கடன்” என்று அவன் சொன்னான். “நேற்று பீஷ்ம பிதாமகர் பலநூறு இளவரசர்களை கொன்று வீழ்த்தியிருக்கிறார் என்று அறிந்தேன்” என்றான் உத்ஃபுதன். “ஆம், அதனால் என்ன?” என்றான். “களம் சென்றிருந்தால் ஒருவேளை நாமும் அவர் வில்லுக்கு இரையாகியிருப்போம்” என்றான் சாந்தன். அவன் “களம் வந்தபிறகு வாழ்வும் இறப்பும் ஒன்றே” என்றான். அவர்களின் விழிகள் சொற்களை வாங்கும் நிலையில் இருக்கவில்லை. அவற்றில் அவன் என்றும் காணாத ஒரு விலக்கம் குடியேறியிருந்தது. இளையோரின் தோள்களைத் தட்டி விடைகொண்டு தன் காவல்மாடம் நோக்கி நடந்தான்.

மேலிருந்து நோக்கியபோது காடுகளுக்குள் சிறிய பந்தங்களும் விளக்குகளும் ஒளிரத் தொடங்கியதை கண்டான். அவை அணிவகுத்து அனல்வேர்ப்பரப்புகள் என்றாகி இணைந்து பெருவேராகி பாண்டவப் படைகளை நோக்கி வந்தன. காவல்மாடங்களில் இருந்தவர்கள் வருபவர்களை தொலைவிலேயே அடையாளம் கண்டு அவர்கள் மலைப்பொருட்களுடன் வரும் நிஷாதர்களும் கிராதர்களுமென உறுதிசெய்து அதை முழவொலியினூடாக அறிவித்தனர். மருத்துவநிலைகளில் அனைத்துப் பலகைகளும் நிரம்ப, வெளியே திறந்தவெளியில் நிலத்தில் மரவுரிகளையும் பாய்களையும் விரித்து புண்பட்டவர்களை படுக்கவைத்திருந்தனர். அவர்களுக்கு நடுவே சிறுதூண்களில் அகல் விளக்குகளை பொருத்தும் ஏவலர்கள் அலைகளில் சுடர்விளக்கென அலைந்தனர்.

அங்கிருந்து பார்க்கையில் விளக்குகளின் அருகில் படுத்திருந்தவர்கள் மட்டுமே தெரிந்தனர். பலர் வலி தாளாமல் புரண்டும் அசைந்தும் நெளிந்துகொண்டிருந்தனர். மருத்துவநிலைகளை நோக்கி வண்டிகளில் தேன்மெழுகும் அரக்கும் மரவுரியும் சென்றுகொண்டிருந்தன. புண்பட்டவர்கள் முழுக்க களத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகே உடல்களை எடுப்பதற்குரிய வண்டிநிரைகள் செருகளம் நோக்கி சென்றன. அவை தெற்குமூலையில் நெருங்கிச் செறிந்து மறுமுனை காட்டில் உள்ளே புதைந்திருக்க காத்து நின்றிருந்தன. புரவிகள் படை நடுவே விரிந்த மரப்பாதையினூடாக தடதடத்தோடின.

சிகண்டி ஏவலர்நிரை நடுவே கூந்தல்அலைகள் தோளில் புரள செல்வதை அவன் கண்டான். அவர் அவர்களின் நடுவே சென்று நிற்க ஏவலர்தலைவர்கள் சூழ்ந்து வணங்கினர். புரவியிலிருந்து இறங்கி அவர்களுக்கு கைநீட்டி சுட்டி ஆணையிட்டபடி அவர் சென்றார். அவரை நோக்கிக்கொண்டிருந்த அசங்கன் மிகத் தொலைவில் மரவுச்சியில் நின்றிருந்த காவலர்களில் ஒருவன் எழுப்பிய ஓசையைக் கேட்டு திரும்பி நோக்கினான். வேய்மூங்கில் ஊதுகுழலால் விந்தையான பறவைக்குரல் ஒன்றை அவன் எழுப்பினான். “அறியாதோர்! அயலோர்!” எச்சரிக்கை அடைந்து அசங்கன் எழுந்து காட்டுக்குள் விழிகூர்ந்து பார்த்தான். அவ்வொலியை அருகிலிருந்த பிற காவல்மாடங்களில் இருந்தவர்களும் கேட்டுவிட்டிருந்தனர். ஆனால் எதுவும் விழிக்கு தெரியவில்லை.

முதற்காவல்மாடத்திலிருந்து கொம்போசை எழ தொடர்ந்து அனைத்துக் காவல்மாடங்களிலும் கொம்போசை எழுந்தது. பின்புறம் படைகளிலிருந்து காவலர்கள் எச்சரிக்கை அடைந்து முழவுகளை ஒலிக்கத் தொடங்கினர். முகப்பில் இரண்டாவது சீழ்க்கை ஒலித்தது. பின்னர் காடுகளுக்குள் கோபுரமென எழுந்த தேவதாரு மரங்களின் மேலிருந்த காவலர்களின் குறுமுழவுகள் பேசலாயின. “அரக்கர் குடியினரின் படை ஒன்று அணுகுகிறது. ஆயிரத்தவர். படைக்கலங்கள் ஏந்தியிருக்கிறார்கள். முகப்பில் வருவோன் பேருருவன். அவர்கள் அனைவருமே பேருருக் கொண்டவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மரங்களினூடாக பறப்பவர்கள்போல் தாவி வருகிறார்கள்.”

அசங்கன் அவர்களை நோக்கும்பொருட்டு காவல்மாடத்தின் விளிம்பில் வந்து நின்று விழிகூர்ந்தான். இருட்டு பரவத்தொடங்கியிருந்த பெருங்காட்டுக்குள் மெல்லிய காற்று வருவது போன்ற இலையசைவு தெரிந்தது. அனைத்துக் காவல்மாடங்களிலும் வில்லவர் நாணில் அம்பு தொடுத்தனர். பின்புறம் பாண்டவப் படையிலிருந்து காவல்வீரர்கள் பூட்டிய விற்களுடனும் வேல்களுடனும் வந்து கூர்வேல் வடிவில் ஒருங்கு திரண்டனர். ஏழு படைமுகப்புகளாக மாறி மருத்துவநிலைகளையும், ஏவலர் நிலைகளையும், அடுமனை நிரைகளையும், கடந்து அப்பால் சென்று வருபவர்களுக்காக காத்து நின்றனர்.

அசங்கன் இருளில் விழிதெளிய முதலில் வருபவனை பார்த்தான். முற்றிலும் மயிரற்ற பெரிய மண்டை கலம்போல ஒளியுடன் இருந்தது. கன்னங்கரிய பேருடல். கைகள் போலவே கால்களாலும் அவனால் கிளைகளை பற்றமுடிந்தது. மரக்கிளைகளினூடாக இயல்பாகத் துள்ளி காற்றில் எழுந்து தாவி மறுகிளை பற்றி பறந்து வந்து நிலத்தில் இறங்கி இரு கைகளாலும் தரையை ஓங்கி அறைந்து தலைதூக்கி அறைகூவலோசை எழுப்பினான். எதிரே பாண்டவப் படையில் ஆயிரம் விற்கள் அம்புகளுடன் நாணிழுபட்டன. அவன் அப்படைகளைக் கண்டாலும் ஒரு பொருட்டாக கருதவில்லை. அவனைத் தொடர்ந்து வந்த அரக்க வீரர்கள் கைகளில் கல்லுருளை கொண்ட கதாயுதங்களையும் கூர்முனைகொண்ட மிக நீண்ட ஈட்டிகளையும் விற்களையும் வைத்திருந்தனர். அனைவருமே தங்கள் கைகளால் நெஞ்சில் ஓங்கி அறைந்து ஓசையெழுப்பினர். ஒரு போர்முனை இறுகித் திரள்வதுபோலிருந்தது.

அசங்கன் தன் கொம்பை எடுத்து ஊதினான். “பொறுங்கள்! பொறுங்கள்! அவரை நான் அறிவேன்!” என்றான். “நான் யாதவ அரசகுடியினன். பாஞ்சாலியின் கணவன். நான் அறிவேன் அவரை!” கொம்பின் மொழி கேட்டு கீழிருந்த காவல்படை வீரர்கள் அண்ணாந்து மேலே பார்த்தனர். “அவரை நானறிவேன்! அவரை நானறிவேன்!” என்று கொம்பு முழக்கியபடி கணுமூங்கிலினூடாக கீழிறங்கி விரிந்த நிலத்தில் புதர்களையும் பெருஞ்செடிகளையும் தாவிக்கடந்து அசங்கன் முன்னால் ஓடினான்.