செந்நா வேங்கை - 80

tigஉத்தரன் களம்பட்ட செய்தியை முரசுகளின் ஓசையிலிருந்து ஸ்வேதன் அறிந்தான். விராடர் களத்தில் விழுந்த செய்தியால் விராடப் படையினர் உளஎழுச்சி அணைந்து ஒருவரை ஒருவர் தோளோடு தோள்பட அழுத்தியபடி பின்னகர்ந்துகொண்டிருந்தனர். உத்தரன் இறந்த செய்தி அவர்களை மேலும் தளரச்செய்தது. உடலில் இருந்து உடலுக்கெனப் பரவிய சோர்வு அவர்களை அலைவளைவென பின்னகரச் செய்தது. படைகளின் பின்னால் இருந்த அறிவிப்பு மேடையிலிருந்து “விராடப் படைகளை தடுத்து நிறுத்துங்கள். அவை கலைந்து குவிவதை தடுங்கள். அவற்றுக்கிடையே ஐந்து விரல்களென பாஞ்சாலத்தின் படைகளும் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளும் ஊடுருவட்டும். ஒவ்வொரு விராடப் படைப்பிரிவுடனும் பிற படைப்பிரிவு ஒன்று இணைந்திருக்கவேண்டும். பின்னடைவை நிறுத்துக! ஒருமுனை கொண்டு எழுந்து நில்லுங்கள்!” என்று ஆணை வந்துகொண்டிருந்தது. அந்த ஆணையால் சிறுமையுணர்ந்த ஸ்வேதன் தன் படைகளை நோக்கி “முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!” என்று கூச்சலிட்டான்.

விராடர்களின் உளநிலையை குலாடர்களும் அடைந்தனர். அவர்களுக்கிடையே எந்த ஒப்புமையும் உரையாடலும் இல்லாத போதும்கூட உடல்மொழியால், புரவிகளை செலுத்தும் முறையால் ஒருவரோடொருவர் அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். தன்னுடைய படை பின்னால் செல்வதைக் கண்டு ஸ்வேதன் கையை தூக்கி “பின்னிருக்கும் படை அசையாமல் நிற்க வேண்டும். பின்னிருந்து தேர்நிரையொன்று முன்னால் காலாட்களை உந்தி வரவேண்டும். புரவிப்படைவீரர்கள் பதினெட்டு பிரிவுகளாக பிரிந்து தங்கள் நடுவே காலாட்படைகளுக்கு இடங்கொடுங்கள். புரவிப்படையும் காலாட்படையும் இணைந்து முன்னகர வேண்டும்” என்று ஆணையிட்டான்.

புரவிப்படை காலாட்கள் நடுவே செல்லும்போது அதன் விரைவு குறைகிறது.  விரைவு குறைவது ஆற்றலை குறைக்கும். ஆனால் பின்நகர்கையில் அதுவே பின்நகர்வதற்குரிய தடையுமென்றாகி படையை நிறுத்தும். “முன்நகர்க! முன்நகர்க!” என்று கூவியபடி அவன் தன் தேரை எதிர்த்து வந்துகொண்டிருந்த கௌரவப் படைகளின் நடுவே நிறுத்தி அம்புகளால் தாக்கிக்கொண்டிருந்தான். கௌரவ நூற்றுவரும் இருண்ட கோட்டைச்சுவரென தங்கள் தேர்களில் நின்றவாறு பிறை வடிவில் அவனை சூழ்ந்துகொண்டிருந்தனர். உலோகநீரலை ஒன்று உலோகநீரலையைச் சந்திப்பதுபோல அம்புகளால் முட்டியபடி அவன் துச்சகனை எதிர்கொண்டான். அம்புகளால் பொருதி ஒருசிறு இடைவெளியினூடாக துச்சகனின் கவசத்தை உடைத்தான். அவன் நெஞ்சிலும் தோளிலும் அம்பை செலுத்தி தேர்த்தட்டில் விழவைத்தான். அவனை காக்கும்பொருட்டு இடைபுகுந்த துர்மதனின் தலைக்கவசத்தை சிதறடித்து அவன் காதை சீவி எறிந்தான். பிறிதொரு அம்பினால் அவன் கழுத்தில் தாக்கி குருதி பீறிட தேரிலிருந்து பாய்ந்திறங்கச் செய்தான்.

விந்தனும் அனுவிந்தனும் அவர்களின் காவலுக்கு வர அவர்களை ஒரே தருணத்தில் எதிர்கொண்டான். தொடைக்கவசம் உடைந்து தெறிக்க அம்பு பாய்ந்து தேரிலிருந்து புரண்டுவிழுந்த விந்தனை படைவீரர்கள் சூழ்ந்தனர். அனுவிந்தன் தன் புரவியை இழுத்தபடி பின்னால் சென்றான். துச்சலன் “கொல்லுங்கள் அந்த விராடனை! கொல்லுங்கள் நிஷாதனை! அவனை கொல்லாமல் இன்னொரு அடியை நாம் முன்னெடுக்க இயலாது” என்று கூவினான். உரக்க நகைத்தபடி ஸ்வேதன் “என்னை கொல்ல உங்களால் இயலாது, கௌரவரே. நான் வில்விஜயனின் மாணவன்” என்று கூவினான். சதாசுவாக், உக்ரசிரவஸ், உக்ரசேனன், சேனானி ஆகியோர் வில்கொண்டு முன்னால் வந்தனர். அவர்களின் விற்களை உடைக்கவும் கைகளிலும் தோளிலும் கவசங்களை உடைத்து அம்புகளை செலுத்தவும் அவனுக்கு சில கணங்களே தேவைப்பட்டன.

அத்தருணத்தில் துச்சலன் எய்த அம்பு வந்து அவன் நெஞ்சுக் கவசத்தை தாக்கியது. அவன் நிலைகுலைந்து தேர்த்தட்டில் முழங்காலிட்டு அமர தலைக்கவசத்தை பிறிதொரு அம்பு உடைத்துச் சென்றது. தான் ஓர் அடி பின்னகர்ந்தால்கூட தன் ஒட்டுமொத்தப் படையும் இடிந்து பின்னால் சரியும் என்று உணர்ந்து “முன்நகர்க! முன்நகர்க!” என்று கூவியபடி ஸ்வேதன் தேரை செலுத்தினான். அவனைத் தொடர்ந்து குலாடர்களின் படை முட்டித்ததும்பி வந்தது.  “ஒரு கணமும் நில்லாதீர்கள்! அம்பு தொடுங்கள்! தயங்கவேண்டாம்!” என்று அவன் கூவினான். பின்னாலிருந்து சாத்யகியின் மைந்தர்கள் உத்ஃபுதனும் சந்திரபானுவும் சபரனும் சாந்தனும் முக்தனும் தேரில் வந்தனர். பாஞ்சால மைந்தர்கள் திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் மனாதனும் உடன் எழுந்து வந்தனர். படைகளிலிருந்த இளையோரின் திரளொன்று அவனைச் சூழ அவர்கள் வெறிகொண்டு அம்புகளால் தாக்கியபடி கௌரவர்களை பின்னகர்த்திச் சென்றனர்.

பூரிசிரவஸின் குரல் அப்பால் கேட்டது. “பாண்டவ இளையோர் இங்கிருக்கிறார்கள்! அவர்களை சூழ்ந்துகொள்க!” ஸ்வேதன் பூரிசிரவஸை நோக்கி சென்றான். கௌரவப் படையிடம் “இளையோர் அச்சமற்றவர்கள். அவர்களின் விசை நம்மை இரண்டாகப் பிளந்துவிடக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். ஸ்வேதன் தொலையம்பை எடுத்து பூரிசிரவஸின் தேரை தாக்கினான். அம்பு குறிதவறி பூரிசிரவஸின் தேர்ப்பாகனின் தலையை துண்டித்தது. தேர் மேடையிலிருந்து விழுந்து புரவிகளின் காலடியில் அவன் சிக்கிக்கொண்டான். பூரிசிரவஸ் முழந்தாளிட்டு அமர்ந்து புரவிகளின் கடிவாளத்தை பிடித்து இழுத்து தேரை திருப்பி அப்பாலிருந்த தன் படைகளுக்குள் புகுந்தான். கௌரவ மைந்தர்கள் எழுவர் கூச்சலிட்டபடி விற்களுடன் அவனை நோக்கி வந்தனர். ஸ்வேதன் அவர்களை ஒவ்வொருவரையாக அம்பால் அறைந்தான். சப்தமனும் தசமனும் வராகனும் விப்ரலிப்தனும் ஒவ்வொருவராக அவன் அம்புகளை நெஞ்சிலும் கழுத்திலும் ஏற்று தேரிலிருந்து அலறி விழுந்தனர். கராளனும் முகுந்தனும் முத்ரனும் தலையறுந்து விழுந்தார்கள். கௌரவ மைந்தர்களை காக்க மேலும் இளையோர் அங்கிருந்து கிளம்பி கூச்சலிட்டபடி வந்தனர்.

ஸ்வேதன் ஒவ்வொருவரையாக வீழ்த்தினான். ஒருவர் வீழ்வது இன்னொருவரின் கண் பிறழவும் கை தளரவும் செய்தது. மாளவ மன்னனின் இளைய மைந்தன் உலூகனையும் கூர்ஜர மன்னனின் இளைய மைந்தன் உத்ஃபுதனையும் அவன் அம்புகளால் துளைத்து சரியச்செய்தான். தொடர்ந்த விசைகொண்ட தாக்குதலால் கௌரவர்கள் பின்னடையத் தொடங்கினர். குறையா விசையுடன் பாண்டவர்களை பின்தள்ளிக்கொண்டிருந்த கௌரவப் படையின் அப்பகுதி மட்டும் தொய்வுற்றுப் பின்னகரத் தொடங்கியது. “விடாதீர்கள்! மேலும் சற்று தொலைவுதான்! இப்படையை இரண்டாக பிளந்துவிடலாம்! ஊடுருவி பிளந்துவிட்டால் அதன் பிறகு அவர்களால் முன்னேற இயலாது” என்று ஸ்வேதன் கூவினான். வெற்றி இளையோரை களிப்புறச் செய்தது. ஒருவருக்கொருவர் கூச்சலிட்டு நகையாடியபடி அவர்கள் கௌரவர்களை அழுத்தி வளைத்து பின்னால் கொண்டுசென்றனர்.

பின்னடைந்த விராடர்களின் படையை சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் நகுலனும் இணைந்து தடுத்து ஒன்றாக்கினர். படைகளின் பின்நிரையில் நின்றிருந்த யானைப்படை பெரிய கேடயத் தடுப்புகளை துதிக்கைகளால் தூக்கி ஒன்றுடன் ஒன்று பொருந்தவைத்து ஒரு கோட்டைச்சுவரென்று ஆக்கி பின்னகர்ந்தவர்களை தடுத்து முன்னால் உந்திகொண்டு வந்தது. முன்நகர்வு நிகழ்ந்ததுமே ஒவ்வொரு படைவீரனுக்கும் அது ஓர் உடற்செய்தியாக சென்று சேர்ந்தது. சில அடிகள் முன்நகர்ந்ததுமே பின்னடைய வேண்டுமென்ற விழைவை அவர்கள் இழந்தார்கள். தன்னியல்பால் மேலும் மேலும் முன்னகரத் தொடங்கினர். உடலின் முன்நகர்வே உள்ளத்தின் முன்நகர்வாக மாற வெறிக்கூச்சலெழுப்பி மேலும் சென்றனர். அவர்கள் முன்நகர்ந்து வரக்கண்டதுமே தடையின்றி முன்நகர்ந்து கொண்டிருந்த கௌரவப் படைகள் அறியாமல் பின்னடி வைத்தன. அவர்களை பின்னடைய வைக்க முடிகிறது என்ற எண்ணம் பாண்டவப் படைகளை மேலும் விசைகொண்டு முன்நகரச் செய்தது.

கௌரவப் படைகளின் சூழ்கை மெல்ல மாறிக்கொண்டிருப்பதை ஸ்வேதன் பார்த்தான். மான்கொம்பின் கிளைகள் ஒன்றின் வாலை பிறிது விழுங்கும் நாகங்கள் என கவ்விக்கொண்டு பெருஞ்சுருள் என்றாயின. அச்சுழியின் மையத்தில் பீஷ்மர் நின்றிருந்தார். அணுகும் அனைவரையும் சுழற்றி இழுத்துக்கொண்டு சென்று பீஷ்மர்  முன் செலுத்தியது அச்சுழியின் சுழற்சி. “மண்டலச்சூழ்கை!” என்று அவன் கூவினான். திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்திருக்கிறானா என்று அவன் எண்ணி திரும்புவதற்குள் “மண்டலம் சூழ்கிறது. பின்நகர்ந்து ஒன்றுதொடுத்துக்கொள்க! மின்கதிர் எனச் சூழ்க!” என்று முரசொலி எழுந்தது.

பாண்டவப் படையினர் ஒருவரோடொருவர் மலர்கள் சரமாவதுபோல் தொடுத்துக்கொள்ள மின்கதிர் என சூழ்கை ஒருங்கியது. சவுக்கென நெளிந்தும் நாகமென பாய்ந்தும் சுருங்கி விரிந்து தாக்கியது அவர்களின் படை. “மின்படை கூர்கொண்டு செல்க! மண்டலத்தின் வளைவுகளை உடைத்து சிதறடியுங்கள்!” என ஆணை எழுந்தது. சுழியின் அறுபடாச் சுழற்சியே அதன் ஆற்றல். அதை எங்கு உடைத்தாலும் அது சிதறத்தொடங்கும். ஸ்வேதன் “முன்செல்க… வளையத்தை உடையுங்கள்!” என்று ஆணையிட்டபடி முன்னால் பாய்ந்தான்.

அவர்களின் முதல் அடியிலேயே கௌரவப் படையின் அலைவளைவு இரண்டாக துண்டிக்கப்பட்டது. “தொடர்ந்து செல்லுங்கள்! அவ்விரிசலை விரிவாக்குங்கள்! அவர்களை இணைய விடாதீர்கள்!” என்று பின்னாலிருந்து திருஷ்டத்யும்னன் கூவினான். எஞ்சிய விராடப்படையும் குலாடர்களின் படையும் இணைந்து அந்த இடைவெளியினூடாக உள்ளே நுழைந்தன. கௌரவப் படைகளின் பிளவின் இரு விளிம்புகளையும் ஒன்றாக இணைக்கும்பொருட்டு ஒருபுறம் அஸ்வத்தாமனும் மறுபுறம் ஜயத்ரதனும் அம்புகளை எய்தபடி தங்கள் படைகளால் அழுத்தினர். ஆனால் முன்நகரும் விசைகொண்டிருந்த குலாடர்களின் படை அவர்களை மேலும் மேலும் விலக்கிச் சென்றது.

“இன்றொரு நாள்! இன்றொரு நாள்!” என்று ஸ்வேதனின் உள்ளம் தாவியது. உள எழுச்சியால் கைவிரல் நுனிகளில் குருதி உறுத்துவதை அப்போதுதான் உணர்ந்தான். எழும் படையை பின்னடையச் செய்துவிட்டால் இந்த நாளை கடந்துவிடுவேன். இன்றொரு நாள்! குலாடம் பாரதவர்ஷத்தை வென்று முன் நிற்கும். என் மூதாதையர் ஆயிரமாண்டு கண்ட கனவு. இதை எங்கிருந்து எண்ணிக்கொண்டிருக்கிறேன்? என் கைகள் வெறிகொண்டு அம்புகளை எய்கின்றன. என் உள்ளம் ஒவ்வொரு இலக்கை வெல்லும்போதும் கூச்சலிடுகிறது. என் சித்தம் அம்புகளையும் படைநகர்வுகளையும் எதிரியின் சூழ்கைகளையும் அங்கிருக்கும் ஒவ்வொரு படைவீரனின் எண்ணத்தையும் தொட்டு கணக்கிடுகிறது. இவற்றுக்கு அப்பால் நின்று காலமின்மையில் திளைத்து இத்தருணத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது பிறிதொன்று. ஒரு மனிதனுக்குள் குடிகொள்வது எத்தனை ஆழம்? பல்லாயிரம்பேர் திரண்டு ஓருடலென போர்புரியும் இப்படைப்பிரிவும்கூட ஓர் உடல்தானா? சிதறிப்பரந்த பெருமானுடன்! ஒன்றென்று குடிகொள்பவன்!

அப்பாலிருந்து சங்கொலி எழுந்தது. “பீஷ்மர்! பீஷ்மர்!” என்று குரல்கள் முழங்கின. பீஷ்மர் வந்துகொண்டிருக்கிறார் என்று பாண்டவர்களின் முரசுகள் ஆணையிட்டன. “சூழ்ந்து கொள்ளுங்கள்! பீஷ்மரை இவ்விரு படைகளை இணைக்கும் இடத்துக்கு வரவிடாதீர்கள்! முன்னேறுங்கள்! ஒருகணமும் நில்லாதீர்கள்!” என்று ஆணையிட்டபடி தன் படைவீரர்கள் தன்னைத் தொடர கைகாட்டி கௌரவர்களின் தேர்நிரையை உடைத்து சித்ரகுண்டலனையும் சுஜாதனையும் அம்புகளால் அறைந்து தேர்த்தட்டில் விழச்செய்தான் ஸ்வேதன். சுஜாதனின் தேர்ப்பாகன் தலையறைந்து விழ தேர்கள் விசைகொண்டு முன்நகர்ந்து கவிழ்ந்தன. அதில் முட்டி குண்டசாயியின் தேர் கவிழ்ந்தது. சித்ராயுதன் அம்புபட்டு புரவியிலிருந்து விழுந்தான். சுஜாதன் அம்பு பாய்ந்த விலாவுடன் புண்பட்ட காலை இழுத்து கூச்சலிட்டபடி துர்விகாகனின் தேரை நோக்கி ஓடினான்.

ஸ்வேதன் தன்னை வழிமறித்த புரவிகள் இரண்டை வாளால் வெட்டிச் சரித்து அந்த இடைவெளியினூடாக புரவியை கொண்டு சென்று பீஷ்மரை அணுகினான். பின்னாலிருந்து “பீஷ்மரை சூழ்ந்துகொள்க! வில்லவர் அனைவரும் பீஷ்மரை சூழ்ந்துகொள்க!” என்று முரசு ஆணையிட்டது. மல்ல நாட்டு இளவரசர்கள், கிராதர்கள், அசுரர்கள், அரக்கர்கள் என வில்லவர் அனைவரும் தங்கள் தேர்களில் வெவ்வேறு படைகளிலிருந்து பிதுங்கி திரண்டெழுந்து வலை போலாகி பீஷ்மரை சூழ்ந்துகொண்டனர். ஸ்வேதன் தலை திருப்பி நோக்கியபோது அனைவருமே இளமைந்தர் என்பதை கண்டான். பீஷ்மர் அவர்களை எப்படி எதிர்கொள்வார் என்று எழுந்த எண்ணம் முடிவதற்குள்ளகாவே மச்சர் குலத்து இளவரசன் குண்டலன் தலையறுந்து தேர்த்தட்டில் விழுந்து துடித்தான். கீர்வ நாட்டு இளவரசன் ஹயன் பிறையம்பால் துண்டுபட்டு கீழே விழுந்தான். மீசைஅரும்பாத முகம், சிறுகுழவிக்குரியவை என உதடுகள், அப்போதும் புன்னகை எஞ்சியிருந்த அழகிய விழிகள்.

உடலெங்கும் நடுக்கு எழ ஸ்வேதன் பீஷ்மரை பார்த்தான். அவர் தலையிலிருந்து கால்வரை நிணமும் குருதியும் வழிந்துகொண்டிருந்தன. நாணிழுத்து அம்புவிட்டபோது துடித்த வில்லிலிருந்து குருதித்துளிகள் தெறித்தன. இளையோரின் அம்புகள் எவையும் அவரை சென்றடையவில்லை. ஆனால் அவர் விடுத்த ஒவ்வொரு அம்பும் இளவரசர்களின் தேர்களை சிதைத்தன. கவசங்களை உடைத்து வீழ்த்தின. அவர்கள் நிலைதடுமாறிய கணம் கழுத்தறுத்து வீசின. நெஞ்சுபிளந்து தேர்த்தட்டிலிருந்து கீழே சரித்தன. வெறிகொண்டவர்போல் நகைத்தபடி பீஷ்மர் இளையவரை கொன்று குவித்தார். மகாநிஷாதகுலத்து சந்திரகனும் அவன் ஏழு உடன்பிறந்தாரும் இறந்து விழுந்தனர். குலித குடியின் இளவரசன் உக்ரசீர்ஷனும் பன்னிரு உடன்பிறந்தாரும் கொல்லப்பட்டார்கள். சுருதசேனன் நெஞ்சில் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். அவனுக்கு உதவச்சென்ற சதானீகன் தொடையில் அம்புபட்டு தேரிலிருந்து கீழே விழுந்தான். அவர்களை கொக்கிகளை வீசி தூக்கி எடுத்து அகற்றி கொண்டுசென்றனர் காப்புப்படையின் கேடய வீரர்கள்.

பீஷ்மரைச் சூழ்ந்து இளைய உடல்கள் மண்ணில் புழுத்திரள் எனத் துடித்துக் குமிழியிட்டுக்கொண்டிருந்தன. தலையோ கால்களோ அறுபட்டு உருவழிந்ததுமே தசையென்றாகிவிடுகின்றன உடல்கள். உயிர் வெற்றசைவென எஞ்சியிருப்பவை. இறுதிவிசையால் முள்ளில் சிக்கியிருக்கும் ஆடை காற்றிலெழுந்து பறப்பதுபோல விலகி அகல விழைந்து துடிக்கிறது உடல். மண்ணில் உதைக்கும் கால்கள். காற்றைப் பற்றும் கைகள். வெறித்த விழிகள், வெண்பற்கள். இவன் அஸ்வகுடியின் இளவரசன் காமிகன். இவன் காந்தகுடியின் குமுதன். அதோ மாதல குடியின் சுதீரன். போர் என்று உளம் கிளர்ந்து எழுந்த இளையோர். அன்னையர் மடியில் அமர்த்தி ஊட்டிய பால்சோறு இன்னமும் அவர்களின் உடல்களில் இருந்து அகன்றிருக்காது. சாவின் பெருங்களம். தன் நெஞ்சில் அச்சொற்கள் துயரில்லா பெருக்கென ஓடுவதை ஸ்வேதன் உணர்ந்தான். சாவின் பெருங்களம் என்ற சொல் காற்றில் ஒரு சித்திரப்பதாகை என அவன் முன் நின்றது. அதை கிழித்தபடி அவன் முன்னால் சென்றான்.

“இளையோர் பின்வாங்குக! இளையோர் பின்வாங்குக!” என்று முரசு முழங்கத் தொடங்கியது. ஆனால் இளவரசர்கள் எவரும் அதை செவி கொள்ளவில்லை. கூர்வ குலத்து இளவரசன் சம்ப்ரகன் “முன்னேறுக! இது தருணம்! வெல்வோம் அல்லது வீழ்வோம்!” என்று கூவியபடி பீஷ்மரை நோக்கி அம்புகள் தொடுத்தபடி முன்னேறினான். அவன் கை துண்டாகி கீழே விழ திகைத்துத் திரும்பிய உடல் இறந்த மீனை பசித்த மீன்கள் கொத்தித் தூக்கி குதறுவதுபோல அம்புகளால் அலைக்கழிக்கப்பட்டது. தேர் தூணில் ஒட்டி உடலெங்கும் அம்புகளுடன் நின்று துடித்தபின் அவன் சரிந்து ஓடிக்கொண்டிருந்த குதிரைகளின் காலடியில் விழுந்தான். அவன் மேல் ஏறி அப்பால் சென்றது அவனுடைய தேர். ஜம்புக குடியின் இளவரசன் சுக்ரனை பீஷ்மரின் அம்புகள் நீர்பட்ட அகல்சுடர் என துளைத்து துள்ளி நடமிட்டு  சரியச் செய்தன. ஸ்வேதன் தன் அம்புகளைப் பெய்தபடி நடுவே புகுந்து இளையோரைக் காத்து அப்பால் இட்டுச்சென்றான்.

எதிர்த்துவந்த இளவரசர் அனைவரையும் கொன்று சரித்தபின் பீஷ்மர் நாணொலி எழுப்பியபடி அவனை நோக்கி வந்தார். அவன் வில்லோசையுடன் அவரை நோக்கி செல்ல அவனுக்குப் பின்னால் திருஷ்டத்யும்னனின் குரல் கேட்டது. “குலாடரே, பின்நகருங்கள். பிதாமகர் கொலைவெறியுடன் இருக்கிறார். பார்த்தரன்றி பிறர் எவரும் அவரை எதிர்கொள்ள இயலாது. பின்நகர்க! பின்நகர்க!” அவன் அச்சொற்களைத் தவிர்த்து “முன்னால் செல்க!” என்று காலால் தன் தேரோட்டியின் விலாவை மிதித்தான்.  “இளவரசே… மைந்தர்களை பீஷ்மர் கொல்லாது தவிர்ப்பார் என்று எண்ணி இச்சூழ்கையை அமைத்திருக்கிறார்கள். அது பொய்யாயிற்று. தளிர்மரங்களை ஒடித்துக்குவிக்கும் மதவேழம்போல் வந்துகொண்டிருக்கிறார். இது நம் தருணமல்ல… வேண்டாம் திரும்புவோம்” என்று பாகன் சொன்னான்.

“செல், மூடா! முன்னால் செல்!” என்றபடி ஸ்வேதன் அவன் விலாவை ஓங்கி ஓங்கி மிதித்தான். பற்களைக் கடித்தபடி சவுக்கை எடுத்து ஓங்கி அறைந்த பாகன் கண்ணில் நீருடன் “இது உகந்ததல்ல, குலாடரே! இது போரல்ல, தற்கொலை!” என்றான்.  “முன்னால் செல்! முன்னால் செல்!” என்று ஸ்வேதன் கூவினான். பீஷ்மரின் அம்பு வளையத்திற்குள் சென்றதும் நாணிழுத்து முதல் அம்பால் அவர் தலையிலணிந்திருந்த தோல்பட்டையை அறைந்தான். பீஷ்மர் திரும்பி நகைத்தபடி “வருக! நீ ஒருவனே எஞ்சியிருக்கிறாய்” என்றபடி எட்டு அம்புகளால் அவனை எதிர்கொண்டார். அவன் இணையாக அம்புகளை அவர்மேல் எய்தான்.

அம்புகள் ஒன்றையொன்று விம்மிக்கடந்து செல்கையில் ஸ்வேதன் ஒன்று உணர்ந்தான். முதியவர் இளமைந்தரை கனிந்து எதிர்கொள்வார் என்று எண்ணியதைப்போல் பிழை பிறிதில்லை. தந்தையாயினும் மூதாதையாயினும் உடலால் உள்ளத்தால் அவர் முதியவர் என்பதே முதன்மையானது. மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முதியவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை தளர்ந்து கைவிடும் இடங்களையெல்லாம் எடுத்துக்கொள்வது இளமை என்பதனால். வாழ்த்தும் கைகளுக்கும் நோக்கி மகிழும் கண்களுக்கும் அடியில் வஞ்சம் கொண்ட விலங்கொன்றிருக்கிறது. பீஷ்மர் அங்கு போரிட்டுக்கொண்டிருப்பது குருக்ஷேத்ரத்தில் அல்ல. அவருள் என்றுமிருந்த தொல்தெய்வம் ஒன்று எழுந்து ஆயிரம் கை கொண்டு நின்றது.

அவர்களுக்குக் குறுக்கே அம்புடன் புகுந்த சுதீர நாட்டு இளவரசன் கபந்தன் தலையறுந்து விழுந்தான். காகன், ககோலன், ககோடன், குனிலன் என இளவரசர்கள் அவர் அம்புக்குமுன் அலறியும் ஓசையிலாது உடல்துடித்தும் அனல்பட்டதுபோல் துள்ளிவிதிர்த்தும் விழுந்துகொண்டே இருந்தனர். நெஞ்சு துளைத்த அம்பு முதுகில் புடைத்தெழ சம்புகன் விழுந்தான். சுகிர்தன் நெஞ்சில் தைத்த அம்பைப் பற்றியபடி சரிந்தான். கவசங்களை எளிய முட்டை ஓடு என உடைக்கும் விசைகொண்டிருந்தன பீஷ்மரின் அம்புகள். எங்கோ ஒரு கணத்தில் ஸ்வேதன் தன் உடல் நெஞ்சு துளைபடக் கிடந்து துடிக்கும் காட்சியைக் கண்டான். அவன் உடலெங்கும் வெப்ப அலை ஒன்று எழுந்தது. அது உடனே குளிர்ந்து நடுக்கென்றாகியது. அக்காட்சி அவன் மிக நன்றாக அறிந்ததாக இருந்தது

அறியாது தன் வில்லை ஸ்வேதன் தாழ்த்த பாகன் அதை உணர்ந்து தேரை திருப்பி பின்னடையச் செய்தான்.  பீஷ்மர் “அறிவிலியா நீ? அஞ்சி திரும்புவதென்றால் ஏன் வில்லெடுத்து வந்தாய்?” என்று கூவியபடி முன்னால் வந்தார். ஸ்வேதன் தன் நெஞ்சுக்குள் எடைமிக்க பாறாங்கல் என அச்சம் திரள்வதை உணர்ந்தான். கைகளும் கால்களும் அசைவிழந்தன. ஆனால் மறுகணம் முழு விசையையும் திரட்டி தேர்ப்பாகனின் விலாவை உதைத்து “முன்னால் செல்! முன்னால் செல்!” என்று கூவினான். பாகன் “வேண்டாம், குலாடரே” என்று கூவினான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.  ஸ்வேதன் தொண்டை உடைந்தொலித்த குரலில் “அறிவிலி! முன்னால் செல்!” என்றான். தேர்ப்பாகன் இரு கால்களையும் நுகத்திலூன்றி எழுந்து நின்று சவுக்கை வீசி புரவிகளை முன்னால் செலுத்தினான்.

பீஷ்மரின் அம்புகள் பறக்கும் சிம்மங்களென ஓசையிட்டபடி அவனை கடந்துசென்றன. தேர்ப்பாகன் தலையறுந்து குதிரை மேலேயே விழுந்தான். அவன் கழுத்திலிருந்து குருதி வெண்குதிரையின்மேல் பெருகிவழிந்து செம்மணிகளென உருண்டது. ஒரு குதிரை தலையறுந்து துண்டாகி குருதியுடன் தொய்ந்து விழ தேர் பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. சகடம் ஒன்று விலகிச்சுழல அதன் நுகத்திற்கடியில் இருந்து உதைத்து எழுந்த இன்னொரு புரவியால் தேர் மீண்டும் நிலைகொண்டது. நிலத்தில் விழுந்து உருண்டு எழுந்த ஸ்வேதன் தன் முழு ஆற்றலையும் திரட்டி நாணிழுத்து அம்பை எய்து பீஷ்மரின் தோள்கவசத்தை சிதறடித்தான். அவர் திரும்பி நோக்கும் அரைக்கணத்திற்குள் அவர் தோளில் அம்பை பாய்ச்சினான். பிறிதொரு அம்பால் அதே அம்பை முறித்து இன்னொன்றைப் பாய்ச்சினான். செயலிழந்த இடக்கையை உதறியபடி காலால் வில்லைப் பிடித்து ஒற்றைக்கையால் அம்பெடுத்து இழுத்துத் தொடுத்து அவன் நெஞ்சின் மேல் எய்தார் பீஷ்மர்.

அந்த அம்பு பறந்து வரும் ஒவ்வொரு கணத்துளியையும் அவன் பார்த்தான். பெருவிசையுடன் வந்து அவன் கவசத்தைப் பிளந்து நெஞ்சுக்குள் சென்றது. அவன் எண்ணிக்கொண்டிருந்த உளச்சொல்லை இரண்டாகத் துண்டித்தது. “என்ன?” எனும் சொல்லை அவன் உளம் இறுதியாக அடைந்தது. தரையில் விழுந்து வானை பார்த்தான். மிக அண்மையில் பிறிதொரு அம்பு வந்து குத்தி நின்றது. ஸ்வேதன் “ஆம்!” எனும் சொல்லை தன்னுள் மிக ஆழத்தில் உணர்ந்தான்.