செந்நா வேங்கை - 58

tigஅரவான் முன்பிருந்ததைவிட இயல்படைந்ததுபோல் தோன்றியது. அச்சூழலை அவன் தன் அகத்தால் கடந்து அப்பாலிருந்து அதை நோக்கியிருக்கலாம் என ஸ்வேதன் எண்ணினான். அல்லது அங்கு நிகழ்ந்தவற்றுக்குள் சென்று கண்டிருக்கலாம். ரோகிணி அவனிடம் “நீங்கள் நாகர்காடுகளிலிருந்து முதல் முறையாக வெளிவருகிறீர்கள் போலும்” என்றாள். “ஆம், நான் மானுடரை கண்டதே அரிது. காட்டிற்கு அருகேயுள்ள சுனையொன்றிற்கு ஊர்மக்கள் மூதாதையருக்கு குருதி பலிகொடுத்து வணங்கும்பொருட்டு வருவார்கள். நாகரல்லாத மானுடரை நான் பார்ப்பது அப்போது மட்டும்தான். அவர்கள் என்னை பார்க்கமுடியாது. காட்டுக்குள் நின்று நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்களின் ஆடைகளும் உடலசைவுகளும் விந்தையாக தோன்றும். ஆகவே நான் அத்தருணத்தை தவறவிடுவதில்லை” என்றான்.

தாங்கள் பேசிக்கொள்வது உள்ளிருக்கும் சுருதகீர்த்திக்கு கேட்குமென்பது ஸ்வேதனுக்கு மெல்லிய உவகையை அளித்தது. அவன் மேலும் சற்று உரத்த குரலில் “தங்கள் அன்னையின் ஆணையை ஏற்று இங்கு வந்தீர்கள் போலும். முதற்பார்வையிலேயே தாங்கள் இளைய பாண்டவரின் மைந்தர் என்று தெரிந்துகொண்டேன். மைந்தர்கள் தந்தையைப்போல் இருப்பது இயல்பு. விழியசைவிலும்கூட தந்தையென்றே மைந்தர் தோன்றுவது சற்று அரிது” என்றான். “நான் தந்தையை பார்த்ததில்லை. அவருடைய ஓவியங்களும் எங்களிடம் இல்லை. என் அன்னை சொன்ன கதைகளினூடாகவே அவரை அறிந்திருக்கிறேன்” என்றான் அரவான்.

“காட்டிலிருந்து முதல்முறையாக வெளிவந்து மானுடரை பார்த்த உடனே அவர்கள் என்னை இளைய பாண்டவராகவே பார்த்தனர். செல்லுமிடமெங்கும் நான் முதற்சொல்லெடுப்பதற்குள்ளாகவே என்னை வணங்கினர்” என்று அரவான் சொன்னான். “ஓவியத்திலோ நேரிலோ இளைய பாண்டவரை பார்க்காதவர்கள் இங்கு அரிதினும் அரிது” என்று ஸ்வேதன் சொன்னான். “அனைத்து படைக்காவல்தலைவர்களும் தலைவணங்கி என்னை உள்ளே செல்ல ஒப்பினார்கள். உண்மையில் நான் காட்டிலிருந்து வெளிவந்து நுழைந்த நிலம் கௌரவ படைக்கூட்டிலுள்ள திரிகர்த்தர்களின் நாடு. அங்கு காவலரணுக்கு பொறுப்பாக இருந்தவர் அஸ்தினபுரியைச் சேர்ந்த முதிய காவலர். என்னை பார்த்ததும் தலைவணங்கி இளவரசே தங்கள் வருகையால் அஸ்தினபுரி மகிழ்கிறது என்று சொன்னார்.”

அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் முரண்கொண்டு போரிட்டுக்கொண்டிருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தந்தை அஸ்தினபுரியின் இளவரசர் என்பதை அறிந்திருந்தேன். “நான் அஸ்தினபுரியின் பாண்டுவின் மூன்றாவது மைந்தராகிய அர்ஜுனரின் மைந்தன், அவரை பார்க்க விரும்புகிறேன்” என்று சொன்னேன்.  “அவர் இப்போது எங்கள் அரசுக்கெதிராக படைகொண்டு செல்கிறார். ஆயினும் குருதி என்றும் தனிவழி கொண்டது. தாங்கள் இங்கிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் படைப்பிரிவுகளை சென்றடைவதற்குரிய வழியைக் காட்டி உடனழைத்துச் செல்வதற்கு வீரர்களை அனுப்புகிறேன். தங்கும் வழியெங்கும் தங்களுக்கு அரசமுறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்” என்று அவர் சொன்னார்.

பின்னர் சற்று தயங்கி “தாங்கள் விரும்பினால் தங்கள் பெரிய தந்தை துரியோதனரைப் பார்த்து முறைப்படி அரசவணக்கம் செய்து மறுபக்கம் செல்லலாம்” என்றார். “அவ்வாறு மரபுண்டா?” என்று நான் கேட்டேன். “ஆம், அதுவே மரபு. அரசகுடியினர் ஒரு நிலத்தில் நுழைந்தால் அரசவைக்குச் சென்று அரசரிடம் முறைமை வணக்கம் தெரிவிக்கவேண்டும்” என்றார். “அவ்வண்ணமெனில் என்னை துரியோதனரிடமே அழைத்துச் செல்க!” என்றேன்.

ஸ்வேதன் “அங்கு சென்றா வருகிறீர்கள்?” என்றான். “ஆம், நான் கிளம்பிவருவதற்குள் அஸ்தினபுரியின் படைகள் அங்கிருந்து கிளம்பி குருக்ஷேத்ரத்திற்கு வரத்தொடங்கிவிட்டன. தப்தவனம் என்னும் காடருகே நான் அஸ்தினபுரியின் படைகளை சென்றடைந்தேன். படைப்பிரிவின் தொடக்கத்திலேயே இளைய கௌரவரான துர்மதரை நான் சந்தித்தேன். என்னை அவரிடம் அழைத்துச்சென்று நிறுத்திய படைத்தலைவர் ஏதும் சொல்வதற்குள்ளாகவே ஒற்றர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர் என்னை திரும்பிப்பார்த்து இரு கைகளையும் விரித்தபடி ஓடி வந்து என்னை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டார்” என்றான் அரவான்.

அவர் என் கைகளை பற்றியபடி “நீ அர்ஜுனனின் மைந்தன் அல்லவா? எங்கிருந்து வருகிறாய்? உன் அன்னை பெயர் என்ன?” என்று கேட்டார். நான் சொல்வதற்குள் “இரு! நீ சொல்லாதே. நீ நாகர்குல அரசி உலூபியின் மைந்தன்” என்றார். “ஆம்” என்றேன். “உன் நடை நாகர்களுக்குரியது. ஆனால் இளையவன் எங்கெங்கு சென்றிருக்கிறான், எத்தனை மைந்தர் என்று யாருக்குத் தெரியும்?” என்று நகைத்த பின் என் தோளை அறைந்தார். அங்கிருந்தவர்களிடம் “அர்ஜுனனின் மைந்தன். இளமையில் அவனை பார்த்தது போலவே இருக்கிறானல்லவா?” என்றார். அங்கிருந்தவர்களில் மூத்தவர்கள் “ஆம், அவ்வுருவேதான்” என்றனர்.

என்னிடம் “உன் விழிகள் மட்டும் சற்று நாகமணித்தன்மை கொண்டுள்ளன. அதுவும் அழகே” என்றபின் “நீ அஸ்தினபுரிக்கு வந்திருக்கவேண்டும். உன் மூத்த அன்னையர் உன்னைப் பார்த்தால் மகிழ்ந்து கொண்டாடியிருப்பார்கள். அரண்மனையில் உனது பேரன்னை இருக்கிறார். அவர் மைந்தர்களை தொட்டுப் பார்ப்பதையே வாழ்வின் கொண்டாட்டமாக கொண்டவர். நன்று, இப்படைவீட்டில் உன்னை சந்திக்கவேண்டுமென்றிருக்கிறது. மூத்தவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றார். பிறிதொரு தலைவர் “தாங்கள் இங்கிருந்து இப்போது செல்ல இயலாது, இளவரசே. நம் படைகள் நாளை காலையே இங்கிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றார்.  “ஆம், வேறுவழியில்லை. நான் என் இளையோனை உன்னுடன் அனுப்புகிறேன். எங்களுக்குத்தான் இளையவர் நிரை பெரிதாயிற்றே!” என நகைத்தார்.

இளைய கௌரவரான சாருசித்ரருடன் நான் கிளம்பி படை நடுவே இருந்த துரியோதனரின் மாளிகைக்கு சென்றேன். அது இதைப்போலவே சகடங்களின் மீது ஒழுகிச்செல்லும் மாளிகை, இதைவிட இருமடங்கு பெரிது. அதன் அருகில் நான் அணுகுவதற்குள்ளேயே இளைய கௌரவர்களும் உபகௌரவர்களுமாக பலர் என்னை நோக்கி ஓடிவந்தனர். அனைவரும் முதலில் கண்ட துர்மதரின் பிறிது வடிவங்களாகவே தெரிந்தனர். அவர்களுள் ஒருவர் என்னை அள்ளித்தூக்கி மேலே வீசினார். மற்றவர்கள் கைநீட்டி என்னை பற்றிக்கொண்டனர். உரக்க நகைத்து கூச்சலிட்டபடி என்னை அவர்கள் தூக்கி மீண்டும் மீண்டும் வானிலெறிந்து பிடித்தனர். மென்மயிர்த்தூவல்போல ஆகிவிட்டேன் என நான் மயங்கினேன்.

என்னை அரசர்முன் கொண்டு சென்றனர். அம்மாளிகையின் படியில் நான் ஏறுவதற்குள்ளாகவே உள்ளிருந்து படைத்தலைவருடன் பேசிக்கொண்டிருந்த அரசர் இறங்கி வெளியே வந்து என்னை அள்ளி தன் கைகளில் எடுத்துக்கொண்டார். அவர் அருகே அவரைப்போன்ற மூத்தவர் லட்சுமணன் நின்றிருந்தார். அவரிடம் என்னை காட்டி “உன் இளையவன்! அர்ஜுனனின் மைந்தன்! நாகர்குலத்து உலூபிக்கு பிறந்தவன்” என்றார். “ஆம், சற்று முன் செய்தி வந்தபோதே அறிந்தேன்” என்று அவர் சொன்னார். “பார், இவன் விழிகள் நாகத்துக்குரியவை” என்றபின் என்னிடம் “உன்னால் இமையாது நோக்கமுடியுமா?” என்று கேட்டார். “ஆம், இமையா நோக்கும் சிறுவளைக்குள் பதுங்கிக்கொள்வதும் மரங்களில் இருந்து மரங்களுக்கு பறப்பதும் எங்கள் குலக் கலைகள்” என்று நான் சொன்னேன்.

“நச்சு அம்பு! நச்சு அம்பு விடுவாயா?” என்று அவர் உவகையுடன் கேட்டார். “ஆம், அரசே. நச்சம்பும் எங்கள் குலக் கலையே. சிறுநாணலை ஊதி அம்புவிடுகிறோம்” என்றேன். என் தோள்களை தன் பெரிய கைகளால் அறைந்தார். “இளமையிலேயே வில் பயின்றிருந்தால் எதிர்நிற்க எவருமிலாத வீரனாக இருந்திருப்பாய். விற்கலைக்குத் தேவையானது உடல் நெளிவு. நாகர்கள் எலும்பிலாத உடல் கொண்டவர்கள் என்பார்கள்” என்றார். “வில் எய்யும் அம்பை நோக்கலாம். எங்கள் நாணலை மானுடவிழி அறியாது” என்றேன். “ஆம், மெய்தான்” என்று சொல்லி “எப்படி மறுமொழி சொல்கிறான் பார்” என மேலும் நகைத்தார்.

அவன் அதை வேண்டுமென்றே உள்ளிருக்கும் சுருதகீர்த்தி கேட்க வேண்டுமென்பதற்காக சற்று உரக்க சொல்கிறான் என்று ஸ்வேதன் உணர்ந்தான். அவன் விழிகளை சந்தித்தபோது மீண்டும் அரவான் புன்னகைத்தான். “நான் ஒருநாள் அங்கிருந்தேன். என்னை அவர் தன்னுடன் உணவருந்தும்படி அழைத்தார். பாடிவீட்டில் அந்தியில் கௌரவர்களுடன் அமர்ந்து உணவுண்டேன். நான் ஊனுணவு மட்டுமே உண்பதைக்கண்டு அவர்கள் திகைத்தனர்” என்றான். ஸ்வேதன் “நீ ஊனுணவு மட்டுமே உண்பாயா?” என்றான். “ஆம் எங்கள் நாகர்குடியில் நாங்கள் ஊனை மட்டுமே உண்போம். பிறரைப்போல் கனிகளையும் தானியங்களையும் கிழங்குகளையும் உண்பதில்லை” என்றான். “ஏன்?” என்று ஸ்வேதன் கேட்டான். “நாங்கள் உயிருள்ள உணவுகளை உண்ணவேண்டுமென்பது எங்கள் குலமூதாதையரின் நெறி. நாகங்கள் உயிரற்றவற்றை உண்பதில்லை.” ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் புன்னகைத்து “ஆம், மெய்” என்றான்.

அன்று அனைவரிடமும் கால்தொட்டு வணங்கி வாழ்த்து கொண்டபின் அங்கிருந்து கிளம்பினேன். நூற்றுவரிடம் விடைபெற்றேன். கௌரவ மைந்தர்களிடம் விடைபெறுகையில் லட்சுமணரிடமும் துருமசேனரிடமும் கால்தொட்டு வாழ்த்துகொண்டேன். கௌரவ தந்தையர் ஒவ்வொருவராக என்னை நெஞ்சுடன் அணைத்து மீண்டும் மீண்டும் வாழ்த்தினர். மூத்த கௌரவர் துச்சாதனர் “நீ இதற்குமுன் படைப்பிரிவுகளில் பணியாற்றியிருக்கிறாயா?” என்று கேட்டார். “இல்லை, தந்தையே. நான் மானுடரையே இப்போதுதான் முதன்முறையாக அணுக்கத்தில் பார்க்கிறேன்” என்றேன். அரசர் தொடைகளில் அடித்து உரக்க நகைத்து “நாகர்கள் மானுடர்களல்ல என்பது மெய்யே” என்றார். நான் “காடுகளிலிருந்து மானுடரை பார்த்திருக்கிறேன். அவர்கள் கைகூப்பியபடி அமைதியாக வருவார்கள். வெளிப்போந்து நான் பார்த்த அத்தனை மானுடரும் உரக்க கூச்சலிட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “நாங்கள்?” என்று துச்சகர் கேட்டார். “நீங்கள் பெருமானுடர்” என்றேன்.

“இவனிடம் இன்று முழுக்க அமர்ந்து மானுடரிடம் இவன் கண்ட சிறப்பியல்புகள் என்ன என்று கேட்டு தெரிந்துகொள்ள விழைகிறேன், இளையோனே” என்றார் அரசர். “பிற மானுடரிடமிருந்து எங்களை வேறுபடுத்துவது எது?” என்று பெரிய தந்தை சுபாகு கேட்டார். “மானுடரைவிட நீங்கள் சற்று பேருரு கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நகைப்பதைவிட நீங்கள் மிகுதியாக நகைக்கிறீர்கள்” என்றேன். சுபாகு நகைத்து “ஆம், களத்திற்கு எழுந்த பின்னர் நாங்கள் நகைப்பது மேலும் மிகுதியாகிவிட்டது” என்றார். துச்சகர் “நீ இன்றே கிளம்பியாகவேண்டுமா என்ன? உன் மூத்தவர் ஆயிரத்தவர் இங்கிருக்கிறார்கள். ஓரிரு நாட்கள் இங்கிருந்தால் அனைவருடனும் சின்னாட்கள் மகிழ்ந்து விளையாடிவிட்டுச் செல்லலாம்” என்றார்.

நானும் அங்கிருக்கவே விழைந்தேன். ஆனால் தந்தை சுபாகு இடைபுகுந்து “அல்ல, அவன் அன்னை தந்தையிடமே அனுப்பியிருக்கிறார்” என்றார். அரசர் எனக்கு அவருடைய அருமணிக் கணையாழி ஒன்றை அளித்து “உன் மூத்த தந்தையின் பரிசென இதை கொள்க! என்றேனும் என் தந்தை திருதராஷ்டிரரை நீ சந்திப்பாயென்றால் இது என்னால் தரப்பட்டது என்று காட்டுக! உன் அன்னையை மீண்டும் பார்க்கும்போது எங்கள் குடி அவர் முன் தலைவணங்குகிறது என்று கூறுக!” என்றார்.

ஸ்வேதன் உளநெகிழ்வடைந்தான். “அவரைப்பற்றி பிறிதொருவகையில் எந்த நூலும் கூறவில்லை. எந்த சூதனும் மாற்று நடித்ததுமில்லை” என்றான்.  “பிறகு ஏன் இந்தப் போர் நிகழ்கிறது?” என்றான் அரவான். “இதற்கு அவரோ வேறெவருமோ மறுமொழி சொல்லிவிடமுடியாது. இப்போரை முன்நின்று நிகழ்த்தும் இளைய யாதவரேகூட” என்றான் ஸ்வேதன். துரியோதனனின் நினைவால் முகம் மலர்ந்த அரவான் “அங்கிருந்து இங்கு வருகையில் நான் பிறிதொன்றை எண்ணிவந்தேன். என்னை இந்திரப்பிரஸ்தத்தின் படை உவகையுடன் எதிர்கொள்ளும் என்று எண்ணினேன். ஆனால் படைமுகப்பில் என்னைப் பார்த்த வீரர்கள் முறைமைப்படி தலைவணங்கினார்களே ஒழிய ஒருவரும் மகிழ்வென எதையும் காட்டவில்லை. படைத்தலைவர் சாத்யகியும் ஓரிரு சொற்கள் பேசி என் அடையாளங்களை நோக்கியபின் ஓலை அளித்து இங்கு அனுப்பினார். வழியெங்கும் என்னை விந்தையாகப் பார்க்கும் விழிகளையே கண்டேன். அது என்னை உளம் தளரவைத்தது” என்றான்.

புரவிகள் இரண்டு அணுகிவரும் குளம்படியோசை கேட்டது. சுருதகீர்த்தி உள்ளிருந்து வெளியே வந்து அவர்களிருவரையும் பார்க்காமல் படிகளிலிறங்கி அவர்களை அணுகினான். இரு புரவிகளும் விரைவழிந்து நிற்க முதற்புரவியிலிருந்து இறங்கிய அர்ஜுனன் தொடர்ந்து வந்த படைத்தலைவனிடம் குறுகிய சொற்களில் ஏதோ சொல்லி கையசைத்தபின் பாடிவீட்டை நோக்கி வந்தான். சுருதகீர்த்தியை பார்த்ததும் “ஓலைகள் வந்தனவா?” என்றான். “ஆம், அனைத்தையும் முறைப்படி அடுக்கி தங்கள் பீடத்தின் மீது வைத்திருக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி. படிகளில் ஏறிய அர்ஜுனன் அரவானைப் பார்த்ததும் புருவம் சுளிக்க நின்றான். பின்னர் “உலூபியிடமிருந்து வருகிறாயா?” என்றான்.

“ஆம், தந்தையே. அன்னை என்னை தங்களிடம் வந்து சேரும்படி ஆணையிட்டார்கள். இப்போரில் நானும் பங்குகொள்ள வேண்டுமென்று அவர்கள் விழைகிறார்கள்” என்றபின் முன்னால் வந்து முழந்தாளிட்டு தன் தலையை அவன் காலடியில் வைத்து “வாழ்த்துங்கள்” என்றான். அர்ஜுனன் இடக்கையை அவன் தலையில் வைத்தபின் ஒரு சொல்லும் உரைக்காமல் உள்ளே சென்றான். சுருதகீர்த்தி படிகளிலேறி அசையாமல் நின்றான். உள்ளே அர்ஜுனன் மரத்தாலான சிறிய மணியொன்றை அடிக்கும் ஓசை கேட்டது. சுருதகீர்த்தி உள்ளே சென்று திரும்பி வந்து ஸ்வேதனிடம் “உங்களை அழைக்கிறார்” என்றான்.

ஸ்வேதன் உள்ளே சென்று அங்கு எழுத்துப்பீடத்தின் முன் தரையிலிட்ட மான்தோல் மேல் அமர்ந்திருந்த அர்ஜுனனை அணுகி கைகூப்பி வணங்கி “நான் குலாட குலத்து ஸ்வேதன். தங்கள் தாள் பணிந்து போர்ப் பணியாற்ற படையுடன் வந்தேன்” என்றான். “ஓலையில் பார்த்தேன்” என்றபின் அர்ஜுனன் “நீ விராடரின் மைந்தனல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அவர் அவ்வண்ணம் எங்கும் உரைத்ததில்லை. ஆகவே அதை கூறும் தகுதியை நான் இழந்துள்ளேன்” என்றான். “தந்தையின் அடையாளமில்லாதவர்களை இங்கே ஏற்கவியலாது. போர்நெறிகளில் அதுவும் ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான். “நீயே படித்தறிந்திருப்பாய். போர்ச்சடங்குகளுக்கு தந்தைபெயர் சொல்லியாகவேண்டும்.”

ஸ்வேதன் அதற்கு மறுமொழியாக “என் இளையோன் தங்கள் மூத்தவரிடம் பணிக்கு சேர்ந்துள்ளான்” என்றான். “ஆம், அவர் காட்டுமனிதர். அவருக்கு நெறிகளேதுமில்லை” என்றான் அர்ஜுனன். கைகளைக் கட்டியபடி சாய்ந்துகொண்டு “நீ உன் தந்தையிடம் சொல் கோரலாம். உங்கள் குருதியை மறுக்கும் உரிமை விராடருக்கில்லை. ஏனெனில் அது குலமூத்தார் கூடி முறைப்படி நிகழ்ந்த திருமணம். விராடர் மூத்தவரின் அவையில் உங்களை தம் மைந்தரென்று அறிமுகம் செய்தாக வேண்டும். உத்தரன் தன் நிலத்தின்மேல் உரிமைகொண்டவர் என்று கூறியுமாக வேண்டும்” என்றான்.

“அது எனக்கு பெரிதாக படவில்லை. என் சிற்றூரிலிருந்து கிளம்பும்வரை அதை நான் எண்ணியதுண்டு. இன்று தங்கள் மாணவனாக படை முன் நிற்பதொழிய பிறிதொன்றும் பொருட்டெனத் தோன்றவில்லை” என்றான். அர்ஜுனன் “ஆனால் போர் ஒரு சாவுக்களம். அங்கு என்ன நிகழுமென்று எவரும் கூற இயலாது. குருதி வழி முழுமையாக ஒப்பப்பட்ட பின்னரே களம்படுவது வகுக்கப்பட்டுள்ளது. எவர் நீர்க்கடன் இயற்றவேண்டுமென்பதை வகுக்காமல் எவரும் போருக்கிறங்காலாதென்று கூறப்பட்டுள்ளது” என்றான். ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் “ஆனால் மைந்தரை தந்தையர் மதிக்க வேண்டுமென்று எந்த மூதாதையரும் ஆணையிடவில்லை. பெரும்பாலும் தந்தையர் மைந்தர்களை தேவையற்ற சுமையென்றே கருதுகிறார்கள்” என்றான்.

அர்ஜுனனின் முகம் சுருங்கி பின்னர் “நீ கூறவருவதென்ன?” என்றான். “தங்கள் மைந்தன் கால்தொட்டு வணங்கியபோது வாழ்த்தி ஒரு சொல்லும் தாங்கள் உரைக்கவில்லை” என்றான் ஸ்வேதன். “அவனை நான் இங்கு அழைக்கவில்லை. இது அவர்களுடைய போர் அல்ல” என்று அர்ஜுனன் உரக்க சொன்னான். “இது நாகர்களுக்கு எதிரான போர். இப்போருக்குப் பின் அவர்கள் எங்கும் எஞ்சமாட்டார்கள். நான் இவன் அன்னையை மறுக்கவில்லை. ஆனால் அதன்பொருட்டு இவன் என்னிடம் படைகொண்டு வந்து சேரவேண்டுமென்று கூறவில்லை. என் மைந்தர் கூறாதன இயற்றுவது எனக்கு உகந்ததுமல்ல” என்றான்.

“அவன் அன்னையின் ஆணை அதுவென்றால் அதுவே அவன் கடன்” என்றான் ஸ்வேதன்.  அர்ஜுனன் “அரசுசூழ்கையில் அவ்வாறு தனிஉணர்வுகளுக்கு இடமில்லை. அவன் இங்கு சேர்ந்துகொள்வதனூடாக நாகர்களுக்கு எதிரான என் வஞ்சம் குறைவுபடக்கூடும். போர் முடிந்தபின் நாகர்களுக்கு சில உரிமைகளை இவனூடாக நான் அளிக்கவும் நேரும். எஞ்சவிட்ட நஞ்சு என்று நாகர்களை எண்ணுகிறேன். மீண்டுமொரு நஞ்சு எஞ்சும்படிவிட எண்ணமில்லை” என்று சொன்னான். “இவனை கொல்வீர்களா?” என்றான் ஸ்வேதன். “இவன் தூய நாகன் அல்ல” என்றான் அர்ஜுனன்.

“அவன் அன்னை…” என்று ஸ்வேதன் மீண்டும் சொல்லத்தொடங்க “ஆம், அவன் அன்னையின் ஆணையை ஏற்று அவன் வந்துள்ளான். அவன் அன்னையின் எண்ணமென்ன என்று யாரறிவார்? அவள் தன் குலக்குழுவின் ஆணைக்குட்பட்டவள். இப்போரின் இருபுறமும் நாகர்கள் இருக்கவேண்டும் என்று அவள் எண்ணியிருக்கலாம். எப்பக்கம் வென்றாலும் நாகர் நிலத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு அரசமுறையாக அளிக்கப்படும் என்று கருதியிருக்கலாம்” என்றான் அர்ஜுனன்.

ஸ்வேதன் சலிப்புடன் தலையை அசைத்து “இதற்குமேல் நான் சொல்லெடுக்க விரும்பவில்லை. தாங்கள் என்னை படைத்துணைவனாக ஏற்கவேண்டுமென்று மட்டும் கோருகிறேன்” என்றான். அர்ஜுனன் சிலகணங்களுக்குப் பின் உடல் தளர்ந்து இடக்கையால் மீசையை முறுக்கி நீவியபடி “அடிபணிய வந்தபோதும்கூட உன் உளத்துக்குத் தோன்றிய உன் எண்ணத்தை சொல்லத் தயங்கவில்லை. அது உன் கரவின்மையையும் துணிவையும் காட்டுகிறது. நீ எனக்கு உகந்தவன். உன் படைகள் என்னுடன் நிற்கட்டும். அவையில் உன் தரப்பைச் சொல்லி உனக்குரிய இடத்தை அளிக்க ஆவன செய்கிறேன்” என்றபின் “நீ என் பொருட்டு வந்திருக்கலாம். ஆனால் உன் குலத்தின் பொருட்டே போர்புரிகிறாய். ஆகவே அரசரின் அவையில் இப்போருக்குப் பின் அரசர் உனக்கு அளிக்கவிருப்பதென்ன என்பதை கேட்டு முறையாக சொல்பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.

ஸ்வேதன் “நாங்கள் விராடபுரிக்கோ கலிங்கத்திற்கோ கப்பம் கட்டும் நாடாக இதுவரை இருந்துகொண்டிருக்கிறோம். அரசர் யுதிஷ்டிரர் வென்று முடிசூடுகையில் நேரடியாக அஸ்தினபுரிக்கு கடன்பட்டவர்களாக திகழ வேண்டும். எங்கள் குடியில் ஓர் அரசி அஸ்தினபுரிக்கு மணமகளாக செல்லவேண்டும்” என்று ஸ்வேதன் சொன்னான். “நன்று! அதை அவையுரையாக சொல்க! மூத்தவர் ஏற்பாரென்றே எண்ணுகின்றேன்” என்றான் அர்ஜுனன். சுருதகீர்த்தியிடம் திரும்பி “இவரை அழைத்துச் செல்க! இவர் தங்கி ஓய்வெடுக்கட்டும். நாளை அரசரின் அவை கூடுகையில் இவர் வந்து அமரட்டும்” என்றான்.

சுருதகீர்த்தி தலைவணங்கி திரும்பி ஸ்வேதனிடம் மெல்ல தலையசைத்தான். ஸ்வேதன் ரோகிணியைப் பார்த்து அவளை மறந்துவிட்டதை உணர்ந்தான். அவள் இரு கைகளையும் கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய மெல்லிய உடல் நடுக்குடன் தன்னை மறந்தவளாக நின்றிருந்தாள். அர்ஜுனன் அறைக்குள்ளிருந்து எழுந்து அவர்களுக்குப் பின்னால் வந்து “இவள் உன்னுடன் வந்தவளா?” என்று ரோகிணியைச் சுட்டி கேட்டான். “ஆம், அரசே. உங்கள் அடியாள். உங்களை எண்ணி உளம் நிறைந்தவள். உங்களை பார்க்கவென்று விழைந்தாள்” என்றான் ஸ்வேதன்.

அர்ஜுனன் குழந்தையை அணைக்க விழைவதுபோல தன் இரு கைகளையும் நீட்ட ரோகிணி அறியாது மேலும் பின்னகர்ந்தாள். புன்னகையுடன் அருகே வந்து அவள் தோள்மேல் கைவைத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு “நீ அழகி. இங்கு நுழைந்தபோதே உன் கண்களை பார்த்தேன். நீர் நிறைந்த அழகிய கண்கள் எப்போதும் என்னை நிலைகுலைய வைக்கின்றன” என்றான். ரோகிணி முழந்தாள் மடிய நிலத்தில் விழுந்து அவன் கால்கள்மேல் தலைவைத்து உடல்குலுங்க அழுதாள். அர்ஜுனன் அவளை தோள்பற்றி தூக்கி “நீ இங்கு என்னுடன் இருக்கலாம். எனக்கு ஏவலர் இருவர் இருந்தனர். ஒருவரை நகுலனிடம் அனுப்பிவிட்டேன். நீ அணிஏவலர்களுடன் சேர்ந்துகொள்” என்றான். விசும்பல் ஓசையுடன் இரு கைகளாலும் முகம் பொத்தி ரோகிணி விழிநீர் சிந்தினாள்.

மறுபக்கம் சுவர் சாய்ந்து கூப்பிய கைகளுடன் அரவான் நின்றிருந்தான். அர்ஜுனன் அறைக்குள் செல்லும்பொருட்டு திரும்ப சுருதகீர்த்தி “தந்தையே, இவன் உங்கள் மைந்தன். உங்கள் நாவால் இவன் இன்னும் வாழ்த்தப்படவில்லை” என்றான். அர்ஜுனன் அரவானை நோக்கி திரும்பி “உனக்கு என் வாழ்த்து இல்லை. உனக்கான வாழ்த்துகளை உன் அன்னைக்கே அளித்திருக்கிறேன்.  இங்கு உனக்கு இடமுமில்லை. உன் அன்னையின் ஆணைப்படி என்னை வந்து பார்த்துவிட்டாய். திரும்பிச் செல். நான் உன்னை படைஏற்பு செய்யவில்லை என்று அவளிடம் சொல்” என்றான்.

“போரில் கலந்துகொள்ளும்படி என் அன்னையின் ஆணை. ஆகவே நான் திரும்ப எண்ணமில்லை” என்று அரவான் சொன்னான். அர்ஜுனன் உரத்த குரலில் “அறிவிலி! நான் ஏற்காது நீ இங்கு படையில் சேர இயலாது” என்று சொன்னான். பதற்றமாக கைகளை வீசியபடி “நான் வாழ்த்துரைத்தால் என் மைந்தனென்றாகிவிடுவாய். அதுவே உன் உரிமையை அளிக்கும். ஆகவே அது என் நாவிலிருந்து எழாது. செல்க!” என்றான். அரவான் “அரசகுடியினனாக இப்படைப்பிரிவில் சேர்வதற்குத்தான் தங்கள் சொல் தேவை. எளிய படைவீரனாக எங்கு சேரவும் தங்கள் வாழ்த்து எனக்கு தேவையில்லை” என்றான். “என் மறுப்பு இருக்குமென்றால் நீ இப்படையில் சேர இயலாது” என்று அர்ஜுனன் கூவினான்.

அவன் உடல் பதறுவதையும் முகம் சிவந்து கண்கள் ஈரமாவதையும் கண்டு ஸ்வேதன் அந்த மிகையுணர்ச்சி ஏன் என்று ஐயம் கொண்டான். அரவான் “எவரும் சேர்க்காவிட்டாலும் இக்களத்தில் எங்கேனும் எவ்வகையிலேனும் என்னால் இருக்க இயலும். நாகர்கள் விழியறியாது உலவும் கலையறிந்தவர்கள். களம்விட்டு நீங்கமாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் என்னை கொன்று அகற்றலாம்” என்றான். “கீழ்மகனே… என்ன எண்ணிவந்தாய்? என் எதிர்நின்று ஏன் சொல்லெடுக்கிறாய்?” என்றபடி அர்ஜுனன் கையோங்கி அரவானை நோக்கி சென்றான். சுருதகீர்த்தி “தந்தையே, தாங்கள் இவன் அன்னையுடன் ஆண் என்று இருந்ததை மறுக்கிறீர்களா? பாரதவர்ஷமே அறிந்த கதை அது” என்றான். “இல்லை, அவள் என் உளத்துக்கு என்றும் இனியவள்” என்றான் அர்ஜுனன். “மைந்தனை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?” என்று சுருதகீர்த்தி கேட்டான்.

“ஏனெனில் அவன் வாழவேண்டுமென்று விழைகிறேன். அவனாவது எஞ்சியிருக்க வேண்டும். ஆகவேதான் மணிபூரகத்திலிருந்து பப்ருவாகனன் இங்கு வந்து போரில் கலந்துகொள்ளலாகாதென்று ஆணையை அனுப்பினேன். இவன் வாழும் காடுவரை இப்போர்ச் செய்தி சென்று சேருமென்று நான் எண்ணவில்லை. இவன் அன்னை இப்படி அறிவின்றி இவனை கிளப்பி இங்கு அனுப்புவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று அர்ஜுனன் உடைந்த குரலில் சொன்னான். அரவானிடம் “செல்க! உயிருடனிரு, அறிவிலி… நான் உன்னை வாழ்த்துகிறேன். இங்கிருந்தல்ல, இப்போர்க்களத்தில் உயிருடன் எஞ்சினால் உன் அன்னையிடம் வந்து வாழ்த்துகிறேன். உயிர்துறந்தால் விண்ணிலிருந்து வாழ்த்துகிறேன். இப்படைப்பிரிவில் உனக்கிடமில்லை” என்றான்.

அரவான் “தந்தையே, தாங்கள் வாழ்த்தளிக்காமல் உள்ளே சென்றபோதே நான் அதை உணர்ந்தேன். என்னைப் பார்த்த முதற்கணத்திலேயே உளம் நெகிழ்ந்து நீங்கள் அளித்த நற்சொல்லை பெற்றுக்கொண்டேன். அந்த முதற்கணத்து உளநெகிழ்வின் பொருட்டு  இங்கு படைநிற்கவும் உயிர்கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளேன்” என்று உரைத்தான். சுருதகீர்த்தி “தந்தை கூறுவது மெய்தான், இளையோனே. இப்போரில் முதன்மை அம்புகள் மைந்தர்களை நோக்கியே எழும். உன்னைப் பார்த்ததும் என்னுள் எழுந்த முதல் எண்ணமும் நீயும் களம்படக்கூடும் என்பதே. நீ திரும்பிச் செல்வதே நன்று” என்றான்.

“பொறுத்தருள்க, மூத்தவரே! நான் எதன்பொருட்டு காட்டிலிருந்து கிளம்பினேனோ அது எதன்பொருட்டும் மாற்றுப்படுவதில்லை” என்று அரவான் சொன்னான். தளர்ந்தவன்போல அர்ஜுனன் “எவரிடமும் எதையும் சொல்வதில் பயனில்லை. அனைத்து மானுடரையும் மீறிய ஆணைகள் இங்கு நிறைந்துள்ளன” என்றான். பொருளில்லாமல் கையை வீசியபடி அரவானை பார்க்காமல் “எதுவாயினும் என் வாழ்த்து பெற்று இப்படையில் நீ சேரப்போவதில்லை” என்றபின் தன் அறைக்குள் சென்றான். சுருதகீர்த்தி ஸ்வேதனிடம் “வருக!” என்றான். பின்பு அரவானிடம் “உன் விழைவுப்படி ஆகுக! நாளை அரசரின் அவையில் இவருடன் நீயும் சென்று நிற்கலாம்” என்றான். பின்னர் அவன் தோளைத் தொட்டு “உன்னை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. உன் தோற்றம் அளிப்பது அனல்சுடுவதுபோன்ற வலியை” என்றபின் இறங்கி வெளியே நடந்தான்.