செந்நா வேங்கை - 52

tigசங்கன் போருக்கென படைக்கலங்களை ஒருக்கினான். குலாடத்தின் குன்றுக்குக் கீழே பலநூறு இடங்களில் இரவும்பகலும் அம்புகள் கூர்தீட்டப்பட்டன. வேல்கள் முனையொளி கொண்டன. விந்தையான பறவையொலி என அவ்வோசை கேட்டுக்கொண்டிருந்தது. அம்மக்களை அது கனவுகளுக்குள் வந்து எழுப்பியது. குருதி ஒளிகொண்ட பறக்கும் நாகங்கள் அவர்களை நோக்கி சீறின. குருதி குருதி என அவை சொல்லிக்கொண்டிருந்தன. “தீட்டப்படும் கூர் ஒருநாள் குருதியை அறியும் என்பார்கள், மூத்தவரே. அதன்பொருட்டே தீட்டுகிறேன். இவற்றில் குருதிநாடும் தெய்வங்கள் வந்தமைக! அவை நம்மை நடத்துக!” என்றான் சங்கன்.

ஒவ்வொரு நாளுமென சங்கன் பொறுமையிழந்துகொண்டிருந்தான். கருக்கிருட்டிலேயே தொலைதூரத்திலிருந்து வரும் புறாக்கள் அரண்மனையில் ஸ்வேதனின் அறைமுகப்பில் வந்து சேரும்படி பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. அவை வந்து சேர்வதற்கு முன்னரே அவன் பின்னிரவில் கிளம்பி வந்து அங்கு அவற்றுக்காக காத்திருந்தான். பொழுது துளித்துளியாக நகர்ந்ததால் சினம்கொண்டு எழுந்து மரத்தரைப் பரப்பில் குறடுகள் உரசி ஒலிக்க நடைபயின்றான். அவன் காலடி ஓசையைக் கேட்டு புறாக்கள் சாளரத்தில் இறங்காமல் விண்ணிலேயே சுழன்று பொழுது கடத்தின.

அதை ஒற்றுப்புறாப் பயிற்றுனன் கூறியபோது ஸ்வேதன் “நீ இங்கு வரவேண்டியதில்லை, இளையோனே. ஓலை வந்த அரைநாழிகைக்குள் அதன் செய்தி உனக்கு அனுப்பப்பட்டுவிடும்” என்றான். “இல்லை மூத்தவரே, அந்த ஓலையை பார்ப்பதே நான் வேண்டுவது” என்றான். “அப்படியென்றால் அசைவற்றிரு” என்று ஸ்வேதன் எரிச்சலுடன் சொன்னான். சங்கன் தலையசைத்தான். “மூடன்” என்றபடி அவன் மீண்டும் படுக்கைக்கு சென்றான். அங்கிருந்து இருளில் பீடத்தில் கைகளைக் கட்டியபடி விழிகள் மின்ன அமர்ந்திருக்கும் சங்கனின் ஓங்கிய உடலை அப்பால் நின்று பார்க்கையில் ஸ்வேதன் வியப்பும் விந்தையானதோர் தவிப்பும் கொண்டான். அவர்கள் இருவருமே செருகளத்தில் மாளக்கூடும் என்று நிமித்திகர்கள் கூறியிருந்தனர். நீர்வீழ்ச்சிகள் அணுகுகையில் மேலும் விசைகொண்டு பாறைகளில் முட்டி நுரைத்து பெருகிச்செல்லும் ஆற்றின் விழைவுதானோ அது என்று அவன் எண்ணிக்கொண்டான்.

செய்திகள் வந்ததும் சங்கன் அவற்றை எடுத்து நடுங்கும் கைகளால் பிரித்து ஒரே விழியோட்டலில் படித்து முடித்தான். பின்னர் ஒவ்வொரு எழுத்தாக மீண்டும் படித்தான். “மூத்தவரே, மீண்டும் ஒரு தூது செல்வதற்கு இளைய யாதவர் ஒருங்கியிருக்கிறார்!” என்று கூவினான். ஸ்வேதன் “ஆம், இம்முறையும் அவர் வெல்லப்போவதில்லை. மண்ணை விட்டுக்கொடுப்பதுதான் துரியோதனரின் நோக்கம் என்றால் அது எப்போதோ நடந்திருக்கும். ஒரு துளி மண்கூட அவர் அளிக்கமாட்டார். ஏனெனில் மண்ணை அளிப்பதற்கு ஒரு முறைமை உள்ளது என்றே அது குடிநினைவுகளில் பதிவாகும். ஒருபிடி மண்ணளித்தவன் பாதி நாட்டையும் அளித்திருக்கலாம் என்று பின்னர் பேச்செழக்கூடும். மண்ணில் உரிமையே இல்லை என்ற தன் சொல் நிலைநிறுத்தப்படவேண்டும் என்றே அவர் விரும்புவார்” என்றான்.

“அவ்வாறென்றால் ஏன் மீண்டும் மீண்டும் இளைய யாதவர் தூது செல்கிறார்?” என்று சங்கன் கேட்டான். ஸ்வேதன் “கைப்பிடி நிலம்கூட கேட்டுப் பார்த்தார்கள், அதுவும் துரியோதனரால் மறுக்கப்பட்டது என்று சொல்வதுதானே பாண்டவர் தரப்பை வலுப்பெறச் செய்வது? சொல்லிச் சொல்லி அதை பெருக்கி அந்த வஞ்சத்தைக் கொண்டே போர்முனைவரை படைப்பெருக்கை கொண்டுசென்று நிறுத்தமுடியுமே?” என்றான். “இப்போரின் அடிப்படைகள் எவையாயினும் ஆகுக! எளிய மக்கள் புரிந்துகொள்வது உடன்பிறந்தாரின் உரிமைப்போர் என்றுதான். எல்லைப்போரும் உடைமைப்போரும்போல மக்கள் புரிந்துகொள்வது பிறிதொன்றில்லை. ஏனெனில் ஒவ்வொரு குடியிலும் அத்தகைய பூசல்கள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.” சங்கன் “ஆம்” என்றான்.

படையெழுச்சிக்கான செய்தி வந்த அன்று அவன் பித்தன்போல கூச்சலிட்டான். “விராடபுரியிலிருந்து படைகள் கிளம்பவிருக்கின்றன. எட்டு குதிரைப்படைப் பிரிவுகள் ஒருங்கி நின்றிருக்கின்றன. நாளை அல்லது மறுநாள் அவை கிளம்பிச்செல்லக்கூடும்.” ஸ்வேதன் “எங்கு?” என்று கேட்டான். “குருக்ஷேத்ரத்திற்கு. அங்குதான் போர் நிகழும். ஏனெனில் அதுதான் குருதிநிலம். இந்திரன் விருத்திரனை வென்ற இடம். பரசுராமர் ஷத்ரியர்களின் குருதியை ஐந்து குளங்களாக தேக்கிய மண். அங்கு நிகழ்ந்தால் போர் அறத்திலேயே இறுதியில் சென்று நிலைக்குமென்று நம்புகிறார்கள். அதற்கு தொல்நூல்களில் அறநிலை என்றே பெயர் உள்ளது” என்றான்.

“விராடர் முந்திக்கொள்கிறார். தன் படைகளில் ஒன்றை அங்கு கொண்டு நிறுத்துவார். அங்கிருந்து அஸ்தினபுரிக்கு பாண்டவர்களின் அறைகூவல் சென்று சேரும். அறப்போரில் அறைகூவல் விடுப்பவரே போர் நிகழுமிடத்தை தெரிவு செய்யும் உரிமைகொண்டவர்” என்றான் ஸ்வேதன். “அஸ்தினபுரியின் படைகள் குருக்ஷேத்ரத்தில் நிலைகொண்டால் போரை அங்கு நிகழ்த்தியாகவேண்டிய இடத்திற்கு துரியோதனர் தள்ளப்படுவார்.” சங்கன் பெருமூச்சுவிட்டான். “விராடபுரியின் படைகள் பாண்டவர்களை ஆதரிக்குமா என்ற ஐயம் நேற்றுவரைக்கும் இருந்தது. அதை நீக்கவிழைகிறார்கள்” என்றான் ஸ்வேதன். சங்கன் “அவர்கள் பாண்டவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள். போரில் உடன் நின்றாகவேண்டிய கடன்கொண்டவர்கள்” என்றான்.

“ஆம், ஆனால் பாண்டவர்களுக்கு பெண்கொடுத்தவர்களில் முதன்மை பாஞ்சாலர்களுக்கே. அவர்கள் ஷத்ரியத் தொல்குடியினர். இப்போர் வென்றால் முதன்மைப் பயன்களை அடையப்போகிறவர்களும் அவர்களே. பாஞ்சாலர்களுக்கும் விராடர்களுக்கும் ஒருபோதும் அவையொருமையும் உளச்சேர்ப்பும் நிகழாது என்பதே கௌரவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்பூசல் நிகழவில்லை என்றும் தாங்கள் ஒருங்கிணைந்து படைகொண்டு சென்றிருக்கிறோம் என்றும் கௌரவர்களுக்கும் பிறருக்கும் அறிவிப்பது இத்தகைய படைநகர்வினூடாகவே இயல்வது. அத்துடன் முதலில் சென்று குருக்ஷேத்ரத்தில் நிலைகொள்ளும் படை விராடருடையதாக இருப்பதென்பது பாண்டவப் படைக்கூட்டில் விராடருடைய இடத்தை மேலும் முதன்மைப்படுத்துவது” என்றான் ஸ்வேதன்.

“முழுப் போரையும் நீங்களே நிகழ்த்திவிடுவீர்கள் போலுள்ளது” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் புன்னகைத்து “இந்தச் சிற்றூரின் எல்லைக்குள் அமர்ந்து பேரரசு ஒன்றை கனவுகாண்பவன் நான், இளையோனே” என்றான். சங்கன் உளஎழுச்சி தாளாமல் அறைக்குள் சுழன்று நடந்தபடி “போர் நிகழத்தொடங்கிவிட்டது. படைக்கலங்கள் மோதும் கணம் வரை அது நுண்வடிவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான். இடையில் கைவைத்து நின்று பெருந்தோள்களும் விரிந்த நெஞ்சும் உலைந்தசைய “இப்போது போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விண்ணில் நிகழும் தேவர்களின் போரை மண்ணிலிருந்து நோக்குவதுபோல நாம் எங்கோ இருந்துகொண்டிருக்கிறோம்” என்றான்.

ஸ்வேதன் “நாம் மீண்டும் குல அவையை கூட்டுவோம். போர் நிகழட்டும். அதில் நமது பங்கும் இருக்கும்” என்றான். “நம் குலமூத்தோர் அஞ்சுகிறார்கள். இவர்கள் தொன்மையான மலைப்பாறைகளைப்போல இருந்த இடத்தில் எதுவும் மாறாமல் யுகங்கள் கடந்து செல்ல விரும்புபவர்கள். ஒருபோதும் இவர்களின் ஒப்புதல் பெற்று நாம் படைக்கு செல்லப்போவதில்லை. இவர்களைக் கடந்தே நாம் படைகொண்டெழவேண்டும்” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் “நாம் இங்கு மன்னர்கள். ஆனால் படைநகர்வுக்கு ஆணையிடும் உரிமை நமக்கில்லை. குலக்குழுவின் முத்திரையிட்ட ஓலையை அவைத்தலைவர் கோல்தூக்கி படித்துக்காட்டினால் ஒழிய எவரும் படைக்கென எழுவதில்லை” என்றான்.

“அது முதியவர்களின் உளநிலை. என்னுடன் இளையவர்கள் இருக்கிறார்கள். ஆயிரம்பேரை இங்குள்ள இளையவர்களில் எளிதாக திரட்டிவிட முடியும் என்னால். மூத்தவரே, எனக்கு ஒப்புதல் கொடுங்கள். நாம் கொண்டு செல்லும் படைகள் அவர்களுக்கு பொருட்டல்ல. நாம் சென்றோம் என்பதே முதன்மையானது. நான் கிளம்பிச்செல்கிறேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “இங்குள்ள குலமூத்தாரைக் கடந்து நான் எதையும் செய்யமுடியாது. முறைமைகளை மீறுவது குறித்து இளமையில் நாம் எண்ணுவோம். முறைமைகளாலேயே நிலம் நாடாகிறது. நம் குரல் ஆணையாகிறது” என்றான். “நம் இளையோர் இன்னமும் தொல்குடி உளநிலை நீங்காதவர்கள். இறுதியில் அவர்கள் குடிமுறைமையை அஞ்சி பணிவார்கள்.”

ஸ்வேதன் திரும்பிச் செல்ல அவனுக்குப் பின்னால் உளக்கொதிப்புடன் சங்கன் சென்றான். “அங்கே விராடரின் படைகள் ஏன் முன்னரே சென்று நின்றிருக்கின்றன என்று புரியவில்லையா தங்களுக்கு? அவர்கள் கிழக்கு நோக்கி நிலைகொள்ள விரும்புகிறார்கள். மங்கலத்திசை அது. கிழக்கு நோக்கி நிற்பவர்கள் மேலும் ஒளிகொண்டு தெய்வங்களின் அருள் கொண்டவர்கள் என தோன்றுவர்” என்றான். “எனக்கு அமைச்சுப் பணிகள் உள்ளன. போர்சூழ்ந்ததுமே வணிகர்கள் ஒழிந்துவிட்டனர். ஒவ்வொன்றும் ஏழுமுறை விலையேறியிருக்கிறது. அரண்மனையின் பொருள்கோடலை கட்டுப்படுத்தாவிடில் கருவூலம் வற்றிவிடும். நீ சென்று பொற்கனவில் திளைத்துக்கொண்டிரு” என்று ஸ்வேதன் சொன்னான்.

மேலும் சில நாட்களுக்குள் மூன்றாவது தூது முடிந்த செய்தி அணைந்தது. விராடபுரியின் படைகள் குருக்ஷேத்ரத்தில் சென்று நிலைகொண்டன. இருபக்கமும் போருக்கான துணைதேடல்கள் தொடங்கின. ஒவ்வொருநாளும் இருபக்கமும் சென்றுசேர்பவர்களின் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சங்கன் பொறுமையிழந்து “இப்போதேனும் நாம் முடிவு செய்வோமா நாம் செல்கிறோமா இல்லையா என்று? நாம் செல்வதில்லை என்றால் அதை நமது குலஅவை முறைப்படி அறிவிக்கட்டும். நான் மட்டும் கிளம்பிச் செல்கிறேன். என் தலைவனின் பொருட்டு உடன் நின்று போரிட்டு உயிர் துறக்கிறேன்” என்றான்.

சீற்றத்துடன் தன் கையைச் சுருட்டி ஆட்டி “ஒன்று மட்டும் உறுதி கொள்ளுங்கள், எதன்பொருட்டும் நான் இங்கு தங்கமாட்டேன். கோழையென்று ஒடுங்கியிருந்தேன் என்று என் கொடிவழிகள் என்னைக் கருத இடமளிக்க மாட்டேன். நான் சென்ற பின் உளம் மாறி குலாடபுரி துரியோதனரின் பக்கம் சேரும் என்றால் குலாடர்களின் தலைகளை கதையால் உடைத்துச் சிதறடிக்கவும் தயங்கமாட்டேன்” என்றான். “என்ன பேசுகிறாய் என்று புரிந்துதான் இருக்கிறாயா? நீ ஊரும் குடியுமில்லாத படைவீரனல்ல, இளவரசன்” என்றான் ஸ்வேதன். “இல்லை. படைகொண்டு செல்லும் உரிமை எனக்கில்லை என்றால் நான் வெறும் படைவீரனே” என்று சங்கன் கூவினான். “படைவீரனுமல்ல இளவரசனுமல்ல என்ற இழிநிலை பேடிக்கு நிகரானது. அதற்கு ஒருபோதும் ஒப்பேன்.”

கண்ணீருடன் பெருந்தோள்களை விரித்து “உயிர் துறப்பதற்குரிய பேரரங்கு குருக்ஷேத்ரம். பாரதவர்ஷத்தில் இதுவரை உருவானவற்றிலேயே பெரும்போர்க்களம். எவ்வகையிலேனும் படைக்கலமேந்தி போர்புரிந்து பழகிய எவரும் இல்லத்தில் இருக்க இயலாது. இல்லத்திலிருப்பவர்கள் பெண்கள், முதியவர், குழவிகள். நான் என்னை ஆணென்று உணர்கிறேன்” என்றான். ஸ்வேதன் சற்றே சினத்துடன் “பிறருக்கு தன்மதிப்பும் ஆணவமும் இல்லையென்று நீ எண்ணக்கூடாது” என்று சொன்னான். “இருந்தால் அதை காட்டுங்கள். காட்டாதவரை அது இல்லையென்றே பொருள்” என்றபின் சங்கன் திரும்பிச் சென்றான்.

அம்முறை குலமூத்தோரின் அவையில் ஸ்வேதன் பாண்டவர்களுக்கு ஆதரவாக படைகொண்டு செல்லவேண்டும் என்ற தன் கோரிக்கையை முன்வைத்து முடித்ததும் மூத்தார் பேசுவதற்குள்ளாகவே சங்கன் எழுந்து உரத்த குரலில் கூவத்தொடங்கினான். “குலத்தலைவர்களே, உங்களுக்கும் எனக்கும் பெருத்த வேறுபாடுள்ளது. நீங்கள் காட்டில் வேட்டையாடி உண்டு மறுநாளை எண்ணாமல் முந்தைய நாளை மறந்து வாழ்ந்த தொல்குடிகளின் குருதி கொண்டவர்கள். நான் விராடரின் மைந்தன். அரசாளும் குலத்தை சார்ந்தவன். ஆம், நான் ஷத்ரியன். தொல்குடியினரின் சொல் கேட்டு அமர்ந்திருக்கும் ஷத்ரியன் கோழையோ வீணனோ அன்றி பிறனல்ல. நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் இங்கு நான் ஒடுங்கி அமர்ந்திருக்கப் போவதில்லை. நீங்கள் ஒப்புதலளித்தால் படையுடன் எழுவேன். இல்லையெனில் என் கதையுடன் கிளம்பி குருக்ஷேத்ரத்திற்கு செல்வேன். இன்றே இங்கிருக்கும் இறுதிநாள் எனக்கு” என்றான்.

மூத்த குடித்தலைவர் பொறுமையிழக்காமல் “மைந்தா, போருக்குச் செல்வதற்குமுன் அதனால் நமக்கு என்ன பயன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமென்று மட்டுமே விழைகிறேன். போர் என்றால் என்ன? இறப்பு, இழப்பு, துயர். இக்குடியின் ஆண்கள் அனைவரும் சென்று போரில் இறந்தால் அதன்பின் இங்குள்ள பெண்டிருக்கும் குழவிகளுக்கும் எவர் காப்பு? பிற குடிகள் வேட்டைவிலங்கென வந்து இக்குடியை சூறையாடி நம் பெண்டிரையும் ஆநிரைகளையும் கவர்ந்து சென்றால் எவர் பொறுப்பு? நம் குழந்தைகளை வணிகர் அடிமைப்படுத்தினால் எவர் நமக்கு துணைநிற்பார்கள்?” என்றார். “நான் சொல்வது ஒன்றே. ஒரு சொல் விராடரிடம் வாங்கி வாருங்கள். நாமும் அவர் குடிதான் என்று. அல்லது, பாண்டவரிடமிருந்து முறையான அழைப்பை பெற்றுக்கொடுங்கள்.  நூறாண்டுகாலம் அப்படைக்கூட்டு நீடிக்கும் என்று ஒரு சொல் அவர்களிடமிருந்து எழுந்தால் தலைமுறைகளென நாம் தழைத்தெழுவோம். அவ்வாறன்றி வெறும் இளமைத்துடிப்பால் படைகொண்டு செல்வது நம்மை நாமே அழிப்பதற்கு நிகர். அதை ஒருபோதும் மூத்தோரும் அறிந்தோருமாகிய குலக்குழு ஒப்புக்கொள்ளாது.”

“ஆனால் இது வெறும் போரல்ல” என்று ஸ்வேதன் சொன்னான். “மூத்தவரே, பாண்டவர்களுடன் சிற்றரசர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் அசுரரும் அரக்கரும் படைகொண்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் தங்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் உரையாடுகிறார்கள். அங்கு உருவாக்கிக்கொள்ளும் நட்புக்கூட்டுகளும் படைபுரிதல்களும் பாரதவர்ஷத்தின் அரசியலை முற்றாகவே மாற்றப்போகின்றன. போரில் வெற்றியும் தோல்வியும் எவ்வண்ணம் என்றாலும் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் கிடைப்பார்கள். தலைமுறைகளென நீளும் உறவுகள் அமையும். குருதியுறவுகள், மணப்புரிதல்கள். இனி அவற்றிலிருந்து அகன்று எவரும் தனித்த அரசியல் செய்ய இயலாது. நாம் தனித்து நிற்க வேண்டுமென்ற எண்ணத்தையே கைவிடுங்கள். எந்நிலையிலும் அதற்கு இனி வாய்ப்பே இல்லை.”

அங்கு அமர்ந்திருந்த குல மூத்தவர்கள் முகம் மாறவில்லை. “இது புதிய ஓர் அறத்திற்கான போர்” என்று ஸ்வேதன் சொன்னான். “தொல்வேதங்கள் ஷத்ரியர்களுக்களித்த மாறா மண்ணுரிமையை ஒழித்து குடியறம் பேணுபவர்கள் அனைவருக்கும் முடிகொள்ளும் உரிமையை அளிக்கும் புது வேதத்துக்கான போர். ஆகவே இது நமக்கான போரும்கூட.” குடிமூத்தார் ஒருவர் “எந்தப் போரும் ஏதேனும் ஓர் அறத்துக்கானதே. எந்தப் போரும் குருதிப்பெருக்கு மட்டுமே” என்றார். குடித்தலைவர் “நாங்கள் மூதன்னையருடனும் பேசிவிட்டு சொல்கிறோம்” என்று சொல்ல இளையோர் எழுந்து வெளியே சென்றனர்.

உள்ளே அவர்கள் ஐயத்துடனும் தயக்கத்துடனும் ஒருவருக்கொருவர் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர். இழுத்துக் கட்டப்பட்ட தோல்வார்களை வருடியதுபோன்ற அவர்களின் தணிந்த குரல்கள் இணைந்த கார்வை அவைநிகழ்ந்த பெருங்குடிலுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. பின்னர் சொல்சூழ்ந்து முடித்து அவர்கள் வெளிவந்தனர். குடிமூத்தார் ஒருவர் “எங்கள் முடிவை தலைவர் அறிவிப்பார்” என்றார். குடித்தலைவர் “இக்குழு எடுத்த முடிவு இதுவே. விராடரிடமிருந்து நமது அரசியை மீண்டும் ஏற்றுக்கொள்வதாகவும் நம் குடியை தன் குருதியென ஏற்பதாகவும் ஒற்றைச் சொல் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது பாண்டவர் தரப்பிலிருந்து நம்மை போருக்கு அழைப்பதாக ஒரு முத்திரைஓலை பெறப்படவேண்டும். அவ்விரண்டுமின்றி இங்கிருந்து படை கிளம்புவதற்கு நாங்கள் ஒப்பவில்லை” என்றார்.

சங்கன் “நன்று! இங்கே வந்து சேர்வீர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். நான் கிளம்புகிறேன். எவ்வகையிலும் இனி நான் உங்களுக்கு கட்டுப்பட்டவனல்ல” என்று சொல்லி தன் இடக்கையால் கழுத்திலணிந்திருந்த கல்மாலையை அறுத்து குழுத்தலைவரின் முன் தரையில் வீசினான். குடிமூத்தார் அனைவரும் திகைத்து வியப்பொலி எழுப்பினர். குழுத்தலைவர் சினத்துடன் கோலைத் தூக்கி முன்னால் வந்து “என்ன செய்கிறாய்? அறிவிலி! என்ன செய்கிறாய் என்று எண்ணிச் செய்கிறாயா?” என்று கூவினார். “எண்ணி நூறுமுறை துணிந்த பின்னரே இதை செய்கிறேன். இனி நான் உங்கள் குலத்தோன் அல்ல. எக்குலத்தோனுமல்ல. நான் தனியன். விரும்பினால் நீங்கள் படைசூழ்ந்து என்னை கொல்லலாம்” என்றான் சங்கன்.

“அனைவரும் அறிக! இங்கிருந்து கிளம்பி பாண்டவர் படை நோக்கி செல்லவிருக்கிறேன். ஆற்றலுள்ளோர் என்னை தடுக்கலாம், அவர்களின் தலைகளை உடைத்த பின் கடந்துசெல்வேன்” என்றவன் திரும்பி அப்பால் கூடிநின்றிருந்த தன் குலத்து இளைஞர்களை நோக்கி “ஆண்மை கொண்டோர் என்னுடன் வருக! போரென்பது ஆண்களுக்குரியதென்று எண்ணுவோர் எழுக! அஞ்சி குறுகி இங்கு வேட்டைச்சிறுகுடி என வாழ விழைபவர்கள் விலகுக!” என்றபின் தன் கதாயுதத்தை தலைக்குமேல் மும்முறை சுழற்றி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று குரலெழுப்பி முன்னால் நடந்தான். அவனை நோக்கி நின்றிருந்த திரளிலிருந்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. கதைகளும் வில்களுமாக இளைஞர்கள் அவனுடன் செல்லத்தொடங்கினர்.

ஸ்வேதன் திகைப்புடன் அதைப் பார்த்து நின்றான். அத்தகையதோர் எதிர்ப்புணர்ச்சி தன் குடிகளில் இருக்கக்கூடுமென்று அவன் எண்ணியதே இல்லை. மூத்தார் சொல்லை மீறி அவர்கள் எழுவதென்பது கதைகளிலும் நிகழ்ந்ததில்லை. குடிமூத்தார் கைகள் தளர வாய் திறந்திருக்க விழித்து நோக்கி நின்றிருந்தனர். மணற்கரை இடிந்து சரிவதுபோல மேலும் மேலுமென இளைஞர்கள் சங்கனைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர். ஸ்வேதன் திரும்பி “தாங்கள் ஆணைகளை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும், குடித்தலைவரே. இல்லையேல் நாம் நம் படைகளாலேயே கைவிடப்பட்டவர்களாவோம். ஒப்புதலளித்து நீங்கள் அவர்களை அனுப்பினால் பாண்டவர்களின் துணை நமக்கிருக்கும் என்ற அச்சமாவது நம் எதிரிகளுக்கு இருக்கும். அவர்கள் நம்மை கைவிட்டுச் சென்றால் அது நம்மைச் சூழ்ந்திருக்கும் எதிரிகளின் முன் துணையின்றி விட்டுச் செல்வதே” என்றான்.

மேலும் மேலுமென போர்க்குரல்களுடன் இளைஞர்கள் சென்றுகொண்டே இருப்பதை, அவர்களின் தந்தையரும் துணைவியரும்கூட அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தொலி எழுப்புவதை குடித்தலைவர் கண்டார். பின்னர் “ஆம், நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். அதுவே ஊழென்றால் இனி அவ்வாறே ஆகுக!” என்று மறுமொழி சொன்னார்.

குலாடகுடியின் மிகச் சிறந்த படையை சங்கன் திரட்டினான். “நாம் பெரும்படை ஒன்றில் சென்று சேரவிருக்கிறோம். பண்டு இலங்கைகடந்த அண்ணலுக்கு வால்மானுடர் செய்த உதவிக்கு நிகர் இது. இது நாம் நம் ஆசிரியர்களுக்கு அளிக்கும் காணிக்கை மட்டுமே” என்று அவன் தன் வீரர்களுக்கு சொன்னான். விடைகொள்ளும்பொருட்டு அவர்கள் பிரதீதையை அணுகி வணங்கியபோது அவள் முகம் இறுகி குளிர்ந்தவள்போல் இருப்பதை கண்டனர். நோயுற்ற புரவி என அவள் உடல் மெய்ப்புகொண்டு நின்றது. “சென்றுவருகிறோம், அன்னையே. எங்களை வாழ்த்துக!” என்று ஸ்வேதன் சொன்னான். அவளால் ஒரு சொல்லும் கூறமுடியவில்லை. உலர்ந்த உதடுகள் ஒட்டியிருந்தன. சங்கன் வணங்கியபோது மெல்லிய முனகலோசை மட்டுமே அவளிடமிருந்து எழுந்தது.