செந்நா வேங்கை - 48

tigபானுமதியின் மஞ்சத்தறையில் முன்னரே துரியோதனன் வந்து காத்திருந்தான். அவள் வாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த ஆணிலி தலைவணங்கி அரசர் உள்ளிருப்பதை ஓசையின்றி குறிப்பிட்டாள். அவளிடம் செல்லும்படி கைகாட்டிவிட்டு ஒருகணம் நின்றாள். தன் ஆடையையும் குழலையும் சீரமைக்க விழைந்தாள். அங்கு ஓர் ஆடி இருந்தால் நன்று என்று தோன்றியது. கதவை மெல்ல தொட்டு மீண்டும் ஒருகணம் தயங்கி திறந்து உள்ளே சென்றாள். துரியோதனன் மஞ்சத்தில் கைகளை மார்பில் கட்டியபடி நிகர்கொண்ட தோள்களுடன் விழிதாழ்த்தி அசைவிழந்து அமர்ந்திருந்தான். அவள் கதவில் சாய்ந்து நின்றாள். அவள் வந்த ஓசையை அவன் கேட்கவில்லை. முற்றிலும் தன்னுள் ஆழ்ந்துவிட்டிருந்தான். உடலில் மூச்சு ஓடுகிறதா என்றே ஐயம் எழுந்தது.

அவள் கதவில் தோள்சாய்ந்து நின்று அவன் உடலை காலிலிருந்து தலைவரைக்கும் பார்த்தாள். ஒவ்வொன்றும் சிற்பிகளால் நோக்கி செதுக்கியதுபோன்ற முழுமை. நெடுநாட்களுக்கு முன்னர் அவள் உதறிவிட்டு வந்த காமத்தை சென்றுதொட்டது உள்ளம். ஆனால் அது உடலறியாத ஒன்றாக எங்கோ இருந்தது. அவனைத் தொட்டு பதினாறாண்டுகளுக்கு மேலாகிறதென எண்ணிக்கொண்டாள். அவள் நிழல் அப்பால் நீண்டு அவனிடமிருந்து விலகிக் கிடந்தது. அவள் மெல்ல நடந்து சாளர ஒளிக்குக் குறுக்காக சென்றாள். அவள் நிழல் அவன்மேல் விழுந்தபோது உள்ளம் கிளர்ந்தெழுந்தது. அவன் தன்மேல் கடந்த நிழலசைவைக்கண்டு திரும்பிப்பார்த்தான். புன்னகைத்தபடி எழுந்து “அரசி, உன்னிடம் போர்விடைபெற்றுச் செல்ல வந்தேன்” என்றான்.

அவள் ஏதோ சொல்ல எண்ணினாலும் அதை மூச்செனத் திரட்ட இயலவில்லை. சிலமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம்” என காற்றாக ஒலித்தாள். “நிமித்திகர் கூற்று நான் மீளமாட்டேன் என்கிறது” என்று அவன் சொன்னான். அவனிடம் என்றும் தோன்றாத ஓர் உணர்வுநிலை முகத்தில் பரவியது. உடனே அதை சிரிப்பென ஆக்கிக்கொண்டு “ஆனால் என் உள்ளம் நான் வென்று மீள்வேன் என்கிறது. ஆம், நான் மீள்வேன். இந்நகரை மும்முடி சூடி ஆள்வேன். அதுவே என் பிறவிநோக்கம்” என்றான். அவள் சொல்கொண்டு “போருக்கு எழுகையில் வெற்றியை அன்றி பிறிதெதையும் பேசவேண்டியதில்லை” என்றாள். “நான் நிமித்திகர் சொல் கேட்பதில்லை. ஆனால் என்னைச் சூழ்ந்திருக்கும் அனைவருமே நிமித்திகர் சொல்லை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரின் விழிகளிலிருந்தும் அச்சொற்கள் என்னை வந்தடைந்துகொண்டே இருக்கின்றன” என்று சொன்ன அவன் மீண்டும் புன்னகைத்து “நா தவறிவிட்டேன். ஆனால் இங்கேனும் அது நிகழ்ந்தது நன்று” என்றான்.

அவன் அந்தத் தருணத்தை எளிதாக்கிக் கடக்கும்பொருட்டு “இன்று முழுக்க அரசுப்பணியிலிருந்தாய் என்று கேட்டேன். களைத்து துயில்கொண்டிருப்பாயோ என்று எண்ணினேன். சற்று முன் துயில் கலைந்து வந்தவள் போலிருக்கிறாய்” என்றான். பானுமதி “ஆம்” என்றாள். “ஒற்றர் செய்திகளில் நன்றென மிகக் குறைவே.” அவன் புன்னகைத்து “நற்செய்திகளைச் சொல்ல ஒற்றர் தேவையில்லை. அவர்கள் குருதிதேடும் மூக்கு கொண்டவர்கள்” என்றான். “பெண்டிர் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம், அறிந்தேன். பெண்கள் சிலநாட்களிலேயே இந்நாட்டை நுட்பமாக மாற்றிவிடுவார்கள். மீண்டு வரும் ஆண்கள் அவர்கள் அறியாத புதிய நிலம் ஒன்றில் காலடி வைப்பார்கள்.” பானுமதி புன்னகைத்து “அது அவர்கள் இளமையில் அறிந்ததாகவே இருக்கும். அடுமனையிலும் புறக்கடையிலும் நுண்வடிவில் இருந்துகொண்டிருப்பது” என்றாள்.

அந்தத் தருணத்தின் மையத்தை தொடாமல் அவர்கள் சொல்கொண்டு அகற்றினர். அது அவர்கள் நடுவே ஊசலாடியது. “நகர்முழுக்க பலியும் படையலும் வழிபாடும் பெறாத தெய்வங்கள் என ஏதுமில்லை. மண்ணில் புதைந்த அத்தனை தெய்வங்களும் விழிதிறந்து எழுந்துவிட்டன” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “விந்தை என்னவென்றால் பெரும்பாலான போர்த்தெய்வங்கள் பெண்ணுருக் கொண்டு எழுந்தவை” என்றான் துரியோதனன். “வெற்றியையும் சாவையும்கூட பெண்ணுருவாகவே அறிந்திருக்கிறார்கள்.” அவள் “ஏனென்றால் நிலம் பெண்” என்றாள். “ஆம், அதை நான் எண்ணவேயில்லை” என்றான். ஒருகணத்தில் அவள் அனைத்துச் சொற்களிலும் சலிப்பு கொண்டாள்.

அதை அவன் பிறிதொருவகையில் புரிந்துகொண்டு எழுந்தான். “நன்று, பொழுதாகிறது. உனக்கு பணிகளிருக்கும். முறைப்படி நீ செஞ்சாந்து அணிவித்தால் விடைபெற்றுச் செல்கிறேன்” என்றான். அவள் முகம் மாறுவதை உணர்ந்து மீண்டும் புன்னகைத்து “இத்தருணத்தில் வஞ்சினச் சொற்களை உரைக்கலாகாதென்று அறிவேன். பிறிது சொற்களை உரைப்பதை நெடுநாட்களாக மறந்துவிட்டிருக்கிறேன்” என்றான். பானுமதி நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்தாள். தெளிந்த விழிகள், அழகிய புன்னகை. பெருந்தோள்களின் திண்மை. நிகர்கொண்ட இத்தோள்கள் ஏன் அதுவரை உள்ளத்தில் அச்சத்தை உருவாக்கின? ஆணிடம் சற்று பிழையிருப்பதை பெண் விரும்புவது எதனால்? அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலா? இவருக்கு பிறிதெவரும் தேவையில்லை. பெண் மட்டுமல்ல, ஆசிரியர்களோ தெய்வங்களோகூட. இந்த முழுதுடலில் நான் சென்றடைய பழுதேதுமில்லை.

“என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாய்?” என்று அவன் கேட்டான். ஒன்றுமில்லை என்று அவள் தலையசைத்தாள். “அரசுப் பொறுப்பு குறித்து நான் உன்னிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. நீ செய்திருப்பவை என்னென்ன என்று கனகர் என்னிடம் சொன்னார். என்னைவிட மும்மடங்கு தெளிவுடனும் கூர்மையுடனும் இந்நிலத்தை ஆள்கிறாய் என்று தோன்றுகிறது” என்றான். “அரசரும் அமைச்சருமாக ஆண்களைவிட பெண்களே சிறப்புற திகழ முடியுமென்று சில நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். இந்நாடு ஒருபோதும் முழுமையாக எனது விழியிலும் செவியிலும் இருந்ததில்லை. இந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் அறிந்தவனாக நான் அரியணையில் அமர்ந்ததும் இல்லை. நிகழ்ந்தவற்றுக்கு தீர்வு சொல்லக்கூடியவனாக இருந்திருக்கிறேனே ஒழிய நிகழும் முன்னர் உய்த்துணர்ந்து என் கைகள் அங்கு சென்றதில்லை. நீ அன்னைத்தெய்வம்போல் இந்நிலத்தை முற்றிலும் நிறைத்திருக்கிறாய்.”

அவள் அச்சொற்களைத்தான் அவனிடம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் என அப்போது உணர்ந்தாள். நூறு கைகளும் ஆயிரம் விழிகளும் பல்லாயிரம் செவிகளுமாக அவள் பேருருக்கொண்டது அவன் சொல்பெறும்பொருட்டே. அவள் முகம் மலர்வதைக் கண்டு அவனும் புன்னகைத்தான். “ஏன் ஆண்கள் அரசாளும் முறைமையை உருவாக்கினர் மூதாதையர் என்று தெரியவில்லை. தொல்லரசுகள் அரசியரால்தான் ஆளப்பட்டன என்கிறார்கள்” என்றான். “அரசியர் போர்த்தலைவர்களல்ல” என்று அவள் சொன்னாள். “பெருந்தோள் கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கும் காவலன் என்னும் உளவடிவம் உருவான பின்னர் பெண்கள் சிறந்து ஆளமுடியவில்லை.” அவன் முகம் மாறி “ஆம், அரசனென்பவன் அரியணையில் வைக்கப்பட்ட ஒரு வாள்தான் என்று நூல்கள் சொல்கின்றன” என்றான்.

அந்தப் பேச்சினூடாக அவள் தான் கொண்ட விலக்கத்தைக் கடந்து அவனருகே உளம் சென்றாள். துரியோதனன் மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தான். எதிரில் இட்டிருந்த சிறுபீடத்தில் அவள் அமர்வாள் என்று அவன் நோக்கினான். அவ்விழி அசைவை நோக்கியதும் அவள் உள்ளம் தெளிந்தது. ஏன் மஞ்சத்தில் அமர்ந்தாலென்ன என்ற எண்ணம் எழுந்ததுமே குருதியெழ உடல் வெம்மை கொண்டது. தோள்களும் கைகளும் வியர்த்து குழைந்தன. நான்கடி வைத்து மஞ்சத்தில் அவனருகே அமரமுடியும், ஆனால் அத்தொலைவைக் கடப்பது எளிதல்ல என்று தோன்றியது. தென்குமரிமுனை வரை நடந்தே செல்வதற்கு நிகர் அது. ஆனால் முதல் அடி எடுத்துவைத்தால் போதும், மலையுச்சியிலிருந்து விழுவதைப்போல அங்கு சென்றுவிடலாம். அதற்கு பதினாறு ஆண்டுகளைக் கடந்து, ஒவ்வொரு கணமும் நெஞ்சுள் உரைத்த சொற்களனைத்தையும் கரைத்தழித்து அங்கு செல்ல வேண்டும்.

“இந்தப் போர் இன்று நம் பக்கமே துலாத்தட்டு தாழும் நிலையில் உள்ளது” என்று துரியோதனன் சொன்னான். “பதினொரு அக்ஷௌகிணி, பதினெட்டு பெருவீரர்கள். அனைத்தையும்விட குருக்ஷேத்திரத்தின் மேடான பகுதியில் நமது படைகள் நிற்கின்றன. கீழிறங்கிச் செல்லும் நமக்கு விசை மிகுதி. பிதாமகர் பீஷ்மர் நம்முடைய முதன்மை படைக்கலம். அவர் வில்லேந்தி தேர்த்தட்டில் நின்று படைமுகப்பில் தோன்றும்பொழுதே பாண்டவப்படைகளில் பெரும்பாலானவர்கள் கைதளர்ந்து வில் தாழ்த்திவிடுவார்கள். தந்தைக்கு எதிர் நிற்பதென்பது அத்தனை எளிதல்ல. முதல் நாளிலேயே இப்போர் முடிந்துவிடவும் கூடுமென்று இன்று பேசிக்கொண்டோம். அதில் சிறு ஐயமென எஞ்சியிருப்பது இளைய யாதவரின் சூழ்ச்சித்திறன்தான்.” அவளுக்குத் தெரிந்தவைதான் அவை என்று அறிந்திருந்தாலும் எண்ணாமல் பேச அவனிடமிருந்தது போரே என்பதனால் அதையே மேலும் பேசினான்.

“அவருக்கு நிகராக இங்கு நம்மிடம் கணிகர் இருக்கிறாரே?” என்று பானுமதி சொன்னாள். அவள் அக்கேள்வியை எண்ணிக் கேட்கவில்லை. அதைப்போன்ற பேதைமை கொண்ட கேள்வி அவள் நாவில் எழுவதில்லை என்பதை அவனும் அறிந்திருந்தான். பெண்கள் தங்களை ஆண்களுக்கு ஒப்புக்கொடுக்கும் வழிகளில் அதுவும் ஒன்று. குரல்திரட்டி தன்னம்பிக்கையுடன் பேசும் நிலையை அவனுக்கு அது அளித்தது. “கணிகரும் மாதுலரும் அவைக்களத்திலும் தனியறையிலும் அரசுசூழ்வதில் நிகரற்றவர்கள். கணிகர் இங்குள்ள எவரும் சென்றடையாத தொலைவிற்கு உளம் செலுத்த வல்லவர். ஆனால் படைநகர்வுகளையும் களச்சூழ்கைகளையும் அவரால் வகுக்க முடிவதில்லை. உண்மையில் கணிகருக்கு எவ்வகையிலும் படைத்தொழில் தெரிந்திருக்கவில்லை. போர் உறுதியாகி அறிவிப்பு எழுந்ததுமே அவர் சொல்லற்றவராகிவிட்டார். ஒவ்வொரு நாளுமென மாதுலர் சகுனியின் குரல் தழைந்து வருகிறது. நெடுநாட்களுக்குப் பின் அவர் இயற்றிய அவைச்சூதென்பது பால்ஹிக மூதாதையின் முடியை கவர்ந்தது மட்டும்தான்” என்றான்.

“சில நாட்களுக்கு முன்பு நாங்களிருவரும் கோட்டைமுகப்பில் சென்றுநின்று பெருகிச் சுழித்து சென்றுகொண்டிருக்கும் படைத்திரளை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கைகால்கள் பதறுவதாக மாதுலர் சொன்னார். எளிய எண்ணமென என்னுள் இருந்தது பெருகி பேருருக்கொண்டு இத்தனை பெரிதாக திசைமறைக்க சூழ்ந்திருப்பதை காண்கையில் என்னுள் இருப்பவை அனைத்தையும் நான் அஞ்சுகிறேன் மருகனே என்றார். அவர் நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டேன். ஓர் உள்ளத்திற்குள் எவருமறியாதிருக்கையில் எண்ணம் எத்தனை சிறிதாக இருக்கிறது! சின்னஞ்சிறு புழுபோல. அது புவி தாங்கும் ஆயிரம்தலை சேடனென்று மாறும் வாய்ப்பு கொண்டது. எண்ணங்களை தாங்களே வளரும்படி ஒருபோதும் விடக்கூடாதென்ற எண்ணத்தை அடைந்தேன் என்றார் மாதுலர். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் வாழும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் அவ்வாறு பேருருக்கொள்ளும் வாய்ப்புள்ளவை. கோடானுகோடி சேடர்கள் எழுந்தால் புவி தாங்கும் சேடன் தலைதாழ்த்திவிடக்கூடும் என்றார்” என்றான் துரியோதனன். “இப்போதெல்லாம் அவர் பேசுவதென்ன என்பது எனக்கு தெளிவுற புரியாமலே இருக்கிறது.”

பானுமதி புன்னகைத்து “ஆனால் அவையில் இப்போது அவர்கள் இருவரும் எண்ணமுடியாத அளவுக்கு கூர்கொண்ட சொற்களை நீங்கள் எடுக்கிறீர்கள். உங்கள் தோற்றம் ஊழ் நடத்தும் தெய்வங்களுக்குரியது” என்றாள். துரியோதனன் முகம் மலர்ந்து “ஆம், என் இளையோர்களும் அதை கூறினார்கள்” என்றான். “நான் எதையும் கணித்துரைப்பதில்லை. என் உணர்வுகளை வகுப்பதுமில்லை. என்னிலிருந்து எழும் சொற்களின் ஒழுங்கு என் அகத்தை எனக்கு காட்டுகிறது.” அவன் மீசையை நீவி “நான் இன்று கலிவடிவன். என்னிலெழுந்த தெய்வத்தின் சொற்கள் அவை. மெய்யாக இருக்கலாம்” என்றான். “முன்பு ஒவ்வொரு நாளும் என்னை கனவுகள் அலைக்கழித்தன. இன்று அவை முற்றாக மறைந்துவிட்டிருக்கின்றன. என் அகம் கல்லெனச் சமைந்துள்ளது. அதன் நிறைவை எங்கும் உணர்கிறேன்.”

அச்சொற்கள் மீண்டும் ஆழத்தில் எதையோ சென்றுதொட இருவரும் நோக்கை விலக்கிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அமர்ந்திருந்தனர். பின்னர் துரியோதனன் “உன் நோன்பு அவ்வாறே இருக்கட்டும். அது நான் இயற்றிய எதையோ ஈடு செய்வதாகத் தோன்றுகிறது” என்றான். அவள் தன் உணர்வுகள் அலைசுருண்டு பின்னடைவதை உணர்ந்தாள். “அன்று அவையில் என் மகளும் நீயும் அரசமகளிரும் வந்து பாஞ்சாலத்து அரசிக்கு ஆடையளித்தது இத்தனை நாட்களில் எவ்வகையிலோ எனக்கு உகந்ததாக உள்ளது. ஏனென்றால் எந்த வீணனும் தன் அன்னையும் துணைவியும் மகளும் கற்பரசியராக இருக்கவேண்டுமென்றே எண்ணுவான். தன் இல்லத்தில் அன்னை தெய்வங்களின் அருள் நிறைந்திருக்கவேண்டுமென்று எண்ணுவான். எழுந்தெழுந்து விலகும் ஆண்களின் உள்ளம் அவ்வப்போது பின்திரும்பி இல்லத்தை அடைகிறது. அது நிலைக்கோளாக உறுதியுடன் இருக்கவேண்டுமென அவர்கள் விழைகிறார்கள்” என்றான் துரியோதனன்.

அவள் அவனை ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தாள். துரியோதனன் அவளை நோக்கி விழியெடுக்காமல் “ஒருமுறை நான் தம்பியருடன் சொல்லாடிக்கொண்டிருக்கையில் இதைப்பற்றி பேச்செழுந்தது. அன்று அவையில் நீங்கள் எழுந்து வந்து அச்செயலை செய்யாதிருந்தால் என்ன ஆகியிருக்குமென்று சுபாகு கேட்டான். பெண்சிறுமை செய்யும் வீணன் தன் அன்னையும் துணைவியரும் கொண்ட நிறைபிறழ்தலிலிருந்து பிறப்பவன் என்ற நம்பிக்கை பாரதம் முழுக்க உண்டு. பிறழ்ந்தவனின் பிறப்பே எப்போதும் இழித்துரைக்கப்படும். என் குடிப்பெண்டிர் அனைவருக்கும் இழிவு சேர்ந்திருக்கும். என் கொடிவழியில் பிறக்கவிருக்கும் அனைத்துப் பெண்டிரும் சிறுமை கொண்டிருப்பார்கள். இன்று அன்னையர் குலத்தால் முற்றிலும் நான் துறக்கப்பட்டிருக்கிறேன். அச்சிறுமை என்னிலேயே தங்கிவிடுகிறது. என் குடி வேள்வியனல்போல் தூய்மையுடன் நிற்கிறது. அது அவ்வாறே இருக்கட்டும்” என்றான்.

பானுமதி “நான் அன்று அசலையிடம் சொன்னேன்” என்றாள். உணர்வுமிக்க சொற்களை அவ்வண்ணம் நடுவிலிருந்தே எடுக்கமுடியும் என்பதை அப்போது உணர்ந்தாள். “அன்று இளைய யாதவர் இறுதிச்சொல் உரைத்து கிளம்பியபோது. இளைய யாதவரின் ஆணைப்படி புடவிக்கிறைவனின் ஆலயத்தின் படிகளில் கங்கையில் மலரிதழ் இட்டு உங்களை வந்தடைந்தேன். ஏழாவது பிறவியில் களிற்றை அடைவேன் என நிமித்தச் சொல் எனக்கிருந்தது. உங்களை அவர் அளித்த கொடையென்றே கொண்டிருந்தேன். ஆகவே உங்களைத் துறக்க எனக்கு உரிமையில்லை என்று தோன்றியது. எதன்பொருட்டும் உங்களை அகலாமலிருப்பதே என் கடன்.” துரியோதனன் நிமிர்ந்து நோக்கினான். “கற்பின்பொருட்டு உங்களை விலக்கினேன். அதுவே உங்களை ஏற்க ஆணையிடுகிறது. உங்கள் பிழைகளோ பிறழ்வுகளோ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நான் உங்கள் துணைவி. அதற்கப்பால் வேறெந்த நிலையும் எனக்கில்லை.”

அவன் நீள்மூச்சுடன் “அது உனது பேரியல்பு. அதை நான் ஏற்றுக்கொள்கையில் மேலும் சிறியவனாவேன்” என்றான். அவள் அவனை நேர்கொண்டு நோக்கி “களம் செல்கையில் எதுவும் எஞ்சவிட்டு எழலாகாதென்பார்கள். உங்களில் எஞ்சுவதென்ன என்று நானறிவேன்” என்றாள். அப்பேச்சு ஏன் அப்படி தொட்டுத் தொட்டு நீள்கிறது என்று அவள் அறிந்திருந்தாள். அத்தருணத்தில் திரண்டு மறுக்க முடியாததாக வந்து நின்ற ஒன்றை நேர் நோக்குவதை தவிர்க்கும்பொருட்டே அச்சொல்லாடல்கள். திருமண விளையாட்டுகளில் மலர்ப்பந்தை இருபக்கமிருந்தும் மாறி மாறி உருட்டுவதுபோல். அவன் என்ன மறுமொழி சொல்வான் என்பதை சொல்லும் முன்னரே அவள் அறிந்திருந்தாள். அவன் அதை சொன்னதும் நிறைவடைந்து பிறிதொன்றை சொன்னாள். “நீ எனக்கென எதையும் அளிக்கவேண்டாம்” என்று அவன் சொன்னான். இச்சொற்களைச் சொல்லாத ஆண்களுண்டா என்று எண்ணிக்கொண்டாள். “இது எனக்காகவே” என்றாள்.

துரியோதனன் “கலிங்க அரசியை அவள் மாளிகையில் சென்று பார்த்தேன். அவள் என்னை அறியும் நிலையில் இல்லை” என்றான். அக்கூற்றினூடாக மீண்டும் அவர்கள் மிக அகன்றனர். “ஆம், அவள் நிலையை அறிந்தேன்” என்று அவள் சொன்னாள். “அவள் அந்தச் சிற்றரண்மனையில் இருந்து வெளிவந்தே பல்லாண்டுகள் ஆகின்றன. கலிங்கத்திலிருந்து இங்கு வந்துசேரவேயில்லை. நோயுற்ற உடலும் பித்தெழுந்த விழிகளும் கொண்டிருக்கிறாள். அவளுடைய செவிலி அவளிடம் என் வருகையை திரும்பத் திரும்ப சொன்னாள். அவள் என்னை நோக்கினாலும் அடையாளம் கொள்ளவில்லை.” பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. “கொய்யப்பட்டதுமே அழுகிவிடும் கனிகள் சில காமரூபத்தில் உண்டு என்று கேட்டுள்ளேன்” என்றான் துரியோதனன். அதை மேலும் சொல்ல விரும்பினான். ஆனால் அதற்கப்பால் சொல்ல ஏதுமில்லை என்றும் தெரிந்தது. “பிழைகள் மீறல்கள் என ஒவ்வொருவருக்கும் சித்திரபுத்திரர் கணக்கு வைத்திருப்பார். இத்தருணத்தில் அதைத்தான் எண்ணிக்கொள்கிறேன்” என்றான்.

“குடிகளுக்கென களம்நின்று குருதி சிந்துகையில் அரசன் தான் இழைத்த அனைத்து தீமைகளுக்கும் நிகர் செய்துவிடுகிறான் என்று நூல்கள் சொல்கின்றன” என்று அவள் சொன்னாள். அவன் அதைத்தான் எதிர்பார்த்திருந்தான் என்பது முகத்தில் தெரிந்தது. “ஆம், அரசன் ஒரு வாள் மட்டுமே. அறப்பொழுதுகளில் அதன் பிடியின் நுண்செதுக்கும் பதித்த அருமணிகளும் மட்டுமே தெரிகின்றன. அதன் ஒளிரும் நாக்கு அணியற்றது. கூர் அன்றி பிறிதொன்றும் அல்லாதது” என்றான். “அணிச்சொற்கள். முன்பு நீங்கள் இப்படி பேசியதில்லை” என்று அவள் புன்னகைத்தாள். “முன்பு நான் பேசியதே இல்லை என்று இப்போது தோன்றுகிறது” என்றான். பின்னர் எழுந்துகொண்டு “முன்பின் தொடர்பிலாது பேசிக்கொண்டிருந்ததாக தோன்றுகிறது. ஏன் இத்தனை பேசினேன் என நானே வியந்துகொள்கிறேன். நான் பேச விழைந்தவை இவை அல்ல. ஆனால் பேசிவிட்ட நிறைவையும் அடைகிறேன்” என்றான்.

அவன் கிளம்புகிறான் என்னும் எண்ணம் எழுந்ததுமே அவள் பதற்றமடைந்தாள். சொற்களென ஏதும் நெஞ்சிலும் எழவில்லை. கைகளால் ஆடைநுனியைப் பற்றி சுழற்றிக்கொண்டிருந்தாள். அவன் தன் மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்து அணிந்துகொண்டு “நான் விடைகொள்கிறேன், அரசி” என்றான். அவள் தன்னையறியாமல் தன் உடலில் ஓர் அசைவென அந்த அடிவைத்தல் நிகழ்ந்ததை உணர்ந்தாள். அதை அவன் உணர்ந்துகொண்டு அவள் விழிகளை நோக்கினான்.