செந்நா வேங்கை - 45

tigபானுமதி ஆடிமுன் அமர்ந்திருக்க சேடியர் அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். கைகளைக் கட்டியபடி அவளுக்கு முன்னால் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள் தாரை. பின்னால் சுவர்சாய்ந்து அசலை நின்றிருந்தாள். பழக்கமற்ற இளம்சேடி சிறு பொற்பேழையிலிருந்து ஒரு கணையாழியை எடுக்க அசலை அதை பார்த்து “அது பாஞ்சாலத்து அரசி அளித்தது அல்லவா?” என்றாள். “எது?” என்றாள் தாரை ஆவலுடன் குனிந்து நோக்கி. “இந்தக் கணையாழியை பாஞ்சாலத்து அரசி எனக்காக சாத்யகியிடம் கொடுத்தனுப்பினாள். நான் அதை எப்போதும் அணிந்திருந்தேன். பின்னர் அகற்றிவிட்டேன்” என்றாள் பானுமதி.

தாரை அதை எடுத்து நோக்கி “இதுதானா?” என்றாள். “கள்ளிச்செடியின் தண்டில் துளிக்கும் பால்துளி போலிருக்கிறது” என்றபடி அதன் அருமணியைச் சுழற்றி அதிலிருந்து வந்த ஒளித்துளியை தன் இடது உள்ளங்கையில் வீழ்த்தி “பழுதற்றது. ஒளி கூர்மைகொண்டுள்ளது” என்றாள். அசலை “எப்போது கழற்றினீர்கள்? நான் அதை நோக்கவேயில்லை” என்றாள். பானுமதி விழிகாட்ட சேடியர் பணிந்து அறையிலிருந்து விலகினர். பானுமதி நீள்மூச்சுடன் உடலை எளிதாக்கி நீட்டி “இளைய யாதவர் இறுதிச் சொல்லுரைத்து இங்கிருந்து சென்ற அன்று” என்றாள். “அன்றுதான் அனைத்தையும் இறுதியாக முடிவெடுத்தேன்.”

அசலை அதை புரிந்துகொண்டு அமைதியானாள். அத்தருணம் இருவருக்குமே மழைக்கு முந்தைய வெம்மைபோல் மூச்சுத்திணறச் செய்வதாக இருந்தது. அதை எப்படி கடப்பதென்று அறியாதவர்கள்போல் அமர்ந்திருந்தார்கள். தாரை அந்த ஒளிப்புள்ளியையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “முன்பு கலிங்கத்தில் ஓர் அரசனின் மாளிகையையே வைரம் ஒன்று எரித்தழித்தது என்று ஒரு கதை உண்டு” என்றாள். பானுமதி அதை செவிகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தாரை அதை சொல்ல விரும்பினாள். எனவே எழுந்து நின்று அந்த அருமணியை சாளர வெளிச்சத்தில் காட்டி அதன் குவியொளிப் புள்ளியை அங்கிருந்த திரைச்சீலை ஒன்றில் வீழ்த்தி “இவ்வாறுதான் அது நிகழ்ந்தது” என்றாள்.

“அவள் பெயர் சித்ரிகை. மச்சர்குலத்தில் பிறந்தவள். அவள் குடி முன்பு அரசர்களாக கங்கைவெளியை ஆண்டது. ஷத்ரியர்களால் அவர்கள் வெல்லப்பட்டனர். கங்கைநீரை இழந்து உள்காடுகளின் சுனைகளை நம்பி வாழலாயினர். சித்ரிகை தன் தந்தையுடன் மீன்பிடித்து வாழ்ந்தாள். அவள் விரலில் ஒரு கணையாழி இருந்தது. அதில் இருந்த மீன்கண் வைரம் கூரிய ஒளிகொண்டது. மச்சர்குலத்தின் பேரரசியரான மூதன்னையர் அணிந்திருந்தது. வழிவழியாக அன்னையரினூடாக அவளை வந்தடைந்தது.” கதை சொல்லத் தொடங்கியதுமே அக்கதையை அவள் அன்னையரிடமிருந்து கேட்ட நினைவை நோக்கி சென்றாள். ஆகவே சிறுமிக்குரிய குரலும் சொற்களும் அவளிடம் எழுந்தன. விழிகளை உருட்டி கைகளை அசைத்து அவள் பேசினாள். அவ்வாறு இளமைக்கு மீண்டமை அவளை அனைத்திலிருந்தும் விடுவிக்கவே முகமும் மலர்ந்தது.

“சித்ரிகை ஒருநாள் தன் படகுடன் எல்லை கடந்து கங்கைநீர்வெளிக்கு சென்றாள். அவள் அங்கே மீன் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக அரசப்பெரும்படகில் சென்ற கலிங்க மன்னன் அவளை கண்டான். காலை இளவெயிலில் அவள் அழகைக் கண்டு பித்து எழுந்த அவன் தன் வீரரை அனுப்பி அவளை சிறைப்பிடித்துவரச் செய்தான். படகிலேற்றி தன் தலைநகருக்கு கொண்டுசென்றான். தன்னை அவன் தொடலாகாது என அவள் விலக்கினாள். என்னுடன் அனல் உள்ளது, உன் அரண்மனையுடன் உன்னை எரித்தழிப்பேன் என்றாள். அவன் அவளை எள்ளி நகையாடி தன் அரண்மனையின் எட்டாவது மாடத்தில் சிறைவைத்தான். அவளுக்கு அன்னமும் நீரும் ஆடையும் மட்டும் அளிக்கப்பட்டன. அவ்வறைக்குள் அகல்சுடர்கூட ஏற்றப்படவில்லை. சொல்லால் அனல் ஏற்ற முடியுமா, அன்றி உன் விழிதான் எரிக்குமா? காட்டுக என்று அரசன் அவளை எள்ளிநகைத்தான்.”

“அவன் அவளை வன்மையால் அடைந்தபின் மஞ்சத்தில் துயில்கையில் அவள் எழுந்து சென்று சாளரத்தினூடாக வந்த காலைக்கதிரில் தன் மீன்விழி கணையாழியை காட்டினாள். அவ்வொளிப்புள்ளி திரைச்சீலையை பற்றி எரியச் செய்தது. அரக்குபூசி கட்டப்பட்ட அவ்வரண்மனை முற்றாக எரிந்தழிந்தது. சாம்பல்மேடு என்றான அரண்மனையில் அரசனும் அவன் ஏவலரும் வெள்ளெலும்புகளாக கிடந்தனர். சித்ரிகையின் வெள்ளெலும்பின்மேல் அவள் கணையாழியின் அருமணியிலிருந்து வந்த ஒளி வந்து தொட்டதும் அவள் ஓர் அழகிய வெண்கொக்கென்றானாள். சிறகு விரித்து எழுந்து பறந்தாள். அருகிருந்த பெருநதியின் கரையில் சென்றமர்ந்த கொக்கு தன் நிழலை கரையில் விட்டுவிட்டு நீருக்குள் வெள்ளிநிறமான மீனாக மாறி பாய்ந்து மூழ்கி திளைத்து ஆழத்தை சென்றடைந்தது.”

“அதன்பின் கலிங்கத்தில் ஒழிந்த நதிக்கரைகளில் கொக்குநிழலை மக்கள் கண்டனர். தொலைவில் கொக்கென்று தோன்றி அருகணைகையில் நிழலென்று கரைவது. நீராழத்தில் கொக்கென வெள்ளை சிறகசையப் பறக்கும் வெள்ளிமீன் ஒன்று வாழ்வதையும் அவர்கள் கண்டனர்” என்று தாரை சொன்னாள். “அந்த அருமணி ஒரு மரமாக அங்கே முளைத்தது. அதன் சின்னஞ்சிறு கனிகள் கண்ணீர்முத்துக்கள் போலிருந்தன. அந்த மரம் பாஷ்பபிந்து என்று அழைக்கப்பட்டது. அவ்வரண்மனைக்குமேல் அது விழிநீர் உகுத்தபடியே நின்றது. கலிங்க அரசியர் அந்த மரத்தின் மணிகளாலான மாலை அணிந்தபடி அங்கே பூசனை செய்வதுண்டு.”

அவள் சொன்ன அக்கதையை உளம்வாங்காமல் அவர்கள் இருவரும் வெறுமனே நோக்கினர். அவள் அக்கதையால் வேறெங்கோ கொண்டுசெல்லப்பட்டு அமைதியடைந்தாள். காற்றில் சாளரத்திரை படபடக்கும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சற்றுநேரம் கழித்து மீண்டு வந்த பானுமதி “நாம் கிளம்பவேண்டும்” என்றாள். தாரை “ஆம்” என்றாள். பானுமதி நிலம் நோக்கி குனிந்து அமர்ந்திருந்த அசலையை சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருந்தாள். அசலை அந்தக் கணையாழியை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்த பின் திரும்பி பானுமதியிடம் “மாயை உபப்பிலாவ்யம் சென்று எரிபுகுந்தாளென்ற செய்தியை நேற்றுதான் முழுமையாக கேட்டறிந்தேன்” என்றாள்.

பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி அசலை “அத்தனை படை அடுக்குகளையும் கடந்து அவள் சென்றது விந்தையானது என்று சூதர் சொன்னார்கள். நுண்ணுருக்கொண்டு குளிர்ந்த காற்றாக அவள் படைகளைக்கடந்து சென்றாளென்று கதை மாறிவிட்டிருக்கிறது” என்றாள். தாரை “இளைய யாதவர் எண்ணினால் அதை எளிதில் இயற்றியிருக்க முடியும்” என்றாள். “ஆம், அது அவருடைய திட்டம்தான். ஆனால் இங்கிருந்து எவரோ உதவாமல் அது நிகழாதென்றே நான் உய்த்துணர்ந்தேன்” என்றாள் அசலை. தாரை அதை உளம்கொள்ளாமல் எழுந்துசென்று சாளரத்தினூடாக அந்த அருமணியை நீட்டினாள். திரும்பி நோக்கி “எந்தப் பறவையாவது இதை தானியமணி என எண்ணி கொத்திச்செல்லுமா?” என்றாள். அசலை புன்னகைத்து “பறவைக்குத் தெரியாதா?” என்றாள். தாரை வெளியே நோக்கி “ஆம், அவை அறிந்திருக்கின்றன” என்றாள்.

பானுமதி அசலையை நோக்காமல் “என் கணையாழியை கொடுத்தனுப்பியிருந்தேன்” என்றாள். அசலை அதை முன்னரே உய்த்திருந்தாள். உணர்வில்லாமல் “ஏன்?” என்று கேட்டாள். “அவள் அங்கு செல்லவேண்டியவள். உரு அங்கிருக்க நிழல் இங்கிருக்க இயலாது” என்று பானுமதி சொன்னாள். அசலை “அவள் அங்கு சென்றதனால்தான் பாஞ்சாலத்து அரசி மீண்டும் கொற்றவை வடிவு கொண்டாள். அவளுடைய அறைகூவல்தான் இன்று அப்படைகளை தெய்வஆணைபோல் ஒருங்கிணைத்து ஆற்றல் கொள்ளச் செய்கிறது” என்றாள். பானுமதி “ஆம், அது அவ்வாறே நிகழவேண்டும்” என்றாள். “அதுவே ஊழெனில் நாம் அதை மறுக்க இயலாது.”

சென்ற பல மாதங்களாகவே தங்களுக்குள் சொற்கள் மிகவும் குறைந்துவிட்டன என்று பானுமதி எண்ணினாள். நாளெல்லாம் முறைமைச்சொற்களும் அணிச்சொற்களும் உரைத்தபின் நாதளர்ந்து உள்ளம் ஒழிந்துதான் அவர்கள் தனியறைக்கு மீண்டனர். சொல்லின்மையை உணர்ந்தபடி அருகருகே ஒருவரை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தனர். பேச்சு நின்றுவிட்டால் அதை முயன்று முன்னெடுக்கவேண்டியிருந்தது. இல்லையேல் எவரேனும் அங்கு வந்து அழைப்பது வரை அமைதி நீடித்தது. பானுமதி அசலையை நோக்காமல் “மாயை அங்கு சென்று பாஞ்சாலத்தரசியை உயிர்கொண்டு எழுப்பவேண்டுமென்று எண்ணியே நான் அனுப்பினேன்” என்றாள். அசலை “அது உங்கள் கொழுநருக்கு எதிரான செயலல்லவா?” என்றாள். “இல்லை. அதற்கு முன் அவரிடம் அதை செய்யப்போவதாக சொன்னேன். அவர் அறியாத எதையும் இயற்றுபவளல்ல நான்” என்றாள் பானுமதி.

அசலை எழுந்து அருகே வந்து “அவர் என்ன சொன்னார்?” என்றாள். பானுமதி “அவர் விழிகளில் எந்த மாற்றமும் தென்படவில்லை. உன் விழைவுப்படி நிகழ்க என்றார். நான் மீண்டும் ஏதோ சொல்லத் தொடங்குகையில் அரசி இந்நகர் உனது ஆட்சியில் உள்ளது என்றார்” என்றாள். அசலை “விந்தைதான். போரில் அதன் விளைவுகளை அறியாதவரா என்ன?” என்றாள். பானுமதி “நன்கு அறிவார். இந்தப் போரை எந்த ஊடுவழியினூடாகவும் வென்றெடுக்க இன்று அவர் விரும்பவில்லை. பாண்டவர்கள் தங்கள் முழுவிசையுடன் எழுந்து வரவேண்டுமென்றே அவர் எண்ணுகிறார். பாண்டவர் படைகளுக்குள் எண்ணத்திரிபுகளையும் நம்பிக்கை மாறுபாடுகளையும் உருவாக்கலாம் என்று ஒருமுறை அவையில் சகுனிதேவர் உரைத்தபோது முதற்சொற்றொடரிலேயே கைநீட்டி அதை தடுத்தார். சூழ்ச்சிகள் இன்று எனக்கு உகந்தவையல்ல. நான் தேவன். என் எதிரிகளும் தேவர்களாகவே எழவேண்டும் என்றார். மேலும் ஏதோ பேச சகுனிதேவர் நாவெடுத்தபோது கணிகர் கைநீட்டி அவர் காலைத்தொட்டு நிறுத்துவதை கண்டேன்” என்றாள்.

அசலை “ஆம், அரசர் முற்றாக பிறிதொருவராக ஆகிவிட்டிருக்கிறார்” என்றாள். பானுமதி “இன்று நம் முன் நின்றிருக்கும் அரசர் விண்வல்லமைகளில் ஒன்றான கலியின் வடிவம். களிறுகள் அரசப்பெரும்பாதையில் மட்டுமே செல்ல முடியும்” என்றாள். அசலை “நீங்கள் அத்தெய்வத்தால்தான் கவரப்படுகிறீர்களா, அரசி?” என்றாள். “ஆம் என்று இப்போது உணர்கிறேன். எப்போதுமே கருவடிவில் அத்தெய்வம் அவருடன்தான் இருந்துகொண்டிருந்தது. அவரில் என்னை கவர்ந்தது அதுவே” என்றாள் பானுமதி. “முற்றிலும் பொலிந்து அது எழுந்தபோது ஐயமறக் கண்டேன். தெய்வமெதுவானாலும் அதற்கு நம்மை முற்றளிப்பதில் பெருநிறைவு உள்ளது.”

அசலை மேலும் பேச விழையாமல் சொல்மாற்றும்பொருட்டு “நமது இளையோன் இங்கு படைப்பிரிவுடன் வந்து சேர்ந்துள்ளான், அக்கையே” என்றாள். “ஆம், என்னை வந்து கண்டு வாழ்த்து பெற விரும்பினான். அஸ்தினபுரியின் அரசி எந்தத் தனியரசனிடமும் அணுக்கம் கொண்டவளல்ல, அவைக்கு வந்து வாழ்த்து பெற்றுச்செல்க என்று சொல்லி அனுப்பினேன். நேற்று முன்னாள் என் அவைக்கு முன் வந்து வாள் தாழ்த்தி வணங்கி நற்சொல் பெற்று சென்றான்” என்றாள். அசலை மீண்டும் சொல்லணைந்து விழிகளைத் தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.

முற்றளித்தல் என்ற சொல் மட்டும் பானுமதியின் உள்ளத்தில் இருந்தது. வேறு எவரோ சொல்லி அங்கே எஞ்சவிட்டுச் சென்றதுபோல, எங்கிருந்தோ தொடர்பிலாது நினைவில் நீடிப்பதுபோல. அவள் “இளையவர் விடைகொள்ள வந்தாரா?” என்றாள். அசலை திடுக்கிட்டு விழித்து அவ்வினாவை உணர்ந்து “ஆம்” என்றாள். “நேற்று இரவே வந்து விடைபெற்றுவிட்டார்” என்றாள். “நேற்றே வந்தாரா?” என்றாள் பானுமதி. “இன்று அவர் அரசரைவிட்டு எங்கும் செல்லவியலாது என்றார்.”

அவள் பேசுவதற்காக பானுமதி நோக்கி அமர்ந்திருந்தாள். “குடித்தெய்வங்களுக்கு பூசனை செய்து கொண்டுவந்த செஞ்சாந்துடன் என் மஞ்சத்தறையில் காத்திருந்தேன். நெடுநேரம் ஆன பின்னர் சலித்து சற்றே துயின்றுவிட்டேன். பின்னிரவில் அவர் வந்தார். அவரது எடைமிக்க காலடி ஓசையை தொலைவிலேயே கேட்டேன். எத்தனை ஓசையிலும் அதை மட்டும் நான் தவறவிடுவதில்லை. ஆனால் என்னால் எழ முடியவில்லை. அத்தனை களைப்பு. கலைமகளுக்குரிய பொழுதில் காலையில் எழுந்தது. ஒருகணமும் அமராமல் பகல் முழுக்க அலைந்துகொண்டிருந்தேன். எழவேண்டும் எழவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உண்மையில் எழுந்து அமர்ந்து அவரை வரவேற்றுவிட்டேன் என்றுகூட கனவுக்குள் நடித்தேன். ஆனால் படுத்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் தெரிந்தது” என்று அசலை சொன்னாள்.

அவர் உள்ளே வந்து என் அருகே மஞ்சத்தில் அமர்ந்தார். கைகளைக் கட்டியபடி என்னை பார்த்துக்கொண்டிருப்பதாக நான் விழிமூடியே உணர்ந்தேன். எழவேண்டும் என்று எண்ணிக்கொண்டே துயின்றுகொண்டிருந்தேன். அல்லது விழிப்பில் துயிலையும் கலந்துகொண்டிருந்தேன். அவர் நெடுநேரம் அப்படி என் அருகே அமர்ந்திருக்கவேண்டும். வேறு எவரோ வெளியே வந்து அவரை அழைத்தார்கள். “ஆம்” என்றபடி அவர் எழுந்தபோது பீடம் எழுப்பிய ஒலியைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் வாயிலைச் சென்றடைந்து அங்கு நின்றிருந்த சேடியிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் எழுந்தமர்ந்த ஓசையைக் கேட்டு திரும்பி என்னை பார்த்தார். நான் எழுந்து “துயின்றுவிட்டேன்” என்றேன். அவரிடம் விழிநோக்கி நான் பேசி பதினைந்தாண்டுகளுக்கும் மேலாகிறது. அச்சொல்லையே என்னுள் இருந்து வேறெவரோ முனகினார்கள்.

அவரும் என்னை நேர்நோக்கவில்லை. அந்த அவைநிகழ்வுக்குப் பின் அவர் எந்தப் பெண்ணையுமே நேர்நோக்குவதில்லை என்றார்கள். “உன் துயிலிலேயே பெரும் களைப்பு தெரிந்தது. எழுப்ப வேண்டாமென்று எண்ணினேன்” என்றார். “நான் உங்களுக்காக பூசனை செய்திருந்தேன்… செஞ்சாந்தும் குருதியும் இருக்கிறது” என்றேன். “அதை பெற்றுக்கொள்ளத்தான் வந்தேன். நான் உடனே கிளம்பிச் செல்ல வேண்டும். மூத்தவர் எனக்காக காத்திருக்கிறார்” என்றார். அந்த உரையாடல் முற்றிலும் அயலவர் இருவர் நடுவே நிகழ்ந்தது. ஆனால் மிக அணுக்கமான இருவர் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டனர். என் நெஞ்சு படபடத்தது. புதுமணப்பெண் என வியர்த்து உடல்மெய்ப்பு கொண்டு கால்தளர்ந்து நின்றேன். அவர் குரலும் உடைந்து தழுதழுத்தது. “நான் செல்லவேண்டும்…” என்றார்.

“அவரை சற்றுநேரம் அங்கே தங்கவைக்க விரும்பினேன். ஆனால் அத்தருணத்திற்குரிய சொல்லொன்றை எடுக்க என்னால் இயலவில்லை. இயல்பாக என் உள்ளம் கண்டுகொண்டது அப்போது பேசவேண்டியது மைந்தனைப் பற்றி என்று. “மைந்தனும் உங்களுடன்தானே வருகிறான்?” என்றேன். “ஆம், மைந்தர்கள் அனைவரும் உடன் வருகிறார்கள்” என்று அவர் தடுமாறினார். “நான் கேட்டது நம் மைந்தனைப் பற்றி…” என்று எரிச்சலுடன் சொன்னேன். அந்த எதிருணர்வு அத்தருணத்தின் சங்கடத்தை குறைத்தது. நான் அவர் விழிகளை நோக்கி பேசமுடிந்தது. “அவன் பெயர் துருமசேனன்… அதுவாவது நினைவிலுள்ளதா?” என்றேன். “ஆம், ஆம், துருமசேனன். நம் மைந்தன் அல்லவா?” என்றார்.

என் உள்ளம் மலர்ந்துவிட்டது, அக்கையே. அறிவின்மைக்கு ஓர் அழகு உண்டு. ஆண்களிடம் பெண்டிர் அதையும் விரும்பக்கூடும். அவரை அப்பேருடலுடன் சிறுவனென்றாக்குவது அது. மைந்தரிடையே அவருக்கு எவ்வேறுபாடும் இல்லை என்று அறிந்திருந்தேன். மலர்வை முகத்தில் காட்டாமல் “அவனை நான் உங்களை நம்பியே களத்திற்கு அனுப்புகிறேன். அவன் முகத்தையாவது நினைவில் இருத்துங்கள்” என்றேன். “ஆம், அவர்களை தனியாகவே பேணவேண்டும் என்றார் மூத்தவர்” என்றார். அவர் உள்ளத்தில் அந்த வேறுபாட்டை புகுத்தவே முடியாதென்று உணர்ந்ததும் என் உள்ளத்தில் புன்னகை பெரிதாகியது. “நான் செல்லவேண்டும்” என்றார். “அவ்வளவுதானே? செல்க!” என்றபடி எழுந்து தாலத்தை எடுத்து நீட்டினேன். குருதியைத் தொட்டு அவர் நெற்றியில் இட விரலெடுத்ததும் “வேண்டாம்” என்றார். அவரே குருதிக்குழம்பை தொட்டு நெற்றியில் அணிந்து “இதுவே போதும், விடைகொள்கிறேன்” என்றார்.

என் மலர்ச்சி முழுமையாக வடிய, வெறுமனே நோக்கி நின்றேன். என் விழிகளில் துயர் தெரிந்திருக்கலாம். “நீ கொண்ட தொடாநோன்பை இத்தருணத்திற்கென முறிக்கவேண்டியதில்லை” என்று என் விழிகளை நோக்காமல் அவர் சொன்னார். தடுமாறிய குரலில் “இங்கு பிறிதெவர் அதை பிழையெனக் கண்டாலும் நான் அவ்வாறு எண்ணவில்லை. மாண்புள்ள அரசமகளிர் செய்யக்கூடுவது அதையே” என்றார். அவர் முகத்தில் எல்லா உணர்வுகளும் மிகையாகவே வெளிப்படும். அன்று அவர் பெருவலி கொண்டவர்போல தோன்றினார். “அன்னை வயிற்றில் பிறந்த மைந்தர் எவரும் செய்யக்கூடாததை நான் செய்தேன். அதில் எனக்கு இப்போதும் வருத்தமில்லை. என் தமையனின் பொருட்டு அதனினும் இழிந்ததையும் செய்வேன். ஆயிரமாண்டு காலம் கெடுநரகில் உழலவும் செய்வேன்” என்றபின் சொல்லுக்காக திணறி பின் வெறுமனே கையசைத்து “நன்று, என் இல்லத்தில் அறமகள் நிலைகொள்கிறாள் என்பதே எனக்கு நிறைவளிப்பது” என்றார்.

“என்னால் விழிநீரை அடக்க இயலவில்லை. மஞ்சத்தில் அமர்ந்துகொண்டு இரு கைகளிலும் முகம் புதைத்துக்கொண்டு அழுதேன். அவர் என்னை சிலகணங்கள் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றார். எடைமிக்க காலடிகளில் இருந்த தளர்வை நெடுநேரம் நான் கேட்டேன்” என்றாள் அசலை. பானுமதி திரும்பி தாரையை நோக்கினாள். அவள் அந்த அருமணியை கையில் வைத்துச் சுழற்றி அதன் ஒளியை வெவ்வேறு இடங்களில் வீழ்த்தி விளையாடிக்கொண்டிருந்தாள். “நான் அதன்பின் அவரிடம் நெடுநேரம் பேசியதில்லை, அக்கையே. அன்று பேசவேண்டும் என எண்ணினேன். ஆனால் சொல்லவேண்டியவற்றை நேர்நோக்கியபோது என் அகம் கூசியது. அந்த எதிர்நாடகத்தினூடாகவே என்னால் அவ்வாறாயினும் பேசமுடிந்தது” என்றாள் அசலை.

“பின்னர் எண்ணிக்கொண்டேன், நான் நெறியில் உறுதிகொண்டவள் அல்லவா என்று. நான் நம்புவனவற்றில் நிலைகொள்ள என்னால் ஏன் இயலவில்லை? என் உள்ளம் அவரை நூறுமுறை ஆரத்தழுவிக்கொண்டது. பதினைந்தாண்டுகள் நான் கொண்ட நோன்புகள் அனைத்தும் அத்தருணத்திலேயே பொருளற்றவை ஆயின” என்று அசலை சொன்னாள். பானுமதி “அதன்பொருட்டு வருந்தவேண்டியதில்லை. அத்தனை கௌரவ அரசியரும் நேற்றும் இன்றும் நோன்பு முறித்துக்கொண்டனர் என அறிந்தேன்” என்றாள். அசலை “அவருக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உளமுருக, முற்றளித்து தெய்வங்களை தொழுகிறேன். அவர் வென்று மீண்டு வரவேண்டும். அவர் தோள்தழுவி என்னை பொறுத்தருள்க என்று கேட்கவேண்டும். அனைத்தும் முன்பென துலங்கவேண்டும்” என்றாள்.

“அவைநின்று பெரும்பத்தினி உரைத்த சொல்லை ஒருபோதும் தெய்வங்கள் கையொழிவதில்லை என்று அறிவேன். ஆனால்…” என்றபின் அசலை பெருமூச்செறிந்தாள். பானுமதி “இளையோளே, இவர்கள் கொண்ட அன்னைப்பழி கணம் நூறெனப் பெருகுவது. இவர்களில் எழும் நம்பிக்கையும் ஆணவமும் பெருவிழைவும் அப்பழியால் உருவாக்கப்படுவதே. பலிபீடத்திற்கு கனவுநடையில் செல்லும் விலங்குகள்” என்றாள். “செருகளத்தில் இவர்கள் வீழ்கையில் குடிகளோ வீரரோ கண்ணீர்சிந்தப் போவதில்லை. அணி களைகையில் நாம் மட்டுமே கலுழ்வோம். நம் நோன்பினூடாக அவர்களை நாம் விண்ணேற்றுவோம்” என்றாள். “நாம் அவர்கள் எஞ்சவிட்டுச் செல்லும் பெரும்பழியை எஞ்சிய நாளெல்லாம் சுமக்கவிருப்பவர்கள். கைம்பெண்ணென இங்கு வாழ்ந்தாலும் பெரும்பத்தினியின் பழிச்சொல் நம்மை சூழ்ந்திருக்கும். இப்பிறவி முழுக்க அதன் இழிவை சூடுவோம்.”

அசலை “நான் அவர் மனைவி என்றே இன்று உணர்கிறேன். அதன்பொருட்டு எந்த கெடுநரகிலும் உழல சித்தமாக உள்ளேன்” என்றாள். பின்னர் உளம் விம்மி எழுந்ததை அடக்கி “அதை அவரிடம் சொல்லியிருக்கலாம். என்னால் இயலவில்லை” என்றாள். “அவ்விழிநீர் போதும், அவர் உணர்ந்திருப்பார்” என்றாள் பானுமதி. “அவர் களம்பட்ட பின் உன்னிலெழுந்த சீற்றம்கொண்ட அந்தப் பெண்ணும் மறைவாள். அன்புகொண்ட துணைவி மட்டுமே எஞ்சுவாள். அதன் பின் உனக்கு இத்துயரிருக்காது. இருநிலையே அழல். எஞ்சும் வாழ்நாள் சிறிதே. அதை எண்ணி எண்ணி கடந்துவிடலாம்” என்றாள்.

தாரை அவர்கள் அருகே வந்து இடையில் கைவைத்து நின்று “அரசி, தங்கள் கொழுநர் திரும்பமாட்டாரென்று உறுதியாகவே எண்ணுகிறீர்களா?” என்றாள். பானுமதி திடுக்கிட்டு அவளை நோக்கி சில கணங்களுக்குப் பின் ஒன்றும் சொல்லாது திரும்பிக்கொண்டாள். “நான் நம்புகிறேன்” என்றாள் தாரை. “அவைநின்று பழிகொண்ட பெண் சொன்ன சொல் அவ்வண்ணமே நிகழ்ந்தாக வேண்டும். அதுவே இங்கு பெண்ணுக்குக் காவலென தெய்வங்கள் உண்டென்பதற்கான சான்று. தலைமுறை தலைமுறையென பிறந்தெழுந்து வரும் பெண்கள் அனைவருக்கும் நம் மூதாதையர் உரைக்கும் சொல்லுறுதி அது. பிறிதொன்று நிகழாது.” பானுமதி அவள் விழிகளை நோக்கினாள். வஞ்சமோ சினமோ இல்லாமல் தெளிந்திருந்தன அவை.

“விகர்ணன் உன்னிடம் விடைபெற்றாரா?” என்றாள். “ஆம், இன்று காலை” என்று அவள் சொன்னாள். “ம்” என்றாள் பானுமதி. “என் அறை வாயிலில் வந்து நின்று கதவை தட்டினார். நான் உள்ளே தாழிட்டிருந்தேன். பலமுறை கதவு தட்டப்படுவதை கேட்டபின்னர் எழுந்து இப்பால் நின்று பெண்சிறுமை செய்தவரின்பொருட்டு வாளெடுத்து போரிடுவதாக வஞ்சினம் உரைக்கபோகிறீர்கள் என்றால் என்னை நீங்கள் பார்க்கவேண்டியதில்லை என்றேன். ஆம், நான் என் மூத்தவரின் குருதியின் ஒரு துளி என்றார். அதுவே உங்கள் வழி என்றாகுக, எனக்கு உங்களிடம் உறவேதுமில்லை என்றேன்.”

அவர் திகைத்தவராக நின்றார். பின்னர் “என்னிடமிருந்து முற்றறுத்துக் கொள்கிறாயா?”  என்றார். “ஆம், நீங்கள் களம்பட்ட செய்தி வருகையில் மரவுரி அணிந்து நோன்பு கொள்வேன். இங்கிருந்து கிளம்பி என் நாட்டுக்கு செல்வேன். அதன் பின் ஒருகணமும் உங்களை எண்ணமாட்டேன்” என்றேன். மறுபக்கம் ஓசையெழவில்லை. ஆனால் அவர் இருப்பை உணரமுடிந்தது. நெடுநேரத்திற்குப் பின் “இத்தகைய நெறிகளுக்கு அப்பாற்பட்டு நீ என்மேல் கொள்ளும் அன்பென்று ஏதுமில்லையா?” என்றார். “இல்லை, நெறிகளின்பொருட்டு நான் வாழ்கிறேன். பெண்ணென்றால் நெறியே என்பது எங்கள் குலத்தியல்பு. நெறிமீறுவதென்பது எங்களுக்கு இறப்பே” என்றேன். சிலகணங்களுக்குப் பின் அவர் திரும்பிச் செல்லும் காலடி ஓசை கேட்டது.”

பானுமதி “விகர்ணன் இப்போது குண்டாசியின் அறையிலிருக்கிறார். உடல் உருகுமளவுக்கு மது அருந்தியிருக்கிறார்” என்றாள். தாரையின் முகத்தில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. அசலை “அன்று அவையில் கௌரவரின் அறக்குரலாக எழுந்து ஒலிக்க அவரால் மட்டுமே இயன்றது. அதன் பொருட்டேனும் நீ அவரிடம் சற்று அளி கொள்ளலாம்” என்றாள். “ஒருவன் நாவில் ஒரு சொல் எழுவதென்பது அதற்குரிய தெய்வத்தின் ஆணை. தன்னிலெழுந்த சொல்லுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பவனே அத்தெய்வத்தை நிறைவுசெய்கிறான். அழியாச் சொற்களால் ஆனது இப்புடவி” என்றாள் தாரை.

பானுமதி “உன் உறுதி எனக்கு புரிகிறது. ஆனால் என் உள்ளம் அதை ஏற்கவில்லை. நீ அவரை துறந்ததனூடாக இப்புவியில் எவருமற்ற தனியராக அவர் ஆகிவிட்டார். அவர் நாளை களம்படலாம். தன்னந்தனிமையில் ஒருவர் மடிவதென்பது தெய்வங்களும் மூதாதையரும் ஏற்காத துயரம். அப்பழி அவர் மனைவியையே சேரும்” என்றாள். தாரை எந்த உணர்வுமாற்றமும் இல்லா முகத்துடன் நேர்நோக்கி “எங்கள் குடியில் ஒரு சொல் உண்டு. பிறப்பதும் மடிவதும் தன்னந்தனியாகவே. பிறக்கையில் ஊழும் மடிகையில் அறமும் துணை நிற்கின்றன. அவருக்கு தனிமை எஞ்சுவது ஒழியாத் தெய்வம் என உடனிருந்த அறத்தை அவர் துறந்ததனால்தான்” என்றாள்.

மூவரும் தங்கள் உளச்சொற்களில் அழுத்தப்பட்டவர்களாக நெடுநேரம் அமைதியாக இருந்தனர். பெருமூச்சுடன் எண்ணம் கலைந்த அசலை “ஒவ்வொரு விடைகொள்ளலும் ஒவ்வொரு வகையில் நிகழ்கின்றது” என்றாள்.  பானுமதி “நான் இன்னமும் அரசரை சந்திக்கவில்லை. இன்றிரவு வருவாரென்று எண்ணுகின்றேன்” என்றாள். “அவர்கள் இன்னும் அன்னையிடமும் விடைபெறவில்லை” என்று அசலை சொன்னாள். பானுமதி “ஆம், அவர் இன்று இவ்வரண்மனையில் எதிர்பார்ப்பது அன்னையின் வாழ்த்தை மட்டும்தான்” என்றாள்.

“அன்னையின் வாழ்த்து எழவேண்டும்” என்று அசலை சொன்னாள். “ஏனெனில் இவையனைத்தும் நெடுங்காலத்திற்கு முன் காந்தாரப் பெரும்பாலையில் நின்றபடி கீழ்த்திசையை நோக்கி அன்னை சொன்ன ஓர் விழைவிலிருந்து தொடங்குகிறது.” தாரை “அதை அன்னை உணராதிருப்பாரா?” என்று கேட்டாள். “இவ்வளவு குருதிப்பெருக்கும் தன் பொருட்டே என்று எண்ணியிருந்தால் அவரால் எப்படி அத்தனை இயல்பாக இருக்க இயல்கிறது? நான்கு நாட்களுக்கு முன்னர்கூட அவரை சென்று பார்த்தேன். ஆலய பூசனை முடித்து செஞ்சாந்தும் ஊனுணவும் கொண்டு வந்து கொடுத்தபோது தொட்டு வணங்கி நெற்றியிலணிந்தார். என்றுமிருப்பதுபோல் அதே முகமும் அதே சொற்களுமாகவே தெரிந்தார்.”

பானுமதி “அவர் கண்ணை கட்டிக்கொண்டிருக்கிறார்” என்றாள். “ஊன்விழியை” என்றாள் அசலை. “ஆம். ஆனால் வெளிவிழியை கட்டிக்கொண்டால் காலப்போக்கில் உள்விழிகளும் மூடத்தொடங்குகின்றன” என்றாள் பானுமதி. வாயிலில் ஏவற்பெண்டு வந்து நின்றாள். பானுமதி நோக்க “தேர்கள் ஒருங்கிவிட்டன” என்றாள். “கிளம்புவோம்” என்று எழுந்துகொண்ட பானுமதி “அந்தக் கணையாழியை நீயே வைத்துக்கொள்ளடி” என்று தாரையிடம் சொன்னாள்.