செந்நா வேங்கை - 24

tigபால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல் முழுக்க அவர் மெய்யாகவே மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவன் அடையவில்லை. எக்கணமும் உளம் மாறி எதிர்ப்படும் காட்டெருதின் பின்னாலோ ஓநாய்க் கூட்டத்தை தொடர்ந்தோ அவர் சென்றுவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். அவர் அதற்கேற்ப புரவியில் வரும்போது மலையூரில் அவர் அடைந்த வெற்றிகள், தீர்க்கவேண்டிய கணக்குகள் ஆகியவற்றை பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

அவருக்கு பால்ஹிகபுரியை குறித்தோ சிபிநாட்டை குறித்தோ எந்த நினைவும் இருப்பதாக தெரியவில்லை. பேசியபோது அறியும் ஆர்வமும் வெளிப்படவில்லை. பாண்டவ கௌரவ போரைப்பற்றிகூட அவருக்கு அறிந்துகொள்ள ஆர்வமில்லையென்பதை உணர்ந்த பின் அவர் நினைவை தூண்டும்பொருட்டு பூரிசிரவஸ் சில வினாக்களை கேட்டான். எதையுமே அவர் எதிர்கொள்ளவில்லை. “ஆம், கீழே மிக வெப்பமாக இருக்கும்” என்று மட்டும் திரும்பத் திரும்ப சொன்னார். அங்கிருக்கும் வெப்பம் தவிர பிற அனைத்துமே அவர் உள்ளத்தில் எங்கோ மூழ்கி மறைந்துவிட்டன என்பதை அவன் உணர்ந்தான். எந்த முகத்தையாவது அவரால் நினைவுகூர முடியுமா என்று எண்ணினான். நெடுநேரம் பேசிய பின் அவர் கைகளைத் தூக்கி கண்கள் இடுங்க சிரித்து “பார்த்திபன்!” என்றார். அவர் யார் என அவனுக்கு தெரியவில்லை.

அவர் நினைவுகூரும் தகைமை கொண்ட முகங்கள் அங்கு எத்தனை உள்ளன என்று மீண்டும் ஒரு எண்ணம் எழுந்தது. எவருடனும் அவருக்கு அணுக்கமோ தொடர்ந்த உறவோ இருக்கவில்லை. அவரை சிபி நாட்டிலிருந்து கூட்டிவந்து பால்ஹிகபுரியில் குடியமர்த்தியவன் அவன் என்பதனால் அவன் முகத்திற்கு சற்றே அழுத்தமிருக்கலாம். ஆனால் அவன் முகத்தைக்கூட அவர் முழுமையாக நினைவுகூர்வதாக தெரியவில்லை. இரண்டு முறை “நீ என்னை எங்கு பார்த்தாய்?” என்று கேட்டார். ஒருமுறை “பார்த்திபனிடம் புரவிகளை வாங்கிவரச் சொன்னவன் நீதானே?” என்றார். அவர் அவன் தந்தையின் தந்தை பிறந்தபோது பால்ஹிகபுரியில் வாழ்ந்திருக்கிறார். அவர் தன் பிதாமகர். ஆனால் மெய்யாகவே அவர்தானா அந்த பால்ஹிகர்? ஏழன்னையரை மணந்து பால்ஹிகக் குடியை உருவாக்கிய பிரஜாபதி?

பால்ஹிகர் களைப்பை அறியாதவராக இருந்தார். பகல் முழுக்க புரவியில் அமர்ந்திருந்தபோதும்கூட சற்றும் மூச்சு வாங்கவில்லை. உடல் சலித்து சோம்பல்முறிக்கவோ புரவியிலிருந்து இறங்குகையிலும் ஏறுகையிலும் அலுப்பொலி எழுப்பவோ இல்லை. பூரிசிரவஸ் வழியில் மூன்று இடங்களில் இறங்கி உடல் ஓய்வுகொண்டு மீண்டெழுந்தான். அப்பொழுதெல்லாம் புரவியை இளைப்பாறவிட்டுவிட்டு அவர் பக்கவாட்டில் மலைச்சரிவில் தொற்றி ஏறி அங்கு பதிந்திருந்த கால்தடங்கள் வழியாக அங்கு உலாவும் விலங்குகளை மதிப்பிட்டார். உரத்த குரலில் அங்கிருந்து “இன்றிரவு இவ்வழியாக பெரிய காட்டுமாட்டு மந்தை ஒன்று சென்றிருக்கிறது. அதன் பிறகு நான்கு நாழிகை கடந்து ஓநாய்க் கூட்டமொன்று அதை தொடர்ந்திருக்கிறது” என்றார்.

அரைத்துயிலில் விழிகள் சரிய படுத்திருந்த பூரிசிரவஸ் அவரை பொருளின்றி வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான். “நெடுந்தொலைவு போயிருக்க வாய்ப்பில்லை. இங்கிருந்து விரைந்து சென்றோமென்றால் வரும் இரவுக்குள் அதை பிடித்துவிடமுடியும். உப்பிட்டு உலரச்செய்து வைத்துக்கொண்டால் குளிர்காலத்திற்குத் தேவையான உலர்ஊன் எஞ்சும்” என்றார். அதன் பின்னர்தான் அவர் முந்தைய நாளிரவை இன்றிரவு என்கிறார் என்று அவன் புரிந்துகொண்டான். மலைப்பகுதிகளில் இரவு முதல் பகல் வரைதான் ஒரு நாள் என்பதை நினைவுகூர்ந்து புன்னகைத்தான்.

அவர் நடந்து வந்து சாலையின் உயரமான விளிம்பிலிருந்து செம்மண் பரப்பை நோக்கி குதித்து அவனை அணுகி “இந்தக் காட்டு மாடுகள் சுவையானவை அல்ல. ஆனால் இவற்றின் ஊன் எளிதில் கெடுவதில்லை. ஆண்டுமுழுக்ககூட இருக்கும். குளிர்காலத்தில் கொதிக்கும் ஊன் குழம்பில் அவற்றை உண்கையில் நாம் காட்டு மாடுகளை மிக இனிமையானவையாக எண்ணுவோம்” என்றார். பூரிசிரவஸ் “பிதாமகரே, தாங்கள் எதன்பொருட்டு நிலத்திற்கு வரவேண்டும் என விழைகிறீர்கள்?” என்றான். அவர் “எதன்பொருட்டும் அல்ல. வரவேண்டுமென்று தோன்றியது” என்றார். பிறகு “அப்படியும் சொல்ல முடியாது. அந்த இடம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது, அவ்வளவுதான். அது ஒரு மரக்கிளை. நான் அதிலிருந்து உதிர்ந்தாக வேண்டுமென்று நினைத்தேன்” என்றார்.

அவர் அப்போது உண்மையாகவே அகவை முதிர்ந்தவரைப்போல் இருந்தார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஏன் என்று என்னால் சொல்லமுடியவில்லை, அவ்வாறு தோன்றியது” என்றார். “செல்லுமிடத்தில்கூட பிறிதொரு வாழ்க்கையை நீங்கள் தொடங்கமுடியும், பிதாமகரே. நான் அறிந்த எந்த இளைஞரைவிடவும் உடலாற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள்” என்றான் பூரிசிரவஸ். புன்னகையுடன் “பிறிதொரு மங்கையைக்கூட நீங்கள் மணம்புரிந்துகொள்ள முடியும்” என்றான். அவர் புன்னகைத்து “ஆம், மெய்யாகவே என்னால் முடியும். ஆனால் சலித்துவிட்டது. அனைத்துமே சலித்துவிட்டது” என்றார்.

“தங்களுக்கு நாம் செல்லுமிடம் ஏதேனும் நினைவுக்கு வருகிறதா?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, நான் நினைவுகூர முயல்வதே இல்லை. என் கனவுகளிலும் கடந்த காலம் வருவதில்லை. மிகத் தொலைவிலிருந்து சில பெயர்களை எவரேனும் சொன்னால் பெயர்த்தெடுக்க முடியும். நான் அதற்கு முயல்வதே இல்லை” என்றார். “ஒருவேளை உங்கள் நீண்ட வாழ்நாள் அதன்பொருட்டு அமைந்ததாககூட இருக்கலாம்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் மறுமொழி சொல்லாமல் “நாம் கிளம்புவோமா?” என்றார்.

அவன் புரவியில் அவருடன் நீள்நடையில் செல்லும்போது அவரது உடலை பல கோணங்களில் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். தலையிலிருந்து கால்வரை மனித உடலடையும் பழுதற்ற முழுமை அவரில் குடியிருந்தது. இழுத்துக் கட்டப்பட்டவை போன்ற தசைகள். இரும்பில் வார்த்து தோல்போர்த்தவை போன்ற எலும்புச்சட்டகம். அசைவுகளில் முற்றிலும் நிகர்நிலை. அவர் பெரும்கலத்தின் அமரமுனையிலிருக்கும் சிற்பம்போல அசைவற்று புரவியில் ஒழுகிச் சென்றார். அவனைவிட இருமடங்கு எடைகொண்டவர் எனினும் முற்றிலும் நிகர்நிலையுடன் அவர் அதன்மேல் அமர்ந்திருந்ததனால் அவனுடைய புரவியைவிட எளிதாக அப்புரவி நடந்து சென்றது.

பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். பின்னர் “பிதாமகரே, தாங்கள் இறப்பதன் பொருட்டு அங்கு வருவதாக சொன்னீர்கள்” என்றான். “ஆம், நான் அங்கு இறந்துவிடுவேன்” என்றார். “ஆனால் அங்கு நீங்கள் ஏன் இறக்கவேண்டும்? அது குருக்ஷேத்திரம். அங்கு இதற்கு முன்னரும் பல பெரும்போர்கள் நிகழ்ந்துள்ளன. தொல்பழங்காலத்தில் இந்திரனும் விருத்திரனும் அங்கு போர் புரிந்ததாக சொன்னார்கள். பரசுராமர் அங்கு ஷத்ரியர்களை வென்று ஐந்து பெருங்குளங்களை குருதியால் நிரப்பினார். ஒரு நினைவின் சுவடுகூட அங்கில்லை. அங்கு இறப்பதைப்போல் பொருளற்றது ஏதுமில்லை. அது ஆழி. அனைத்தையும் உள்ளிழுத்த பின்னர் அமைதியை போர்த்தி விரிந்திருக்கும். இங்கென்றால் உங்கள் இறப்புக்கு ஒரு முழுமையும் பொருளும் அமைகிறது” என்றான்.

“என்ன பொருள்?” என்று அவர் கேட்டார். “என்ன பொருள் என்றால்…” என்றபின் பூரிசிரவஸ் சொன்னான் “எதுவும் ஏதேனும் ஒரு பொருளுடையதாக அமைவது நன்றல்லவா?” அவர் சிரித்து “எவருக்கு அப்பொருள்?” என்றார். “வரும் தலைமுறைகளுக்கு” என்று அவன் சொன்னான். “வரும் தலைமுறைகளுக்காக நான் ஒரு கணமும் வாழ்ந்ததில்லை” என்றார் பால்ஹிகர். அக்கூற்றிலிருந்த கூர்மை அவனை உலுக்கியது. வரும் தலைமுறையை எண்ணாமல் ஒருகணமும் அவன் வாழ்ந்ததில்லை என்று நினைவுகூர்ந்தான். மேலும் பேச அவனுக்கு நாவெழவில்லை.

மீண்டும் அவர் உடலை நோக்கினான். அவன் அறிந்த பால்ஹிகரின் உடல் அல்ல. மண்ணில் விழுந்த மரத்திலிருந்து புது மரம் என அப்பழைய உடலில் இருந்து அவர் மீண்டும் முளைத்தெழுந்திருந்தார். அவர் குருக்ஷேத்திரத்தில் களம்படுவதைப்போல் மாபெரும் வீணடிப்பு பிறிதில்லையென்று தோன்றியது. புரவியை குதிகாலால் உந்தி மீண்டும் அவரருகே சென்று “பிதாமகரே, உங்கள் உடலை பார்த்துவருகிறேன். பிரம்மன் பல தலைமுறைகளுக்கு ஒருமுறை வடிக்கும் பழுதற்ற சிற்பம் போலிருக்கிறீர்கள். மனித உடல் வாழும் மீயெல்லை வரை வாழ்ந்துவிட்டீர்கள். இதன்பின் வெறும் உடற்குவியலாக அங்கே சரியப்போகும் பல லட்சம் வீரர்களில் ஒருவராக நீங்கள் மடிவது பிழையென்று உங்களுக்கு தோன்றவில்லையா?” என்றான்.

பால்ஹிகர் அவனை நோக்கி திரும்பி மலையை சுட்டிக்காட்டி “இது ஒரு மாபெரும் இறப்புவெளி. ஒருநாள் குடிலிலிருந்து கிளம்பினால் பத்து பதினைந்து இறப்புகளை காணாது நான் திரும்பி வருவதில்லை. எங்கு மண்ணை கிளறினாலும் எலும்பு சிக்காமலிருப்பதில்லை. அதில் என்ன பொருளிருக்கிறது? எங்காயினும் இறப்பு அவ்வாறே. வீண் இறப்பென்று மண்ணில் எதுவுமில்லை, ஏனென்றால் வீண் பிறப்பும் இல்லை” என்றார். பூரிசிரவஸ் “தாங்கள் ஒரு மாபெரும் பனிப்பிளவில் விழுந்து இறக்கவேண்டும். உங்கள் உடல் அதில் பேணப்படவேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வரும் தலைமுறையினர் தங்களை அகழ்ந்தெடுத்து இவ்வண்ணம் ஓருடல் இங்கு வாழ்ந்ததென்பதை அறியவேண்டும்” என்றான்.

பால்ஹிகர் உரக்க நகைத்தபடி புரவியில் முன்னால் சென்றார். புரவியில் அவன் அவருடன் சென்றபடி “ஏன் நகைக்கிறீர்கள்?” என்றான். “ஒன்றுமில்லை” என்றபடி அவர் நகைத்துக்கொண்டே இருந்தார். அவன் மீண்டும் தொடர்ந்து சென்று “சொல்லுங்கள், ஏன் நகைக்கிறீர்கள்?” என்றான். “தெரியவில்லை, ஆனால் சிரிப்புக்குரியதாக தோன்றியது” என்றார். அவன் “தாங்கள் கூறியாகவேண்டும், எதன் பொருட்டு நகைத்தீர்கள்?” என்றான். “நான் அவ்வாறு எண்ணி முடிவெடுத்து நகைப்பதில்லை. நகைத்து முடித்த பின் ஏன் நகைத்தோம் என்று எண்ணுவதுமில்லை” என்றார் அவர்.

சற்றுநேரம் அவரை பார்த்த பின் பூரிசிரவஸ் தலையசைத்து அமைதியடைந்தான். தொலைவில் ஷீரவதி தெரிந்தது. பூரிசிரவஸ் “நாம் இந்த ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்” என்றான். அவர் தலையசைத்தார். “இதன் பெயர் ஷீரவதி” என்றான். “ஆம், பால் வெண்மை. இவ்வாற்றுக்கு அப்பால்தான் ஷீரபதம் எனும் மலைச்சரிவு தொடங்குகிறது” என்று சொல்லி “இதை கடந்து ஒரு மலை உச்சியில் நின்றால் நெடுந்தொலைவில் ஆழத்தில் உனது நகர் தெரியுமல்லவா?” என்றார். “ஆம், தாங்கள் நினைவுகூர்கிறீர்களா?” என்று அவன் கேட்டான். “மெல்ல நினைவுகள் எழுகின்றன” என்றார் பால்ஹிகர்.

அவர்கள் ஷீரவதியை கடந்து மறுபுறம் இறங்கிச் சென்றுகொண்டிருந்தபோது “நான் ஒருவனை நினைவுகூர்கிறேன்” என்று பால்ஹிகர் சொன்னார். “யார்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவன் பெண்ணுடல் கொண்டவன். என்னை பார்க்க வந்தான். நெடுங்காலத்துக்கு முன் நான் இறப்பும் காலமும் அணுகாத கல்லறைக்குள் நுழைந்து வேறொரு உலகில் வாழ்ந்தேன். அவன் படிகளினூடாக இறங்கி என்னை அணுகினான். ஓர் யானையின் உடலுக்குள் நான் குடியிருந்தேன் என்று அப்போது தோன்றிக்கொண்டிருந்தது. யானையின் வயிற்றில் கத்தியொன்றை இறக்கியதுபோல அவன் உள்ளே புகுந்தான்.”

“சிகண்டியா? அவர் பெயர் சிகண்டியா?” என்று பூரிசிரவஸ் உளக்கிளர்ச்சியுடன் கேட்டான். “ஆம் ஆம், நினைவுறுகிறேன். அவன் பெயர் சிகண்டி. அவன் பீஷ்மனை கொல்லும்பொருட்டு வஞ்சினம் உரைத்திருந்தான்” என்றார். “ஆம், அவர் மீண்டு வந்திருக்கிறார். உங்களைப்போலவே நூறாண்டு எங்கோ வாழ்ந்து வஞ்சம் பெருக்கி மீண்டிருக்கிறார். பாண்டவர் தரப்பில் வந்து போர்முகம் கொண்டிருக்கிறார்” என்றான். பால்ஹிகர் பெருமூச்சுவிட்டு “ஒற்றை இலக்குடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன்” என்றபின் மீண்டும் நகைத்தார்.

“இப்போது எதன்பொருட்டு நகைத்தீர்கள், பிதாமகரே?” என்றான் பூரிசிரவஸ். “இப்போது என்னால் அதை சொல்ல முடியவில்லை. அவனை முதலில் பார்த்தபோதும் நான் நகைத்தேன்” என்றார். பூரிசிரவஸ் மெல்ல ஓர் ஐயத்தை அடைந்தான். அவர் நிகர்நிலத்தில் இருக்கையில் உளம் கலங்கியவராக இருந்தார். மலையேறிய பின்னரே உளம் தெளிந்து இயல்பு நிலையடைந்தார். மீண்டும் அவர் உளம் கலங்கிக்கொண்டிருக்கிறதா? கீழே பால்ஹிகபுரியை அடையும்போது முற்றிலும் தன்னில் தொலைந்து போனவராகிவிடுவாரா? அவன் ஐயத்துடன் ஓரவிழியால் அவரை பார்த்தபடி சென்றான்.

சாலையில் ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து நோக்கியபடி பால்ஹிகர் வந்தார். “நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள், பிதாமகரே?” என்று அவன் கேட்டான். “எதை?” என்று அவர் திருப்பி கேட்டார். “சிகண்டியால் பீஷ்மரை கொல்ல முடியுமா?” என்றான். “முடியும்” என்று அவர் சொன்னார். “எவ்வாறு?” என்று பூரிசிரவஸ் உரக்க கேட்டான். “அத்தனை பெருமை கொண்டவர்! தங்களாலேயே வெல்லமுடியாதவர்! பரசுராமரை எதிர்த்து நின்றவர்! அவரை எப்படி அந்த ஆணிலி கொல்லமுடியும்?” பால்ஹிகர் “அவ்வாறெனில் கொல்லமுடியாது. அதிலென்ன?” என்றபின் மீண்டும் நகைக்கத் தொடங்கினார்.

நெடுநேரம் இடைவெளியில்லாமல் நகைத்துக்கொண்டிருந்தார். சிரிப்பு ஓய்ந்து மூச்சுகளாகி அமைதியடைந்து மீண்டும் ஏதோ புள்ளியில் வெடித்துக் கிளம்பியது. பூரிசிரவஸ் உறுதி அடைந்தான். அவரது உள்ளம் மீண்டும் முழுமையாகவே சிதைந்துவிட்டிருந்தது. அவன் அவரிடம் ஓரிரு சொற்கள் பேசமுயன்றான். அவரை அவை சென்றடையவில்லை. அவனை நோக்கி வெடித்து நகைத்தபடி “பனி! பனியுருகும்…” என்றார். “என்ன சொல்கிறீர்கள், பிதாமகரே?” என்றான். “அங்கே பனி உருகுகிறது. நாளும் பனிமலைகள் உருகிக்கொண்டே இருக்கின்றன.”

tigபால்ஹிகபுரியை சென்றடைந்தபோது பால்ஹிகர் முற்றிலும் புதியவராக ஆகிவிட்டிருந்தார். சொற்கள் முழுமையாக நின்றுவிட்டன. எந்த வினாவுக்கும் வெடித்த நகைப்பையே அளித்தார். பூரிசிரவஸுடன் வந்த வணிகர்கள் பாதுகாப்பான தொலைவு அகன்று அவருடன் வந்தனர். முதுவணிகன் சாகதன் அவனிடம் “அவர் உளங்கலங்கியிருக்கிறார். உளம் கலங்கியவர்களை கையாள்வது மிக கடினம். இவரோ நாம் அனைவரும் சேர்ந்து பற்றினாலும் அடக்கிவிடமுடியாத அளவுக்கு உடலாற்றல் மிக்கவர். அவருடன் எந்தச் சிறு முரண்பாடும் நிகழவேண்டியதில்லை” என்றார். “நன்று என்னவென்றால் இப்பாதை நேராக பால்ஹிகபுரிக்கு மட்டுமே செல்லும். ஆகவே அவரை நாம் வழிநடத்தவோ திசைதிருப்பவோ வேண்டியதில்லை. அவருடன் எந்த சொல்லாடலையும் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை.”

பூரிசிரவஸ் ஏற்கெனவே அம்முடிவை அடைந்திருந்தான். ஒவ்வொரு கணமும் அஞ்சியபடி அடாதது ஒன்றை எதிர்பார்த்தபடி அவர்கள் மலையிறங்கினர். பால்ஹிகபுரி அணுக்கத்தில் தெரியத்தொடங்கியதும் பூரிசிரவஸ் நீள்மூச்செறிந்தான். படைவீரர்கள் தென்படத் தொடங்கியதும் துணிவு கொண்டான். முதல் காவலரண் செய்தி எட்டும் தொலைவுக்கு வந்ததும் அவன் வணிகரிடம் வானில் எரியம்பு எய்யச் சொன்னான். அதிலிருந்த மந்தணச் செய்தியை கேட்டு இருபது புரவி வீரர்கள் மேலேறி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பால்ஹிகர் கைசுட்டி உரக்க நகைத்தார்.

அவர்கள் அவரை உடனே புரிந்துகொண்டு விலகி அவனை அணுகினர். காவலர்தலைவன் “இளவரசே, இந்த மலைமுதியவரின் உளம் கலங்கியிருக்கிறது” என்றான். “ஆம், அதன் பொருட்டே உங்களை வரச்சொன்னேன். படைக்கலங்களை எவரும் எந்நிலையிலும் எடுக்கலாகாது. அனைவரும் இறந்தாலும் அவர்மேல் கீறல்கூட விழக்கூடாது. ஆனால் அவர் நம் நடுவிலிருந்து தப்பிச் சென்றுவிடவும் கூடாது. அவருக்கு முன்னும் பின்னும் இரு பக்கங்களிலும் முழுமையாகவே நம் வீரர்கள் சூழ்ந்துகொள்ளட்டும்” என்று அவன் ஆணையிட்டான். “ஆனால் அதை அவர் அறியக்கூடாது.”

அவர்கள் மிக இயல்பாக பரவி வலைபோலாகி பால்ஹிகரை சூழ்ந்துகொண்டனர். அவர் அதை எவ்வகையிலும் உணரவில்லை என்பது இருபுறமும் நோக்கியபடி அவ்வப்போது நகைத்து எதையாவது சுட்டிக்காட்டியபடியும் அவ்வப்போது வெடித்துச் சிரித்தபடியும் சென்றதிலிருந்து தெரிந்தது. நிகர்நிலத்தை அடைந்து பால்ஹிகபுரிக்கான சாலையில் செல்லத்தொடங்கியபோது பூரிசிரவஸ் ஒன்றை உணர்ந்தான். அவர் அவனையும் முழுமையாக மறந்துவிட்டிருந்தார்.

நகரின் வெளி எல்லையில் குடிகள் கூடிநின்றிருக்க ஆலயப் பூசனை நிகழ்ந்துகொண்டிருந்ததை அவன் தொலைவிலேயே கண்டான். ஒருகணம் கழித்தே அவன் உள்ளத்தில் உறைத்தது, அது வடக்கெல்லையில் அமைந்த பால்ஹிக மூதாதையின் ஆலயம். அங்கு மாதம் இருமுறை உயிர்ப்பலியளித்து படையலிட்டு வேண்டுதல் செய்வது பால்ஹிகக் குடிகளின் வழக்கம். ஒருகணம் அவன் அந்தப் பொருளற்ற விந்தையில் அகம் திளைக்க ஒருவகை மெய்யிறந்த நிலையில் புரவியில் அமர்ந்திருந்தான். தெய்வம் உயிருடன் குருதியும் தசையுமாக அவர்கள் முன் எழுந்தருள்கிறது. ஆனால் அவர்கள் அவரிடமிருந்து அத்தெய்வத்தன்மையை தனித்தெடுத்து கற்சிலையாக்கி அங்கே நிறுவியிருக்கிறார்கள். அவர்களுக்கு அத்தெய்வத்தன்மையை மீண்டும் ஒரு மானுடனில் காண்பது இயல்வதல்ல.

அணுகியதும் அவன் ஆலய முகப்பில் தன் தந்தையையும் சலனையும் பூரியையும் பார்த்தான். அரசகுடிகள் அனைவருமே அங்கு கூடியிருந்தனர். அங்கிருந்து ஐந்து புரவி வீரர்கள் அவர்களை நோக்கி வந்தனர். பால்ஹிகர் வெடித்து நகைத்து இரு கைகளையும் விரித்து அவர்களை நோக்கி பொருளற்ற மலைமொழியில் ஏதோ சொன்னார். காவலர் தலைவன் அவரை அணுகி, தயங்கி வளைந்து கடந்து, பூரிசிரவஸை நெருங்கி வணங்கி வியப்புடனும் குழப்பத்துடனும் பால்ஹிகரை பார்த்தபின் “இளவரசே, அரசர் அங்கு பால்ஹிக மூதாதையருக்கு பூசனை செய்து கொண்டிருக்கிறார். அஸ்தினபுரியிலிருந்து முறையான படைஅழைப்பு வந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் நமது படைகள் கிளம்புகின்றன. அனைத்து மூதாதையருக்கும் பலிபூசனை செய்து வழிபட்டுக்கொண்டிருக்கிறோம். இன்று மூன்றாவது நாள்” என்றான்.

ஒருகணத்தில் பூரிசிரவஸ் முடிவெடுத்தான். அவனிடம் “இவர் நமது விருந்தினர். சற்று உளம் மயங்கிய நிலையில் உள்ளார். எங்கும் செல்லாது நகரினூடாகவே இவரை அழைத்து செல்க! எவரும் இவர் வருகையை அறியலாகாது. முடிந்தால் கோட்டைமுகப்பிலேயே ஒரு கூண்டுவண்டியில் இவரை ஏற்றிக்கொள்க! அரண்மனைக்குள் தனியறையில் இவர் இருக்கட்டும். அங்கு அரசருக்கு நிகரான அனைத்தும் இவருக்கு ஒருக்கப்படவேண்டும். ஆனால் வீரர்களின் பிடியிலிருந்து வெளியேறவோ பிறர் அவரைப் பார்க்கும் வாய்ப்பு அளித்தலோ கூடாது” என்றான். காவலர் தலைவன் “ஆணை” என தலைவணங்கி திரும்பி அவரை பார்த்து “முன்பு எப்போதோ பார்த்த முகம் போலுள்ளது” என்றான். பூரிசிரவஸ் மறுமொழி சொல்லாமல் “அழைத்து செல்க!” என்றான்.

தன் புரவியை கடிவாளத்தை இழுத்து விரைவழிந்து பின்னால் நகர்ந்தான் பூரிசிரவஸ். பால்ஹிகர் படைகள் சூழ முன்னால் சென்றுகொண்டே இருந்தார். பூரிசிரவஸ் நின்றுவிட்டதையோ தான் முற்றிலும் படைகள் சூழ அழைத்துச் செல்லப்படுவதையோ அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. அந்தத் திரள் முன்னால் சென்று தொலைவில் மறைந்தபின் புரவியை திருப்பிக்கொண்டு அரசகுடியினர் பூசனை செய்துகொண்டிருந்த ஆலய முகப்பு நோக்கி சென்றான். தந்தையிடம் என்ன சொல்வதென்று சொற்களை ஒவ்வொன்றாக கோத்துக்கொண்டான்.

தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட சலன் கையசைத்து அருகே வரும்படி சொன்னான். புரவியை சாலமரத்தடியில் நிறுத்தி இறங்கி தலைப்பாகையையும் ஆடையையும் சீரமைத்துக்கொண்டு அரசரையும் சுற்றத்தையும் நோக்கி சென்றான். சோமதத்தர் அவனை நோக்கி திரும்பி “நேராக வருகிறாயா? எங்கே பிதாமகர்? உன்னுடன் வருவதாக பறவையோலை வந்ததே?” என்றார். பூரிசிரவஸ் தலைவணங்கி தாழ்ந்த குரலில் “வந்துவிட்டார், அவரை அரண்மனைக்கு அனுப்பிவிட்டேன்” என்றான். சலன் “உன்னுடன் அவர் இருந்தாரா?” என்றான். “ஆம், எல்லையிலேயே நம் படைகளை வரச்சொல்லி அவரை சூழ அழைத்துச்செல்லும்படி சொல்லிவிட்டேன்” என்றான். “ஏன்?” என்று சலன் கேட்டான். “மண்ணில் இறங்க இறங்க அவர் உள்ளம் திரிபடைந்து முன்போலவே ஆகிவிட்டது” என்றான் பூரிசிரவஸ். “முன்பு போலவே என்றால்?” என்றான் சலன். “உளம் உடைந்துவிட்டது. அவரால் நம் எவரையும் அடையாளம் காண முடியாது” என்றான் பூரிசிரவஸ்.

“அவர் ஏன் உன்னுடன் வந்தார்?” என்று சலன் கேட்டான். “மூத்தவரே, அவர் நம்முடன் குருக்ஷேத்திரப் போர்முனைக்கு வரவிழைகிறார்” என்றான் பூரிசிரவஸ். “போர்முனைக்கா? அவரா? முதியவராக இருப்பாரே? நடக்கும் நிலையிலிருக்கிறாரா?” என்று சோமதத்தர் கேட்டார். “அவரைச் சுற்றி முப்பதுபேர் கொண்ட படை ஒன்றை அனுப்பியிருக்கிறேன். அவர் மெய்யாகவே பூசலிட்டால் அந்த முப்பது பேரையும் கழுத்தை ஒடித்து கொல்வதற்கு இருபது நொடி நேரமே ஆகும்” என்றான். சோமதத்தர் நம்பாமல் அவனை விழித்துப் பார்த்தார்.

“நீ அவரை அழைத்தாயா?” என்று சலன் கேட்டான். “இல்லை மூத்தவரே, நான் வணங்கி வாழ்த்துபெற்று திரும்பினேன். தானும் வருவதாக சொன்னார்” என்றான் பூரிசிரவஸ். சலன் “அங்கும் உளம் கலங்கியவராக இருந்தாரா?” என்றான். “இல்லை, அங்கு அவர் பேராற்றல் கொண்ட மலைமகனாக இருந்தார். ஏழு மைந்தர்கள். அவர்களுக்கும் மனைவியரும் குழந்தைகளும் இருக்கின்றனர்” என்றான். சோமதத்தர் “இப்புவியில் இத்தனை நாள் வாழ்ந்தும் வாழ்க்கையின் எந்நெறியையும் புரிந்துகொள்ள என்னால் இயன்றதில்லை. ஆகவே நான் வியப்புறவில்லை” என்றார்.

சலன் “என்னால் இதை வகுத்துக்கொள்ள முடியவில்லை, இளையவனே. எதன் பொருட்டு அவர் மலையிறங்கி வந்தார்? கௌரவர்களும் பாண்டவர்களும் இடும் இந்தப் போரில் அவருடைய இடமென்ன? எவருக்காக அவர் களம் நிற்கப் போகிறார்?” என்றான். “ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஏனென்று நீ உணரவில்லையா? இன்று வாழும் குருகுலத்து வழித்தோன்றல்களில் இவரே அகவை மூத்தவர். இதுவரை அகவை மூத்தவராக இருந்தவர் பீஷ்மர். அவர் கௌரவர் தரப்பில் இருப்பதனாலேயே கௌரவர்களுக்கு ஷத்ரிய ஆதரவும் குடிகளின் ஆதரவும் இருந்துகொண்டிருக்கிறது. பால்ஹிக மூதாதை பாண்டவர் தரப்புக்கு சென்றாரென்றால் அனைத்து அரசியல் நிகர்நிலைகளும் குலையும்.”

பூரிசிரவஸ் அதை உணர்ந்துகொண்டு “ஆனால் அஞ்ச வேண்டியதில்லை, மூத்தவரே. அவர் அங்கு செல்ல வாய்ப்பில்லை” என்றான். “அவருக்கு போருக்குச் செல்வது மட்டுமே உள்ளத்தில் அமைந்துள்ளது. குருக்ஷேத்திரத்தில் இறப்பேன் என்றே வந்தார்” என்றான். “இறப்பதற்காகவா?” என்று சோமதத்தர் சிரித்தார். சலன் “அதில் நகைப்பதற்கு ஒன்றுமில்லை. அங்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அங்கு தங்கள் இறப்பு நிகழுமென்று எண்ணியே செல்கிறார்கள்” என்றான்.

பூரிசிரவஸ் “அவரை நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து குருக்ஷேத்திரத்திற்கு கொண்டு செல்வோம். அங்கு அவர் களப்பலி ஆவார் என்றால் அதுவே நமக்கு மேலும் ஆற்றல் அளிக்கும். நாம் வெல்வோம். அவர்கள் வென்றால்கூட தங்கள் குலத்தின் முதுமூதாதையை கொன்று பாண்டவர்கள் அடையும் வெற்றியை எந்நிலையிலும் பெரும்பழி தொடரும்” என்றான். “ஆம், அவ்வாறு நிகழ்ந்தால் அவரது வருகை நன்றே” என்று சலன் சொன்னான்.

ஆலயத்தில் பூசனை நிகழ்ந்துகொண்டிருந்தது. கருவறைக்குள் பெரிய ஆடொன்றை தோளில் தூக்கியபடி நின்றிருந்த பால்ஹிகரின் வெண்கற்சிலையை பூரிசிரவஸ் பார்த்தான். அவருக்கு சற்று முன்பு பலி கொடுக்கப்பட்ட முட்டாடு ஓரமாக இழுத்துப் போடப்பட்டிருந்தது. பலிபீடத்திலிருந்து கொழுவிய அக்குருதி நாற்புறமும் வழிந்து அதன் சிற்பச் செதுக்குளினூடாக சொட்டியது. அக்குருதியில் சிறிது எடுத்து படையல் அன்னத்தில் தெளித்து அதை உருட்டி ஏழு உருண்டைகளாக்கி ஏழு தனி இலைகளில் படைத்தார் பூசகர். பூரிசிரவஸ் “இந்தப் படையலுணவு எங்கு சென்று சேர்கிறது என்ற எண்ணம் எழுகிறது, மூத்தவரே” என்றான். “ஏன்?” என்று சலன் கேட்டான். “இது விண்வாழும் பால்ஹிகருக்கு அளிக்கப்படுகிறது” என்றான் பூரிசிரவஸ். சலன் நகைத்து “மீண்டும் மண்ணுக்கே மழையாகப் பெய்து அவரை அடையும், அஞ்சாதே”’ என்றான். பூரிசிரவஸ் “இருபத்தைந்தாண்டுகள் பலியன்னம் பெற்று மலைமேல் இருந்திருக்கிறார்” என்றான். “அவரவர் அன்னம் அவரவரைத் தேடி அணையும் என்றல்லவா தொல்நூல்கள் சொல்கின்றன?” என்றான் சலன்.

மணியோசையுடன் பூசகர் வெளியே வந்தார். சோமதத்தர் கை நீட்ட அவருக்கு மலரும் நீரும் அளித்தார். அரசகுடியினர் ஒவ்வொருவராக சென்று பணிந்து வணங்கினர். புரவியோசை கேட்டு பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உச்ச விரைவில் வரும் புரவியில் அமர்ந்திருப்பது பால்ஹிகர்தான் என்று அவனுக்கு தெரிந்தது. “அவர்தான்!” என்றான். சலன் “என்ன ஆயிற்று?” என்றான். “நம் வீரர்களால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று சொன்ன பூரிசிரவஸ் “சினந்து வருகிறார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவேளை அவரை என் சொற்கள் கட்டுப்படுத்தலாம்” என்றபடி கைவிரித்து நின்றான்.

தொலைவிலிருந்தே உரக்கக் கூச்சலிட்டபடி வந்த பால்ஹிகர் புரவி நிற்கும் முன்னரே குதித்திறங்கி கடிவாளத்தை வீசிவிட்டு அவனை நோக்கி வந்தார். “உன்னை அவர்கள் கொன்று தூக்கி வீசிவிட்டார்கள் என்று எண்ணினேன். ஆகவேதான் என்னை பிடிக்க வந்த இருவரை கழுத்தை முறித்து தூக்கி அப்பால் வீசினேன். பிறர் அஞ்சி ஓடிவிட்டார்கள். இங்கு நின்றிருக்கிறாய்” என்ற பால்ஹிகர் அருகே நெருங்கினார். சலனை நோக்கி “உன்னை பிடித்தது யார்? இந்தச் சிறுவனா?” என்றார். சோமதத்தரை நோக்கி “இந்தக் கிழவன் எவன்?” என்றார்.

“பிதாமகரே, இவர் என் தந்தை. இவர் என் தமையன். அது என் இன்னொரு உடன்பிறந்தான்” என்றான் பூரிசிரவஸ். அவர் ஆலயத்தை நோக்கி “இது என்ன ஆலயம்?” என்றார். பின்னர் திரும்பி ஆலயத்திற்குள்ளே பார்த்தபின் “அன்னம் படைக்கப்பட்டிருக்கிறது. மைந்தா, நெடுநாட்களாயிற்று நான் நிலத்தின் அன்னத்தை உண்டு. இது வேறு சுவையுடையது” என்றபடி முன்னகர்ந்து படைக்கப்பட்டிருந்த அன்னத்தில் ஒரு கவளத்தை எடுத்தார். பூசகர் உரத்த குரலில் “அது படையலன்னம். மானுடர் உண்ணலாகாது” என்றார். பூரிசிரவஸ் “அவர் மானுடரல்ல, பூசகரே” என்றான். அவர் பால்ஹிகரின் பேருடலை நோக்கியபடி பின்னடைந்தார்.