செந்நா வேங்கை - 19

tigபூரிசிரவஸ் புரவியை திருப்பியபடி சிற்றூருக்குள் நுழைந்து சிறுமண் பாதையில் தளர்நடையில் புரவியை நடத்திச் சென்றான். காலையில் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளின் குளம்புகள் பட்டு உருண்ட கற்களும், இடம் பெயர்ந்ததன் வடுக்களும் பதிந்த செம்மண் பரப்பு இரவின் பனியீரம் உலராமல் நீர் வற்றிய ஓடை போலிருந்தது. இளவெயில் அது காலையென உளமயக்களித்தது. ஆனால் அப்போது உச்சிப்பொழுது கடந்திருந்தது. மலைகளில் எப்போதுமே இளவெயில்தான் என்பதை எண்ணத்தால் உருவாக்கி உள்ளத்திற்கு சொல்லவேண்டியிருந்தது.

அவன் தன் நீள்நிழலின்மேல் புரவியால் நடந்து தொலைவில் தெரிந்த ஊரை நோக்கி சென்றான். கல்லடுக்கிக் கட்டப்பட்ட உயரமான புகைக்குழாய்களில் இருந்து இளநீலச்சுருள்கள் எழுந்து வானில் கரையாமல் நின்றன. நாய் குரைப்பின் ஓசை தொலைவில் கேட்டுக்கொண்டிருந்தது. வெள்ளை பூசப்பட்ட சுவர்களின்மேல் விழுந்த சாய்வெயில் அவற்றை கண்கூசும் சுடர்கொள்ளச் செய்தது. மட்கும் வைக்கோல்களின் மணமும் சாணியின் மணமும் வெயிலில் ஆவியெழக் கலந்த காற்று சூழ்ந்திருந்தது. மிக அப்பால் ஓர் ஓடை ஆழத்தில் விழும் ஓசை.

இரண்டு முதிய பெண்டிர் மூங்கிலால் செய்யப்பட்ட தோல்கூடைகளில் மலைகளில் சேர்த்த காளான்களையும் கனிகளையும் ஏந்தியபடி சரிவிறங்கி வந்து பாதையில் இணைந்துகொண்டனர். அவர்களிலொருத்தி கொல்லப்பட்ட மலைக்கீரிகள் இரண்டை ஒரு கொடியில் கோத்து வலக்கையில் வைத்திருந்தாள். கண்மேல் கைவைத்து அவர்கள் பூரிசிரவஸை பார்த்தனர். அவன் அருகே வந்ததும் முகமனேதுமில்லாமல் “எவர்?” என்றொருத்தி கேட்டாள். ஆனால் அவள் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது. பூரிசிரவஸ் “வணங்குகிறேன், அன்னையரே. நான் கீழே பால்ஹிக நாட்டிலிருந்து வருகிறேன். இவ்வூரில் என் மூதாதை ஒருவர் இருக்கிறார். மஹாபால்ஹிகரை நான் சந்திக்க விரும்புகிறேன்” என்றான்.

முதியவள் “முதியவரா?” என்றாள். “ஆம், முதியவர். ஒருவேளை இம்மலைப்பகுதியிலேயே அகவை முதிர்ந்தவராக அவர் இருக்கலாம்” என்றான். “அதோ தெரியும் ஏழு வீடுகளின் நிரைதான். உயரமான புகைக்குழாய். வாயிலில் அத்திரி நின்றுள்ளது” அவள் சொன்னாள். “அதன் அருகே தெரியும் சிறிய இல்லமும் அவருடையதுதான். அவருடைய மைந்தர்கள் அந்த ஏழு இல்லங்களிலாக வசிக்கிறார்கள். ஒற்றை புகைக்குழாய் இல்லத்தில் அவருடைய துணைவி நிதை இருக்கிறாள்” என்றாள். “அவருடைய முதல் மனைவி ஹஸ்திகை நான்காண்டுகளுக்கு முன்பு காட்டெருது முட்டியதனால் இறந்துவிட்டாள். ஆனால் இந்த எட்டு வீடுகளிலும் அவர் பெரும்பாலும் இருப்பதில்லை” என்றாள் அடுத்தவள்.

“ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவருக்கு மலைகளிலிருந்து மலைகளுக்கு தனியாக அலைவதே பிடித்திருக்கிறது. மலைகளில் அலைவதனால்தான் அவருக்கு நோயே வருவதில்லை” என்றபின் “நீங்கள் அவருக்கு என்ன உறவு?” என்றாள். “எனது தொல்மூதாதை அவர்” என்றபோது ஒருத்தி புன்னகைத்தாள். பூரிசிரவஸ் சிரித்து “ஆம், அவரது கையளவுக்கே நான் இருப்பேன். ஆனால் கீழே நிகர்நிலத்திற்கு செல்லுந்தோறும் நாங்கள் உருச் சிறுக்கிறோம்” என்றான். அவள் “வணிகர்கள் சொல்வதுண்டு” என்றாள். “முன்னால் செல்க!” என்று முதியவள் கைகாட்டினாள். தலைவணங்கி பூரிசிரவஸ் அந்தப் பாதையில் சென்றான்.

அவனை நோக்கி நான்கு நாய்கள் குரைத்தபடி ஓடிவந்தன. உடல் கொழுத்து செம்மறியாடளவுக்கே முடி சுருண்டு செழித்த நாய்கள். முன்பு அங்கு நாய்கள் இருந்ததில்லையோ என்று அவன் ஐயுற்றான். நாய்களைப் பார்த்த நினைவு எழவில்லை. பின்னால் நின்றிருந்த முதுமகள் சீழ்க்கை அடித்ததும் நாய்கள் குரைப்பை நிறுத்தி அவனை நோக்கி வாலாட்டின. இரண்டு நாய்கள் அவனை நோக்கியபடி நிற்க பிற இரண்டு நாய்களும் கடந்து சென்று முதுமகள்களை அடைந்தன. அவன் புரவியில் கடந்து சென்றபோது இரு நாய்களும் மூக்கை நீட்டி குதிரையை மோப்பம் பிடித்தபடி பின்னால் வந்தன. அவன் மோப்ப எல்லையைக் கடந்ததும் திரும்பி அப்பெண்களை நோக்கி வால்சுழற்றி உடல்குழைத்து முனகியபடி சென்றன.

அவன் ஊரெல்லையாக வைக்கப்பட்டிருந்த உயர்ந்த தேவதாருத் தடியின் அருகே சென்று நின்றான். அதில் அக்குலக்குழுவின் மூதாதையர் முகங்களும் அவர்களின் குலமுத்திரையும் செதுக்கப்பட்டிருந்தன. அதற்குமேல் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிறமான கொடிப்பட்டம் காற்றிலெழுந்து பறந்துகொண்டிருந்தது. அது காற்றின் திசையை கணிப்பதற்கான கொடியும் கூட. அதற்குக் கீழே மரக்குடைவாலான நாமணி ஒன்றிருந்தது. நிலைத்தூணின் கீழே சுருட்டி இழுத்துக் கட்டப்பட்டிருந்த அதன் சரட்டைப் பிடித்து இழுத்து அடித்தான். அதன் ஒலி கூரற்றதாக இருந்தாலும் அங்கிருந்த அமைதியில் தெளிவாக கேட்டது.

சற்று நேரத்தில் முதன்மை இல்லத்திலிருந்து முதுமகன் ஒருவர் கண்களின்மேல் கையை வைத்து அவனை பார்த்தார். எதிர்வெயிலில் அவருக்கு தன் செந்நிழலே தெரியும் என்று பூரிசிரவஸ் எண்ணினான். உரத்த குரலில் “நிகர்நிலத்தில் பால்ஹிக நாட்டிலிருந்து வருபவன். என் மூதாதை பால்ஹிகர் இங்குளார். அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றான். அவர் அங்கிருந்து வரும்படி கைகாட்டினார். அவன் புரவியை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்து சென்று அவரை நோக்கி தலைவணங்கி “நான் பூரிசிரவஸ். பால்ஹிக நாட்டின் இளவரசன்” என்றான். அவர் அதை பெரிதாக நினைக்கவில்லை. பொதுவாக புன்னகைத்து தலைவணங்கி “வருக!” என்று அழைத்துச் சென்றார்.

முதல் இல்லத்தில் பால்ஹிக மைந்தர்களில் மூத்தவனின் துணைவியும் அவர்களின் மைந்தரும் தங்கியிருந்தனர். “இங்கே அவருடைய முதல் மைந்தன் குடியிருக்கிறான்” என முதியவர் சொன்னார். உள்ளிருந்து தடித்த கம்பளி ஆடையும் தோல் தொப்பியும் அணிந்த சிறுவர்கள் வெளியே வந்து அவனை பார்த்தபடி நின்றனர். அனைவரும் அவன் தோள் அளவுக்கே உயரமானவர்கள். தோள்களும் கைகளும் விரியத்தொடங்கியிருந்தன. பின்பக்கம் அவர்களை பார்த்தால் வளர்ந்த இளைஞர்கள் என்றே தோன்றும். முகங்கள் அவர்களுக்கு பத்து வயதுக்குள்ளேதான் இருக்குமென்று காட்டின. சிறுவர்களுக்குரிய நிலையற்ற அசைவுகள். குளிரில் வெந்ததுபோல் செம்மை கொண்ட கன்னங்கள். சிறிய பதிந்த மூக்கு. அவன் அவர்களின் நீலக் கண்களை மாறி மாறி பார்த்தபின் “நான் முதுபால்ஹிகரை பார்க்க வந்தேன்” என்றான்.

ஒரு சிறுவன் “முதுதந்தை இங்கில்லை. அவர் பதினேழு நாட்களுக்கு முன் மலையேறி சென்றார். திரும்பி வரவில்லை” என்றான். “தனியாகவா?” என்று அவன் கேட்டான். இன்னொருவன் “அவர் எப்போதும் தனியாகத்தான் செல்கிறார்” என்றான். உள்ளிருந்து ஆடைகளை திருத்தியபடி பெண்கள் வெளியே வந்தனர். அவர்களில் மூத்தவள் “வருக, பால்ஹிகரே! அவர் இங்கில்லை. எங்கள் கொழுநர்களும் வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். அமர்க!” என்றாள். பூரிசிரவஸ் தலைவணங்கிய பின் முதியவரிடம் “எனது புரவிக்கு நீர்காட்டி உணவு அளிக்கவேண்டும். அதன் பொதிகளை இங்கே கொண்டுவரவேண்டும்” என்றான். அவர் தலைவணங்கி திரும்பிச் சென்றார்.

பூரிசிரவஸ் தன் சேறு படிந்த காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே அணிந்திருந்த கம்பளிக் காலுறையுடன் அந்த தாழ்ந்த இல்லத்தின் சிறிய வாயிலுக்குள் குனிந்து உள்ளே சென்றான். அங்கு தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளி மெத்தைமேல் அமர்ந்தான். கால்களை நீட்டி கைகளை மடித்து வைத்துக்கொண்டு “உங்களை சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. நான் இந்த மலைக்குமேல் வந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது” என்றான். “ஆம், உங்களைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம்” என்றாள் அவள். பக்கத்து இல்லத்திலிருந்து மேலும் மூன்று பெண்கள் உள்ளே வந்தனர். “மூதாதையின் துணைவி எங்குள்ளார்?” என்றான். “அவர் கன்றோட்டி மலைக்குச் சென்றுவிட்டார். நாங்கள் கைக்குழந்தை வைத்திருப்பதால் இங்கிருக்கிறோம்” என்றாள் இன்னொருத்தி.

அப்போதுதான் அவ்வேழு பேரில் மூவர் கருவுற்றவர்கள், நால்வர் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் என்பதை அவன் உணர்ந்தான். ஒவ்வொரு குழந்தையும் இருமடங்கு பெரிதாக இருந்தது. அவர்களின் பெரிய கைகளுக்கு அவை இயல்பாக தோற்றமளித்தன. தன்னால் அவற்றை இயல்பாக எடுத்து கொஞ்சமுடியாது என்று நினைத்துக்கொண்டான். சிறிய கண்களால் அவனை ஐயத்துடனும் குழப்பத்துடனும் அவை நோக்கிக்கொண்டிருந்தன. ஒரு குழந்தையைப் பார்த்து அவன் புன்னகைத்தபோது அது திடுக்கிட்டு திரும்பி அன்னையை கையால் அணைத்துக்கொண்டு அவள் தோளில் முகம் புதைத்தது.

“அவர்கள் அயலவர்களை பார்த்ததில்லை” என்று அந்தப் பெண் சொன்னாள். “நான் முறைப்படி அவர்களுக்கு தந்தை உறவு கொண்டவன். குழந்தைகளை இங்கு கொடுங்கள்” என்று பூரிசிரவஸ் கேட்டான். இளையவள் அவள் கையிலிருந்த குழந்தையை அவனிடம் நீட்ட அது திரும்பி அன்னையை பற்றிக்கொண்டு வீறிட்டது. “சரி, வேண்டியதில்லை” என்று பூரிசிரவஸ் சிரித்துக்கொண்டே சொன்னான். “அவர்கள் என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். நான் இடரற்றவன் என்று புரிந்துகொள்ள சற்று பொழுதாகும். அதன்பின் அவர்களே என்னிடம் வருவார்கள்.”

“முதுபால்ஹிகருக்கு தாங்கள் என்ன உறவு?” என்று இளையவள் கேட்டாள். “அவருடைய கொடிவழியில் வந்தவன். எனக்கு அவர் முதுதந்தையின் முதுதந்தை என முறை வரும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். மூத்தவள் “தந்தைக்கும் மைந்தர்களுக்கும் எப்போதுமே பூசல். சில நாட்களுக்கு முன் வாய்ச்சொல் மிகுந்து அவர் தன் இரு மைந்தர்களைத் தூக்கி நிலத்தில் அறைந்தார். அதன் பிறகு வளைதடியையும் குத்துக்கத்தியையும் எடுத்துக்கொண்டு மலையேறிச் சென்றார். அவர்கள் ஆறேழு நாட்கள் படுத்து நோய் தீர்க்கவேண்டியிருந்தது” என்றாள். “உங்கள் பெயரென்ன?” என்று அவன் கேட்டான். அவள் தன் பெயரை சற்று நாணத்துடன் சிரித்தபடி சொன்னாள். “ஆர்த்ரை.”

முதியவர் வாசலில் வந்து பொதியுடன் நின்று “பொதிகளை கொண்டுவந்துள்ளேன். புரவி நீர்காட்டப்பட்டுவிட்டது” என்றார். பூரிசிரவஸ் மைந்தர்களில் ஒருவனிடம் பொதியை வாங்கி வைக்கும்படி சொன்னான். அவர்கள் அதை வாங்கி வைத்ததும், அதன் முடிச்சுகளை அவனே அவிழ்த்து உள்ளிருந்து அவன் கொண்டுவந்த பரிசுப்பொருட்களை எடுத்து அவர்களுக்கு அளித்தான். கொம்புப்பிடியிட்ட கலிங்கநாட்டுக் கத்திகள், வெள்ளிப் பேழைகள், தங்கச் சிமிழ்கள், யவன மதுக்குடுவைகள். அவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை பரிசாக கொடுத்தான். யானைத்தந்தத்தில் கடையப்பட்ட சிறிய பாவைகள் இருந்தன. அவற்றை அவன் ஒவ்வொருவருக்காக கொடுக்க மைந்தர்கள் ஆர்வத்துடனும் உடற்தயக்கத்துடனும் வந்து பெற்றுக்கொண்டனர்.

அவற்றை பேருவகையுடன் திருப்பித் திருப்பி பார்த்த பின் ஓடிச்சென்று தங்கள் அன்னையரிடம் காட்டினர். அவர்கள் மைந்தர்களின் தலையைத் தட்டி சிரித்தபடி “விளையாடிக்கொள்” என்றனர். சிறு குழந்தை சிரித்தபடி எம்பிக் குதித்து கைநீட்டியது. பூரிசிரவஸ் ஒரு பாவையை எடுத்து “இந்தா” என்று நீட்டினான். அது திரும்பி அன்னையின் தோளில் முகம் புதைத்தது. அதன் உள்ளங்கால் நெளிந்தது. இன்னொரு குழந்தை “தா! தா!” என்று கைநீட்டியது. அவன் அதனிடம் அதை நீட்ட அதன் அன்னை குனிந்து அவனை நோக்கி குழந்தையை நீட்டினாள். அப்பாவையை அது பெற்றுக்கொண்டது. முதற்குழந்தை “எனக்கு!” என்றபடி தாவி இறங்க முயன்றது. பூரிசிரவஸ் எழுந்து சென்று அதற்கு ஒரு பாவையை கொடுத்தான். பிற குழந்தைகளும் பாவைக்காக கூச்சலிட்டன.

அவன் பாவைகளைக் கொடுத்து முடித்து பொதியை மூடினான். இன்னொரு பொதியைத் திறந்து உள்ளிருந்து வெல்லக்கட்டிகளையும் நறுமணப் பொருட்களையும் எடுத்து அப்பெண்டிருக்கு அளித்தான். பரிசுப்பொருட்களால் அவர்கள் உளம் மகிழ்ந்து வாய்விட்டு சிரித்துக்கொண்டனர். அம்மகிழ்வை சற்றே அடக்கிக் கொள்ளவேண்டும் என்ற முறைமை ஏதும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பூரிசிரவஸ் “இங்கு பிரேமை என்னும் பெண் இருந்தாள். நான் முன்னர் வந்தபோது அவளை மணந்துகொண்டேன். அவளில் எனக்கொரு மைந்தன் இருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். அவன் பெயர் யாமா” என்றான்.

பெண்டிர் முகங்கள் மாறுபட்டன. மூத்தவள் “ஆம், இங்கிருக்கிறான். அவ்வண்ணமென்றால் உங்கள் மைந்தன் என அவன் சொல்லிக்கொள்வது உண்மைதான் அல்லவா?” என்றாள். இளையவள் “எங்கள் கொழுநர்களுக்கு அவன்தான் முதல் எதிரி. இங்கு அவர்கள் வெல்லப்படமுடியாதவர்களாக இருந்தனர். அவர்கள் எழுவரையுமே மற்போரில் தூக்கி அறைந்துவிட்டான். முதுபால்ஹிகரை மட்டும்தான் அவன் இன்னும் தோற்கடிக்கவில்லை. அதுவரைக்கும்தான் எங்கள் குடிக்கு இவ்வூரில் முதன்மை இருக்கும்” என்றாள். இன்னொருத்தி “அவன் தந்தையா நீங்கள்? அவன் உடலில் ஒரு பகுதி போலிருக்கிறீர்கள்” என்றாள். பூரிசிரவஸ் புன்னகைத்து “அவன் தன் அன்னையை கொண்டிருக்கிறான்” என்றான். “அவளுடன் எங்களுக்கு பேச்சே கிடையாது” என்று ஒருத்தி சொன்னாள். “அவள் இல்லத்தை மட்டும் காட்டுக!” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

மூத்தவள் தன் மைந்தனிடம் “இவரை அங்கு அழைத்துச் செல்” என்றாள். அவன் முன்னால் வந்து தன் தோலுடையை சீரமைத்து “வருக! நான் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அவர்கள் இல்லத்துக்குள் நான் நுழையமாட்டேன். தந்தையின் ஆணை” என்றான். “நீ இல்லத்தை மட்டும் காட்டினால் போதும்” என்று பூரிசிரவஸ் எழுந்துகொண்டான். அவர்களை வணங்கி விடைபெற்றான். “அன்னை வந்தால் சொல்லுங்கள். வந்து வணங்கி சொல்பெறுகிறேன்” என்றான்.

சிறுவனுடன் நடக்கையில் பூரிசிரவஸ் “இங்கு வெளிநிலத்து வணிகர்கள் என்ன பொருட்களை கொண்டுவருகிறார்கள்?” என்று கேட்டான். அவன் ஊக்கமடைந்து கையை மேலே தூக்கி “அனைத்துப் பொருட்களும்! நாங்கள் இனிய உணவுகளை விரும்புகிறோம் என்பதனால் அவை நிறையவே கொண்டுவரப்படும். இங்கு வேல்முனைகளும் வில்முனைகளும் கத்திகளும் வாள்களும் முழுக்க அங்கிருந்துதான் வரவேண்டும். எங்களுடைய வில்கூட இப்போது கீழிருந்து வருபவைதான். அவை அம்புகளை வடக்குநிலத்து நாரைகளைப்போல பறக்கவிடுகின்றன” என்றான்.

“ஆடைகள்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அங்குள்ள ஆடைகளை நாங்கள் அணியமுடியாது. ஆனால் திருமணங்களுக்கும் விருந்துகளுக்கும் மட்டுமென்று சில ஆடைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அவை முதற்பனிபோல அவ்வளவு மென்மையானவை. அவற்றை அவர்கள் ஏதோ பூச்சியின் எச்சிலிலிருந்து எடுக்கிறார்கள்” என்றான். கையை ஆட்டி முகம் உளவிசையில் அதிர “அந்தப் பூச்சிக்கு அவர்கள் ஏதோ நுண்சொல் சொல்லி அவற்றின் சிறகுகளை ஆள்கிறார்கள். அப்பூச்சிகள் வந்து அவர்களின் இல்லங்களில் சிறிய இலைகளில் குடியேறுகின்றன. அங்கிருந்து அவை புல்லாங்குழல் போலவும் யாழ் போலவும் இசை மீட்டுகின்றன. அந்த இசையை இரவுகளில் நூலாக மாற்றிவிடுகின்றன. அந்த நூலைக்கொண்டு இந்த ஆடைகளை அவர்கள் செய்கிறார்கள்” என்றான்.

துள்ளித்துள்ளி நடந்தபடி திரும்பி அவனை நோக்கி “நான் ஒரு மெய்ப்பையும் தலைப்பாகையும் வைத்திருக்கிறேன். என் தந்தை நான் திருமணம் செய்துகொள்ளும்போது மட்டும்தான் இனி அடுத்த ஆடை வாங்கிக்கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்” என்றான். பின்பக்கமாக நடந்தபடி உரக்க நகைத்து “நான் விரைவிலேயே திருமணம் செய்துகொள்வேன். எனக்கு இரண்டு பெண்களை தெரியும்” என்றான். பூரிசிரவஸ் “நான் மலையிறங்கிச் சென்றபின் உங்கள் அனைவருக்கும் உயரிய பட்டு ஆடையை வாங்கி அளிக்கிறேன்” என்றான். அவன் சிரித்து “ஆம், அதை பட்டு என்றுதான் சொல்கிறார்கள்” என்றான். அதன் பின் “அதோ, அந்த இல்லம்தான்” என்று சுட்டிக்காட்டினான்.

பூரிசிரவஸ் அந்தச் சிறு உரையாடலை தன்னுள் எழுந்த பதற்றத்தை மறைக்கும்பொருட்டுதான் மேற்கொண்டிருக்கிறோம் என உணர்ந்தான். அந்த இல்லத்தைக் கண்டதுமே அவன் உள்ளத்தில் அனைத்து சொற்களும் அசையாது நின்றன. கால்கள் மட்டும் பிறிதொரு விசையால் நடந்துகொண்டிருந்தன. ஒருசில கணங்களுக்குள் அந்த வீட்டை அவன் அடையாளம் கண்டான். முன்பிருந்த அதே இல்லம். ஆனால் முகப்பு விரிவாக்கி கட்டப்பட்டிருந்தது. முற்றம் இன்னும் அகலமாக்கப்பட்டிருந்தது. முற்றத்தில் ஒரு அத்திரி நின்று தலையசைத்து எதையோ தின்றுகொண்டிருந்தது.

சிறுவன் நின்று “இதற்கு மேல் நான் வரக்கூடாது. நான் பெரியவனான பிறகு இங்கு வருவேன். அவரை போருக்கு அறைகூவுவேன். அவரைத் தூக்கி நிலத்தில் அறைந்தால் அதன் பிறகு நான் அந்த வீட்டிற்குச் சென்று அங்குள்ள பெண்களில் எனக்குப் பிடித்த பெண்ணை தெரிவு செய்வேன்” என்றான். “அங்கு பெண்கள் இருக்கிறார்களா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இல்லை. அவர்கள் இன்னும் பிறக்கவில்லை” என்றான் சிறுவன். அவன் தோளைத் தொட்டபின் பூரிசிரவஸ் சீரான காலடிகளுடன் நடந்து அவ்வீட்டின் முன் சென்று நின்றான்.

உள்ளே பேச்சுக்குரல் கேட்டுக்கொண்டிருந்தது. கலங்கள் மெல்ல மோதும் ஓசை எழுந்தது. யாரோ எவரையோ அழைத்தனர். முதல் முறையாக அவனுள் ஓர் ஐயம் எழுந்தது. பிரேமை மீண்டும் மணம் செய்துகொண்டிருக்கக்கூடும். பிறிதொரு மலைமகனில் அவளுக்கு மேலும் குழவிகள் இருக்கக்கூடும். அதை அவன் பால்ஹிகரின் மறுமகள்களிடம் கேட்கவில்லை. அவன் அவ்வெண்ணத்தின் எடையை தாளாதவன்போல் கால் தளர்ந்து தோள் தொய்ந்தான். உள்ளே இருக்கும் அக்குழவியரை அவன் எப்படி எதிர்கொள்வான்? அதைவிட முற்றிலும் பிறிதொருத்தியாகிப் போன பிரேமையை அவனால் அடையாளம் காணக்கூட முடியாது போகலாம்.

பெண்களின் விழிகள் பிறிதொரு ஆணை அடைந்ததும் மாறிவிடுகின்றன. ஆண்களைப்போல் பெண்கள் தங்களுக்குள் தங்களை வகுத்துக்கொண்டவர்கள் அல்ல. பெண்களால் ஆண்கள் மாறுவதில்லை. பெண்கள் ஆண்களை ஏற்று முழுமையாகவே உருவும் உளமும் மாறிவிடுகின்றனர். இப்போது வெளிவரப்போகும் அவளில் இன்று அவளுடன் இருக்கும் ஆண் திகழ்வான். புரவியென அவளில் ஏறிவருபவன். தான் எதிர்கொள்ளவிருப்பது அவ்வாண்மகனை. முற்றிலும் அயலவன். அரிதென தான் உளம்கொண்ட ஒன்றை வென்றவன்.

மறுகணம் பிறிதொரு குரல் நீ இழைத்த அறமின்மை ஒன்றை நிகர்செய்தவன் என்றது. ஆம், அதுவும்தான் என்று பூரிசிரவஸ் சொல்லிக்கொண்டான். அந்த அயலவன் தன் விழிகளை வேட்டை விலங்கு இரையையென நோக்கக்கூடும். தணிந்த குரலில் எவர் என கேட்கக்கூடும். ஏதோ ஓர் உள்ளுணர்வால் தான் யாரென்று அவனும் உணர்ந்திருப்பான். ஆகவே ஐயமும் விலக்கமும் அவ்விழிகளில் தெரியும். அவன் முன் விழிதூக்கி நின்று நான் யார் என்று சொல்ல என்னால் இயலாது. என் குரல் நடுங்கும். என் பெயரை அன்றி பிறிதெதையும் என்னால் கூறமுடியாது. ஒரு வேளை என் குலத்தையும் அரசையும் மேலும் சற்று உறுதிக்காக நான் சொல்லிக்கொள்ளக்கூடும். ஒருபோதும் அவளை மணந்தவன் என்றோ அவள் குழந்தைக்கு தந்தையென்றோ சொல்ல முடியாது.

பூரிசிரவஸ் திரும்பிச் சென்றுவிடவேண்டுமென்று எண்ணி திரும்பி வந்த பாதையை பார்த்தான். நெடுந்தொலைவில் அச்சிறுவன் இரு கைகளையும் சுழற்றியபடி சிறு துள்ளலுடன் நடந்துசெல்வது தெரிந்தது. மிக அப்பால் அவனுடைய புரவி தன் முன் போடப்பட்ட புற்சுருள்களை எடுத்து தலையாட்டி மென்றுகொண்டிருந்தது. அதன் வால் சுழற்றல் ஒரு சிறு பூச்சி அதனருகே பறப்பதுபோல் தெரிந்தது. இல்லை, இது வீண் சொல்லோட்டல்தான். இத்தருணத்தை நீட்டி நீட்டி உணர்வுச்செறிவாக்கிக்கொள்ள நான் விழைகிறேன். இதை நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். துயரும் கொண்டாட்டமே. இன்பத்தைவிடவும் பெரிய கொண்டாட்டம் பதற்றமே.

உள்ளே வளையலோசை கேட்க அவன் திரும்பிப்பார்த்தான். வாசலில் பிரேமை நின்றிருந்தாள். திடுக்கிட்டு நெஞ்சத் துடிப்பு உடலெல்லாம் பரவ கைகள் நடுங்க அவன் நின்றான். அவள் நெஞ்சில் கைவைத்தாள். கண்கள் சுருங்கி கூர்கொண்டன. பின்பு முகம்மலர, உரக்கச் சிரித்தபடி இரு கைகளையும் விரித்து படிகளிலிறங்கி ஓடிவந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். “வந்துவிட்டீர்களா? வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். வருக… வருக…” என்றபின் உள்ளே திரும்பி உரத்த குரலில் “சைலஜை, இங்கு வந்திருப்பது யாரென்று பார்! நான் சொன்னேனல்லவா? நான் கனவு கண்டேன் என்று கூறினேனல்லவா?” என்றாள்.

“சைலஜை யார்?” என்று அவன் கேட்டான். “என் இளையவள்” என்று அவள் சொன்னாள். உள்ளிருந்து இன்னொரு பெண் எட்டிப்பார்த்து “இவரா? நான் எண்ணியபடியே இல்லையே” என்றாள். “நீ எண்ணியபடி ஏன் இருக்கவேண்டும்? போடி” என்றபின் பூரிசிரவஸிடம் “வருக!” என்று சொல்லி பிரேமை அவன் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றாள். சைலஜை “மாவீரர் என்று சொன்னாய்?” என்றாள். “போடி… நீ பொறாமைகொண்டவள்” என்றாள் பிரேமை. “இவள் என் சிற்றன்னைக்குப் பிறந்தவள். இவளுடைய கணவன் மலைகளுக்கு அப்பாலுள்ள குடியினன்” என்று பூரிசிரவஸிடம் சொல்லி அவனை கூட்டிச்சென்றாள்.

அவள் கைகள் மிகப் பெரியவையாக இருந்தன. அவள் பிடிக்குள் அவன் கை குழந்தைக் கைபோல் தோன்ற படிகளில் ஏறுகையில் அவன் காலிடறினான். அவள் அவனைத் தூக்கி உள்ளே கொண்டுசென்றுவிடுபவள்போல் தோன்றினாள். அப்போதுதான் ஒரு சிறு மின்னென அவன் உணர்ந்தான். அவளுக்கு முதுமையே அணைந்திருக்கவில்லை. அவன் இருபதாண்டுகளுக்கு முன் கண்ட அதே வடிவிலேயே அவளிருந்தாள். “நீ… நீ பிரேமைதானே?” என்றான். “என்ன ஐயம்? என் முகம் மறந்துவிட்டதா?” என்று அவள் கேட்டு அவன் கன்னத்தைப்பற்றி உலுக்கினாள்.

“இல்லை, நான்…” என்றபின் “உனக்கு அகவை முதிரவேயில்லையே?” என்றான். “ஆம், இங்கு எல்லாரும் அதைத்தான் சொல்லுகிறார்கள். இங்கு எவருக்குமே விரைவாக அகவை அணுகுவதில்லை. நீங்கள்கூட முன்பு நான் பார்த்த அதே வடிவில்தான் இருக்கிறீர்கள்” என்றாள் பிரேமை. “இல்லையே, என் காதோர முடி நரைத்துவிட்டது. உடல் தொய்ந்துவிட்டது” என்றான். “ஆம், காதோரம் சற்று நரை உள்ளது. மற்றபடி நீங்கள் இங்கிருந்து சென்ற அதே வடிவில்தான் இருக்கிறீர்கள்” என்றாள் பிரேமை. “வருக!” என்று உள்ளே சென்று அவனை தோள்பற்றி உள்ளறைக்குள் கொண்டுசென்று அங்கிருந்த மெத்தைமேல் அமரவைத்தாள்.

அவன் முன் கால்மடித்து அமர்ந்து “நான் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான நாட்களில் காலையில் நீங்கள் வந்து கதவைத் தட்டுவதுபோல கனவு கண்டுதான் விழிப்பேன். ஒரு நாள் அவ்வாறு கனவு வந்துவிட்டால் பல நாட்களுக்கு எனக்கு உவகையே நிறைந்திருக்கும்” என்றாள். திரும்பி தன் இளையவளிடம் “அன்னையிடம் சொல் யார் வந்திருக்கிறார்கள் என்று. அருந்துவதற்கு இன்நீர் எடு” என ஆணையிட்டாள். பூரிசிரவஸிடம் “ஊனுணவு இருக்கிறது, உண்கிறீர்களா?” என்றாள். “ஆம், உணவுண்ணவேண்டும்” என்றபின் அவன் பெருமூச்சுவிட்டான்.

வெளியே ஒளிக்கு கண்பழகியிருந்தமையால் அந்த அறை இருட்டாகத் தெரிந்தது. கதவு வழியாகத் தெரிந்த ஒளியில் நிழலுருவாக அவள் தோன்றினாள். குழலிழைகள் முகத்தை ஒளிகொண்டு சூழ்ந்திருந்தன. அவள் கண்கள் ஈரமென மின்னின. அவன் எண்ணியிராதெழுந்த உள எழுச்சியால் கைநீட்டி அவள் கையைப்பற்றி “உன்னிடம் நான் என்ன சொல்வது? பெரும்பிழை இயற்றினேன் என்று எனக்குத் தெரியும். அது என் ஆணவத்தால் என்று எண்ணியிருந்தேன். இப்போது உன்னைப் பார்த்தபோது அது என் தாழ்வுணர்ச்சியால் என்று தெரிகிறது. உனக்கு நிகராக என்னால் நின்றிருக்க முடியாது என்பதனால். அதைவிட உன் மலைஉச்சியில் நான் ஒரு பொருட்டே அல்ல என்பதனால்” என்றான்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்றபின் அவள் சிரித்தபடி அவன் தொடையை அறைந்து “அன்றும் இவ்வாறுதான், எனக்கு எதுவுமே புரியாமல்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள்” என்றாள். “நான் இத்தனை ஆண்டுகளில் அன்று நீங்கள் பேசிய அனைத்தையுமே எண்ணிப்பார்த்ததுண்டு…” என்றபின் உரக்க நகைத்து “இப்போதும் ஒன்றுமே புரிந்ததில்லை” என்றாள். பூரிசிரவஸ் நகைத்து “அன்று பேசியவற்றை இன்று கேட்டால் எனக்கும் என்னவென்று புரியாது” என்றான். “ஆனால் அது நன்று. இத்தனை காலம் எண்ணிக்கோக்க எனக்கு எத்தனை சொற்கள்!” என்று பிரேமை சொன்னாள்.

உள்ளிருந்து அவள் அன்னை வெளியே வந்து கைதொழுது நின்றாள். பூரிசிரவஸ் எழுந்து அவளை கால்தொட்டு வணங்கினான். “நான் பால்ஹிகன். என் துணைவியை பார்த்துச்செல்ல வந்திருக்கிறேன்” என்றான். முதுமகள் சினத்துடனோ துயருடனோ ஏதோ சொல்வாளென்று அவன் எண்ணினான். அவள் முகம் சுருக்கங்கள் இழுபட காற்றிலாடும் சிலந்தி வலைபோல அசைந்தது. கண்கள் இடுங்க சிரித்தபடி “உங்களுக்கு நீங்கள் அஞ்சும் மைந்தன் பிறந்திருக்கிறான். மைந்தனைக் கண்டு அஞ்சும் பேறு என்பது அரிதாகவே அமைகிறது. காட்டிற்குச் சென்றிருக்கிறான். இப்போது வந்துவிடுவான்” என்றாள். பூரிசிரவஸ் நெஞ்சு பொங்க “ஆம், அவனைப்பற்றி கேள்விப்பட்டேன்” என்றான்.