செந்நா வேங்கை - 17

tigபால்ஹிகபுரியின் குடிப்பேரவைக்கு பூரிசிரவஸ் கிளம்பிக்கொண்டிருந்தபோது மைந்தர் அவனைக் காண விரும்புவதாக ஏவலன் வந்து சொன்னான். மேலாடையை சீரமைத்தபடி அவன் சென்று பீடத்திலமர்ந்து அவர்களை வரச்சொல்லும்படி கைகாட்டினான். முதல் மைந்தன் யூபகேதனன் முன்னால் வர மைந்தர்கள் நிரையாக உள்ளே வந்தனர். யூபகேதனன் கைகூப்பியபடி உள்ளே வந்து அவனருகே குனிந்து கால்தொட்டு வணங்கினான். அவன் தலையில் கைவைத்து “நீடுவாழ்க! வெற்றியும் புகழும் சேர்க!” என்று அவன் வாழ்த்தினான். மைந்தர்கள் கால்தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டு சுவர் அருகே நின்றனர்.

பூரிசிரவஸ் மைந்தர்களை ஏறிட்டுப் பார்க்க விரும்பவில்லை. எப்பொழுதும் பார்த்ததுமே அவர்களை அள்ளி தோளோடும் நெஞ்சோடும் அணைத்துக்கொள்வது அவன் வழக்கம். அவர்களிலொருவராக புரவி ஊர்வதும், போர்க்களியாடுவதும், நீர்விளையாடுவதும், அவர்களின் மன்றுகளில் அமர்ந்து சொல்லாடுவதும் அவன் இயல்பு. அவர்களும் தங்களில் ஒருவராகவே அவனை எண்ணினர். யூபகேதனனும் இளையவன் யூபகேதுவும் சேர்ந்து சென்றமுறை கைகால்களைப் பற்றித் தூக்கி குளிர்ந்த ஆற்று நீரில் வீசினர். ஒருமுறை அவன் ஆடைகளைப் பறித்து அவனை மலைச்சரிவில் விட்டுவிட்டு அவர்கள் ஓடிச் சென்றதுண்டு. அன்று முதல்முறையாக அவர்களிடமிருந்து ஒரு விலக்கத்தை உணர்ந்தான்.

யூபகேதனன் “தந்தையே, அன்னை தங்களுடன் நடந்த உரையாடலைப் பற்றி சொன்னார்” என்றான். பூரிசிரவஸ் விழிதூக்காமல் “ஆம், இன்று அவையில் அவர்கள் எனக்கு மறுப்புரைக்கப் போவதாக சொன்னார்கள்” என்றான். யூபகேதனன் “அவர்கள் உரைக்கலாம். ஆனால் அவையில் நாங்கள் எழுந்து தங்களுடன் வருவதாக கூறப்போகிறோம். குண்டலம் அணியாத இளையவர்கள் மட்டும் இங்கிருக்கட்டும். அன்னையருக்கு மைந்தராக அவர்கள் எஞ்சட்டும். நாங்கள் களம் காண்பதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்றான்.

பூரிசிரவஸ் சீற்றத்துடன் விழிதூக்கி அவனைப் பார்த்து “போருக்கெழுகையிலேயே திரும்பிவருவதில்லை என்ற எண்ணம் கொண்டிருக்கிறீர்களா?” என்றான். யூபகேதனன் அஞ்சாமல் “ஆம் தந்தையே, நன்கு அறிந்திருக்கிறோம் திரும்பி வரமுடியாது என” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “நாங்கள் குறுகிய தொலைவில் விரைந்து வில்லெடுக்கும் மலைவீரர்கள். ஆகவே எங்களைத்தான் முதன்மைப்படையாக அனுப்புவார்கள். முதன்மைப்படையில் பெரும்பாலும் எவரும் எஞ்சுவதில்லை” என்று யூபகேதனன் சொன்னான். பூரிசிரவஸ் கைவீசி “அதைப்பற்றி நாம் பேசவேண்டியதில்லை. இறப்பை எண்ணி எவரும் போருக்குச் செல்லலாகாது என்பார்கள்” என்றான். “இறப்புக்குத் துணிந்து செல்லவேண்டும் என்பதுண்டு” என்று யூபகேதனன் சொன்னான்.

யூபகேது “இத்தருணத்தில் நாம் படைக்குச் செல்லாமல் ஒதுங்கியிருப்பது பால்ஹிகக் குடிக்கு உருவாக்கும் இழிபெயர் சிறிதல்ல. நூற்றாண்டுகள் இது நிற்கும். நாம் கோழைகள் என்று அறியப்படுவோம். அச்சொல் பரவினால் இங்கு சூழ்ந்திருக்கும் அனைத்துக் குடிகளும் ஓயாமல் நம்மீது படைகொண்டு வருவார்கள். பல தலைமுறைகள் நாம் அவர்களால் தாக்கப்பட்டுக்கொண்டே இருப்போம். இன்று ஓரிருவர் களம்படக்கூடும் என்று அஞ்சி தயங்கினோம் என்றால் நமது தலைமுறைகள் களத்தில் இறந்துகொண்டே இருப்பார்கள்” என்றான்.

“மாறாக குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பால்ஹிக வீரர்கள் முன்னின்று பெருந்திறலுடன் போர்புரிந்து மடிந்தார்கள் என்னும் புகழ்ச்சொல் பரவினால் பின்னர் இயல்பாகவே இம்மலைக்குடிகளின் தலைமைப்பொறுப்பு நமக்கு வந்து சேரும்” என்றான் தூமகர்ணன். “இன்று நாம் செல்வம் மிகுந்த நாடாக மாறிவிட்டோம். வீரர்கள் என்று நிறுவவேண்டிய இடத்திலிருக்கிறோம். வீரமில்லாத செல்வம் முச்சந்தியில் திறந்துவைக்கப்பட்ட கருவூலம் போன்றது என்பார்கள்.” பூரிசிரவஸ் “ஆம், ஆனால் பால்ஹிக நெறிகளின்படி உங்கள் அன்னையர் முடிவெடுக்க உரிமையுள்ளவர்கள். அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் எவரும் போருக்குச் செல்ல இயலாது” என்றான்.

யூமகேதனன் “அன்னையர் முடிவெடுக்கும் இடத்திலிருப்பதனால்தான் நாம் போர்த்திறனற்றவர்களாக இதுவரை தேங்கியிருந்தோம். நான் நூல்சூழ்ந்து நோக்கியது இது, தந்தையே. அன்னையர் முதன்மை கொண்ட குடிகள் வளர்வதே இல்லை. ஏனெனில் நிலைக்கோள் என்பதே பெண்டிர் இயல்பு. அன்னையர் தங்கள் மைந்தர்களை தாய்க்கோழி சிறகுக்குள் என அடைகாத்து வைத்திருக்கிறார்கள். வெல்வதும் கடந்து செல்வதும் அவர்களுக்கு புரிவதில்லை. ஒவ்வொன்றையும் அவ்வண்ணமே பேணுவதே அவர்களின் கடன் என தெய்வங்கள் வகுத்துள்ளன. அன்னையர் முடிவெடுக்கும் மரபிலிருந்து நாம் மீறிச் சென்றாக வேண்டும். தந்தை முதன்மை கொள்ளும் குடியாக நாம் மாறியாகவேண்டும்” என்றான்.

பூரிசிரவஸ் “நன்று. ஆனால் என்றும் பால்ஹிக அவையென்பது தொல்குடிகளாலானது. ஷத்ரியர் அவைகளெதிலும் பெண்டிர் வந்தமரவும் முடிவுரைக்கவும் இடமில்லை. நாமோ முதன்மை முடிவையே அவர்களுக்கு விட்டுவிட்டவர்கள். இப்போருக்காக இத்தருணத்தில் அதை மாற்றுவது எளிதல்ல” என்றான். “நாங்கள் போருக்கெழுகிறோம். எங்கள் அன்னையர் அதற்கு ஒப்புக்கொண்டாக வேண்டும்” என்று யூபகேது சொன்னான். “அவர்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று சற்று முன் சொன்னார்கள். அவர்கள் எண்ணத்தை என்னால் மாற்றமுடியுமென்று தோன்றவில்லை. உங்களைவிட அவர்களை நான் நன்கறிவேன்” என்றான் பூரிசிரவஸ்.

யூபகேதனன் மெல்ல புன்னகைத்து “ஆம் தந்தையே, எங்களைவிட அவர்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் உங்களைவிட எங்களுக்கே அவர்கள்மேல் பிடிப்பு மிகுதி. அவர்கள் நாங்கள் களம்செல்வதை ஒப்பியாக வேண்டும். இல்லையேல் நாங்கள் அறுவரும் அவர்கள் முன் வாளால் கழுத்தறுத்து விழுந்து இறப்போம் என்று குலத்தின்மேல் ஆணையாகக் கூறுகிறோம்” என்றான். பூரிசிரவஸ் திகைப்புடன் “என்ன உரைக்கிறீர்கள்? அறிவின்மை!” என்றான். யூபகேதனன் “ஆம், அவ்வாறே கூறவிருக்கிறோம். அவர்கள் எங்களை களத்திற்கு அனுப்பினால் சிலரேனும் மிஞ்ச வாய்ப்புள்ளது. இல்லையென்றால் எங்கள் அறுவரையும் இன்றே பிணமென அவர்கள் பார்க்கவேண்டியிருக்கும்” என்றான்.

“இது முறையல்ல. இவ்வாறு கூறுவதென்பது அன்னையரை சிறுமை செய்வது” என்று பூரிசிரவஸ் சொல்ல “இது எங்கள் முடிவு. இதில் தாங்களும்கூட சொல்லற்றவரே” என்று தூமகர்ணன் சொன்னான். “அவையில் தாங்கள் எங்களை படைமுகம்கொண்டு செல்லக்கூறும்போது நான்கு அன்னையரும் மறுப்புரைக்கமாட்டார்கள். நாங்கள் எழுந்து வாளெடுத்து வஞ்சினம் உரைப்போம். பால்ஹிக மைந்தர்கள் பதினெண்மர் இப்போரில் கலந்து கொள்வோம். மூத்த தந்தை சலனின் மைந்தர் சுபூதரும் அவர் இளையவர் காதரரும் மட்டுமே இங்கிருப்பார்கள். அவர்கள் அஸ்தினபுரியின் படைசூழ்கைகளையும் நகராளும் நுட்பங்களையும் நேரில் கற்றவர்கள். அவர்கள் இங்கே இருந்து நம் குடியை வழிநடத்தட்டும்.”

“முடிவை எடுத்துவிட்டு என்னிடம் சொல்ல வந்திருக்கிறீர்களா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். யூபகேதனன் “ஆம், தந்தையே. சற்று முன் நாங்கள் மூத்தவரின் அவைக்கூடத்தில் கூடினோம். இயல்வதென்ன என்று பேசினோம். இதை முடிவென எடுத்து அன்னையர் எண்மருக்கும் அறிவித்து அதன் பின் அவைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்” என்றான். பூரிசிரவஸ் சற்று தளர்ந்து பீடத்தில் நன்கு சாய்ந்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். பின்பு “இதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நன்று நிகழ்க!” என்றான்.

சோமதத்தரின் குடியவையில் அஸ்தினபுரியில் நிகழ்வதை பூரிசிரவஸ் விரித்துரைத்தான். “இப்போர் இன்று தவிர்க்க இயலாத வருநிகழ்வாக எழுந்து நின்றுள்ளது. பாரதவர்ஷம் கண்டதில் மிகப் பெரும்போர். ஆகவே தலைமுறைகள் இதை சொல்லெனப் பேசி நினைவில் கடத்திக் கொண்டுசெல்லும். இதில் ஒவ்வொருவரும் ஆற்றும் பங்களிப்பினால்தான் இனி வரலாறு அமையவிருக்கிறது. நமது பங்களிப்பு சற்றும் குறையலாகாது. அஸ்தினபுரியிலிருந்து நாம் படைபாதுகாப்பு கொண்டோம். அஸ்தினபுரி நமது சாலைகளை பாதுகாத்ததனால்தான் நமது செல்வவளம் பெருகியது. அரசென இன்று நாம் கொடியும் கோட்டையும் அரண்மனையுமென்று அமைந்திருப்பது அஸ்தினபுரியால்தான். அதற்கு நிகர் செய்யவேண்டிய தருணம் இது.”

“ஆகவே, இதில் பால்ஹிகப் படை கலந்துகொள்ள வேண்டும். பால்ஹிகக் கூட்டமைப்பில் இப்போது சிபி நாடு மட்டுமே பாண்டவர்களின் தரப்பில் உள்ளது. மத்ரர் அங்கு செல்லக்கூடுமென்று எண்ணியிருந்தோம். அவரும் கௌரவர் தரப்புக்கு வந்துள்ளார். ஆகவே பால்ஹிகக் கூட்டமைப்பின் முழுப் படைகளும் கௌரவர் தரப்பில் நின்று போர்புரியப் போகின்றன. நமது கொடைக்கு நிகராக போருக்குப் பின் பெற்றுக்கொள்வோம். இன்று நம்மில் மிகச் சிறந்ததைக் கொண்டு களம் காண்போம். இது வேள்வி. ஊர்கூடி இயற்றினாலேயே வேள்வி தெய்வங்களுக்கு உகந்ததாகிறது என்பார்கள். ஒரு மணி அரிசியேனும் ஒரு கை அன்னமேனும் ஒரு துளி நெய்யேனும் வேள்விக்கு ஒவ்வொரு குடியும் அளித்தாகவேண்டும். குண்டலம் அணிந்த நமது மைந்தர்கள் அனைவரும் இப்போரில் கலந்துகொள்ள வேண்டும். குடிக்கு ஒருவர் எஞ்ச பிறர் கலந்து கொள்ளவேண்டுமென்பது எனது விழைவு. அரசாணை கோருகிறேன்” என்றான்.

சோமதத்தர் மைந்தர்களை மாறி மாறி பார்த்தார். சலன் “இம்முடிவை மைந்தர்களுக்கே விட்டுவிடுவோம்” என்றான். பூரிசிரவஸ் “அவர்கள் முன்னரே முடிவெடுத்துவிட்டதை என்னிடம் சொன்னார்கள்” என்றான். யூபகேதனன் எழுந்து “இங்கு பால்ஹிகபுரியின் இளவரசர்கள் பதினெண்மர் உள்ளோம். இதில் ஐவர் ஒழிய பதின்மூன்றுபேர் போரில் கலந்துகொள்வதாக முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் அன்னையரிடம் அதற்கான ஒப்புதலை பெற்றிருக்கிறோம்” என்றான். சோமதத்தர் திரும்பி “அன்னையரின் ஆணை என்ன?” என்றார்.

அரசியர் தலைகுனிந்து விழிதாழ்த்தி அமர்ந்திருந்தனர். குக்குட குடித்தலைவரும் பாமைக்குத் தந்தையுமான சுகேதர் “அன்னையருக்கு மறுப்பேதும் இல்லை அல்லவா?” என்று கேட்டார். அவர்கள் ஒன்றும் சொல்லாமலிருக்கக் கண்டு “மறுப்புரை இல்லையா? மறுப்புரை இருக்குமெனில் கூறுக! இது இறுதிக் கோரிக்கை. எவருக்கும் மறுப்பில்லையா?” என்று குடித்தலைவர் கேட்டார். பின்னர் தன் குடிக்கோலைத் தூக்கி “மறுப்பில்லையெனில் அவ்வாறே ஆகுக!” என்றார். கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் எனும் நாற்பெரும் குலங்களின் தலைவர்களும் எழுந்து கோல்தூக்கி அரசருக்கு ஆதரவளித்தனர்.

பின்னர் கூடியிருந்த அனைத்து சிறுகுடித்தலைவர்களும் தங்கள் கோல்களைத் தூக்கி வாழ்த்துரை எழுப்பினர். “பால்ஹிகக்குடி வெல்க! சோமதத்தர் வெல்க! அஸ்தினபுரி வெல்க! ஆளும் பேரரசர் துரியோதனர் வெல்க! அருள்க குலதெய்வங்கள்! அருள்க மூதாதையர்! அருள்க அன்னையர்! அருள்க மலைவாழும் தொல்தெய்வங்கள்!” என்று அவை முழங்கியது. பூரிசிரவஸ் தன் துணைவியரைப் பார்த்தான். பாமை தலைகுனிந்து அமர்ந்திருக்க கண்ணீர் வழிந்து மடியில் சொட்டிக்கொண்டிருந்தது. பால்ஹிகபுரியின் அனைத்து அரசிகளுமே கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தனர்.

tigதன் அறைக்கு மீண்டு மறுநாள் புலரியில் பயணம் செய்வதற்கான ஒருக்கங்களை ஏவலருக்கு ஆணையிட்டுவிட்டு பூரிசிரவஸ் மாளிகையின் படிகளில் ஏறினான். தனியாகச் செல்ல அவன் எண்ணியிருக்கவில்லை. ஏவலன் “எவரெவர் உடன் வருகிறார்கள், அரசே?” என்றதும் இயல்பாகவே “நான் மட்டும், தனியாக” என்று அவன் வாய் சொன்னது. அதன்பின்னரே வேறெவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வதைப்பற்றி அவன் எண்ணியிருக்கவே இல்லை என அவன் உணர்ந்தான். அப்பயணத்தை அவன் உள்ளம் மீளமீள நிகழ்த்திக்கொண்டிருந்தது. அதில் அவன் புரவியில் அமர்ந்து தனியாக சென்றுகொண்டிருந்தான். குளிர்பனி முகடுகளுடன் மலைகள் சூழ்ந்து அமைதியலைகளாக நின்றிருந்தன.

அப்பாதைபோல அவனுக்கு அணுக்கமான பிற பாதை இல்லை என உணர்ந்தான். அங்கிருந்த ஒவ்வொரு கூழாங்கல்லும் நன்கறிந்திருந்ததுபோலத் தோன்றியது. பிறிதொருமுறை செல்லாத அப்பாதையில் பலநூறு முறை உள்ளத்தால் பயணம் செய்துகொண்டிருந்தான். கனவுகளில் அதில் விரைந்தான். இளமையில் இன்னும் சிலநாட்களில் கிளம்பிவிடுவோம் என்று ஒவ்வொரு முறையும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பணி வந்து அவனை தடுத்தது. அல்லது அவ்வாறு தடுக்கும் ஒரு பணிக்காக அவன் உள்ளத்தின் ஒரு பகுதி தேடிக்கொண்டிருந்தது. பின்னர் ஆண்டுகள் கழியக் கழிய ஒவ்வொருமுறை கிளம்ப எண்ணும்போதும் அத்தருணத்தை எப்படி எதிர்கொள்வது என்னும் தயக்கமே கால்களை இழுத்தது.

அவனுள் வாழும் ஒரு தெய்வம் அவன் கிளம்புவதை விரும்பவில்லை என்பதுபோல அதற்கென்றே சிறு தடைகளும் அப்போது எழும். ஒருமுறை புரவியின் இருபுறமும் பனியாடைகளும், வழியுணவும், பரிசுப்பொருட்களும் கொண்ட பொதிகளை தொங்கவிட்டு அவன் அதன் கழுத்தை நீவி தாடையை அழுத்தி மெல்லிய குரலில் “கிளம்புவோம்” என்று சொல்லி சேணத்தில் கால்வைக்கும்போது அரண்மனைக்குள்ளிருந்து அவன் இளைய மைந்தன் பிரபாவன் இறங்கி ஓடிவந்து “தந்தையே, அஸ்தினபுரியிலிருந்து ஓலை. பேரரசர் இன்னும் பதினைந்து நாட்களில் பேரவை கூட்டப்போகிறார். தாங்கள் வாரணவதம் சென்று அங்குள்ள படைத்தலைமையை சீர்படுத்திவிட்டு அவைக்குச் செல்ல வேண்டுமென்று ஆணை” என்றான். அப்போதுதான் தான் மீண்டும் ஒருமுறை ஷீரவதியை கடக்கவே போவதில்லை என்ற எண்ணத்தை அவன் அடைந்தான்.

அது அவனை ஆறுதல்படுத்தியது. அதில் காவியங்களுக்குரிய முழுமை இருந்தது. அங்கு மீண்டும் அவன் செல்லாதொழிவது அவன் அங்கு செல்லாதிருப்பதற்குரிய தண்டனையேதான். விண்ணுலகில் மீண்டும் பிரேமையை சந்திப்பதைப்பற்றி பின்னர் அவன் எண்ணலானான். அங்கு அவள் தெய்வ உருக் கொண்டிருப்பதனால் மனிதர்களின் அனைத்துப் பிழைகளையும் பொறுத்தருளும் தன்மை கொண்டிருப்பாள். அவளை கைவிட்டதைப்பற்றி ஒரு சொல்லும் அவனிடம் உசாவமாட்டாள். முதற்கணம் கண்ட அந்த விலங்குக் காமத்தின், எளிய பேரன்பின் நீட்சியை மட்டுமே அங்கே அவளிடம் காண முடியும். அத்துடன் அவள் அதே இளமையுடன் இருப்பாள்.

ஒவ்வொரு ஆண்டும் கடக்கும்தோறும் அவன் பிரேமையின் உருவை தன் உள்ளத்தில் வரைந்துகொண்டான். எத்தனை கற்பனையை ஓட்டினாலும் அவளை அகவை முதிர்ந்த பெண்ணாக எண்ண முடியவில்லை. மீண்டும் மீண்டும் பூர்ஜ மரப்பட்டையின் வெண்மைகொண்ட அவளுடைய பெருந்தோள்கள், அதிலோடும் நீல நரம்புகள், சற்றே பழுப்பேறிய பற்கள் தெரியும் சிரிப்பு, இளநீலக் கண்கள், அடர்ந்த புருவங்கள் மட்டுமே அகத்தில் எழுந்தன. சூடான சந்தனச் சேறு கொண்ட சுனையொன்றில் மூழ்கித் திளைப்பதுபோல் அவள் உடலுக்குள் தன்னை புதைத்துக்கொண்டு அடைந்த காமம். பிறிதொன்றை அதற்குப் பின் நிகராக அவன் அடைந்ததே இல்லை.

அவள் ஒரு பெண்ணல்ல என்று சில தருணங்களில் தோன்றும். அவள் இரு கைகளும் இரு சிறு பெண்கள்போல. இரு தொடைகளும் வேறு இரு பெண்கள்போல. பெண்களின் ஒரு சிறு குழு அவள் உடல். ஆண்கள் பெண்டிர் சூழ காமமாடுவதையே ஆழ்மனக் கனவாக கொண்டிருக்கிறார்கள் என்று ஒருமுறை நிமித்திகன் சொன்னான். அவளுடன் அடைந்த காமமென்பது ஒரு அகத்தளம் நிறைய பெண்டிருடன் ஆடியதற்கு நிகர். பின்னர் அவனறிந்த அனைத்துப் பெண்களும் மிக எளியவர்கள். உடலாலன்றி உள்ளத்தாலும். ஆண்களின் அன்பு குறித்த ஐயத்தால் ஆட்டுவிக்கப்படுபவர்கள். சற்றே உளம் நெகிழ்ந்தாலும் “என்மேல் அன்புள்ளதா? எவ்வளவு அன்பு?” என்று கேட்கத் தொடங்கிவிடுபவர்கள்.

கையில் ஊன்கூடையுடன் தலையில் தோலாடையை எடுத்துப் போட்டுக்கொண்டு பசித்த ஓநாய்கள் நடுவே இறங்கிச் செல்லும் பிரேமையைப்பற்றி ஒருமுறை அவன் தன் நான்காவது துணைவி சாந்தையிடம் சொன்னான். அவள் பால்ஹிகக் குடியில் பிறந்து தன் சிற்றூருக்குள்ளேயே வளர்ந்தவள். ஆண்டுக்கொருமுறை வரும் பெருவெள்ளத்தாலேயே காலத்தை கணக்கிடக் கற்றவள். பிற மூவரைப்போலன்றி அவனுடன் ஒரு கணத்திலும் முரண்படாதவள். அவன் தன் உளச் சித்திரங்களை அவளுக்காகவே சொல்தீட்டினான்.

அவள் அக்கதையை ஒரு தொல்கதையென்றே கேட்டாள். கண்கள் வியப்பில் விரிய கைகளால் வாயை பொத்திக்கொண்டாள். பின்னர் மஞ்சத்தில் தன் உடலைசேர்த்து தலையணையில் முகத்தை அழுத்தி அமைதியாக படுத்திருந்தாள். அவன் அவளுடைய மெலிந்த தோள்களை, நரம்புகள் புடைத்த புறங்கையை மெல்ல வருடியபடி “நான் இதை உன்னிடம் சொல்லியிருக்கக்கூடாதோ?” என்றான். அவள் அவன் கையை உதறிவிட்டு மல்லாந்து “அவள் பெண்ணல்ல. அவளில் மலைத்தெய்வம் ஏதோ குடியிருக்கிறது” என்றாள்.

அவள் கண்கள் நீரணிந்திருப்பதைக் கண்டு பூரிசிரவஸ் உளம் கனிந்தான். அவள் நெற்றியைத் தொட்டு சுருண்ட குழலை அள்ளி காதுக்குப் பின் செருகி “நன்று, நீ சொல்வதுபோல் இருக்கலாம். மலைமக்கள் நம்மைப்போன்றவர்கள் அல்ல” என்றான். அவள் “நான் கேட்டிருக்கிறேன். இங்கிருந்து பார்த்தால் வெள்ளிக்கோடெனத் தெரியும் ஷீரவதிக்கு அப்பால் வாழ்பவர்கள் கின்னரர்கள். அதற்கப்பால் பனிமலைகளில் வாழ்பவர்கள் கந்தர்வர்கள். அவர்கள் மனிதர்களைக் கொன்று உண்பவர்கள். ஆகவேதான் பேருடலும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்களால் உண்ணப்படுபவர்களின் உயிரை எடுத்துக்கொள்வதனால் அவர்களுக்கு அகவை இல்லை” என்றாள்.

பூரிசிரவஸ் புன்னகைத்துவிட்டான். அவள் “சிரிக்கவேண்டாம், உங்களை அவர்கள் கொன்று உண்ணவில்லையென்பதனால் அவர்கள் நல்லவர்களாகிவிடுவதில்லை. நீங்கள் அங்கு மேலும் சில நாட்கள் தங்கியிருந்தால் உங்களை உண்டிருப்பார்கள்” என்றாள். “ஆம், உண்மைதான்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அவள் தணிந்து கையூன்றி எழுந்து அவன் மார்பில் தனது சிறிய முலைகளைப் பதித்து கைகளால் அவன் கழுத்தை வளைத்துக்கொண்டு “மெய்யாகவே சொல்கிறேன், அவளுக்கு உங்கள் காமம் சலிக்கவில்லை. ஓரிரு நாட்களில் சலித்திருக்கும். அதன் பிறகு உங்களை உண்டிருப்பாள்” என்றாள். “இதற்குள் அங்கு சென்ற பல மலை வணிகர்களை அவள் உண்டிருப்பாள். மாறா இளமையுடன் இருப்பாள்” என்றாள்.

பூரிசிரவஸ் சிரித்தபடி அவள் இதழ்களில் முத்தமிட்டு “அப்படியென்றால் நன்றல்லவா? அழியா அழகு கொண்டிருப்பாள்” என்றான்.   அவள் அவன் மார்பை உந்தி விலக்கி எழுந்து “மெய்யாகவே சொல்கிறேன், திரும்ப நீங்கள் அங்கே செல்லக்கூடாது. சென்றால் உயிருடன் மீளமாட்டீர்கள். அது மீளவே முடியாத பெருஞ்சுழி. மண்ணுக்கு அடியில் உள்ள ஆழங்களுக்கு எடுத்துச்செல்லும் சுழிகள் நிலத்திலும் நீரிலும் உண்டு. அதைப்போலவே விண்ணாழத்திற்கு எடுத்துச்செல்லும் சுழிகளும் உண்டு. மலைகளுக்குமேல் அவை இருப்பதாக எனது மூதன்னை சொல்லியிருக்கிறாள்” என்றாள்.

பின் அவன் கையைப்பற்றி தன் நெஞ்சில் வைத்து “நமது மைந்தரை எண்ணுங்கள். இந்த அரசின் குடியை எண்ணுங்கள். இனி அருள்கூர்ந்து மலை ஏறிச் செல்வதைப்பற்றி கருதவேண்டாம்” என்றாள். “இல்லை, எண்ணப்போவதில்லை” என்று அவன் சொன்னான். “பொய்” என்று அவள் சொன்னாள். “இல்லை, ஆணை” என அவன் அவள் தலையை தொட்டான். தலையைத் தொட்டால் பொய்யல்ல என்று அவள் நம்புவாள். அவன் அவளை மகிழ்விக்கும்பொருட்டு தலையைத் தொட்டால் பிழையல்ல என்று எண்ணுபவன். ஆனால் அன்று பிறகொருபோதும் மலைக்குமேல் ஏறப்போவதில்லை என்றே எண்ணினான்.

ஆனால் அவள் சொன்ன அந்த வரி அவனுள் எப்போதும் இருந்தது. மலை உச்சியில் அவள் மாறா இளமையுடன் இருக்கக்கூடும். அதை எண்ணுவது சுவையாக இருந்தது. ஒரு தருணத்தில் தன்னுடலில் குடியேறிக்கொண்டிருந்த முதுமையை அதனூடாக வெல்வதுபோல. அங்கிருந்து ஒரு சரடு தன் அருகே தொங்கியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு அழிவின்மைக்கு, மாறா இளமைக்கு சென்றுவிடமுடியும். பிறிதொரு தருணத்தில் அவளுடைய அவ்விளமை தன்னுடைய முதுமையை நினைவுபடுத்துவதாகத் தோன்றியது. இங்கு வாழும் தனது உயிரை ஒவ்வொரு துளியும் உறிஞ்சித்தான் அவள் இளமை கொள்கிறாள். அவளைப்பற்றி எண்ணும் ஒவ்வொரு முறையும் எனது உயிரின் ஒரு துளியை அவளுக்கு அளித்துவிடுகிறேன்.

பின்னிரவுவரை அவனுக்கு அரசப்பணிகள் இருந்தன. படைகள் கிளம்புவதற்கான ஒருக்கங்கள் குறித்த அரசாணைகளை எழுதி தூதர்களிடம் அளித்துவிட்டு அமைச்சர் கர்த்தமரிடம் “நான் மீள்கையில் மறுநாளே படை கிளம்பும்படி அனைத்தும் ஒருங்கியிருக்கவேண்டும்” என்று ஆணையிட்டான். களைப்புடன் மஞ்சத்தில் படுத்து இருண்ட மேற்தளத்தை நோக்கிக்கொண்டிருந்தபோது அவளை சந்திக்க அதுவரை ஏன் செல்லவில்லை என்ற வியப்பை புத்தம்புதியதாக அவன் அடைந்தான். அஞ்சித்தான் என்று முதலில் தோன்றியது. அவளுடன் இருக்கையில் எல்லாம் உள்ளாழத்தில் மெல்லிய சிறகடிப்புபோல் ஓர் அச்சமிருந்தது. அதை அப்போது ஓர் உவகையாகவே அறிந்தான். அவ்வுறவைக்கொண்டாட்டமாக ஆக்கியது அது. பின்னர் அது அவன் ஆணவத்தை சீண்டியது.

அவள் முன் அவன் ஆண்மகனாக எழ இயலாது. வீரனாக, அரசனாக நின்றிருக்க முடியாது. வெறும் மானுடனாகவே எஞ்சுவான். அவள் தன் அளியால் அவனை மைந்தன் என கைகளில் எடுத்துக்கொள்வாள். அவளுக்குள் குழவி என அவன் பொருந்துவான். ஆனால் உள்ளிருக்கும் ஒன்று சீற்றம்கொண்டு எழுந்தபடியேதான் இருக்கும். ஆணவத்தைப் பெருக்கி ஆற்றலென்றாக்கி அரசவைகள்தோறும் எழுந்து சொல்லாடவும், படைநடத்திச் செல்லவும், அரியணை அமர்ந்து நெறிவழங்கவும், கோட்டைகளையும் காவலரண்களையும் அமைக்கவும் தன்னை தகுதிப்படுத்திக்கொண்ட இக்காலகட்டத்தில் மீண்டுமொரு அறியாச் சிறுவனாக அங்கு சென்று அமர்ந்திருக்க இயலாது.

அவன் அஸ்தினபுரியில் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு செயல் வழியாகவும் விடுபட்டுக்கொண்டிருந்தான். மலைமகனுக்குரிய தாழ்வுணர்ச்சிகளிலிருந்து. ஆழத்தைக் கட்டியிருந்த தயக்கங்களிலிருந்து. ஆகவே ஒவ்வொரு வெற்றியும் அவனுக்கு பெருங்கொண்டாட்டமாக இருந்தது. வெற்றியால் அவன் மேலும் பெரிய பணிகளை நோக்கி ஈர்ப்படைந்தான். மேலும் மேலுமென எழுந்தான். அங்கே ஒவ்வொன்றிலும் முழுமையாக திளைத்தான். ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் அந்தக் காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டதென்று அவன் உள்ளம் சொன்னது. அது இளைய யாதவர் பானுமதி அளித்த கணையாழியை மறுத்து இனி இந்நகருக்கோ அரசுக்கோ நான் பொறுப்பல்ல, என் கால்பொடியை தட்டிவிட்டு கிளம்புகிறேன் என்று சொல்லி அஸ்தினபுரியின் வேதியர் அவையிலிருந்து கிளம்பிய அன்று.

போர் உறுதியாயிற்று என்ற எண்ணம் அனைவருக்குமே அன்று எழுந்தது. அவனுக்கு அது அஸ்தினபுரியின் முற்றழிவு என்றே அகம் நிலைகொண்டது. எவரும் இனி அந்நகரை, அக்குடியினரை, துரியோதனனை காக்கப் போவதில்லை. பிதாமகர் பீஷ்மரோ, பெருந்திறல் வீரன் கர்ணனோ, துரோணரோ, ஜயத்ரதனோ, சல்யரோ. வீரமென்பதற்கும் சூழ்திறன் என்பதற்கும் அப்பால் பேருருக்கொண்டு நிற்பதொன்றுண்டு. அது வேதியர் அவையிலெழுந்து அந்நகரை முற்றழிக்கவும் அக்குடியை துளியெஞ்சாது அழிக்கவும் தான் முடிவு செய்துவிட்டதை அறிவித்துச் சென்றது.

அன்று அஸ்தினபுரியின் வேள்வியவையில் இருந்து சென்று மது அருந்திவிட்டு மஞ்சத்தில் படுத்து சிலகணங்கள் களிமயக்கில் துயின்று பின்னர் விழித்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற எண்ணங்களின் பெருக்காக உள்ளத்தை அறிந்தபடி கிடந்தபோது அவன் முடிவெடுத்தான், பிரேமையை சென்று சந்திக்கவேண்டும் என்று. அவளிடம் அங்கு திரும்பி வருவதைப்பற்றி ஒவ்வொரு நாளும் எண்ணினேன் என்று மட்டும் சொல்லவேண்டும். ஆணவம் பெருகிய நாட்களின் நிரை முடிந்தது. மீண்டுமொரு மைந்தனாக அவள் முன் நின்று தன் அறியாமையை, இயலாமையை, சிறுமையை சொல்லி விடைகொண்டால் இவ்வட்டம் முழுமையடைகிறது. இவை தொடங்கியது அங்குதான். நெடுங்காலம் முன்பு அவள் உடலின் வெம்மையிலிருந்து விடுபட்டு புரவியேறி ஷீரவதியைக் கடந்தபோது உணர்ந்த தற்சிறுமையிலிருந்து முளைத்து எழுந்து பெருகி என்னை சிறகிலேற்றிக்கொண்ட ஆணவம் இது.