பிரயாகை - 89

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 2

விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை மூன்றுநாட்களாக சந்திக்கவில்லை என்பதே முதன்மையானது” என்றபின் ஒருகணம் தயங்க விதுரர் தலையசைத்தார். கனகன் “நேற்றுமுன்னாள் இரவில் அவரே ஒற்றர்தலைவர் சத்யசேனரை அழைத்து பேசியிருக்கிறார்” என்றார்.

விதுரர் நின்று “என்ன?” என்றார். கனகன் “என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நேற்றுகாலை சத்யசேனரின் ஓலைகள் பறவைகளில் சென்றிருக்கின்றன. ஓலைகளில் ஒன்றை உத்தர கங்காபதத்தில் வைத்து கைப்பற்றி அதன் மந்தணமொழியை வாசித்தோம். அச்செய்தி சற்றுமுன்னர்தான் எனக்கு வந்தது. காம்பில்யத்தில் இருந்து கிளம்பும் அஸ்தினபுரியின் படைகளில் துரியோதனருடன் கணிகரும் சகுனியும் இருந்தாகவேண்டும் என்பது அரசரின் ஆணை.”

விதுரர் படபடப்புடன் “சிறைப்படுத்தவா?” என்றார். கனகன் “ஆணை அவ்வாறல்ல. ஆனால் சிறைதான் அது. அவர்களுக்கு அது தெரியாது என்பதே வேறுபாடு” என்றான். விதுரர் இதழ்களைக் கோட்டி “தெரியாமலிருக்குமா என்ன?” என்றார். “ஆம், அதையும் சத்யசேனர் சொல்லியிருப்பார். அரசரின் ஆணைகள் தெளிவான திட்டமொன்றை காட்டுகின்றன. நேற்றே வட எல்லை தளபதியான சுருதவர்மருக்கும் ஆணைசென்றிருக்கிறது.”

சொல் என்பதுபோல விதுரர் நோக்க கனகன் “நமதுபடைகள் எட்டு பிரிவுகளாகப் பிரிந்து காம்பில்யத்தில் இருந்து இளவரசரும் காந்தாரரும் வரும் நீர்வழியை முழுமையாக காவல் காக்கவேண்டும் என்று” என்றபின் “எவ்வகையிலும் காந்தாரர் தப்பிச்செல்லக்கூடாதென்று அரசர் எண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.” விதுரர் விழிகளைத் தாழ்த்த “அரசர் என்னை அழைத்தும் சில பணிகளை சொன்னார். அவை எவ்வகையிலும் எண்ணக்கூடியவை அல்ல. நான் உங்கள் ஒற்றன் என்பதனால் என்னை அனைத்தில் இருந்தும் விலக்குகிறார். அது உங்களையும் விலக்குவதே.”

விதுரர் ”வேறென்ன ஆணை?” என்றார். “நேற்றிரவு மனோதரரும் கைடபரும் அரசரை சந்தித்திருக்கிறார்கள். இன்று விடியற்காலையில் அஸ்தினபுரியின் படைகள் அன்றாடப்பயிற்சி போல இடம்பெயர்ந்தன. நான் கோட்டை மேல் ஏறி நோக்கியதுமே என்ன நிகழ்கிறதென்று புரிந்துகொண்டேன். அஸ்தினபுரியின் படைகள் காந்தாரப்படைகளை பல சிறிய துண்டுகளாக பிரித்துவிட்டன. காந்தாரப்படைகளும் சிறையிடப்பட்டுவிட்டன.”

விதுரர் புன்னகைத்து “விழியறியாதவர் என்கிறார்கள். அரசரால் பாரதவர்ஷம் முழுக்க அமர்ந்த இடத்திலிருந்தே படைகளை அனுப்பமுடியும்” என்றார். “ஆம், காந்தாரருக்கும் கணிகருக்கும் கழுவை செதுக்கவும் ஆணையிட்டிருப்பாரோ என ஐயமாக இருக்கிறது.” திடுக்கிட்டு நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கிய விதுரர் “இது நகைப்புக்குரியதல்ல. அவர் முதலில் கழுவேற்றப்போவது தன் நூறு மைந்தரைத்தான்” என்றார்.

கனகன் திகைத்தபடி “ஆம், நேற்றுமுதல் இங்குள்ள அத்தனை கௌரவர்களுக்கும் காவலர்கள் மாறிவிட்டனர். இயல்பான மாற்றம் என்று எண்ணினேன்” என்றான். விதுரர் “அனைவரையும் சிறையிட்டுவிட்டு அரசர் காத்திருக்கிறார்” என்றார். “அவருக்குத்தேவை பாண்டவர்களை எரிக்க முனைந்தவர் எவர் என்ற சான்று. மறுகணமே ஆணையிட்டுவிடுவார். நான் அவரை அறிவேன். இமையசைக்காமல் பல்லாயிரம்பேரை கொலைக்களத்துக்கு அனுப்ப ஆணையிடும் ஷத்ரியர் அவர்…”

கனகன் திகைத்து சொல்லிழந்து அச்சொல்லின்மை உடலெங்கும் ததும்ப நின்றான். விதுரர் “இன்று என்னுடன் அஸ்தினபுரியின் மூதாதையர் துணைநிற்கவேண்டும்… வேறெதையும் நான் நம்பியிருக்கவில்லை” என்றபின் திரும்பி நடந்தார். சில எட்டுகள் சென்றபின் திரும்பிய விதுரர் “என் மேல் இன்னமும் அரசருக்கு நம்பிக்கை இருக்கிறது. என் சேவகர்கள் எவரும் மாறவில்லை” என்றார். கனகன் ஒளியின்றி புன்னகைத்தான்.

விப்ரர் எழுந்து விதுரரை வணங்கினார். “அரசர் என்ன செய்கிறார்?” என்றார் விதுரர். “இசை கேட்கிறார்” என்று விப்ரர் சொன்னதும் விதுரரின் அகம் அதிர்ந்தது. விப்ரரின் விழிகளைத் தொட்டு விலக்கிக்கொண்டார். உள்ளே செல்லும்போதே இசை கேட்டது. யாழிசை அத்தனை கூர்மையாக இருக்கும் என்று, அதன் ஒவ்வொரு அதிர்வும் செவிகளைத் துளைத்து விழிகளை அதிரச்செய்து பார்வையை அலையடிக்கவைக்கும் என்று விதுரர் அப்போதுதான் உணர்ந்தார்.

இசைக்கூடத்தில் முதியசூதர் யாழிசைக்க அருகே இளம்சூதன் ஒருவன் முழவுடன் அமர்ந்திருந்தான். அப்பால் கைகட்டி இசைகேட்டு நின்றிருந்த சஞ்சயன் அவர்களின் வருகையைச் சொல்ல திருதராஷ்டிரர் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. விதுரர் வந்திருப்பதை அவர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. இசை தொடர்ந்துகொண்டிருக்க விதுரர் பீடத்தில் ஓசையின்றி அமர்ந்தார். அமரும்போதே அனைத்தையும் அரசரே தொடங்கட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

இசை முடிந்ததும் திருதராஷ்டிரர் கையசைத்து அவர்களை அருகழைத்து பரிசில்களை அளித்தார். இளைஞனிடம் அவன் தாளமிட்டதில் உள்ள சில நுட்பமான பிழைகளை சுட்டிக்காட்டியபின் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். அவர்கள் குனிந்து பணிந்து வெளியேறியபின் அவர் விதுரனுக்கு எதிர்த்திசையில் முகத்தைத் திருப்பியபடி அமர்ந்திருந்தார். விதுரர் தலைகுனிந்து காத்திருந்தார். விப்ரர் வணங்கி வெளியேறினார். சற்றுக்கழித்து சஞ்சயனும் வெளியேறினான்.

நேரம் சென்றுகொண்டிருந்தது. அந்த அறை புற ஒலிகள் கேளாமல் அமைக்கப்பட்டிருந்தமையால் காதுகளே இல்லாமலாகிவிட்டது போல விதுரர் உணர்ந்தார். அது இருட்டு போலவே ஒரு பருப்பொருள் நிலையாக இருந்தது. அவர் விட்ட மூச்சின் ஒலி அவருக்கே கேட்டது. அரசரின் உடலுக்குள் குருதி ஓடும் குமிழியோசையைக்கூட கேட்கமுடியும் என்று தோன்றியது.

ஓசையின் வழியாகவே காலம் ஓடுகிறதென்று விதுரர் உணர்ந்தார். எண்ணங்களுக்கு காலமில்லை. பல்லாயிரம் காதம் பலநூறு பாதைகள் வழியாகப் பிரிந்து பிரிந்து ஓடியபின்னரும் காலம் அப்படியே நின்றது. அல்லது சித்தம் அறியாமல் அது வெளியே நிகழ்ந்துகொண்டிருக்கிறதா? இப்போது எழுந்து வெளியே சென்றால் ஆண்டுகள் கடந்திருக்குமா? மூடத்தனம். வெற்றுச்சொற்களின் வரிசை. ஆனால் சிந்தைகளை அளவிடவேண்டியிருக்கிறது. அள்ளவேண்டியிருக்கிறது.

சற்று அப்பால் தரையில் விழுந்திருந்த ஒளிக்கீற்றை விதுரர் நோக்கினார். வெளியே எங்கோ அசைந்த ஒரு செந்நிறத் திரைச்சீலையின் அசைவில் அது நிறம் மாறி கொண்டிருந்தது. அந்தத் தாளத்தை நோக்கினார். அது காலமாகியது. கணங்களாகியது. கடந்தது, நிகழ்ந்தது, வரவிருந்தது. காலமென நீண்டது. அதுவரை அறுபட்ட கொடிச்சரடு என துடிதுடித்த சித்தம் அமைதிகொண்டது. காலத்தின் மேல் கால் நீட்டிப் படுத்து கண்ணயர்ந்தது அகம்.

நெடுநேரம் கடந்து விதுரர் அசைந்து அமர்ந்தார். திரும்பி திருதராஷ்டிரரை நோக்கினார். விழியிழந்த மனிதர் அங்கே இல்லை என்று தோன்றியது. ஓர் இருட்டு மூலைபோல அவர் அமர்ந்திருந்தார். விழிக்கோளங்கள் ததும்பிக்கொண்டே இருந்தன. அவரது உள்ளமா அவை? உள்ளத்தை இப்படி காணமுடியும் என்றால் நல்லதுதான். ஆனால் அவை அவர் அறிந்த எந்த மொழியிலும் பொருள்கொள்ளாத சொற்கள். இரு குருதிக்குமிழிகள். ஒருபோதும் உலராதவை.

விதுரர் தொண்டையைக் கனைத்து “அழைத்ததாகச் சொன்னார்கள்” என்றார். திருதராஷ்டிரர் “இல்லை” என்றார். விதுரர் “இளவரசர்கள் காம்பில்யத்தில் இருந்து கிளம்பிவிட்டார்கள். இன்று மாலை அவர்கள் வந்துசேரக்கூடும்” என்றார். திருதராஷ்டிரர் தலையை அசைத்தார். “அங்கே காம்பில்யத்தில் மணமுற்றத்தில் தோன்றி பாஞ்சாலியை வென்றவன் அர்ஜுனன் என்றார்கள். அது உண்மையா என்று பார்க்க ஆளனுப்பியிருந்தேன்.” விதுரர் திருதராஷ்டிரர் தலையாட்டுவதை கண்டபின் “அச்செய்தி உண்மை. அவர்கள்தான் வென்றிருக்கிறார்கள். உறுதிசெய்தபின் தங்களை வந்து பார்க்கலாமென்றிருந்தேன்” என்றார்.

“சொல்” என்றார் திருதராஷ்டிரர். “இன்று காலை ஒற்றுச்செய்திகள் முழுமையாக வந்தடைந்தன. பாஞ்சாலக் குலவழக்கப்படி பாண்டவர் ஐவரையுமே பாஞ்சாலி மணக்கவேண்டும் என்று குந்திதேவி ஆணையிட்டிருக்கிறார். அதை தருமன் எதிர்த்திருக்கிறான். பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் அதை மூத்தவரின் முடிவுக்கே விட்டுவிட்டனர். அன்னையின் ஆணை உறுதியாக இருந்தமையால் தருமன் அம்முடிவை ஏற்றிருக்கிறான். அதை திருஷ்டத்யும்னன் வழியாக முறையாக துருபதனுக்கும் அறிவித்துவிட்டார்கள்.”

திருதராஷ்டிரர் முகத்தில் எந்த மாறுதலும் நிகழவில்லை. ”துருபதனுக்கும் குந்திக்கும் துர்வாசகுலத்து மூத்தவரான துர்வாச முனிவரின் ஆணை சென்றிருக்கிறது. துருபதன் பாண்டவர்களை தன் அரண்மனைக்கு அழைத்திருக்கிறார். இரண்டுநாட்களுக்குப்பின் முழுநிலவு நாளில் அரண்மனையிலேயே அவர்களுக்கு அவர்களின் குலமுறைப்படி மணநிகழ்வுகள் நடைபெறும் என்று செய்தி வந்திருக்கிறது” என்றபின் மீண்டும் நோக்கிவிட்டு “நாம் அதற்கு முறைப்படி வாழ்த்தும் பரிசில்களும் அளிக்கவேண்டும். நானே அஸ்தினபுரியின் சார்பாக சென்று மணநிகழ்வில் கலந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன். நான் செல்வது தாங்கள் செல்வதாகவே ஆகும்” என்றார்.

திருதராஷ்டிரர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. “அவர்களை முறைப்படி அஸ்தினபுரிக்கு அழைக்கிறேன். அவர்களுக்கு ஏதேனும் மனத்தாங்கல்கள் இருக்குமென்றாலும் அவற்றை பேசி தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.” திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் திரும்பி “விதுரா, அவர்கள் எரிநிகழ்வில் இறந்ததாக ஏன் என்னிடம் சொன்னாய்? அவர்கள் வாழ்வதை நீ அறிந்திருந்தாய் அல்லவா” என்றார்.

“இல்லை அரசே, நான் அறிந்தது அதுவே. அவர்கள் எரிநிகழ்வில் இறந்ததாகவே எனக்கு செய்திவந்தது…” என்றார் விதுரர். “என் முகத்தை நோக்கி சொல்…. நான் உண்மையை மட்டுமே அறியவிழைகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் சொல்வதெல்லாம் உண்மை” என்றார் விதுரர். திருதராஷ்டிரர். “நம் மூதாதையர் மேல், வியாசரின் சொல்லின் மேல் ஆணையிடு” என்றார். “மூதாதையர் மேல் ஆணையாக, வியாசகவிமேல் ஆணையாக நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன்” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் சற்று திகைத்ததுபோல அவரது பெரிய கைகள் தசை இறுகி வந்து மடிமீது இணைந்துகொண்டன. உடலுக்குள்ளேயே அவர் உடல் புரண்டு அமைந்தது. பெருமூச்சுடன் “சொல், என்ன நடந்தது?” என்றார். விதுரர் ”கேளுங்கள் அரசே” என்றார். திருதராஷ்டிரர் தணிந்த குரலில் “இளையோனே!” என்று அழைத்தார். அவரால் மேலும் பேசமுடியவில்லை. “விதுரா” என மீண்டும் அழைத்தபின் கைகளை விரித்தார். “சொல்லுங்கள் மூத்தவரே” என்றார் விதுரர்.

“என் மேல் கருணை காட்டு… இத்தனை நாட்களாக என்னுள் எரிந்துகொண்டிருந்த வினாவுக்கு விடையளி. அந்த எரிநிகழ்வில் ஏதேனும் சூது உண்டா? அவர்கள் அதில் தப்பியபின் ஏன் இங்கே வராது ஒளிந்தனர்?” திருதராஷ்டிரரின் எழுந்தமர்ந்த நெஞ்சை நோக்கியபோது ஒரு கணத்தில் கரையழிந்து அனைத்தையும் சொல்லிவிடுவோம் என்று விதுரர் எண்ணினார். உடனேயே இறுக்கிக்கொண்டு அக்கணத்தைக் கடந்தார். “சொல்” என்று திருதராஷ்டிரர் சொன்னபோது அவரது தொண்டை அடைத்திருந்தது. ”சொல் இளையவனே. நான் பிழை செய்தேனா?”

“நீங்கள் ஒருபோதும் பிழைசெய்ய இயலாதவர் மூத்தவரே” என்றார் விதுரர். “அப்படியென்றால் பிழை செய்தவர்கள் யார்? என் மைந்தர்களா? அந்த எரிநிகழ்வு அவர்களால் செய்யப்பட்டதா?” விதுரர் “இல்லை அரசே, அவர்கள் தங்கள் மைந்தர்கள்” என்றார், “அப்படியென்றால் யார்? சகுனியா? கணிகனா? யார்? அதைச்சொல்!”

விதுரர் “அரசே, அது வெறும் தற்செயல். அதிலிருந்து அவர்கள் தப்பியதும் தற்செயலாக இருக்கலாம். நாம் வீண் உளச்சித்திரங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றார். திருதராஷ்டிரர் “அவர்கள் ஏன் இங்கே மீண்டுவரவில்லை? ஏன் ஒளிந்தனர்?” என்றார். “அரசே, அவர்கள் அதை சதி என ஐயுற்றிருக்கலாம்.” திருதராஷ்டிரர் “அப்படியென்றால் அவர்கள் என்னிடமல்லவா வந்து சொல்லியிருக்கவேண்டும்? அவர்களுக்கு ஏன் என் மேல் நம்பிக்கை இல்லாமலாயிற்று?” என்றார்.

“அவர்கள் என்னிடமும் சொல்லவில்லையே” என்றார் விதுரர். முதல்முறையாக அந்தச் சொற்றொடரில் திருதராஷ்டிரரின் உள்ளம் அமைந்தது. “ஆம், உன்னை விட அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இல்லை. ஏன் உன்னிடமும் அவர்கள் வரவில்லை?” விதுரர் “அவர்களுக்கு ஏன் அவ்வண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை?” என்று சொல்லி நீள்மூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டார்.

“அரசே, அவர்களே அதற்குரிய மறுமொழியை சொல்லட்டும். நானே நேரில் சென்று அவர்களை அழைத்து வருகிறேன். அவர்கள் தங்கள் முன் நின்று என்ன நிகழ்ந்தது, ஏன் ஒளிந்துவாழ்ந்தனர் என்று சொல்லட்டும். அவர்களின் சொற்களன்றி எதற்கும் பொருளில்லை” அதை சொல்லி முடிக்கும்போதே விதுரரின் அகம் பதறத் தொடங்கியது. குந்தியின் சினமெழுந்த விழிகள் எண்ணத்தில் வந்தன.

அதற்கு இப்போதே ஒரு அணைபோட்டு வைத்தாலென்ன என்ற சிந்தை எழுந்ததுமே திருதராஷ்டிரர் ”ஆம், விதுரா. அவர்கள் இங்கே வரும்வரை நீ அவர்களிடம் தொடர்புகொள்ள வேண்டியதில்லை. அவர்களை அழைத்துவர நான் காந்தாரியை அனுப்புகிறேன். அவள் குந்தியிடம் பேசி அழைத்து வரட்டும்” என்றார். விதுரர் “அதற்கு அரசி…” என்று சொல்ல “என் ஆணைக்கு அப்பால் எண்ண அவளால் இயலாது. ஆணையிட்டுவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர்.

விதுரர் பெருமூச்சு விட்டார். அவரது உடல் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டே இருந்தது. ஒருகணம் அனைத்திலிருந்தும் விடுவித்துக்கொண்டு காடேகினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. மறுகணத்திலேயே அது மறைந்தபின்னர்தான் அதற்குள் இனிய காட்டுக்குடிலை, குளிர்ந்த காலையை, சூரிய ஒளியை, பறவைகளின் ஒலியை அது தன் எண்ணத்தில் எழுப்பியிருக்கிறது என்று புரிந்தது. அவ்வெண்ணம் தன் உடலையே எளிதாக ஆக்கிவிட்டதை உணர்ந்தார். பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டார்.

விப்ரர் வந்து வணங்கி நின்றார். அவரது காலடியோசையை அறிந்த திருதராஷ்டிரர் “ம்?” என்றார். “காம்பில்யத்திலிருந்து ஒரு சூதன் வந்துள்ளான்” என்றார் விப்ரர். “முந்திவருவதற்காக கங்கையை சிறுபடகில் கடந்திருக்கிறான். நேராக அரண்மனை முன் வந்து நின்று பாட விழைகிறான்.” திருதராஷ்டிரர் புன்னகையுடன் “அவர்களுக்கு கதைகள் விளைந்து கொண்டே இருக்கின்றன” என்றார்.

விப்ரர் புன்னகை செய்தார். “வரச்சொல்… உண்மையை அவன் பாடுவான் என்று உனக்குத் தோன்றுகிறதா?” என்றார். “அரசே, மெய்விளைவது நெல்விளைவதுபோல. கதைவிளைவது புல்விளைவதுபோல….” என்ற விப்ரர் சிரித்து “நெல்லும் ஒரு புல்லே” என்றார். திருதராஷ்டிரர் சிரித்துவிட்டு “மூடா, நீயும் மதிசூழக் கற்றுவிட்டாய்” என்றார்.

திருதராஷ்டிரரின் அமைதிதான் தன்னை நிலையழியச் செய்திருக்கிறது என்று விதுரர் உணர்ந்தார். சூதர்பாடலைக் கேட்க தன் அகம் குவியாதென்று தெரிந்தது. இளைய சூதன் உள்ளே வந்ததுமே அவன் சற்று மூடன் என்பதும், மூடத்தனத்தின் விளைவான தன்னம்பிக்கையும் மிகையார்வமும் கொண்டவன் என்பதும் தெரிந்தது. மங்கலான கண்களும் பளிச்சிடும் சிரிப்புமாக அவன் மிடுக்குடன் உள்ளே வந்து “அஸ்தினபுரியின் அரசரை ஸ்வேதகுலத்துச் சூதன் சிம்ஹிகன் வாழ்த்துகிறேன்” என்றான்.

அச்சொற்களைக்கொண்டே அனைத்தையும் புரிந்துகொண்ட திருதராஷ்டிரர் புன்னகைத்து “தங்கள் வாழ்த்து இந்நாளின் பெரும் பரிசு சூதரே. அமர்க!” என்றார். சூதன் அமர்ந்துகொண்டு தன் குறுமுழவை மடியில் வைத்தபின் விதுரரை யாரிவர் என்பது போல நோக்கினான். “காம்பில்யத்தில் இருந்தீர்களோ?” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, நான் காம்பில்யம் செல்வதற்குள் விழவு முடிந்துவிட்டது. அனல் தொட்டு அனல் பற்றுவதுபோல நாதொட்டு நா அறிந்த கதைகளைக் கற்றுக்கொண்டு சொல்லவந்தேன்” என்றான் சிம்ஹிகன்.

“சொல்லும்!” என்றார் திருதராஷ்டிரர். அவன் தன் முழவை இருவிரலால் ஒலிக்கவைத்து பாடத்தொடங்கினான். இறை வாழ்த்துக்கள், அவன்பிறந்த குருமரபுக்கான வணக்கங்கள், அவன் பிறந்த பாஞ்சாலநாட்டின் குலமுறை கிளத்தல்கள், அஸ்தினபுரியின் அரசனுக்கும் அவன் குலத்துக்குமான வாழ்த்துக்கள்… முழவின் ஒலி தன் புறந்தலையிலேயே விழுவதாகத் தோன்றியது. பின்னர் அவன் விரல்கள் அடிப்பதே தன் தலையைத்தான் என்று பட்டது. விதுரர் கண்களை மூடிக்கொண்டார்.

சிம்ஹிகன் காம்பில்யத்தின் மணத்தன்னேற்புக் கதைக்குள் சென்றான். துருபதமன்னர் துர்வாசரை வணங்கி அருளுரை கேட்டு மணத்தன்னேற்பை அறிவித்ததையும் அதைக்கேட்டு நூற்றெட்டு ஷத்ரிய அரசர்களும் அணிக்கோலத்தில் நகர்புகுந்ததையும் விவரித்தான். கிந்தூரத்தின் கதையைச் சொன்னபின் பாஞ்சாலியின் நீராட்டையும் அணிபூணுதலையும் பாடினான். திருஷ்டத்யும்னன் துணையுடன் பிடியானையில் அவள் அவை வந்து இறங்கியதையும் அவளைக்கண்ட ஒவ்வொரு அரசரும் அடைந்த விழைவையும் விவரித்தான்.

திருதராஷ்டிரர் சிரித்து “கழுவேற்றும் காட்சியில்கூட சிருங்காரத்தை கொண்டுவருபவர்கள் இவர்கள்” என முனகிக்கொள்ள சிம்ஹிகன் அதை தனக்கான பாராட்டாகக் கொண்டு தலைவணங்கி புன்னகைத்துக்கொண்டு தொடர்ந்து பாடினான். ஒவ்வொரு மன்னராக வந்து கிந்தூரத்தை எடுக்க முயன்று தூக்கி வீசப்பட்டார்கள். இறுதியில் அர்ஜுனன் அதை எடுத்து மேலே தெரிந்த இலக்கை அடித்து கன்னியை கரம்பற்றினான். “பார்த்தன்! அஸ்தினபுரியின் வில்வீரன். விஜயன். இந்திரனின் மைந்தன். கிரீடி, சவ்யசாசி, அனகன், பாரதன்! தன்னிகரற்ற தனஞ்சயன்!” சூதன் விரைவுத்தாளமிட்டு குரலெழுப்பினான்.

திருதராஷ்டிரர் முகம் நெகிழ்ந்தது. தொடைகளில் கையை ஊன்றி “ஆம், இன்று பாரதவர்ஷத்தில் அவனுக்கு நிகரென எவருமில்லை” என்றார். சூதன் பாண்டவர்கள் வைதிகவேடத்தில் பாஞ்சாலியுடன் சென்று குயவனின் இல்லத்தில் தங்கியிருந்த குந்தியைக் கண்ட காட்சியை சொன்னான். “அன்னையே, எங்களுக்கு ஒரு அறப்பொருள் கிடைத்துள்ளது” என்றான் அர்ஜுனன். “அதை நிகராக பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று குந்தி சொன்னாள். தருமன் “அன்னையே, என்ன வாக்கு இது!” என்று திகைத்தான்.

குந்தி வெளியே வந்தாள். தான் சொன்ன சொல்லின் பொருளென்ன என்று அறிந்ததும் திகைத்து நின்றாள். ஆனால் “மண் பிழைத்தாலும் மாதர் சொல்பிழைக்கலாகாது மைந்தா” என்றாள். சூதன் பாடிக்கொண்டிருக்கையிலேயே தொடையைத் தட்டியபடி திருதராஷ்டிரர் சிரித்தார். “விதுரா மூடா, நம்மவர் மண்ணாலான ஒரு பாரதவர்ஷத்தின் மேல் சொல்லால் ஆன நூறாயிரம் பாரதவர்ஷங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.”

சூதன் பாடி முடித்ததும் திருதராஷ்டிரர் அவனுக்கு பரிசில் அளித்தார். “நல்லது சூதரே. நிறைய புதியகதைகள். நீங்கள் தெற்கே மாளவத்திற்கோ கலிங்கத்திற்கோ செல்வதற்குள் மும்மடங்கு பெரிய கதை உம்மிடமிருக்குமென நினைக்கிறேன்” சூதன் அதையும் பாராட்டென்று கொண்டு “ஆம் அரசே, தங்கள் அருள்” என்று தலைவணங்கினான். “பாஞ்சாலியின் நீள்குழலை நீர் விவரித்ததை விரும்பினேன். அக்குழல் மேலும் நீண்டு வளர்க!” என்றார் திருதராஷ்டிரர். சூதன் மீண்டும் தலைவணங்கினான்.

அப்போது விதுரர் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. அனைத்தும் நலமாகவே முடியப்போகின்றன. அதை திருதராஷ்டிரரின் ஆழம் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறது. ஆகவேதான் அவர் சினத்தையும் துயரையும் கடந்து உவகையுடன் இருக்கிறார். அந்த உவகை வெறும் பாவனை அல்ல. அகத்திலெழுந்த அனலை கட்டுப்படுத்தும் முயற்சி அல்ல. அது உண்மையான உவகை. உள்ளே எங்கோ சுடர் இல்லாமல் சிரிப்பில் அந்த ஒளி எழாது. ஆம், அனைத்தும் சிறப்பாகவே முடியவிருக்கின்றன.

இன்னும் சற்றுநேரத்தில் அனைத்தும் சீரடைந்துவிடும். இன்னும் சிலநாழிகைகளுக்குள். அப்போது அதை அத்தனை உறுதியாக விதுரர் உணர்ந்தார்.ஆம், இன்னும் சற்றுநேரத்தில். இதோ, நெஞ்சு படபடக்கத் தொடங்கிவிட்டது. ஏதோ செய்தி வரப்போகிறது. எல்லாவற்றையும் சீராக்கிவிடுவது. அந்த உள்ளுணர்வை அவரது சித்தம் ஏளனத்துடன் நோக்கிக்கொண்டிருந்தது. ஆனால் உள்ளூர அது வலுவடைந்தபடியே இருந்தது.

திருதராஷ்டிரர் தன் இருக்கையில் கைகளால் தட்டியதும் சஞ்சயன் வந்து நின்றான். அவர் கைநீட்ட அதை அவன் வந்து பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரர் “மாலையில் பார்ப்போம். பாண்டவர்களின் மணநிகழ்வில் பங்கெடுத்து அவர்களை அழைத்துவர காந்தாரியை நாளைக்காலை அரசமுறைப்படி காம்பில்யத்துக்கு அனுப்பலாமென எண்ணுகிறேன். அச்செய்தியை அவர்களுக்கு பறவைத்தூதாக அனுப்பிவிட்டேன். மாலைக்குள் காம்பில்யத்திலிருந்து மறுஓலை வரக்கூடும்” என்றார் திருதராஷ்டிரர் “அனைத்து முறைமைகளும் செய்யப்படவேண்டும். செல்பவள் தேவயானியின் மணிமுடியைச் சூடிய பட்டத்தரசி…”

விதுரர் தலைவணங்கினார். திருதராஷ்டிரர் உள்ளே சென்றதும் அவர் நெஞ்சு ஏமாற்றத்தில் சுருங்கியது. வெறும் விருப்பக்கற்பனைதானா அது? அதற்குள் என்னென்ன பாவனைகள். எத்தனை அகநாடகங்கள். கசப்பான புன்னகையுடன் அவர் எழுந்து வெளியே சென்றார். விப்ரரின் வணக்கத்தை ஏற்றபின் இடைநாழியில் நின்ற கனகனை நோக்கி சென்றார். கனகன் அவரை நோக்கி வந்தபோதே அவன் விழிகளில் அவர் ஒரு செய்தியைக் கண்டார்.

“சொல்” என்றார் விதுரர். “அரசருக்கு சற்றுமுன் ஓலை ஒன்று வந்துள்ளது…” என்றான் கனகன். விதுரர் படபடப்புடன் “காம்பில்யத்தில் இருந்தா?” என்றார். “ஆம்…” என்றான் கனகன். ”செம்பருந்து அதைக் கொண்டுவந்தது. அதை கைடபர் அரசரின் மந்தண அறைக்கு கொண்டுசென்றார்.” விதுரர் சலிப்புடன் “அது துருபதரின் ஓலை. பேரரசி காந்தாரி பாண்டவர்களின் மணநிகழ்வுக்குச் செல்கிறார். அதற்கான ஒருக்கங்கள் நிகழ்த்துவதற்கான ஒப்புதல் கடிதம் அது.”

கனகன் விழிகளை சற்று அசைத்து “அவ்வாறல்ல அமைச்சரே. கைடபரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அந்த ஓலையுடன் அவர் அரசரின் மந்தண அறைநோக்கிச் சென்றபோது மேலாடை ஒரு கதவின் தாழில் சிக்கியது. அவர் அதை சலித்தபடி இழுத்து கிழித்துவிட்டார்”. விதுரர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபின் “ஆனால் அரசர் மந்தண அவைக்குச் சென்றுவிட்டாரே” என்றார். “தாங்கள் இப்போது அவருடன் இருக்கவேண்டும்”

விதுரர் முடிவெடுத்து திரும்பி நடந்தார். கனகன் பின்னால் வந்தபடி “நான் ஒரு ஓலையை கொண்டுவரச்சொன்னேன். நாடுதிரும்பும் கௌரவர்களை ஓர் இடத்தில் மகதத்தின் படைகள் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றன. அச்செய்தியை கொண்டுவந்த பறவை ஓலை அது. அதை மிகைப்படுத்தி அரசரிடம் சொல்லி அதற்கெனத்தான் சந்திக்கவந்ததாக தாங்கள் சொல்லிக்கொள்ளலாம்”என்றான். விதுரர் கைநீட்ட அவன் அந்த ஓலையை அளித்தான்.

விதுரர் இசைச்சாலையை சுற்றிக்கொண்டு திருதராஷ்டிரரின் மந்தண அறையை அடைந்தார். அங்கே விப்ரர் வாயிலில் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் விப்ரர் தலைவணங்கியதிலிருந்தே உள்ளே கைடபர் இருப்பதை விதுரர் அறிந்தார். “என் வருகையை அறிவியுங்கள் விப்ரரே” என்றார் விதுரர். விப்ரர் உள்ளே சென்று மீண்டு வந்து அவரை உள்ளே செல்லும்படி தலைவணங்கி கைகாட்டினார்.

காலடிகள் பஞ்சாலானவைபோல, மண்ணைத் தொடாமல் நடப்பதுபோல ஓர் உணர்வை விதுரர் அடைந்தார். ஆனால் அத்தகைய உச்சகணங்களில் உடலை உள்ளத்தால் உந்தி நிமிர்த்திக்கொள்வது உதவுமென கற்றிருந்தார். உடல் நிமிர்ந்ததும் உள்ளமும் அதை நடிக்கத் தொடங்கிவிடும். முகவாயை சற்றே தூக்கி கண்களை நிலைக்கச்செய்து சீராக நடந்து அறைக்குள் சென்று திருதராஷ்டிரர் முன் நின்று தலைவணங்கி “ஓரு முதன்மைச்செய்தி. அதை சொல்லிவிட்டுச் செல்ல விழைந்தேன்…” என்றார்.

“நீ இந்த ஓலைக்காகத்தான் வந்தாய் இளையவனே” என்று சொல்லி அந்த ஓலையை திருதராஷ்டிரர் நீட்டினார். அவரது முகத்தை நோக்கிய விதுரர் அதில் புன்னகை இருப்பதைக் கண்டதும் அகம் தெளிந்தார். ஓலையை வாங்கி சுருள் நீட்டி வாசித்தார். அது தருமனால் திருதராஷ்டிரருக்கு எழுதப்பட்டிருந்தது. அவர் முதலில் அதை ஒரே விழியோட்டலில் வாசித்து முடித்தார். அதன் உள்ளடக்கத்தை அவரது அகம் வாங்கிக்கொண்டு அனைத்துச்சுமைகளையும் இழந்து சிறகடித்து எழுந்தது. அதன்பின் சொல் சொல்லாக விழிதொட்டுச் சென்றார்.

முறைமைசார்ந்த முகமன்களுக்குப்பின்னர் தருமன் காம்பில்யத்தில் நிகழும் மணநிகழவை முறைப்படி அறிவித்திருந்தான். பாஞ்சால குலமுறைமையின் படி அந்த மணவிழா நிகழ்வதாகவும் பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியை மணப்பதாகவும் ஓரிரு வரிகளில் எழுதியிருந்தான். “எந்தையே, இப்புவியில் பாண்டவர்களாகிய எங்களுக்கு இன்றிருக்கும் வாழும் மூதாதை நீங்கள் மட்டுமே. தங்கள் நல்வாழ்த்துக்கள் இன்றி நாங்கள் முழுமானுடராக வாழமுடியாது. தேவர்களுக்கும் விண்ணவர்க்கும் நீத்தாருக்கும் அறத்திற்கும் எங்களை கொண்டுசென்று சேர்க்கவேண்டியவர் தாங்களே. பாண்டவர்களாகிய நாங்கள் தங்கள் பாதங்களில் சிரம் வைத்து வாழ்த்துக்களை நாடுகிறோம்.”

வாரணவத மலையடிவாரத்தின் எரிநிகழ்வுக்குப்பின் நாங்கள் காடுபுகுந்தோம். புறவுலகு எங்களை அறியாமல் ஏழுவருடங்கள் வாழ்ந்தோம். நாங்கள் இறந்துவிட்டதாக அஸ்தினபுரியிலும், பாரதவர்ஷம் முழுவதும் எண்ணப்பட்டது. அது அப்படியே தொடரட்டுமென முடிவெடுத்தவன் நானே. எந்தையே, அது தங்களுக்காக நான் எடுத்த முடிவு. நாங்கள் உயிருடனிருப்பது வரை தாங்கள் தங்கள் மைந்தன் துரியோதனன் அஸ்தினபுரியின் முடியைச் சூட ஒப்ப மாட்டீர்கள் என்று அறிந்திருந்தேன். ஷத்ரியர் பகைக்க, உடன்பிறந்தோர் அகம்சுருங்க அம்மணிமுடியை ஏற்க நான் விழையவில்லை.

நாங்கள் தங்கியிருந்த வாரணவதத்தின் மாளிகை மகதத்தின் ஒற்றர்களால் கட்டப்பட்டது. நாங்கள் துயில்கையில் எங்களை எரித்தழிக்க அவர்களின் ஒற்றனாகிய புரோசனன் திட்டமிட்டான். அதை அறிந்ததும் அவனையும் அவனுடனிருந்தவர்களையும் எரித்துவிட்டு நாங்கள் குகைப்பாதை வழியாக தப்பிச்சென்றோம். மறுபக்கம் இடும்பவனம் புகுந்ததும்தான் அது பாரதவர்ஷத்தின் மானுடர் எவரும் நுழைந்திராத அரக்கர்களின் காடு என்றறிந்தோம். அங்கேயே நாங்கள் இருந்துகொண்டால் நாங்கள் இறந்துவிட்டதாக நீங்கள் எண்ணுவீர்கள் என்று நான் கருதினேன். நீங்கள் என் இளையோன் துரியோதனனுக்கு மணிமுடிசூட்டவேண்டுமென்பதற்ககாவே இதைச் செய்தேன்.

அது பெரும்பிழை என நான் அறிவேன். தங்களுக்கு பெருந்துயரை அளித்துவிட்டேன். ஆனால் அஸ்தினபுரி சென்று முட்டிய இக்கட்டுநிலையில் இருந்து வெளிவர பிறிதொரு வழியை நான் அறிந்திருக்கவில்லை. தாங்கள் என் மேல் சினம் கொள்வீர்கள் என நன்கறிவேன். தங்கள் சினமும் எனக்கு பேரன்பின் தொடுகையே. தங்கள் பாதங்களில் என் தலையை வைக்கிறேன். என் சிறுமைகளெல்லாம் அகலட்டும்.

எந்தையே, இடும்பவனத்திற்குள் நாங்கள் வாழ்ந்ததும் நல்லூழே. தங்களுக்கு நிகரான தோள்வல்லமை கொண்ட மைந்தன் ஒருவனை அங்கே பீமன் பெற்றான். கடோத்கஜன் என அவனுக்கு நாங்கள் பெயரிட்டோம். பெருமை மிக்க ஹஸ்தியின் தோள்கள் அடுத்த தலைமுறையிலும் நீள்கின்றன. தங்கள் நல்வாழ்த்துக்களை என் கரிய குழந்தையரக்கனுக்காகவும் நான் கோருகிறேன். ஒருநாள் தாங்கள் அவனுடன் தோள்தழுவிப்போரிடும் காட்சியை காணும் பேறை என் விழிகள் அடையவேண்டும்.

அஸ்தினபுரிக்கு அரசே, என்றும் எங்கள் பெருமை உங்கள் உதிரத்துக்குரியவர்கள் என்பதே. வேழம் மானுடனாக வந்து அமர்ந்திருந்த பெருமையை ஹஸ்தி வழியாக பெற்றது நம்குலம். இன்றும் அது நீடிக்கிறது. என்றும் அது நீடிக்கும். வேழங்கள் கடந்துசெல்லும் எளிய பாதையே நான் என்று அறிகிறேன். என் பிழைபொறுத்து என்னையும் என் இளையோரையும் வாழ்த்துங்கள்! மூத்தபாண்டவன் யுதிஷ்டிரன்.

கண்ணீர் மறைத்த கண்களை பலமுறை கொட்டி உதடுகளை இறுக்கி விதுரர் தன்னை தொகுத்துக்கொண்டார். கண்ணீர் உலர்ந்தபோது மூக்குக்குள் நீர் நிறைந்திருந்தது. அதைமேலிழுத்து மூச்சில் கரைத்தார். வெள்ளுப்பை அள்ளித் தின்றதுபோலிருந்தது தொண்டை. திருதராஷ்டிரர் கம்மிய குரலில் “என் மைந்தன்!” என்று கைகளை விரித்தார். “விதுரா, மூடா, அவன் இம்மண்ணில் வாழும் பாண்டு அல்லவா?”

அடைத்த குரலில் “ஆம் மூத்தவரே” என்றார் விதுரர். “மூடன், என்ன சொல்கிறான் பார்த்தாயா? மூடா, மூடா, நீயும் நானும் யார்? வெறும் மனிதர்கள். இக்குடியில் பிறந்தமையால் மட்டுமே சொல்லிலும் நினைவிலும் வாழப்போகும் பதர்கள்… அவனோ காலங்களைக் கடந்து காலடி எடுத்துவைத்து நடந்துசெல்லும் பேரறத்தான்… அவன் என் மைந்தன் என்பதற்கு அப்பால் நான் எதை விழைய முடியும்! தெய்வங்களே, விண்நிறைந்த மூதாதையரே, என்னை வாழ்த்தினீர்கள். என் மேல் பேரருள் சொரிந்தீர்க்ள்!”

விதுரர் பார்வையை சாளரம் நோக்கி திருப்பிக்கொண்டார். கண்ணீரில் ஒளிமிக்க சதுரம் மங்கலடைந்தது. உடனே உணர்வு மாறி திருதராஷ்டிரர் சிரித்தார். ”மூடன், சிறுமூடன். என்னை வேழம் என்கிறான். ஹஸ்தி என்கிறான். விதுரா, நீ அறியமாட்டாயா என்ன? இவன் குலமுறைமை அறிந்த யயாதி. நீதியறிந்த புரு. அவர்கள் ஒரு பெரும் தொடர். இப்பேரறத்தார் நடந்துசெல்லும் பாதையை செப்பனிடும்பொருட்டே அறிவற்ற நாங்கள் பெரியபாதங்களுடன் வேழவடிவம் கொண்டிருக்கிறோம்…”

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

விதுரர் பெருமூச்சுகள் வழியாக தன்னை எடையிழக்கச் செய்தார். திருதராஷ்டிரர் எழுந்து இரு கைகளையும் விரித்தபடி சொன்னார் “விதுரா. நீ இன்றே புறப்படு. காம்பில்யத்திற்குச் சென்று ஐவரையும் அள்ளி நெஞ்சோடு சேர்த்துக்கொள். என் தோள்வல்லமை முழுக்க உன் கைகளுக்கு வரட்டும். அவர்களை இறுக்கிக்கொள்… அவர்களிடம் சொல், என் நாடும் கோலும் முடியும் அவர்களுக்குரியவை என்று.”

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்