பிரயாகை - 59

பகுதி பதின்மூன்று : இனியன் – 1

இடும்பவனத்தின் எல்லைக்கு அப்பால் இருந்த சாலிஹோத்ரசரஸின் கரையில் பின்னிரவில் தனிமையாக பீமன் நின்றிருந்தான். கொதிக்கும் சமையற்பெருங்கலம் போன்ற சிறிய குளம் அது. அடியில் இருந்த வற்றாத ஊற்று மண்ணுக்குள் சென்றுகொண்டிருந்த ஆழ்நதி ஒன்றின் வாய். அதிலிருந்து கொப்பளித்தெழுந்த நீர் மண்ணுக்குள் வாழும் நெருப்பில் சூடாகி மேலெழுந்து ஆவி பறக்க தளதளத்துக்கொண்டிருந்தது. வெண்ணிறமான களிமண்ணால் ஆன வட்டவடிவக் கரைக்கு அப்பால் உயரமற்ற புதர்மரங்கள் கிளைதழைத்து நின்றிருந்தன.

மிக அப்பால் சாலிஹோத்ரர்களின் தெய்வவடிவமான ஒற்றை ஆலமரம் ஒரு சிறுகாடு போல விழுதுகள் பரப்பி நின்றிருந்தது. அதற்குள் அவர்களின் தெய்வமான ஹயக்ரீவரின் சிறிய ஆலயம் இருந்தது. அதன்மேல் விழுதுகள் விழுந்து கவ்வியிருக்க ஆலமரம் கையில் வைத்திருக்கும் விளையாட்டுப்பொருள் போலிருந்தது ஆலயம். அப்பால் சாலிஹோத்ரர்களின் குடில்கள் பனிபடர்ந்த புல்வெளியின் நடுவே தெரிந்தன.

அந்தக்காலையில் நூற்றுக்கணக்கான காட்டுக்குதிரைகள் அங்கே வால் சுழற்றியும் பிடரி மயிர் சிலுப்பி திரும்பி விலாவில் மொய்த்த பூச்சிகளை விலக்கியும் குளம்புகளை எடுத்து வைத்து மேய்ந்துகொண்டிருந்தன. வெண்குதிரைகள் சிலவே இருந்தன. பெரும்பாலானவை வைக்கோல் நிறமானவை. குட்டிகள் அன்னையருக்கு நடுவே நின்று மேய்ந்துகொண்டிருந்தன. சாலிஹோத்ரர்களின் பெரும்புல்வெளியில் புலிகள் வருவதில்லை. ஆகவே குதிரைகள் நடுவே கூட்டம்கூட்டமாக மான்களும் நின்றுகொண்டிருந்தன.

பீமன் கைகளை கட்டிக்கொண்டு வானில் தெரிந்த துருவனை நோக்கி நின்றிருந்தான். ஒவ்வொரு முறை நோக்கும்போதும் துருவனின் பெருந்தனிமை அவன் நெஞ்சுக்குள் நிறைந்து அச்சமூட்டும். விழிகளை விலக்க எண்ணியபடி விலக்க முடியாமல் நோக்கிக்கொண்டு நிற்பான். அப்போது ஒழுகிச்செல்லும் எண்ணங்களுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை, இருந்துகொண்டிருக்கிறேன் என்பதைத் தவிர. விண்மீன்களை குதிரைகளும் காட்டெருமைகளுமெல்லாம் நோக்குகின்றன. அவை என்ன எண்ணிக்கொள்ளும்? இருக்கிறேன், இங்கிருக்கிறேன் என்றல்லாமல்?

விழிவிலக்கி பெருமூச்செறிந்தபோது விடிவெள்ளி எழுந்து வருவதைக் கண்டான். அது சற்று முன் அங்கிருக்கவில்லை. ஆனால் அவன் காலத்தை உணராமல்தான் நின்றிருந்தான். அது எவரோ ஏற்றும் சிறிய கொடிபோல எழுந்து வந்தது. அசைவது தெரியாமல் மேலேறிக்கொண்டிருந்தது. கரிச்சான் ஒன்று தொலைவில் காட்டுக்குள் ஒலியெழுப்பியது. இன்னொரு கரிச்சானின் எதிர்க்குரல் எழுந்தது. பதறியதுபோல கூவியபடி ஒரு பறவை சிறகடித்து புல்வெளியை தாழ்வாக கடந்துசென்றது.

அவன் நடந்து காட்டின் விளிம்பை நோக்கிச் சென்றான். இருளுக்குள் இருந்து காடு மெல்ல எழுந்து வருவதை நோக்கிக் கொண்டு நின்றான். சாலிஹோத்ர குருகுலத்தின் குடில்களில் ஒன்றில் இருந்து சங்கொலி எழுந்தது. அதன்பின் ஒவ்வொரு குடிலாக செவ்விழிகளை விழித்து எழுந்தன. குடில்களின் கூரைகளிலுள்ள இடைவெளிகள் வழியாக விளக்கொளியின் செவ்வொளிச் சட்டகங்கள் பீரிட்டு வானிலெழுந்து கிளைவிரித்தன. அசைவுகளும் பேச்சொலிகளும் எழுந்ததும் குதிரைகள் நிமிர்ந்து குடில்களை நோக்கின. அன்னைக்குதிரை ஒன்று மெல்ல கனைத்ததும் அவை இணைந்து கூட்டமாக ஆகி சீரான காலடிகளுடன் விலகிச் சென்றன.

குடில்களில் இருந்து கைவிளக்குகளுடன் சாலிஹோத்ரரின் மாணவர்கள் வெளியே சென்றனர். அவர்கள் வெந்நீர்க்குளம் நோக்கிச் சென்று நீராடி மீண்டு மையமாக இருந்த வேள்விச்சாலையில் குழுமுவதை காணமுடிந்தது. அரணிக்கட்டைகளை கடைவதை பீமன் கற்பனையில் கண்டான். நெய்யும் சமித்துகளுமாக மாணவர்கள் அமர்கிறார்கள். அவர்களுடன் தருமனும் இருப்பான். சால்வையால் உடல் மூடி கையில் தர்ப்பையுடன் சற்று விலகி அனைத்தையும் நோக்கிக்கொண்டிருப்பான். அவன் உதடுகளில் மந்திரங்கள் அசைந்துகொண்டிருக்கும்.

வேள்விநெருப்பு எழுந்துவிட்டதை மேலெழுந்த புகை சொன்னது. புகையை காணமுடிந்தபோதுதான் புல்வெளிமேல் வெளிச்சம் பரவியிருப்பதை பீமன் உணர்ந்தான். கீழ்வானில் இருள் விலகி கிழக்கே செந்நிறம் படரத்தொடங்கியிருந்தது என்றாலும் காடு நன்றாக இருண்டு இலைகளிலிருந்து நீர்சொட்டும் ஒலியுடன் அமைதியாக இருந்தது. நீண்டதூரத்துக்கு அப்பால் கருங்குரங்கு ஒன்று நாய்க்குரைப்பு போல ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. காட்டுக்குள் இருந்து ஒளிவிடும் பாம்பு போல ஓசையில்லாமல் வெளிவந்த சிற்றோடை புற்களுக்குள்ளேயே நெளிந்தோடி பாறை இடுக்கு ஒன்றில் பத்தி விரித்து எழுந்து சரிந்தது.

பீமன் இடையில் கையை வைத்துக்கொண்டு காத்து நின்றான். காற்று ஒன்று நீர்த்துளிகளை பொழியச்செய்தபடி காடு வழியாக கடந்துசென்றது. சிலபறவைகள் எழுந்து இலைகளில் சிறகுரச காட்டுக்குள்ளேயே சுழன்றன. நெடுந்தொலைவில் கருங்குரங்கு “மனிதன், தெரிந்தவன்” என்றது. அதற்கும் அப்பால் நெடுந்தொலைவில் இன்னொரு குரங்கு “நம்மவனா?” என்றது. “ஆம்” என்றது முதல் காவல்குரங்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் முதுஇடும்பரின் சொல்லை சான்றாக்கி இடும்பியை மணமுடித்தான். பெருங்கற்களாக நின்றிருந்த மூதாதையரின் நடுவே சிறுகல் ஒன்றை நட்டு அதற்கு ஊனுணவைப் படைத்து மும்முறை குனிந்து வணங்கினான். நெஞ்சில் அறைந்து போர்க்குரலெழுப்பி எதிர்ப்பு ஏதேனும் இருக்கிறதா என்று வினவினான். எவரும் எதிர்க்காதபோது அவளைத் தூக்கி தன் தோளில் எடுத்துக்கொண்டு அவர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த தொங்கும் குடில் நோக்கி ஓடினான். சூழ்ந்து நின்றிருந்த இடும்பர்கள் கைதூக்கி கூச்சலிட்டு நகைத்தனர்.

அந்த மணநிகழ்வில் குந்தியும் பிற பாண்டவர்களும் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இடும்பர்களின் குடிநிகழ்வுக்குள் இடமில்லை என்று முதுஇடும்பர் குழு சொல்லிவிட்டது. இடும்பன் இறந்த ஏழாவது நாள் அவனுக்காக அங்கே குன்றின்மேல் ஒரு பெருங்கல் நாட்டப்பட்டது. அவர்களின் குடிமூத்தவர்கள் மூதாதைக்கற்களின் குன்றின் மேலேயே அப்பெருங்கற்களின் அருகே புல்லடர்ந்த தரையை கூர்ந்து நோக்கியபடி நடந்தனர். பின்னர் சிறிய ஆழமான குழிகளைத் தோண்டி அங்கே மரங்களின் வேர்கள் சென்றிருக்கும் வழியை தேர்ந்தனர். அதன்பின்னர் ஓர் இடத்தைத் தெரிவு செய்து பெரிய வட்டமாக அடையாளம் செய்தபின் தோண்டத் தொடங்கினர்.

பத்துவாரை நீளமும் நான்கு வாரை அகலமுமாக சிறிய குளம்போல வெட்டி மண்ணை அள்ளிக் குவித்தனர். அவர்கள் தோண்டுவதை அக்கற்கள் விழிவிரித்து நோக்கி நிற்பதுபோலத் தோன்றியது. ஒரு ஆள் ஆழம் தோண்டியதுமே அடிப்பாறை வரத்தொடங்கியது மண்ணை அகற்றி பாறையை அடையாளம் கண்டதும் அதன் பொருக்குகளின் இடைவெளியில் உலர்ந்த மரக்கட்டைகளை அடித்து இறுக்கியபின் நீர்விட்டு அதை ஊறச்செய்தனர். மரக்கட்டை ஊறி உப்பி பாறையை உடைத்து விரிசலிடச் செய்தது. நான்குபக்கமும் அப்படி விரிசலை உருவாக்கி நீள்வட்டமாக அவ்விரிசலை ஆக்கியபின் மேலே சுள்ளிகளை அடுக்கி தீப்பற்றச் செய்தனர். பாறை சுட்டுக் கனன்றதும் அனைவரும் சேர்ந்து மரப்பீப்பாய்களில் அள்ளிவந்த நீரை ஒரேசமயம் அதன் மேல் ஊற்றினர்.

குளிர்ந்ததும் பாறை மணியோசை எழுப்பி விரிசலிட்டு உடைந்தது. மூத்த இடும்பர் இறங்கி நோக்கி தலையசைத்ததும் கூடி நின்றவர்கள் உரக்கக் குரலெழுப்பி கொண்டாடினர். அடிப்பாறையில் இருந்து பட்டை உரிந்ததுபோல சூடாகிக் குளிர்ந்த பாறை உடைந்து பிரிந்து நின்றது. அதன் இடைவெளியில் ஆப்புகளை இறக்கி அறைந்து எழுப்பி அதன் வழியாக கனத்த கொடிப்பின்னல் வடங்களைச் செருகிக் கட்டி அத்தனை பேரும் சேர்ந்து இழுத்து தூக்கினர். பாறை சற்று அசைந்து மேலேறியதும் மேலே அள்ளிப்போடப்பட்ட மண்ணைத் தள்ளி குழியை அந்த அளவு வரை நிரப்பினர். அந்த மண்மேல் பாறைப்பட்டையை வைத்து சற்று இளைப்பாறியபின் மீண்டும் தூக்கி மண்ணிட்டனர்.

குழி நிரம்பியபோது எட்டு ஆள் உயரமும் விரித்த கையளவு அகலமும் முழங்காலளவு தடிமனும் உள்ள பெரும் பாறைக்கல் மேலே வந்து கிடந்தது. அதன் ஒரு முனையைத் தூக்கி அதன் அடியில் கனத்த உருளைத்தடிகளை வைத்து வடங்களைப்பற்றி இழுத்து தள்ளிக்கொண்டு சென்றனர். பீமன் அதில் கலந்துகொள்வது ஏற்கப்படவில்லை. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாகச் சேர்ந்து ஒரே குரலில் மந்திரம்போல தொன்மையான மொழி ஒன்றில் ஒலி எழுப்பியபடி அதை தள்ளிக்கொண்டு மூதாதைக்கற்களின் அருகே சென்றனர். அங்கே நான்கு ஆள் ஆழத்திற்கு செங்குத்தான குழி ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்தது.

அக்குழிக்குள் ஒரு காட்டுப்பன்றி விடப்பட்டிருந்தது. முதுஇடும்பர் சிறு கைவிளக்கைக் கொளுத்தி அந்தக் குழிக்குள் போட்டார். அனைவரும் கைதூக்கி மெல்ல ஆடியபடி ஒரே குரலில் மந்திரத்தைச் சொல்ல அந்தக்கல்லை எட்டு பெரிய வடங்களில் எட்டு திசை நோக்கி இழுத்தனர். கல் எடையிழந்தது போல எளிதாக எழுந்தது. மூத்த இடும்பர் அதை மெல்லத்தொட்டு இழுத்து அக்குழிக்குள் வைத்தார். அவர்கள் அதை அக்குழிக்குள் இறக்க உள்ளே இருந்த பன்றியை நசுக்கி குருதியை உண்டபடி கல் உள்ளே இறங்கி அமைந்தது.

பாதிப்பங்கு மண்ணுக்குள் சென்று நின்றபோது அக்கல் அங்கிருந்த பிற மூதாதைக்கற்களில் ஒன்றாக ஆகியது. அதற்கு உயிரும் பார்வையும் வந்ததுபோலிருந்தது. அதைச்சுற்றி குழியில் கற்களைப்போட்டு பெரிய மரத்தடிகளால் குத்தி இறுக்கிக்கொண்டே இருந்தனர். நெடுநேரம் அக்கற்கள் அதற்குள் இறங்கிக்கொண்டிருந்தன. அதுவரை அங்கிருந்தவர்கள் அந்தப்பாடலால் மயக்குண்டு அசைந்தாடிக்கொண்டிருந்தனர். கற்கள் நடுவே சேறு கரைத்து ஊற்றப்பட்டது. கற்கள் நன்றாக இறுகியதும் முது இடும்பர் அதைத் தொட்டு நெஞ்சில் வைத்துக்கொண்டு மெல்லிய ஓலமொன்றை எழுப்பினார். அனைவரும் அந்த ஓலத்தை ஏற்று முழங்கினர்.

மூதாதைக்கல்லுக்கு சுடவைத்த முழுப்பன்றி படைக்கப்பட்டது. கிழங்குகளும் காய்களும் கனிகளும் தேனடைகளும் தனியாக விளம்பப் பட்டன. முது இடும்பர் அந்தப் படையலுணவின் மேல் தன் கையை நீட்டி மணிக்கட்டின் நரம்பை மெல்லிய சிப்பியால் வெட்டினார். சொட்டிய குருதியை அதன்மேல் சொட்டிவிட்டு ஒரு துளியை எடுத்து மூதாதைக்கல் மேல் வைத்தார். அதன்பின் அத்தனை இடும்பர்களும் வந்து தங்கள் கைவிரலை வெட்டி துளிக்குருதி வரவழைத்து அந்த உணவில் சொட்டியபின் மூதாதைக்கல்லின் மேல் அதைப் பூசினர்.

முதுஇடும்பரின் கால்களில் இருந்து மெல்லிய நடுக்கம் ஏறி அவர் உடலை அடைந்தது. அவரது முழங்கால் அதிர மெல்லமெல்ல தாடையும் தோள்களும் வலிப்பு வந்தவைபோல துடித்தன. “ஏஏஏஏ” என்று அவர் ஓலமிட்டார். இருகைகளையும் விரித்தபடி கூவியபடியே அந்தப் பெருங்கற்களைச் சுற்றி ஓடினார். அவரிடம் ஒரு கோலை ஒருவன் கொடுத்தான். அதைச்சுழற்றியபடி அவர் துள்ளிக்குதித்தார். ஒரு கணத்தில் கோலின் நுனி மட்டும் அவ்வப்போது தரையை வந்து தொட்டுச்செல்ல கோல்சுழலும் வட்டம் ஒரு பெரிய பளிங்குக்கோளம் போல காற்றில் நின்றது. அதனுள் முதுஇடும்பர் நின்றிருப்பதாக விழித்தோற்றம் எழுந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

விரைவின் ஒரு கட்டத்தில் கோல் சிதறி தெறித்துச் செல்ல அவர் வானிலிருந்து விழுபவர் போல மண்ணில் விழுந்தார். அவரது வாயில் இருந்து எச்சில் வெண்கோழையாக வழிந்தது. கழுத்துநரம்புகள் அதிர்ந்தபடியே இருந்தன. கையால் தரையை ஓங்கி அறைந்தபடி அவர் குழறிய குரலில் பேசத்தொடங்கினார். அதைக்கேட்டு பீமன் அஞ்சி பின்னடைந்தான். அது இறந்த இடும்பனின் அதேகுரலாக ஒலித்தது.

குரலாக எழுந்த இடும்பன் பீமனை இடும்பர் குடிக்குள் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவித்தான். அவன் இடும்பியை மணந்து பெறும் மைந்தர்கள் இடும்பர்களாக இருக்கலாம். அவனை அவர்களின் காடும் குருதியும் ஏற்க மண் நிறைந்த மூதாதையர் ஒப்பவில்லை. ஆகவே அவன் இடும்பவனத்துக்குள் பகலில் வந்துசெல்லலாம், இரவில் தங்கக்கூடாது. பிறர் இடும்பவனத்திற்குள் வரவே கூடாது. இடும்பி அன்றி பிற இடும்பர்களை பார்க்கவும் கூடாது. “குலம் நிறம் மாறலாகாது. காட்டுக்குள் சூரியன் இறங்கலாகாது. ஆணை ஆணை ஆணை” என்று சொல்லி அவன் மீண்டான்.

முது இடும்பரின் நெஞ்சு ஏறி இறங்கியது. தலையை அசைத்துக்கொண்டே இருந்தவர் விழித்து செவ்விழிகளால் நோக்கி தன் முதிய குரலில் “நீர்” என்றார். ஒருவன் குடுவை நிறைய நீரைக்கொண்டுவந்து கொடுக்க எழுந்து அமர்ந்து அதை வாங்கி மடமடவென்று குடித்து மூச்சிரைத்தார். உடலெங்கும் வழிந்த நீருடன் கைகளை ஊன்றி கண்மூடி அமர்ந்திருந்தார்.

இன்னொரு முதுஇடும்பர் கைகாட்ட அனைவரும் வந்து படையலுணவை அள்ளி உண்ணத் தொடங்கினர். அன்னையர் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டியபின் தாங்கள் உண்டனர். இடும்பி பன்றி ஊனை கிழங்குடன் சேர்த்து கொண்டுவந்து பீமனுக்கு அளித்தாள். அவன் உண்டதும் அவள் முகம் மலர்ந்து “தமையன் உங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றாள். “ஆம்” என்று பீமன் சொன்னான். “அவரை நான் கொன்றிருக்கலாகாது.” இடும்பி “ஏன்? அவர் மண்ணுக்கு அடியில் மகிழ்வுடன் அல்லவா இருக்கிறார்? இதோ மண்ணுக்குமேல் அவரது கை எழுந்து நிற்கிறது. அந்த மலைகள் உடைந்து தூளாகிப் போகும் காலம் வரை அவர் இங்கே நிற்பார்” என்றாள். பீமன் தலையசைத்தான்.

ஏழுநாட்களும் பாண்டவர்களும் குந்தியும் இடும்பவனத்தின் அருகே ஒரு பாறைக்குமேல் சிறுகுடில் கட்டி வாழ்ந்தனர். அவர்களை வெளியேறும்படி குடி ஆணையிட்டதும் விடிகாலையிலேயே அவர்கள் இருந்த குடில் எரியூட்டப்பட்டது. அவர்கள் மேல் சாம்பலைத் தூவி அனுப்பிவைத்தனர். இடும்பி குந்தியையும் பாண்டவர்களையும் காடுவழியாக அழைத்துச்சென்று இடும்பவனத்துக்கு அப்பால் மறுபக்கம் விரிந்த புல்வெளியின் நடுவே இருந்த சாலிஹோத்ரரின் தவக்குடிலை சுட்டிக்காட்டினாள். “அவர் மாயங்கள் அறிந்தவர். அரக்கர்கள் அவரை அஞ்சுகிறார்கள். ஆகவே எவரும் அங்கே செல்வதில்லை” என்றாள்.

அங்கே பறந்த கொடியைக் கண்ட குந்தி “அது சாலிஹோத்ர குருகுலம் என தோன்றுகிறது. சாலமரத்தின் இலை கொடியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அங்கே எங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும்” என்றாள். தருமன் திரும்பி நோக்க “வாரணவதம் வரும்போதே இங்குள்ள அனைத்து குருகுலங்களைப்பற்றியும் தெரிந்துகொண்டேன். கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர் இங்குள்ள சாலிஹோத்ரசரஸ் என்ற ஊற்றின்கரையில் ஹயக்ரீவரை தவம்செய்ததாக அவரது நூலில் எழுதியிருக்கிறார்” என்றாள்.

அவர்கள் புல்வெளியில் நடந்து மாலையில் சென்று சேர்ந்தனர். அவர்கள் வருவதை உயர்ந்த மரத்தின் உச்சியில் இருந்து நோக்கிய சாலிஹோத்ரரின் மாணவன் ஒருவன் ஒலியெழுப்ப கைகளில் வில்லம்புகளுடன் நான்கு மாணவர்கள் வந்து விரிந்து நின்றனர். ஒரு முதியமாணவன் அருகே வந்து அவர்களிடம் “நீங்கள் யார்?” என்றான். “ஷத்ரியர்களான நாங்கள் நாடோடிகள். சாலிஹோத்ர ரிஷியை சந்திக்க விழைகிறோம்” என்றான் தருமன். “அவள் இங்கே வரக்கூடாது. புல்வெளிக்கு வரும் அரக்கர்களை நாங்கள் அக்கணமே கொல்வோம்” என்றான் மாணவன். பீமன் இடும்பியிடம் காட்டுக்குள் செல்ல கைகாட்டினான்.

அவர்களை அருகே வந்து நோக்கியபின் அவன் குடில்களை நோக்கி அழைத்துச் சென்றான். மரப்பட்டை கூரையிடப்பட்ட பெரிய மையக்குடிலுக்குள் சாலிஹோத்ரர் கணப்பருகே அமர்ந்திருந்தார். கனத்த மயிரடர்ந்த காட்டுமாட்டின் தோல் விரிக்கப்பட்ட குடிலின் கூரையும் சுவர்களும் கூட மயிர்செறிந்த தோலால் ஆனதாக இருந்தன. குந்தியையும் பாண்டவர்களையும் கண்டதுமே சாலிஹோத்ரர் “அஸ்தினபுரியின் அரசியையும் மைந்தரையும் வரவேற்கிறேன்” என்றார். தருமன் “தாங்கள் எங்களை அறிந்தமை மகிழ்வளிக்கிறது உத்தமரே. ஆனால் நாங்கள் ஒளிந்து வாழவே இக்காட்டுக்குள் வந்தோம்” என்றான்.

“ஆம், கங்கையின் மறுபக்கம் நிகழ்பவை பறவைகள் வழியாக எனக்கு வந்து சேரும். அரக்கு மாளிகை எரிந்ததை அறிந்தேன். இடும்பர்கள் ஐந்து இளைஞர்களையும் அன்னையையும் பிடித்துச்செல்கிறார்கள் என்று மாணவர்கள் சொன்னதும் அது நீங்களே என உணர்ந்தேன்.” தருமனின் நெஞ்சில் ஓடிய எண்ணத்தை வாசித்து “எங்களால் எந்த உதவியும் செய்யமுடியாது. இடும்பவனத்துள் நுழையும் கலை எங்களுக்குத் தெரியாது. இடும்பர்களால் புல்வெளியில் வந்து போரிட முடியாது. ஆகவே நாங்கள் இங்கே வாழ்கிறோம். எங்கள் எல்லை என்பது காட்டின் விளிம்புதான்” என்றார்.

குந்தி “நாங்கள் சிலநாட்கள் இங்கு வாழ விழைகிறோம் முனிவரே” என்றாள். “நலம் திகழட்டும். ஒரு குடிலை உங்களுக்கு அளிக்கிறேன். இங்கு நீங்கள் இருப்பதை எவரும் அறியப்போவதில்லை. இங்கே சூழ்ந்திருப்பது அடர்காடு. நாங்கள் தலைமுறைக்கு ஒருமுறை ஒரே ஒரு மாணவனை மட்டும் பிற குருகுலங்களுக்கு அனுப்புகிறோம். கல்வியாலும் தவத்தாலும் நாங்கள் இங்கே அடைந்தவற்றை அவன் மானுடகுலத்துக்கு அளிப்பான்…” என்றார் சாலிஹோத்ரர். “கங்கைக்கு மறுகரையில் இருக்கும் ரிஷபபுரி சந்தைக்கு மட்டுமே எங்கள் மாணவர்கள் செல்வார்கள்.”

அவர்கள் அங்கே தங்கினார்கள். தருமன் அவனுக்குப் பிடித்தமான வாழ்க்கைக்குள் நுழைந்த நிறைவை அடைந்தான். சாலிஹோத்ர குருமரபின் தொன்மையான தர்க்கநூலான தண்டவிதண்ட பிரபோதினியை அவனுக்கு சாலிஹோத்ரர் ஒவ்வொரு நாளும் வகுப்பெடுக்கத் தொடங்கினார். காலையில் அக்னிகாரியம் முடிந்ததும் ஆசிரியரிடம் நூல்கேள்வி அதன்பின் ஸ்வாத்யாயம் அதன்பின் தனிமையில் மனனம் என்று அவன் நாட்கள் சென்றன. குந்தி சாலிஹோத்ரரின் மாணவர்களை தன் ஒற்றர்களாக்கி கங்கைக்கு அப்பால் அனுப்பி செய்திகளை பெறத் தொடங்கினாள்.

அனைவரையும்விட சாலிஹோத்ரரின் குருகுலம் நகுலனைத்தான் முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது. இருநூறுகாதம் விரிந்திருந்த அப்பெரும்புல்வெளி அஸ்வபதம் என்றே அழைக்கப்பட்டது. புல்வெளியிலும் அப்பாலிருந்த அரைச்சதுப்பிலும் நூற்றுக்கணக்கான காட்டுக் குதிரைக்கூட்டங்கள் இருந்தன. அந்தக்குதிரைகளை பிடித்துப் பழக்கும் கலை பயின்ற வேடர்கள் அங்கே வந்து தங்கிச்செல்லும் வழக்கமிருந்தது. அங்கே வந்து தங்கிய முனிவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான உரையாடல் வழியாக உருவானதே சாலிஹோத்ர குருமரபு.

வருடத்திற்கு ஒருமுறை இளம்குதிரைகளைப் பிடித்து பயிற்றுவித்து கங்கைக்கு அப்பால் கொண்டு சென்று விற்பது சாலிஹோத்ரர்களின் குருகுலத்தின் நிதிமுறைமையாக இருந்தது. அந்த செல்வத்தால் வருடம் முழுவதற்கும் தேவையான துணிகள், உணவுப்பொருட்கள் போன்ற அனைத்தையும் அவர்கள் வாங்கிக்கொண்டனர். வேள்விக்குரிய நெய்யும் பிறவும் புல்வெளிகளில் அவர்கள் வளர்த்த பசுக்களில் இருந்து கிடைத்தன. அவர்கள் பழக்கிய குதிரைகள் சிந்திக்கத் தெரிந்தவை என்ற புகழ் இருந்தது. பேரரசர்களின் பட்டத்துப்புரவிகள் சாலிஹோத்ர முத்திரை கொண்டவையாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை கங்காபதத்தில் நிலவியது.

குதிரைகள் வழியாகவே மண்ணையும் விண்ணையும் அறிந்து வகுத்துக்கொண்டனர் சாலிஹோத்ரர்கள். குதிரையின் கால்களில் காற்றும் பிடரியில் நெருப்பும் தொடைகளில் நிலமும் விழிகளில் வானும் வாலில் நீரும் குடிகொள்வதாக அவர்கள் வகுத்தனர். அவர்களின் தத்துவச் சொற்களெல்லாம் குதிரைகளை குறித்தவையாக இருந்தன. நகுலன் அவர்களின் குதிரையியலில் முழுமையாக உள்ளமிழந்தான். விழித்திருக்கும் நேரமெல்லாம் குதிரைகளை நோக்கியபடி, குதிரைகளைப் பயிற்றுவிக்கும் அஸ்வகிரந்திகர்களுடன் இருந்தான். அவன் பேச்சில் குதிரைகளன்றி பிற திகழாமலாயின.

அர்ஜுனன் புன்னகையுடன் “நகுலன் அவன் தெய்வத்தை கண்டுகொண்டுவிட்டான் மூத்தவரே” என்றான். “ஆம், அஸ்வினிதேவர்கள் அவனை பிறப்பித்ததற்கான காரணம் முழுமையடைகிறது” என்றான் பீமன். “சிறிய துளைவழியாகப் பார்த்தால் மட்டுமே காட்சியளிக்குமளவுக்கு பேருருக்கொண்டது இப்புடவி” என்றான் தருமன். “குதிரையின் வாலைப்பிடித்துக்கொண்டு விண்ணகம் புகமுடியும் என்கின்றன நூல்கள். அந்தப் பேறு அவனுக்கு கிடைக்கட்டும்.”

ஒவ்வொரு நாளும் இரவில் சாலிஹோத்ரரின் குடிலுக்குத் திரும்பி காலையில் காட்டுக்குள் நுழைந்து இடும்பியுடன் வாழ்ந்துகொண்டிருந்தான் பீமன். அவனுக்கும் இடும்பிக்குமாக கட்டப்பட்ட தொங்கும் குடிலில் இரவில் அவள் மட்டுமே இருந்தாள். அவன் அணிந்த தோலாடை ஒன்றை அவனாக எண்ணி தன்னருகே வைத்துக்கொண்டு அதை முகர்ந்து அவனை அருகே வரவழைத்து கண்மூடித் துயின்றாள். காலையில் எழுந்ததுமே காட்டினூடாக விரைந்து புல்வெளி விளிம்பில் நின்று அவனை கூவியழைத்தாள்.

இடும்பிக்கு காட்டில் தெரியாத ஏதுமிருக்கவில்லை என்று பீமன் உணர்ந்தான். அவள் தோளிலேறி காட்டுக்குள் பறந்து அலையத் தொடங்கியபின் ஒட்டுமொத்தமான ஒரு பெருவியப்பாக இருந்த காடு மெல்ல தனித்தனியாகப்பிரிந்தது. மரங்களும் செடிகளும் கொடிகளும் புல்லும் காளான்களும் பெயரும் அடையாளங்களும் கொண்டன. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என விரிந்தது உயிர்க்குலம்.

ஓரிரு மாதங்களில் ஒவ்வொரு வகை பறவையின் குரலையும் தனித்தனியாக கேட்கமுடிந்தது. பின்னர் ஒவ்வொரு பறவையையும் அறியமுடிந்தது. ஒவ்வொரு விலங்கின் கண்களையும் நோக்கமுடிந்தது. அனைத்துக்கும் அவன் பெயரிட்டான். எங்கு எப்பறவை எவ்வேளையில் இருக்கும் என்று அவனுக்கு தெரியவந்தது. சிறுகூட்டுக்குள் இருந்த முட்டையின் மேல் விழுந்திருந்த கோலத்தைக் கொண்டே அது எந்தப்பறவையின் முட்டை என்று அறியலானான். இரண்டு வருடங்களில் காடு என்பது முழுமையாகவே கண்முன் இருந்து மறைந்து போயிற்று. அது உயிர்க்குலங்களாக ஆகியது.

மேலும் இரண்டுவருடங்களில் ஒவ்வொரு உயிரும் இன்னொன்றுடன் இணைவதை அறியலானான். காட்டெருதும் சிட்டுக்குருவியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஓருயிராகத் தெரிந்தன. கருடனும் நாகமும் ஒன்றாயின. ஒரு கணத்தில் யானையும் எலியும் ஒன்றே என அவன் உணர்ந்தபோது பெரும் அகவிம்மலுடன் காடு என்பது ஓருயிரே என்று அறிந்தான். அதன்பின் அவன் முன் காடு எனும் செடி நின்றிருந்தது. காடு எனும் விலங்கு அவனுடன் பேசியது. காடு எனும் அகம் அவனை அறிந்துகொண்டது.

அவனால் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது அந்த மூதாதைக்குன்றின்மேல் நின்றிருந்த பெருங்கற்கள்தான். அவற்றைப்பற்றி அவர்களுக்கும் ஏதும் தெரிந்திருக்கவில்லை. “ பேச்சு வழியாக நாம் மூதாதையரை அடைய முடியாது. அவர்கள் நம்மிடம் பேசவேண்டுமென்றால் நம்மை நாடிவருவார்கள். நம் கனவில் அவர்கள் நிகழ்வார்கள்” என்றாள் இடும்பி. “அவை விழியுள்ள கற்கள்.” அக்கற்களின் அருகே நின்று ஏறிட்டுப் பார்க்கையில்தான் அவ்விடத்துக்கு தான் முற்றிலும் அயலவன் என்று உணர்வான். அவை அவனை நோக்கி விழிதிறக்கவேயில்லை.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்