பன்னிரு படைக்களம் - 89

பகுதி பன்னிரண்டு : பங்குனி

இருளோரும் ஒளியரும் இழுத்த நச்சுவடத்தின் நடுவே சுழன்ற திகிரி நுரைத்து நுரைத்துத் தயங்க எழுந்தது முதல் அமுதத்துளி. அதன் நேர்கீழே விரிந்திருந்தது பன்னிரு படைக்களம். நிறைந்து கவிந்தது கலம். இமையாவிழிகள் கனிந்து திறந்திருந்தது அன்னைப்பெருமீன். அதிலெழுந்தனர் ஐந்து அன்னையர். துர்க்கையும் லட்சுமியும் சரஸ்வதியும் சாவித்ரியும் ராதையும் இதழ்களில் மென்நகை ஒளிவிட அஞ்சலும் அருளலும் காட்டி நின்றனர்.

ஒழியா ஊற்றின் விழிதிறந்து வந்து நிறைத்தபடியே இருந்தனர். கங்கை, துளசி, மானசை, தேவசேனை, மங்களசண்டிகை, பூமி, ஸ்வாகை, தட்சிணை, தீக்‌ஷை, ஸ்வாதை, ஸ்வஸ்தி, புஷ்டி, துஷ்டி, ஸம்பத்தி, திருதி, ஸதி, யோதேவி, பிரதிஷ்டை, ஸித்தை, கீர்த்தி, கிரியை, மித்யை, சாந்தி, லஜ்ஜை, புத்தி,  மேதா, திருதி, மூர்த்தி, ஸ்ரீ, நித்ரை, ராத்ரி, சந்த்யை, திவா, ஜடரை, ஆகுலை, பிரபை, தாஹிகை, ஜரை, ருத்ரி, ப்ரீதி, சிரத்தா,  பக்தி என ஒன்றிலிருந்து நூறென ஆயிரமென பல்லாயிரமென கோடியென முடிவிலியென பெருகினர்.

பன்னிரு படைக்களத்தில் களம்தோறும் நின்றிருந்தனர் தெய்வங்கள். மூதேவர். முப்பத்துமுக்கோடியர். முனிவர். மூதாதையர். ஒன்றென நின்றனர். இரண்டாகிப் பிரிந்து இணைந்தாடினர். இருள்கள் ஒளிகள். சொற்கள் பொருள்கள். இன்மைகள் இருப்புகள். மையங்கள் முடிவிலிகள். இரண்டிலியென்றானாள். இருளொளி. இங்கங்கு. இவளவள். இன்மையிருப்பு.

பன்னிரு ஆதித்யர்கள் எழுந்த பெருங்களம். ஆடும் காளையும் இணையும் நண்டும் சிம்மமும் கன்னியும் துலாவும் தேளும் வில்லும் மீனும் கலமும் விழிமீனும் நிரந்த வெளி. அத்தனை அசுரர்களும் அரக்கர்களும் படைக்கலமேந்தி களம்நின்றனர். தெய்வங்கள் களம் வந்தன.நடுவே நின்றிருந்தாள். தன்னைத்தான் சூழ்ந்திருந்தாள். தன்னை வென்றாள். தன்னைக் கடந்தாள். தான் மட்டுமே இருந்தாள்.

“ஐந்தென எழுந்தவள் வாழ்க! அன்னை எழுந்த களம் வாழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” இந்திரப்பிரஸ்தத்தின் கொற்றவைக் கோயில் முன் வெறியாட்டெழுந்து கூவினான் பூசகன். “குன்றா ஒளியே. குறையா கதிரே. இருண்டவளே. கதிராயிரம் மூழ்கும் கசடே. அன்னையே. அணைக! அணைக! இங்கணைக தேவி!”

“ஆக்கும் அல்குல். ஊட்டும் இணைமுலைகள். எரித்தழிக்கும் விழிகள். இணைக்கும் ஈரடிகள். இருத்தும் இன்மையின் பீடம்.  பிறப்பு, செல்வம், தந்தை, நட்பு, மைந்தன், எதிரி, துணைவி, இறப்பு, நல்லூழ், தீயூழ், வருவினை, செல்வினை என பன்னிரு கொடைகளென உடன் சூழ்ந்துள்ளவள். நீ இங்கமைக! இப்பன்னிரு படைக்களத்தில் அமைக!”

முப்புரி வேலேந்தி வெறிநடனமிட்டான் பூசகன். அவன் தொண்டையிலிருந்து எழுந்தது ஆயிரம் தலைமுறைகண்ட மூதாதையரின் குரல் “குருதி எழுக! குருதியின்றமையாது அறமென்றறிக மானுடரே! வெங்குருதி எழுக! நீரென்றும் நெருப்பென்றுமான அமுதமே குருதி! அன்னையே குருதிசூடுக! செங்குருதி சூடுக! இதோ எழுகிறது பலிபீடம். இதோ தன்னை தான் வைத்து காத்திருக்கிறது பலிவிலங்கு. அவிகொள்க! ஐந்து குழல்களில் நிணம் நீவி முடித்து அமர்க! அன்னையே, அடியவர் தலைமேல் கால்வைத்து அமைக! மண் வென்றமைக! அன்னையே, விண்சூடி அமர்க!”

பலிபீடத்தின் மேல் கால்கள் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது எருமை. அங்கிருந்த புகையின், எழுந்துசூழ்ந்த முரசொலியின், பந்தச்செவ்வொளியின் அலையில் அது விழி அயர்ந்து சித்தமென்றே ஆகி அமைந்திருந்தது. முகில்மடிப்புகளுக்கு அப்பால் எழும் கோடையின் முதல் இடியோசை என சிம்மக்குரல் இருளில் எழுந்தது.

[பன்னிரு படைக்களம் நிறைவு]