நீர்க்கோலம் - 7

6. முதல்மலர்

flowerநிஷத நாட்டு இளவரசனாகிய நளன் தன் பதின்மூன்றாவது வயதில் கோதாவரிக் கரையில் தாழைப்புதருக்குள் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்த பெண் உடலொன்றின் காட்சியால் தன்னை ஆண் என உணர்ந்தான். அன்றுவரை அவன் அன்னையர் சூழ்ந்த அகத்தளத்தில் முதிரா மைந்தனாக விளையாடி வந்தான். அன்று தன் உடலை அச்சத்துடனும் அருவருப்புடனும் அறிந்து அங்கிருந்து விலகி ஓடி அப்பாலிருந்த நாணல் புதர்களுக்குள் ஒளிந்துகொண்டான். அந்த இழிச்சுமையிலிருந்து தன்னுள் உறையும் ஆத்மாவை பிரித்தெடுத்துவிடவேண்டும் என்று விழைந்தவன்போல அங்கு தவித்து எண்ணங்களில் உழன்று வெளிவர முடியாது பகல் முழுக்க அமர்ந்திருந்தான்.

அந்தி இருட்டியபின் எழுந்த காட்டின் ஒலியால் அஞ்சி சிறு பூச்சிகளின் கடியால் துன்புற்று எழுந்து நகர் நோக்கி சென்றான். சில கணங்களே நோக்கிய அக்காட்சி கண்முன் கற்சிலையென நிறுத்தப்பட்டதுபோல விலக்க முடியாததாக, எட்டி தொட்டுவிட முடிவதாக எப்படி நிலைகொள்கிறதென்று அவனுக்கு புரியவில்லை. எத்திசையில் திரும்பி ஓடினாலும் தன்னுள் இருந்து எழுந்து அது முன்நிற்கும் என்று உணர்ந்தபோது தலையை கையால் அறைந்துகொண்டு அழவேண்டுமென்று தோன்றியது.

அந்தி விளக்குகள் ஒளிரத் தொடங்கியிருந்த நகரத்திற்குள் நுழைந்து கையில் பூக்குடலைகளுடனும் நெய்க்கிண்ணங்களுடனும் ஆலயங்களுக்குள் சென்றுகொண்டிருந்த பெண்களை பார்த்தான். ஒவ்வொருவரும் ஆடையின்றி திரிவதுபோல் தோன்ற விதிர்த்து தலைகுனிந்து விழிகள் நிலம் நோக்க நடந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வாள் புண் பட்ட புரவியென சிலிர்த்து குளிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் பெண்களின் ஒவ்வொரு சிறு ஒலியையும் அவன் செவிகள் கேட்டன. காலடிகள் ஆடைஒலிகள் அணியொலிகள் மட்டுமல்லாது கைகள் தொடையில் உரசிக்கொள்வதும் தொடைகள் தொட்டுக்கொள்வதும்கூட. அனைத்து ஒலிகளும் காட்சிகளாக மாறின.

விழிகளை நோக்காமல் அரண்மனைக்குள் நுழைந்து ஓசையின்றி தன் தனியறைக்குள் புகுந்து மஞ்சத்தில் படுத்து மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டான். துயில் ஒன்றே அவன் விழைந்தது. தவிப்புடன் அதை நோக்கி செல்ல முயலும்தோறும் மேலும் விழிப்பு கொண்டான். எழுந்து கதவைத் திறந்து வெளியே ஓடி மீண்டும் இருள் செறிந்த காடுகளுக்குள் நுழைந்து புதைந்துவிட வேண்டுமென்று ஒருகணம் வெறிகொண்டான். பெருமூச்சுவிட்டுக்கொண்டு படுக்கையில் புரண்டான்.

அவன் திரும்பி வந்ததை அகத்தளத்தில் எவரும் அறியவில்லை. முன்னிரவில் அவனைத் தேடி வந்த அவன் அன்னை அறைக்கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது மரவுரிக்குள் இருந்து வெளியே நீண்ட, தூக்கில் தொங்குபவனின் காற்றில் தவிக்கும் கால்களைப்போல நெளிந்துகொண்டிருந்த அவன் பாதங்களை பார்த்தாள். உள்ளே வந்து முகத்தை மூடியிருந்த அம்மரவுரியை பிடித்திழுத்து “தனியாக வந்து படுத்து என்ன செய்கிறாய்? எழு, உணவருந்த வேண்டாமா?” என்று அவன் தோளை தட்டினாள்.

திடுக்கிட்டு எழுந்து அவளைப் பார்த்த அக்கணமே மறுபுறம் சுருண்டு முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டான் நளன். அன்னை அவனைப் பற்றிப் புரட்டி “சொல், என்ன ஆயிற்று உனக்கு? உடல் நலமில்லையா?” என்றாள். “ஆம்” என்றபின் மீண்டும் சுருண்டுகொண்டான். அவள் அவன் நெற்றியில் கைவைத்தபின் “ஆம், அனல் தெரிகிறது. நான் சென்று மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்று கதவைத் திறந்து வெளியேறினாள்.

அக்கணமே அவன் தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறந்து வெளியே இறங்கி படிகளினூடாக ஓசையின்றி காலெடுத்து வைத்து முற்றத்தை வந்தடைந்தான். விண்மீன்கள் மண்டிய வானை நிமிர்ந்து பார்த்தான். அப்போது உணர்ந்த விடுதலை எரியும் தோல்மீது குளிர்தைலம் பட்டதுபோல் இருந்தது. நகரத்தெருக்களினூடாக இருளின் பகுதிகளில் மட்டும் ஒதுங்கி நடந்து வெளியேறி மீண்டும் காட்டை அடைந்தான்.

அவன் கண்ட காடு முன்பொருபோதும் அறிந்திராததாக இருந்தது. நிழல்கள் வெவ்வேறு அழுத்தங்களில் ஒன்றின்மேல் ஒன்றென பதிந்து உருவான பெருவெளி. மரங்கள் அவ்விருளுக்குள் புதைந்து நின்றிருந்தன. கரிய மைக்குள் கரிய வண்டுகளென விலங்குகள் ஊர்ந்தன. சற்று விழி தெளிந்தபோது அவன் விலங்குகளின் விழிஒளிகளை கண்டான். அவற்றினூடாகப் பறந்த மின்மினிகளை. நீர்த்துளிகளின் வானொளியை. அவை செலுத்திய அறியா நோக்கை.

மின்னும் விழிகளினாலான காட்டை நோக்கியபடி ஆலமரத்தினடியில் குளிருக்கு உடம்பை ஒடுக்கி இரவெலாம் அமர்ந்திருந்தான். காலையில் முதல்கதிர் அவனைத் தொட்டபோதுதான் அங்கு துயின்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். பனி விழுந்து அவன் உடல் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தது. காய்ச்சல் எழுந்து உதடுகள் உலர்ந்து கண்கள் கனன்றன. எழுந்து நின்றபோது கால்கள் தள்ளாடி மீண்டும் அவ்வேர் மீதே விழுந்தான். அங்கிருந்து திரும்பி நகருக்குள் செல்ல தன்னால் முடியாது போகலாம் என்ற எண்ணம் இறப்பு அணுகி வருகிறதோ என்ற ஐயமாக மாறியது. அவ்வெண்ணம் அச்சத்தை அளிக்கவில்லை. இவையனைத்திலுமிருந்து விடுதலை என்னும் ஆறுதலே தோன்றியது.

இவை அனைத்தையும் இழந்து அறியாது எங்கோ செல்வது. முற்றிலும் இன்மையென்றாவது. இன்மையென்றால் வானம். கற்பூரத்தையும் நீரையும் உலரவைத்து உறிஞ்சிக்கொள்வது. ஒவ்வொன்றையும் வெறுமையென்றாக்கி தன்னுள் வைத்துக் கொள்வது. வானம் என்று எண்ண அவன் உடல் அச்சம்கொண்டு நடுங்கலாயிற்று. பின் அவன் அழத்தொடங்கினான். தனக்குத்தானே என விசும்பி அழுதபடி அங்கு கிடந்தான்.

மீண்டும் விழித்துக்கொண்டபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டிருந்தது. உணவும் நீருமிலாது நலிந்த உடலுக்குள் அனல் ஒன்று கொதித்தபடி குருதிக் குழாய்களினூடாக ஓடியது. உதடுகளை நாவால் தொட்டபோது மரக்கட்டையை தொடும் உணர்வு ஏற்பட்டது. கையூன்றி எழுந்து நிற்க முயன்று கால்தளர்ந்து மீண்டும் விழுந்தான். ஆம். இதுதான் இறப்பு. இன்றிரவுக்குள் என்னை விலங்குகள் தின்றுவிட்டிருக்கக்கூடும். தேடி வருபவர்கள் என் வெள்ளெலும்புகளை இங்கு கண்டெடுப்பார்கள். எஞ்சுவது ஏதுமில்லை. எஞ்சாமல் ஆதலென்பது வானில் மறைதல். இருந்ததோ என்று ஐயுற வைக்கும் நீர்த்தடம். இருந்ததேயில்லை என்று ஆகும் கற்பூரத்தின் வெண்மை.

மீண்டும் கையூன்றி எழத்தொடங்கி நிலைகுலைந்து கீழே விழுந்தான். மீண்டும் மயங்கித் துயின்று பின்னர் விழித்தபோது அவன் முன் வெண்தாடிச் சுருள்கள் நெஞ்சில் படர வெண்குழல் கற்றைகளைச் சுருட்டி நெற்றியில் முடிச்சிட்டிருந்த முதியவர் ஒருவர் கனிந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தார். கைகளைத் தூக்கி ‘வணங்குகிறேன், உத்தமரே’ என்றுரைக்க அவன் விரும்பினான். உதடுகள் ஒன்றுடனொன்று ஒட்டியிருந்தமையால் மெல்லிய அசைவு மட்டுமே எழுந்தது. விரல்கள் விதிர்த்து பின் அடங்கின.

அவர் தன் கையில் இருந்த நீரை அவன் முகத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து விழிகளை துடைத்தார். தலையை சற்றே ஏந்தி சுரைக்குடுவையில் இருந்து குளிர்நீரை மெல்ல ஊட்டினார். நீரை நோக்கி இழுக்கப்பட்டதுபோல் சென்றது அவன் வாய். அவன் உடலின் அனைத்துத் தசைகளும் நீருக்காக தங்களை ஏந்திக்கொண்டன. குளிர்நீர் வாயிலிறங்கி தொண்டைக்குள் இறங்குவதை உணர்ந்தான். நூற்றுக்கணக்கான உலை முனைகளில் அனல் அவிந்தது. உடல் குளிர்ந்ததும் மெல்ல நடுக்குற்றது. அவர் தன் தோற்பையிலிருந்து கனிந்த மாங்கனி ஒன்றை எடுத்து அவனுக்களித்து “உண்ணுக!” என்றார்.

NEERKOLAM_EPI_07

அவன் அதை வாங்கி இரு கைகளாலும் பிடித்து குரங்குகளைப்போல கடித்து மென்று உண்டான். தான் உண்ணும் ஒலியை ஈரச்சேற்றில் நீர்த்துளி விழும் ஒலிபோல கேட்டுக்கொண்டிருந்தான். நூற்றுக்கணக்கான சர்ப்பங்கள் நெளிந்து பின்னி முட்டி மோதி அதை கவ்வி விழுங்குவதுபோல உடற்தசைகள் அக்கனியை வாங்கி உண்டன. உண்டு முடித்ததும் அவர் மீண்டும் நீரருந்தச் சொன்னார். “எழுந்தமர்க! சுட்ட கிழங்கொன்று வைத்திருக்கிறேன். குடல் உணவுக்குப் பழகியபின் அதை உண்ணலாம்” என்றார்.

அவன் எழுந்தமர்ந்தபோது விழிகளில் ஒளி வந்திருந்தது. நாவில் ஈரமும் தசைகளில் நெகிழ்வும். எண்ணங்கள் மீது சித்தம் கட்டுப்பாட்டை அடைந்திருந்தது. “என் பெயர் அசனன். இக்காட்டில் வாழ்பவன். இருபத்தெட்டாண்டுகளாக ஏழ்புரவியில் விண்ணளப்போனை எண்ணி தவம் செய்பவன்” என்றார் முனிவர். அவன் அவர் கால்களைத் தொட்டு தலை அணிந்து “என் பெயர் நளன். கிரிப்பிரஸ்தத்தின் இளவரசன்” என்று சொன்னான். “ஆம். தாங்கள் யாரென்பதை கைகளில் அணிந்திருக்கும் முத்திரைக் கணையாழிகளிலிருந்து கண்டுகொண்டேன்” என்று அசனர் சொன்னார். “ஏன் இங்கு வந்தீர்? வழி தவறிவிட்டீரா?”

“இல்லை. நான் என் உடலை தொலைக்க விழைந்தேன். எங்கேனும் முற்றாக இதை மறைத்துவிட்டு மீள முயன்றேன்” என்றான் நளன். “உடலை உதிர்ப்பதா? உடலைக் கட்டியிருப்பது உயிரல்ல, ஊழ். அது விடுபடவேண்டுமென்றால் அம்முடிச்சுகள் அவிழவேண்டாமா?” என்று அவர் புன்னகையுடன் சொன்னார். அவன் கண்களை மூடிக்கொண்டு அதுவரையிலான தனது எண்ணங்களை தொகுத்துக்கொள்ள முயன்றான்.

மீண்டும் நீரருந்தக் கொடுத்தபின் சுட்ட கிழங்கை அவன் உண்ணும்படி அளித்தார் முனிவர். கிழங்கை உண்டு மீண்டும் நீரருந்தி சற்று முகங்கழுவியதும் உடலில் ஆற்றல் ஊறிவிட்டிருப்பதை உணர்ந்தான். வேர் ஒன்றைப் பற்றியபடி மெல்ல எழுந்து நிற்க முடிந்தது. “வருக!” என்று அவன் தோளைப்பற்றி அவர் அழைத்துச்சென்றார். “இங்கு கோதையின் கரையில் நாணற்காட்டிற்குள் எனது சிறுகுடில் அமைந்துள்ளது. என்னுடன் எவருமில்லை. இன்று பகல் உடன் தங்குக! மாலை நானே உம்மை அரண்மனைக்கு கொண்டு சேர்ப்பேன்” என்றார்.

அசன முனிவருடன் சென்று அவரது குளிர்ந்த சிறுநாணல் குடிலுக்குள் மண் தரையில் விரிக்கப்பட்ட நாணல் பாயில் படுத்துக்கொண்டான் நளன். “சொல்க, சொல்வதற்குரியவை என்று உமக்குத் தோன்றினால்” என்றார் அசனர். அவன் கண்களை மூடி பேசாமலிருந்தான். “நன்று, சொல்லத் தோன்றுகையில் தொடங்குக! அதுவரை எனது தனிமையில் நானிருக்கிறேன்” என்றபடி அவர் எழுந்து சென்றார். வெளியே அவர் நாணல்களை வெட்டிக்கொண்டு வருவதை, அவற்றை சீராக நறுக்கி நிழலில் காய வைப்பதை வாயிலினூடாக நோக்கியபடி அவன் படுத்திருந்தான்.

எவரிடமேனும் இதை சொல்லவேண்டுமா என்றெண்ணினான். எப்போதேனும் சொல்லத்தான் போகிறோம் என்று தோன்றியது. அப்படியெனில் இவரிடமன்றி பிறிதெவரிடம் சொல்லக்கூடும் என்ற மறுஎண்ணம் வந்தது. இந்தக் காட்டில் இவரை நான் சந்திக்க வேண்டுமென்பதே ஊழ் போலும். இவரிடம் இதை சொல்ல வேண்டுமென்பதே ஆணை. அவன் சுவர் பற்றி எழுந்து வெளியே வந்து குடில் முகப்பிலிடப்பட்ட மரத்தண்டின்மேல் அமர்ந்துகொண்டு “நான் கூற விழைகிறேன், முனிவரே” என்றான்.

“கூறுக, உரிய சொல்லாக்குவது மட்டுமே உணர்வுகளை வென்று செல்வதற்கான வழி. புரிந்துகொள்ளப்படாமலிருக்கையிலேயே அவை உணர்வுகள். புரிந்துகொள்ளப்பட்டவுடன் அவை கருத்துக்கள். உணர்வுகளுக்கு மாற்றும் விளக்கமும் இல்லை. கருத்துகளுக்கு அவை உண்டு” என்று அசன முனிவர் சொன்னார். அத்தகைய சொற்களை அவன் கல்விச்சாலையில் வெறும் பாடங்களென கேட்டிருந்தான். அன்று அவை வாழ்க்கை எனத் திரண்டு நேர்முன் நின்றிருப்பதுபோல் தோன்றின.

“இப்புவியெங்கும் நாமுணர்ந்து இருப்புகொண்டிருக்கும் அனைத்துப் பொருட்களும் கருத்துகளே. கருத்துகளாக மாறி மட்டுமே பொருட்கள் நம்மை வந்தடைய முடியும். அப்பால் அவை கொள்ளும் மெய்ப்பொருண்மை என்ன என்று ஒருபோதும் நாம் அறியக்கூடுவதில்லை. பொருட்களை கலந்தும் விரித்தும் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்துகளின் தொகை அலைபெருகிச்செல்லும் ஒழுக்கையே வாழ்வென்கிறோம். அவ்வாழ்வின் நினைவுப்பதிவையே எஞ்சுவதெனக் கொள்கிறோம். நீர் சொல்லத்தொடங்குவது அதில் ஒரு சிறு குமிழி மட்டுமே என்றுணர்க” என்றார் அசனர்.

ஒருகணம் உளமெழுந்து அக்கருத்தைத் தொட்டதுமே அதுவரை கொண்டிருந்த உணர்வுகளனைத்தும் பொருளற்று சிறுத்து விழிக்கெட்டாதபடி மறைவதைக் கண்டு வியந்தான். சொல்லவேண்டியதில்லை என்றுகூட தோன்றியது. பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் புன்னகைத்தபின் “வெற்றாணவம். வேறொன்றுமில்லை. அதனாலேயே அதை இத்தனை பெருக்கிக்கொண்டேன்” என்றான். “சொல்க, இனி சொல்வது எளிதாகும்” என்றார் அசனர். அவன் முதலிரு சொற்களுக்குள்ளேயே அதை வெறும் வேடிக்கை என்றுணர்ந்தான். நகையாட்டும் தற்களியாட்டுமாக அவ்வுணர்வுகளை சொல்லி முடித்தான்.

உரக்க சிரித்து முனிவர் சொன்னார் “நன்று, காமத்தைப்பற்றி பேச உகந்த வழி என்பது அதை இளிவரலாக மாற்றி முன்வைப்பதே.” அவன் “ஆம், ஒரு புன்னகைக்கு அப்பால் அதில் பொருளேதுமில்லை” என்றான். அவர் “என்னிடம் கேட்க வினாவேதும் உள்ளதா? நான் விளக்க புதிர் எஞ்சியுள்ளதா?” என்றார். “இல்லை, எடுத்து வகுத்துச் சொன்னதுமே நானே அனைத்தையும் உணர்ந்துவிட்டேன்” என்றான் நளன். “திரும்பிச் செல்க! இனி உமக்கு இவ்வண்ணம் அரண்மனை துறந்து காடேகல் நிகழ்வது மிகவும் பிந்தியே. அன்று பிற வினாவொன்று உடனிருக்கும். வேறுவகை துயர் சூழ்ந்து வரும். அன்றும் இச்சொல்லையே எண்ணிக் கொள்க!” என்றார் முனிவர்.

“தங்கள் நற்சொற்கொடை என்றே இதை கொள்கிறேன்” என்றான் நளன். “இளைஞரே, ஒன்றுணர்க! உமது உடலில் முளைத்துள்ள காமம் என்பது இங்குள்ள ஒவ்வொரு புல்லிலும் புழுவிலும் பூச்சியிலும் விலங்கிலும் எழும் உயிரின் முகிழ்வு. முளைத்தெழ, பெருக, திகழ விரும்பும் அதன் இறையாணை. கட்டற்று அது பெருகுவதே இயல்பு. ஈரமுள்ள இடத்திலெல்லாம் புல்விதைகள் முளைக்கின்றன. ஆனால் மானுட சித்தம் அதன்மேல் ஒரு ஆணையை விடுத்தாக வேண்டும். உம் ஆணை இது எனக் கொள்க!” அசனர் சொன்னார்.

“நீர் அடையவிருக்கும் பெண் எங்கோ பிறந்து முழுமை நோக்கி வந்துகொண்டிருக்கிறாள். அவளுக்காக உமது உயிர்விசை இங்கு காத்திருக்கிறது. தனக்குரிய பெண்ணை கண்டடைகையில் அவளே முதல் பெண்ணென ஒருவன் உணர்வான் என்றால் நல்லூழ் கொண்டவன். அவளுக்கு முன் தூயவனென்றும் தகுதியானவனென்றும் உணரமுடிவதுபோல் பேரின்பம் எதுவுமில்லை. உடல் கொண்ட காமம் மிகச் சிறிதென்றுணர்க! உளம் நிறையும் காமம் தெய்வம் இறங்கி வந்தாடும் களியாட்டு. உம்மில் அது திகழ்க!”

flowerஅன்று மாலை அரண்மனைக்குத் திரும்பியபோது நளன் பிறிதொருவனாக இருந்தான். இளங்காளை என நடையில் தோள்நிமிர்வில் நோக்கில் ஆண்மை திகழ்ந்தது. சொல்லில் அறிந்தவனின் உள்அமைதி பொருந்தியிருந்தது. அவனைக் கண்டதுமே அன்னை அவன் பிறிதொருவனாகிவிட்டான் என்று எண்ணினாள். முதல் முறையாக அவன் முன் விழிதாழ்த்தி “எங்கு சென்றிருந்தாய்?” என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். அவள் குரலில் எழுந்த பெண்மையை உணர்ந்து கனிந்த தொனியில் “காட்டிற்கு” என்றபின் “எனக்கொன்றும் ஆகவில்லை, அன்னையே. நான் நீராட விரும்புகிறேன்” என்றான்.

“நன்று” என்றபின் அவள் விலகிச் சென்றாள். தன் அணுக்கச்சேடியும் மைந்தனின் செவிலியுமான பிரபையிடம் “அவன் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறான். நேற்றிரவு என்ன நிகழ்ந்ததென்று அறிய விரும்புகிறேன்” என்றாள். “என்ன நிகழ்ந்தது என்று எண்ணுகிறீர்கள்?” என்றாள் பிரபை. “அவன் பெண்ணை அறிந்திருக்கக்கூடும்” என்றாள் அவள். “அது நன்றல்லவா?” என்றாள் சேடி. “பெண்ணை முதலில் அறிபவன் தகுதியான ஒருத்தியிடம் அதை அறியவேண்டும். ஏனென்றால் முதல் அறிதலிலிருந்து ஆண்களால் மீள முடிவதில்லை” என்றாள் அரசி.

“ஆண்களுக்கு காமத்தில் தேடலென்பதே இல்லை. கடந்து போதல் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அகன்ற ஒவ்வொன்றும் பெரிதாகும் என்பது நினைவின் நெறி. எனவே அவன் உள்ளத்தில் இந்த முதல் அறிதலே பேருருக்கொண்டு நிற்கும். நாள் செல்ல வளரும். இனி வரும் உறவனைத்தையும் இந்த முதல் அறிதலைக் கொண்டே அவன் மதிப்பிடுவான். இது நன்றன்று எனில் அவன் காமங்கள் அனைத்தும் நன்றென்று ஆகாது. இது சிறுமையுடையது என்றால் இப்பிறவியில் சிறு காமமே அவனுக்கு உரித்தாகும்” என்றாள் அன்னை.

தாழ்ந்த விழிகளுடன் தன்னுடன் என அவள் சொன்னாள் “பெண்கள் நற்காமத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே காமத்துடன் அவர்கள் வளர்கிறார்கள். முதற்காமம் அவர்களுக்குள் சுருங்கி உடைந்த கைவளையென, உடுத்து மறந்த சிற்றாடையென எங்கோ நினைவுக்குள் கிடக்கும். தனக்குரியவனை சென்றடைந்தவள் ஒருபோதும் நினைவுகளை நோக்கி திரும்பமாட்டாள். தன்னை அதற்கு முற்றும் ஒப்படைப்பாள். பிறிதொன்றிலாதிருப்பாள். நிறைந்து குறையாமல் ததும்பாமல் திகழ்வாள்.”

“பெண்களைப்பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அறிவதும் ஆய்வதுமாகச் செல்லும் அவர்களால் தம்மை மீட்கவும் திருத்தவும் இயலும். ஆண்களைக் குறித்தே பெற்றோர் எச்சரிக்கை கொள்ளவேண்டும். ஆனால் அரச குடியிலோ பிற குலங்களிலோ எவரும் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்பாரா நிகழ்வுகளின் ஆடல்வெளிக்கு மைந்தரை எதுவும் கற்பிக்காமல் திறந்துவிடுகிறார்கள். நானும் அதையே செய்துவிட்டேன் என்று அஞ்சுகிறேன்” என்றாள் அரசி.

“முன்னர் நூறுமுறை அதை எண்ணியதுண்டென்றாலும் என் மைந்தனை இளஞ்சிறுவனென்று எண்ணும் அன்னையின் அறியாமையைக் கடந்து என்னால் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் அவன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பார்த்தபோதே மைந்தன் இளைஞனாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அதை அத்தருணத்திலும் ஒத்திப்போட விழைந்ததனால் எதைச் சொல்வது என்றறியாமல் பொருளற்ற பேச்சை உதிர்த்துவிட்டு மீண்டு வந்தேன். வரும்போதே என் உள்ளத்தின் ஆழம் சொல்லிவிட்டது, அவன் ஆண் என்று. ஆகவேதான் உன்னை அழைத்து அவனிடம் பேசச் சொன்னேன். அதற்குள் அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.”

“செவிலியே, சென்றவனல்ல மீண்டு வந்திருப்பவன். அவன் அடைந்த பெண் யார் என்பதை மட்டும் அறிந்து வருக!” என்றாள் அரசி. பிரபை சிரித்து “ஒருநாளில் ஒருவனை முற்றாக மாற்றி அனுப்புவது மானுடப் பெண்ணால் இயல்வதா என்ன? அது கானக அணங்காகவே இருக்கக்கூடும்” என்றாள். “நகையாடாதே! நான் அவனை எண்ணி துயர் கொள்கிறேன். சென்று அவனிடம் சொல்லாடிவிட்டு வா” என்றாள் அன்னை.

செவிலி அவன் அறைக்கு வந்தபோது அவன் நீராடி உடைமாற்றி அணிகள் சூடிக்கொண்டிருந்தான். தொலைவிலேயே அவனைக் கண்டதும் செவிலியின் நடை தளர்ந்தது. முலைகளுக்குமேல் மென்மலர்போல் அவள் எடுத்துச் சூடிய சிறுமைந்தனல்ல அவன் என்றுணர்ந்தாள். எனவே மிகையான இயல்பு நடையுடன் அருகே வந்து உரக்க நகைத்து “எங்கு சென்றிருந்தாய், மைந்தா? அன்னை உன்னை எண்ணி நேற்றும் முன்தினமும் துயருற்றிருந்தார்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு அசனமுனிவரைப் பார்த்தேன்” என்றான்.

“அவரா? முன்பு இங்கு நிமித்திகராக இருந்தார். பித்தரென்றும் தனியரென்றும் இங்குளோர் அவரை நகையாடினர். ஒருநாள் நிமித்த நூல்கள் அனைத்தையும் எரித்து அதில் ஒரு கிள்ளு நீறெடுத்து நெற்றியிலிட்டு கிளம்பிச்சென்றார் என்றார்கள்” என்றாள் பிரபை. பின்னர் “காட்டில் பிற எவரை சந்தித்தாய்?” என்றாள். அவ்வினாவை உடனே உணர்ந்து திரும்பி “பெண்கள் எவரையும் அல்ல” என்றான். நெஞ்சில் நிறைந்த விடுதலை உணர்வுடன் “நான் அதை கேட்கவில்லை” என்றாள் செவிலி.

சிரித்து “அதை கேட்க எண்ணினீர்கள்” என்றான் நளன். “சரி, கேட்டுவிட்டேன்” என்றாள் பிரபை. “அதற்கே மறுமொழியுரைத்தேன். பெண்கள் எவரையும் அணுகவில்லை” என்றான். “ஆனால் பெண்களைக் குறித்து ஒரு வரியை அடைந்திருக்கிறாய். அது என்ன?” என்று செவிலி கேட்டாள். “காமம் ஓர் அருமணி. அதை சூடத் தகுதி கொண்டவர்களுக்கே அளிக்கவேண்டும். அதுவரை அதை காத்து வைத்திருக்க வேண்டும். கருவூலத்தில் நிகரற்ற மணி ஒன்றுள்ளது என்ற தன்னுணர்வே பெருஞ்செல்வம். கரந்திருக்கும் அச்செல்வத்தை பணமென்றாக்கி நூறு நகரங்களில் புழங்க முடியும். அதைத்தான் உணர்ந்தேன்” என்றான் நளன்.

“அதை அவர் சொன்னாரா?” என்றாள் செவிலி. “அவர் சொல்லவில்லை. இவை என் சொற்கள்” என்றபின் அவள் இரு தோள்களிலும் கைவைத்து கண்களுக்குள் நோக்கி “பிறகென்ன அறிய வேண்டும், அன்னையே?” என்றான். அவள் விழிகள் தாழ்த்தி புன்னகைத்து “ஏதுமில்லை” என்றாள். முதல் முறையாக இத்தொடுகையை தன் உள்ளம் ஏன் இத்தனை உவகையுடன் எதிர்கொள்கிறது? முதல் முறையாக அவன் முன் ஏன் நடை துவள்கிறது? ஏன் குரலில் ஒரு மென்மை கூடுகிறது?

“அரசவைக்குச் செல்கிறாயா?” என்று கேட்டாள். “ஆம், நெடுநாளாயிற்று சென்று” என்றபின் அவன் “வருகிறேன், அன்னையே” என்று சொல்லி காத்து நின்ற பாங்கனுடன் சேர்ந்துகொண்டான். அவன் செல்வதை நோக்கி தோற்றம் மறைவது வரை விழியிமைக்காது நின்றபின் சிலம்புகள் ஒலிக்க இடைநாழியில் துள்ளி ஓடி மூச்சிரைக்க அரசியிடம் சென்ற செவிலி “அவன் பெண்ணென்று எவரையும் அறியவில்லை. தன்னையே அறிந்திருக்கிறான், அரசி” என்றாள்.