நீர்ச்சுடர் - 9

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 3

கனகர் தீர்க்கசியாமரை புரவியில் அமரச்செய்து சம்வகையின் புரவியில் தான் அமர்ந்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார். சம்வகை உடன் நடந்து வந்தாள். தீர்க்கசியாமர் தன் மகரயாழை மடியில் அமைத்து அதன் தந்திகளின்மேல் வெறுமனே விரலை வைத்திருந்தார். விந்தையான ஒரு சிறு விலங்கு என அவருடைய விரல் தந்திகளின்மேல் அமைந்திருந்தது. அதன் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் இணைக்கும் தசை கிழிக்கப்பட்டிருந்தமையால் விரல்கள் மிக விலகி மிக நீண்டு தெரிந்தன. அவர் தலையைச் சுழற்றி உதடுகளை கூப்பியபடி மகிழ்ச்சியுடன் நகைத்து “இந்த வழியே நான் வந்திருக்கிறேன். இது அரண்மனைக்குச் செல்லும் வழி” என்றார். தன்னை அறியாமல் கனகர் “எப்படி0 0தெரியும்? மணம், ஒலி அனைத்துமே மாறிவிட்டிருக்கிறதே?” என்றார். “நான் மணத்தாலும் ஒலியாலும் உணர்வதில்லை” என்றார் தீர்க்கசியாமர். “பின்?” என்றார் கனகர். தீர்க்கசியாமர் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் எப்படி வழியறிகிறார் என்று கனகர் எண்ணிக்கொண்டிருந்தார். பறவைகள் திசையறிவதற்கு தலைக்குள் ஒரு நுண்விழியை கொண்டிருக்கின்றன. ஆகவேதான் வெட்டவெளியென விரிந்த வானில் வலசை செல்கின்றன. அவருடைய நெற்றிக்குப் பின்னாலும் அவ்வண்ணம் ஓர் அறிவிழி உள்ளதா? தீர்க்கசியாமர் “அரசியும் நம்முடன் வருகிறார்கள் அல்லவா?” என்றார். கனகர் “எவர்?” என்றார். “அரசி” என அவர் சம்வகையை சுட்டிக்காட்டினார். “அவள் அரசி அல்ல, என் ஏவல்பெண்டு” என்றார் கனகர். “ஆம், கூறினீர்கள்” என தலையைச் சுழற்றி தீர்க்கசியாமர் புன்னகைத்தார்.

முதலில் சம்வகையை அவர் அரசி என அழைத்ததும் கனகர் சினம்கொண்டார். இந்தச் சூதன் தன்னை அரசியர் சந்திக்கவருவதாக பகற்கனவு கண்டு அமர்ந்திருக்கிறான் போலும் என எண்ணிக்கொண்டார். “இவள் அரசியல்ல, என் காவல்பெண்டு சம்வகை” என்றார். சம்வகை குழப்பத்துடன் அகலே நின்றுவிட்டாள். “நன்று… நீங்கள் யார்?” என்று தீர்க்கசியாமர் கேட்டார். “நான் அஸ்தினபுரியின் தலைமை அமைச்சன் கனகன். நீங்கள் என்னை பார்த்திருக்கிறீர்கள்.” தீர்க்கசியாமர் அதை செவிகொள்ளாமல் “நாம் அரண்மனைக்குச் செல்கிறோமா?” என்றார். “எங்கே அரசி? அவர் நடந்தா வருகிறார்?” என தலை திருப்பினார்.

“ஆம், நாம் புரவியிலேயே செல்வோம். என் ஏவல்பெண் சம்வகை உடன் வந்திருக்கிறாள். அவள் காவலுக்கு வருவாள்… புரவியில் ஏறுவீர்கள் அல்லவா?” தீர்க்கசியாமர் “ஆம், நான் புரவி ஊர்ந்தது உண்டு… ஆனால் அத்திரி என்றால் மேலும் நன்று” என்றார். கனகர் சம்வகையிடம் சினத்துடன் “புரவியில் அவரை ஏற்றி அமரச்செய்” என்றார். தீர்க்கசியாமர் “நாம் அரண்மனைக்கு எதன்பொருட்டு செல்கிறோம்?” என்றார். “அரசியே உசாவுவார்கள்…” என்றார் கனகர். தீர்க்கசியாமர் “அரண்மனைகளுக்குள் நறுமணங்கள் நிறைந்திருக்கும். யாழின் இசை ஒலிக்கும். நான் அறிவேன்” என்றார். பின்னர் மீண்டும் வெண்பற்களைக் காட்டி நகைத்து “அரசி ஏன் ஒன்றும் பேசாமல் உடன்வருகிறார்?” என்றார்.

இந்த விழியிலாதோன் உண்மையில் உலகறியாதவனாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டார். அவன் கூறும் தொடர்பற்ற சொற்களுக்கு கேட்பவர்கள் விழைந்த பொருளை அளிக்கிறார்கள் போலும். அவ்வப்போது குறிசொல்பவர்கள், வரும்பொருளுரைப்பவர்கள் என சிலர் அஸ்தினபுரியில் அவ்வாறு கிளம்புவதுண்டு. பானுமதி உடனே அசலையுடன் அவர்களை பார்க்கச் செல்வாள். அவருக்கு அதில் நம்பிக்கையே வந்ததில்லை. பெரும்பாலும் அவை பிழையாகவே இருக்கும். ஓரிரு ஆண்டுகளிலேயே அவர்கள் பொய்யர்களாக தெளிவார்கள். ஆனால் பானுமதிக்கோ அசலைக்கோ அது பொருட்டாகத் தெரிவதில்லை. அவர்கள் இன்னொருவரை நாடிச் சென்றுவிட்டிருப்பார்கள்.

அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வளரும் பதற்றம் ஒன்றிருந்தது போலும். பல கவலைகள் கொண்டவர்கள் மிகுதியாக நிமித்திகர்களை நாடுவதில்லை. மாறாத ஒற்றைக்கவலை கொண்டவர்கள் மீளமீள நிமித்திகர் சொல்லும் நம்பிக்கைச்சொற்களை நாடிக்கொண்டிருக்கிறார்கள். நிமித்திகர்களின் சொற்களில் வாழ்ந்துகொண்டிருந்தது அஸ்தினபுரி. நிமித்திகர்கள் அஸ்தினபுரியைவிட சில அடி தொலைவு முன்னால் சென்று அங்கிருந்து அவர்களை அழைத்தனர். அவர்கள் எச்சரிக்கையுடன் எண்ணி காலடி வைத்து பின்தொடர்ந்தனர். அவர்களின் ஒவ்வொரு நிகழ்செயலும் நினைவுகளால் இறந்தகாலத்துடனும் அச்சங்களால் எதிர்காலத்துடனும் இணைந்திருந்தன.

தெருவில் செல்கையில் தீர்க்கசியாமர் “இனி போர் இல்லை” என்றார். “இனி நீணாள் போர்கள் இல்லை” என்று தலையசைத்துக்கொண்டே சொன்னார். “அது அனைவருக்கும் தெரிந்ததே” என்றார் கனகர். “இனி மகதமும் கூர்ஜரமும் இல்லை. எனில் எதிரியென ஏதுமில்லை” என்று மேலும் சொன்னார். “மகதம் என்றால்?” என்று தீர்க்கசியாமர் கேட்டார். கனகர் புன்னகைத்து “அது ஒரு நாடு” என்றார். “இரட்டையுடல்கொண்டவனின் குடி அழியாது. அது பெருகும்… கங்கைக்கரையில் ஆயிரம் கால்கள் கொண்ட துறைமுகம் அமையும். அவர்களின் கொடி பறக்கும். ஐநூறாண்டுகள் அவர்களின் முடி நிலைக்கும்” என்றார் தீர்க்கசியாமர். கனகர் சற்றே திகைத்தபின் “சூதரே, அக்கொடியின் அடையாளம் என்ன?” என்றார். “யானைக்கொடி…” என்றார் தீர்க்கசியாமர். “ஆனால் கீழே சக்கரம் ஒன்றுள்ளது.”

கனகர் என்ன சொல்வதென்று அறியாமல் வெறுமனே நோக்கிக்கொண்டு சென்றார். சம்வகை “அவர் கூறுவதைப் பார்த்தால் வங்கம் பேராற்றல்கொண்டு எழும்” என்றாள். கனகர் கையை வீசி அப்பேச்சை தவிர்த்தார். சம்வகை அரசியல் பேசுவதை தன் அகம் ஏன் வெறுக்கிறது என எண்ணிக்கொண்டார். எந்த உளநிலையில் இந்த சூதர்குலத்துப் பெண்ணிடம் நான் அமைச்சுத்தொழில் குறித்து பேசத்தொடங்கினேன்? ஏதோ அறியா விசை அதை பேசச் செய்ததா என்ன? தீர்க்கசியாமர் “கட்டடங்கள் அனைத்திலிருந்தும் சீழ்மணம் எழுகிறது… புதுச் சீழின் மணம்” என்றார். கனகர் பற்களை கடித்துக்கொண்டார். “வானில் முகில்கள் நிறைந்துள்ளன” என்றார் தீர்க்கசியாமர். “முகில்களைக் கீறியபடி பறவைகள் செல்கின்றன.” கனகர் எரிச்சலுடன் உரக்க “நீங்கள் எதை பார்த்தீர்கள்?” என்றார். “நான் பார்ப்பதில்லை” என்று தீர்க்கசியாமர் சொன்னார். “அவை பாடல்போல என்னுள் எழுகின்றன.”

அரண்மனை முற்றத்தை அடைந்ததும் தீர்க்கசியாமர் உரக்க “அரண்மனை முற்றம்!” என்றார். மூக்கைச் சுளித்து “குருதிமணம்… இங்கென்ன போர் நிகழ்ந்ததா?” என்றார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கே செம்புழுதியின் மணமும் எழுகிறது… வெயிலில் வெந்த பாலைநிலப் புழுதிபோல.” கனகர் எரிச்சலுடன் “நீங்கள் பாலைநிலத்தை எங்கே பார்த்தீர்கள்?” என்றார். “நான் நூல்களில் பயின்றேன்…” என்றார் தீர்க்கசியாமர். “நூல்களிலா?” என்றர் கனகர் இகழ்ச்சியுடன். “எனக்கு நேர் அறிவும் நூலறிவும் ஒன்றுதான். இரண்டுமே சொற்கள்” என்றார் தீர்க்கசியாமர்.

கனகர் சீற்றம்கொண்டு கைகளை இறுக்கிக்கொண்டார். அந்தக் காலையிளவெயில் அவரை வியர்வை வழியச்செய்தது. மயக்கம் வந்து விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. தீர்க்கசியாமர் “இந்த இடத்தில் குழந்தைகளின் ஒலிகள் நிறைந்துள்ளன. அனைத்துக் குழந்தைகளும் அழுதுகொண்டிருக்கின்றன” என்றார். கனகர் “செல்வோம், சூதரே” என்றார். தீர்க்கசியாமர் அரண்மனை முற்றத்தைச் சுற்றி நோக்கி மூக்கைச் சுளித்து புரவிபோல் மணம்பிடித்தார். “என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்றார். கனகர் “என்ன?” என்றார். “இங்கே ஏன் நின்றிருக்கிறீர்கள்?” என்றார் தீர்க்கசியாமர். கனகர் “என்ன?” என்றார். சம்வகை “அழைத்துச்செல்க, அமைச்சரே!” என்றாள். அவளை வெறுமனே நோக்கிவிட்டு கனகர் “செல்வோம்” என தீர்க்கசியாமரை தொட்டார்.

அரண்மனைக்குள் செல்லும்போது அந்தச் சூழலுக்கே பொருந்தாதபடி தீர்க்கசியாமர் வேறெங்கோ நோக்கி புன்னகை புரிந்துகொண்டிருந்தார். அவருடைய முகத்தில் விழிகள் உருண்டுகொண்டே இருந்தன. அவை இரு குருதியுருளைகள் என எண்ணியதுமே கனகர் திடுக்கிட்டார். அமைச்சுநிலையிலிருந்து சொல்லறிவர் தீர்க்கசியாமரைக் கண்டு ஓடி அருகே வந்தார். “வருக சூதரே, தங்களுக்காகவே காத்திருந்தோம். தங்கள் மூதாதையரில் ஒருவர்தான் இங்கே எழுந்த இடர் ஒன்றுக்கு முன்பு செல்வழி கண்டு சொல்லியிருக்கிறார். ஆகவே தாங்கள் உதவக்கூடும் என நான் அமைச்சரிடம் சொன்னேன்” என்றார். “நான் எவருக்கும் வழி ஏதும் சொல்வதில்லையே?” என்று தீர்க்கசியாமர் சொன்னார். “வழிகாட்டுவது உங்கள் கடமை…” என்றார் சொல்லறிவர். தீர்க்கசியாமர் “நான் எனக்கு தோன்றும் சொற்களைச் சொல்கிறேன்” என்றார்.

இடைநாழிகளினூடாகச் செல்கையில் “முன்பு இங்கே வந்திருக்கிறேன்” என்றார். “ஆம், அரசியைப் பார்க்க வந்துள்ளீர்கள்” என்றார் கனகர். “முன்பொருமுறை வந்தபோது ஓர் அரசி மகவொன்றை ஈன்றார். பேருருவ மகவு… எடைமிக்கது. வாய்முழுக்க பற்கள் கொண்டது… தலையில் கருமயிர்ச் சுருள்கள்… அதை நான் பார்த்தேன்” என்றார் தீர்க்கசியாமர். “நீங்களா?” என்றார் கனகர். “ஆம், அதை கண்களாலேயே பார்த்தேன்.” கனகர் “நாம் அரசியின் அறையை அடைந்துவிட்டோம்…” என்றார். “அரசியிடம் நீங்கள் மிகையாக பேசவேண்டியதில்லை. அவர் உசாவுவனவற்றுக்கு மட்டும் சொல்லெடுத்தால் போதும். இங்கே நீங்கள் அரசப்பணிக்காகவே வந்திருக்கிறீர்கள்.”

தீர்க்கசியாமர் “நான் எப்போதுமே கேள்விகளுக்கு மறுமொழி சொல்வதில்லை…” என்றார். “நான் என்ன பேசுகிறேன் என்பதை என்னாலேயே சொல்லிவிட முடியாது…” என்றபின் சுற்றிலும் நோக்கி “எங்கே அரசி?” என்றார். “அரசி வெளியே வருவதில்லை. அவர் கைம்மைநோன்பு கொண்டிருக்கிறார்” என்றார் கனகர். “நான் என்னை சற்றுமுன் புரவியில் வந்து சந்தித்த அரசியை சொன்னேன்” என்றார் தீர்க்கசியாமர். “அவள் அரசி அல்ல… அதை இருமுறை சொல்லிவிட்டேன். அவள் காவலர்தலைவி மட்டிலுமே” என்று கனகர் எரிச்சலுடன் சொன்னார். தீர்க்கசியாமர் “ஆம், சொன்னீர்கள்… மறந்துவிட்டேன்” என்றார். “இந்த அறைக்குள் ஏன் குருதிமணம் நிறைந்திருக்கிறது? தரையெங்கும் வற்றிய ஏரிப்பரப்பில் மீன்கள் துள்ளுவதுபோல விழிகள்…” என்றார். கால்களை நீட்டி வைத்தபடி “இந்த அரண்மனை மிதந்துகொண்டிருக்கிறது. இதன் அடியில் இருக்கும் இருள் செறிவுகொண்டு பெருகி ஒழுகி மேலே வந்துகொண்டிருக்கிறது… இது அவ்விருளிலேயே மூழ்கிவிடவும்கூடும்” என முணுமுணுத்தார்.

காந்தாரியின் அவைவாயிலில் நின்றிருந்த சத்யசேனை தீர்க்கசியாமரைக் கண்டதும் திகைத்து “இவர்…” என்றபின் “அவருடைய அதே உருவம்…” என்றாள். “மானுடர் அழிவதில்லை” என்று கனகர் சொன்னார். சத்யசேனை “வருக, சூதரே” என்றாள். தீர்க்கசியாமர் “நான் இங்கே வந்திருக்கிறேன்… கீழே ஒரு யானை நின்றிருந்தது…” என்றார். சத்யசேனை “ஆம், பிடியானை… இரு நாட்களாகவே நிலையழிந்து நின்றிருக்கிறது” என்றாள். தீர்க்கசியாமர் “அல்ல, அது களிறு. பெருங்களிறு அது… அன்றே அது உயிரிழந்தது. அதை அப்பால் புராணகங்கையில் புதைத்தனர்” என்றார். “என்ன சொல்கிறார்?” என்று சத்யசேனை பதற்றத்துடன் கனகரிடம் கேட்டாள். “அவர் பேசுவது எனக்கும் பெரும்பாலும் புரியவில்லை…” என்ற கனகர் “பேரரசியிடம் தெரிவியுங்கள்” என்றார். தீர்க்கசியாமர் “பெருங்களிறு, முதியது. விழிநோக்கும் செவிக்கூரும் மங்கிப்போனது. ஆனால் அது குருதியை அறிந்துவிட்டிருந்தது” என்றார்.

அவள் குழப்பத்துடன் மீண்டும் தீர்க்கசியாமரை நோக்கியபின் உள்ளே சென்றாள். தீர்க்கசியாமர் “கொழுங்குருதி மணம்… கருவறைக் குருதி… அந்த அறையிலிருந்து இடைநாழிவரைக்கும் அது தெறித்துப் பரவியது” என்றார். சத்யசேனை வந்து தலைவணங்கினாள். “உள்ளே செல்லலாம், சூதரே” என்றார் கனகர். அவர்கள் உள்ளே நுழைந்தனர். காந்தாரி தாழ்வான அகன்ற பீடத்தில் வெண்பட்டாடை அணிந்து கைகளை மடியில் கோத்துவைத்தபடி அமர்ந்திருந்தாள். இளைய அரசியர் அறுவர் சற்று அப்பால் தரையில் விரிக்கப்பட்ட கம்பளங்களில் அமர்ந்திருந்தனர். இருவர் நின்றிருந்தனர். சத்யசேனை மெல்லிய குரலில் “சூதர்” என அவர் வருகையை அறிவிக்க தீர்க்கசியாமர் அருகணைந்து “பேரரசியை வணங்குகிறேன். பெருந்துயரில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என்றும் கண்டுவந்த கனவுதான் இது என்பதனால் அத்துயரை உங்களால் தாங்கிக்கொள்ளவும் இயல்கிறது” என்றார்.

“ஆம், நான் கண்டுவந்த கனவுதான்” என்றாள் காந்தாரி. தீர்க்கசியாமர் சிரிப்புபோல முகம் சுளித்து “முதல்நாளே அக்கனவை கண்டீர்கள்… அன்று அஸ்தினபுரியில் இருள் நிறைந்திருந்தது. காகங்கள் மரங்களை நிறைத்திருந்தன… எங்கும் நரிகளின் ஓலம்…” என்றார். “ஆம்” என்று காந்தாரி சொன்னாள். “அன்றே தொடங்கிவிட்டது…” என்றார் தீர்க்கசியாமர். “அமர்க, சூதரே!” என்றாள் காந்தாரி. அவர் பீடத்தில் அமர்ந்து கையிலிருந்த யாழை மடியில் வைத்துக்கொண்டார். “இங்கே நிகழ்வதென்ன என அறிந்திருப்பீர்கள்” என்றாள் காந்தாரி. “ஆம், அறிவேன்… இதோ இந்த அறையில் குருதி வழியும் உடலுடன் குழந்தைகள் நிறைந்திருக்கிறார்கள். சுவர்களிலெல்லாம் பழுத்த கனிகள்போல் தொங்கிக்கிடக்கிறார்கள். சாளரம் வழியாக உள்ளே வந்துகொண்டே இருக்கிறார்கள்.”

கனகர் மெய்ப்பு கொண்டார். “நிறைய குழவியர்… அங்கே முற்றம் எங்கும் அவர்களே… சில மகவுகளுக்கு கையளவே உடல்” என்றார் தீர்க்கசியாமர். “ஆம் சூதரே… சொல்க. நாங்கள் என்ன செய்வது? இங்கே அத்தனை கருக்களும் கலைந்துவிட்டன. இந்நகரில் கருவுற்ற பெண்டிர் அனைவருமே குருதிபெருக்கி அழிகின்றனர். கருக்குருதி பலிகொள்ளும் பதினொரு ருத்ரர்கள் நகர்புகுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களை இந்நகர்விட்டு அகற்றும் வழியென்ன?” என்றாள். கனகர் “முன்னரும் இது நிகழ்ந்துள்ளது…” என்பதற்குள் தீர்க்கசியாமர் “ஆம், ருக்‌ஷரின் ஆட்சிக்காலத்தில். அன்று நான் ஒரு வழி சொன்னேன். அதையே இப்போதும் சொல்வேன்” என்றார்.

“நீங்கள்…” என சத்யவிரதை பதற்றத்துடன் சொல்லத்தொடங்க அவளை கையசைத்து காந்தாரி விலக்கினாள். “என்ன சொன்னீர்கள்? சொல்க!” என்று காந்தாரி சொன்னாள். தீர்க்கசியாமர் தன் தசைகிழிந்து விலகிய கைவிரல்களை யாழின்மேல் செலுத்தினார். இரு விரல்களும் விந்தையாக விரிந்து நீண்டு நண்டு நடப்பதுபோல் அசைந்தன. யாழ் விம்மியது. அதன் தந்திகள் துடித்தன. விரல்கள் ஒரே கணத்தில் பட்டாம்பூச்சிகளின் சிறகுகள்போல் ஆயின. அவை தந்திகளின்மேல் தாவி அலைய யாழ் ரீங்கரிக்கத் தொடங்கியது. அவருடைய குரல் இணைந்துகொண்டது. அறியாத தொன்மொழியில் அவர் உடனிணைந்து பாடத்தொடங்கினார்.

அவரை வெறித்து நோக்கியபடி அரசியர் அமர்ந்திருந்தார்கள். அந்த மொழி அவர் முன்னரே அறிந்ததாகவும் தோன்றியது. அதைத்தான் மலைக்குடிகள் பேசுகிறார்களா? ஆனால் வேறென்றும் ஒலித்தது. அது செம்மொழியின் ஓசை கொண்டிருந்தது. அதற்கப்பால் ஒன்று ஒலித்தது. வண்டுகள் முரலும், கிளிகள் மிழற்றும் மொழி ஒன்று. பின் அதில் சொல் தெளிந்தது. ஓரிரு அறிந்த சொற்கள். அவர் நீர்ப்பரப்பில் பாறைமுனைகளை மிதித்துக் கடப்பதுபோல் அச்சொற்களை தொட்டுத்தொட்டுச் சென்றார். அவை பெருகின. அறிந்த சொற்களால் ஆன பாடலாக அது மாறியது.

“அன்னையை வணங்குக! இடிமின்னலை கையிலேந்திய வஜ்ரநாகினியின் அருளை நாடுக! முடிவிலா அலைநெளிவுகள் என உடல்கொண்டவள். ஐந்து தலையெழுந்த நாகபடம் கொண்டவள். அணையா ஒளிவிழிகளும் தழல்பறக்கும் நாவுகளும் கொண்டவள். அன்னை, கருவெனச் சுருண்டு ஆழ்புனத்திற்குள் உறைபவள். புயலெனச் சீறி எழுந்து பெருகி கருமுகிலென படம்தூக்கி வானை நிறைப்பவள். அன்னையை வணங்குக! அன்னையின் அருள் பொழிக!”

தீர்க்கசியாமரின் சொற்களில் வஜ்ரநாகினி அன்னையின் கதை ஒலித்தது. கரு வடிவில் சுருண்டு புதைந்திருக்கும் அன்னையை வணங்குக! வஜ்ரயோகினி அன்னையை வணங்குக! அவள் கதை என்றும் அழியாத மொழியில் முளைத்து முளைத்தெழும் நாவுகளில் வளர்க! கேளுங்கள் இக்கதையை. தொல்யுகமொன்றில் மண்ணும் விண்ணும் நாகங்களால் நிறைந்திருந்தது. விண்பேருருவ நாக அன்னையர் மாமலைகளை முட்டைகளாக ஈன்ற காலம் அது. அவர்கள் கடல்களை நிரப்பி அலைகளாக படமெடுத்து தரையை அறைந்த காலம். பின்னர் அவர்களின் அசைவுகளையே கடல்நீர் தன்னுடையதெனக் கொண்டது. நதி தன் நெளிவென நடித்தது. மரங்கள் தங்கள் அடித்தடிகளென அமைத்துக்கொண்டது நாகங்களையே.

அந்நாளில் மிருண்மயி என்னும் நாகஅன்னை பன்னிரண்டாயிரத்து எட்டு முட்டைகளை ஈன்றாள். அவற்றை தன் உடலின் பன்னிரண்டாயிரத்து எட்டு சுருள்களால் அணைத்து வெம்மையளித்து அடைகாத்தாள். உயிர்வளர்ந்துகொண்டிருந்த முட்டைகளுக்குமேல் அன்னை இமையா விழியுடன் தவமிருந்தாள். அப்போது மழைக்கார் இருண்டது. விண்ணில் மின்னல்கள் வெட்டித்துடித்தன. விண்ணில் கருமுகில் யானைமேல் இந்திரன் தோன்றினான். அவன் கையில் மின்படைக்கலம் சாட்டைபோல் நெளிந்தது. கதைபோல் விண்முகில்களை அறைந்து பேரோசை எழுப்பியது. வாள் என திசைகளை வெட்டிச்சென்றது. ஒளியதிர்ந்து அடங்கியபோது உள்ளிருந்து அஞ்சிய நாகக்குழவிகளில் ஒன்று நெளிய அந்த முட்டைமட்டும் அன்னையின் அணைப்பிலிருந்து உருண்டு நிலச்சரிவில் ஓடி அப்பால் சென்றது. அறிக, பன்னிரண்டாயிரத்தில் ஒரு குழவிக்கு ஊழுடன் விளையாடுவது உவப்பாக உள்ளது! அது தெய்வங்களுக்கு உகந்த குழவி.

இந்திரனின் அருகே செம்பருந்தின் வடிவில் வந்த இந்திரமைந்தனாகிய ஜயந்தன் அதைக் கண்டு விழைவுகொண்டான். சிறகு விரித்துப் பாய்ந்திறங்கி அவன் அந்த முட்டையை கவ்விக்கொண்டு வானில் எழுந்தான். அன்னை சீறி எழுந்து விண்ணில் பாய்ந்தாள். அப்பருந்தை துரத்திச்சென்றாள். இந்திரன் அவளிடமிருந்து தப்ப மலைகளுக்குமேல் பறந்தான். அன்னை அவனைத் தொடர்ந்து சென்றாள். இந்திரன் விண்ணில் நிறைந்திருந்த கருமுகில்களில் ஒளிந்தான். அன்னை அவனை விடாது துரத்தினாள். அவன் தேவகுருவாகிய பிரஹஸ்பதியை அணுகி அவருக்குப் பின்னால் மறைந்துகொண்டான்.

அவரை அணுகிய அன்னை “என் குழவியை கொடுக்க ஆணையிடுங்கள், பிரஜாபதியே… இல்லையேல் என் நஞ்சால் இவ்விண்ணுலகை அழிப்பேன்… என் உடலின் குருதியனைத்தையும் நஞ்சாக்குவேன் என்று அறிக! என் குருதியில் நிறைந்திருக்கும் பலகோடி திரளாத முட்டைகள் அனைத்தும் இங்கே நச்சுக்குமிழிகள் என வெடிக்கும். விதைகளென எழும். அவை இவ்வுலகை முற்றழிக்கும்… ஐயம் வேண்டாம்” என்றாள். “அன்னையின் பகை அவள் குருதியிலுறங்கும் எழுதலைமுறைகளின் வஞ்சம் என நான் அறிவேன்… ஆனால் தாய் வேட்டையாடிப்பெற்ற உணவை ஒழிய எந்தப் பறவையும் ஒப்பாது… அது அப்பறவையின் வீரத்திற்கு இழுக்கு. உன்னிடம் இருக்கும் பன்னிரண்டாயிரம் முட்டைகளில் ஒன்று மட்டுமே இது… மீள்க! அந்த முட்டைகளில் முளைக்கும் அனைத்து நாகங்களும் பேருடல்கொண்டு எழும் என நான் உன்னை வாழ்த்துகிறேன். என் தவ வல்லமையை அதன்பொருட்டு அளிக்கிறேன்” என்றார்.

“நான் இந்த ஒரு மைந்தனுக்காகவே வந்தேன். அதற்குள் அவன் தன் அன்னை தனக்காக வருவாள் என நம்பி அமைந்திருக்கிறான். அவன்பொருட்டு உயிர்கொடுப்பதும், வேண்டுமென்றால் மூவுலகையும் அழிப்பதும் என் கடன் என்றே உணர்கிறேன்” என்றாள் அன்னை. “உன் முட்டைகள் அனைத்தும் அங்கே பாதுகாப்பில்லாமல் உள்ளன… நீ அவற்றை இழப்பாய்” என்றார் பிரஹஸ்பதி. “அவற்றை என் மூதன்னையர் காக்கட்டும்… நான் இந்த முட்டைக்காகவே போரிடுவேன்… பிறிதொன்றும் எண்ணமாட்டேன்” என்று அன்னை சொன்னாள். “குழவியர் முட்டைக்குள் இருப்பதுவரை என்னால் காக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் விண்ணை நோக்கிவிட்டார்கள் என்றால் மூதன்னையரால் காக்கப்படுபவர்கள்.”

“எனில் நீ இந்தச் செம்பருந்துடன் போரிடுக… அவனை வென்றால் நீ முட்டையுடன் மீள்வாய்” என்றார். செம்பருந்து தன் இரையை அப்பால் வைத்துவிட்டு சிவந்த சிறகுகளை அந்திமுகிலென திசைதொட விரித்து போருக்கிறங்கியது. அன்னை சீற்றத்துடன் அவனுடன் போரிட்டாள். ஆனால் செம்பருந்தின் கூருகிர்கள் வாள்கள் என அவள் உடலை கிழித்தன. அதன் அலகு அவள் தசையை குதறியது. அவள் உடலில் இருந்து வழிந்த குருதியால் வான்பரப்பு செம்மைகொண்டது. ஆயினும் ஒரு கணமும் அன்னை பின்னடையவில்லை. வாலால் செம்பருந்தை அறைந்தாள். தன் நச்சுப்பல்லால் அதை கவ்வ முயன்றாள். உடலால் அதை பன்னிரண்டாயிரம்முறை சுற்றி இறுக்க முயன்றாள்.

அவள் இரு விழிகளையும் செம்பருந்து கொத்தி குருடாக்கியது. நோக்கிழந்து கரிய அலைகளென விண்ணில் நெளிந்த அன்னை “மூதன்னையரே, காத்தருள்க!” என்று கூவினாள். “நீ திரும்பிச்செல்வாய் என்றால் உன்னை விட்டுவிடுவேன்… உன் பிற மைந்தருக்கும் அன்னையென அமைவாய்” என்று செம்பருந்து கூறியது. “இந்த ஒரு மைந்தன் அன்றி எனக்கு முப்புடவியும் இல்லை” என்றாள் அன்னை. மீண்டும் போர் நிகழ்ந்தது. அன்னை ஒவ்வொரு கணமும் என உயிரிழந்துகொண்டிருந்தாள். அப்போது விண்ணில் இந்திரனின் மின்னல்படை நெளிந்தாடியது. விழியிலாதவரும் நோக்கும் பேரொளி கொண்டிருந்தது அது. விண்ணாளும் தேவர்களுமே அஞ்சும்படி அது சுடர்துடித்தது. ஆனால் அன்னை அது என்னவென்று அறியாமலேயே பாய்ந்து தன் வாயால் கவ்விக்கொண்டாள்.

அவள் வாயில் அது நூறு நாகநாவுகளாக மாறியது. அதை படைக்கலமாகச் சுழற்றி ஜயந்தனை அடித்தாள். அவன் இடச்சிறகு வெட்டுண்டு மண்ணில் விழுந்து அங்கே மாபெரும் காட்டெரியாக பரவியது. வலச்சிறகு வெட்டுண்டு விழுந்து கடலை செவ்வண்ணம் கொள்ளச்செய்தது. அவன் பேரொலியுடன் மண்ணில் விழுந்து ஒரு மாமலையானான். ஜயந்தம் என்னும் அந்த மலையின் உச்சியில் திகைத்த விழிகள் இரு குகைகள் என திறந்திருக்க அவன் தலை ஒரு பாறைமுகடு என எழுந்து விண்ணில் நின்றது. பன்னிரண்டாயிரம் யுகம் தவம் செய்து மீண்டும் விண்ணுக்குச் செல்ல அவன் அங்கே அமைந்தான்.

“அன்னை தன் முட்டையை வாலில் சுருட்டி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தாள். மின்படையை வாயில் கவ்வியிருந்தாள். அங்கே அவளுடைய பன்னிரண்டாயிரத்துக்கு ஒன்று குறையும் முட்டைகளை மூன்று அன்னைதெய்வங்களும் நாகங்களாக வந்தமைந்து காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். மின்படையுடன் வந்த அன்னையைக் கண்டு புன்னகைத்து அவர்கள் மீண்டு சென்றனர். அந்தப் பன்னிரண்டாயிரம் நாகங்களிலிருந்து பெருகிய நாகர்குலத்தோர் அன்னையை வஜ்ரநாகினி என தங்கள் ஆலயங்களில் அமைத்தனர். இடக்கையில் மின்படையும் வலக்கையில் கருமுட்டையும் கொண்டு அமர்ந்திருக்கும் அன்னை கருவிலெழும் குழவியருக்குக் காப்பு என்றனர். அன்னைக்கு படையலிட்டு வணங்கி அருள்பெற்று மைந்தரை ஈன்று பொலிந்தனர். மின்படையன்னை வெல்க! அவள் அருள் பெண்டிரின் அடிவயிற்றுக்கு காப்பாகுக! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்றார் தீர்க்கசியாமர்.

“அஸ்தினபுரியில் மாமன்னர் ஹஸ்தி நூற்றெட்டு நாகஅன்னையரைக் கொண்டு களம்வரைந்து பூசனைசெய்து எழுப்பிய வஜ்ரநாகினி அன்னை அங்கேயே கோயில்கொண்டமைந்தாள். அவர் கட்டிய சிற்றாலயத்தில் வலக்கையில் முட்டையும் இடக்கையில் மின்படையும் நோக்கில்லா விழிகளும் அலைசுழன்ற வாலுடலும் அன்னைமுலைகளுமாக கல்வடிவில் தோன்றினாள். அங்கே அமைந்த பேரன்னையால் இந்நகர் மைந்தரால் பொலிந்தது. இந்நகரில் குழவியர் கருவுக்குள் கண் அமைந்ததுமே அவளைத்தான் முதலில் கண்டு புன்னகைத்தனர். அவள் அவர்களுக்கு மட்டுமே விழிகள்கொண்டவள் என இருந்தாள். அன்னையின் வால்நுனியை சிறுவிரலென்று வாயிலிட்டு நுணைந்தனர் மைந்தர். முலைப்பாலுக்கும் முந்தைய முதற்சுவையென அவள் எழுந்தாள். அஸ்தினபுரியின் தென்மேற்கே அமைந்த அவ்வாலயத்தில் கருவுறக்கம் கொள்ளும் அன்னை வெல்க! அவள் அருளால் நகர் பொலிக!”