நீலம் - 36

பகுதி பன்னிரண்டு**: 1.** முடி

இடையில் மஞ்சள்பட்டு சுற்றி இருகாலிலும் சலங்கை கட்டி தலையில் செந்நிறப்பாகை சூடி தார்தொடுத்த பாரிஜாதம் அணிந்து குறுமுழவை மீட்டும் கரங்களுடன் மங்கலச்சூதன் மன்றில் வந்து நின்றான். முழவொலி கேட்டு முன்றிலெங்கும் பரந்த மக்கள் வந்து சூழ்ந்தனர். ஒருவரை ஒருவர் ஒலியமையச் சொல்லிக் கூவினர். அமைதி எழுந்ததும் சூதன் அவைவணங்கி கைதூக்கினான். “வான்புரக்கும் தெய்வங்கள் வாழ்க! வளம் நிறைக்கும் மூதன்னையர் வாழ்க! காவல் தேவர்கள் நம்மைச் சூழ்க! காடும் கழனியும் செழிக்கட்டும். ஆநிரைகள் பெருகட்டும். அரசன் கோல் திகழட்டும்!” என வாழ்த்தினான்.

“ஆயரே, அழியா நெறி வாழும் யாதவரே, மாமதுரை நகரில் மங்கலம் எழுந்ததை அறிந்திருப்பீர். கம்சனின் கோட்டைமேல் கருடக்கொடி எழுந்தது. நகர்த்தெருவெங்கும் நறுமணம் நிறைந்தது. இன்நறுங்கள் மணம். கன்னியர் மலர்மணம். கற்பரசியர் கால்பொடி மணம். கற்றவர் சொல்மணம். கார்முகில்நீங்கி வானெழுந்தது வெண்ணிலவு. கரிப்புகை அகன்று கொழுந்தாடியது வேள்விநெருப்பு. பணிலப் பெருங்குரல் எழுந்தது. பழிநீங்கி மீண்டது மதுரை.”

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

சூதன் சொன்ன சொல் கேட்டு நின்றனர் மக்கள். கம்சன் நெஞ்சை உடைத்து எழுந்தான் கார்வண்ணன். செங்குருதி வழியும் நீலத்திருமேனியுடன் கைவிரித்து “இந்நகரும் முடியும் இமிழ்முரசும் கோலும் நான் கொள்கின்றேன். எதிர்ப்பவர் எவரெனினும் என் முன் எழுக!” என்றான். தன்னைச்சூழ்ந்து ததும்பும் அலைக்கைகளையே கண்டான். வாழ்த்தொலிகள் எழுந்து விண்உடைக்கக் கேட்டான்.

கண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனி தழுவ வந்தவர் நிலம் நோக்கிk குனிந்து தாள்தொட்டு தலையில் வைத்தார். “கண்ணனுக்கே அடைக்கலம் கன்றோட்டும் இக்குலங்கள்” என்றார். “அவ்வாறே ஆகுக” என்றனர் பன்னிருகுலத்தோர். ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலித்தது அரண்மனைப் பெருமுரசு. அதன் ஒலியை எதிரொலித்தன அணிவாயில் முரசங்கள்.

களிற்றின் தலைபிளந்து குருதியுண்டு காடேகும் சிம்மம் போல் அரண்மனைக்குள் சென்றான். அவன் அடிவைத்த வழியில் ஆயிரம் சுவடுகள் விழுந்தன. அவற்றில் ஆயிரம் இளங்குழவியர் எழுந்தனர். வேல்நுனி ஒளிகளில் வாள் வளைவொளிகளில் விழிகள் மின்னி அணைந்தன. வெண்பளிங்குத் தரையெங்கும் வெங்குருதி சொட்டியது. அடிகள் தொட்டுப் பரவி அரண்மனையை மூடியது. குருதிமணம் கொண்டது காற்று. குளிர்ந்து அறைதோறும் அலைந்தது. நெய்விளக்கின் சுடர்கள் அதை ஏற்று நடமிட்டன.

வேல்தாழ்த்தி வணங்கி வீரர்கள் நிரைவகுத்தனர். கோல் ஏந்தி முன் நின்றனர் படைத்தலைவர்கள். “என் அன்னை தவமிருக்கும் அறை சுட்டுக” என்றான். அக்ரூரர் “தாங்கள் நீராடி நல்லுடை மாற்றி செல்லலாமே” என்றார். “என் அன்னை விரும்பும் அணித்தோற்றம் இதுவே” என்றான். காவலர் வழிகாட்ட கற்குகைப் பாதையில் நடந்தான். கற்சுவர் அறைகள் தோறும் அவன் காலடியோசை பெருகி நிறைந்தது.

வெளியே நடந்ததெல்லாம் வசுதேவர் அறிந்திருந்தார். தேவகியை அறிவிக்க அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாயிற்று. அவள் இருந்த உலகத்தில் கண்ணன் வளரவில்லை. மூவைந்து வருடங்களாய் அவன் முலைப்பால் மறக்கவில்லை. “உன்மைந்தன் வென்றான்” என்றார். “என் மைந்தன் எப்போதும் எனை வென்றவன்” என்று விழிபூத்து நகைத்தாள். கொஞ்சி நிறையாமல் கைவிட்டு இறக்காமல் மரப்பாவை ஒன்றை மார்போடணைத்திருந்தாள். நகைத்து “கள்வன். கரியோன். என் குருதியெல்லாம் உண்டாலும் விடாய் அணையாத கனலோன்” என்று அதை அடித்தாள்.

பேயுருக்கொண்டிருந்தாள் அன்னை. பித்தெழுந்த விழிகள் நீர்த்துளிகள் என தெறித்தன. அறியாத காற்றால் அலைக்கழிக்கப்பட்ட கொடிபோலிருந்தாள். திரைவிலக்கி கற்சுவர்கள் திசைகளென்றாயின. அவள் பறந்தலைய வானம். பார்த்தமர மலர்க்காடு. பசியடங்கா கைக்குழந்தை. பால்சுரக்கும் முலையிணைகள். துயரென ஒன்றிலாத தீராப்பெருங்களிப்பு. “என் கண்ணன் என் மைந்தன்” என முத்தமிட்டு முத்தமிட்டுத் தேய்ந்தது சிறுமரப்பாவை. பதினைந்தாண்டாக உருமாறாப் பைதல்.

அன்னை அன்னை என அழுது ஆடைநனைத்தது. அருகில் இல்லாதபோது கூவி அழுதது. இன்னும் அன்பென்று நோய்கொண்டது. இரு என்னுடன் என்று உடல்நலிந்தது. என்னாகும் என்று ஏங்குகையில் எழுந்து நகைத்தது. புன்னகையும் சிரிப்பும் புதுச்சொல் எழுந்த இதழுமாய் மாயம் காட்டியது. கவிந்தது, தவழ்ந்தது. ஒளிந்து தேடவைத்தது. காணாமல் தவிக்கவைத்தது. சிரித்து மீண்டுவந்தது. கணம்கூட ஒழியாமல் அவள் காலத்தை நிறைத்திருந்தது. அவள் உடலுருக்கி உண்டது. உளம் எடுத்து விளையாடியது.

பகலிரவுகள் சென்று பருவங்களாகி காலமென கற்சிறை நிரப்ப அம்முகமே அவருக்கும் மகவாகியது. அவரைக் கண்டதும் அதன் விழிகளில் இளநகை எழுந்தது. இதழ்களில் சொல்லாச் சிறுசொல் அரும்பி நின்றது. எடுஎன்னை என கைநீட்டியது. ஏன் இங்கில்லை என உதடுகோட்டியது. மெல்ல கையில் எடுக்கையில் மேனிசிலிrப்பதை உணர்ந்தார். நெஞ்சில் அணைக்கையில் நெருப்பெழுந்தது உள்ளே. ஏழு முகங்கள் சூழ நின்றன. எங்களையும் எங்களையும் என ஏங்கின.

காலடி ஓசைகேட்டு கற்படிகளுக்குக் கீழே நின்றார் வசுதேவர். அக்ரூரர் ஓடி அருகணைந்து “வாருங்கள் வசுதேவரே. வந்துவிட்டான் உங்கள் மைந்தன்” என்றார். “இத்தனை நாள் இருளிலேயே வாழ்ந்துவிட்டேன். ஒளிகொள்ளும் விரிவு என் விழிகளுக்கு வரவில்லை” என்றார் வசுதேவர். “இறையருளால் என் மைந்தன் கரியோன். என் கண்களுக்கு உகந்தோன்” என நகைத்தார்.

அக்ரூரர் “அன்னை எங்கே? அவள் மீண்டும் பிறந்தெழும் நாள் இன்று” என்றார். நெடுமூச்செறிந்து வசுதேவர் ”அவள் இன்னும் மைந்தனை இழக்கவில்லை. ஆகவே இம்மைந்தனை அடையப்போவதும் இல்லை” என்றார். “இழப்பதின் துயரில்லாமல் அவளை இருத்திய தெய்வம் கருணைகொண்டது” என்றார் அக்ரூரர்.

காலடியோசை கேட்க கைகொண்டு விழிபொத்தி நோக்கினார். கண்ணீர் திரைவழியே கண்ணன் வரக்கண்டார். நீலம் திரண்ட நெடுந்தோள்கள். வேறேதும் காணாமல் விழி மலைத்து நின்றார். அருகணைந்து அவர் காலடி தொட்டான். “அருள்க தந்தையே” என்றான். “அருளெல்லாம் உனது” என்றார். எழுந்து அவர் தோள் நிகராய் தோள்விரித்து நின்றான். இருகரமும் நடுங்க இதழ்கள் அதிர ஏனென்றும் என்னென்றும் உணராமல் நின்றார். பின் நீலப்புயம் பற்றி நெஞ்சோடு இறுக்கிக் கொண்டார். விழிநீர் பெருக விம்மியழுது கால்சோர்ந்து அவன் தாள்சேர்ந்து விழுந்தார்.

தன்னை அள்ளித் தாங்கிய புயங்களின் வல்லமையை அறிந்தகணமே தந்தையென்றானார். அக்கரங்கள் மேல் கரம் வைத்து “எளியவன் நான். எந்தையே உன் கால்தொடும் தகைமையும் அற்றவன்” என்று நாத்தளர்ந்து நடுங்கும் கைகுவித்தார். “அறிவைக் கடைந்து ஆணவ நுரை எழுப்பி தருக்கினேன். வெறும் குமிழி கண்டு கூத்தாடினேன். செந்நீரை கண்ணீராக்கி அறிந்தேன் சிறியவன் நான் என்று. கல்சூழ்ந்த இருளில் கடுந்தவம் புரிந்து என்னை மீட்டேன். கரியவனே, என் குலமூதாதையர் முகமே, இனி உனக்கே அடைக்கலம்” என்றார்.

நெடுமூச்செறிந்து விலகி தன் நெஞ்சை நோக்கி திகைத்தார். அங்கே செறிந்திருந்த செங்குருதி நோக்கி “கண்ணா, இது என்ன ஆடல்?” என்றார். “எந்நாளும் மறையாது இக்குருதித்தடம்” என்றான் கண்ணன். “எந்தையே, அக்குருதியில் அகம் தொட்டவர் நீங்கள். அவன் அமர்ந்த அரியணையில் ஒருகணமேனும் அமர்ந்திருக்கிறீர்கள்” என்றான். வசுதேவர் தலைகுனிந்து “ஆம், உன் விழிநோக்கும் வல்லமை எனக்கில்லை” என்றார்.

இருண்ட குகைவழியில் எழுந்த ஒலியை நோக்கினாள் அன்னை. கல்கனிந்து ஈன்றதுபோல் கரியவன் வரக்கண்டாள். செங்குருதிமூடிய சிற்றுடல். ஈன்ற திருநாளில் அவள் இருகையில் ஏந்திய குழவி. ஒரு கணம் திகைத்தாள். உடலதிர நின்றாள். கையிரண்டும் விரித்து கதறி ஓடிவந்தாள். முழந்தாள் மடிந்து அவன் முன்னே விழுந்தாள். நிலம் தொடும் முன்னே நீட்டிய கையால் பற்றிக்கொண்டான். தேரோடிய பாம்பென தீபட்ட உடலென அவன் கையில் நெளிந்தாள். உள்மூச்சு வெளியேறும் உயிரெனத் துடித்தாள்.

அவள் இருவிழிநடுவே தொட்டான். இடச்செவியில் “அம்மா” என்றான். இமையதிர்ந்து விழித்தெழுந்து இதழ்மலர்ந்து நகைத்தாள். அக்கணம் பிறந்தவளாய் உணர்ந்தாள். அழிந்த வருடங்களை மீளப்பெற்றாள். அன்னையென கன்னியென சிறுமியென குழவியென ஆகி அவன் கையிரண்டில் தவழ்ந்தாள். “என் தேவா!” என்றாள். அவன் அவள் கன்னத்தில் முகம் வைத்து “என்னடி தேவகி?” என்றான். முகம்சிவந்து சிரிப்பெழுந்து மூச்சடைத்தாள். அவன் செவிபற்றிச் சினந்தாள். “அன்னைபெயர் சொல்கிறாயா? அடிவாங்கி அழுவாய் நீ” என்றாள். அவன் நகைத்து அவள் கைபற்றி தன் முகத்தில் அறைந்தான். “அன்னை அடியேற்றபின் நான் அடைவதற்கேது வேறு?”என்றான்.

அரண்மனை ஒளி கொண்டது. அரியணை அணிகொண்டது. பணிலக்குரல் பொங்கி ஒலிக்க பெருமுரசம் அறைகூவியது. பன்னிரு குலத்தாரும் மூத்தாரும் படைநான்கின் தலைவர்களும் வந்து அவைசூழ்ந்தனர். தேவகரும் மைந்தர்களும் போஜரும் பிறரும் சபை அமர்ந்தனர். மதுவனத்தின் சூரசேனரும் விருந்தாவனத்தின் நந்தகோபரும் மைந்தருடன் மகளிர் சூழ மன்றமைந்தனர்.

வெண்ணிறத்தான் அருகே விரிநீலன் நின்றிருந்தான். அங்கிருந்த மகளிர் அவையை நோக்கவில்லை. அவன் உடலைக் கண்டவர்கள் தாங்கள் உள்ளதை உணரவில்லை. கன்றென்றும் காளையென்றும் கண்மயக்கு காட்டி அங்கே நின்றான். களிறோ கருமுகிலோ என அழிந்தது கன்னியர் நெஞ்சம். “கண்ணன் கண்ணன்” என்று இதழ்கள் சுருங்கி மலர்ந்தன. கண்நிறைந்தான் கரியோன் என கருத்தழிந்தனர். நூறு வண்ணத்துப்பூச்சிகள் சென்றமரும் ஒற்றை மலர். மலையடுக்கே இதழ்களென மலர்ந்த இமயம். மது பெருகும் காளிந்தி.

அக்ரூரர் எழுந்து அனைவரையும் வணங்கி “யாதவரே, ஆபுரக்கும் மாதவரே, அனைவரையும் வணங்குகிறேன். மாமதுரை நகரின் மணிமுடி இன்று சீர்கொண்டது. அதன் செங்கோல் நேர்கொண்டது. மகளிர்முறைப்படி அது தேவகரின் மகளுக்கே உரிமை. அன்னை தேவகி இன்று அரியணை அமர்வார். மணிமுடி சூடி மதுரைக்கு அரசியாவார். அரசிக்குத் துணையாக அரசர் கோல்கொள்வார்” என்று அறிவித்தார்.

மங்கல இசை எழுந்தது. மஞ்சளரிசியுடன் மலர் மழை பொழிந்தது. முரசும் முழவும் குழலும் குரவையும் எங்கும் நிறைந்தன. பொன்பட்டாடையும் ஒளிமணிநகைகளும் புதுமலர் மாலையும் புன்னகைஒளியும் அணிந்தவளாக அன்னை நடந்துவந்தாள். அவள் இருபுறமும் மங்கலத் தாலமும் மலர்நிறை கடகமும் புதுப்பாற்குடமும் பூமலர்க்கொம்பும் ஏந்திய தோழியர் சூழ்ந்தனர். ஆயர்குலத்தின் மூதன்னையர் அவளை எதிர்கொண்டனர். அணிக்கை பற்றி அரியணை அமர்த்தினர். பூமரக்கொம்பை இடக்கை ஏந்தி புதுப்பால் கலத்தை மடியிலமர்த்தி அன்னை அமர்ந்தாள். கன்றுசூழும் கழியே செங்கோலாக அன்னை அருகே அரசர் அமர்ந்தார்.

மாமதுரை மணிமுடியை தேவகி அணிந்தாள். மைந்தர் இருவர் இடவலம் நின்றனர். இதுபோல் இன்னொருவிழவு எழுமோ இந்நகரில் என்றனர் மூத்தோர். பொன்னும் மணியும் காணிக்கையாக்கி அன்னையைப் பணிந்து அடிதொழுது ஏத்தினர். நால்வகை குடிகளும் நகர்வாழ் வணிகரும் நால்வகை படைகளும் நதிக்கரை சேர்ப்பரும் வரிக்கொடை அளித்து வணங்கிச்சென்றனர்.

ஆயரே யாதவரே, சொல்லறிந்தோன் சூதன் மொழிகேளீர். மாமதுரை முகடுகளில் மணிக்கொடிகள் எழக்கண்டேன். முரசொலியில் யமுனை நதியலைகள் ஆடக்கண்டேன். நகரெங்கும் நிறைந்த நடுக்கத்தையும் நான்கண்டேன். கண்களெல்லாம் பதறி கருத்தழிந்து அலைந்தன. கால்கள் தளர்ந்து கற்படிகளில் வழுக்கின. கொத்தள அறைகளுக்குள் குளிர் இறுகிப் பரந்தது. சொல்லாத மொழிஒன்று நாவெல்லாம் நின்றது. சுவர்க்கோழி ஒலி போல பகலொளியில் பறந்தது.

அன்னை அறைசேர்ந்தபின்னர் மன்னர் அவையமர்ந்தார். முதலாணை கேட்க முகங்கள் கூர்ந்தன. வசுதேவர் வாய் திறப்பதற்குள் கைகூப்பி எழுந்த கண்ணன் உரைத்தான் ”தந்தையே, பாவங்களை நீர் கழுவும். பழிகளை செங்குருதி ஒன்றே கழுவும். புதுக்குருதி கழுவட்டும் இந்நகரின் புன்மை எல்லாம்.” பேயெழக் கண்டவர்போல் பதைத்தழிந்தன அவர் விழிகள்.

வசுதேவர் “மைந்தா, போரில் வெல்வதும் படுகளம் வீழ்வதும் காலத்தின் ஆடல். பகைமுடித்தபின் பழிகொள்வது கருணை அல்ல” என்றார். “வாள் என்றால் கூர் என்றே பொருள் தந்தையே. கருணையுள்ள அறம் என ஒன்றில்லை” என்றான் கன்ணன். “என்றும் நிகழும் அரியணைப் போர். கொடி எடுத்து களம்செல்வோர் குருதி கொடுக்கும் கடன்கொண்டோரே. குடியென்று அம்முடிக்கீழ் அமைபவர் கண்ணீர் துளிகொடுப்பதும் முறையே. ஆனால் குழந்தைகளைப் பலிகொள்ளும் குலம் ஏதும் இப்புவியில் எந்நாளும் வாழலாகாது.”

அவை முழங்கி அதிர கண்ணன் சொன்னான் “குழவியர் குருதியில் கைதொட்ட எவரும் கழுவேறாது இங்கு எஞ்சலாகாது. இதுவே நீதியென இப்புவி அறியட்டும்!” கடுங்குளிர் எழுந்ததுபோல் கால்நடுங்கி அமைந்திருந்தது அவை. கைகூப்பி எழுந்து “நீ அறியா நெறியில்லை கண்ணா. நான் அறிந்த நூல் கொண்டு சொல்கின்றேன்” என்றார் அக்ரூரர். “அரசன் சொல் நிற்பது அடிதொழுவார் கடனல்லவா? தன் பணிசெய்வோன் பழியேற்றல் முறையாகுமா?”

செங்கனல் துளிகளென சுடரெழுந்த அவன் விழிகண்டனர் அவையோர். சிம்மம் நடந்து சபைநடுவே நின்றது “தன் அகம் அமர்ந்த அரசனை அறியாத மானுடன் எவனும் இல்லை. அவன் வலக்கையின் வாளும் இடக்கையின் மலரும் கண்டு அழுது நகைக்கிறது அறியாச் சிறுமகவு. அவன் கூர்வாளின் முனைகண்டு திகைக்கிறது தீயோர் கனவு. மண்ணாளும் வேந்தரெல்ல்லாம் மானுடம் ஆளும் அவனுக்கு அடிமைகளே.”

“அறமெனும் இறைவன். அழிவற்றவன். ஆயிரம் கோடி சொற்களாலும் மறைத்து விடமுடியாதவன். தெய்வங்களும் விழிநோக்கி வாதிட அஞ்சுபவன். நாநிலம் அறிக! நான்கு வேதங்கள் அறிக! நன்றும் தீதும் முயங்கும். வெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்.” கரும்புயலின் செம்மையம் போல சுழித்தது கண்ணன் இதழ். “கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.”

நாத்தளர நெஞ்சலைய “இல்லை, என் இதழால் அதைச் சொல்ல இயலாது” என்றார் வசுதேவர். “அவ்வாறெனில் இக்கணமே கோல்துறந்து களமிறங்கி என் முன் நில்லுங்கள். உங்கள் நெஞ்சுபிளந்த குருதிபூசி அவ்வரியணை அமர்ந்து நான் ஆணையிடுகிறேன்” என்றான் கண்ணன். எஞ்சிய சிறு சொல்லும் உதிர்ந்தழிய அவை அமர்ந்தோர் அனைவரும் எழுந்தனர். கைகள் கூப்பி நெஞ்சமர்ந்தன. கண்கள் ஒளிரும் ஒற்றைச் சொல்லென்றாயின.

மென்மலர் வைரமென்றானது கண்டு மேனி அதிர்ந்தார் வாசுதேவர். விழியென ஒளிர்ந்தன வான்கதிர் இரண்டு. முகமென்றானது ஊழிநெருப்பு. கண்ணனென அங்கே நின்றது காலமென வந்த ஒன்று. இருமுனையும் மின்னும் கூர்வாள். யுகமழித்து யுகம் படைக்கும் யோகம். உதிர நதியிலெழும் பெருங்கலம். ஒருநாளும் அணையாத நீதியின் பெருவஞ்சம்.

கைகூப்பி கண்ணீர் வழிய “அடியேன் ஏதும் அறிந்திலேன். இவ்வரியணை உனது. ஆணையிடுக” என்றார் வசுதேவர். “இக்கணமே, வெஞ்சினம் கொண்டு எழட்டும் வேல்கள்!” என்றான் கண்ணன். இரும்பிலமைந்த முட்புதர்போல் நகரெங்கும் எழுந்தன ஆயிரம் கழுமுனைகள். ஆயிரம் வஞ்சம் கொண்ட விழிகள் அவற்றில் ஒளிர்ந்தன. நெளியாது நீட்டி நின்றன உதிரச்சுவை தேடும் நாவுகள். திசைசுருட்டி எழுந்து தெருவெங்கும் மூடிச் சூழ்ந்தது பெரும்புயல். அது சென்ற நகரெங்கும் முள் தோறும் அமர்ந்து துடித்தன சருகுகள். கொழுங்குருதி வழிந்தோடி செழும்புழுதி சேறாயிற்று.

ஆயரே, யாதவரே, நகரெங்கும் நிறைந்திருந்த செங்குருதிச் சிறகுள்ள ஆயிரம் பறவைகள் அன்றே அகன்று சென்றன என்றனர் சூதர். நான் கண்டு அஞ்சிய பறவைகள். அணையாக்கனல் விழிகள். அலைபாயும் சிறகுகள். ஒருபோதும் கூடணையாதவை. ஒற்றைச்சொல்லை கூவிச்சூழ்பவை. மதலைச்சிறுசொல். மாயாப்பழிச்சொல்.

பழியகன்றது மதுரை. விழி தெளிந்தன வீடுகள். படிகள் தோறும் மலர்கொண்டன தெருக்கள். ஒளி கொண்டு விரிந்தன ஆயர்முகங்கள். சொற்கள் நகைகொண்டன. தெய்வங்கள் குடி மீண்டன. முன்பொருநாள் இந்நகரை முனிந்து அகன்றுசென்றேன். முடிநிகழ்வு நாளில் முழவேந்தி மீண்டுவந்தேன். நகரெலாம் சென்று நாகளைக்க பாடிநின்றேன். கண்ணன் எனச்சொல்லி கரந்து வைத்த கலங்களெல்லாம் வெண்ணை பொங்கி விரிந்த கதை கேட்டேன். கோபன் பெயர் சொன்னால் கொடிகள் உயிர்பெறக் கண்டேன். பொன்னணியில் நீலமணிபோல கண்ணன் திகழும் திருநகர் இம்மாமதுரை.

ஆயரே இதுகேளீர். அன்று நான் கண்டேன் இதனை. அரியணை அமர்ந்தபோது அன்னை முகத்தில் அருளில்லை. இமைகள் தாழ இதழ்கள் இறுக அங்கிருக்கும் எவரையும் அறியாமல் அமர்ந்திருந்தாள். தன் பட்டாடை நுனி மூடி அந்தப் பாவையை வைத்திருந்தாள். கண்ணன் வந்த களிப்பை ஒருநாளிலேயே அவள் இழந்தாள். மரப்பாவையை மார்போடணைத்து இரவுபகல் ஏங்கியிருந்தாள். கண்ணீர் உலராத கன்னம் நோக்கி “என்ன இது? ஏனிந்த பாவை இனி?” என்றார் வசுதேவர். ”ஏழுமக்கள் இவர். என் நெஞ்சின் தழல்கள்” என்றாள். மண்மூடும் பெருமழைபோல் முகம் பொத்தி அழலானாள்.

வெண்முரசு விவாதங்கள்