மாமலர் - 93

93. முதல்மணம்

திசை தெளிவானதுமே பீமன் இயல்பாக நடக்கத் தொடங்கினான். எச்சரிக்கையில் கூரடைந்த புலன்கள் தளர்வுற்றதும் பசி தெரியலாயிற்று. பசி உணவுக்கான புலன்களை எழுப்பியது. மூக்கும் விழிகளும் தேடல்கொள்ள சற்று தொலைவிலேயே அவன் கனிமரங்களை கண்டான். மரங்களுக்கு நடுவே வாழைமரத்தொகைகள் யானைக்கூட்டங்களின் கால்கள்போல நின்றிருக்க உள்ளே குட்டிகள் என சிறு கன்றுகள் செவியாட்டின. பெரிய காய்களுடன் வாழைக்குலைகள் மத்தகத்திலிருந்து துதிக்கை என வளைந்து நின்றன. அவன் வாழைகளை உதைத்துச் சரித்து கனிகளை உரித்துத் தின்றான். உண்ணும்தோறும் பசிபெருக மேலும் மேலும் வாழைகளை சரித்தான்.

பின்னர் எழுந்து நீர் எங்கு கிடைக்கும் என சுற்றும் நோக்கினான். நீரோசை கேட்டு நடந்துசென்று வாழைக்கூட்டங்களுக்கு அப்பால் ஓடிய சிறிய ஓடையை கண்டடைந்தான். அதை நோக்கி நடக்கையில் ஏன் தனக்கு மதுநினைவு எழுகிறது என எண்ணியபின்னரே தன் வயிற்றிலிருந்து எழுந்த பழங்களின் மணத்தால் என உணர்ந்தான். உண்ட பழங்கள் தன்னுள் மதுவாகின்றன என எண்ணியதும் புன்னகை எழுந்தது. அவற்றை உள்ளுறைந்த வெப்பம் நொதிக்கச்செய்கிறது. மதுவை சமைத்து அதை உண்டு களிகொள்கிறது உடல்.

குனிந்து நீரை அள்ளி அருந்தியபோது உண்மையாகவே அவன் புதியமதுவின் நறுமணத்தை உணர்ந்தான். அவன் நா சுரந்து கடைவாய் வழியாக வழிந்தும் விட்டது. எழுந்து நின்று மூக்கைத்தூக்கி நான்குபக்கமும் காற்றை ஏற்று கூர்ந்தபோது அந்த மணம் வரும் திசையை அடையாளம் கண்டான். அங்கே எவரேனும் இருக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே கால்களை மிகமெல்ல எடுத்துவைத்து பாறைகள் மேல் மட்டும் மிதித்து கிளைகள் அசையாமல் நடந்து சென்றான். ஆனால் ஓசைகள் ஏதும் எழவில்லை. மணம் மட்டும் மிகுந்தபடியே வந்தது.

அங்கே யானைக்கூட்டம் ஒன்று உடலொட்டிப் படுத்திருப்பதுபோல பாறைத்தொகை ஒன்றிருந்தது. மதுவின் மணம் அதன்மேல்தான் எழுகிறது என உணர்ந்தபின் அவன் மேலே தொற்றி ஏறினான். பாறைமேல் ஏறியபோது அங்கே உருட்டி கொண்டுசென்று வைத்ததுபோல முட்டைவடிவமான பெரிய பாறை ஒன்று மற்றபாறைகள் மேல் அமைந்திருக்கக் கண்டான். அதன் மேலிருந்தே மதுவின் மணம் எழுகிறது என அறிந்தான். அதை சுற்றிவந்து நோக்கியபோது எவராலும் ஏறமுடியாதபடி அது மிகச்செங்குத்தாக இருப்பது தெரிந்தது. அதன் வளைந்த பரப்பு நீர்வழிந்த தடங்களுடன் மென்மையாக இருந்தது.

அவன் அதை சுற்றி வந்தான். மேலே பாறையின் விளிம்பில் ஒரு சிறிய வெடிப்பு இருப்பதைக் கண்டதும் ஓர் எண்ணம் தோன்றி கீழே சென்று காட்டுக்கொடிகளைப் பறித்து இணைத்துக்கட்டி வடம் ஒன்றை செய்தான். நீண்ட கல் ஒன்றை அதன் முனையில் கட்டி எடுத்துக்கொண்டு மேலே வந்து அதை அந்த வெடிப்பை நோக்கி வீசினான். அது நான்கு ஆள் உயரத்திலிருந்தமையால் பன்னிரண்டுமுறை வீசியபின்னரே அந்த வெடிப்பில் அமர்ந்தது. இழுத்து நோக்கியபோது கல் வெடிப்பினுள் நன்றாக இறுகிக்கொண்டதை உணரமுடிந்தது. வடத்தின் வழியாகத் தொற்றி மேலேறத் தொடங்கினான்.

பாறைவிளிம்பில் தொற்றி மேலேறி அமர்ந்து நோக்கினான். இயற்கையாக உருவான நீள்வட்டக்குழி ஒன்று அங்கே இருந்தது. அதற்குள் கலங்கலாக அழுகிய வாழைப்பழங்கள் நொதித்துக்கொண்டிருந்தன. அவற்றின் கெடுமணம் குமட்டி உடலை உலுக்கியது. அவன் அப்பாறையை அணுகிக்கொண்டிருக்கையிலேயே மதுவின் இன்மணம் வலுத்து செறிந்து கெடுமணமாக ஆகிக்கொண்டிருந்தது. அருகே குனிந்தபோது அழுகிய சடலமென அதன் கெடுமணம் குடல்களைப் புரட்டியது. கண்களை மூடி அந்தக் கெடுமணத்தை தன் உடலெங்கும் நிறைத்தான். அறிந்த கெடுமணங்கள் அனைத்தும் அதனுடன் தொடர்புகொண்டிருந்தன. நறுமணங்கள் மென்மையாகவும் கெடுமணங்கள் வன்மையாகவும் இருப்பது ஏன்? வன்மையாகும் அனைத்தும் கெடுமணங்களாக ஆகிவிடுமா என்ன? கெடுமணங்களெல்லாம் வாயூறவைப்பது என்ன விந்தை?

ஒரு கணத்தில் தன்னை கிழித்துப் பிரித்து முன்னால் உடலை உந்திக்குனிந்து அதன் மேல்பரப்பில் கனிந்து நின்றிருந்த கொழுங்கதுப்பை கைகளால் அள்ளிக் குடித்தான். வாய் குமட்ட உடல் உலுக்கியது. ஒருகணம் உதடுகளை இறுக மூடி அந்தத் தைலம் உடலுக்குள் நிலைக்க விட்டான். அதை உள்ளே எழுந்த வாய்கள் வாங்கிக்கொண்டன. அடுத்த கை அள்ளி குடித்தபோது எளிதாக இருந்தது. பின்னர் நிறுத்தமுடியவில்லை. மீண்டும் மீண்டும் குடித்துக்கொண்டிருந்தான். அது உள்ளே உருகி அனலாகி குருதிப்பாதைகளில் ஊறிப்படர்ந்து கைவிரல் நுனிகளையும் காதுவிளிம்புகளையும் மூக்குமுனையையும் சென்றடைந்தது. கண்களில் வெம்மையாகப் பரவியது.

தசைகள் களிமண்பாவை நீரில் ஊறுவதுபோல தளரத் தொடங்கின. நாக்கு இரையுண்ட பாம்பென தடித்துத் தளர்ந்தது. தன் விரல்கள் ஒவ்வொன்றும் விடுபட்டு விலகுவதை உணர்ந்தான். அங்கிருந்து இறங்கமுயல்வது வீண்முயற்சி எனத் தோன்றியது. அக்குழியில் இருந்து கைகளை ஊன்றி உடலைப் பெயர்த்தெடுத்து விலக்கி மல்லாந்து படுத்துக்கொண்டான். கைகளையும் கால்களையும் விரித்து வானை நோக்கினான். வானை நோக்கி நெடுங்காலமாயிற்று என்று தோன்றியது. கண்கள் கலங்கி வழிந்துகொண்டே இருந்தன.

tigerஅவன் துயின்றுவிட்டிருந்தான் என கனவுகள் கிளம்பியபோதுதான் அறிந்தான். அவனைச்சூழ்ந்து நால்வர் அமர்ந்திருந்தார்கள். அந்திச்சாயொளியில் நால்வரின் நிழல்களும் பின்பக்கம் நீண்டு விழுந்திருந்தன. அல்லது புலரியா? பறவையொலிகள் எழவில்லை. நெடுந்தொலைவுக்கு அப்பால் ஏதோ அருவி ஒன்று பொழிந்துகொண்டிருந்தது. மலையுச்சியில் இருந்து நேராக அடியிலி நோக்கி. அதன் ஓசை சூழ்ந்திருந்த இலைகளில் இருந்து மட்டும் எழுந்தது. அவர்கள் ஒன்றும் பேசாமல் விழிகள் சூழ அமர்ந்திருந்தனர். அவன் இறந்துவிட்டிருந்தான் என எண்ணினார்களா? நான்கு நிழல்களும் மெல்ல எழுந்தாடிக்கொண்டிருந்தன. அவர்களின் உருவங்களிலிருந்து பிரிந்து வானில் பறக்க விழைபவை போல. அல்லது அவர்களையும் கவ்விக்கொண்டு எழமுனைபவை போல.

அவன் எழுந்தமர்ந்தான். எதிரே அமர்ந்திருந்தவளின் விழிகளை நோக்கி “நீ யார் என அறிவேன்” என்றான். “ஆம், நானும் உன்னை பார்த்திருக்கிறேன். நீங்கள் ஒருவர் பிறரென நடிப்பவர்கள். எனவே ஒருவர் விழியில் பிறர் தோன்றுவதுண்டு” என்றாள் அவள். “கலைமகள் என நின்று சொல்லாடுவாய். மழலையென விலகி அதையே களியாடுவாய். அறிந்தவள் என்றும் பேதையென்றும் இருமுகம் காட்டி நிழலாடுவாய்” என்றான் பீமன். அவள் சிரித்து “ஆம், காமத்தில் ஆடலெல்லாம் எதிராடலே” என்றாள். “சொல்விழையும்போது பேதமையையும் பேதமையை நாடுகையில் சொல்கூரையும் காட்டி நீ அலைக்கழிப்பதன் வலியையும் நான் அறிவேன்” என்றான் பீமன். அவள் சிரிக்க அவளுக்குமேல் எழுந்த நிழல் “அது என் களம்” என்றது.

அருகிருந்தவள் அவனிடம் “நான் உன்னுடனும் களமாடியுள்ளேன்” என்றாள். “நீ விழைந்தது கூர். வஞ்சமொன்றே கூரின் கூர் என்பதனால் நான் நஞ்சுகொண்டேன்.” பீமன் “ஆம், நஞ்சனைத்தும் மதுவே” என்றான். “கூர்முனைகளில் அனல் வாழ்கிறது. மின்னல் வானின் கூர்” என்றாள் அவள். “உன்னை ஒழியாது பற்றிக்கொள்ள உன்னில் அழியா வெறுப்பொன்றை நட்டுவைப்பதே மேல் என அறிந்தேன்.” பீமன் “ஆம், நான் கட்டுவிரியன் தீண்ட தப்பியோடும் சிற்றெலி” என்றான்.

அவள் விழிகள் ஒளிர புன்னகை சூடி “உன் ஆணவத்துடன் ஆடினேன். உனக்கு அப்பால் ஒருவன் இருக்கிறான் என ஒவ்வொரு சொல்லிடையாலும் விழியசைவாலும் காட்டிக்கொண்டே இருந்தேன்” என்றாள். பீமன் தவிப்புடன் “போதும்” என்றான். அவள் நிழல் “நான் அவனுடன் ஆடுபவள். உன் மஞ்சத்திற்குமேல் எழுந்து நின்று வெறியாடுவேன்” என்றது. பீமன் தன்னை உலுக்கிக்கொண்டு அக்கனவிலிருந்து எழ முயன்றான். “உன்னுள் புகுந்தும் அவன் ஆடினான் என்பதை அறிவாயா?” பீமன் உறுமியபடி எழுந்தான்.

அவன் மார்பில் கையை வைத்து அழுத்தி படுக்கவைத்த மூன்றாமவள் இளமைநகைப்புடன் “நான் வெறும் சிறுமி. முதுவேனிலின் முதல்தளிர் என மழலை சூடியவள்” என்றாள். “ஆம், நீ என் களித்தோழி. நான் கழற்றவிழைந்த அனைத்தையும் சூடாதவள்” என்றான் பீமன். “மென்மை என்பதனால் ஒளிகொண்டது. நிலையற்றதென்பதனால் கை படாதது. எளியவைபோல் அலைக்கழிப்பவை பிறிதெவை?” அவள் நகைத்து சற்றே நாண அவளுக்குமேல் எழுந்த நிழல் வற்றி ஒடுங்கிய முதுமகள் போலிருந்தது. முறியும் கிளையின் ஒலி என வலியும் துயருமாக மெல்ல முனகியது.

நான்காவது பெண் அவனை நோக்கி புன்னகைத்து “நான் அன்னை” என்றாள். “அமுதுமணத்துடன் அணைத்துக்கொள்பவள்.” பீமன் “ஆம், உன் கைகளில் நான் உறங்கியிருக்கிறேன்” என்றான். “என்றுமிருந்தன என் விழிகள் உன்னோடு. நான் உன்னை ஒருபோதும் விலக்கியதில்லை” என்றாள். அவள்மேல் எழுந்த நிழல் எட்டுபெருங்கைகள் விரிய வாயில் கடித்த சிறுமகவுடன் கொலைக்காளி என நின்றாடி பின் அடங்கி கிளைவிரித்த தாய்மரம் போலாகியது.

அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். தொலைவில் நின்றிருந்த மரம் ஒன்றின் கிளைநிழல் அவனைச்சூழ்ந்து ஆடிக்கொண்டிருந்தது. நோக்குணர்வு பெற்று எழுந்தபோது தன்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பெரிய பெண்குரங்கை கண்டான். கையூன்றி எழுந்தான். “அஞ்சாதே” என்று அது சொன்னது. “நான் என் மைந்தருக்காக அமைத்த மதுக்களம் இது.” பீமன் வாயைத் துடைத்தபடி “ஆம், எனக்கு மிக உகந்த மது இதுவே என உணர்ந்தேன்” என்றான். “நீயும் மரமானுடரில் ஒருவனே” என்றது அன்னைக்குரங்கு. “உன் வியர்வையில் உன் அன்னையின் முலைப்பாலின் மணம் உள்ளது.”

“ஆம், நான் என்றும் என்னை அவ்வாறே உணர்ந்திருக்கிறேன்” என்றான் பீமன். “அன்னை என நான் உணர்வது அந்த முலைப்பாலையே என அறிவது கனவுகளில்தான்.” அன்னைக்குரங்கு அவனருகே வந்து எழுந்து அவன் தலைமுடியைப் பற்றி குனித்து குழல்கற்றைகளைப் பிரித்து கைகளால் அளாவியது. காதுகளைப்பற்றி மேலே தூக்கி அவன் கண்களை நோக்கி “நீ மிகப்பெரியவன்” என்றது. “ஆம் அன்னையே, ஆகவேதான் என்னால் என் குருதியினரைப்போல மரம்தாவ இயலவில்லை” என்றான் பீமன்.

அன்னை அவன் உடலை வருடிக்கொண்டே இருந்தாள். அவள் எழுந்துநின்றபோது மென்மயிர் படர்ந்த நெஞ்சில் முலைக்கண்கள் தெரிந்தன. “நான் முற்றிலும் உதறி வந்துவிடுகிறேன். எதுவும் எஞ்சாமல் இங்கே இருந்துகொள்கிறேன்” என்றான். “உன்னால் வேறு மொழி பேசமுடிகிறது. வேறு கனவுகளை நீ காண்கிறாய்” என்றாள் அன்னை. “ஆம்” என அவன் சொன்னான். “அவற்றை உதறமுடியாது. அவை உதிரவேண்டும்.” பீமன் “அது நிகழுமா?” என்றான். “நிகழக்கூடும்” என்றாள். பீமன் “வாழ்த்துக, அன்னையே!” என்றான்.

“உனக்கும் அமைக!” என்றாள் அன்னை. “உன் மூத்தவனுக்கு நிகழ்ந்துள்ளது. அவன் ராகவ ராமனுக்காக கடல்தாவினான். அவன் அரியணை தாங்கி அமர்ந்தான். தன் கடன் முடிந்ததும் திரும்பி தன் உலகுக்கு வந்தான். நேற்றின்றி இருந்தான். காற்றென காடுலாவ அவனால் இயன்றது.” பீமன் பெருமூச்சுவிட்டான். காட்டுக்குள் குரங்கு ஒன்றின் ஓசை கேட்டது. இருகுட்டிகள் கிளைகளில் ஆடி ஒற்றைக்கையில் தொங்கி வால் முறுகி வளைய அன்னையை நோக்கி அழைத்தன.

அன்னை தாவி எழுந்து செங்குத்தான பாறையை வெறுங்கைகளால் பற்றி நீர்த்துளியென இறங்கிச்சென்று தாவி அவர்களுடன் சேர்ந்துகொண்டது. அவை கிளைகளுக்குள் மறைந்தன. பீமன் அப்போது அந்த மணத்தை உணர்ந்தான். கல்யாணசௌகந்திகத்தின் மணம். அவள் முலைப்பாலின் மணமா அது? பாய்ந்து எழுந்து “அன்னையே!” என்று கூவி அழைத்தான். ஓடிச்சென்று தன் வடத்தை பற்றிக்கொண்டு கீழிறங்கி பாறையிலிருந்து காட்டுக்குள் தாவி கிளைகளையும் புதர்களையும் ஊடுருவி ஓடினான். “அன்னையே… அன்னையே…” என்று கூவினான். கிளைகளில் அக்குரங்குகள் சென்ற பாதை அசைவென தெரிந்தது. செல்லும்தோறும் குரங்குகள் பெருகின எனத் தோன்றியது.

tigerகாட்டை வகுந்துசென்ற யானைத்தடம் வழியாக மூக்குணர்வாலேயே வழிகாட்டப்பட்டு அவன் சென்றான். மேலும் நுண்மையும் கூர்மையும் கொண்டு அணுக்கத்திலிருந்தது அந்த மணம். இதோ, அருகே என அதுவே அவனை அழைத்துச்சென்றது. செல்லும்தோறும் விரைவுகொண்டான். மேலும் மேலும் என்று உள்ளம் தூண்டியது. கால்களில் பட்டு கூழாங்கற்கள் தெறித்தன. தொலைவிலேயே வழியில் ஒரு பட்டமரக்கிளை குறுக்கே விழுந்துகிடப்பதை கண்டான். அருகணைந்தபோதுதான் அது ஒரு குரங்கு எனத்தெரிந்தது.

மரத்திலிருந்து விழுந்திருக்கவேண்டும். முதுமை எய்தி உடம்பெங்கும் முடி உதிர்ந்து பொருக்கும் குருதியும் சீழுமாக புண்கள் செறிந்து அரைக்கண் மூடி ஒருக்களித்துக் கிடந்தது. அதனருகே சென்றபோதுதான் அது மானுடன் அளவுக்கே பெரியதென்று தெரிந்தது. நீட்டிய கைகளில் ஒன்று பாதையின் ஒருமுனையைத் தொட வால்முனை இன்னொரு முனையை எட்டியிருந்தது. கால்தூக்கி கடந்து சென்றுவிடலாமென்று எண்ணியதுமே எரிச்சல் எழ காலால் தரையை மிதித்து அதிர்வெழுப்பினான். அதன் தாழ்ந்த இமைகள் விரிசலிட்டன. மயக்கம் நிறைந்த விழிகளுடன் கரிய சிறுபல்நிரை காட்டி மெல்ல உறுமியது. “எழுந்து விலகும், முதியவரே” என்றான் பீமன். “இது யானைப்பாதை. மிதிபட்டு கூழாகிவிடுவீர்.”

“எழமுடிந்தால் நான் இங்கு கிடப்பேனா என்ன?” என்றது குரங்கு. “கிளையிலிருந்து பிடிதவறி நான்குநாட்களாகின்றன. உணவும்நீருமின்றி உயிர்பிரியக் காத்திருக்கிறேன். எனக்கென்றே நீ வந்திருக்கக் கூடும். என்னை இழுத்து அப்பாலிடு.” பீமன் அதன் உடலில் இருந்த புண்களைப்பார்த்தபின் சுற்றுமுற்றும் நோக்கி அப்பால் கிடந்த மரத்தடி ஒன்றை எடுத்துவந்தான். குரங்கு பற்கள் விரிய உறுமி பிடரி சிலிர்த்தது. அவன் முதலில் இடக்கையில் இருந்த தடியால் அதை மெல்ல அசைத்தான். அதில் சிறிய அசைவுகூட ஏற்படவில்லை என்று கண்டதும் அழுத்தி உந்தினான். பாறை என்று தோள்கள் உணர்ந்தன.

அவ்விந்தையை முழுதுணராமல் அச்செயலின் ஒழுக்கால் இழுக்கப்பட்டவனாக இருகைகளாலும் முழுவிசையையும் செலுத்தி அதை தள்ளினான். தடி முறிந்து நிலைதடுமாறி விழப்போய் காலூன்றி நின்றான். அதன்பின்னர்தான் அதன் விந்தை அவனை முழுமையாக வந்தடைந்தது. “யார் நீ?” என்றான். “குரங்கு…” என்றது அது. “என்னை மாருதன் என்பார்கள். என் உடலின் எடையே எனக்கும் பெருந்துயராக உள்ளது. சரி என் வாலையாவது விலக்கு. யானைகள் அவ்வழியாக செல்லட்டும்.” பீமன் தயங்கி நின்றான். “எடுத்து அகற்றுக, இளையோனே! நீ மாமல்லன் அல்லவா?”

அதிலிருந்த இளிவரலால் சீண்டப்பட்டு அவன் அருகே சென்று குனிந்து அந்த வாலை இருகைகளாலும் பற்றி பெருமரத்தடி என எண்ணி விசைசெலுத்தி தூக்க முயன்றான். மெல்ல அசைந்து மேலெழுந்தபின் திரும்ப அழுந்தி அவன் கையை நிலத்துடன் பிடித்துக்கொண்டது. அவன் நிலத்தில் காலை ஊன்றி முழு ஆற்றலுடன் இழுத்தான். தசைகள் இழுபட்டுத் தெறிக்க பற்கள் உரசி அனலெழ இழுத்து விடுபட்டு ஓசையுடன் மண்ணில் மல்லாந்து விழுந்தான். கையூன்றி புரண்டு எழுந்து “யார் நீ? சொல்! யார் நீ? கந்தர்வனா? பாதாள மாநாகமா?” என்று கூவினான்.

“ஏன், இளையபாண்டவனை மானுடர் வெல்லமுடியாதோ? எளிய விலங்கால் இயலாதோ?” என்றது குரங்கு. “என்னை நீ அறிந்திருக்கிறாய்” என்றான் பீமன். “நான் காற்றுபோல அலைந்தவன்… உன்னை இளவயதிலேயே கண்டிருக்கிறேன். நீ கூடு உடைத்து வெளிவந்த புழு போன்ற சிற்றுடலுடன் பாலுக்கழுதபடி நிலத்தில் கிடந்து நெளிந்தபோதே…” பீமன் “நீ யார்?” என்றான். “சரி, என் முடியில் ஒன்றை மட்டும் பிழுதெடு… நீ வென்றாய் என ஒப்புகிறேன்.” பீமன் வெறிக்கூச்சலுடன் பாய்ந்து சென்று அக்குரங்கை உதைக்கத் தொடங்கினான். பாறையிலென விழுந்து அவன் கால் தெறித்தது. வலியுடன் ஊன்றி மூச்சிரைத்து நின்றான்.

குரங்கின் கண்களில் மெல்லிய சிரிப்பு மின்னியது. அது துள்ளி எழுந்து நின்று நெஞ்சில் இருகைகளாலும் மாறிமாறி நெஞ்சில் அறைந்துகொண்டு நீண்ட ஒலியொன்றை எழுப்பியது. பற்களனைத்தும் தெரிய இளித்தபடி இரு கைகளையும் விரித்தது. அதன் முகம் சிவந்திருக்க கன்னமயிர்க்கற்றைகள் சிலிர்த்து நீண்டிருந்தன. “நீ அஞ்சி திரும்பி ஓடுவாய் என்றால் உன்னை துரத்திவரும் இன்பத்தை அடைவேன்” என்றது. “நான் இதுவரை அஞ்சியதில்லை” என்றான் பீமன். “இறப்புக்கு அஞ்சாமலிருக்கலாம். இழிவுக்கு?” என்றபின் இருகைகளாலும் விலாவைச் சொறிந்தபடி இளித்துக்கொண்டு எம்பி எம்பி குதித்தது குரங்கு.

பிளிறலோசையுடன் பீமன் பாய்ந்து சென்று அதை ஓங்கி அறைந்தான். அடி அதன்மேல் பட்டபோது அவன் கை தெறித்தது. மரப்பட்டை போலிருந்தது அதன் உடல். ஊளையிட்டபடி அது குதித்து அவனை அறைந்தது. அவன் யானையால் முட்டப்பட்டதுபோல தெறித்துவிழுந்தான். பாய்ந்து வந்து அவன்மேல் கவிந்து அவன் உருண்டு தப்ப முயல்வதற்குள் தூக்கி வீசியது. விழுந்த இடத்திலிருந்து அவன் எழுவதற்குள் மீண்டும் தூக்கி வீசியது. சிறுபூனைக்குட்டியை என அவனைத் தூக்கி வீசியும் காலால் தட்டிச் சுழற்றியும் விளையாடியது. அவன் கைகளைப்பற்றியபடி மரங்கள் மேல் தாவி ஏறி பாய்ந்து சென்றது. அவனை தூக்கி வீசிவிட்டு அவன் அசைவதற்காக குந்தி காத்திருந்தது. அவன் மெல்ல எழமுயன்றதும் ஓடிவந்து மீண்டும் எடுத்துக்கொண்டது.

உடலெங்கும் சிராய்ப்புகளுடன் பீமன் கைகளை விரித்து மல்லாந்து படுத்தான். கண்களை மூடிக்கொண்டு தன் உள்ளத்தை அடக்கி உள்ளுக்குள் உள்ளுக்குள் என மடித்து சுருட்டிக்கொண்டான். குரங்கு அவனை அணுகி வருவதை அவன் கேட்டான். அதன் நிழல் அவன்மேல் கவிவதை இமைகள் அறிவித்தன. “கொல்… கொன்றுவிடுக என்னை!” என்றான். “மாமல்லரே…” என முண்டனின் குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டு விழிதிறந்தான். “என்ன சொல்கிறீர்?” அவன் எழுந்து அமர்ந்தான். “நீரா? நீர் எப்போது வந்தீர்?”

முண்டன் பெரிய பற்களைக்காட்டிச் சிரித்து இருகைகளாலும் விலாவை சொறிந்தான். ரீக் என்னும் ஒலியுடன் நின்ற இடத்திலேயே எழுந்து சுழன்று நின்றான். “நீர்தானா?” என்றான் பீமன். “நான் அப்போதே ஐயம்கொண்டிருந்தேன்.” முண்டன் அவன் அருகே குந்தி அமர்ந்து “ஆம் நானேதான்” என்றான். “உமது உளமயக்கா அவையனைத்தும்? நான் தோற்றது பருவுலகில் அல்லவா?” என்றான் பீமன். முண்டன் சிரித்து “நீ தோற்கவில்லை, இளையோனே” என்றான். பீமன் அந்த மாறிய குரலைக் கேட்டு திகைத்து அவன் விழிகளை நோக்கினான். ஒருகணத்தில் அவன் அனைத்தையும் கண்டுவிட்டான்.

tigerமலைப்பாறை ஒன்றின் மேல் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எரிந்தணைந்துகொண்டிருந்தது மாலைச்சூரியன். முண்டனின் முகம் அனல்கொண்டிருந்தது. அவனருகே அமர்ந்து திரும்பி நோக்கிய பீமன் உடல்கொள்ளா உளஎழுச்சிக்கு ஆளானான். “வாழ்வில் நான் இனியெதையும் அடையவேண்டியதில்லை, மூத்தவரே” என்றான். அவன் குரல் உடைந்து தழுதழுத்தது. “எத்தனை கதைகளில் கேட்டிருக்கிறேன்! எத்தனை கனவுகளில் விளையாடியிருக்கிறேன்!” கட்டுகள் கடந்து அவன் விம்மிவிட்டான். தன்னை இறுக்கி தலைகுனிந்து அதை அடக்கினான். விழிநீர் அவன் மடியில் சிந்தியது.

“என்னுடன் இருந்திருக்கிறீர்கள். வழிகாட்டியாக, ஆசிரியனாக, களித்தோழனாக. நான் உளம்நிறைந்து கால்தொட்டு வணங்கவில்லை இன்னும். அப்பேறை மட்டும் எனக்களியுங்கள்.” முண்டன் “நீ என்றும் எனக்கு இனியன்… எண்ணும்போதெல்லாம் உன்னருகே வந்து நோக்கியிருந்திருக்கிறேன். சிற்றுடல்கொண்டு உன்னுடன் விளையாடியிருக்கிறேன்” என்றான். “இது நீ உன்னை கண்டுகொள்ளும் பயணம். இங்கு நீ உன்னை தேர்ந்தெடுக்கிறாய். எஞ்சுவதென்ன என்று அறிகிறாய். எனவே உடனிருக்கவேண்டுமென்று முடிவெடுத்தேன்.”

பீமன் மெல்ல தலைதாழ்த்தினான். “உன் உடல் ஆண்மைகொண்டது. உள்ளம் எளிய காமத்தால் ஆனது, இளையோனே” என்றான் முண்டன். “நீ இதுவரை வென்றவை அனைத்தும் நீ கடக்கவேண்டியவையால் வெல்லப்பட்டவை. ஆகவேதான் உன்னை முற்றாகத் தோற்கடிக்க விழைந்தேன். உன்னைவிட நான் ஆற்றல்கொண்டவன் ஆவது நான் துறந்தவற்றால்தான். நீ உன்னைக் கடந்து அடையவேண்டிய ஆற்றல்களை சந்திக்கும் தருணத்தில் இருக்கிறாய்.”

தொலைவில் மலைச்சரிவில் ஏறிச்சென்ற யானைப்பாதையைக் காட்டி முண்டன் சொன்னான் “அது மேலிருக்கும் கதலிவனம் என்னும் காட்டை சென்றடைகிறது. தேன்வாழைகள் மண்டிய அக்குளிர்காட்டின் மையத்திலுள்ளது சிற்றாலயம் ஒன்று. அதன் வலப்பக்கத்தில் நின்றிருக்கிறது உனது கல்யாணசௌகந்திகம்.” பீமன் உளக்கிளர்ச்சியுடன் எழப்போவதுபோன்ற மெல்லிய அசைவொன்றை காட்டினான். “உன்முன் மூன்று வழிகள் உள்ளன. அதைச் சென்றடைந்து அங்கிருந்து திரும்பாமல் அந்தமலருடன் மேலும் செல்லலாம். நீ சென்றடைவதற்கு நீ எழுந்துவந்த வேர்நிலம் காத்திருக்கிறது” என்றான் முண்டன்.

“ஆனால் அது எளிதல்ல. மெய்மையும் பேரின்பமும் பலநூறு மயக்குகளால் சூழப்பட்டவை. நீ அறியா விசைகளால் அலைக்கழிக்கப்படலாம். அங்கே நீ திசையழிந்து சரியக்கூடும். இளையோன் என்பதனால் நீ அதை முற்றிலும் மறந்து இங்கிருந்தே திரும்பிவிடவேண்டும் என்றே சொல்வேன்” என்றான் முண்டன். பீமன் தலையசைத்தான். “மூன்றாவது வழியையே நீ எண்ணிவந்தாய். அந்த மலருடன் நீ திரும்பி இறங்கி வந்தால் இங்கு வந்தவழியை முழுக்க திரும்பக் கடப்பாய். ஒவ்வொரு காலடியிலும் அந்த மலர் தன் மெய்மணத்தை இழந்துகொண்டிருக்கும். நீ அங்கே கொண்டுசென்று அவளிடம் கொடுப்பது பிறிதொரு மணமாகவே இருக்கும்.”

“இளையோனே, இது வானத்து மாமலர். இது மண்ணில் விரியாது, இதன் மணம் ஊன்புலனால் உணரவும்படாது. உன் உள்ளத்தில் என்றும் இந்தமலர் தன் இறைமணத்துடன் மலர்ந்திருக்கும். பருவுலகால் ஆன சொற்களால் அதை எவருக்கும் சொல்ல முடியாது. உடலென வெளிப்பட்டாகவேண்டிய  மானுடக்காமத்தால் அதை உணர்த்திவிடவும் இயலாது” என்றான் முண்டன். “நீ உளம்சூடிய மலர் எவராலும் அறியப்படாது வாடுவதன் பெருந்துயரையே நீ அங்கு அடைவாய். ஆகவே நீ எண்ணி வந்ததை ஒழிக!”

பீமன் கைகளைக் கூப்பியபடி தலைகுனிந்து அதைக் கேட்டு அமர்ந்திருந்தான். முண்டன் சொல்லி நிறுத்தியபின்னர் காற்றோசை ஒலிக்கும் அமைதி நிலவியது. “நீ கண்டவை அனைத்தையும் கருதுக! அது பெரும்பகடை” என்று முண்டன் அவன் செவிகள் மட்டுமே கேட்கும் குரலில் சொன்னான். “விழைவும் பித்துமே சந்திரன் என்றாகியது. அக்குலத்தவன் நீ. உன் முன்னோர் அக்களத்தில் அறியாத கைகளால் புரட்டப்பட்டார்கள். காமத்தின் நூறுமுகங்கள். அத்தனை முகங்களும் ஒன்றின் புரள்வே. இளையோனே, சந்திரன் முதல் உன் தந்தை பாண்டுவரை எவரும் எதையும் அடையவில்லை என்று அறிக!”

முண்டன் தன் வலக்கையை பீமனின் வலத்தோளின்மேல் வைத்தான். அதன் எடையால் பீமன் தோள் சரிய வலக்கையை ஊன்றிக்கொண்டான். “நீ என் மைந்தன் அல்லவா? விலகுக! இங்கிருந்தே திரும்பிச்செல்க! உன் தமையனுக்கு நீ அளித்த சொல் உன்னை கட்டியிருக்கிறது. உன் செயல்வெளி அங்கு காத்திருக்கிறது. ஆற்றுக, அறுத்து விடுபடுக! நீ எழுந்துவரும் இடத்தில் விரிந்த கைகளுடன் நான் உனக்காகக் காத்திருப்பேன்.” பீமனை பெருங்கரம் அள்ளி தன் தோளுடன் சாய்த்துக்கொண்டது. “இத்தருணத்தில் உன் மெய்தொடல் என தித்திப்பது அவன் பெயர் ஒன்றுதான், குழந்தை” என்றது அவன் குரல்.