மாமலர் - 87

87. நீர்க்கொடை

யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின் பெருக்காகவுமே அவன் இருந்தான். அவன் கண்ட ஒவ்வொரு இடமும் உருமாறியிருந்தன. அண்மையில் உள்ளவை உருவழிந்து கலங்கித் தெரிந்தன. சேய்மையிலிருந்தவை ஒளிப்பெருக்கெனத் தெரிந்த தொடுவான் வட்டத்தில் கரைந்தவைபோல மிதந்தன. கலவிளிம்பில் ததும்பிச் சொட்டுவதுபோல அங்கிருந்து ஒவ்வொரு பொருளும் எழுந்து உருக்கொண்டு அணுகி அவன் முன் வந்து காற்றில் அலையும் நீர்ப்பாவைபோல் நின்றன.

ஓசைகளின் மீது அழுத்தமான எதையோ கொண்டு மூடியதுபோலிருந்தது. ஆனால் குரல்கள் சில மிக அண்மையில் எழுந்து உடலை துணுக்குறச் செய்தன. பெரும்பாலான நுண்ணிய மணங்கள் நினைவிலிருந்தே அகன்றுவிட்டிருக்க கூரிய நாற்றங்களால் ஆனதாக இருந்தது நிலம். மங்காதிருந்த புலன் மெய்தான். மரத்தடிகளில் படுத்ததும் வந்து தழுவும் குளிர்காற்று மணமும் ஒலியும் அசைவொளியும் அற்று தான்மட்டுமாக இருந்தது. குழல் கலைத்து ஆடை உலைத்து சூழ்ந்துகொண்டது. காற்று பட்டதுமே மெல்ல அவன் துயிலத் தொடங்கினான். விழித்தபோது முந்தையவை அனைத்தும் கரைந்து பரவி மறைய முற்றிலும் புதியவனாக விழித்தெழுந்தான். அவனுக்கு அணுக்கனாக வந்த காவலனை ஒவ்வொரு முறையும் “யார்?” என திகைத்து கேட்டான்.

பார்க்கவனின் குரலும் முகமும் தெளிவாக இருந்தமையால் எப்போதும் அவன் உடனிருக்க வேண்டுமென விழைந்தான். விழித்தெழுந்து அவனைக் காணவில்லை என்றால் பதைத்து “அவன் எங்கே? பார்க்கவன் எங்கே?” என்றான். அவன் தசைகள் நொய்ந்து நீர்மிகுந்த சேற்றுக்கதுப்பென ஆகிவிட்டிருந்தன. செதிலாகச் சுருங்கிய தோலுடன் அவை கன்னங்களிலும் தாடைக்குக்கீழும் புயங்களிலும் தொங்கின. உதடு முற்றாக மடிந்து உள்ளே சென்றிருக்க மூக்கு வளைந்து உதட்டைத் தொடுவதுபோல புடைத்திருந்தது. நினைத்தெடுத்துச் சொல்லாக்கி உரைக்க இயலாமையால் அவன் உதிரிச்சொற்றொடர்களால் பேசினான். ஒரு சொற்றொடர் துலங்கியதும் அதன் வெளிச்சத்தில் தடுமாறி முன்னகர்ந்து அடுத்த சொற்றொடர்களை உருவாக்கினான். தொடர்ந்து பேசினால் மூச்சுபோதாமல் திணறி அத்திணறலே குரலை தழுதழுக்கச்செய்ய கண்கள் கலங்கி விம்மினான். அந்த விம்மல் வழியாகவே துயர் எழ அவன் பேசியதெல்லாமே கண்ணீரில் சென்று முடிந்தது. சற்றே தாழ்ந்திருந்த இடக்கண்ணிலிருந்து மட்டும் நீர் வழிய முகம் இடப்பக்கமாக கோணலாகி இழுபட விசும்பி விசும்பி அழுதான். முகச்சுருக்கங்களின் மேல் கண்ணீர் தயங்கித்தயங்கி வழிந்தது.

சுற்றிலும் இருந்தவர்களின் விழிகளை நோக்கமுடியாதானமையால் விரைவிலேயே அவன் அவர்களை எண்ணவும் முடியாதவனானான். ஆகவே தன் உணர்வுகளை மறைக்க அவனால் இயலவில்லை. இனிய எளிய உணவுகள் அவனுக்கு பிடித்திருந்தன. அக்காரம் சேர்த்த கஞ்சியை ஏவலன் நீட்டும்போது இருகைகளாலும் வாங்கி முகம் மலர தலையசைத்து மகிழ்ந்து ஆவலுடன் அள்ளிக்குடித்தான். இனிய உணவை கையில் கொடுத்தால் சிறுகுழந்தையைப்போல மகிழ்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். எண்ணியிராதபடி ஏதேனும் இன்னுணவு நினைவில் எழுந்தால் அதை உடனே அருகிருந்தவர்களிடம் சொல்லி கொண்டுவரும்படி ஆணையிட்டான். “எனக்கு அக்காரச்சாற்றிலிட்டு வேகவைத்த கிழங்கு வேண்டும்” என்று அவன் கேட்டபோது ஏவலன் “அரசே, நாம் பயணத்திலிருக்கிறோம்” என்றான். “எனக்கு வேண்டும்… வேண்டும்” என்று அவன் கேட்டான். “அரசே” என்று ஏவலன் சொல்ல “வேண்டும்…” என்று அவன் அழுவதுபோன்ற முகநெளிவுடன் சொன்னான். பார்க்கவன் அவனை விலகும்படி தலையசைத்து “கொண்டுவருகிறோம் அரசே… இதோ” என்றான். “எப்போது?” என்றான் யயாதி. “இதோ” என்றான் பார்க்கவன். பின்னர் ஒரு பெரிய மலரைக் கொண்டுவந்து காட்டி “பார்த்தீர்களா? மலர்” என்றான். அதை வாங்கிப் பார்த்து முகம் மலர்ந்து “மலர்” என்றான். நிமிர்ந்து பார்க்கவனிடம் “பெரிய மலர்” என்றான். அவன் கேட்டதை பின்னர் நினைவுறவே இல்லை.

அவர்கள் இரவில் எவருமறியாமல் மூடப்பட்ட தேரில் குருநகரிக்கு வந்து சேர்ந்தார்கள். யயாதியின் உருமாற்றத்தைப்பற்றி குருநகரியின் தலைமை அமைச்சருக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே செய்தியனுப்பப்பட்டிருந்தது. கோட்டை வாயிலிலேயே தலைமையமைச்சர் சுகிர்தர் காத்திருந்தார். கூண்டுத்தேர் வந்து நின்றதும் பார்க்கவன் இறங்கிச்சென்று தலைவணங்கி அரசனின் வருகையை சொன்னான். சுகிர்தர் வந்து தேர் அருகே பணிந்தார். பார்க்கவன் “அரசே… அரசே…” என்று அழைக்க திரையை விலக்கி எட்டிப்பார்த்த யயாதி “யார்? யார்?” என்று பதறினான். “அரசே, நான் பார்க்கவன்… இவர் தலைமையமைச்சர் சுகிர்தர்” என்றான் பார்க்கவன். “ஆம், தெரிகிறது” என்றபின் யயாதி “என் இடை வலிக்கிறது. நாம் எப்போது செல்வோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே.” யயாதி “என் இடையில் வலி” என்றான்.

சுகிர்தர் திகைத்துப்போய் “என்ன இது?” என்றார். பார்க்கவன் திரைச்சீலையை மூடி “செல்லலாம்” என பாகனுக்கு ஆணையிட்டுவிட்டு “சுக்ரரின் தீச்சொல். ஆனால் சொல்முறிவு உள்ளது. அரசர் தன் முதுமையை சிலகாலத்திற்கு மைந்தர் எவருக்கேனும் அளிக்க விழைகிறார்.” சுகிர்தர் “மைந்தரா? இளமையை எவர் அளிப்பார்?” என்றார். “திரும்பப் பெற்றுக்கொள்ளலாமே?” என்றான் பார்க்கவன். “ஆம், ஆனால் இப்புவியில் மானுடர் விழையாதவை அது. நோயும் மூப்பும் இறப்பும்தான். ஜரைதேவியும் வியாதிதேவியும் மிருத்யூதேவியின் புதல்விகள்.” பார்க்கவன் “ஆனால் அவர் அரசர்…” என்றான். அவன் என்னபொருளில் அதை சொன்னான் என சுகிர்தரால் உணரமுடியவில்லை.

அவர்கள் அரண்மனைக்குச் சென்றபோது அங்கே இரு இளவரசர்களும் காத்து நின்றிருந்தனர். யது ஐயத்துடனும் தயக்கத்துடனும் பின்னால் நின்றிருக்க துர்வசு எதுவும் புரியாமல் புருவங்களைச் சுருக்கியபடி முன்னால் நின்றான். தேர் நின்றதும் சுகிர்தர் இறங்கி அவர்களிடம் சென்று மெல்லிய குரலில் பேச இருவரும் தயங்கியபின் மெதுவாக அருகணைந்தனர். பார்க்கவன் திரையை விலக்கி “அரசே, அரண்மனை” என்றான். “எங்கே?” என்றான் யயாதி. “அரண்மனை, குருநகரி.”

யயாதி “ஆம்” என்றபின் பார்க்கவனின் தோளைப் பற்றியபடி இறங்கினான். நிலையான தரையில் விசை எஞ்சியிருந்த உடல் தள்ளாடியது. பார்க்கவன் அவனை பற்றிக்கொண்டு “வருக” என்றான். யதுவும் துர்வசுவும் அருகே வந்து அவனைப் பணிந்து “நல்வரவு, தந்தையே. அரண்மனை தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றனர். யயாதி “ஆம், நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்… நான் உங்களிடம் ஒன்று கோரவேண்டும்” என்றான். பார்க்கவன் “அரசே, இது இரவு… நாம் ஓய்வெடுக்கவேண்டும். நாளை காலை முறைப்படி சான்றோர் முன் அதை கோருவோம்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றான் யயாதி.

அவன் பார்க்கவனை பற்றிக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறி குருநகரியின் அரண்மனையின் முகப்பை அடைந்து பெருங்கூடத்திற்குள் நுழைந்தான். மூச்சுவாங்கியபடி நின்று “நான் முதுமை கொண்டுவிட்டேன்…” என்றான். “அரசே, அனைத்தையும் நாம் நாளை பேசுவோம்” என்றான் பார்க்கவன். “ஆம், முறைமைப்படி நான் கோரவேண்டும்” என்றான் யயாதி. அவர்கள் பெருங்கூடத்தில் இருந்த பீடங்களை அடைந்ததும் யயாதி “நான் சற்று அமர்கிறேன்… மூச்சுவாங்குகிறது” என்றான். பார்க்கவன் “ஆம், வருக!” என அழைத்துச்சென்றான். பீடத்தில் அமர்ந்ததும் யயாதி நிமிர்ந்து புதியவர்கள் என மைந்தர்களை நோக்கி “இவர்களிடம் நான் ஒன்று கோரவேண்டும்… என்னிடம் சுக்ரர் சொன்னது. இல்லை… அவர் இல்லை. அவருடைய மாணவர். அவர் பெயரை மறந்துவிட்டேன்” என்றான்.

பார்க்கவன் “அரசே… நாளை…” என தொடங்க யயாதி சினந்து “வாயை மூடு, மூடா! நீ என்ன என்னை பேசவே விடமாட்டாயா?” என்றபின் அதே சினச்சிவப்பு முகத்தில் எஞ்சியிருக்க “எனக்கு முதுமையை தீச்சொல்லிட்டார் சுக்ரர்… அதுதான் நீங்கள் காண்பது” என்றான் யயாதி. “ஆனால் சொல்முறிவும் அளித்துள்ளார். என் முதுமையை உவந்துபெறும் ஒருவருக்கு நான் அளிக்கமுடியும்…” யது திரும்பி சுகிர்தரை பார்க்க அவர் “ஆம், அதை நாம் நாளையே பேசிமுடிப்போம். நான் இளவரசரிடம் அதைப்பற்றி விளக்கி…” என்று சொல்லத் தொடங்கினார். யயாதி கைதூக்கி அவரைத் தடுத்து “நான் கேட்பது என் மைந்தனிடம். என் அரசுக்கும் குருதிவழிக்கும் நீட்சியாக அமையவிருப்பவன் அவன். நீ என் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும். நான் விரும்பும்வரை அதை கொண்டிருக்கவேண்டும்.”

யது அதை எதிர்பார்க்காமையால் மலைத்துப்போய் நின்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான் யயாதி. “நீ முதுமைகொள்வது உனக்கும் நன்று…” என்றபின் “நீர்க்கலம் வருக! சொல்லோதி பொழிவுக்கொடை அளிக்கிறேன்” என்றான். யது புரிந்துகொண்டு சினம் மேலிட நிலையழிந்து உரத்தகுரலில் “நீங்கள் அடைந்தது உங்கள் இழிசெயலின் விளைவை. அதை பிறர் ஏன் சுமக்கவேண்டும்?” என்றான். “மூடா…” என்றபடி யயாதி எழப்போக பார்க்கவன் அவனைப் பிடித்து “அரசே…” என்றான். “விடு என்னை… நீ என் அரசை கொள்ளப்போகிறாய். என் மூன்று வினைகளுக்கும் நீயே தொடர்ச்சி…” என்றான். “ஆம், ஆனால் ஊழெனில் அதை தெய்வங்கள் அளிக்கவேண்டும். மானுடர் அளிக்கக்கூடாது. அவ்வாறு அளிக்கக்கூடும் என்றால் அத்தனை தந்தையரும் தங்கள் பிணிகளை மைந்தர்மேல் ஏற்றிவைப்பார்கள்… நான் உடன்படமுடியாது” என்றான்.

யயாதி “தந்தையரின் பிணிகளும் மைந்தருக்கு வருகின்றன” என்றான். “நான் அளிப்பதையே நீ கொள்ளமுடியும்…” யது “நீங்கள் எங்களுக்கு அளித்தவை எவையும் நீங்கள் ஈட்டியவை அல்ல. சந்திரகுலத்து மூதாதையரின் செல்வங்கள் இவை. எங்களை இக்குலத்தில் பிறக்கச்செய்த தெய்வங்களால் இவை அளிக்கப்பட்டுவிட்டன. உங்களிடம் இரவலராக நாங்கள் வந்து நிற்கவில்லை” என்றான். யயாதியின் தலை நடுங்கியது. கைகள் நடுக்கத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. பீடத்தில் மீண்டும் அமர்ந்து கைகளை தொடைக்குக்கீழே வைத்து நடுக்கத்தை அடக்கியபடி “இளையவனே…” என்றான். துர்வசு “நீங்கள் எவர்பொருட்டு இத்தீச்சொல்லை பெற்றீர்கள் என அறிவோம். அவர்களுக்காக எம் அன்னையை ஏமாற்றினீர்கள். அவர்களே இந்த மூப்புப்பிணியையும் ஏற்கக் கடமைப்பட்டவர்கள். செல்க!” என்றான்.

பார்க்கவன் “இளவரசே, இதையெல்லாம் இந்நள்ளிரவில் பேசவேண்டியதில்லை. நாம் நாளை அமர்ந்து பேசுவோம்” என்றான். “நீர் எத்தனை பேசினாலும் எங்கள் முடிவு இதுதான். இவரை நம்பி மூப்பை ஏற்பதன் மடமையை நான் அறிவேன். இவர் எதன்பொருட்டு இளமையைக் கோருகிறார்? அடைந்த பெண்கள் போதவில்லை அல்லவா? மேலும் காமத்தில் திளைக்க உடல் தேவை அல்லவா? இவருக்கு காமம் எப்போது திகட்டும்? அமைச்சரே, காமம் திகட்டிய எவரேனும் உள்ளனரா? இவர் திரும்பிவந்து முதுமையை பெற்றுக்கொள்வார் என நீங்கள் எண்ணுகிறீர்களா? சொல்லுங்கள்…” என்றான் யது.

பார்க்கவன் “அதை நாம் பேசுவோம்” என்று சொல்ல யது “விலகுங்கள்! இது எங்களுக்குள் பேசி முடிக்கவேண்டிய சிக்கல். தந்தையே, உங்கள் காமத்தை நான் நம்பவில்லை. உங்கள் நேர்மையையும் நான் நம்பவில்லை. என் தாயை ஏமாற்றியவர் நீங்கள். உங்கள் இழிவைக்கண்டு உளம்வெறுத்துச்சென்று அவர்கள் முடிமழித்து துவராடை அணிந்து தனிச்சோலையில் தவமிருக்கிறார்கள். நீங்கள் அதன்பின்னரும் காமம் நிறையாமல் வந்து இளமைக்காக இரக்கிறீர்கள். இப்படி இரந்து நிற்பதனூடாகவே மேலும் இழிவுகொள்கிறீர்கள். உங்களை நம்பி இளமையை அளிக்க நான் மூடன் அல்ல” என்றான். துர்வசு “அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு அளித்தது இந்த முதுமை. அவர்களே பெற்றுக்கொள்ளட்டும்” என்றான்.

யயாதி வாயை இறுக மூடியபோது அது சுருங்கி ஒரு துணிமுடிச்சென ஆயிற்று. அவன் விழிகளில் வெறுப்பு தெரிந்தது. அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. “அரசே, நாம் இப்போது இதைப் பேசியது பிழை. எவர் உள்ளமும் நிலைகொண்டிருக்கவில்லை. வெறும் உணர்வாடல் இது. நாளை ஆவதை எண்ணி சொல்லெடுத்துப் பேசுவோம்” என்றான். யயாதி “இனி எனக்குப் பேச ஏதுமில்லை. இவர்கள் என் கொடிக்கும் குருதிக்கும் வழித்தோன்றல்கள் அல்ல” என்றான்

சுகிர்தர் “அரசே…” என கைநீட்ட “விலகு… இது என் சொல். மூதாதையர் அறிக! என் குலதெய்வங்கள் அறிக! நான் கொண்ட படைக்கலங்கள் கொன்றவர்களின் உயிர்கள் அறிக! இன்றுவரை நான் அவையமர்ந்து அளித்த தீர்ப்புகளால் இறந்தவர்கள் அறிக! இது என் சொல்! இவர்கள் என் மைந்தர்கள் அல்ல. இவர்களின் பிறவிநூல்களை நோக்கிய அன்றே இவர்களின் ஊழை உணர்ந்தேன். அது ஏன் என இன்று புரிந்துகொள்கிறேன்.”

அவன் குரல் நடுக்கமிழந்து உரக்க ஒலித்தது. “மூத்தவனே, நீ ஒருபோதும் நிலைகொள்ளமாட்டாய். குடியுடனும் கன்றுகளுடனும் நிலத்திலிருந்து நிலம் நோக்கி சென்றுகொண்டே இருப்பாய். உன் செல்வம் ஒருபோதும் மண்ணில் நிலைக்காது, அது கால்கொண்டு அலைவதாகவே அமையும். உன் குடிகளுக்கும் அதுவே ஊழென்றமையும். நீங்கள் அந்தணராலும் ஷத்ரியர்களாலும் வேட்டையாடப்படுவீர்கள். எரித்து அழிக்கப்படுவீர்கள். கொன்றுகுவிக்கப்படுவீர்கள். நீங்கள் வெல்பவை அனைத்தும் கணம்கணமென கைநழுவும். நீங்கள் கட்டி எழுப்பிய அனைத்தும் உங்கள் கண்ணெதிரே நுரையெனப் பொலியும். ஆம், அவ்வாறே ஆகுக!”

யது நடுங்கி பின்னடைந்து அறியாது கைகூப்பிவிட்டான். யயாதி துர்வசுவை நோக்கி திரும்பி “நீ ஒருபோதும் பசுநிலத்தை காணமாட்டாய். பாறைகள் வெடித்த பாலைகளில் அனல்காற்றுகளால் அலைக்கழிக்கப்படும் சருகென்றமையும் உன் வாழ்வு. உன் கொடிவழிகளுக்கும் அவ்வாறே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் தன்னை தூக்கும்படி கை நீட்டினான். யது பாய்ந்து வந்து ஓசையுடன் நிலத்தில் விழுந்து யயாதியின் கால்களை பற்றிக்கொண்டு “பொறுத்தருள்க தந்தையே… என் அச்சமும் ஐயமும் என்னை ஆட்கொண்டுவிட்டன. நான் சொன்னவற்றின் பொருளை நான் உணர்கிறேன். அவையனைத்தும் என்னுள் உறையும் உங்கள் மேல் கொண்ட வெறுப்பிலிருந்து எழுந்தவை. தந்தையே நான் நீங்களேதான்” என்றான்.

யயாதி “ஆம், நான் உன்மேல்கொண்ட வெறுப்பும் என்மேல் நான் கொண்டதே” என்றான். யது கண்ணீருடன் தலைதூக்கி “அளிகூர்ந்து சொல்முறிவளியுங்கள்… நான் மீளும் வழி உரையுங்கள், தந்தையே” என்றான். யயாதி நீள்மூச்செறிந்து “ஆம், நான் அதையும் அளித்தாகவேண்டும். உன் குருதி நூறுமேனி விளையும். மைந்தா, நிலம் பெருகுவதல்ல, கால்நடைகளோ ஆண்டுதோறும் இருமடங்காகும். எனவே உன்குலம் ஆபுரந்து வாழட்டும். பாரதவர்ஷமெங்கும் பரவி கிளையிலிருந்து கிளைபிரிந்து என்றும் அழியாது நிலைகொள்ளட்டும்”என்றான்

மேலும் உளம் எழ அவன் குரல் ஆணை என ஒலித்தது “உன்குடியில் மாவீரர் எழுவர். பேரன்னையர் பிறப்பர். சிப்பிகளனைத்தும் முத்து நிகழும் வாய்ப்புகளே என்பதுபோல குலங்களெல்லாம் தெய்வம் வந்து பிறப்பதற்கானவை. உன் குடியில் விண்நிறைந்த பரம்பொருள் கனிந்து துளித்துச் சொட்டி நிறைக! அவன் பெயரின் பொருட்டே உன்குருதியை மானுடக்குலம் போற்றும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

கண்ணீர் வழிய அருகே வந்து மண்டியிட்ட துர்வசுவின் தலையைத் தொட்டு “தந்தை என உன் குலத்தை நான் வாழ்த்துகிறேன். கல்கரையும் வறுதியிலும் பசுந்தளிர்விடும் பாலைமுட்கள் போலாகட்டும் உன் குடி. என்றும் அழியாது. உன் கொடிவழியில் பிறந்தவர்கள் மலைநாடுகளை ஆள்வார்கள். அவர்களில் எழுந்த அரசி ஒருத்தியின் குருதியில் பேரரசர்கள் பிறந்து கங்கைக்கரைகளில் கொடிதிகழ்வார்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” நெஞ்சு விம்மி விம்மித் தணிய யயாதி பார்க்கவனிடம் “நாம் உடனே அசோகவனிக்கு செல்லவேண்டும்” என்றான். “அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள்” என்றான் பார்க்கவன். “இல்லை. இனி ஒருகணம்கூட என்னால் பிந்த இயலாது… எழுக தேர்!” என்றான் யயாதி.

tigerமறுநாள் புலரிச்சுடர் எழுந்தபோது அவர்கள் அசோகவனியை சென்றடைந்தனர். அவர்கள் வருவது சொல்லப்படாததனால் கூண்டுத்தேரைக் கண்டு கோட்டைக்காவலர் தலைவன் திகைத்து அருகே ஓடிவந்தான். பார்க்கவன் சுருக்கமாக செய்தியைச் சொல்ல அவனும் இருகாவலரும் புரவிகளில் முன்னே சென்றார்கள். காலையில் அசோகவனியின் தெருக்களில் வணிகம் தொடங்கிவிட்டிருந்தது. சாலைநெரிசலுக்கு அப்போதும் பழகாத மக்கள் வந்து குறுக்கே விழுந்துகொண்டே இருந்தனர். அரண்மனை முகப்பை அடைந்ததும் தேர் விரைவழிய யயாதி விழித்துக்கொண்டு “எங்கு வந்துள்ளோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே” என்றான் பார்க்கவன்.

அரண்மனை முற்றத்திலேயே காவலர்தலைவனுடன் மூன்று மைந்தரும் காத்து நின்றிருந்தார்கள். திருஹ்யூயும் அனுதிருஹ்யூயும் முன்னால் நின்றிருந்தனர். அவர்களின் முகங்கள் குழப்பம்கொண்டவர்களைப்போல தெரிந்தன. புரு அவர்களுக்குப்பின்னால் அவர்களால் பாதிமறைக்கப்பட்டு நின்றான். பார்க்கவன் “இறங்கலாம், அரசே” என்றான். யயாதி கைநீட்ட அதைப் பற்றி மெல்ல அவனை இறக்கினான். படிகளில் கால் வைத்து நடுங்கியபடி இறங்கி கூனிட்டு நின்ற யயாதி நெற்றிமேல் கை வைத்து அவர்களை நோக்கினான்.

மைந்தர் மூவரும் அருகே வந்து கால்தொட்டு வணங்கினர். “நலம் சூழ்க!” என வாழ்த்திய யயாதி “நான் உங்களிடம் ஒரு கோரிக்கைக்காகவே வந்தேன்” என்றான். “உள்ளே சென்று பேசுவோம்” என்றான் பார்க்கவன். “இல்லை, நான் இனிமேல் முறைமைகளுக்கு நேரத்தை வீணடிப்பதாக இல்லை. நிகழ்ந்தவை இவர்களுக்குத் தெரியும் என எண்ணுகிறேன்.” பார்க்கவன் “ஆம், அனைத்தும் ஒற்றர்களின் வழியாக முன்னரே தெரிந்திருக்கின்றன. நீங்கள் வருவதை நான் பறவையோலையினூடாகத் தெரிவித்தேன்” என்றான். “அப்படியென்றால் நான் சொல்விளையாட விழையவில்லை. என் மைந்தரில் ஒருவர் இம்முதுமையை பெற்றுக்கொண்டு தன் இளமையை எனக்கு அளிக்கவேண்டும். நான் விழைவதுவரை அதை கொண்டிருக்கவேண்டும்” என்றான் யயாதி.

அனுதிருஹ்யூ புருவங்களைச் சுருக்கியபடி அசையாமல் நின்றான். “முதல்மைந்தர் இருவரும் மறுத்துவிட்டனர். ஆகவே இங்கே உங்களிடம் வந்துள்ளேன்” என்றான் யயாதி. “பொறுத்தருள்க, தந்தையே. நேற்றே என்னிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. இரவெல்லாம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். உவந்து உங்கள் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் என் உள்ளம் அதை ஏற்கவில்லை. நான் என்னை கட்டாயப்படுத்தி மட்டுமே அதை பெற்றுக்கொள்ளமுடியும்” என்றான் திருஹ்யூ.

யயாதி “ஆம், இதை நான் எதிர்பார்த்தேன்” என்றான். அனுதிருஹ்யூ “நானும் அதையே சொல்ல விழைகிறேன், தந்தையே” என்றான். “நீங்கள் என் தந்தையென்றாகி இன்னமும் ஒருமாதம்கூட ஆகவில்லை. நான் ஏற்றுக்கொண்டாலும் உள்ளம் அவ்வண்ணம் எண்ணவில்லை. எவரோ ஒருவருக்கு என் இளமையை ஏன் அளிக்கவேண்டும் என்னும் குரலை என்னால் அடக்கவே முடியவில்லை” என்றான்.

யயாதி புருவை நோக்கி திரும்பாமல் “மூன்றாமவனும் சொல்லட்டும்” என்றான். புரு “நான் பெற்றுக்கொள்கிறேன், தந்தையே” என்றான். யயாதி திகைத்துத் திரும்பி நோக்கி “எண்ணித்தான் சொல்கிறாயா?” என்றான். “ஆம், நான் முன்னரே உடன்பிறந்தார் எவரேனும் ஏற்றுக்கொண்டு எனக்கு வாய்ப்பு வராதமையுமோ என ஐயம் கொண்டிருந்தேன்… இது என் நல்லூழ் என்றே எண்ணுகிறேன்.” யயாதி அவனையே நோக்கிக்கொண்டு சிலகணங்கள் நின்றான். தலை நடுங்க உதடுகள் எதையோ சொல்வனபோல் அசைந்தன. “ஏன்?” என்று பின்னர் கேட்டான். “நான் உங்களை எப்போதும் என் தந்தையென்றே எண்ணிவந்திருக்கிறேன்” என்றான் புரு.

“உன் அன்னை எப்போது அதை சொன்னாள்?” என்றான் யயாதி. “தந்தையே. இப்போதுவரைக்கும்கூட அன்னை அதை சொல்லவில்லை. ஏனென்றால் நீங்கள் சொல்லும்படி அவருக்கு ஆணையிடவில்லை. பேரரசியின் ஆணையால் நாங்கள் இளவரசர்கள் என அறிவிக்கப்பட்டோம். இவ்வரண்மனைக்கு அரசமுறையாக குடிவந்தோம். அரசகுடியினருக்குரிய அணிகளும் ஆடைகளும் முத்திரைகளும் கொடிகளும் முறைமைகளும் எங்களுக்கு அளிக்கப்பட்டன. அன்னை இன்னமும் சேடியருக்குரிய இல்லத்தில் சேடியாகவே இருக்கிறார். அவரை அரசியாக ஆக்கவேண்டியவர் நீங்கள் என்றார்” என்றான் புரு.

“ஆனால் நான் என் மொழிதிருந்தா நாளிலேயே உங்களை என் தந்தை என உணர்ந்திருந்தேன். என் நினைவறிந்த உங்கள் முதல் தொடுகையே அதை சொல்லிவிட்டது. என் தோள்களை வருடி புயங்களைப் பற்றி அழுத்திப் பார்த்தீர்கள். என்னை மடியிலமர்த்தி என் குழலை ஆழ மூச்சிழுத்து முகர்ந்தீர்கள். அன்று அறிந்த உங்கள் மணம் என் நினைவில் இன்றுமுள்ளது. என் கனவில் தந்தையாக எப்போதும் அத்தொடுகையுடனும் மணத்துடனும் வந்துகொண்டிருக்கிறீர்கள்” என புரு தொடர்ந்தான். “பேரரசி என்னிடம் உன் தந்தை யார் என்று கேட்டபோது நெஞ்சறிந்த ஒன்றை மறைக்க என்னால் இயலவில்லை. அன்று நான் சொன்ன சொல்லால்தான் நீங்கள் இம்முதுமையை கொண்டீர்கள். நான் இதை ஏற்றுக்கொள்வதே அறம்.”

யயாதி தொழுவதுபோல நெஞ்சில் கைகுவிய “வேண்டியதில்லை, மைந்தா. நீ எனக்களித்தது என்ன என்று அறியமாட்டாய். மைந்தன் என இப்புவியில் உறவேதுமில்லை என்று என் உள்ளம் எண்ணத்தொடங்கியிருந்தது. குருதியின் நேர்நீட்சியான மைந்தரும் பொய்யுறவே என்றால் இப்புவியில் உறவு என்பதே இல்லை. நீ நான் நம்பிவாழ்ந்த ஓர் உலகம் இடிந்து நொறுங்கி மண்ணில் விழாமல் காத்திருக்கிறாய்” என்றான். “புத் என்னும் நரகம் ஏதென்று வரும் வழியில் எண்ணிக்கொண்டேன். உறவென ஏதுமில்லாமல் வாழ்தலும், இறந்தபின் நினைக்கப்படாமல் மறைதலுமே புத். அதிலிருந்து மீட்பவனே புத்ரன். எனக்கு நீ ஒருவனே மைந்தன். என் முடியும் கொடியும் குடிமரபும் உனக்குரியவை.”

“தந்தையே, நான் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் உங்கள் முதுமையையும் ஏற்றாகவேண்டும்” என்றான் புரு. “அதனூடாகவே நீங்கள் உங்கள் மைந்தன் என என்னை உலகோர் முன் நிறுவுகிறீர்கள். உங்கள் துயரையும் நோயையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உங்கள் கொடையையும் பெற்றுக்கொள்ளும் தகுதியை அடைகிறேன்” என்றான் புரு. அருகே வந்து மண்டியிட்டு யயாதியின் கால்களைத் தொட்டு “எனக்கு உங்கள் முதுமையை அளியுங்கள், தந்தையே” என முறைமைப்படி செம்மொழிச் சொல்லால் கேட்டான்.

யயாதி பெருமூச்சுடன் திரும்பி நோக்க சுகிர்தர் “நீர்…” என்றார். ஏவலன் ஒருவன் பித்தளை வால்குடுவையில் நீருடன் ஓடிவந்தான். சுகிர்தர் அதை வாங்கி “கங்கையே, செல்லுமிடம் கனிந்து அடையுமிடத்தை முற்றிலும் நிரப்பும் நீயே கொடைகளுக்குச் சான்று. உன் ஒழுகுதலென இக்கொடை வளர்ந்து செல்க!” என்று உரைத்து நீட்டினார். யயாதி அதை வாங்கிக்கொண்டபோது கைநடுக்கத்தால் நீர் ததும்பிச் சிந்தியது.

புரு இரு கைகளையும் ஏந்த அதில் நீரூற்றி “என் முதுமையை உனக்களிக்கிறேன். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி. வால்குடுவையை பார்க்கவன் பெற்றுக்கொண்டான். புரு எழுந்துகொள்ள சுகிர்தர் “நீங்கள் இளமையை அளிக்கவேண்டும், இளவரசே” என்றார். புரு வால்குடுவையை வாங்கிக்கொண்டான். யயாதி கையேந்த புரு நீரூற்றி “என் இளமையை கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

அனைவரும் மெல்ல உடல்தளர்ந்தனர். எவரிடமிருந்தென்றில்லாமல் ஓரிரு பெருமூச்சொலிகள் எழுந்தன. யயாதி திருஹ்யூவையும் அனுதிருஹ்யூவையும் நோக்கி “உங்கள்மேல் எனக்கு இப்போது சினமில்லை, மைந்தர்களே. ஆனால் நிகர்முறை செய்வதற்காக நான் உங்களுக்கும் தீச்சொல்லிட்டாகவேண்டும்” என்றான். அவர்கள் கைகூப்பி நின்றனர். திருஹ்யூயை நோக்கி “நீயும் உன் இரு உடன்பிறப்புகளைப்போல நிலையற்று அலையும் ஊழ்கொள்க! நீரில் அமைக உன் வாழ்வும் உன் குருதிவழியினரின் வாழ்வுத்தொடரும். தோணியோட்டுக, மீன்கொள்க! ஒருபோதும் நீரிலிருந்து எழாதமைக!” என்றான்.

திருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் உன் கொடிவழியினர் அரசுகள் அமைப்பார்கள். மீன் உங்கள் கொடியாகும். மச்சர்கள் என குலப்பெயர் கொள்வீர்கள். உங்கள் குடிப்பிறந்த பெண் ஒருநாள் பாரதவர்ஷத்தில் அழியாப் புகழ்கொண்ட பேரரசியென்றமைவாள். அவள் குருதியில் எழும் அரசர்களால் இப்பெருநிலம் ஆளப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி.

அனுதிருஹ்யூவிடம் “தென்னகக் காடுகளில் நீ அலைவாய். அரக்கருக்கும் அசுரருக்கும் உரிய வாழ்க்கையே உனக்கும் உன் குடிமுறைகளுக்கும் அமையும்” என்றான். அனுதிருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் அனல்குடிபிறந்த அந்தணன் ஒருவனால் உன் குடி அரசகுலமாக ஆக்கப்படும். தென்னகத்து நிலங்களை நீங்கள் ஆள்வீர்கள். முற்றிலும் புதுப் பெயரும் புது முத்திரையும் கொள்வீர்கள். உன் குருதி வாழும். உன் பெயர் முற்றிலும் மறைந்துபோகும். ஆம், அவ்வாறே ஆகுக!”

யயாதி பார்க்கவனிடம் கையை நீட்டி “செல்வோம், இனி என்னால் இங்கு நின்றிருக்கமுடியாது” என்றான். அவன் கைகளை பற்றிக்கொள்ள மெல்ல நடந்து படிகளில் ஏறினான். ஒவ்வொரு அடிக்கும் உடல் ஆற்றல்கொண்டுவருவதை உணரமுடிந்தது. இறுதிப்படியில் கால்வைத்தபோது பார்க்கவனே பிடியை விட்டுவிட்டான். விழிகள் தெளிய ஓசைகள் துலங்க நிமிர்ந்த உடலுடன் சுற்றும்நோக்கிய கணத்தில் புருவின் நினைவு எழுந்தது. பின்பக்கம் வியப்பொலிகளும் மெல்லிய பேச்சுக்கசங்கலும் கேட்டன. திரும்பிப் பார்க்கலாகாது என தனக்கே ஆணையிட்டுக்கொண்டு அவன் முன்னால் சென்றான்.