மாமலர் - 86

86. சூழ்மண்

காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம் நிலத்தில் பதித்து அவ்வாறே கிடந்தான். அவன் எழுவதற்காக சற்றுநேரம் காத்தபின் நிலைமாறாக்குரலில் “இவையனைத்தையும் நான் நன்றாக அறிந்திருந்தேன். பெருஞ்சினத்துடன் இவள் இங்கு வருவதற்காக பதினாறாண்டுகளாக காத்திருந்தேன்” என்றார் சுக்ரர். தலைதூக்காமலேயே யயாதி “நான் எதையும் விளக்க வரவில்லை. இரக்கவோ மன்றாடவோ முயலவில்லை. என் பிழை எனக்குத் தெரியும். ஆசிரியர் என்பதனால் எளியமனிதர்களை உங்களால் அறியவும் முடியும்” என்றான்.

“உன் பிழை புலன்களைத் தொடர்ந்தது” என்றார் சுக்ரர். “அறியேன் என நடிப்பவனுக்குப் பின்னால் காமம் நிழலெனப் பெருகிப் பேருரு கொள்கின்றது.” யயாதி “ஆம் ஆசிரியரே, எனக்கு உகந்த தண்டனையை அளியுங்கள். எதுவாக இருப்பினும் அது தங்கள் அருளே என தலைமேல் தாங்கி இங்கிருந்து மீள்கிறேன்” என்றான். சுக்ரர் விழிதூக்கி இரு கைகளையும் முறுக்கி நீட்டி தோள்களை இறுக்கி முலைகள் விம்ம நின்றிருந்த தேவயானியிடம் “இவனை என்ன செய்வதென்று நீ சொல், மகளே!” என்றார்.

அவள் உதடுகள் கோணலாயின. பற்களைக் கடித்து முறுக்கிய கைகளை தொடைமேல் அடித்த பின் அங்கிருந்து செல்வதற்கு திரும்பினாள். அவ்வசைவு அவள் உடலில் கூடிய அக்கணமே காற்றிலிருந்து பிறிதொரு தெய்வம் அவள்மேல் ஏறியதுபோல கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பெழுந்த அசைவுகள் உடலில் கூட திரும்பினாள். தன் இடக்காலால் யயாதியின் தலையில் ஓங்கி மிதித்தாள். இறந்த உடலென அவன் தலை அந்த உதையை ஏற்று அசைந்தது. முகத்தை தரையிலிருந்து அகற்றாமல் அவன் அவ்வாறே கிடந்தான். முதல் உதையால் வெறிகொண்டு நிலையழிந்த அவள் அவன் தலையை எட்டி எட்டி உதைத்தாள். “இழிமகனே! இழிமகனே!” என்று மூச்சென்றே ஒலித்தபடி உதைத்து பின்பு நிலைத்தாள்.

கைகளை இடையில் ஊன்றி இடைதளர்ந்து உலைவாய் என மூச்சு சீற நின்றாள். சீறும் ஓநாய் என வெண்பற்கள் தெரிய “இழிமகனே…” என கூவினாள். அவன் தலைமேல் எச்சிலை காறி உமிழ்ந்து “உன்மேல் தீச்சொல்லிட்டு என் மீட்பை அழிக்க நான் விரும்பவில்லை. இனி உன் எண்ணத்தில் என் முகமோ பெயரோ எழாதொழியட்டும். என் குருதியில் பிறந்த கொடிவழிகள் தந்தையென உன் பெயரை ஒருபோதும் சொல்லாது அமையட்டும். இப்பிறப்பிலேயே என் ஊழ்ச்சுழலை அழிப்பேன். எனவே இனி ஒரு பிறவியிலும் உன் துணையென அமரமாட்டேன். நீ என்னை தொட்டாய் எனும் நினைவை தவத்தால் வெட்டி அறுப்பேன். இனி மறுகணம் முதல் நீ இருந்ததும் மறைவதும் எனக்கொரு பொருட்டில்லை” என்றபின் திரும்பி குழலை இடக்கையால் சுற்றிச் சுழற்றி பற்றினாள். விழிகள் அலைய குடிலோரத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த உடைவாளை நோக்கி சென்று அதை எடுத்து தன் நீள் குழலை அறுத்தாள். அந்தக் கரகரப்பு ஓசை யயாதியின் உடலை உலுக்கவைத்தது. குழல்தொகையை ஓங்கி நிலத்திட்டு மூச்சு வாங்கி ஒருகணம் நின்றபின் கதவை இழுத்துத் திறந்து காலடிகள் மிதியோசை கொள்ள வெளியே சென்றாள்.

எவ்வுணர்ச்சியும் இல்லாமல் அவளுடைய கொந்தளிப்புகளை நோக்கிய சுக்ரர் “எழுக!” என்றார். யயாதி எழுந்து கண்ணில் நீர்வழிய கைகளைக் கூப்பியபடி அமர்ந்தான். “நீ செய்தது வஞ்சம்” என்றார் சுக்ரர். யயாதி “அல்ல, அதை நான் எந்த தெய்வத்தின் முன்னும் சொல்வேன். வஞ்சனை செய்பவன் அதை தன் திறனென எண்ணிக்கொள்வான். அதன்பொருட்டு அவன் ஆழத்தில் ஒரு துளி மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் இதை பிழையென அறிந்திருந்தேன். ஒவ்வொரு கணமும் அதன்பொருட்டு இவளிடம் பொறுத்தருளக் கோரிக்கொண்டிருந்தேன். இன்று இவள் கால்களால் என் தலை மிதிபட்டபோது என் பிழையனைத்தும் விலகிச் சென்றுவிட்டது. இன்று உங்கள் முன் அமர்ந்திருப்பவன் தூயன். இவனுக்கு என்ன தண்டனையோ அதை அளியுங்கள்” என்றான்.

“ஆம், உணர்ந்து நீ மீளவேண்டும். இக்கணம்வரை உனை ஆட்டிவைத்தது உன் காமம். தசைகளிலெரியும் அனல் அது. அதை காதல் என்றும் கவிதை என்றும் கலை என்றும் பெருக்கிக் கொண்டாய்” என்றார் சுக்ரர். “ஏனென்றால் நீ அணுகிவரும் முதுமையை அஞ்சினாய். காமத்தினூடாக உயிர்பெருக்கி இளமையை மீட்க முயன்றாய். தவத்தார் தவறுவது தாங்கள் விட்டு விலகுவதை முற்றறிந்துள்ளோமா என்னும் ஐயத்தால். உலகத்தோர் தவறுவது அடைந்ததை முற்றும் அடைந்தோமா என்னும் கலக்கத்தால்.”

“முதுமை எய்தி குருதி வற்றி தசை சுருங்கி எலும்புகள் தளர்ந்தபின்னரே நீ உன்னை கடப்பாய். எண்ணமென்றால் இறந்தவையே என்று மாற, இருப்பென்றால் எஞ்சுதலென்றாக, ஒவ்வொன்றும் அசையும் அமையும் காலமென்றே தெரியும் ஒரு நிலையிலேயே காமம் என்றால் என்னவென்று நீ அறியலாகும். இது என் தீச்சொல். நீ முதுமை அடைக!” என்றார் சுக்ரர். யயாதி தன் தலை அவர் காலடியில் பட வணங்கி கூப்பிய கைகளுடன் எழுந்து செல்வதற்காக திரும்பினான். “நீ இத்தீச்சொல்லுக்கு மாற்று கேட்கவில்லை” என்றார் அவர். “ஆம், மாணவனாகிய எனக்கு எது தேவை என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான் யயாதி. “நீ விழைந்தால் இம்முதுமையை பிறருக்கு அளிக்கலாம். ஆனால் உன் பொருட்டு அதை அவர் விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் சுக்ரர். யயாதி மீண்டும் தலைவணங்கி வெளியேறினான்.

tigerயயாதி வெளியே வந்துகொண்டிருந்தபோதே முதுமை எய்தத் தொடங்கியிருந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வலுவிழந்து கால்கள் நடுங்கின. நோக்கு இரண்டாக பிளவுபட்டு அண்மையும் சேய்மையும் பிழைகொண்டதாயின. கைகளில் நடுக்கமிருப்பதை உணர்ந்தபின் தூண்களை பற்றிக்கொண்டு படிகளில் இறங்கினான். இறுதிப்படியை அடைந்தபோது அவன் உடல் கூன் விழுந்து முகம் நிலம் நோக்கியிருந்தது.

கழுத்தைத் தூக்கி முற்றத்தை பார்த்தபோது கிருதரும் சத்வரும் சுஷமரும் திகைப்புடன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். கிருதர் “அரசே…” என்றழைக்க கைநீட்டி “இது என் ஆசிரியரின் கொடை” என்றான். “எதுவாயினும் நான் அதை ஈட்டியிருக்கிறேன் என்றே பொருள்.” கிருதர் அவன் கைகளை பிடித்துக்கொண்டார். சத்வர் “அரசி இப்போதுதான் அறுந்த கூந்தலுடன் இறங்கிச் சென்றார். இங்கு தங்கும்படி கேட்டபோது மூச்சொலியால் எங்களை உதறி நடந்து சென்றார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்றார். “இனி அவள் பாதை அவளுக்கு” என்றான் யயாதி. “என்னால் புரவியில் இனி திரும்பமுடியாது. இன்றொருநாள் இங்கிருக்கிறேன். தேர் கொண்டுவரும்படி விருஷபர்வனிடம் கூறுக!”

கிருதர் “தீச்சொல்லுக்கு மாற்றுச்சொல்லுண்டு. ஆசிரியர் என்ன சொன்னார்?” என்றார். “இம்முதுமையை நான் விழைந்தால் பிறிதொருவருக்கு அளிக்கலாம் என்றார். பெறுபவரும் கொடுப்பவரும் உவந்தால் அது நிகழும் என்றார்” என்றான் யயாதி. கிருதர் “இளமையும் முதுமையும் எனக்கு ஒன்றுதான். முற்றிலும் மனமுவந்து இதை இக்கணமே நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் கொடை என்பது கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் நலன் விளைப்பது. இம்முதுமை உங்களுக்கு எதை கற்றுத் தரவேண்டுமோ அது நிகழவேண்டும்” என்றார்.

“உங்கள் காமம் உடலில் விளைந்தது என்று ஆசிரியரிடம் சொன்னீர்களா? என்றார் சத்வர். “ஆம், நான் வெறும் உடல் மட்டுமே என்றேன்” என்றான் யயாதி. “ஆகவேதான் இதை உங்களுக்கு அளித்திருக்கிறார். உங்கள் காமம் முற்றிலும் உடல் சார்ந்ததே எனில் இப்போது முற்றிலும் வற்றி அடங்கியிருக்க வேண்டும். உள்ளத்திலோ கனவிலோ ஆழத்திலோ ஒரு துளியேனும் காமம் எஞ்சினால் அது உங்கள் உடலின் விழைவல்ல என்றே பொருள்” என்றார் சத்வர். “நீங்கள் அறிவதனைத்தையும் தடுத்துக்கொண்டிருந்தது உடலென்று நடித்துக்கொண்டிருந்த அகம். உடலெனும் திரை விலகினால் இன்று அது தான் எவர் என்று அறியும்.”

யயாதி “களைப்புற்றிருக்கிறேன்” என்றான். அச்சொல்லாடல் அவன் உள்ளத்தை தளரச் செய்தது. கிருதர் “அரசே, உங்களுக்குள் ஒரு துளியேனும் காமம் எஞ்சுவதை நீங்கள் எங்ஙனமேனும் கண்டால் இவ்வுடலை எவருக்கேனும் அளித்து இளமையைப் பெற்று அக்காமத்தை நிறைவு செய்யுங்கள். அதன் பின்பு உங்கள் உடலை மீட்டுக்கொள்ளுங்கள். துளியென எஞ்சும் காமம் கல்லுக்குள் புகுந்த தேரையின் முட்டை.” என்றார். யயாதி “என்னுள் நோக்கவும் என்னால் இயலவில்லை. உள்ளம் திகைத்துள்ளது” என்றான்.

“இம்முதுமையை உங்களிடமிருந்து எவர் பெறுகிறாரோ அவர் நல்லூழ் கொண்டவர்” என்றார் கிருதர். “இடருற்று துயருற்று வாழ்ந்து முதிர்ந்து அறிவதனைத்தையும் இமைக்கணத்தில் அவர் அறிகிறார். இளமையிலேயே முதுமை கொண்டவனே மெய்மையின் பாதையில் முந்திச் செல்கிறான். நாமறிந்த மெய்ஞானியர் அனைவரும் நூறுமடங்கு விசைகொண்ட ஆனால் நூறுமடங்கு குறைவான இளமைக்காலம் கொண்டவர்கள். விரைவிலேயே முதுமைக்கு வந்தவர்கள். பின்னர் என்றும் முதுமையில் அமைபவர்கள்.”

யயாதி “என்னை நானே கூர்ந்து நோக்குவதற்கான தருணம் இது என உணர்கிறேன்” என்றான். சுஷமர் “வருக! எனது குடிலில் தாங்கள் இளைப்பாறலாம்” என்றார். சுஷமரின் கைபற்றி செல்லுகையில் யயாதி தனது கால்களும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆகவே தொலைவுகள் பெருகிவிட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒளிகுன்றி பிறிதென்றாகி சூழ்ந்திருந்தன. கண்கள் வண்ணங்களையும் கூர்மைகளையும் இழந்துவிட்டிருக்க அதை ஒரு கரையென்றாக்கி அலையடித்து நிறைந்திருந்தது அவன் அகம். நினைவுகளும் உருமாறிவிட்டிருந்தன. வஞ்சங்களும் விழைவுகளும் மங்கி ஒவ்வொன்றும் ஒரு நூலில் இருந்து படித்தறிந்தவைபோல் ஐயமின்மையின் தெளிவு பெற்றிருந்தன. சுவடிகளைப்போல தொட்டுத் தொட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எடுத்து நோக்க முடியும் என்பதுபோல.

புன்னகைத்து “என் வாழ்வை ஒரு சுவடிச்சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். எப்பகுதியையும் கைநீட்டி எடுத்துவிட முடியும். எல்லாமே என்னிடமிருந்து பிரிந்து பிறிதொன்றாகிவிட்டிருக்கின்றன” என்றான். சுஷமர் “மொழியில் அமைவதெல்லாமே நம்மிடம் இருந்து விலகிவிடுகின்றன. முதுமையென்பது நம் அறிதல்களையும் உறுதல்களையும் சொல்லாக்கி, மீண்டும் மீண்டும் சொல்லி பிறிதொன்றாக்கி, நம்மிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இளமையில் உறுதல்களின் முன் மாணவனாக இருக்கிறோம். முதிர்கையில்  அறிதல்களின் மாணாக்கனாகிறோம்” என்றார்.

அவரது குடிலின் படிகளை ஏறி மஞ்சத்தை அடைந்தபோது யயாதி மூச்சுத் திணறத் தொடங்கியிருந்தான். “அமருங்கள். நான் நீர் கொண்டு வருகிறேன்” என்றார் சுஷமர். “ஆம், உடன் பல்லுக்கு மென்மையான உணவு எதுவும் இருந்தால் கொண்டு வருக!” என்றான் யயாதி. பின்னர் மெல்ல மஞ்சத்தில் அமர்ந்து தன் மூட்டுகளையும் கால்களையும் அழுத்திப் பற்றியபடி “விந்தைதான். இத்தனை காலம் எனது மூட்டுகளைப்பற்றி நான் எண்ணியதே இல்லை. இன்று ஒவ்வொரு எண்ணமும் மூட்டுகளைப்பற்றிய தன்னுணர்வுடன் உள்ளது” என்றான். “ஓய்ந்து சலித்த இரு புரவிகள் போலிருக்கின்றன. இக்கணம் படுத்து இனி எழ முடியாது என அறிவிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.”

“நான் தங்களுக்கு இன்நீரும் உணவும் கொண்டுவருகிறேன், அரசே” என்றபின் சுஷமர் வெளியே சென்றார். யயாதி தன் குழலைத் தொட்டு விரலால் நீவி தலைக்குப்பின் தோல்வாரால் கட்டியபடி திரும்பிப் பார்த்தபோது அவ்வறையின் ஒரு மூலையில் பட்டுச் சால்வையொன்று கிடப்பதை கண்டான். எவரோ அளித்த கொடை. அதனை சுஷமர் தூக்கிவீசியிருந்தார். அதைக் கண்டதுமே சித்தம் உணராது உளம் எழுச்சிகொண்டது.

மஞ்சள்பட்டில் வெள்ளிநூல்களால் நுண்ணிதின் பின்னப்பட்ட அணிமலர்கள். அதை நோக்கிக்கொண்டிருக்கையில் அலையலையென நினைவுகள் வந்து உடலை அதிர வைத்தன. ஒரு தனியறையில் அறையிருளில் படுத்திருக்கையில் சுவரில் சாளரம் வழியாக வந்த இரவின் ஒளியில் கொக்கியில் நெளிந்துகொண்டிருந்த கலிங்கத்துச் சால்வை. அருகிருந்தவள் அவன் முதல் பெண். முதல் காமத்தின் களைப்பு. அருவருப்பும், இனிமையும், இழப்புணர்வும், தனிமையும் கலந்த தத்தளிப்பு.

பொன்னூல் பின்னிய பட்டின் வேலைப்பாட்டை அவன் தனியாக அதுவரைக்கும் நோக்கியதில்லை. எத்தனை வளைவுகள், கரவுகள், குழைவுகள். இத்தனை குழைவென்றால் அவன் நெஞ்சம் எத்தனை நெகிழ்ந்திருக்கவேண்டும்! ஓவியக்கோடுகள் நெளிகின்றன. இசை வளைகிறது. நடனத்தில் உடல் குழைகிறது. நீரும் நெருப்பும் வளைந்தாடுகின்றன. காற்று தொடும் அனைத்தும் அலைவுகொள்கின்றன. நெஞ்சின் நெகிழ்வை தாளாமல் அவன் விம்மினான். இருளில் அவ்வோசை அங்கு உடனிருந்த அறியாத் தெய்வமொன்றின் குரலென ஒலித்தது.

ஏன் அதை படைத்தான்? மலர் அவனுக்கு போதவில்லை. கடல்நுரையும் காற்றலை படிந்த மணல்மென்மையும் நிறைவளிக்கவில்லை. அவை கொண்ட பொருண்மையிலிருந்து அவற்றின் அழகைமட்டும் பிரித்தெடுக்க விழைகிறான். பட்டிலும் பொன்னிலும் சாந்திலும் கல்லிலும் எழும்போது அது அக்குழைவின் எழில் மட்டுமே. மலர் தொட்டு தளிர் தொட்டு நகை செய்யும் கைகளுக்கு தெய்வங்களின் அருளிருக்கிறது. தந்தையின் காலடியை தான் நடிக்கும் மைந்தர் அவர். அணி சூடுவோரை நோக்கித் திருமகளும் அணி செய்பவரை நோக்கி பிரம்மனும் குனிந்து புன்னகை செய்கிறார்கள். காமம் கொண்டவரை நோக்கி புன்னகைக்கின்றது பிரம்மம். ஒன்றிலிருந்து ஒன்றென தான் பெருகுவதை அது உணரும் தருணம் அது.

முதல் பெண்… அவள் யார்? நினைவில் படிந்த மென்மணலை அள்ளி ஒதுக்க ஒதுக்க ஆழம்தான் தெரிந்தது. ஆனால் மிக அருகே இருந்தது அவள் மணம். அதைத் தொட்டு தொடர்ந்து சென்றபோது அவள் முலைகளின் மென்மை. அதற்கப்பால் இருளென மங்கிய வெளியில் அவளது கூச்சம் கலந்த புன்னகை. செவியினூடாக நினைவுக்கு நேரடியாகச் சென்ற மென்சிரிப்புக் குரல். இருளில் பேசும் பெண்கள் பிறிதொருவர். காமம் கிளர்ந்தபின் பேசுவது முற்றிலும் புதிய ஒருவர். உச்சத்தில் விலங்காகுபவர். அக்கணம் அவளில் வந்து கூடி பின் விலகி மீண்டும் மலைகளென முகில்களென காற்றென பெருநதியென ஆகிறது என்றுமுள தெய்வம் ஒன்று.

சுஷமர் உள்ளே வந்ததும் யயாதி “எனக்கு ஓர் ஆடி கிடைக்குமா?” என்றான். சுஷமர் “கொண்டுவருகிறேன்” என்றபின் இன்நீர் கலத்தையும் உணவுத் தாலத்தையும் அருகே தாழ்பீடத்தில் வைத்தார். “ஆடி நோக்குக! ஆனால் நாளையே கிளம்பிச்சென்று உங்கள் முதுமையை பிறிதொருவருக்கு அளியுங்கள்” என்றார். யயாதி குழப்பத்துடன் “ஏன்?” என்றான். “ஆடி நோக்க விழைந்த கணம் உங்கள் காமத்தை கண்டுவிட்டிருக்கிறீர்கள். அது ஒழிந்து உளம் அமையாது நீங்கள் எழவியலாது.”

யயாதி “நான் காமம் கொள்ளவில்லை. வெறுனே எண்ணிப்பார்த்தேன்” என்று சொன்னான். “உங்கள் உடல் காமம் கொள்ளாது. உடலிலிருந்து மறைந்தபின் உள்ளம் கொள்ளும் காமம் மேலும் தெளிவும் கூர்மையும் கொண்டிருக்கும்” என்றார் சுஷமர். விழிதாழ்த்தி “ஆம்” என்று யயாதி சொன்னான். “இளமையான பிறிதொருவன் அங்கிருந்து அனைத்தையும் நடிப்பான். அவனை இங்கிருந்து நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அது வெற்று ஏக்கம், எஞ்சுவது வெறுமை.” யயாதி “உண்மைதான்” என்றான்.

“முதியவர் உள்ளங்கள் அனைத்திலும் அவர்களின் இளமைத் தோற்றமே திகழ்கிறது. உள்ளுறைபவனுக்கு முதுமை வந்தமையவேண்டும்” என்றார் சுஷமர். யயாதி தனக்கே என மெல்லிய குரலில் “ஆனால் இத்தனை இனிதான ஒன்றை முன்னர் நான் அறிந்ததில்லையென்று தோன்றுகிறது. அழகியது, நிறைவூட்டுவது, ஏனென்றால் புறமென ஒன்றில்லாமையால் மிகத் தூயது. பகிர்தலுக்கிடமில்லாதது என்பதனால் மிகமிகத் தனியானது” என்றான். சுஷமர் சிரித்து “நான் நூல்களில் அறிந்ததே. முதிரா இளமையில் புலனின்பங்களைப்பற்றிய கற்பனையாலும் இளமையில் புலனின்பங்களாலும் முதுமையில் புலனின்பங்களின் நினைவுகளாலும் சூழப்பட்டு மனிதன் மெய்மையின் பாதையிலிருந்து விலக்கப்படுகிறான். தேனே தேனீயின் சிறை” என்றார்.

யயாதி நீள்மூச்சுடன் இன்நீரை கையில் எடுத்தபின் “ஆம், இதை நான் துறந்தாக வேண்டும். எஞ்சியிருக்கும் துளி மிக ஆற்றல் கொண்டது. ஒன்று நூறுமேனியென விளைந்து பெருகுவது” என்றான். சுஷமர் “நீங்கள் ஆடியை நோக்க வேண்டாம் என்றே சொல்வேன்” என்றார். யயாதி “ஏன்?” என்றான். “இன்றொரு நாள் உங்கள் முகம் உங்கள் நினைவில் இல்லாமலிருக்கட்டும். இன்றிரவு உடலிலாது வாழ்ந்திருக்கலாம். நாளை காலை நீங்கள் ஆடி நோக்கலாம். அம்முகத்தை சுமந்தபடி செல்லும்போது உங்களுக்கு பிறிதொரு உலகம் தென்படக்கூடும்” என்றார்.

“உடல் எண்ணங்களை இப்படி அழுத்தும் என்று எண்ணியிருக்கவேயில்லை” என்றான் யயாதி. “இதுவரை நீரையும் அனலையும் இழுக்கும் விண் என்னை இழுத்துக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தேன். மண்ணில் கால் பதித்து நிற்கவே உளம் இருத்தி முயல வேண்டியிருந்தது. இன்று விண்ணுடன் பிணைத்த அனைத்துச் சரடுகளும் அறுந்துவிட்டன. மண் என்னை இழுக்கிறது. இங்கு எங்காவது படுத்தால் நீரிலென புதைந்து மண்ணுக்குள் சென்றுவிடுவேன். அங்கு பின்னி நிறைந்திருக்கும் பலகோடி வேர்களால் கவ்வி உண்ணப்பட்டுவிடுவேன்.” சுஷமர் “அதுவும் நன்றே. உப்பென்றாகி இந்த மரங்களனைத்திலும் தளிரென எழுந்து மீண்டும் வானில் திளைக்கலாம்” என்றபின் வெளியே சென்றார்.

அன்றிரவு தன்னால் துயில்கொள்ள முடியாதென்றே யயாதி எண்ணியிருந்தான். படுக்கையில் படுத்து உடலை நீட்டிக்கொண்டு இருட்டையே நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளே ஓடும் குருதியலைகள் இருட்டுக்குள் நெளிவதுபோலத் தெரிந்தது. ஊருலாவின்போது ஓர் உழவர் ஒவ்வொரு விதையையும் எத்தனை ஆழத்தில் புதைக்கவேண்டும் என்று சொன்னதை நினைவுகூர்ந்தான். “முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருகிறது. கருப்பையை கிழித்து குழவி எழுகிறது. விதை மண்ணைப் பிளந்து எழவேண்டும். ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு ஆற்றல். அந்த முதல்முளை எத்தனை மண்ணின் எடையை தாங்கமுடியும் என்பதை பார்க்கவேண்டும்” என்றவர் “எங்கே விழுந்தாலும் முளைப்பது ஆலமரம் மட்டுமே” என்றார்.

மண்ணுக்கும் உயிருக்குமான போர். எழுவதுமுதல் நின்றிருக்கும் ஒவ்வொரு கணமும். மண்ணை நினைத்துக்கொண்டிருந்தது விழித்த பின்னர்தான் தெரிந்தது. எழுந்து வெளியே வந்தபோது அனைத்தும் தெளிவாகியிருந்தது உள்ளத்தில். வெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள்? அவன் வெளியே வந்தபோது முற்றத்திலிருந்து சுஷமர் மேலேறி வந்தார். “இளவெயில் எழுந்துவிட்டது. நீராடி வருக! ஆவன அனைத்துக்கும் சொல்லியிருக்கிறேன்” என்றார். “தாங்கள் குருநகரி செல்வதற்கு விருஷபர்வன் அனுப்பும் தேர்கள் உச்சிப்பொழுதில் வந்துசேரும்.”

யயாதி நீராடி மாற்றுடை அணிந்து வந்து இளவெயிலில் அமர்ந்துகொண்டான். சுனைநீர் அத்தனை தண்மைகொண்டிருப்பதை முன்னர் உணர்ந்ததில்லை. தண்மையால் அது உலோகம்போல் எடைகொண்டிருந்தது. துவட்டி ஆடை அணிந்தபின்னரும் உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. குளிர் உடலுக்குள் இருந்து எழுந்து வந்துகொண்டிருந்ததுபோல் தோன்றியது. எலும்புகள் உலோகத்தாலானவைபோல தண்மையுடன் இருந்தன. இளவெயில் பட்டபோது தோல் மெல்ல சூடாகி சுருக்கங்கள் விரியத் தொடங்கின. குருதியில் வெம்மை படர்ந்தது. பின் தசைகள் உருகுவதுபோல் நெகிழ்ந்தன. அன்னைப்பறவை குஞ்சை என வெயிலின் சிறகுகள் அவனை சூழ்ந்துகொண்டன. கண்கள் மெல்ல மூட இமைகளுக்குள் குருதிச்செம்மை ஓடியது. உள்ளம் மெல்ல சொக்கி செயலிழந்து சிறுதுயில் ஒன்றில் இளமையில் விளையாடிய காலையொளி பரவிய சோலை ஒன்று மின்னும் இலைகளும் நீரலை வளைவுகளுமாக வந்தது.

விழித்துக்கொண்டபோது கிருதர் அவனை நோக்கி வந்தார். விழி தெளியாமையால் யயாதி அவரை அடையாளம் காண சற்று பிந்தியது. பொதுவான புன்னகையுடன் “வருக!” என்றான். அவர் அருகணைந்து “வணங்குகிறேன், அரசே” என்றபோதுதான் அது கிருதர் என தெரிந்தது. “கிருதரா… என்ன செய்தி?” என்றான். “இரு செய்திகள். பேரரசி அரசு துறந்து இங்கே அருகிலிருக்கும் ஜலசாயை என்னும் சோலையில் தங்க முடிவெடுத்திருக்கிறார். அங்கு அவருக்காக ஒரு குடில் கட்டப்பட்டுள்ளது. தனிமையில் தவமியற்றவிருக்கிறார்.” எவரைப்பற்றியோ என அதை யயாதி கேட்டான். அச்செய்தியுடன் நினைவுகளையும் எண்ணங்களையும் கொண்டுசென்று இணைக்கமுடியவில்லை. அவை வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தன.

“அரசியின் அணுக்கத்தோழி சாயையை எட்டு நாட்களுக்கு முன்னர் காட்டில் புலிகள் தின்றுவிட்டிருக்கின்றன. அவரைத் தேடியலைந்த ஹிரண்யபுரியின் ஒற்றர்கள் அவர் அணிந்திருந்த நகை ஒன்றை கண்டடைந்தனர். தேடிச்சென்றபோது எலும்புகளும் குழலும் மட்டும் எஞ்சியிருப்பதை அறிந்தனர்.” சில கணங்களுக்குப் பின்னரே அதுவும் அவனுள் பதிந்தது. ஆனால் அதற்குள் மீண்டும் அடைக்கோழிபோல அவன் இமைகள் சரிந்துவந்தன. தாடை தளர்ந்து வாய் திறந்தது. மெல்லிய குறட்டை ஒலி எழக்கேட்டு கிருதர் புன்னகையுடன் திரும்பி காலடி எடுத்துவைத்தார்.

காலடியோசை கேட்டு விழித்துக்கொண்ட யயாதி முன்னர் நிகழ்ந்தவற்றுடன் இணைந்துகொள்ளமுடியாமல் திகைத்து “யார், கிருதரா?” என்றான். அவன் ஆழ்மண்ணில் புதைந்திருக்க எவரோ தலையை மாறி மாறி உதைத்து “முளைத்தெழுக… முளைத்தெழுக” என்று சொல்லிக்கொண்டிருந்த கனவை நினைத்து கசிந்த வாயைத் துடைத்தபடி “என் முதுமையை கொடுத்துவிட முடிவெடுத்துள்ளேன்” என்றான். “தங்கள் மைந்தருக்கு அளிப்பதே முறை. தந்தையின் மூன்றுவகை ஊழுக்கும் மைந்தரே உரிமையும் கடமையும் கொண்டவர்கள்” என்றார் கிருதர்.