மாமலர் - 76

76. ஐம்பெருக்கு

“ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ? ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ? அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ? அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ? முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ?”

மாளவத்துக் கவிஞர் சாம்பவர் தன் குறுங்காவியத்தின் இறுதிச் செய்யுளை படித்து முடித்து ஓலை தாழ்த்தியதும் எதிரில் பீடத்தில் அமர்ந்திருந்த யயாதி தலையசைத்து “நன்று, மிக நன்று. இக்காவியம் முழுக்க எழுந்த கதையின் அனைத்துச் சரடுகளும் இந்தச் செய்யுளில் இணைகின்றன. விடையில்லா வினாவாக விண்ணை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது காவியம். நுண்ணியது என்பதனால் அரிது. நெஞ்சை நிறைப்பதென்பதனால் நன்கறிந்ததும்கூட” என்றான்.

சாம்பவர் முகம் மலர்ந்து தலைவணங்கி “சொல்லோடு சொல்கோத்து எழுதப்பட்ட எதுவும் குருநகரியின் பேரரசரின் அவையில் ஒலித்த பின்னரே கவிதையென்றாகிறது என்று இன்று பாரதவர்ஷம் முழுக்க கவிஞர் பாடத்தொடங்கிவிட்டனர். இவ்வொரு சொல்லுக்காகவே இத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம். எங்கள் சொற்கள் காலத்திரை கடந்து செல்லுமென்று இப்போது உறுதி கொண்டோம்” என்றார்.  கைகூப்பியபடி அவர் எழுந்து நிற்க அவருக்குப்பின் அமர்ந்திருந்த இளைய மாணவனும் இரு கற்றுச்சொல்லிகளும் ஏடுகளை அடுக்கிக் கட்டி பிரம்புக்கூடையில் அடுக்கினர்.

யயாதி எழுந்ததும் அருகே நின்றிருந்த அரசப்பணியாளன் பரிசில்தாலத்தை நீட்டினான். சாம்பவரை அணுகி அந்தத் தாலத்தைப் பெற்று அவரிடம் அளித்து “கவிதைக்குப் பரிசில் என்பது தெய்வத்திற்கு காணிக்கைபோல. அது தெய்வத்தை அளவிடுவதில்லை, கொடுப்பவனை அளவிடுகிறது” என்றான். அவர் அதை பெற்றுக்கொண்டு  “அரசே, தாங்கள் மகிழ்ந்தளித்த சொற்கள் முதற்பரிசில். அது கருவூலத்திலிருக்கும் பொற்குவை. இப்பரிசில் அதை பணமென்றாக்கும் முத்திரைஓலை” என்றார். “குருநகரியின் யயாதியின் சொல்லால் இக்காவியம் ஒப்புபெற்றது என்பதை பாரதவர்ஷம் முழுக்க சென்று சொல்லி என் தலைமுறைகள் பொருள்பெற்றுக்கொண்டே இருக்கும்” என்றார்.

அவரது அருகிருந்த பன்னிரு வயதான சிறுவனை நோக்கி யயாதி “உரிய இடங்களில் சொல்லெடுத்து நீர் ஒழுக்கை நிறுத்தியதை கண்டேன். இக்கவிதையை நன்கறிந்திருக்கிறீர், சொல்லையும் பொருளையும்” என்றான். “என் மாணவன் சேந்தன்எழினி. தமிழ்நிலத்தைச் சேர்ந்தவன். தென்பாண்டிநாட்டின் தொன்மையான தமிழ்ப்புலவர்குடியைச் சேர்ந்தவன்” என்றார் சாம்பவர். அவன் தலைவணங்கி “முக்கடல்முனம்பின் பாணர்குலமாகிய முல்லையரில் வந்த எழினியாதனின் மைந்தன் சேந்தன்எழினி” என்றான். யயாதி முகம்மலர்ந்து “நெடுந்தொலைவு. வலசைப்பறவைபோல சொல் எல்லைகளில்லாத பிறிதொரு நிலத்தை காலடியில் காண்கிறது” என்றான்.

எழினி கரிய நிறமும் மின்னும் கன்றுவிழிகளும் கொண்டிருந்தான். அவனுடைய  மயிர்மழிக்கப்பட்ட தலைமேல் கைவைத்து “சொல்லை எவரும் பெற்றுக்கொள்ளமுடியும், இளங்கவிஞரே. அறியா ஆழங்களில் சொல் சென்று தைக்கும் இலக்குகள் சில உள்ளன. அவை எவையென கண்டறிபவன் கவிஞனாகிறான். உமக்கும் அது நிகழட்டும்” என்றான். அவன் தலைவணங்கி “தன் விழைவால் விதை பறவையின் வயிற்றிலும் விலங்கின் தோலிலும் காற்றின் அலைகளிலும் தொற்றிக்கொண்டு முளைக்கவிருக்கும் இடத்தை தெரிவு செய்கிறது. விதைக்கு இலக்கென்றாவது மிக எளிது, நாம் ஈரம் கொண்டிருந்தால் மட்டும் போதும்” என்றான்.

உவகையுடன் அவன் செவிகளைப் பற்றி உலுக்கி “நன்று, நன்று! நான் சொல்கிறேன் சாம்பவரே, ஒரு நாள்  இவருடைய ஆசிரியர் என்று அறியப்படுவீர்கள்” என்று யயாதி சொன்னான். அவன் திரும்பியதும் பணியாள் குறிப்பறிந்து பிறிதொரு தாலத்தை நீட்ட அதைப் பெற்று எழினியிடம் அளித்து “புகழ்சூடுக! வெற்புகள் பொடியாகும் காலத்திற்குப் பின்னரும் உமது சொல் வாழ்க! ஆழியலை என காலம் அமையா நாவுகொண்டு உம் சொல்லை உரைக்கட்டும்” என்றான். அவன் கைநீட்டிப் பெற்ற பரிசிலை கற்றுச்சொல்லியிடம்  அளித்து குனிந்து யயாதியின் கால்களைத் தொட்டு சென்னிசூடினான்.

யயாதி திகைத்து பின் அவன் தலைதொட்டு வாழ்த்தி “புலவர்கள் அரசரின் தாள் சூடுவதில்லை, இளங்கவிஞரே” என்றான்.  “நான் பாரதவர்ஷத்தின் முதன்மை சொல்சுவைஞரின் கால்களை தொட்டேன்” என்றான் எழினி. “கவிஞனுக்கு முதலாசிரியன் அவன்முன் அறியா இருப்பென விளங்கி சொல் தழைக்கவைக்கும் நுண்சுவைஞனே என்பார்கள். இன்றுவரை முகமிலா பேருருவனாக விளங்கியவன் தங்கள் வடிவில் மானுடத் தோற்றம் கொண்டு எழுந்திருக்கிறான். நான் வணங்கியது அவனையே.”

யயாதி “நன்று, வாழ்க!” என்று உளநெகிழ்வுடன் மீண்டும் அவன் தலையை தொட்டான்.  “இந்த அவையில் தாங்கள் எழுதப்போகும் பெருங்காவியத்திற்காக நான் காத்திருப்பேன், தென்னவரே. ஒருவேளை என் உடல் நீங்கினால் இங்கு என் செவிகளில் ஒன்று நுண்வடிவில் இருக்கும் என்று கொள்க! என் கைகள் என் மைந்தர் தோள்களில் அமைந்திருக்கும். ஒளிசூடிவரும் உங்கள் சொற்களுக்கு அவை பரிசளிக்கும். ஆம், அது நிகழும். அத்தருணத்தை இப்போது நன்குணர்கிறேன்” என்றான். சாம்பவர் கண்களில் நீர் வழிய உதடுகளை அழுத்தியபடி சற்று திரும்பிக்கொண்டார். எழினி “குருவருள் நிறைக!” என  மீண்டும் வணங்கினான். அவர்கள் புறம் காட்டாது அகன்றனர்.

tigerயயாதி இசைக்கூடத்தின் மூலையில் கைகட்டி நின்றிருந்த பார்க்கவனை அப்போதுதான் கண்டான். அவனை நோக்கி தலையசைத்தான். பார்க்கவன் அருகே வந்து வணங்கி “நான் இரண்டாவது களத்திலேயே வந்துவிட்டேன். காவியத்தில் மூழ்கியிருந்தீர்கள்” என்றான்.  “ஆம், அரிய காவியம். போர்க்களமொன்றின் உச்ச தருணம். மாயத் தெய்வமொன்று அத்தனை படைக்கலங்களையும் வீரர்களின் கைகளிலிருந்து விலக்கிவிட்டால் அங்கு அரியதோர் நடனம்தான் நிகழும். அக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்பதாக எண்ணிக்கொண்டேன். ஊழ் உருவடிவுகொண்டு எழுந்து அலையடிப்பதுபோல. பிரம்மத்தின் சொல் ஒன்று உருகி உருகி சிற்பமாகிக்கொண்டிருப்பதுபோல. பல தருணங்களில் விதிர்ப்பு கொண்டு உளமிலாதவனானேன்” என்றான்.

“நான் இருமுறை எழுந்துசென்றேன், சொல்கொள்ள செவியிலாதிருந்தேன்” என்றான் பார்க்கவன். “ஒரு விந்தையான தொல்கதையிலிருந்து எழுந்தது இக்காவியம். இது பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையில் விளங்குகிறது. இங்கு நிகழ்ந்த பெரும்போர் ஒன்றைப் பற்றியது. அதை நிகழவிருக்கும் போர் என உருவகித்திருக்கிறார் சாம்பவர்”  என்றான் யயாதி. “ஐந்து உடன்பிறந்தார். அக்குலத்திலேயே அவர்களுக்கு எதிர்நிற்கப்போகும் நூறு உடன்பிறந்தார். சீதம் என்னும் நிலத்திற்காக பூசலிட்டு போருக்கு எழுகிறார்கள். பதினெட்டுநாள் நடந்த பெரும்போருக்குப்பின் நூற்றுவரைக் கொன்று ஐவர் வெல்கிறார்கள். வென்று அவர்கள் அடைந்த நாட்டை அவர்களால் ஆளமுடியவில்லை. நூற்றுவர் மூச்சுலகில் எஞ்சி பேயுருக்கொண்டு எழுகிறார்கள். கொடுங்காற்றுகளாக மரங்களை வெறிகொள்ளச் செய்கிறார்கள். அனல்மழையாகப் பெய்து ஏரிகளை சேறுலரச் செய்கிறார்கள். கருக்குழவிகளின் கனவுகளில் கண்ணொளிரத் தோன்றி அறியாச் சொல்லுரைத்து அச்சுறுத்துகிறார்கள்.”

“பன்னிரு குடிப்பூசகர் கூடி வெறியாட்டுகொண்டு வான்சொல் இறக்கி ஆவதுரைக்கின்றனர். அதன்படி ஐந்திறத்தார் அந்நிலத்தை நூறாகப் பகுத்து இறந்தவர் நூற்றுவரின் தெய்வங்களுக்கு படையலிட்டு தங்கள் மைந்தரை அத்தெய்வங்களிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். நூறு தெய்வங்களும் தென்றலும் குளிரொளியும் ஆகி அந்த மைந்தரை தழுவிக்கொள்கின்றன. அவர்களும் அவர்களின் கொடிவழியினரும் அந்நிலத்தை ஆள்கின்றனர்” என்று யயாதி சொன்னான்.

“மிகத் தொன்மையான ஒரு கதை இது” என்று பார்க்கவன் சொன்னான். “இக்கதையை தென்னகத் தொல்குடியினர் அனைவரும் வெவ்வேறுமுறையில் பாடுகிறார்கள். தொல்காலத்தில் ஆயிரம் மைந்தரைப்பெற்ற பெருந்தந்தை ஒருவர் இறந்து மண்மறைவுக்காக வைக்கப்பட்டிருக்கையில் உடல் பெருகத் தொடங்கியது. கைகால்கள் நீரோடைகள் போல இருபுறமும்  வழிந்தோடி நீண்டன. வயிறு உப்பி தலை உயர்ந்தெழுந்து சிறிய மலையளவுக்கு ஆகியது அவர் உடல். குடியினர் அவர் முன் வணங்கி  ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியதென்ன?’ என்றார்கள். பூசகரில் சன்னதம் கொண்டு ‘பெருகும் விழைவுடன் இறந்தவன் நான். பெருகுதல் நிலைக்காது நான் விண்ணேக முடியாது. என்னை இரண்டாக வெட்டுங்கள்’ என்று அவர் சொன்னார்.”

அவர்கள் பெரிய கோடரியால் அவரை இரண்டாக வெட்டினார்கள். அவ்விரு துண்டுகளும் தனித்தனியாக பெருகி வளர்ந்தன.  ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியது என்ன?’ என்று மீண்டும் குடியினர் மன்றாடினர். ‘என் உடலை துண்டுகளாக வெட்டுங்கள். அவற்றை இக்காடு முழுக்க பரப்புங்கள்’ என்றார் மூதாதை. அவர்களில் மூத்தவர்கள் தந்தையின் தலையும் நெஞ்சும் தோளும் அடங்கிய பகுதியை ஐந்து துண்டுகளாக வெட்டினார்கள். காட்டின் ஐந்து நீர்நிலைகளில் அவற்றை வீசிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்குள் வயிறும் தொடையும் கால்களும் அடங்கிய பகுதியை அக்குடியின் இளைஞர்கள் நூறு துண்டுகளாக வெட்டியிருந்தனர். அவற்றை அக்காட்டின் சேற்றுநிலங்களில் விசிறியடித்த பின் அவருக்கு படையலிட்டு விண்ணேற்றம் செய்தனர்.

காட்டில் சிதறிய அவர் உடல் தனித்தனி குலங்களாக முளைத்தெழுந்தது. ஐந்து துண்டுகளிலிருந்து ஐந்து பெருங்குலங்கள் உருவாயின. அவர்கள் மழைக்காளான்களைப்போல வெளிறியநிறம் கொண்டிருந்தமையால் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுவர் கரிய நிறம் கொண்டிருந்தமையால் கராளர் என்று அழைக்கப்பட்டனர். அவ்விரு குலங்களும் ஒருவரையொருவர் அஞ்சினர். எனவே ஆழ்ந்து வெறுத்தனர். வெண்ணிறத்தோர் கரியவரை சேற்றில் முளைத்தவர்கள், அழுக்குடல் கொண்டவர்கள் என எண்ணினர். கராளர் பாண்டவர்களை பாறைகளில் இருந்து எழுந்த சீழில் உருக்கொண்டவர்கள் என்றனர். பாண்டவர் பசுக்களையும், கராளர் எருமைகளையும் மேய்த்தனர். பாண்டவர்கள் நெல்லையும் கராளர் கேழ்வரகையும் பயிரிட்டனர்.

ஒவ்வொரு நாளும் இரு சாராரும் தங்களுக்குள் வெறுப்பை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் ஆற்றிய ஒவ்வொரு செயலும் வெறுப்பை வளர்த்தன. ஒவ்வொரு சொல்லும் நூறுமேனி பெருகி பிறரைச் சென்றடைந்தது. நூற்றெட்டு மூதாதையர் கூடி இருசாராரையும் ஒற்றுமைப்படுத்த நூற்றெட்டு முறை முயன்றனர். ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னரும் அவர்கள் மேலும் காழ்ப்பு கொண்டனர். நூற்றெட்டாவது முறை ஒற்றுமை முயற்சி எடுத்தவர்கள் அர்ஜுனராமன், கிருஷ்ணத் துவதீயன் என்னும் இரு உடன்பிறந்தார்.  அர்ஜுனராமன் வெண்சுண்ணநிறம் கொண்டிருந்தார். இளையவர் யானைக்கன்றுபோல் இனிய கரியநிறமுடையவர். மூத்தவர் மேழியோட்டினார், இளையவர் கன்று புரந்தார்.

காட்டின் மையமாக அமைந்த ஐங்குளத்துக்கரையில் அவர்கள் ஒருங்குசெய்த சந்திப்பு சொல்லேற்றத்திலும் படைமுட்டலிலும் முடிய மூதாதையர் இருவரும் தங்கள் பெரும் படைக்கலங்களை எடுத்து ஓங்கி விண்ணதிரும் ஒலியெழுப்பி அவர்களை அச்சுறுத்தி நிறுத்தினர். அக்கூடல் கலைந்தபின் இருவரும் ஐங்குளத்தருகே அமர்ந்து சொல்கொண்டனர்.    ‘ஏன் இப்பூசல் ஒழியாமலிருக்கிறது? தெய்வங்களை அழைத்து கேட்போம்’ என்றனர். சேற்றில் களம் வரைந்து அதில் வெண்சிப்பிகளும் கரிய கூழாங்கற்களும் பரப்பி தெய்வங்களை வந்தமையச் செய்தனர். சிப்பிகளை மூத்தவரும் கூழாங்கற்களை இளையவரும் ஆடினர். ஆட்டத்தின் ஒரு தருணத்தில் அவர்களின் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொண்டன. அனைத்தும் அவர்களுக்கு தெளிவாயின.

‘இது விண்முகட்டுத் தெய்வங்களும் மண்ணாழத்துத் தெய்வங்களும் களம்காண மானுடரை கருவாக்கும் போர். மானுடரால் ஒருபோதும் நிறுத்தப்பட இயலாதது. எனவே இது உகந்த வழியில் நிகழ்வதே முறை. இதன் நெறி பேணுதல் ஒன்றே நாம் செய்யக்கூடுவது’ என்றார் மூத்தவர். ‘ஆம், காட்டெரி தளிர் வளர்ப்பது’ என்றார் இளையவர்.  ‘கரியவர்களை வெண்ணிறத்தோனாகிய நான் துணைப்பேன். வெண்ணிறத்தவரை கரியோனாகிய நீ துணை செய். அதுவே முறை’ என்றார் மூத்தவர். ‘அவ்வாறே’ என்று தலைவணங்கினார் இளையவர். இருவரும் சென்று அக்குலங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

ஐங்குளத்தின் கரையருகே முறைப்படி காடுதிருத்தி வெளிநிலம் அமைக்கப்பட்டது. கோள்கள் உகந்த நிலைகொண்ட நன்னாளில் இருசாராரும் தங்கள் முழு வீரர்களுடன் அனைத்துப் படைக்கலங்களுடன் திரண்டனர். மூத்தவர் மேழியைத் தூக்கி போர்க்குரலெழுப்பினார். இளையவர் வளைதடியை ஏந்தி போர்முகம் கொண்டார். முதற்கதிர் எழும் புலரியில் போர்முரசு ஒலித்ததும் அணைகள் உடைந்து நீர் பெருக்கெடுத்து எழுந்து  அறைந்து இணைந்து நுரை கொப்பளிக்க ஒன்றென ஆகி சுழிப்பதுபோல இரு படைகளும் மோதிக்கொண்டன.

அப்பெரும்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பதினெட்டாவது நாள் இருசாராரும் முழுமையாகவே இறந்து விழுந்தனர்.  இருகுடியிலுமாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே எஞ்சினர். குருதி வழிந்த அந்தக் களத்தில் வைத்து கராளகுலத்துக் கருநிற மங்கையாகிய கிருஷ்ணையை பாண்டவகுலத்து வெண்ணிற  இளையோனாகிய அர்ஜுனனுக்கு மூதாதையர் இருவரும் கைசேர்த்து வேதச்சொல் ஒலிக்க மணம் செய்து வைத்தனர்.  அவர்களிடம் அங்கிருந்து அகன்று தங்கள் நிலத்தைக் கண்டுபிடித்து அங்கு குருதி பெருக்கும்படி பணித்தனர்.  அந்தக் களக்குருதியைத் தொட்டு அவள் குழலில் பூசி அதை ஐந்துபுரியாகப் பிரித்து கட்டியபின் அவர்கள் தெற்கே சென்று குடியமைத்து மைந்தரை ஈன்று குடியென குலமெனப் பெருகினர்.

ஆயிரம் ஆண்டுகள் கழித்து அக்குலத்தினர் திரண்டு அந்தப் போர் நிகழ்ந்த இடத்தை நாடிவந்தனர். அங்கு பல்லாயிரம் எலும்புகள் மண்ணில் புதைந்துகிடக்க அவற்றின்மேல் வேர் சுற்றி எழுந்த மரங்கள் செறிந்த காடு செங்குருதிநிற மலர்களால் நிறைந்திருக்கக் கண்டனர். அக்காட்டில் நூற்றைவருக்கு கற்சிலைகளை நாட்டி படையலிட்டு வணங்கி வழிபட்டு மீண்டனர். குருதிப்பூவின் விதைகளைக் கொண்டுசென்று தங்கள் மண்ணில் நட்டு வளர்த்தனர். அவர்களின் குலத்தின் குறியாக அந்த மலர் அமைந்தது. இளவேனில் தொடக்கத்தில் அவர்களின் குலக்கன்னியர் ஐந்துபுரியென குழல்வகுத்து அதில் செங்காந்தள் மலர்சூடி இளையோருடன் காதலாடினர். அது இனிய புதல்வியரையும் வலிய மைந்தரையும் அளிக்குமென நம்பினர்.

“திருவிடத்திற்குத் தெற்கே தொல்தமிழ் நிலத்தின் தென்முனம்பில் முக்கடல்சந்திப்பின் அருகே மகேந்திர மலையில் வாழும் தொல்குடிகளின் கதை இது. தங்கள் மூதாதையர் வடக்கே இமயப் பனிமலைகளின் அடியில் வாழ்ந்த முதற்குடியினர் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து இக்கதை பிற குடிகளுக்குப் பரவி வடிவ மாறுதல் அடைந்தபடியே உள்ளது” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி  “விந்தையான கதை. ஆனால் பாரதவர்ஷத்தின் வளர்ச்சிப்போக்கை எவ்வண்ணமோ அது சுட்டுவது போலும் உள்ளது. கருமையும் வெண்மையும் முடிவிலாது கலந்து கொண்டிருக்கும் ஒரு மாயச் சிறுசிமிழ் என்று இந்நிலத்தை சொல்லமுடியும்” என்றான்.

tigerஅவர்கள் அரசத்தனியறை நோக்கி நடக்கையில் பார்க்கவன்  “நான் இந்த அவைநிகழ்வு தொடங்குவதற்குள் தங்களை வந்து சந்திக்கவேண்டுமென்றிருந்தேன். அதன்பொருட்டே விரைந்தோடி வந்தேன்” என்றான். யயாதி “ஆம். நான் உச்சிக்குப் பின்னர்தான் இவர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று எண்ணியிராதபடி பிறிதொரு திட்டம் எழுந்தது. மாலை அசோகவனிக்கு செல்வதாக இருந்தேன். முன்னரே கிளம்பி இன்றிரவே சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆகவே இவர்களை உடனே கிளம்பி அவைக்கு வரும்படி அழைத்தேன்” என்றான்.

“நான் சொல்ல வந்த செய்தி இரு வகைகளிலும் தொடர்புடையதே” என்று பார்க்கவன் சொன்னான். அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணராமல் சாளரங்களை மாறி மாறி பார்த்தபடி நடந்த யயாதி “சொல்!” என்றான்.  “இந்தப் பாணர்குழு இன்று காலை பேரரசியின் அவை முன் தோன்றியிருக்கிறது. அங்கே எட்டு புலவர்க்குழுவினர் முன்னரே வந்திருந்தனர். ஆகவே எவரையும் முழுநூலையும் பாடுவதற்கு அரசியின் அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.  அரசி அவர்கள் ஒன்பதுபேருக்குமாக அரைநாழிகைப் பொழுதையே ஒதுக்கியிருந்தார்கள்.” யயாதி “அவள் முழுக் கோபுரத்தின் எடையையும் தாங்கியிருக்கும் ஆணிக்கல்” என்றான்.

முதல் வாழ்த்துச் செய்யுளை மட்டுமே பாடினால் போதும் என்று அரசியின் முதன்மையமைச்சர் கிருபர் ஆணையிட்டிருக்கிறார். அதை ஏற்று அத்தனை புலவர்களும் தங்கள் நூல்களின் முதன்மைச் செய்யுள்களை மட்டுமே பாடியிருக்கிறார்கள். சாம்பவரும் அவ்வாறே பாடி பரிசிலை பெற்றுக்கொண்டார். பரிசில் பெற்றவர்கள் அரசியை அணுகி வணங்கி வாழ்த்தொலி கூறி புறங்காட்டாது பின்னகர்ந்தபோது தென்னகத்தின் இவ்விளைய புலவர் மட்டும் வாழ்த்தொலி கூறாது தலைவணங்கி திரும்பிச்செல்ல அரசி அவரிடம் “இவர் என்ன சொல்லற்றவரா?” என்று கேட்டார். சாம்பவர் திகைத்து சொல்வதறியாது இளையோனிடம் கையசைத்தார். இவர் அப்போதும் வாழ்த்துரைக்காமல் வெறுமே நின்றார். “வாழ்த்துரை கூற உமக்கென்ன தயக்கம்?” என்று அரசி அவரிடம் கேட்டார்.

இவர் “பேரரசி, நீங்கள் அளித்த பரிசிலை நான்  ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே முறைப்படி வாழ்த்தொலி சொல்லும் கடன் எனக்கில்லை” என்றிருக்கிறார். “ஏன் பரிசிலை ஏற்றுக்கொள்ளவில்லை?” என்று அரசி சினத்துடன் கேட்க இவ்விளைஞர்  “அது வரிசை அறியாது அளிக்கப்பட்டது. எங்கள் காவியத்தைக் கேட்டு மகிழ்ந்தளிக்கும் பரிசு மட்டுமே எங்களுக்குரியதாகும். நிரைநின்று தலைவணங்கிப் பெறுவது பரிசில் அல்ல, வறுமைக்கொடை.  அதைப் பெறுவதற்கு நாங்கள் இரவலரல்ல” என்றார்.

சினத்துடன் எழுந்த பேரரசி அமைச்சரிடம் “யாரிவன்? பேரரசியின் முன் எப்படி சொல்லெடுக்க வேண்டுமென்று இவனுக்கு சொல்லப்படவில்லையா?” என்றிருக்கிறார். சாம்பவர் அவனை இடதுகையால் தன்னுடன் அணைத்துக்கொண்டு  “பொறுத்தருளுங்கள், அரசி! தங்கள் கால்களில் சென்னி வைத்து மன்றாடுகிறேன். என் முதன்மை மாணவன். சொல்மகள் அமர்ந்த நா கொண்டவன். இவன்பொருட்டு நான் எத்தண்டத்தையும் ஏற்கிறேன்” என்றார். அரசி சினத்துடன்  “இச்சிறுவனைப் பொறுத்தருளவில்லையென்றால் இவனுக்கு நான் நிகர்நின்றதாக ஆகும். ஆகவே உங்களை விட்டனுப்புகிறேன். ஆனால் நீங்கள் இப்போதே இந்த அவை நீங்கவேண்டும். இன்றே இந்நகர்விட்டு அகலவேண்டும்”  என்றபின் உள்ளே சென்றார்.

காவலர்தலைவன் தீர்க்கபாதனும் காவலர்களும் சினத்துடன் புலவரை நெருங்க முதிய அந்தணரான சுஸ்மிதர்  “அவர்கள் சொல்லேந்தியவர்கள், வீரரே. எவ்வகையிலும் அவர்களுக்குத் தீங்கு நேர இந்நகரின் நெறியும் குடியும் ஒப்பாது. அரசி ஆணையிட்டபடி அவர்கள் நகர் நீங்கட்டும். இந்நாட்டின் எல்லைக்குள் இவர்களுக்கு ஒரு தீங்கும் நிகழாது பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை” என்றார். அமைச்சர் கிருபர் சினத்துடன்  “அவ்வாறே செய்யுங்கள்” என ஆணையிட்டுவிட்டு உள்ளே சென்றர். இரு காவலர் அவர்களை அழைத்து வெளியே கொண்டுசென்று விட்டனர். “இச்செய்தி எங்கும் பரவக்கூடாது. அது பேரரசிக்கு இழிவு” என்று சுஸ்மிதர் சொன்னார்.

“அரசி அளித்த பரிசில்களை இவர்கள் அருகிருந்த கொற்றவை ஆலயத்தின் வாயிலிலேயே வைத்துவிட்டார்கள். அங்கிருந்து தங்களை சந்திப்பதற்கு இங்கு வந்திருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து ஒரு சொல் பெற்றுவிட்டே மீளவேண்டும், அதன்பொருட்டே அத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம் என அவ்விளைஞர் தன் ஆசிரியரிடம் வற்புறுத்தியிருக்கிறார்” என்றான் பார்க்கவன்.  “அவர்கள் இங்கு வந்ததை நான் அறிந்தேன். அரசியால் விலக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் பெரும்பரிசு எதையும் அளித்துவிடக்கூடாதே என்று எச்சரிக்கும்பொருட்டே இங்கு ஓடிவந்தேன்” என்றான்.

யயாதி புன்னகைத்து  “அவர்களுக்கு நான் பெரும்பரிசு அளிப்பேன் என்று எப்படி தெரிந்தது?” என்றான். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியின் எதிரே நிமிர்ந்து நின்று நீங்கள் என் சொல்லுக்குக் கீழ் என்று ஒருவன்  சொல்வான் என்றால் அவனிடம் இருக்கும் சொல் உலகளந்தோன் நெஞ்சில் சூடும் அருமணிக்கு நிகரானது. காலங்களைக் கடந்து செல்லும் பேராற்றல் கொண்டது.  தன்னுள் எழுந்த சொல்லின் தன்மை அறிந்தவன் மட்டுமே அப்படி உரைக்கமுடியும். பெருஞ்சொல் ஒருவனில் எழுந்ததென்றால் பிறர் அறிவதற்கு முன் அவன் அதை அறிவான்” என்றான் பார்க்கவன்.

யயாதி “ஆம், இதுவரை இந்த அவையில் அளிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பரிசிலை இவர்களுக்குத்தான் அளித்திருக்கிறேன். பன்னீராயிரம் கழஞ்சுப் பொன். பன்னிரண்டு அருமணிகள்” என்றான். பார்க்கவன் நின்று “உண்மையாகவா?” என்றான். “ஆம்” என்று யயாதி சொன்னான். பார்க்கவன் கவலையுடன் தன் நெற்றியைத் தடவியபடி  “நான் எண்ணினேன், ஆனால் இத்துணை எதிர்பார்க்கவில்லை” என்றான். யயாதி “அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. வேண்டுமென்றால் அவர்கள் உரிய பாதுகாப்புடன் நமது எல்லை கடக்கவேண்டுமென்ற ஆணையை நான் பிறப்பிக்கிறேன்” என்றான்.

“அது தேவையில்லை. பேரரசியின் சொல்லுக்கு அப்பால் இங்கு எவரும் எதுவும் எண்ணப்போவதுமில்லை. அவர்களின் விழியும் செவியுமில்லாத ஒரு கைப்பிடிமண் கூட நமது நாட்டுக்குள் இல்லை என்று எவரும் அறிவார்கள். சொல்தேர்பவனை பழிகொள்ளும் அளவுக்கு நெறியறியாதவரல்ல அரசி” என்று பார்க்கவன் சொன்னான். “பிறகென்ன?” என்றான் யயாதி. “அரசே, நீங்கள் விரிசலின் ஒலியை கேட்கவில்லையா?” என்றான்.

“ஆம். அது முன்பெப்போதோ தொடங்கிவிட்டது. நான் அவளை பார்த்தே நீணாள் ஆகிறது. இரண்டாவது மைந்தனின் படைக்கலமளிப்பு விழாவன்று அவள் அருகே அமர்ந்தேன். அன்று மாலை அவளுடனும் மைந்தனுடனும் சொல்லாடிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு ஓரிரு முறை அவைகளில் சேர்ந்தமர்ந்திருக்கிறோம். விழவுகளில் அருகே நின்றிருக்கிறோம். ஓரிரு முறைமைச் சொற்களை உரைத்திருக்கிறோம். உளமாடிக்கொண்டதே இல்லை” என்றான் யயாதி.  “என் ஆணைகள் எவையும் இந்நகரில் இன்று செயல்வடிவு கொள்வதில்லை. எனவே ஆணையென  எதையும் நான் இடுவதுமில்லை. திரிகர்த்தர்களையும் சௌவீரர்களையும் வெல்ல படைகிளம்பிய செய்திகூட அவர்கள் களம்வென்ற பின்னரே என் செவிக்கு வந்தது.”

“அரசே, தாங்களும் அரசியும் பிரிந்து நெடுநாளாகிறது. இப்போது எதிர்நிற்கத் தொடங்கிவிட்டிருக்கிறீர்கள்”  என்றான் பார்க்கவன். “நான் அஞ்சுவது நிகழவிருக்கிறது என்று என் ஆழுள்ளம் சொல்கிறது.   வரும் முழுநிலவுநாளில்  பேரரசி அசோகவனிக்கு செல்லவிருக்கிறார்கள்.” யயாதி திகைத்து நின்று சிலகணங்கள் கழித்து “தேவயானியா? ஏதேனும் தெரிந்துவிட்டதா?” என்றான். “இல்லை” என்றான் பார்க்கவன். யயாதி நீள்மூச்சுவிட்டு “நன்று” என்றான்.   “ஆனால் தெரிவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன” என்றான் பார்க்கவன். “அதைத் தவிர்ப்பதைப்பற்றி பேசுவதற்கே நான் வந்தேன்.”

யயாதி நோக்கி நின்றிருக்க பார்க்கவன் “உங்கள் குலமுறையன்னை அசோகசுந்தரியின் பலிகொடைநாள் வருகிறது. அதைக் கொண்டாடும்பொருட்டு அங்கே ஒரு பெருவிழவை ஒருங்கமைக்கிறார்கள். அரசி அதற்காக அங்கு செல்கிறார் என்பது அரசின் அறிவிப்பு. ஆனால் நம் எல்லையில் வாழும் தொல்லரக்கர்குடிகளில் ஏழு நம்முடன் அரசுமுறைத் தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். யயாதி “அதாவது கப்பம் அளிக்கப்போகிறார்கள்” என்றான். “ஆம், அதை முறைப்படி செய்வதென்றால் அவர்கள் அரசியிடம் வந்து பணியவேண்டும். அரசியின் அவையில் அமரவேண்டும். அரசி அவர்களுக்கு தலைப்பாகையும் கொடியடையாளமும் அளிப்பார்கள். அரசியின் குடித்தலைவர்களாக அவர்கள் அமைவார்கள். அந்த அடையாளம் அவர்களுக்கு பாதுகாப்பு, பிற குடிகளை வெல்வதற்கான படைக்கலம். அதற்கீடாக அவர்கள் திறை செலுத்துவார்கள்” என்றான் பார்க்கவன்.

“அதை ஏன் அங்கே நிகழ்த்துகிறாள்?” என்றான் யயாதி. “மேலும் பதினெட்டு தொல்குடிகள் அக்காடுகளில் உள்ளன. ஏழு குடிகள் நம்மவர்களாவதை அவர்கள் அறியவேண்டும். எதிர்ப்பதற்கு அஞ்சவேண்டும், பணிந்தால் நலனுண்டு என விழைவுகொள்ளவேண்டும்” என்றான் பார்க்கவன். “அவர்கள் எவரும் இதுவரை கண்டிராதபடி மிகப் பெரிய குடிவிழவாக அதை அமைக்க எண்ணுகிறார்கள். தொல்குடிகளின் போர்க்களியாட்டுகள், நடனங்கள், விருந்துகள் என ஏழு நாட்கள் நீளும் கொண்டாட்டம்.” யயாதி “அப்படியென்றால் அவள் பதினைந்து நாட்களுக்குமேல் அங்கிருப்பாள்” என்றான்.  “சர்மிஷ்டையை உடனே அங்கிருந்து அகற்றவேண்டும்.”

“இளைய அரசியை அங்கிருந்து விலகச் செய்வது பெரும்பிழை. பேரரசிக்கு பல்லாயிரம் செவிகள்” என்று பார்க்கவன் சொன்னான். “இளைய அரசி அங்கிருந்து அகற்றப்பட்டார் என்றால் ஐயம் எழும். அரசி அங்கிருக்கட்டும். அரசி தங்கியிருக்கும் மாளிகையையும் மாற்றவேண்டியதில்லை. அங்கே காவலர்தலைவன் தன் குடும்பத்துடன் தங்கியிருக்கட்டும்.” யயாதி “அவனுக்குச் சேடியாக சர்மிஷ்டை இருக்கிறாள் என்றாகவேண்டும் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பார்க்கவன். “இளவரசர் மூவரையும் வெளியே அனுப்பிவிடுவோம். அவர்கள் அங்கிருந்தால்தான் இடர். அவர்கள் காட்டுக்குள் சென்று தங்கட்டும். விழவு முடிந்து மீள்வது நன்று.”

நெடுநேரம் யயாதி ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “ஒன்றும் நிகழலாகாது என்று தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பார்க்கவன் “பேரரசியின் உயரத்தில் இருந்து இத்தனை சிறியவற்றை அவர்களால் இன்று நோக்கவியலாது. அவர்களின் இலக்கு மலைக்குடிகளை வென்றடக்கியபின் எல்லைகளை வலுப்படுத்திவிட்டு தென்னகம் நோக்கி படைகொண்டு செல்வது. அதன் நடுவே பிறவற்றை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. யானை நடக்கும் பாதையில் எறும்புகள் நாமெல்லாம்” என்றான்.  யயாதி “ஆம், நன்று நிகழவேண்டும்” என்றான்.