மாமலர் - 59

59. மலர்மருள் வேங்கை

தன் மஞ்சத்தில் கசனை துயிலவிட்டு அறைமூலையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேவயானி. அவன் பெருமூச்சுகள் விட்டபடி உடல் இறுகியும் அறியாது மெல்ல தளர்ந்தும் மீண்டும் இறுகியும் புரண்டுபடுத்தும் கைகால்களை நிலைமாற்றியும் துயிலிடம் மன்றாடிக்கொண்டிருந்தான். இமைக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் மூச்சு சீரடையத்தொடங்கியது. அவன் துயில்கொள்வது வரை அசையாது அமர்ந்திருந்தாலும் அவளுக்குள் உள்ளம் நிலையழிந்துகொண்டிருந்தது. அவனுடைய சீர்மூச்சு வரத்தொடங்கியதும் அவள் முகமும் மெல்ல எளிதாகியது. பின்பு அவளும் துயின்றாள்.

பின்னிரவில் விழித்துக்கொண்டபோது அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். சாளரங்கள் திறந்து கிடந்தமையால் அறைக்குள் குளிர்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மரவுரி இருக்கிறதா என்று அருகிலிருந்த மூங்கில் பெட்டியை திறந்து பார்த்தாள். வழக்கமாக அவள் போர்த்திக் கொள்வதில்லை. எந்தக் குளிரும் அவளை நடுங்க வைப்பதில்லை. அவள் குளிரை உணர்ந்தது முழுக்க கனவுகளில்தான். மரவுரிப்போர்வை எதுவும் அறைக்குள் இருக்கவில்லை. எழுந்து வெளியே சென்று  திண்ணையில் நின்று எவரையேனும் அழைக்கலாமா என்று பார்த்தாள். எவரும் கண்ணில்படவில்லை.

அப்பால் அவன் குடில் அவன் சாம்பலாக  மூங்கில் சட்டங்களுடன் எரிந்தணைந்த சிதைபோல் கிடந்தது. தீயணைந்த நிறைவில் களைப்புடன் அனைவரும் துயில்கொள்ளச் சென்றிருந்தனர். குளிர்ந்த இரவுக்காற்றில் கரிப்பிசிறுகள் பறந்து இறங்கிக்கொண்டிருந்தன. முற்றத்தில் மெல்லிய ஓசை கேட்டு வேங்கைகள் என எண்ணி மறுகணம் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள். மரக்கிளையிலிருந்து சிற்றுயிர் ஒன்று இறங்கி அப்பால் சென்றது. திரும்புவதற்கு முன் அந்த ஒரு கணத்திலும் மூன்று வேங்கைகளும் முழுமையாகவே அங்கு இருப்பு கொண்டிருந்தன என்று உணர்ந்தாள்.

தலையைத் திருப்பி பின்பக்கம் அவை அவளை நோக்கியபடி படுத்திருக்கின்றன என்று கற்பனை செய்தாள். ஆனால் அவ்வொலி கேட்டபோது அவை உண்மையென இருந்தன. இப்போது கற்பனையென்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவற்றின் மெல்லிய மயிர்மணத்தை, வாயிலெழும் ஊன் வீச்சத்தை, பளிங்குருளைக் கண்களை, பஞ்சுக்கால்களை, உடல்கோடுகளை ஒவ்வொன்றாக நினைவிலிருந்தே மீட்டு அங்கிருந்த வெற்றிடத்தில் பொருத்தி அவற்றை வரைந்து மீட்டெடுக்க முயன்றாள். அவை முழுமையாக நினைவில் மீளவில்லை. அவ்வோவியத்தின் உறுமல் புகை போன்று காற்றில் கரைந்து கொண்டிருந்தது. இறங்கிச் சென்று காட்டில் கிடக்கும் அவற்றின் சடலத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

ஒருகணத்தில் பெரும் துயரொன்று வந்து நெஞ்சை மோத குளிர்ந்த எடையென அடைத்து நிறைத்தது. கால்கள் அவ்வெடை தாளாததுபோல மூங்கிலை பற்றிக்கொண்டு நின்றாள். எக்கணமும் வெடித்துக் கிளம்பி சிறுவழியினூடாக ஓடி காலைப்பனி ஈரமென படர்ந்த மென்மயிர் உடலுடன் இறந்து உறைந்து கிடக்கும் அவற்றை அணுகி அவற்றின் அசைவிழந்த சிறுகாதுகளின் நடுவே கழுத்தை, வெண்ணிறப் பனிமயிர் படர்ந்த அடிவயிற்றை தடவிக்கொடுக்கக்கூடும் அவள். அவை தங்கள் ஐம்பொதிக்கால்களை மெல்ல அழுத்தி கொஞ்சக்கூடும். அங்கு சென்று அவற்றைப்பார்த்தால் கதறி அழுதபடி அவற்றின் மேல் விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. மெல்ல தூணைப்பற்றியபடி திண்ணையில் அமர்ந்தாள்.

இருட்டுக்குள் சுள்ளிகள் ஒடிவது போன்ற ஒலி கேட்டது. ஏதோ சிற்றுயிர் என எண்ணி அவள் தலை திருப்பாமலிருந்தாள். பின்னர் மூச்சொலி கேட்டது. தலையை உலுக்கி காதுகளை  ஒலிக்கச் செய்தது வேங்கை ஒன்று. அவள் விழிதூக்கி பார்த்தபோது குருநிலையின் நுழைவாயிலில் நின்றிருந்த சாலமரத்தின் அடியில் பெரும்புலி ஒன்றை கண்டாள். அவளது உடன்பிறந்த மூன்று வேங்கைகளில் ஒன்றல்ல அது என்று முதல் கணத்திலேயே தெரிந்தது. நெஞ்சைப்பற்றியபடி மூச்சிறுக எழுந்து அது விழிமயக்கா என இருளை கூர்ந்து பார்த்தாள்.

மிக அருகிலென அதை கண்டாள். அக்கணமே அது ஏதென அறிந்தாள். மூன்று குட்டிகளை அங்கு விட்டுச்சென்ற அன்னைப்புலி. அங்கிருந்து சென்ற அதே முகத்துடன் மீண்டு வந்திருந்தது.  அதன் முகவாயின் நீள்மயிரைக் கூட காணமுடிந்தது. அவளை தன் மணிக்கண்களால் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. அவள் முற்றத்திற்குச் சென்றதும் தலையைத் தாழ்த்தி இரு காதுகளை சேர்த்தது. முற்றத்தின் நடுவில் நின்றபடி அவள் அதை நோக்கிக்கொண்டிருந்தாள்.

கதறி அழுதபடி ஓடி அதன் காலடியில் சென்று விழவேண்டுமென்று தோன்றியது. அதன் பொருட்டு அவள் உள்ளம் அசைந்தபோதுகூட உடல் அங்கேயே நின்றது. பின்னர் அஞ்சிய சிறுமியைப்போல வீறிட்டபடி திரும்பி குடிலுக்குள் ஓடி அவனருகே மஞ்சத்தில் சென்று படுத்துக்கொண்டாள். திடுக்கிட்டெழுந்து “யார்?” என்றபின் “நீயா? என்ன?” என்று கேட்டான் கசன். “வெளியே… அந்த வேங்கை” என்றாள். “என்ன?” என்று அவன் புரியாமல் மீண்டும் கேட்டான்.

“அன்னைப்புலி. முன்பு எனக்கு அமுதளித்தது” என அவள் அஞ்சிய சிறுமியின் குரலில் சொன்னாள். அவன் கையூன்றி எழுந்து “எங்கே?” என்றான். அவள் “வெளியே வந்து நின்றிருக்கிறது” என அவனை இறுக பற்றிக்கொண்டாள். அவன் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு “அது உன் உளமயக்கு” என்றான். “இல்லை, இல்லை” என்று அவள் சொன்னாள். அவள் கன்னங்களிலும் கழுத்திலும் தோள்களிலும் மென்மையாக முத்தமிட்டபடி “உன் உளமயக்கு. ஐயமே இல்லை. புலிகள் அத்தனை அகவை உயிர் வாழ்வதில்லை” என்றான். அவள் அவன் தோளில் தன் முகத்தை அழுத்தியபடி விம்மி அழத்தொடங்கினாள்.

அவன் அவளை தன் உடலுடன் இறுகச் சேர்த்தபடி உள எழுச்சியுடன் முத்தமிட்டான். “என்னை விட்டு சென்றுவிடாதீர்கள். என்னுடன் இருங்கள். என்னை விட்டு சென்று விடாதீர்கள்” என்று அவள் தாழ்ந்த குரலில் தலையை அசைத்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள். அது அவள் குரலாகவே அவளுக்கு தோன்றவில்லை. இருளில் எவரோ கைவிட்டுச் சென்ற குழந்தையொன்றின் மன்றாட்டு போலவே ஒலித்தது. அங்கு அவனுடன் மஞ்சத்திலிருப்பது தன் உடலா என்று அவள் வியந்தாள். ஆடையை விலக்கி அவன் அள்ளி தன் உடலுடன் பொருத்திக்கொண்டதும் அவளல்ல. அவ்வறைக்குள் இருளில் எழுந்து வேங்கையென ஒளிரும் விழிகளுடன் அக்கூடலை அவளே நோக்கிக் கொண்டிருந்தாள்.

காலை ஒளி இமைமேல் பட்டு குருதி நிறத்தில் உள்ளே விடிவதற்கு முன்பு வரை அவள் ஒரு வேங்கையுடன் மெய்தழுவி சேக்கையில் படுத்திருந்தாள். அதன் உயிர் நீர் அவள் உடலெங்கும் பிசுக்கென படர்ந்து உலர்ந்து ஆடையென ஒட்டி தோலை இறுக்கத் தொடங்கியிருந்தது. அவள் மூச்சு முழுக்க அதன் உப்புக் குருதி மணமே நிறைந்திருந்தது. கைகள் அதன் மென்மயிர் தோளையும் விலாவையும் கழுத்தையும் வருடிக்கொண்டிருந்தன. விழித்தெழ வேண்டுமென்ற எண்ணம் எழுந்ததும் பிறகு என்று அதைத் தவிர்த்து புரண்டு வேங்கையை மீண்டும் உடல் சேர்த்து அணைத்துக்கொண்டது. அதன் வாயிலிருந்து பச்சைக்குருதி மணம் எழுந்தது. அவள் முகத்தை தன் நுண்மையான நாக்கால் மெல்ல நக்கியபடி அது உறுமியது. வெம்மை கொண்ட காற்று அவள் கன்னத்திலும் தோளிலும் படிந்தது.

“எவ்வளவு வெம்மை கொண்டிருக்கிறாய்!” என்று அது கூறியது. மானுடக்குரலாக அல்ல, வேங்கையின் இரும்புக்குரல் அது. “அனல் கொண்டவள் போலிருக்கிறாய். உன்னை தொடும்போதெல்லாம் ஏனிப்படி கொதிக்கிறாய் என்னும் எண்ணமே எழுகிறது. எப்போதேனும் நீ குளிரக்கூடுமா என்ன?” அவள்  “ஏன் இந்த வெம்மை உங்களுக்கு ஒவ்வாததா?” என்றாள். “ஒவ்வாது என்றல்ல, விந்தையாக இருக்கிறது.” அவள் “என் உடல்கூறு அப்படி. நான் பிறந்த போதே இந்த வெம்மையுடன்தான் இருந்தேன்” என்றாள்.

“பொசுக்கிவிடுவாய் போலும்” என நகைத்தபின் விழிமாறி “ஒரு சிதையில் எரிவதாகவே தோன்றியது” என்றான். அவள் அவனை உடலால் கவ்வி இறுக்கொண்டாள். “என்னுடன் இருங்கள்” என்றாள். “உன்னுடன்தான் இருக்கிறேன்” என்றான் கசன். அவள் மெல்ல துயிலில் மீண்டும் ஆழ்ந்து பின் மீண்டபோது கண்களுக்குள் செவ்வொளி பரவியது. விழித்து அறைக்குள் நிறைந்த புலரியொளியைக் கண்டு சிலகணங்கள் கழித்து இடமுணர்ந்து நினைவு கொண்டு நெஞ்சு அதிர கைநீட்டி ஒழிந்த மஞ்சத்தை உணர்ந்தாள். அவன் எழுந்துசென்ற மெல்லிய குழி நார்ச்சேக்கையில் இருந்தது. கைகளால் அதை வருடிக்கொண்டிருந்தாள். உவகையா துயரா என்றறியாது வெறுமைகொண்டிருந்தது உள்ளம். விழிநீர் பெருகி கன்னங்களில் வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

tigerகசன் வேங்கையாக மாறிவிட்டிருந்தான் என்பதை அவளால் வெறும்விழிகளாலேயே பார்க்கமுடிந்தது. காற்றில் வெண்பனிக்குவை செல்வதுபோல அவன் ஒழுகிநடந்தான். தலைநிமிர்ந்து தொலைவை நோக்கிபடி அசைவிலாது அமர்ந்திருந்தான். இருளில் அவன் விழிகள் ஒளிவிடுவதைக்கூட அந்தியில் அவள் கண்டாள். முதல்நாள் இரவில் அவளுடன் இருந்தபின்னர் அவன் அவளைப்பார்ப்பதே மாறிவிட்டது. மறுநாள் காலையில் எழுந்ததும் அவள் தன் உடல் குறித்த தன்னுணர்வையே முதலில் அடைந்தாள். நெய்யில் எரி ஏறும் ஒலியுடன் நெஞ்சு பதைப்புகொண்டது. கைகளால் மார்பை அழுத்திக்கொண்டு சிலகணங்கள் கண்மூடி படுத்திருந்தாள். பின்னர் எழுந்து ஆடைதிருத்தி வெளியே நடக்கும்போது தன் உடலைத்தவிர எதையுமே எண்ணமுடியவில்லை அவளால்.

உடல் மிதமிஞ்சி மென்மைகொண்டுவிட்டதுபோல் தோன்றியது. ஆடைகளும் அணிகளும் அயல்தொடுகையென விதிர்க்கச்செய்தன. இடத்தோள் மெல்ல துடித்துக்கொண்டது. கால்களில் சிறுகற்களும் உறுத்தின. தோள்களைக் குறுக்கி உடலை ஒடுக்கியபடி சிற்றடி எடுத்துவைத்து நீரோடை நோக்கி சென்றாள். வழியில் எதிர்ப்பட்ட விழிகளனைத்தையும் தவிர்த்தாலும் அனைத்து நோக்குகளையும் அவள் உடல் உணர்ந்துகொண்டுதான் இருந்தது. ஓடைக்கரையின் தனிமையில் மீண்டும் தன்னிலை பெற்று பெருமூச்சுடன் சுற்றும் நோக்கினாள். ஒளிபரவிய இலைத்தகடுகளும் நீரின் நிழலாட்டமும் அலைச்சுடர்வும் நீலவானின் வெண்முகில் சிதறல்களும் அனைத்தும் புத்தம்புதியவையாக தோன்றின. தன் உடல் தோலுரித்து பிறந்தெழுந்த கூட்டுப்புழு என புதியது என.

நீரிலிறங்கி கழுத்துவரை மூழ்கியபோது உடலில் இருந்து வெம்மை ஒழியத்தொடங்கியது. அவள் நீராடுகையில் எப்போதுமே நீர் வெம்மைகொண்டு குமிழியெழுவது வழக்கம். அதை தன் உடலுக்கும் நீருக்குமான உரையாடலாகவே அவள் உணர்வாள். குமிழிகள் அடங்கியபின்னர்தான் அவளுக்குள் குளிர் பரவத்தொடங்கும். குளிர் சென்று எலும்புகளைத் தொட்டபின்னர் மெல்லிய நடுக்கமொன்று எழும். அதற்கு ஒருநாழிகைக்குமேல் ஆகும். அன்று நீரின் முதற்தொடுகையே  அவளை சிலிர்க்கச்செய்தது. நீரில் மூழ்கியதுமே உடல் நடுங்கத் தொடங்கியது. கண்களை மூடி தன் உடலையே உணர்ந்தபடி குழல் நீண்டு ஒழுக்கில் அலைபாய உடல்மூழ்கிக் கிடந்தாள்.

அதே உடல்தான். அவ்வுடலையே அவள் அகம் தானென உணரவும் செய்தது, ஆயினும் அது பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. எப்போதுமே அவள் தன் உடலில் முலைகளையும் இடையையும் இயல்பாக உணர்ந்ததில்லை. தானென்று உணரும்போதும் அவை பிறிதொன்றை கரந்துள்ளன என்ற உள்ளுணர்வு இருந்தது. அவற்றின் அசைவு அவள் அசைவுகளுக்கு அப்பால் வேறொன்றென நிகழ்ந்தது. அவற்றைத் தொடுகையில் அயலுணர்வு இருந்தது. அன்று அவை முற்றிலும் அகன்றுவிட்டன என்று தோன்றியது. அவளுடன் அவை ஓசையில்லாத ஒற்றர்கள்போல் உடனிருந்தன. அவற்றைத் தொடவே அவள் கை எழவில்லை.

நீராடி எழுந்து ஈர ஆடையுடன் குடில்நோக்கிச் செல்லும்போது எதிரே வந்த பெண்கள் ஓரிரு சொற்களில் முகமனும் வாழ்த்தும் உரைத்தனர்.  அவள் எவரையும் எதிர்விழி நோக்காமல் கடந்துசென்றாள். வழக்கமான குரல்கள், ஆனால் அவர்களுக்குத் தெரியும் என நன்றாக புலப்பட்டது. அது வெறும் உளமயக்கு அல்ல என்று அவள் அகம் முடிவுறச்சொன்னது. அது அறிவால் உளத்தால் அறிந்துகொள்வது அல்ல, உடலே உணர்வது. உடல் என்பது தனித்தனியாக உள்ளத்தால் பகுக்கப்படுவது. தசையாலான ஒற்றைப்பெருக்கு. கூட்டுநடனங்களில் போர்விளையாட்டுகளில் அதை அவள் கண்டிருக்கிறாள். அவளுக்கு எங்காவது இருட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளவேண்டும் போலிருந்தது.

ஆடைமாற்றிக்கொண்டு அவள் திண்ணைக்கு வந்தபோது வேங்கைகளின் காதுத்துடி ஓசை கேட்டு மெய்விதிர்ப்பு கொண்டு திரும்பிப்பார்த்தாள். அவை குருநிலையின் மாணவர்களால் இழுத்துச்செல்லப்பட்டு காட்டுக்குள் புதைக்கப்பட்டன என அவள் அறிந்தாள். சென்று அவற்றின் உடலை பார்த்திருக்கலாம். அவை அவள் உள்ளத்திலிருந்து முற்றாக விலகிவிட்டிருக்கும். குழலை முதுகில் பரப்பி காற்றில் காயவிட்டபடி திண்ணையில் அமர்ந்துகொண்டாள். காய்ச்சல்கண்டதுபோல உடலெங்கும் சோர்வும் கண்களில் வெம்மையும் வாயில் மெல்லிய கசப்பும் இருந்தது. அந்தக் களைப்பு இனிதாகவும் இருந்தது. சுருண்டு படுத்துவிடவேண்டும், உலகை முழுமையாக அப்பால் தள்ளிவிடவேண்டும்.

கிருதர் அவளை கடந்துசென்றபோது “அமைவுக்கு வரவில்லையா?” என்றார். “காய்ச்சல்போலத் தெரிகிறது” என அவள் தலைகுனிந்து சொன்னாள். “ஓய்வுகொள்ளுங்கள்” என்றபடி அவர் தாண்டிச்சென்றார். அப்படி ஒதுங்கியிருந்து பேசுபொருளாவதைவிட சொல்லமைவுக்குச் சென்று அனைவருடனும் அமரலாம். தத்துவத்தில் ஈடுபடுவது மிக எளிது. அதன் முதல் சொற்கண்ணியை ஒரு கேள்வியாக ஆக்கிக்கொண்டால் போதும். இன்று தந்தை பருப்பொருளுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் விழைவு உண்டா என்று உசாவப்போகிறார். இல்லை இங்கே எதற்கும் தன்னை மாற்றிக்கொள்ளும் விழைவு இல்லை.

ஓரவிழியில் கசனின் அசைவு தெரிந்ததுமே அவள் உள்ளமும் உடலும் துடிப்புகொண்டன. எழப்போகும் அசைவெழ அதை அடக்கிக்கொண்டாள். கசன் அவள் முற்றத்தருகே வந்து “நான் ஊன்வேட்டைக்குச் செல்லவிருக்கிறேன். நல்ல மான் கொண்டுவரும்படி ஆசிரியர் சொன்னார்” என்றான். அக்குரல் மேலும் ஆழமும் கார்வையும் கொண்டிருக்கிறதென்று தோன்றியது. வழக்கம்போல விழிதூக்கி அவன் விழிதொட்டு நேர்ச்சொல் பேச அவளால் இயலவில்லை. உடல்தளர்ந்து தொண்டை அடைத்துக்கொண்டது. கைகளால் மூங்கில்தூணை சுரண்டியபடி “ம்” என்றாள். “ஆசிரியரின் இரவு வகுப்பிற்கு வந்துவிடுவேன்…” என்று அவன் சொன்னான். “ம்” என்றாள். பேசினால் குரல் தழுதழுக்கும் என தோன்றியது.

அவன் திரும்பப்போகிறான் என கீழே விழுந்த நிழலசைவைக்கொண்டு அறிந்து அவள் அறியாமல் விழிதூக்கி அவன் விழிகளை சந்தித்தாள். பதறி விழிதாழ்த்திக்கொள்ள அவன் “உன் தந்தையிடம் நானே பேசுகிறேன்” என்றபின் திரும்பிச் சென்றான். அவன் செல்வதை நோக்கி அவள் எண்ணங்களற்று நின்றாள். பின்புதான் அவன் நடை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தாள். வேங்கை என்னும் சொல் நெஞ்சிலெழுந்ததும் படபடப்பு தொடங்கியது. அவனையே நெடுந்தொலைவுக்கு விழிசெலுத்தி நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் மறைந்ததும் நீள்மூச்சுடன் மீண்டாள்.

ஏன் நான் தளர்வுகொள்கிறேன்? அவன் ஏன் நிமிர்வுகொள்கிறான்? அவனை தான் என எழவும் என்னை நான் என குழையவும் செய்த ஒற்றை நிகழ்வின் உட்பொருள்தான் என்ன? மீண்டும் ஒரு திடுக்கிடலுடன் அவள் காலையில் கண்ட கனவை நினைவுகூர்ந்தாள். வேங்கையென்று ஆகிவிட்டிருக்கிறானா? வேங்கையின் உள்ளே புகுந்து மீண்டவன் எதை கொண்டுவந்தான்? அதற்கு முன் ஓநாய்களிடமிருந்து பெற்றதை இழந்துவிட்டானா? என்னென்ன எண்ணங்கள் என அவள் தன்னை விடுவித்துக்கொண்டாள். எழுந்தபோது கையூன்றியதை எண்ணி அந்த அசைவை பல மனைவிகளிடம் இருப்பதைக் கண்டதை நினைவுகூர்ந்து புன்னகைசெய்தாள்.

அன்று காலையுணவுக்குப்பின் அவள்  தன்குடிலுக்குள் படுத்து துயில்கொண்டாள். உச்சிப்பொழுதுக்குப்பின்னர்தான் விழித்தெழுந்தாள். அப்போது அவளருகே வேங்கை ஒன்று அமர்ந்திருந்தது. ஓசையின்றி அமர்ந்திருக்க வேங்கைபோல் திறம்கொண்ட பிற உயிர் இல்லை. அசைவில்லாது முழுநாளும் அமர்ந்திருக்க அதனால் இயலும். அது காத்திருக்கிறது என எளிதாக சொல்லலாம், அது காலமுடிவிலியின் முன் ஒரு நாற்களக்காயை நீக்கி வைத்துவிட்டு எதிர்நகர்வைக் காத்து அமர்ந்திருக்கிறது. முடிவிலிக்காலத்தின் மறுமுனையை தன்னுள்ளும் கொண்டிருக்கிறது.

பெரிய வேங்கை. அதன் கன்னமயிர் நன்றாக நீண்டு முகம் கிடைநீள்வட்டமாக மாறிவிட்டிருந்தது. அனல்நெளிவென கோடுகள் கொண்டது. கழுத்தின் வெண்மென்மயிர்ப்பரப்பு காற்று சுழன்ற மணல்அலைகள் போல. அவள் அதன் தலையை தொட்டாள். மெல்ல தலைதாழ்த்தி அவள் மடியில் தலைவைத்தது. வேங்கைத்தலைக்கு இத்தனை எடையா? அதன் கண்களை கூர்ந்து நோக்கினாள். நீள்வடிவ உள்விழி. புலியின் விழியென அல்குல் என்னும் காவியவரி நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் அதன் காதைப்பற்றி இழுத்தாள். வேட்கையை விழிகளாகக் கொண்டது. இந்திரனுக்கு உடலெங்கும், உனக்கு விழிக்குள். இந்திரன் விழியாக்கினான், நீ மீண்டும் அல்குலாக்கிக் கொள்கிறாய். அதன் கண்கள் சொக்கி சரிந்தன. முலையுண்டு நிறைந்த மதலையென. அவள் அதை வருடிக்கொண்டே இருக்க அதன் குறட்டையொலி எழத்தொடங்கியது.

விழித்தெழுந்தபோது அவள் உள்ளம் உவகையால் நிறைந்திருந்தது. காலையில் இழந்தவளாக வாயில்கள் திறக்கப்பட்டவளாக உணர்ந்தவள் வென்றவளாக முடிவிலாத ஆழம் கொண்டவளாக உணர்ந்தாள். மெல்லிய பாடலொன்றை வாய்க்குள் முனகியபடி அடுமனைக்கு சென்றாள். அடுமனைப்பெண் “உணவருந்துகிறீர்களா, தேவி?” என்றாள். “ஆம், பசிக்கிறது” என்றாள். “ஊன்சோறு ஆறிப்போய்விட்டது. சற்று பொறுங்கள், சூடுசெய்து தருகிறேன்” என்றாள். “இல்லை, கொடு” என வாங்கி உண்டாள். வாழ்வில் எப்போதுமே அத்தனை சுவைமிக்க உணவை உண்டதில்லை என்று தோன்றியது. மேலும் கேட்டுவாங்கி உண்டாள்.

கொல்லைப்பக்கம் சென்று அங்கிருந்த மரத்தொட்டி நீரை சுரைக்குடுவையால் அள்ளி வாழைமரத்தடியில் கைகழுவியபோது வாழைத்தூண்களுக்கு  அப்பால் தெரிந்த காட்டை பார்த்தாள். பச்சைக்கடல் அலை ஒன்று எழுந்துவந்து எல்லைகொண்டதுபோல. துள்ளிக்குதித்து பாடியபடி காட்டை நோக்கி ஓடவேண்டும் என தோன்றியது. அதன்பின்னரே அவள் அங்கே பாறைமேல் கசன் அமந்திருப்பதை பார்த்தாள். அவன் ஒரு பாறை என்றே தோன்றினான். அவன்தானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே வந்த அடுமனைப்பெண் “அவர்தான். இந்தக் காட்டு ஆடு அவர் கொண்டுவந்த ஊன். அதன்பின் அந்தப்பாறையில் சென்று அமர்ந்திருக்கிறார்” என்றாள். “எப்போது?” என்றாள் தேவயானி. “உச்சிப்பொழுதிலிருந்தே” என்றாள்.

அங்கே சென்று அவனை பார்த்தாலென்ன என்று எண்ணினாள். ஆனால் அவன் அமர்ந்திருக்கும் அத்தனிமையை கலைக்கமுடியாதென்று தோன்றியது. அடுமனைப்பெண் “அவருக்காக வேங்கைகள் அங்கேதான் வழக்கமாக காத்திருக்கும்” என்றாள். அவள் நெஞ்சு அதிர திரும்பிப்பார்த்தாள். “உச்சிப்போதிலேயே அங்கே சென்றுவிடும். அவர் வரும்வரை அங்கே காத்திருக்கும்” என்றாள் அடுமனைப்பெண்.  அவள் சற்றுநேரம் நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள்.

தனிமை நிறைந்த நெஞ்சோடு தன் குடிலறைக்கு திரும்பினாள். எழுந்த எண்ணங்களை விலக்கியபின் சுவடியை எடுத்துக்கொண்டு தந்தையை பார்க்கச் சென்றாள். அவர் காவியங்களைக் கற்கும் உளநிலையில் இருந்தார். ஆகவே அவள் கொண்டுசென்ற கவிதைநூல் அவரை உவகைகொள்ளச்செய்தது. “சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி. அதன் செம்மஞ்சள்வரிகளால் அது ஒரு பறக்கும் வேங்கை. இனியதேன் உண்பது. எடையற்ற அசைவுகளுடன்  காற்றலைகளில் ஓசையின்றி பரவுவது. அது எந்த வேங்கையின் கனவு? அல்லது அவ்வேங்கைதான் அதன் கனவா?” அவள் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். “சின்னஞ்சிறு கருவண்டு. தேனுண்ணும் துதிக்கை. கரிய பளபளப்புகொண்ட உடல். அது பாடுவது கருமதவேழம் தன்னுள் இசைக்கும் யாழைத்தானா? மென்மலரசைய அமர்ந்தெழுவதுதான் பேருருக்கொண்டு காட்டுமரங்களை வேருடன் சாய்க்கிறதா?”

அஸ்வாலாயனரின் பிரமோதமஞ்சரி. அவர் உசாவிய அத்தனை தத்துவங்களையும் சமன்செய்துகொள்ள துலாவின் மறுதட்டில் அவர் வைத்த கனவு. அக்கனவின் தட்டு கீழிறங்கி தரைதட்டியது. மறுதட்டை நிகர்செய்யத் தவித்து இந்தத்தட்டின் கனவிலேயே ஒரு துண்டு வெட்டி அதில் வைத்தார். அவள் எண்ணிக்கொண்டிருந்ததையே சுக்ரர் சொன்னார். அல்லது அவர் சொல்வதையே அவள் உடன் எண்ணங்களாக ஆக்கி தொடர்ந்துகொண்டிருந்தாள். அந்திப்பூசனைக்காக சத்வரும் கிருதரும் வந்தபோது அவள் வணங்கி விடைபெற்றுக்கொண்டாள்.

திரும்பி தன் குடில்நோக்கி நடக்கையில் அவன் அங்கே பாறைமேல்தான் அப்போதும் அமர்ந்திருக்கிறானா என்று சென்று பார்க்கவேண்டுமென எண்ணினாள். தயங்கி முற்றத்தில் நின்றபடி எண்ணியபின் அந்தியிருளுக்குள் நடந்து குடில்களை கடந்துசென்றாள். குடில்களுக்குள் ஏற்றப்பட்ட நெய்விளக்குகளின் ஒளி செந்நிற நடைபாவாடைகள்போல விழுந்துகிடந்தது. ஒவ்வொன்றையும் கடக்கையில் அவள் எரிந்து எரிந்து அணைந்துகொண்டிருந்தாள். இருளுக்குள் சென்று நின்று தொலைவில் தெரிந்த அவன் நிழல்வடிவை நோக்கினாள். அவனை அழைக்கவேண்டுமென்னும் உந்துதல் எழுந்தது. அழைக்க எண்ணி கையை தூக்கியபோது அதை தானே உணர்ந்ததுபோல் அவன் மெல்லிய அசைவுகொண்டு திரும்ப அவன் விழிகள் எரித்துளிகளென மின்னி அணைவதை அவள் கண்டாள்.

tigerமறுநாள் அவள் இருட்காலையிலேயே எழுந்து நீராடிவிட்டு  வரும்வழியில் எதிரே அவன் வந்தான். அப்பால் எரிந்த விளக்கொன்றின் மெல்லிய ஒளியில் அவள் நிழல் இடப்பக்கமாக விழுந்து இலைகள்மேல் எழுந்து துணையொன்று வருவதுபோல் தோன்றச்செய்தது. அந்நிழலுடன் அவள் மெல்லியகுரலில் உரையாடிக்கொண்டிருந்தாள். “ஆம், அவ்வாறுதான்” என்றாள். “எப்போதும் அவ்வாறுதான் போலும். அதற்கு மாற்றில்லை, பிறிதொருவழியில்லை. எனில் அவ்வாறே ஆவதில் என்ன பிழை? பெருநெறியைப்போல் பழுதற்றது ஏதுண்டு? என்றும் காலடிகள் விழுந்துகொண்டே இருப்பதல்லவா அது?”

அவனை பிறிதொரு நிழலென கண்டாள். நீண்டு வந்து அவள் நிழலருகே நின்ற அதை நோக்கியபின் திரும்பி அவனை பார்த்தாள். சொல்லொன்றும் எடுக்காமல் புன்னகைசெய்தாள். “இன்று புலரியிலேயே காட்டுக்குள் செல்கிறேன். நேற்று ஆடு கொண்டுவந்தேன். இன்று இளம் காட்டுமாடு கொண்டுவரச்சொன்னார் ஆசிரியர்.” அவள் அதற்கும் புன்னகைபுரிந்தாள். “விலங்குகளைப்பிடிப்பது இத்தனை எளிதென்று இதற்கு முன் அறிந்ததில்லை” என்றான் கசன். “அவை நம்மை காட்டின் பிற அசைவுகளிலிருந்து வேறுபடும் தனியசைவுகளைக்கொண்டே அறிகின்றன. காட்டின் அசைவுகளுடனும் அசைவின்மையுடனும் நம் உடலசைவுகளும் அமைதியும் முற்றிலும் இசையுமென்றால் விலங்குகளால் நம்மை கண்டடையமுடியாது.”

அவள் தலைகுனிந்து “அது வேங்கைகளின் வழி” என்றாள். அவன் நகைத்து “ஆம்” என்று சொல்லி அவள் கன்னத்தை தொட்டு “மாலை பார்ப்போம்” என்று கடந்துசென்றான். அவள் அவன் தொடுகையை ஒரு மெல்லிய இறகுபோல ஏந்தி நடந்தாள். கன்னத்தை தொடவிரும்பி அது அத்தூவலை கலைத்துவிடும் என அஞ்சி முகத்தை அசைத்தாலும் அது பறந்துவிடும் என்பதுபோல நடந்தாள். எதிரே வந்த முதியதாதி வாய்திறந்து சிரித்து கடந்துசென்றாள். பிறிதொருத்தியும் அவ்வாறே சிரித்தபோதுதான் அது தன் முகம் மலர்ந்திருப்பதால்தான் என்று உணர்ந்தாள்.

அவ்வெண்ணம் மேலும் மலரச்செய்தது அவளை. சிரித்தபடி செல்லும் வழியிலேயே பூத்துக்குலைந்து தாழ்ந்து ஆடி நின்றிருந்த வேங்கையின் கிளையை  துள்ளி எம்பி கையால் தட்டினாள். உதிர்ந்த மலர்களை கையால் பற்ற முயன்று சிதறடித்துச் சிரித்தபடி குடிலைநோக்கி சென்றாள். ஏதோ எண்ணம் தோன்றி திரும்பி நோக்கியபோது மஞ்சள்மலர்கள் உதிர்ந்த மரத்தின் அடி  வேங்கை என உடல் குவித்து எழுந்து சிலிர்த்தது.