மாமலர் - 56

56. உயிர்மீள்தல்

கசன் திரும்பிவருவதற்காக காட்டின் எல்லையென அமைந்த உயரமற்ற பாறைமேல் ஏறி அமர்ந்து காத்திருந்தன மூன்று வேங்கைகளும். கனிகளும் தேனும் சேர்க்கச் சென்றவர்கள் காலை வெயில் மூப்படைவதற்கு முன்னரே கூடைகளுடன் திரும்பிவந்தனர். வழக்கமாக அவர்களுடன் வரும் கசனுக்காக முதல் காலடியோசை கேட்டதுமே மூன்று வேங்கைகளும் எழுந்து செவி முன்கோட்டி விழிகூர்ந்து நின்றன. கசன் அவர்களுடன் இல்லையென்பதை தொலைவிலெழுந்த மணத்தாலேயே உணர்ந்து அவை முனகியபடி மீண்டும் படுத்துக்கொண்டன.

ஒரு வேங்கை அலுப்பு தெரியும் அசைவுகளுடன் மல்லாந்து படுத்து தன்னைச் சூழ்ந்து பறந்த ஈக்களை கைகளால் தட்டி விளையாடிக்கொண்டிருந்தது. பிறிதொன்று வாலை தாழ்த்தியபடி பொறுமை இழந்து தான் நின்றிருந்த சிறிய பாறைப்பரப்புக்குள்ளேயே சுற்றி வந்தது. மீண்டும் ஒரு குழுவின் மணம் தொலைவில் எழுந்தபோது படுத்திருந்த வேங்கை தலை திருப்பி பார்த்து அதில் கசன் இல்லையென்று முனகியது. நடந்த வேங்கை நின்று வாலை நீட்டி உடலை பின்னுக்கிழுத்து முதுகை நிமிர்த்தி கோட்டுவாயிட்டது.

ஒவ்வொரு குழு கடந்துசெல்லும்போதும் அவனுக்காக அவை மூக்காலும் விழிகளாலும் நோக்கிக்கொண்டிருந்தன. அதன்பின் ஒரு வேங்கை மட்டும் கீழே குதித்து இடைவழியினூடாக நடந்து காட்டின் விளிம்புவரை சென்று நின்று மரச்செறிவுக்குள் நோக்கிக்கொண்டிருந்தது. பின்னர் சலிப்புடன் மெல்ல காலெடுத்து வைத்து தாவி மேலேறி தன் உடன்பிறந்தவர்களுடன் வந்து அமர்ந்துகொண்டது. உச்சிப்பொழுதில் ஊன்எடுக்கச் சென்றவர்கள் திரும்பிவந்தனர். அவர்களுடன் கசனைக் கொன்ற அசுரர்களும் கடந்து சென்றபோது ஒரு வேங்கை உதைபட்டதுபோல திடுக்கிட்டு எழுந்து நின்றது. அதன் உடல் நடுங்கத்தொடங்கியது. சக்ரனை நோக்கி முகம் சுளித்து பற்களைக் காட்டி சீறியது. உடலை பின்னுக்கிழுத்து பாய்வதுபோல பதுங்கியது.

வேங்கையின் சீற்றத்தை அதுவரை கண்டிருக்காத அவன் அச்சத்துடன் தன் கையிலிருந்த மானின் குருதிதோய்ந்த வேலை முன்னோக்கி நீட்டி அசையாமல் நின்றான். பிற இரு வேங்கைகளும் எழுந்து தங்கள் உடன்பிறந்தானை நோக்கி சீறியபடி “என்ன?” என்றன. இரண்டாவது வேங்கையின் உடலும் மெய்ப்புகொண்டு மயிர்ப்பிசிறுப் பரப்பு  இளங்காற்றில் அலைபாயத் தொடங்கியது. மூக்கை நீட்டியபடி அது மெல்ல காலடி வைத்து முதல் வேங்கையின் வலப்பக்கம் வந்து நின்றது. “செல்க! செல்க!” என்று அவர்களில் ஒருவன் மெல்ல சொன்னான். வேலை நீட்டியபடி மெல்ல பின்வாங்கி அவர்கள் நடந்து சுக்ரரின் தவக்குடில் வளைப்புக்குள் சென்றுவிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து சென்று தயங்கி நின்று அவர்களின் காலடிகளை முகர்ந்து, ஐயம்கொண்டு திரும்பி காட்டை நோக்கி, மீண்டும் மீண்டும் காலடிகளை முகர்ந்து, நிலைகொள்ளாது உறுமியபடியும் வாலைச் சுழற்றியபடியும் அங்கே சுற்றிவந்தன இரு வேங்கைகளும். பிறிதொன்று பாறை மேலேயே முன்கால் நீட்டி படுத்தபடி அவற்றை மாறி மாறி நோக்கி உறுமிக்கொண்டிருந்தது. அந்தியில் கன்றுகளை ஓட்டியபடி காட்டுக்குள்ளிருந்து திரும்பிவந்த மாணவர்கள் மூன்று வேங்கைகளும் நிலைகொள்ளாமலிருப்பதை கண்டனர். இடைவழியில் வாலை நீட்டியபடி நின்றிருந்த வேங்கை வந்தவர்களை நோக்கி சீறியபடி பாய்வதற்கென உடல் தாழ்த்தியது.

முன்னால் வந்த பசு அஞ்சி மெய்ப்புகொள்ள காதுகளைக் கோட்டி  மூக்கை தாழ்த்தி கொம்புகளை முன் நீட்டியபடி அசையாமல் நின்றது. அதன் பிடரியும் விலாவும் விடைத்து நடுங்கின. அதை ஓட்டிவந்த மாணவன் தன் கோலை நீட்டியபடி முன்னால் வந்து “என்ன? என்ன?” என்று வேங்கையிடம் கேட்டான். கோலால் தரையைத் தட்டி “என்ன வேண்டும்? என்ன வேண்டும்? சொல்!” என்றான். பாய்வதற்கென உடல் தணித்த வேங்கை மெல்ல நிலை மீண்டு எழுந்து தன் உடலை ஓசையெழ அசைத்தபடி மெல்ல நடந்து வந்து துணியைச் சுழற்றி வீசுவதுபோன்ற அசைவுடன் பாறைமேல் தாவி ஏறிக்கொண்டது. பிறிதொன்று பாறைக்குக் கீழே வந்து நின்று தன்னைக் கடந்து செல்லும் பசுக்களையும் மாணவர்களையும் நோக்கி உறுமிக்கொண்டே இருந்தது.

“என்ன ஆயிற்று இவற்றுக்கு?” என்று ஒருவன் கேட்டான். “எங்கோ பசுங்குருதி மணம் கிடைத்திருக்கும். என்னதான் இருந்தாலும் அவை குருதியை விரும்பும் கான் விலங்குகள் அல்லவா?” என்றான் இன்னொருவன். “ஒவ்வொரு நாளும் காட்டுக்குள் சென்று வேட்டையாடி வருபவைதானே? இங்கு குருநிலையின் கன்றுக்குட்டிகளைக்கூட அவை தொட்டதில்லை” என்று ஒருவன் சொன்னான். அவற்றை நோக்கியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டே அவர்கள் கடந்து சென்றனர். “விலங்குகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. அவை நம்மை முழுதாக உட்புகவிடுவதே இல்லை” என்றான் ஒருவன்.

இருட்டத் தொடங்கியதும் ஒரு வேங்கை தரையை முகர்ந்தபடி நடந்து காட்டுக்குள் சென்றது. பின்னர் திரும்பிவந்து உரத்த குரலில் உறுமி தன் உடன்பிறந்தாரை அழைத்தது. மூன்று வேங்கைகளும் காட்டுக்குள் மணம் கொண்டபடி நின்று செவிசிலிர்த்து ஓசைகூர்ந்தன. பின் மெல்ல காலடி எடுத்துவைத்து இருட்டுக்குள் ஆறு விழிப்புள்ளிகளாக நடந்தன. முதலில் சென்ற வேங்கையின் இருபுறமும் அதன் உடன்பிறந்தார் இருபக்கமும்  பார்த்தபடி நடந்தன. மிகத் தொலைவிலேயே ஓநாய்களின் ஊளையை அவை கேட்டன. முன்னால் சென்ற வேங்கை நின்று தன் செவிகளை மடித்து வாலைத்தூக்கி மெல்ல அசைத்தது. இரு வேங்கைகளும் தங்களுக்குள் மட்டுமே கேட்கும்படி மெல்லிய உறுமலுடன் பேசிக்கொண்டன. பின்னர் முதலில் சென்ற வேங்கை புதர்களில் தாவிக் கடந்து ஓடத்தொடங்கியது. பிற வேங்கைகளும் அதைத் தொடர்ந்தன.

பாறை உச்சிவரை சென்று எச்சரிக்கையுடன் அதன் விளிம்பை அடைந்து உடல் சுருக்கி நின்றபடி கீழே நோக்கியது முதல் வேங்கை. அங்கு கசனின் எஞ்சிய எலும்புகளை நக்கியபடியும், அங்கிருந்த மண்ணை காலால் கிண்டி புரட்டியபடியும், தங்களைத் தாங்களே சுற்றிவந்து உறுமியும், ஒன்றன்மேல் ஒன்று பாய்ந்து தழுவி விழுந்து புரண்டெழுந்து விளையாடியும் ஓநாய்கள் பரவியிருந்தன. அவற்றில் ஒன்று புலியின் மணம் அறிந்து திரும்பிப் பார்த்தது. அதன் மெல்லிய உறுமலில் அனைத்தும் அசைவழிந்து விரைப்புகொண்டு நோக்க அவற்றின் கண்கள் மின்மினிக்கூட்டம்போல் தெரிந்தன. ஓரிரு கணங்களுக்குள்ளாகவே அவை ஒன்றன்பின் ஒன்றென வால்நீட்டியபடி மெல்ல நிரைகொண்டு ஒரு சிறு படையென்றாயின.

மூத்த ஓநாய் வாலைச் சிலிர்த்து குலைத்து மெல்ல அசைத்தபடி மூக்கை நீட்டி காதுகளை முன்கோட்டி முன்னால் வந்து நின்றது. அதன் இருபுறமும் ஓநாய்கள் அம்புமுனை வடிவில் தெரிந்தன. தங்களுக்குள் வண்டு முரலும் ஒலியுடன் அவை தொடர்பாடிக்கொண்டன. முன்னால் நின்ற வேங்கை பாயும்பொருட்டு மெல்ல உடல் தாழ்த்தியதும் ஓநாய்களின் தலைவன் இரு காதுகளையும் பின்னால் மடித்தது. அதன் இருபக்கமும் நின்ற இள ஓநாய்கள் விரிந்து கழுகுச் சிறகுகளென்றாயின. தலைமை ஓநாய் பின்காலெடுத்து வைத்து மெல்ல பதுங்க  இரு சிறகுகளும் நீண்டு புதர்களுக்குள் மறைந்து ஒநாய்க்கூட்டமே அரைவட்டமென்றாயிற்று.

அன்னை ஓநாய்கள் தங்கள் மைந்தர்களை திரட்டிக்கொண்டு பின்னால் சென்று புதர்களுக்குள் மறைந்து தங்கள் குகைகளை நோக்கி சென்றன. மூன்று வேங்கைகளும் கீழே பார்த்தபோது ஓநாய்க்கூட்டம் அரைவட்ட வடிவில் அவை நின்ற பாறையை சூழ்ந்திருப்பதைக் கண்டன.  தலையைச் சிலுப்பி முகத்தில் வந்து மொய்த்த கொசுக்களை விரட்டியபடி முதல் வேங்கை மெல்லிய கெடுமணம் ஒன்றை எழுப்பியது. பிற இரு வேங்கைகளும் அதை அறிந்ததும் வால்தழைந்து உடல் இளகின. அவை ஓசையின்றி பின்காலெடுத்து வைத்து புதர்களுக்குள் புகுந்து பின் திரும்பி பாய்ந்தோடத் தொடங்கின.

ஒன்றன்பின் ஒன்றென சிறு தாவல்களில் புதர்க்குவைகளைக் கடந்து ஓடி காட்டிலிருந்து வெளியேறி ஒற்றையடிப் பாதையினூடாக அவை சுக்ரரின் தவக்குடில் பகுதிக்குள் நுழைந்தன. முதல் வேங்கை தேவயானியின் குடிலை அடைந்து சாத்தப்பட்டிருந்த கதவுப்படல்மேல் தன் இரு கால்களை தூக்கிவைத்து உலுக்கியது. இன்னொன்று அதன் பின்னால் நின்று வாலைத் தூக்கி முதுகைக் குவித்து வளைத்தபடி உறுமியது. மூன்றாவது வேங்கை குடில் முற்றத்திலேயே கால் மடித்து வால் தழைத்து அமர்ந்து பெருங்குரலில் முனகியது.

கதவைத் திறந்த தேவயானி மூன்று வேங்கைகளும் நிலையழிந்திருப்பதை கண்டாள். முதல் வேங்கையின் தலையில் கை வைத்து “என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். அதன் பிறகே அவள் மூன்றாவது வேங்கையை கண்டாள். அது அமர்ந்திருந்த முறையிலும், வான்நோக்கி தலையைத் தூக்கியதிலிருந்தும் என்ன நிகழ்ந்ததென்பதை உய்த்துணர்ந்துகொண்டு இரு வேங்கைகளையும் தள்ளி ஒதுக்கி அவற்றின் நடுவே நடந்து முற்றத்தை அடைந்தாள். திரும்பி இருள்செறிந்த காட்டை நோக்கியதும் அவள் உடல் ஒருமுறை துடித்தது. மூச்சுவாங்க கால்கள் தூக்கி வைத்து தாவி தந்தையின் குடில் நோக்கி செல்லும்போதே அவள் ஆடை நெகிழத் தொடங்கியது. அள்ளிச் சுழற்றிக் கட்டியிருந்த கூந்தல் அவிழ்ந்து முதுகில் புரண்டது.

நடை தடுமாற, மூச்சு ஒலிக்க, வியர்வை மணம் எழ, சுக்ரரின் குடிலை அடைந்து “தந்தையே! தந்தையே!” என்று கூவினாள். கிருதருடன் பேசிக்கொண்டிருந்த சுக்ரர் அவ்வோசையைக் கேட்டு “அது யார்? தேவயானியா?” என்றார். அதற்குள் குடிலுக்குள் நுழைந்த அவள் “தந்தையே, பிரஹஸ்பதியின் மைந்தர் காட்டிலிருந்து திரும்பி வரவில்லை” என்றாள். சுக்ரர் “அவனுக்கென்ன? ஒற்றைக் கையால் வேங்கைகளை தடுத்து நிறுத்துபவனை வெல்ல காட்டில் யார் இருக்க முடியும்? கந்தர்வர்களோ தேவர்களோ அவனை வெல்ல முடியாது. அசுரர்கள் அவனை அணுகவும் முடியாது” என்று புன்னகைத்து “பதறாதே! அமர்க! இப்போது என்ன ஆகிவிட்டது?” என்றார்.

“இல்லை, நானறிவேன்.  எனது வேங்கைகள் நடந்துகொண்ட முறையே சொல்கிறது. அவை அறியும், அவர் இப்போதில்லை. கொல்லப்பட்டுவிட்டார்” என்றாள். “என்ன சொல்கிறாய்? வழக்கத்திற்கு மாறாக சற்று பிந்தியுள்ளான். அதை வைத்து அவன் கொல்லப்பட்டுவிட்டான் என்று எப்படி சொல்ல முடியும்? அசுர நாட்டில் சுக்ரரின் முதல் மாணவனைக் கொல்லும் துணிவு எவருக்குள்ளது?” என்றார் சுக்ரர். “இல்லை, நானறிவேன். அவர் கொல்லப்பட்டுவிட்டார்” என்றபோது அவள் கண்கள் நிறைந்து கன்னங்களில் நீரொழுகத் தொடங்கியது.

தரையில் முழந்தாளிட்டு அமர்ந்து தந்தையின் கால்களை பற்றிக்கொண்டு “அவரை திரும்ப அழைத்துவாருங்கள்! திரும்ப அழைத்துவாருங்கள், தந்தையே! அவர் கொல்லப்பட்டுவிட்டார்” என்றாள். சுக்ரர் “திரும்ப அழைத்துவிடலாம், மகளே.  அது மிக எளிய செயல்” என்றார். “இப்போதே திரும்ப அழையுங்கள். இப்போதே நான் அவரை பார்க்கவேண்டும்” என்று அடம்பிடிக்கும் சிறுமிபோல தலையை அசைத்தபடி சொன்னாள். “இப்போதே. இப்போதே வேண்டும்” என்றாள். “நன்று, அமர்க!” என்றபின் கிருதரைப் பார்த்து “இவளை இப்படி நான் பார்த்ததேயில்லை. இவள் வடிவில் பிறிதொரு இளமகள் வந்துள்ளாள் என்றே தோன்றுகிறது” என்றார்.

கிருதர் தேவயானியை பார்த்தபின் “இப்போது கசனின் மனைவியாக இங்கு வந்துள்ளார். மனைவியர் அனைவரும் ஒரே வகையான அச்சமும் ஐயமும் அமைதியும் கொண்டுவிடுகிறார்கள்” என்றார். வாய்விட்டு நகைத்து “ஆம், அதைத்தான் நானும் எண்ணினேன்” என்றார் சுக்ரர். “அஞ்சாதே. அவன் உயிரோடு இருக்கிறானா என்று பார்க்கிறேன்” என்றபின் அருகிருந்த அகல் சுடரை தன் அருகே தள்ளிவைக்கும்படி கிருதரிடம் கைகாட்டினார். கிருதர் சுடரை நீக்கி அவரருகே வைத்ததும் கசன் பெயரை சொன்னபடி கையை அச்சுடர் நோக்கி நீட்ட ஊதி அணைக்கப்பட்டதுபோல் சுடர் அணைந்தது. சுக்ரர் முகம் மாறி “ஆம், உனது வேங்கைகள் பிழை செய்யவில்லை. அவன் இப்போது இல்லை” என்றார்.

அவள் அறியாது அலறிவிட்டாள். “இரு, அவன் உயிர் மூச்சுவெளியில்தான் உள்ளது. எளிதில் அதை மீட்க முடியும். நீ அஞ்சவேண்டியதில்லை” என்றார். கிருதர் “அவன் உடல் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்” என்றார். “அவ்வுடலில் ஒரு சிறு துளி எஞ்சியிருந்தாலே போதும், மீட்டுக் கொண்டுவந்துவிட முடியும்” என்றபடி தன் இரு கைகளையும் மீன் வடிவில் கோத்து தலை குனிந்து சஞ்சீவினியை மும்முறை சொல்லி “பிரஹஸ்பதியின் மைந்தனே, உயிர் மீள்க! எஞ்சிய உடல் திரட்டி எழுக! மீண்டும் உன் விருப்பத்துக்குரிய உடலை வந்தணைக!” என்றார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்னர் தோள்கள் துவள விழிதிறந்து “அது நிகழ்ந்துவிட்டது. அவன் இப்போது திரும்பி வருவான்” என்றார்.

“என்ன ஆயிற்று? காட்டுவிலங்குகளா?” என்று கன்னங்களின் ஈரத்தில் விளக்கொளி செந்தீற்றலென படர்ந்திருக்க தேவயானி கேட்டாள். “சொல்லுங்கள் தந்தையே, அவரை எவரேனும் தாக்கினார்களா?” சுக்ரர் “அறியேன். ஆனால் நிழலுருக்களென நான் கண்டது ஓநாய்களை. அவனை ஓநாய்கள் உண்டுவிட்டிருக்கின்றன” என்றார். “ஐயோ!” என்று தன் வாயை பொத்தினாள் தேவயானி. “அஞ்சாதே! ஓநாய்களின் வயிற்றைக் கிழித்து அவன் வெளி வந்திருக்கிறான். இன்னமும் செரிக்காத ஊன் போதும் அவன் தன் உடல் மீட்க” என்றார் சுக்ரர்.

அவள் மெல்ல தளர்ந்து தரையில் அமர்ந்து குனிந்து முகத்தை கைகளால் பொத்திக்கொண்டாள். “வந்துவிடுவான், தேவி” என்றார் கிருதர். “முன்போலவே அவர் வந்துவிடவேண்டும். தெய்வங்களே, மூதன்னையரே, வந்துவிடவேண்டும்” என்றாள் அவள். அவளை நோக்கியிருந்தபோது சுக்ரர் முன்பறியாத பெரும்கனிவொன்றை அடைந்தார். பேரரசியின் நிமிர்வுடன் அவள் தோன்றும்போது அவள் அடிநோக்கி மண்டியிட்டு வழிபட்ட உள்ளம் அப்போது இளமகளென அவளை அள்ளி மடியிலிட்டு தலை கோதியது. இப்படி இவள் என் முன் வந்தமர்தலும் நன்றே. தந்தையென பிறிதொரு வடிவம் கொள்கிறேன் என்று அவர் எண்ணிக்கொண்டார்.

வெளியே வேங்கைகளின் உறுமலோசை கேட்டதும் அவள் பதறி எழுந்து “வந்துவிட்டார்” என்று கூவினாள். “திரும்பி வந்துவிட்டார்! தந்தையே, வந்துவிட்டார்! அவை அவரை நோக்கி ஓடுகின்றன” என்றபடி கதவை நோக்கி ஓடி வெளியே எட்டிப்பார்த்தாள். அங்கே காட்டு எல்லையில் வேங்கைகள் பாய்ந்துசெல்லும் அசைவு தெரிய “அவர் வந்துவிட்டார். வேங்கைகள் அவரை அணுகிவிட்டன” என்றபடி திரும்பி அவரை நோக்கி ஓடிவந்து அவர் காலைத் தொட்டு சென்னி சூடியபின் இரு கைகளாலும் குழலை அள்ளி சுருட்டிக் கட்டியபடி தோளிலிருந்து நெகிழ்ந்த ஆடையை இழுத்து இடையில் செருகி முற்றத்தில் பாய்ந்து இருளில் ஓடி மறைந்தாள்.

கிருதர் “இந்த மாற்றம் ஒவ்வொரு பெண்ணிலும் நிகழ்வதனால் இதிலிருக்கும் மாபெரும் விந்தையை நாமறிவதே இல்லை. கன்னியென விடுதலையை கட்டின்மையை ஆணவத்தை பெருவிழைவை அணிசூடியிருக்கிறார்கள். அவை அனைத்தையும் கழற்றி வீசி வெறும் மனைவி என்றாகிறார்கள்” என்றார். சுக்ரர் சிரித்தபடி “வெறும் அன்னையென்று ஆவதற்கான ஒரு பயிற்சி அது” என்றார்.  கிருதர் புன்னகைத்து “ஆம்” என்றார்.

வெளியே ஓசைகள் கேட்டபோது சுக்ரரும் கிருதரும் எழுந்து சென்று நோக்கினார்கள். பிறைநிலவின் வெளிச்சத்தில் மூன்று வேங்கைகளும் துள்ளிக் குதித்து தரையில் விழுந்து புரண்டு எழுந்து வால் சுழற்றி முனகி நடனமாடி சூழ்ந்துவர தேவயானியும் கசனும் நடந்து வந்தனர். அவள் அவன் வலக்கையை எடுத்து தோளிலிட்டு சுழற்றி இடையில் வைத்து கைகளால் பற்றியிருந்தாள். தலையை அவன் மார்பில் சாய்த்து கால்கள் பின்ன நடந்து வந்தாள். அழுதுகொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. அவன் குனிந்து அவள் காதில் மெல்ல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

ஓரிடத்தில் கால் தடுமாறி அவள் விழப்போக இடையை நன்கு பற்றித் தூக்கி நெஞ்சோடணைத்து நின்றான். அவிழ்ந்து தோளில் விழுந்துகிடந்த குழலை இரு கைகளாலும் ஒதுக்கி காதுகளுக்குப்பின் வைத்து சீரமைத்தான். அக்கற்றைகளை வலக்கையால் பற்றி மெல்ல இழுத்து அவள் முகத்தை நோக்கி குனிந்து கண்களுக்குள் பார்த்து ஏதோ சொன்னான்.

இரண்டு வேங்கைகளும் காலை அவன் மேல் வைத்து அவர்களின் முகத்தருகே தங்கள் முகத்தை கொண்டுவந்து முனகி வால் சுழற்றின. பிறிதொன்று முன்னால் ஓடிவந்து அதே விரைவில் அவர்களை நோக்கி கடந்து சென்று மீண்டும் வந்தது. கிருதர் “உடனே அவர்களுக்கு மணம்முடித்து வைப்பது நன்று” என்றார். “ஆம், இப்போது இருவருமே நடிப்புகளை விட்டுவிட்டார்கள்” என்று சிரித்தார்.

tigerகசன் இறந்ததும் சுக்ரரின் ஊழ்க நுண்சொல்லால் மீண்டதும் மறுநாள் குருநிலை முழுக்க பரவியது. முனிவர்களும் பெண்களும் இளையோரும் அவனைத் தேடிவந்து அவன் கைகளைப்பற்றி நெஞ்சில் வைத்தும் தோள்களை கைகளால் தழுவியும் தலையில் கைவைத்து வாழ்த்தியும் தங்கள் உவகையையும் உளநிறைவையும் தெரிவித்தனர். இளம்பெண்கள்கூட தாங்கள் உருவாக்கி வைத்திருந்த எல்லைகளைக் கடந்து அவனை அணுகி அவன் கைகளைப்பற்றி கண்ணீர்விட்டனர். என்ன நிகழ்ந்தது என்று கேட்டவர்களுக்கு சொல்ல அவனிடம் எந்த நினைவும் இருக்கவில்லை.

அவனைத் தாக்கிய சக்ரனும் பிறரும் காலையில் அவன் மீண்டு வந்திருப்பதை அறிந்ததுமே இயல்பாக செல்பவர்கள்போல காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டனர். அங்கிருந்து அப்படியே ஹிரண்யபுரிக்கு சென்றுவிடுவதற்கு காட்டிற்குள் அமர்ந்து திட்டமிட்டனர். ஆனால் உச்சிப்பொழுதுக்குள் குடில்களில் இருந்து தேன் சேர்க்க வந்தவர்கள் பேசியதிலிருந்து என்ன நிகழ்ந்ததென்பது எவருக்கும் தெரியவில்லை என்பதை புரிந்துகொண்டனர். அவன் எவ்வாறு இறந்தான் எப்படி ஓநாய்களிடம்  சிக்கிக்கொண்டான் என்பதை கசனால் நினைவிலிருந்து எடுக்க முடியவில்லை என்பதை அறிந்ததும் அவர்கள் ஆறுதலடைந்தனர்.

தேனும் கிழங்குகளும் சேர்த்துக்கொண்டு  பின்னுச்சிப்பொழுதில் இயல்பான முகங்களுடன் சுக்ரரின் குருநிலைக்கே வந்தனர். அங்கு தேவயானியின் குடிலில் கசன் அமர்ந்திருக்க அவனைச் சூழ்ந்து முனிவர்களும் இளைஞர்களும் அமர்ந்து சிரித்து சொல்லாடிக் கொண்டிருப்பதை கண்டனர். அனைத்து உளத்தடைகளையும் உதறி தேவயானி எப்போதும் கசன் அருகிலேயே இருந்தாள். அவன் தோளில் தலைசாய்த்து தன் உடலை அவன் விலாவில் படியவைத்து, அவன் கையை எடுத்து தன் தோளினூடாக இட்டு மார்பில் அமைத்து பற்றிக்கொண்டு, தன் விரல்களால் அவன் விரல்களைப்பற்றி விளையாடியபடி மெல்லிய முனகலுடனும் சிறுமியருக்குரிய அடத்துடனும் அவனுடன் சொல்லாடிக்கொண்டிருந்தாள்.

அவனிடம் அவள் தந்தையிடம் பேசும் குழவிபோல் குழைந்து மறுகணமே இளமைந்தனிடம் அதட்டும் அன்னையென ஆனாள். அவள் கொண்ட நிமிர்வும் சினமும் ஆணையிடும் குரலும் அளவெடுக்கும் நோக்கும் முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தன. அங்கிருந்தவர்கள் அதை இயல்பாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் நன்கறிந்த தேவயானி அவ்வுடலுக்குள் தன்னை உள்ளிழுத்துக்கொண்டு பிறிதொன்றாக வெளிவந்து தெரிவதை எந்தத் திகைப்புமின்றி அவர்கள் அனைவருமே எதிர்கொண்டனர். அந்த மாற்றம் நிகழ்ந்ததைக்கூட அவர்கள் அறியவில்லை என்பதுபோல.

சக்ரன்  வாயிலில் சென்று நின்று “என்ன ஆயிற்று? உங்கள் உடல்நிலை நன்றாக உள்ளதா?” என்றான். கசன் “வருக, சக்ரரே! என்ன நிகழ்ந்ததென்று நினைவில்லை. நேற்று உங்களுடன் காட்டுக்குள் வந்தேன். பின்னர் என்னை உணர்ந்தபோது காட்டுக்குள் சேற்றிலிருந்து உடல் திரட்டி எழுந்ததுபோல் உணர்ந்தேன். நல்ல இருட்டு. நிலவொளியின் நிழல்கள். எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. எப்படி ஓநாய்களால் தாக்கப்பட்டேன், என்னைச் சூழ்ந்து இறந்து கிடந்த ஓநாய்களைக் கொன்றது யார், எதுவுமே தெரியவில்லை” என்றான்.

“என்னுடன்தான் நேற்று வந்தீர்கள். தனித்தனியாகப் பிரிந்து கிழங்கு தேடச் சென்றோம். பின்னர் தங்களை தேடிப்பார்த்தோம். குரல் கொடுத்தோம். தடம் தேர்ந்து நோக்கினோம். அறியக் கூடவில்லை. இவன்தான் தாங்கள் திரும்பியிருக்கக்கூடும் என்றான். ஆகவே நாங்கள் திரும்பிவிட்டோம்” என்றான் சக்ரன். “நன்று, இனி இவர் காட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. கனிதேர்ந்தும் தேன்தேடியும் இவரால் ஊட்டப்பட்டு  எவரும் இங்கு வாழ வேண்டியதில்லை” என்று சீற்றத்துடன் தேவயானி சொன்னாள். “என்ன இது? நான் இங்கு மாணவன். மாணவன் ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றித்தான் ஆகவேண்டும்” என்று கசன் சொன்னான்.

“மாணவன் கற்கத்தான் வந்திருக்கிறான். காடு தேர்வதற்கல்ல” என்றாள் தேவயானி. அவள் ஏதுமறியாத சிறுமியென உண்மையிலேயே மாறிவிட்டிருந்தாள். “தன் உணவையும் உறைவிடத்தையும் தானே உருவாக்கக் கற்பதுதான் கல்வியின் முதல் படி. அது அளிக்கும் முழு விடுதலையிலிருந்தே பிற அனைத்தையும் கற்க முடியும்” என்று கசன் சொன்னான். “உடலுழைப்பிலாத கல்வி உள்ளத்தை எவ்வகையிலும் பயிற்றுவதில்லை. இங்கு ஒரு காவியம் பயில்கிறோம். அங்கு ஒரு கிழங்கைத் தோண்டி எடுக்கையில் சொற்கள் அச்செயலில் எப்படி வந்து பொருந்தி புதிய ஒரு பொருளை அளிக்கின்றன என்பது இங்கு குடிலில் அமர்ந்திருந்தால் தெரியாது. காவியத்தில் காட்டையும் காட்டில் காவியத்தையும் காணத்தெரிந்தவனே இரண்டையும் அறிகிறான்” என்றான் கசன்.

வெளியே வந்த சக்ரன் வேங்கைகள் எழுந்து வாய் நீட்டி சினம்கொண்ட பார்வையுடன் தன்னை நோக்கி நிற்பதை கண்டான். மெல்லிய குரலில் “எப்படியோ அவற்றுக்கு தெரிந்திருக்கிறது” என்று  பிரபவனிடம்  சொன்னான். “எப்படி தெரியும்? நாம் பல முறை நீராடினோம். நம் உடலில் அவன் குருதி ஒரு துளிகூட எஞ்சவில்லை. இருந்தாலும் மேலும் மறைக்க மான் குருதியை பூசிக்கொண்டு வந்தோம்” என்றான் சூக்தன்.

“மணத்தால் அல்ல, உள்ளுணர்வால்” என்றான் சக்ரன். “புலன்களுக்கு அப்பால் உள்ளம் ஒரு நுண்புலன். சித்தம் பிறிதொரு நுண்புலன். ஆனால் சித்தமும் உள்ளமும் பருவடிவமான ஐம்புலன்களின் வழியாகவே செயல்படமுடியும். உள்ளம் உணர்ந்தது ஓர் ஓசையென நறுமணமென தொடுஉணர்வென உருமாறித் தெரிந்தாகவேண்டும். சித்தம் உணர்ந்தது ஒரு நினைவென  கூற்றென ஆகவேண்டும். அவற்றின் உள்ளே வாழும் ஆத்மா நம் செயலை உணர்ந்து அதை ஒரு மணமென ஆக்கிக்கொண்டிருக்கிறது.”

“அவற்றின் நோக்கு என்னை அச்சுறுத்துகிறது” என்றான் முக்தன். “அவை விலங்குகள். அத்தனைக்கும் அடியில் அவை வெறும் விலங்குகள். விலங்கென நடிப்பதன்பொருட்டே அவற்றின் ஆத்மா அவ்வடிவை எடுத்திருக்கிறது. வயல் புகுந்த நீர் வயலின் வடிவம் கொள்வதுபோல அவற்றின் ஆத்மாவுக்கும் கோரைப்பற்களும் கூருகிர்களும் குருதிவிடாயும் உண்டு” என்றான் சக்ரன்.

“எப்படி சுக்ரர் ஓநாய்களின் உடலில் இருந்து அவனை மீட்டெடுத்தார்?” என்றான் சூக்தன். “ஓநாய்களின் உடல் கிழித்து அவன் வெளிவந்திருக்கிறான். நான் சென்று பார்த்தேன். அங்கு அவற்றின் உடல்கள் வயிறு கிழிந்து சிதறிக்கிடக்கின்றன. அவன் உடலில் ஒரு துண்டு ஊனைத் தின்றவைகூட இறந்துவிட்டன. பெரும்பசி கொண்ட குட்டிகள் மட்டும் எஞ்சியுள்ளன. அவை உண்டவற்றை எரித்துவிட்டன. கிழிந்து சிதறிக்கிடக்கும் தன் குலத்தாரின் உடல்களைச் சூழ்ந்து அவை துயர்கொண்டு ஊளையிடுகின்றன” என்றான் முக்தன். “பிறிதொருமுறை இப்பிழையை நாம் செய்யலாகாது. ஓநாய்க்குட்டிகளின் பெரும்பசி கொண்ட பிறிதொரு உயிருக்கே அவன் உடல் அளிக்கப்படவேண்டும். அவனை மீட்டெடுக்க உடலென ஒரு துளியும் எஞ்சலாகாது” என்றான் சக்ரன்.