மாமலர் - 49

49. விதையின் வழி

தன் மனைவி தாரை சந்திரனின் மைந்தனாக புதனைப் பெற்று அவன் அன்னையென்றே தன்னை உணர்ந்து உடன் சென்றபின் தேவகுருவான பிரஹஸ்பதி நெடுநாள் தனியனாக இருந்தார். தன் உள்ளத்தை இறுக்கி இறுக்கி கல்லென்றாக்கிக் கொண்டார். மைந்தர் எவரையும் விழியெடுத்தும் நோக்காதவராக ஆனார். தன் மாணவர்களிலேயே இளமையும் எழிலும் கொண்டவர்களிடம் மேலும் மேலும் சினமும் கடுமையும் காட்டினார். அவர்களுக்கு உடல்வற்றி ஒடுங்கும் கடுநோன்புகளை ஆணையிட்டார். முன்னரே உடல் ஒடுங்கி அழகிலாத் தோற்றம்கொண்டிருந்த சுக்ரரையே தன் முதல்மாணாக்கராக அருகிருத்தினார். அவரிடம் மட்டுமே உரையாடினார்.

பிரஹஸ்பதி மலர்களையும் அருமணிகளையும் அழகிய ஆடைகளையும் நோக்குவதையும் தவிர்த்தார். ஆனால் அவருள் வாழ்ந்த ஏக்கம் அந்த இறுக்கத்தால் மேலும் இறுகி ஒளிகொண்டது. ஒருநாள் தன் மாணவர்களுடன் ஒரு வேள்விக்குப்பின் காட்டுக்குள் நடந்து தவச்சாலை நோக்கி வருகையில் இயல்பாக கண்களைத் தூக்கிய அவர் வானிலொளிர்ந்த சிறிய கோள் ஒன்றைக் கண்டு “அது யார்?” என்றார். “சந்திரனின் மைந்தனாகிய புதன்” என்றார் உடன்வந்த சுக்ரர். பிரஹஸ்பதி குளிர்ந்த நீரால் ஓங்கி அறையப்பட்டவர்போல உணர்ந்தார். பின்னர் அவர் விழிதூக்கவில்லை.

ஆனால் அதன்பின் அவரால் அந்த ஒளித்துளியை விட்டு சித்தத்தை விலக்க இயலவில்லை. தானறிந்த அனைத்தாலும் அதை தன்னுள் இருந்து அகற்ற முயன்றார். விழைவை அகற்ற முயல்வதைப்போல  அதை வளர்க்கும் வழி பிறிதொன்றில்லை. அவர் அதையன்றி பிறிதொன்றை நினைக்காமல் இருந்ததை அவரே உணர்ந்தபோது நெடுங்காலம் சென்றிருந்தது. “ஆம்” என அவர் தனக்குத்தானே சொன்னார். “தன்னை பிறிதொருவனாக கற்பனை செய்துகொள்ளாத மானுடர் இல்லை. அறிவு மிகுந்தோறும் அக்கற்பனை மேலும் பெரிதாகிறது. நுண்மைகொள்ளும்தோறும் கூரியதாகிறது. நான் அதிலிருந்து வெளிவந்தாகவேண்டும். நான் எவரோ அதுவே நானென்றாகிறேன்.”

“ஆம் ஆம் ஆம்” என அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “நான் விழைவது ஒரு மைந்தனை. என் மைந்தன் என நான் வழிபட்டவன் இருந்த இடத்தை நிரப்பும் ஒருவனை. தந்தையென்றல்லாமல் வேறெவ்வகையிலும் நான் நிறைவுகொள்ள முடியாது.” அதை முழுச்சொற்றொடர்களில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதுமே அவர் விடுதலை பெற்றவரானார். அதுவரை அவர் முகத்தசைகளை இறுகவைத்து, புன்னகையையும் கோணலாக ஆக்கிய உள்ளமுடிச்சு அவிழ அவர் முகம் கனிந்து இனிதாகியது.

தன் அகவை முதிர்ந்துவிட்டதை அவர் உணர்ந்தார். ஆகவே தனக்கு உகந்த சிறுவன் ஒருவனை மைந்தற்பேறு கொள்ள எண்ணினார். எச்சிறுவனைக் கண்டாலும் “இதோ” என உள்ளம் துள்ளினார். அணுகிச் செல்லச்செல்ல “இவனல்ல” என விலக்கம் கொண்டார். “விண்ணுலாவியான மைந்தனுக்கு நிகரான ஒருவனை மண்ணில் தேடுகிறேனா? என்னையே அறிவிலியென்றாக்கிக் கொள்கிறேனா?” என்று அவர் தன்னை கடிந்துகொண்டார். ஆனால் அவ்வொப்பீட்டிலிருந்து அவரால் தப்பமுடியவில்லை.

அந்நாளில் ஒருமுறை அவர் கங்கைக்கரையில் உலவியபோது நீரில் பொன்னிறமீன் ஒன்று துள்ளுவதைக் கண்டு அவ்வழகில் மெய்மறந்து நின்றார். அதன் விந்தையால் கவரப்பட்டு அருகணைந்தபோது அது ஒரு சிறுவன் என்பதை உணர்ந்தார். மானுட உடல் ஒன்றில் அத்தகைய அழகை அவர் அதற்கு முன் கண்டதில்லை. “ஆம், இவனே” என கூவியது உள்ளம்.

கரையில் அவனை நோக்கி மெய்மறந்து நின்றார். பின்னர் “மைந்தா, மேலே வா” என அவர் அழைத்தார். நீர்சொட்ட வெற்றுடலுடன் மேலெழுந்து வந்த மைந்தன் இளஞ்சுடர் என ஒளிவிட்டான். “உன் தந்தை யார்? அன்னை எவர்?” என்று கேட்டார். அன்னை காட்டுப்பெண் என்றும் தந்தை அங்கே தவம்செய்ய வந்த அந்தணர் ஒருவர் என்றும் அவன் சொன்னான். “மூவெரிகொடை முடித்து முற்றொளியுடன் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு என் அன்னை மையல்கொண்டாள். அவரிடமிருந்து என்னை பெற்றெடுத்தாள்” என்றான்.

அவன் அன்னை அவனுக்கு இட்ட பெயர் கசன். கசனுடன் அவன் வாழ்ந்த காட்டுக்குள் சென்று அவன் அன்னையை வணங்கி அவனை தனக்கு மைந்தர்கொடை அளிக்கும்படி கோரினார் பிரஹஸ்பதி. அவனை  மாபெரும் வேத அறிஞனாக ஆக்குவதாக வாக்குறுதி அளித்தார். “ஆம், நானே அவனை உரிய ஆசிரியரிடம் கொண்டுசென்று சேர்ப்பது குறித்து கவலைகொண்டிருந்தேன். அவன் இங்கிருப்பது எங்கள் குடிக்கே இடர். அரசனின் அருமணியை மின்மினி என்று எடுத்துக்கொண்டுவந்த காகம் என என்னை என் குடியினர் நகையாடுகிறார்கள்” என்றாள் அவன் அன்னை. “தங்கள் மைந்தனென்றும் மாணவனென்றும் இவன் அமைக!” என்று சொல்லி நீரூற்றி அவனை கையளித்தாள்.

பிரஹஸ்பதி அவனை தன் தவக்குடிலுக்கு கொண்டுசென்றார். விண்ணில் தேவகுருவாக அவருடைய ஒளியுடல் விளங்க ஊனுடல் இமயமலைச்சாரலில் சிந்துவின் கரையில் தர்மத்வீபம் என்னும் சிறிய ஆற்றிடைக்குறையில் அமைந்த தவக்குடிலில் மாணவர்களுடன் வாழ்ந்தது. அங்கே அவருடைய மைந்தனாக அவன் சென்று சேர்ந்தான். காட்டில் கன்றுமேய்த்தும் குழலூதியும் தந்தையிடம் வேதமும் வேதமெய்மையும் கற்றும் அவன் வாழ்ந்தான்.

கசனின் மெய்யழகை அக்குருநிலையில் அனைவரும் வியந்தனர். அவனுடன் இருக்கையில் அத்தனை விழிகளும் அவனை நோக்கியே திரும்பியிருந்தன. வேறுபக்கம் திரும்பியிருந்தால் அங்கே ஆடியோ நீர்ப்பரப்போ இருந்தது. அவன் சிறுசுனைகளில் இறங்கினால் சுனைநீர் ஒளிகொண்டு அலைவிளிம்புகள் புன்னகைக்கின்றன என்று கவிபுனையும் மாணவர்கள் பாடினர். மைந்தனை நோக்கி நோக்கி விழிசலிக்காதவரானார் பிரஹஸ்பதி. “மெய்யழகு என்பது மானுடன் தானாகவே எய்த இயலாதது. அதனாலேயே அது தெய்வங்களின் கொடை” என அவர் சொன்னார். “கோடிகோடி கற்களில் சிலவே அருமணிகள். அவை மணிமுடிகளில் அமையவேண்டியவை. செங்கோல்களில் ஒளிரவேண்டியவை. தெய்வங்களுக்கு அணியாகவேண்டியவை.”

“பேரழகர்களின் வாழ்க்கை ஒருபோதும் எளிதென கடந்துசெல்வதில்லை. அவர்களை நோக்கி விழிகள் திரும்புவதனாலேயே அவர்களின் விழிகளும் அவர்களையே நோக்கிக்கொண்டிருக்கும். தன்னைத்தான் நோக்குபவன், எதன்பொருட்டு நோக்கினும், எதையோ அறிகிறான். தனிவழி செல்கிறான்” என்றார் பிரஹஸ்பதி. “பேரழகர்கள் பிறர் ஆற்றவியலாத எதையோ ஆற்றுகிறார்கள். பிறர் எய்த அரிதான எதையோ எய்துகிறார்கள்.” சுக்ரர் மெல்லிய குரலில் “ஆனால்…” என்றார். “சொல்க!” என்றார் பிரஹஸ்பதி.

“பேரழகு கொண்டவர்களில் இனிது வாழ்ந்தவர்கள் அரிதினும் அரிது. அவர்களையே தெய்வங்கள் தங்கள் ஆடலுக்கு தெரிவுசெய்கின்றன. தேவர்கள் போட்டியென கருதுகிறார்கள். பிற மானுடர் தங்களுள் ஒருவரென எண்ணுவதே இல்லை.” பிரஹஸ்பதி அவரை நோக்கியபடி விழிமலைத்து அமர்ந்திருந்தார். “செம்பு நாணயம் வாங்கும் பொருளுக்கு ஐம்மடங்கு வெள்ளி நாணயம் வாங்கும். பொன் அதைவிட ஐந்து மடங்கு வாங்கும்” என சுக்ரர் தொடர்ந்தார். “அன்போ வெறுப்போ துயரோ மகிழ்வோ அறிவோ இருளோ எதை வாங்குகிறார்களோ அதை.”

பிரஹஸ்பதி நீண்ட மூச்சுக்குப்பின் “ஆம், உண்மை” என்றார். அதன்பின் அவர் அதைப்பற்றி ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஆனால் கசனை அதற்குப்பின் அவர் நாவெடுத்துப் புகழவில்லை. தன் தவக்காட்டின் எல்லைக்கு அப்பால் செல்ல அவனை விடவில்லை. அவனைப்பற்றிய புகழ்மொழிகளை அவர் தடைசெய்தார். புதர்களுக்குள் மலர்ந்த அருமலர் என அக்காட்டுக்குள் கசன் வாழ்ந்தான். “அவன் அரியவன்… ஆகவே அவனை எவரும் அறியவேண்டியதில்லை. தன்னை அறிந்து கடக்கும் ஆற்றலை அவன் அடையட்டும். வேதச்சொல் அவன் கையில் படைக்கலமென்றாகட்டும். அதன்பின்னர் அவன் வெளிப்போந்தால் துயர்கள் விலகியிருக்கும்” என்றார் பிரஹஸ்பதி.

மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”

மைந்தனை எந்த இடருக்கும் அனுப்பலாகாது என்றே பிரஹஸ்பதி எண்ணியிருந்தார். தேவர்கள் எவரும் அவன் இருப்பதையே அறியாமலிருந்தனர். “அடர்காடுகளில் எவ்விழியும் அறியாமல் பல்லாயிரம் பொன்வண்டுகள் வாழ்கின்றன. பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. மலர்கள் இதழ்விரித்து நிற்கின்றன. அழகு என்பது காணப்படுவதற்கானது என்பது மானுட ஆணவம் கொள்ளும் மயக்கு. நோக்கால் முழுமைசெய்யப்படும் என்றால் அது அழகெனும் பொய் என்றே கொள்க. அன்னையின் விழிமுன் குழவி கொள்ளும் அழகும் காதலன் முன் கன்னி சூடும் அழகும் காலப்பரப்பில் தோன்றி அழியும் கண்மாயங்களன்றி பிறிதல்ல. அழகென்பது ஒரு பொருளில் தன்னை நிகழ்த்தும் அது தான் அறியும்பொருட்டு அடையும் வடிவமுழுமை. அவன் இங்கிருக்கட்டும். வேதச்சொல் வேள்விகளின் வழியாக அனலாகி நுண்மையாகி வெளியென்றாகி முழுமைகொள்வதுபோல கனியட்டும்” என்றார் பிரஹஸ்பதி.

ஆனால் சுக்ரர் தன் அறிவுக்கு அறைகூவல்விட்டு வெளிச்சென்று அறியவொண்ணாததை அறிந்து  அசுரரை இணைத்து அழிவின்மையை அளித்து எதிர்வந்து நின்றபோது அவருள் சீற்றம் பெருகியது.  “என் கண்முன் நான் பேணிய தேவர்கள் தோற்கிறார்கள். அவர்களுக்கென எதையும் செய்ய நான் கடமைப்பட்டவன்” என்று அவர் மாணவர்களிடம் சொன்னார். என்ன செய்வதென்றறியாமல் நிலைகுலைந்து தன் சோலையில் உலவிக்கொண்டிருந்தார். கற்ற நூல்களெல்லாம் வெறும் சொற்களென்றாகும் ஒரு கணத்தை வாழ்க்கையில் கண்டடையாத அறிஞன் எவன் என எண்ணிக்கொண்டார். புல்லில் எழுந்த விதைகள் இவை. கோடானுகோடி. ஆனால் ஒன்று முளைக்கும். அதில் விழவேண்டும் நீர்த்துளி.

ஆற்றின்கரையில் உலவிக்கொண்டிருந்தபோது நீராடி வெற்றுடலுடன் எழுந்து வந்த கசனைக் கண்டார். “வாள் செல்லமுடியாத வழிகளில் அனல் செல்லும்” என்ற வரி அவர் சித்தத்தில் எழுந்தது. அக்கணமே அவர் முன் அனைத்தும் தெளிந்தன. உடன் பிறிதொன்றும் தெரிந்தது, சுக்ரர் அறைகூவியது அவர் அறிவை அல்ல ஆணவத்தை. அதை தன்னுள் அழுத்தி மறைத்துவிட்டு தேவர்க்கரசனை பார்க்கும்பொருட்டு கிளம்பினார். விண்ணகம் செல்லும்போதே உடன்வந்த மாணவனிடம் “சுக்ரருக்கு மகள் இருக்கிறாள் அல்லவா?” என்றார். “ஆம், ஆசிரியரே” என்றான் மாணவன். “அவள் பெயர் என்ன?” என்றார்.

அவர் உள்ளம் செல்லும் திசையை உணர்ந்த மாணவன் “அவள் பெயர் தேவயானி. பதினெட்டு ஆண்டு அகவைகொண்டவள், அழகி” என்றான். அவர் “நன்று” என்றபின் நடக்க மாணவன் மெல்ல “அவள் இந்திரனின் துணைவி சச்சிக்கு பிறந்த ஜெயந்தியின் மகள்” என்றான். பிரஹஸ்பதி விழிகளில் திகைப்புடன் நின்று திரும்பி நோக்கினார். “ஆம், அன்னையின் இயல்புகள் அவளுக்கும் கூடியிருக்கின்றன” என்றான் மாணவன். சிலகணங்கள் தலைகுனிந்து நின்று தாடியை வருடியபடி எண்ணத்தில் அலைந்து மீண்டு புன்னகையுடன் “நன்று, ஊசல் திரும்பிவருகிறது” என்றார் பிரஹஸ்பதி.

tigerஇந்திரன் தன் அறைக்கு திரும்பும்போது நடை தளர்ந்திருந்தான். அவனுடன் நடந்த அமைச்சர் “தாங்கள் எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறீர்கள்” என்றார். “நீர் ஆசிரியரின் மைந்தரை பார்த்திருக்கிறீரா?” என்றான். “ஆம், ஒருமுறை. பேரழகன்.” இந்திரன் தலைகுனிந்து நடந்தான். பின்னர் “அந்தப் பெண்ணை?” என்றான். அமைச்சர் “இல்லை, ஆனால் அவளும் அழகி என்றார்கள்” என்றார். “சுக்ரர் அவளை சுட்டுவிரலில் தொட்டு எடுத்த பனித்துளிபோல பேணுவதாக ஒரு பாடல்.” இந்திரன் “அவள் என் பெயர்மகள்” என்றான். அமைச்சருக்கு அனைத்தும் புரிந்தது. “எப்போது?” என்றார். “இவள் சச்சியாக இருந்தபோது” என்றான்.

அமைச்சர் அவனுடன் நடந்தபின் “அது நன்று” என்றார். “ஏன்?” என்றான் இந்திரன். “புலோமர்களின் அடங்கா வஞ்சமும் பொறாமையும் அவளிடமிருந்தால் நமக்கு நன்று” என்றார் அமைச்சர். “உச்சிப்பாறைமேல் கயிறுகட்டி வீசப்படும் உடும்பு பிடித்தபிடியை விடாததாகத்தான் இருக்கவேண்டும்.” இந்திரன் சிலகணங்களுக்குப் பின் “அவள் என் பெயர்மகள். நாம் வென்றால் அவள் தோற்றாகவேண்டும்” என்றான். அமைச்சர் அதற்கு மறுமொழி சொல்லவில்லை.

தன் மஞ்சத்தறைக்கு சென்ற இந்திரன் எண்ணங்கள் அழுத்த பீடத்தில் அமர்ந்து வெளியே நோக்கிக்கொண்டிருந்தான். அறைக்குள் வந்த இந்திராணியின் அணிகளின் ஓசையை அவன் கேட்டான். அவள் அவனருகே வந்து அமர்ந்து “என்ன இடர்? சுக்ரரை வெல்லும் வழியொன்றைச் சொல்ல இன்று ஆசிரியர் வருவதாக சொன்னீர்கள்” என்றாள். “அவர் சொன்ன வழி முற்றிலும் உகந்ததே” என்றான் இந்திரன். பின்னர் அவள் விழிகளை நோக்கி “ஆனால்…” என்றபின் “என் மகளை சுக்ரர் மணந்துள்ளார் என அறிவாயா?” என்றான். அவள் விழிசுருக்கி “உங்கள் மகளையா?” என்றாள்.

“ஆம், அவள் உன் மகளும்கூட” என்றான் இந்திரன். அவள் விழிகள் விரிந்தன. “இங்குள்ளது நம் ஒளியுடல், தேவி. நம் கனவுடல் புவியில் ஊனுடல்கொண்டு எழுந்து வாழ்ந்து மடிகிறது. அக்கனவால் இந்நனவை நிறைவுசெய்கிறோம். அங்கு ஊனுடல்கொண்டு வாழும் யோகியர் தங்கள் ஒளியுடலால் இங்கு வாழ்ந்து அங்குள்ள நனவை நிறைவுசெய்வதுபோல” என்றான். “நீ மண்ணில் புலோமன் என்னும் அரக்கனின் மகளாகப் பிறந்தாய். அன்று உன் பெயர் சச்சி.” அவள் விழிகளில் அறிதலும் மயக்கும் மாறிமாறி அலையடித்தன.

இந்திரன் தன் அவைப்பாடகர்களாகிய பிரியம்வதன், சுவாக் என்னும் இரு கந்தர்வர்களை அழைத்துவரும்படி ஆணையிட்டான். அவர்களிடம் “கந்தர்வர்களே, இந்திராணி சச்சியாகப் பிறந்து விண்ணுக்கு எழுந்த கதையை பாடுக!” என்றான். யாழை சுதிமீட்டி ஆழ்ந்த இன்குரலில் கந்தர்வர்கள் அந்தக் கதையை பாடலானார்கள். சித்தத்தின் ஆழத்தில் துளியென்று சுருங்கி அணுவென்று செறிந்து விதையென்று துயின்றிருந்த நினைவுகள் மெல்ல விழித்தெழ கண்களின் கனவு விரிய முலைக்குவைகள் எழுந்தமைய பெருமூச்சுவிட்டபடி இந்திராணி அக்கதைகளை கேட்டிருந்தாள்.

“இது தொல்கதை. தொல்கதைகள் ஒன்று பிறிதொன்றைத் தொட்டு எழுப்பும் ஆற்றல்கொண்டவை, அரசே. அதனால் தொல்கதைகள் முடிவுறுவதே இல்லை என்றறிக!” என்றான் பிரியம்வதன். “கதையில் இருந்து கதைக்குச் செல்கையில் முந்தைய கதையை உளம் சுமந்து கொய்துகொள்க! மலராடிச் செல்லும் வண்டு மகரந்தங்களை கொண்டு செல்கிறது. முந்தைய மலரால் அடுத்த மலரை கருவுறச் செய்கிறது” என்றான் சுவாக். “தைத்ய குடியினராகிய அசுரர் முன்பு தேவர்களால் சிதறடிக்கப்பட்டார்கள். மண்ணில் சிதறி மானுட உருக்கொண்டு காட்டுக்குடியினராக அவர்கள் வாழ்ந்தனர். வேட்டையாடி உண்டும் மலைக்குடில்களில் ஒடுங்கியும் வாழ்ந்த அவர்கள் ஆயிரமாண்டுகளில் தாங்கள் எவரென்றே அறியாமலாயினர்” என்றான் பிரியம்வதன்.

“ஆனால் அவர்களின் தெய்வங்கள் அறிந்திருந்தன. அவர்களின் குடில்முற்றங்களில் உருளைமலைக்கற்களாக கோயில்கொண்டமர்ந்து நாளும் அன்னமும் மலரும் பலிகொண்ட அத்தெய்வங்களின் விழிகள் அனலணையாதவையாகவே எஞ்சின. கமுகப்பூச்சரம் உதறி துள்ளி ஆடிய  பூசகர்களின் கண்களைத் தொட்டு அகம்புகுந்து எரிந்தெழுந்தன. அசுரகுடியின் மாண்பை அவை அறைகூவின. அழியாதவர்கள் நாம், ஆளவேண்டியவர்கள் நாம், அடங்காதவர்கள் நாம் என வெறிகொண்டாடின. மீண்டும் மீண்டும் தெய்வங்களிலிருந்து தைத்யர்கள் பற்றிக்கொண்டு எழுந்தனர்” என்றான் சுவாக்.

பெயரற்ற சிறிய மலைக்குடி ஒன்றில் பிறந்தவர்கள் புலோமை, காலகை என்னும் உடன்பிறந்தார். சிறுமியராக இருவரும் வணங்கி நின்றிருக்கையில் வெறியாட்டெழுந்த வேலன் வேல்சுழற்றி அலறிப்பாய்ந்து அவர்களை அணுகி “விதை வயிறு திறக்கட்டும்… குகைச்சிம்மங்கள் எழட்டும்… ஆம் ஆம் ஆம்!” என்று கூவி ஆர்ப்பரித்து மல்லாந்து விழுந்து நுரைகக்கி உடல்வலித்து உயிர்விட்டான். “உங்கள் வயிற்றில் எழுவர் தைத்யர்களை விண்ணேற்றும் மாவீரர்” என்றனர் குலமூத்தவர்கள். “தவம் செய்க… தவத்தால் அடைவதே அரிதென்றாகும்.”

புலோமையும் காலகையும் தங்கள் குடியிலிருந்து கிளம்பி அடர்காட்டுக்குச் சென்று அங்குள்ள மலைக்குகை ஒன்றுக்குள் ஒடுங்கி தவம் செய்யலானார்கள். காலகை குகைக்குள் தவம் செய்ய புலோமை வெளியே காட்டுக்குள் கனியும் ஊனும் தேடிக் கொண்டுவந்து அவளுக்கு ஊட்டினாள். பின்னர் தன் தவவல்லமை அனைத்தையும் புலோமைக்கு அளித்து அவளை தவத்திலமர்த்தி காலகை ஊனும் கனியும் கொண்டுவந்தாள். அவர்கள் மாறிமாறி தவம் செய்து முழுமையை அணுகினர். தவம் முதிர்ந்த கணத்தில் குகைக்குள் ஒளிப்பெருக்காக பிரம்மன் எழுந்தார். அங்கிருந்த புலோமையிடம் “நீ விழைவதென்ன?” என்றார்.

“நான் அடைவன அனைத்தும் என் தங்கைக்கும் உரியவையாகவேண்டும்” என்றாள் புலோமை. பிரம்மன் மகிழ்ந்து “ஆம், அதுவே நிகழ்க!” என்றார். “என் குடிக்கு இறப்பின்மை வேண்டும்” என்றாள் புலோமை. “இறப்பின்மையை எவருக்கும் அளிக்கவியலாது, பெண்ணே” என்றார் பிரம்மன். “அவ்வாறென்றால் இதை அருள்க! என் குடிப்பிறந்த பெண்ணால் அன்றி என் குலம் வெல்லப்படலாகாது” என்றாள் புலோமை. “அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார். ஊன் திரட்டி வந்த காலகையிடம் தான் சொற்கொடை பெற்றதை புலோமை சொன்னாள். “நாமிருவரும் மைந்தரைப் பெறுவோம்… நம் குடி எழுக!” என்றாள் காலகை.

குலம் திரும்பிய புலோமையும் காலகையும் தோள்திறம்மிக்க ஐந்து இளையோரை தம் கணவர்களாக ஏற்றார்கள். அவர்களிடமிருந்து இருவருக்கும் ஐம்பது மைந்தர்கள் பிறந்தனர். புலோமையின் மைந்தர் புலோமர் என்றும் காலகையின் மைந்தர் காலகேயர் என்றும் அழைக்கப்பட்டனர். இரு குலத்திலும் வீரர்கள் ஆடிப்பாவைகள் என பெருகி நிறைந்தனர். அவர்களின் ஆற்றலால் தைத்யர்கள் பெருகி மண்ணில் பரவினர். அவர்கள் அமைத்த நகர் ஹிரண்யபுரி என அழைக்கப்பட்டது.

அவர்கள் அரசர்களை வென்று கருவூலத்தை நிரப்பினர். அச்செல்வத்தை அளித்து வேள்விகளை இயற்றி விண்ணில் எழும் ஆற்றல்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஹிரண்யபுரி மண்ணிலிருந்து மேலெழுந்துகொண்டே இருந்தது. புலோமர்களின் கொடிவழியில் நூற்றெட்டாவது அரசனாகிய மகாபுலோமனின் ஆட்சியில் அது மலைமடிப்புகள்மேல் நிழல்விழுந்து மடிந்து நெளிந்துசெல்ல வானில் முகில்போல ஒளிகொண்டு நின்றது.

மகாபுலோமன் மண்ணிலுள்ள மன்னர்களை எல்லாம் வென்றான். விண்ணேறிச் சென்று இந்திர உலகை வெல்ல கனவு கண்டான். அக்கனவில் அவன் பொன்றாப் பெருவேட்கையுடன் அமராவதியில் உலவினான். அமராவதி நகரில் உலவிய தேவர் நிழலுரு ஒன்று தங்கள் நடுவே அலைவதைக் கண்டு அஞ்சி இந்திரனிடம் சென்று முறையிட்டனர். நிமித்திகரை அழைத்து உசாவிய இந்திரன் அவன் புலோமன் என்று அறிந்தான். மீண்டும் வந்தபோது புலோமனின் நிழலுரு மேலும் தெளிவுகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அது உருத் திரிந்து வந்தது.

“அங்கே பெருவேள்விகள் வழியாக அவன் வேதத்திறன் கொள்கிறான். இன்னும் சிலகாலத்தில் அவன் இங்கே ஒளியுருவுடன் வந்துவிடவும்கூடும்…” என்று நிமித்திகர் எச்சரித்தனர். “அவனை வென்றாகவேண்டும்” என்று இந்திரன் தன் படைக்கலத்துடன்  எழுந்தபோது அமைச்சர் தயங்கி “அக்குலத்திற்கு பிரம்மனின் சொற்கொடை உள்ளது, அரசே. அவர்களை அவர்களின் குலத்துப்பெண் மட்டுமே வெல்லமுடியும்” என்றார். இந்திரன் சோர்ந்து அரியணையில் அமர்ந்துவிட்டான். “பெண்களின் பெருவஞ்சத்தால் உருவான நகர் அது. அப்பெண்கொடிவழியில் ஒருத்தியால் அது அழிக்கப்படுவது இயல்வதே அல்ல” என்றார் அமைச்சர். “அழிக்கப்பட்டாகவேண்டும். வேறுவழியே இல்லை” என்றான் இந்திரன். “ஆனால் என்னுள் ஏதும் எழவில்லை” என தவிப்புடன் அரண்மனையில் சுற்றிவந்தான்.

இந்திரனின் அவைக்கு நாரதர் வந்தபோது அவன் அவரைப் பணிந்து “வழியொன்று உரையுங்கள், வானுலாவியே. நான் தங்கள் அடிபணியும்  எளியோன்” என்றான். நாரதர் “அரசே, கேட்க அரிதெனத் தோன்றும். ஆனால் அக்குலத்தில் பிறக்கும் பெண்ணால் அக்குலம் அழியும் என்பதைப்போல இயல்பான நிகழ்வு பிறிதென்ன?” என்றார். வியப்புடன் நோக்கிய இந்திரனிடம் “இதுவரை அழிந்த அனைத்துக் குலங்களும் அக்குலம் ஈன்ற கன்னியரால் அல்லவா அவ்வாறாயின?” என்றார் நாரதர். இந்திரன் அது உண்மை என அக்கணமே உணர்ந்தான்.

“கன்னியில் எழுவது கடந்துசெல்லவேண்டும் என்னும் விழைவு. பஞ்சில் தொற்றியும் காற்றில் ஏறியும் பறவைக்குள் புகுந்துகொண்டும் எல்லைகடக்க வேண்டுமென கனவு காண்கின்றன விதைகள். அரசே, எல்லைகளை பெண்களின் கருவறைகள் கடப்பதன்மூலமே இங்கு உயிர்குலம் விரிந்துபரவுகின்றது” என்றார் நாரதர். “பெருவிழைவு கொண்ட பெண் ஒருத்தி அக்குடியில் எழட்டும். பெண் முளை என்றால் குலமே விதை. உறை கிழிக்காமல் அவள் எழமுடியாது.”

நாரதரின் சொல்லின்படி இந்திரன் தன்னருகே மஞ்சத்தில் துயின்ற இந்திராணியின் அருகே படுத்து அவள் காதுக்குள் “கன்னி, நீ புலோமர்குலத்து இளவரசி…” என்று மெல்ல சொல்லிக்கொண்டே இருந்தான். “உன் பெயர் சச்சி… நீ புலோமனின் மகள்” என்றான். மெல்ல அவள் முகத்தில் ஒரு புன்னகை விரிந்தது. தன் கனவுக்குள் அவள் புலோமர்குலத்து அரசி தர்மையின் மகளென ஆனாள். விண்ணில் பறந்து நின்றிருந்த ஹிரண்யபுரியில் தன் கணவனருகே படுத்து விழிமயங்கிய தர்மை துயிலில் சிரித்தாள்.

அவள் சிரிக்கும் ஒலிகேட்டு விழித்துக்கொண்ட புலோமன் “என்ன? ஏன் சிரித்தாய்?” என்றான். “பேரழகுக் கன்னி ஒருத்தி சினம் கொண்டு சீறி அணுகிய சிம்மம் ஒன்றின்மேல் ஏறி முகில்களுக்குமேல் வந்தாள். அவளை நான் அண்ணாந்து நோக்கி நின்றேன். அவள் ஒளிகொண்டு நீர்மைகொண்டு ஒரு மழைத்துளியென்றாகி உதிர்ந்தாள். என் வாயில் விழுந்தாள். தேன் என இனித்தாள். என் வயிற்றுக்குள் அவள் நுழைவதை உணர்ந்து கூசிச்சிரித்தேன்” என்றாள். நெடுநாள் குழந்தைப்பேறில்லாதிருந்த புலோமன் அதைக் கேட்டு பேருவகையுடன் எழுந்து வெளியே ஓடி நிமித்திகரை அழைத்துவரச்செய்து குறி தேர்ந்தான். “விண்மகள் போல் ஒருத்திக்கு அரசி அன்னையாவாள்” என்றனர் நிமித்திகர்.

“சிம்மம் மீது அவள் அமர்ந்திருந்தது அவள் பெருஞ்சினம் கொண்டவள் என்பதை காட்டுகிறது, அரசே” என்று நிமித்திகர் சொன்னார்கள். “குருதிவிடாய் கொண்டவள் அவள். எரிநிகர் கன்னி. அகலில் எரிந்தால் ஒளி. அடுப்பிலெரிந்தால் அன்னம். கைமீறி கூரையேறினால் நம்மை உண்டு அழிக்கும் பெரும்பசி.” புலோமன் “என் மகள் இப்புவியின் அரசி. விண்ணாள்பவள்… அவள் பெருவஞ்சம் கொண்டிருப்பதே இயல்பு. சிம்மம் அவள் அமரும் அரியணையை குறிக்கிறது” என்றான்.

தைத்யர்குலத்தின்  பொறாமையனைத்தும் கூர்கொண்டு விதையென்றாகி முளைத்தெழுந்தாள் சச்சி. குழந்தையை தூக்கிக்கொண்டுவந்து காட்டிய வயற்றாட்டி “அனலென சுடுகிறது மகவு. அரசே, கைகளில் ஏந்த முடியவில்லை” என்றாள். கைகளில் வாங்கிய புலோமன் “ஆம், நம் குலம் கொண்ட வஞ்சம் அனைத்தும் திரண்டு எழுந்துள்ளது. வாழ்க இவ்வனல்!” என்றான். நீரால் அணைக்கமுடியாத நெருப்பு என அக்குழவியை பாடினர் அசுரகுலத்துக் கவிஞர்.

அவள் பிறவிநூலை கணித்த நிமித்திகன் அவள் அசுரகுடிப் பிறந்த இந்திராணி என்று சொன்னான். புலோமன் ஏழு தொல்பூசகரை அழைத்து வருகுறி தேர்ந்தான். இந்திரனின் அரியணையில் அமர்வாள், ஐயமே இல்லை என்றனர் எழுவரும். “ஆம், இது ஓர் அறிவிப்பு. இனிமேலும் நான் மண்ணில் தங்கியிருக்கலாகாது. விண்நுழைகிறேன், அமராவதியை வென்று என் மகளை அங்கே அரியணையில் அமர்த்துகிறேன்” என்று புலோமன் வஞ்சினம் உரைத்தான்.