மாமலர் - 4

4. ஏட்டுப்புறங்கள்

அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக இருக்கிறது” என்றாள். “உள்ளே அதைவிடப் பெரிய அனல் எரிகிறது, அரசி” என்றான் முண்டன். “சிற்றனலை நீர் அணைக்கும். காட்டனலை காட்டனலே அணைக்குமென்று கண்டிருப்பீர்கள்.” அவன் பெரிய கவளங்களாக உருட்டி உண்பதைக்கண்டு “உன் உடல் இப்படி கொழுப்பது ஏன் எனத் தெரிகிறது” என்றாள்.

“நான் அதைத் தடுக்க முயல்வதில்லை” என்று முண்டன் சொன்னான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “அரசி, நான் குள்ளன் என்பதே என் படைக்கலம். கொழுத்திருக்கையில் நான் குழந்தையுடல் கொள்கிறேன். கொழுவிய கன்னங்களும் பதிந்த மூக்குமே என்னை நோக்கி புன்னகையுடன் அன்னமிடுகையில் உங்கள் நெஞ்சு நெகிழச்செய்கிறது” என்றான். அறைவாயிலில் வந்துநின்ற தருமன் “மெய்தான்… நீ குழவியென்றே விழிக்கு தோன்றுகிறாய்” என்றார். “நீங்கள் மட்டும் முதியவராகவே தோன்றுகிறீர்களே. உங்களை வெளியே எடுத்ததுமே வயற்றாட்டி மூத்தவரே என்றழைத்திருப்பாள்” என்றான் முண்டன்.

சிரித்தபடி நகுலனும் சகதேவனும் வந்து அடுமனைக்குள் அவனைச் சூழ்ந்து நின்றனர். “மந்தன் எங்கே?” என்றார் தருமன். நகுலன் “துயில்கிறார். குரங்குகளும் காட்டுக்குள் சென்றுவிட்டன” என்றான். “உணவுக்குப்பின் துயில்வது நன்று, உணவல்லாதவற்றை கனவுகாணமுடியும்” என்றான் முண்டன். “உன் குடியும் குலமும் பதியும் எது?” என்றார் தருமன். “நான் மிதிலைநாட்டான். அங்கே போர்மறவர் குடியில் பிறந்தேன். எந்தை நான் பிறந்தபோது ஒருமுறை குனிந்து நோக்கி முகம் சுளித்தார். மூதாதையர் செய்த பழி என்றார். அக்கணமே என் அன்னையைக் கைவிட்டு அகன்றார்” என்றான் முண்டன்.

“என் கால்கள் வளைந்திருந்தன. இரட்டைப்பெருமண்டை. பிறக்கையிலேயே பற்களுமிருந்தன. பிறந்த அன்றே முண்டன் எனப் பெயர்கொண்டேன்” என அவன் தொடர்ந்தான். “உயரமற்றவர்களை தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவதிலிருந்து மானுடர் ஒழியவே முடியாது. குள்ளர்களின் பெருந்துன்பம் அவர்கள் எப்போதும் மேலிருந்தே பார்க்கப்படுகிறார்கள் என்பதுதான். அவர்கள் அதன்பொருட்டே உரத்தகுரலில் பேசத் தொடங்குகிறார்கள். தங்களை அறியாமலேயே நுனிக்கால்களில் எம்பி நின்றுகொள்கிறார்கள். வெற்றியினூடாக பிறரைவிட மேலெழ முனைகிறார்கள்.”

“ஆகவே சூழ்ச்சிக்காரர்களாக சீண்டுபவர்களாக இரக்கமற்றவர்களாக இருப்பதற்கும் அஞ்சாமலாகிறார்கள். தன் தலைக்குமேல் நிகழும் உலகை தன்னை நோக்கி இழுக்க ஒவ்வொரு கணமும் முயன்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் முண்டன். “ஆனால் அவர்கள் தொடர்ந்து கனிவுடன் பார்க்கப்படுகிறார்கள். பொறுத்தருளப்படுகிறார்கள். அரசி, ஒரு குள்ளனை குழந்தைபோல கொஞ்சுவதைப்போல அவனை சினம்கொள்ளச்செய்யும் செயல் பிறிதில்லை.”

கைகளை நக்கியபடி முண்டன் தொடர்ந்தான் “ஆனால் மானுடரால் அதைச் செய்யாமலிருக்க முடியாது. ஏனென்றால் குள்ளர்களை அவர்களின் ஆழுள்ளம் குழந்தைகளுடன் ஒப்பிட்டுக்கொள்கிறது.” திரௌபதி “ஆம், உன்னையும் அவ்வாறே எண்ணிக்கொண்டேன்” என்றாள். “அதனால்தான் என் சொற்களிலிருந்த நஞ்சுக்கு நீங்கள் நகைத்தீர்கள்” என்றான் அவன். அவள் சிரித்து “ஆம். மட்டுமல்ல, நான் இங்கு அவ்வாறு பிறிதொருவகை பேச்சைக் கேட்டே நெடுநாட்களாகின்றன” என்றாள்.

“இளமையில் நெடுநாட்கள் நான் அன்னையரின் குழவியாகவே இருந்தேன். என்னை இடையிலேயே வைத்திருந்தாள் என் அன்னை. அவள் தோழியரும் என்னை இடையிலெடுத்துக்கொள்வார்கள். பெண்கள் நடுவே அமர்ந்துகொண்டு அவர்களின் சழக்குப் பேச்சை கேட்பேன். என்னை செவியென்றும் விழியென்றுமுணராமல் வெறும் பைதலென எண்ணி பேசிக்களிப்பார்கள். ஆடைகளைந்து நீராடுவார்கள். பூசலிட்டு மந்தணங்களை அள்ளி இறைப்பார்கள். ஒரு கைப்பொருளென என்னை எங்கேனும் வைப்பார்கள். மறந்து சென்றுவிடுவதுமுண்டு.”

“நான் முதிரத் தொடங்கியபோது அவர்கள் என்னை சற்றே விலக்கலாயினர். கொஞ்சல்கள் குறைந்தபோது அவர்களுடனேயே நீடிக்கும்பொருட்டு நானும் சழக்கு பேசலானேன். அவர்களை சிரிக்கச்செய்வதெப்படி என்று கண்டுகொண்டேன். அரசி, பெண்கள் விரும்புவது காமச் சொல்லாடலே. ஆனால் அச்சொல்லாடலை முன்னெடுப்பவள் விடுநா கொண்டவள் என்று பெயர் பெறுவாள். நாணிலாதவள் என அவள் தோழிகளாலேயே பழிக்கப்படுவாள். ஆகவே அதை எவரேனும் சொல்ல தான் கேட்டு மகிழ்ந்து பின் நாணி பொய்ச்சீற்றம் காட்டுவதே பெண்கள் விழையும் ஆடல். நான் அவ்விடத்தை ஆடலானேன்.”

“ஒவ்வொருநாளும் துளித்துளியாக எல்லை மீறுதலே அவர்களை நகையுவகை கொள்ளச்செய்கிறதென்று கண்டேன். ஒருகட்டத்தில் அவர்கள் நடுவே எதையும் சொல்பவனாக அமர்ந்திருந்தேன். என்னை மானுடனென அவர்கள் எண்ணவில்லை. பேசும் கிளியென்றும் ஆடும் குரங்கென்றும் கண்டனர். எனவே எதுவும் பிழையெனப் படவில்லை. அவர்களின் கொழுநரும் அவ்வாறே எண்ணினர். அவர்களின் கொழுநர்களைக் கண்டு என்னுள் வாழ்ந்த ஆண் அஞ்சினான். எனவே அவர்களை நான் அணுகியதே இல்லை.”

“என் வயதுக்கு மிக இளையவர்களாகிய சிறுமைந்தருடன்தான் நான் விளையாடி வந்தேன். பெண்கள் நடுவே என் உள்ளம் வளர்ந்தபோது அவர்களுடன் ஆடுவது இயலாதாயிற்று. ஆண்களின் உலகில் நுழைய விழைந்தேன். மிகத் தற்செயலாக அதற்கான வழியை கண்டடைந்தேன். ஒருநாள் நூற்றுவர்தலைவன் ஒருவனைப்பற்றி அவன் புறக்காதலி சொன்ன சீண்டும் சொல்லை அவனிருந்த மன்றில் சொன்னேன். சொல்லிவிட்டதுமே அஞ்சி உடல்குளிர்ந்தேன். அவன் தோழர் வெடித்து நகைத்தனர். அவனும் உடன் நகைத்து என் மண்டையைத் தட்டினான். அன்று அறிந்தேன், நான் என்ன சொன்னாலும் எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று.”

“அதன்பின் அதுவே என் வழியென்றாகியது. நான் பகடிபேசுபவனாக ஆனேன். நச்சுநாவை கூர்தீட்டிக்கொண்டேன். ஆனால் அதைக் குறித்த தன்னிழிவும் என்னுள் திரண்டுகொண்டே இருந்தது. என் அன்னை இறந்தபோது அவ்வூரில் இருக்க விரும்பாமல் கிளம்பினேன். ஊர்தோறும் அலைந்து ஒரு சந்தையில் நின்றிருக்கையில் கழைக்கூத்தாடிகளைக் கண்டேன். அவர்களுடன் என்னை சேர்த்துக்கொண்டார்கள். அவர்களின் மூத்தாசிரியன் எனக்கு தாவுகலையையும் உடல்நிகர்கலையையும் கற்பித்தான். கைமாயங்களையும் விழிமாயங்களையும் மூதன்னை ஒருத்தி பயிற்றுவித்தாள்.”

“அன்று அம்மூத்தவள் என்னிடம் நீ என்ன செய்தாலும் நகைப்பர். ஏனென்றால் உன் உடல்வழியாக படைப்போன் ஓர் இளிவரலை முன்னரே செய்துவிட்டிருக்கிறான் என எண்ணுகிறார்கள் என்றாள். இப்புவியில் பிறிதொரு மானுடரைக் காண்கையில் மானுடர் முகம் இயல்பாக மலர்வதில்லை. ஒருகணம், கணத்திலொரு துளி, அது சுருங்குகிறது. ஐயுறுகிறது, அளவிடுகிறது, முடிவெடுக்கிறது. அதன் பின்னரே இன்சொல்லும் புன்சிரிப்பும் எழுகின்றன. உன்னைக்கண்ட கணமே முகங்கள் விரிகின்றன. இளங்குழவியரை காண்பதுபோல. துள்ளும் குருளைகளையும் பூஞ்சிறகுக் குஞ்சுகளையும் காண்பதுபோல. வளர்ந்த பின்னரும் அப்புன்னகையைப் பெறுபவை குரங்கும் யானையும் மட்டிலுமே என்றாள்.”

“அன்றறிந்தேன், எனக்களிக்கப்பட்ட நற்கொடை இவ்வுடல் என. அன்றுமுதல் இதைக் கொண்டாடலானேன். இதைக்கொண்டு என் சூழலைக் கொண்டாடினேன். அரசி, இவ்வுடல் ஒரு அகப்பை. இதைக்கொண்டு நானிருக்குமிடத்தை கலக்குகிறேன். இது ஒரு முழைதடி. இதைக்கொண்டு இம்முரசுகளை ஒலிக்கச்செய்கிறேன்” என்றான் முண்டன். “கண்ணறிவதை கருத்தறியாது செய்வேன். கருத்தறிவதை களவென்றாக்குவேன். களவனைத்தும் நிகழச்செய்வேன். காலத்தை கலைத்தடுக்குவேன்.”

சொல்லிமுடிவதற்குள்ளாகவே நின்றிருந்த இடத்திலேயே ஒருமுறை தலைகீழாகச் சுழன்று நின்று “இப்படி எப்போதுவேண்டுமென்றாலும் இப்புவியின் ஒரு ஏட்டை என்னால் புரட்டிவிடமுடியும்…” என்றான். “இது நாளை. அரசி இன்று தலையில் குழல்சுருட்டிக் கொண்டையிட்டு செண்பகப்பூ சூடியிருக்கிறார். அங்கே அஸ்தினபுரியில் கங்கைக்கரைக் கன்னிமாடத்தில் வாழும் மாயை குழல்நீட்டி குருதிகாத்திருக்கிறாள் என எண்ணியபடி அம்மலரை சூட்டிக்கொண்டார்.”

மீண்டுமொருமுறை பின்னோக்கிச் சுழன்றுநின்று “நான் எங்கே விட்டேன்?” என்றான். நகுலன் “கால ஏட்டைப் புரட்டுகிறாய்” என்றான். “ஆம், கொடிது அது. மொத்தமும் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள்” என்றான் முண்டன். “முன்பு அதை ஏதோ கைதிருந்தா குழந்தை எடுத்து விளையாடியிருக்கிறது போலும். அரசே, நடுநூல் அறுந்துள்ளது. அடுக்குகுலைந்த ஏடுகளிடையே ஆயிரம் ஏடுகள் விடுபட்டுள்ளன என்று தோன்றும்.”

நகுலன் சிரித்து “காவியமும் கற்றுள்ளாய் போலும்” என்றான். அவன் கைகளை நக்கிக்கொண்டு “நற்செயல்கள் காவியமாக ஆவதுபோல் இன்னுணவு நறுமணமாக ஆகிறது என்பார்கள்” என்றான். உடனே ஏப்பம் விட்டபடி “ஆனால் சற்று மிகையானால் கீழ்க்காற்றாக ஆவதும் உண்டு” என்றான். தருமன் “சீ… இவனுடன் சொல்லாடுவதே இழிவென்றுபடுகிறது” என்றார். “ஆகாதா?” என்றான் முண்டன். தருமன் திரும்பி தன் அறைக்கு சென்றார். நகுலன் “வருக, மூத்தவரை மகிழ்விக்கும் சிலவற்றை சொல்க!” என்றான். “நான் என்னை மகிழ்விப்பதை மட்டுமே சொல்லும் வழக்கம் கொண்டவன்” என்றான் முண்டன். “சரி, அதைச் சொல்!” என அவன் தலைமேல் கைவைத்து தள்ளிக்கொண்டு சென்றான் நகுலன்.

imagesருமனின் அறைக்குள் சென்றதும் நகுலன் “சினம் கொள்ளவேண்டாம், மூத்தவரே. அவனே சொன்னபடி அவன்  அனைத்துக்கும் கீழிருப்பவன். அங்கிருந்து நம்மை நோக்க அவனுக்கு உரிமை உண்டு” என்றான். “நான் பாதாளத்திற்குக்கூட சென்று நோக்குவேன்” என்றான் முண்டன். “அரசர் இப்போது நோக்கும் நூல் என்னவென்று நான் அறிவேன்.” தருமன் “என்ன நூல்? சொல்!” என்றார். “சௌரவேதம்” என்றான் முண்டன். தருமன் வியந்து “எப்படி தெரியும்?” என்றார். “உங்கள் உளம்பயின்று அறிந்தேன்” என்றான் முண்டன்.

“மேலுமென்ன பயின்றறிந்தாய்?” என்று தருமன் கேட்டார். “இதை சூரியமைந்தரான அங்கரின் வேதமாக நீங்கள் எண்ணுகிறீர்கள்” என்றான் முண்டன். “விளையாடுகிறாயா?” என தருமன் சீறினார். முண்டன் அஞ்சி நகுலனுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டான். “பொருட்படுத்தவேண்டாம், மூத்தவரே. இவனை ஒரு இனிய விளையாட்டுப்பொருளாக மட்டுமே எண்ணுக!” என்றான். தருமன் “அவன் அத்துமீறுகிறான்” என்றார்.

முண்டன் அஞ்சிநடுங்கி நகுலனுக்குப் பின்னால் பாதிமறைந்து ஒரு கண் மட்டும் காட்டி “இனிமேல் இல்லை” என்றான். “என்ன இல்லை?” என்றார் தருமன். “இனிமேல் உண்மையை சொல்லமாட்டேன்” என்று முண்டன் சொன்னான். தருமன் சிரித்துவிட்டார். “இவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார். “உண்மைகளை நான் வேண்டுமென்றால் பொய்யாக்கிவிடுகிறேன்” என்றான் முண்டன். “அய்யோ” என தருமன் தலையில் அடித்துக்கொண்டார். “காவியமாக்குவதைவிட இது எளிது…” என்றான் முண்டன்.

“இவன் கால ஏட்டைப் புரட்டுவான் என்கிறான்” என்றான் நகுலன். சகதேவன் பின்னால் வந்து நின்று “அதை நாம் கண்களாலேயே காணமுடியும்” என்றான். திரௌபதியும் வந்து கதவருகே நின்று “என்ன இருந்தாலும் நாம் அவனை மட்டுமே நோக்கும்படி செய்துவிடுகிறான்” என்றாள். “காலத்தைப் புரட்டுவாயா?” என்றார் தருமன். “தெரியாமல் செய்துவிட்டேன்” என்றான் முண்டன். “எங்கே, புரட்டு பார்ப்போம்” என்றார் தருமன். “எவருடைய காலத்தை?” என்றான் முண்டன். “மூடா, உன்னுடைய காலத்தைத்தான்…” என்றார் தருமன். “நீ என் கையால் அறைவாங்குவாயா இல்லையா என்று சொல்!”

“முன்னோக்கிச் செல்… நாளை என்ன நடக்கப்போகிறது என்று பார்த்துச் சொல்” என்றான் நகுலன். “ஆம்” என்று சொல்லி அவன் நான்குமுறை சுழன்று நின்று “ஆ!” என்றான். “என்ன?” என்றான் நகுலன். “என்ன?” என்றார் தருமன் திகைப்புடன். “எனக்கு பன்றிக்கறியிட்ட ஊன்சோறு அளிக்கப்படுகிறது.” நகுலன் சிரித்து “அதைவிட சற்றே முதன்மைகொண்ட சிலவற்றைச் சொல்லலாம்” என்றான். “அரசி தேன்சேர்த்த கனிக்கூழை எனக்கு அளிக்கிறார்கள்.” நகுலன் “சரி, வேறு?” என்றான். “காட்டுக்குள் ஒரு யானை வந்து அகழிக்கு அப்பால் நின்று துதிதூக்கி நுண்மணம் கொள்கிறது. இரண்டு குரங்குகள் அதன் மேலே கிளையிலமர்ந்து அதை அச்சுறுத்தி துரத்துகின்றன. அதன் மேல் காக்கை எச்சம் வெண்சுண்ணமாக வழிந்துள்ளது.”

நகுலன் சலிப்புடன் “நன்று, அனைத்தையும் பொதுவாகவே உன்னால் சொல்லமுடியும் போலும். நீ விழைவது நிகழ்க!” என்றான். “தேன்பழக்கூழை தாடியும் முடியும் நீண்ட ஒரு விருந்தினருக்கு அளிக்கிறார்கள் அரசி” என்று முண்டன் சொன்னான். “அரசரை எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து கால்தொட்டு வணங்கிவிட்டு பீடத்திலமர்ந்திருக்கும் அவர் ஓர் இளமுனிவர் என எண்ணுகிறேன். இன்சுவையை அவர் அருந்துகிறார். அவர் கண்கள் வண்டுகள்போல ஒளிகொண்டிருக்கின்றன. கரிய சிறு உடல் குதிரைக்குட்டியின் இறுக்கம் கொண்டது.”

“அப்போது பெருங்குரல் எழுகிறது. பேருடலர் முன்னரே செய்தியறிந்து வந்திருக்கிறார். வந்த விரைவிலேயே இளமுனிவரை அவர் அள்ளிஎடுத்துச் சுழற்றி தன் தோளிலேற்றிக்கொண்டு நடனமிடுகிறார். இருவரும் குடிலே அதிரும்படி நகைக்கிறார்கள். குரங்குகள் அதைக் கண்டு திகைக்கின்றன. ஓரிரு குட்டிகள் மட்டும் கிளையிறங்கி வந்து சுவர்விளிம்பில் அமர்ந்து அவர்களின் நடனத்தை விரும்பி நோக்குகின்றன.” தருமனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளை கோத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார்.

“மற்ற குரங்குகள்?” என்றான் சகதேவன். “அவை இளமுனிவரை அஞ்சுகின்றன. அவர் தோள்களெல்லாம் தழும்பாக இருக்கின்றன. அவர் மாவில்லவராக இருக்கவேண்டும்.” தருமன் “என்ன சொல்கிறாய்?” என்று கூச்சலிட்டபடி ஓடிவந்து குள்ளனைப் பிடித்து உலுக்கினார். “என்ன சொல்கிறாய்? பார்த்தன் வரப்போகிறானா? நாளை மறுநாளா? உண்மையாகவா?” நகுலன் “நம் உள்ளத்தின் விழைவைத் தெரிந்துகொண்டு விளையாடுகிறான், மூத்தவரே” என்றான். “நான் விளையாடித் தெரிந்துகொள்பவன், அரசே” என்றான் முண்டன். “நீங்கள் அழுவதை காண்கிறேன். அரசி வாயிலருகே சாய்ந்து நின்று கண்ணீர் ஒளிவிட நோக்குகிறார். இவர்கள் இருவரும் அழுகையும் சிரிப்புமாக நின்றிருக்கிறார்கள்.”

“எப்படி அறிந்தாய்? சொல்?” என்றார் தருமன். “நான் நாட்களைப் புரட்டுகிறேன். முன்னால் சென்றால்தானே நீங்கள் அஞ்சுகிறீர்கள். இதோ, பின்னால் வருகிறேன்” என்றபடி அவன் எதிர்த்திசையில் சிலமுறை குதித்து “ஆ!” என்றான். “என்ன?” என்றான் நகுலன் எரிச்சலுடன். “அடுமனையில் புல்லரிசிக்கஞ்சி கொதிக்கிறது. புளிக்காய்த் துவையல் அரைக்கிறார் அரசி.” நகுலன் “சரி” என்றான். “புலி ஒன்று வருகிறது. குடிலை தொலைவில் நின்று நோக்கியபின் கோட்டுவாய் விரித்து தலையை உலுக்கி உடுக்கோசையாக காதடித்து திரும்பி பொத்துக்கால் வைத்து நடந்தகல்கிறது. அதன்மேல் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூடி கூச்சலிட்டு எம்பிக் குதிக்கின்றன. அதன்மேல் சுழலும் ஈக்கள் இளவெயிலில் ஒளிவிட்டு அனல்துளிகளாகின்றன.”

“உண்மை” என்றார் தருமன். நகுலன் அவனை கண்களைச் சுருக்கி நோக்கினான். “அரசர் சலிப்புடன் பேசிக்கொண்டிருக்கிறார். பின்னர் கீழிறங்கி தோட்டத்திற்குச் செல்கிறார். வெறும் கைகளுடன் புலியை தேடிச்செல்கிறார். புலிக்கால்தடத்தைத் தேர்ந்து சென்று கோமதிக்கரை நாணல்வெளியில் அப்புலியை காண்கிறார். ஏராளமான குரங்குக்குட்டிகள் புலியைச் சூழ்ந்து சீண்டி விளையாடுகின்றன. அவர்களுடன் சேர்ந்து பேருடலரும் ஆடிக்கொண்டிருப்பதை அரசமரத்திற்குப் பின்னால் நின்று நோக்குகிறார்.”

திகைப்புடன் “ஆம், இது நடந்தது!” என்றார் தருமன். “உண்மை! அப்படியென்றால் இளையோன் வரப்போவதும் உண்மை!” என்று கூவியபடி மீண்டும் அருகே சென்று “உண்மையிலேயே வந்துகொண்டிருக்கிறானா? எங்குள்ளான்?” என்றார். சகதேவன் “நான் முன்னரே அதைக் கணித்து அரசியிடம் சொல்லியிருந்தேன், மூத்தவரே. இந்த மழைக்காலம் அணுகுவதற்குள் விஜயர் திரும்பிவருவார்” என்றான். தருமன் நெஞ்சைப்பற்றியபடி மெல்ல பின்னடைந்து பீடத்திலமர்ந்தார். விழிகள் சுரந்து வழியலாயின. “வரப்போகிறானா? நலமாகத்தான் இருப்பான். எப்படி மாறியிருப்பான்?” என்றார். தலையை அசைத்து “என் இளையோன்… என் மைந்தன்! விஜயன்!” என்றார்.

விழிநீரை சுட்டுவிரலால் துடைத்தபடி மூக்கை துடைத்தார். “எவ்வண்ணம் ஆகியிருந்தாலும் அவன் பார்த்தன். எப்படி இருந்தாலும் நம் உடன்குருதியன்” என்றார். “ஆம் மூத்தவரே, அவர் என்றும் நம் காவலர்” என்றான் நகுலன். “சற்றுமுன் சேர்ந்து உணவுண்ணும்போது ஒரு கணம் சவுக்குச் சுண்டுதல்போல அவ்வெண்ணம் வந்தது என்னுள். ஒரு கை குறைகிறது என்று. ஒன்று குறைந்தாலும் நாம் முழுமையர் அல்லர் என்று. தெய்வங்களே, மூதாதையரே, என் நெஞ்சக் கனலை நீர் கண்டீர்.” பெருமூச்சுடன் மலர்ந்து “தேவி, இளையவன் வரப்போகிறான்…. நம்முடனிருக்கப்போகிறான்!” என்றார். திரௌபதி புன்னகையும் கண்ணீருமாக “ஆம்” என்றாள்.

முண்டன் மீண்டும் இருமுறை சுழன்று நின்று நிலைகொள்ளமுடியாமல் மீண்டும் மீண்டும் சுழன்றான். “என்னால் நிறுத்தமுடியவில்லை. ஏடுகள் புரள்கின்றன, அரசே” என்று கூவினான். மிக விரைவாகச் சுழன்றபோது அவன் ஒரு காற்றாடிபோல கண்ணுக்குத் தெரியாதவனானான். அப்படியே எம்பி சாளரம் வழியாக வெளியே தெறித்து அலறியபடி கீழே சென்றான். அவர்கள் ஓடிச்சென்று நோக்க கீழே சாலமரத்திலிருந்து சென்ற கொடி ஒன்றில் தொற்றி ஆடி மீண்டும் சுழன்று கீழே விழுந்து “ஆ!” என்றான்.

“என்ன?” என்றார் தருமன். “நான் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். இங்கே எல்லாமே வேறுவகையில் உள்ளன. மிகப்பெரிய அரண்மனைகள் செறிந்த தெருக்கள். வணிகர்களின் பெருவண்டிகள். இது ஒரு நகரம்…” நகுலன் “அதன் பெயரென்ன?” என்றான். அவன் “கேட்டுச்சொல்கிறேன்” என்றபின் “இது பாடலிபுத்திரம் என்கிறான்” என்றான்.

“பாடலிபுத்திரமா? எங்குள்ளது அது?” என்றான் சகதேவன். “கங்கைக்கரையில். கங்கையில் பெருநாவாய்கள் பாய்த்தொகை புடைக்க சென்றுகொண்டிருக்கின்றன. இது மகதர்களின் தலைநகர்.” நகுலன் “மகதர்களின் தலைநகர் ராஜகிருஹம் அல்லவா?” என்றான். “அப்படியா?” என்றான் முண்டன். சகதேவன் “ராஜகிருஹத்தைப்பற்றி கேட்டுச் சொல்” என்றான். “ராஜகிருஹம் கைவிடப்பட்டது. தாம்ரலிப்தி மண்மூடி அழிந்ததுமே அதுவும் பொருளிழந்தது” என்றான். சகதேவன் பெருமூச்சுவிட்டு “நன்று” என்றான்.

“இந்திரப்பிரஸ்தம் பற்றி கேள்” என்றார் தருமன். “வேண்டாம்” என்று சகதேவன் உரக்க சொன்னான். “ஏன்?” என தருமன் திரும்ப “வேண்டியதில்லை” என்று சகதேவன் உறுதியுடன் சொன்னான். தருமன் “அஸ்தினபுரி பற்றி…” என கேட்கத் தொடங்கியதும் சகதேவன் “அதுவும் வேண்டியதில்லை” என்றான். திரௌபதி “ஆம், வேண்டியதில்லை” என்றாள். தருமன் அவளை புரியாமல் திரும்பி நோக்கினார். “துவாரகை குறித்து…” என சொல்லெடுத்த பின் தருமன் அடக்கிக்கொண்டார்.

“அய்யய்யோ அய்யய்யோ” என்று முண்டன் அலறினான். “என்ன ஆயிற்று எனக்கு? பித்தனாக ஆகிவிட்டேன் போலும்…” நகுலன் “என்ன?” என்றான். “நான் ஏட்டுச்சுவடிகளை நோக்கி பேசிக்கொண்டிருக்கிறேன். ஆ, ஏட்டுச்சுவடியில் இருப்பவர்கள் என்னிடம் பேசுகிறார்கள்.” கைதூக்கி அனலில் நிற்பவன்போல துள்ளி “காப்பாற்றுங்கள். எனக்கு என்னவோ ஆகிவிட்டது. மருத்துவர்கள் எங்கே?” என்று கூச்சலிட்டான். நகுலன் “யார் உன்னிடம் பேசுகிறார்கள்?” என்றான். “நீங்களெல்லாம்தான்… இவையெல்லாம் ஜயசேனர் எழுதிய கல்யாணசௌகந்திகம் என்னும் நூலில் உள்ளவை!” என்றான் முண்டன். “எவை?” என்றான் நகுலன். “இதோ, நான் பேசுவது உட்பட அனைத்தும்” என்றான் முண்டன்.

முண்டன் விம்மியழுதபடி “என்ன செய்வேன்…? நான் இந்நூலில் இருந்து வெளியே தெறித்து வந்துவிட்டேன்… என்னை உள்ளே இழுங்கள்” என்றான். தருமன் “பித்தனைப்போல் பேசுகிறான்” என்றார். முண்டன் “உயிருடன் நூலுக்குள் புகமுடியுமா? பாண்டவர்கள் காவியத்திற்குள் பிறந்தார்கள் என்கிறார்களே… நேரடியாகவே நூலுக்குள் ஐந்து குட்டிகள் போடப்பட்டிருக்கின்றன” என்றபடி தவித்துப் பரிதவித்து காற்றிலேயே முட்டிமோதி “அய்யய்யோ, வழியே இல்லையே. எல்லா பக்கங்களையும் உரையெழுதி மூடிவைத்திருக்கிறார்களே மூடர்கள்” என்றான்.

அவனுக்குப் பின்னால் ஒரு பெருங்குரங்கு வந்து இறங்கியது. “யார் நீர்?” என அவன் திடுக்கிட்டுத் திரும்பி கேட்டான். அது “ர்ர்ர்” என்றது. அவன் அலறியபடி மீண்டும் பல சுழற்சிகளாக எழுந்து சென்றதுபோலவே மீண்டு அறைக்குள் வந்தான். “அனுமன்! அனுமன்!” என்றபின் கண்களைத் திறந்து “ராமகதைக்குள் விழுந்துவிட்டேனா? என்ன இது? இங்கிருந்து ஏதாவது வேதத்திற்குள் சென்றுவிழுந்தால் வாய் ஓயாத பெருந்தவளையாக ஆகிவிடுவேனே?” என்றான். நகுலன் அவனை உலுக்கி “விழித்துக்கொள்” என்றான்.

முண்டன் தலையைத் தட்டியபடி “என்ன ஆயிற்று?” என்றான். “நீ எங்கோ சென்றாய்” என்றான் நகுலன். “ஆம், ஒரு நூலுக்குள்… அல்லது நூலில் இருந்து வெளியே வந்தேனா?” சகதேவன் “அந்த நூல் எது?” என்றான். “அது ஒரு இன்பச்சுவைக் காவியம்… ஜயசேனர் அதை உக்ரசிரவஸ் சௌதி பாடிய பாரதப்பெரும்பாடல் என்னும் நாவுரை காவியத்திலிருந்து எடுத்து விரிவாக்கியிருக்கிறார். உக்ரசிரவஸ் சௌதி தன் பாடல்களை வைசம்பாயனரும் பைலரும் சுமந்துவும் ஜைமினியும் எழுதியவற்றைக் கொண்டு அமைத்தார். அவர்கள் மகாவியாசராகிய கிருஷ்ண துவைபாயனரின் மாணவர்கள். அவர் எழுதிய வெற்றிக்காவியத்தை அவர்கள் விரித்தெழுதினார்கள்.”

“வியாசர் உண்மையில் சூதர்கள் பாடியதைக் கேட்டுத்தான் எழுதினார். சூதர்கள் வேறு சூதர்கள் பாடியதைக் கேட்டு பாடினர். வேறு சூதர்கள் மக்கள் சொன்னதைக் கேட்டு பாடினார்கள். மக்கள் பிறர் சொன்னதைக் கேட்டு சொன்னார்கள். அந்தப் பிறர் மேலும் பிறர் சொன்னதைக் கேட்டு சொன்னார்கள். அந்த மேலும் பிறர் பொதுவாக சொல்லப்பட்டதைக் கேட்டு சொன்னார்கள். உண்மையில் அவர்கள்…” என்று அவன் சொல்ல இடைமறித்த சகதேவன் “நன்று. நீ சென்று ஓய்வெடுக்கலாம்” என்றான். முண்டன் கைதூக்கி சோம்பல் முறித்து “உணவருந்திவிட்டு ஓய்வெடுப்பதே என் வழக்கம்” என்றான்.

திகைப்புடன் “இப்போதுதானே உணவருந்தினாய்?” என்றான் நகுலன். “நான் அப்படி முறைமைகளை கைக்கொள்வதில்லை” என்றபின் முண்டன் திரௌபதியிடம் “அரசி, மீண்டும் அன்னமிட உங்கள் உள்ளம் எண்ணுவதை அறிகிறேன்” என்றான். திரௌபதி சிரித்து “வா” என்றாள். “உணவிடச்செல்லும் பெண்கள் பேரழகிகள். உணவுடன் வருகையில் அவர்கள் மேலும் அழகியராகிறார்கள்” என்றபடி முண்டன் அவளைத் தொடர்ந்து சென்றான். கீழே கிடந்த தாலமொன்றை காலால் தட்டி மேலெழுப்பி கையிலேற்றி சுட்டுவிரல்முனையில் சுழற்றியபடி “பாண்டவனே கேளாய்… அறநிலையாகிய குருநிலையில்…” என்று சொன்னபடி போனான்.

“பெருநடிகன்” என்றான் நகுலன். “நடிக்கும்போது நடிக்கப்படுவதாக மாறிவிடுகிறான். மானுடன் எப்படியும் தன்னை ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றான் சகதேவன். தருமன் “அவன் சொல் பொய்க்காதென்று என் உள்ளம் சொல்கிறது. இளையோன் வரவிருக்கிறான்” என்றார்.