மாமலர் - 16

16. அறமென்றமைந்தோன்

இளவேனில் எழுந்தபின் தோன்றும் முதற்கதிர் முதல் மலரைத் தொடுவதற்கு முன் தங்கள் முலைதொட வேண்டுமென்று தேவகன்னியர் விழைவதுண்டு. அவர்கள் அழகை பொன்கொள்ளச் செய்யும் அது. தன் தோழியர் எழுவருடன் இமயச்சாரலில் அமைந்த சௌகுமாரியம் என்ற சோலையை அடைந்து அங்கு ஓடிய சிறு காட்டாற்றில் பாய்ந்து நீராடி ஈரக்குழல் உதறி கரையேறி மலர்செறிந்த மரக்கிளைகளில் தொங்கி ஊசலாடி விளையாடிக்கொண்டிருந்தாள் ஊர்வசி. நீந்துகையில் மீன்களென்றும் கிளை தாவுகையில் கிளிகளென்றும் ஓடி ஒளிகையில் வெண்முயல்கள் என்றும் புதர்கள் ஊடே தாவுகையில் மான்களென்றும் அவர்கள் உருமாறினர்.

அப்போது அவ்வழியே கருமுகில்தேர் ஒன்றில் ஏறி கேசி என்னும் அரக்கன் தன் ஏழு படைவீரர்களுடன் சென்றுகொண்டிருந்தான். அவன் நீளக்கருங்குழல் காற்றிலெழுந்து நூறு யோசனை தொலைவுக்கு அலையலையென பறந்து கொண்டிருந்தது. அதன் இருளால் கருக்கல்வானம் மேலும் இருண்டது.  முதலொளிக்கு முன் தன் இருளுலகம் சேர்ந்துவிடவேண்டும் என அவன் விரைந்துகொண்டிருந்தான்.

இளவேனில் எழுந்ததும் முதற்சேவல் மரக்கிளையில் ஏறி நின்று செங்கனல் கொண்டையைச் சிலிர்த்து சிறகடித்து “எங்கோ எழுந்தருளாயே! எங்கோ எழுந்தருளாயே!” என்று கூவியது. கீழ்வான் விளிம்பில் அருணனின் தேர்ப்புரவிகளின் குளம்புத் தடங்கள் சிறு செந்நிறத் தீற்றல்கள் எனத் தோன்றலாயின. “வருக, எம் தேவா!” என்று கூவியபடி நாகணவாய்கள் துயிலெழுந்தன. உள்ளான்களும் காகங்களும் காற்றில் எழுந்து சிறகசைத்து களியாட்டெழுப்பின. தேர்முகம் தெளிந்து கிழக்கே ஒளியரசன் வானிலெழுந்து செங்கதிர்முடி துலங்கி வந்தான்.

முதற்கதிர் வந்து மலர் தொடும்போது அவற்றுக்குமேல் தங்கள் மெய்யுருக் கொண்டு பொன்முலைகளைத் திறந்து காத்து நின்றனர் தேவகன்னியர். அவ்வான் மீது கரிய அலையெனப் பறந்த கேசியின் தலைமுடி சூரியக்கதிரை மறைத்தது. சினம் கொண்ட ஊர்வசி சலிப்போசையிட்டபடி அக்குழலை தன் கையால் பற்றி வீசி விலக்கினாள். ‘யார் அது?’ என திரும்பி நோக்கிய கேசி கதிர்கொண்டு பொன்பூசி நின்ற ஊர்வசியை கண்டான்.

அக்கணம் அவன் பிறிதெதையும் எண்ணவில்லை. தேரைத் திருப்பி பாய்ந்துவந்து அவளை அள்ளித்தூக்கி தன் தேரிலேற்றி “செல்க, என் அரண்மனைக்கு!” என்று தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான். இருளுருக்கொண்ட தேர்ப்புரவிகள் குளம்பறைய தென்னிருள் நோக்கி விரைந்தன. ஊர்வசி கைநீட்டி அலறினாள். கீழே இருந்த அவள் தோழிகள் வெண்நாரைகளாக சிறகுகொண்டு பறந்து அவனைத் துரத்தினர். கரிய கூகைகளாக எழுந்த கேசியின் வீரர்கள் அவர்களை சிறகுகொய்து மண்ணில் வீழ்த்தினர்.

வான்வழியே அவர்கள் செல்லும்போது கங்கையில் புதுப்புனலாடி ஒளியலைத்த நீர்ப்பரப்பைப் பிளந்து பொன்னொளிரும் வெற்றுடலுடன் எழுந்து கரைவந்து ஈரக்குழலை உதறி தோள்மேல் பரப்பி விரல்களால் நீவியபடி நின்றிருந்த புரூரவஸ் தன்மேல் விழுந்து மறைந்த நிழலைக்கண்டு நிமிர்ந்து நோக்கினான். அவன்மேல் விழுந்த முதற்கதிரின் ஒளி வேள்வி விறகின் மேல் எழுந்த தென்னெரியென சுடர்ந்தது. அவனை நோக்கி கைவீசி  “என்னை காத்தருள்க, அரசே!” என்று ஊர்வசி கூவினாள்.

மின்விரைவில் கடந்து சென்ற கருந்தேரைக் கண்டதுமே புரூரவஸ் கையருகே இருந்த தன் உடைவாளை மட்டும் எடுத்துக்கொண்டு பாய்ந்து அருகணைந்த தன் புரவியிலேறி அதை விண்ணில் பாய்ந்தெழச் செய்தான். ஒளிமேல் காலூன்றும் திறன் கொண்டிருந்த அவன் புரவி வானிலேறி மிதந்து கேசியின் விண்தேரைப் பின்தொடர்ந்து சென்றது. தேரின் குடைத்தூணில் கேசியின் கருங்குழலினால் பன்னிருமுறை சுற்றிக் கட்டப்பட்டு நின்றிருந்த ஊர்வசி வெண்நிறக் குஞ்சிமுடி பறக்க பாற்கடல் அலையென பாய்ந்துவந்த புரவிமேல் வெற்றுடலுடன் வாளேந்தி அமர்ந்திருந்த புரூரவஸைக் கண்டு விழிமலர்ந்து நோக்கினாள்.

கேசியைத் துரத்தி மறித்த புரூரவஸ் தன் உடைவாளால் அத்தேரின் விளிம்புகளில் நின்று வில்லும் வேலுமேந்தி போரிட்ட அரக்கர்களின் பறக்கும் கூந்தலை வெட்டினான். அவர்கள் பாறைகள்போல சென்று மண்ணில் விழுந்தனர். அங்கு எழுந்து நின்று பறக்கமுடியாமல் கைவீசி கூச்சலிட்டனர்.  கேசியின் கூந்தலை வெட்டி கீற்றுகளாக பறக்கச்செய்தான். அவை மண்ணில் இறங்கிப்படிய விண்பறவையின் சிறகுகள் அவை என அங்கே கன்று மேய்த்திருந்த ஆயர் கூச்சலிட்டு மேலே நோக்கினர்.

குழலறுபட்டு தேர்த்தட்டில் விழுந்த கேசியைப் பற்றி வாளால் அவன் தலையை முற்றிலும் மழித்தான். தன் ஆற்றலனைத்தும் இழந்து வெறும் உடலென தேர்த்தட்டில் கிடந்த கேசியை அவன் ஆடையைக் கொண்டே கைகள்பிணைத்து தேரில் இட்டான். முடியாலான கட்டுகள் அறுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊர்வசி அவனை நோக்கி “நன்று செய்தீர் அரசே, இதை நினைத்திருப்பேன்” என்றாள்.

“நீ யார், அழகியே? கான்தேவதையா? விண்ணுலாவியா? நீர்மகளா? மண்ணில் எப்பெண்ணும் இப்பேரழகு கொண்டு நான் பார்த்ததில்லை” என்றான் புரூரவஸ். ஊர்வசி “நான் அமராவதியின் ஊர்வசி. இது உங்கள் உளம்கொண்ட என் தோற்றமே” என்று புன்னகைத்தபின்  “வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பொற்கிளியாக மாறி சிறகடித்து எழுந்து காற்றில் பறந்து மறைந்தாள்.

அமராவதிக்குத் திரும்பி வந்த ஊர்வசி கிளம்பிச்சென்றவளாக இருக்கவில்லை. அவள் விழிகள் உள்நோக்கி திரும்பிவிட்டிருந்தன. விரல்நுனிகளில் எப்போதும் மென்பதற்றம் இருந்தது. இரு கால்களும் இணையாக நிலத்தூன்றவில்லை. இடை ஒசிந்து தோள் நிலையழிந்து காற்றில் உலையும் மலர்க்கொடி என்றிருந்தாள். எண்ணங்களில் எங்கெங்கோ சென்று நீள்மூச்சுடன் திரும்பிவந்தாள். கைநகம் கடித்து இமை தாழ்த்தி அமர்ந்து ஏங்கினாள். சிற்றொலியில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எங்குளோம் என உணர்ந்து நீள்மூச்செறிந்தாள். அவளிடம் நிகழ்ந்த மாற்றங்களை தோழியர் அறிந்தனர். அவளுக்கு நிகழ்ந்ததென்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அந்நாளில் இந்திரன் அவைக்கு விண்ணுலாவியாகிய நாரதர் வந்தபோது அவரை மகிழ்விக்கும்பொருட்டு ஸ்ரீநிருத்யம் என்னும் பெருங்கூத்தை அவையில் நிகழ்த்தும்படி இந்திரன் ஆணையிட்டான். பாடகியர் இரு நிரையாக அமர்ந்து பாற்கடலில் துயில்பவனின் பேரழகை அவன் நெஞ்சில் அணிந்த அருமணியாகிய துணைவியின் பொன்றாப் பொலிவை போற்றிப்பாடினர். திருமகளாக நடனமங்கையர் நடுவே ஊர்வசி கால்விரல் முதல் நெற்றி வகிடு வரை நூற்றெட்டு அணிகளை அணிந்து நின்றாள். இளம்பச்சைப் பட்டாடை சுற்றி குழலில் மலர்சூடி இவளே அவளென்று நாரதர் முதலிய முனிவரும் விழிமயங்கும்படி தோன்றினாள்.

ஆடல் தொடங்கியது. சொல் ஒவ்வொன்றும் விரல் அசைவாக மாறுவதை அவையோர் கண்டனர். இசையென்பது உடலசைவாகி தாளம் காலடிகளாகி பாடல்கொண்ட பொருளனைத்தும் விழிமின்னல்களாகி ஓர் உடலில் ஒரு காவியம் நிகழ்ந்தது. தன்னை திருமகளென்றே ஆக்கி அங்கு நிறைந்திருந்தாள் ஊர்வசி. பொன்னொளிர் பேருடல் என ஓருடல் என்று ஒரு வரி பாடலில் எழுந்தபோது நாணத்தால் கண்சிவக்க முகம்கன்ற உடல் சற்று சிலிர்த்து நிலையமைந்து அவள் காட்டிய முத்திரையைக் கண்டு இசைமுனிவராகிய நாரதர் சினந்தெழுந்தார்.

“நிறுத்து!” என்று கூவினார்.  “நிறுத்துக! நிறுத்துக! ஆடலை நிறுத்துக!” என்று கைவிரித்து கூச்சலிட்டபடி அவை நடுவே வந்தார். உடனாடிய மங்கையர் திகைத்து நிலைமண்டிலத்தில் கால்பரப்பிவைத்து நின்றுநோக்க ஊர்வசியை அணுகி  “நீ ஆடியதென்ன? உன் கைவிரல் இங்கு மலர்ந்து சொன்னதென்ன?” என்றார்.  “நான் அறிந்து ஆடவில்லை, முனிவரே. இது அதுவாக ஆகி ஆடிய நடனம்” என்றாள் ஊர்வசி. பெருஞ்சினத்துடன் “நீ காட்டிய கைமுத்திரை விண்ணளாவ விரிந்தவனுக்குரியதல்ல. அது மானுடனை சுட்டுகிறது” என்றார் நாரதர்.

புரியாமல் திகைத்து பிற பெண்களைப் பார்த்தபின் இடையில் கைவைத்து ஒசிந்துநின்று  “என்ன பிழையென்று நான் அறியக்கூடவில்லை, முனிவரே” என்றாள் ஊர்வசி.  “நீ காட்டியது ஆழிவண்ணன் உடலை அல்ல. மானுட உடலை” என்றார் நாரதர். “நீ அவனுக்கு மானுடன் ஒருவனை இணை வைத்தாய். இழிமகளே, தேவகன்னியர் எண்ணவும் ஒண்ணாத செயல் ஒன்றைச் செய்தாய்.”

அப்போதுதான் அனைத்தையும் உணர்ந்தாள். ஆனால் அச்சமோ துயரோ கொள்ளாமல் முகம் மலர்ந்து இதழ்களில் புன்னகை விரிய கண்களில் ஒளியுடன் “ஆம்” என்றாள். தோழியரை விழிநுனியால் நோக்கியபடி நாணித்தலைகுனிந்து  “அதை நன்குணர்கிறேன்” என்றாள்.  “முனிவர் மகளெனப் பிறந்தவள் நீ. தெய்வங்களுக்குரிய மலரென இங்கிருப்பவள். மானுடனை எண்ணி எப்படி காமம் கொண்டாய்?” என்று நாரதர் கூவினார். “ஓடையின் திசையை அது முடிவு செய்யமுடியாதென்பார்கள், முனிவரே” என அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.

நாரதர் கைநீட்டி “இனி நீ இங்கிருக்கலாகாது. உன்னுள் குடியேறிய இந்நஞ்சு முற்றிலும் நொதித்து அமுதென்றாகி ஒளிகொண்டபின் இங்கு மீண்டுவருவதே முறை. நீ விழைந்த மானுடனை அடைக! அவன் எல்லையை அறிந்து  கடந்து தெய்வகன்னியாக உன்னை உணர்கையில் இங்கு மீள்க!” என்றார்.

“அத்தீச்சொல் ஏற்ற ஊர்வசி கிளையிலிருந்து உதிரும் மலரென மண்ணில் விழுந்தாள்” என்றான் முண்டன். அவன் உடலிலேயே புரூரவஸின் விரைவை, கேசியின் ஆற்றலை, ஊர்வசியின் ஆடலை, நாரதரின் சினத்தை நோக்கிக்கொண்டிருந்த பீமன் எண்ணம் அறுபட்டு மீண்டுவந்தான்.  நிமிர்ந்து அமர்ந்து “சொல்க!” என்றான்.

அவன் அருகே வந்து முழந்தாளிட்டு அமர்ந்து நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கி முண்டன் சொன்னான் “ஊர்வசி மண்ணுக்கு வந்தாள். அவளை புரூரவஸ் கண்டடைந்தார். மண்ணிலவள் தோன்றிய இடம் இது. இச்சுனைக்கரையில் இந்தச் சோலையில் தான் புரூரவஸ் ஒரு காட்டு இளம்கன்னியாக அவளை கண்டடைந்தார்.”

பீமன் திரும்பி ஆலயக்கருவறைக்குள் அமர்ந்திருந்த கரிய சிலையின் முகத்தைப் பார்த்தான். மாறாக்குமிண்சிரிப்பும் நிலைநோக்கும் கொண்டிருந்தாள். கல்லில் எழுந்த கண்ணொளி காலத்தை அறியாது என அவன் எண்ணிக்கொண்டான். “அன்னையின் ஆலயமுகப்பில் இருக்கிறோம். அவள் அனைத்தையும் அறிக!” என முண்டன் சொன்னான். “என்னிடம் மாயக்கலை ஒன்றுள்ளது. அதைப் பற்றும் உளஉறுதியும் தொடரும் விரைவும் உங்களுக்கிருக்குமென்றால் இக்காலத்திலிருந்து பெயர்த்தெடுத்து உங்களை அக்காலத்திற்கு கொண்டு செல்வேன்.”

பீமன் அருகே அவன் முகம் வந்தது. விழிகள் முடிவிலி திறக்கும் இரு துளைகளெனத் தெரிந்தன. “புரூரவஸாக உங்களை ஆக்குவேன். காலம் கடந்து அங்கு சென்று உங்கள் மூதாதை என ஆகி இங்கு வந்து அன்று நிகழ்ந்ததை மீண்டும் நடிக்க வைப்பேன். அன்று முதல் இன்று வரை மானுடம் அறிந்த அனைத்து அறிதலும் உங்களுடன் இருப்பதனால் அன்று நிகழ்ந்ததை விழைந்தால் நீங்கள் இன்று மாற்ற முடியும். அனைத்துத் தருணங்களையும் பிறிதொன்றென அமைக்க முடியும்.”

“அறியாக் கன்னியென மண்ணில் வந்த ஊர்வசியிடம் புரூரவஸாக நின்று உங்கள் உளத்தெழுந்த வினாவை கேட்க முடியும்.” பீமன் விழிசுருக்கி “எவ்வினாக்களை?” என்றான். “உங்களை இங்கு இவ்வண்ணம் நிறுத்துவனவற்றை, இங்கிருந்து மேலும் எழாது எடையளிப்பவற்றை.” பீமன் தன் மெல்லிய செந்தாடியைத் தடவியபடி அவனை நோக்கிக்கொண்டிருந்தான். “ஐயுற வேண்டாம், நான் உங்களை அங்கு கொண்டு செல்வேன்” என்றான் முண்டன். “அது ஓர் உளமயக்கா?” என்றான் பீமன். “இப்புவியில் நிகழும் மானுட வாழ்க்கை யாவும் ஓர் உளமயக்கே. உளமயக்குக்குள் எத்தனை உளமயக்கு நிகழ்ந்தாலென்ன?” என்றான் முண்டன்.

மீண்டும் ஏதோ சொல்ல நாவெடுத்தபின் தன்னை கலைத்துக் கூர்த்து  “நன்றி முண்டரே, நான் சித்தமே” என்றான் பீமன். “ஒன்று கேளுங்கள்! நீங்கள் அங்கு செல்வது மட்டுமே என் திறனால் அமையும். மீண்டு வருவது உங்கள் விழைவே. மீண்டு வரவேண்டாம் என்று தோன்றியதென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது” என்றான் முண்டன். புன்னகையுடன் “ஆகுக!” என்றான் பீமன்.

தன் கைகளை விரித்த முண்டன் வலக்கையிலொரு சிறு வெண்மலரை வைத்திருந்தான். இடக்கையில் ஒரு கூழாங்கல். அதை பீமன் முன் நீட்டினான். “இது விண்ணிலிருந்து உதிர்ந்த மலர். இது அவளை நாடிச்செல்லும் ஒரு மானுடன். இதைத் தொடுக!” என்றான். பீமன் கை நீட்டி அந்தக் கூழாங்கல்லை தொட்டான். “செல்க!” என அவன் சொன்னான். அது ஒரு கனவென்று அவன் எண்ணினான். கனவுக்குள் என அவன் குரல் ஒலித்தது. “செல்க…” பீமன் இனிய துயிலில் என உடல்தளர்ந்தான். ஆம் கனவேதான் என்று சொல்லிக்கொண்டான். “செல்க!” என மீண்டும் எங்கோ முண்டனின் குரல் ஒலித்தது.

imagesவேட்டைக்குச் செல்வதை புரூரவஸ் ஒருபோதும் விரும்பியிருந்ததில்லை. அரசர்கள் மாதம் இருமுறை வேட்டை கொள்ளவேண்டுமென்பது அரண்மனையின் நெறிகளில் ஒன்றென கடைபிடிக்கப்பட்டது. அரண்மனைகள் உருவாவதற்கு முன்பு காட்டுக்குடிலின் மீது குலக்கொடி நாட்டி கொந்தைமுடி சூடி கல்பீடத்தில் அமர்ந்து பசுங்கோல் ஏந்தி ஆண்ட அக்காலத்தில் இருந்தே அரசர்களுக்கு அது முறையென குலமூத்தார் கூறினர். குலநெறி பிழைக்கவேண்டாம் என்பதனால் அவன் வேட்டையை வெறும் கானாடலாக ஆக்கிக்கொண்டான்.

அவன் இளவயது முதலே ஊனுணவை முற்றிலும் தவிர்த்திருந்தான். அறியாச் சிறுவனாக இருக்கையில் ஒருநாள் அரண்மனை முற்றத்தில் அமைந்த அணிக்குளத்தில் ஆம்பலும் குவளையும் மலர்ந்திருக்க ஊடே துள்ளி வெள்ளிஒளி காட்டி அலைவளயங்களின் நடுவே மூழ்கி களியாடிக்கொண்டிருந்த இளமீன் ஒன்றை இலைகள் நடுவே வெண்மலரோ என விழிமாயம் காட்டி அமைந்திருந்த கொக்கு சவுக்கென கழுத்தைச் சொடுக்கி கவ்விச் செல்வதை அவன்  கண்டான்.

பதறியபடி “அன்னையே! அன்னையே!” என்று கூவி அழுது அதைத் தடுக்க பாய்ந்து சென்றான். சிறகுக் காற்று அவன்மேல் பட சிவந்த நீள்கால்களின் மடிந்த உகிர்களில் பற்றிய துள்ளும் மீனுடன் கொக்கு எழுந்து அப்பால் நின்றிருந்த சிறுமஞ்சணத்தி மரத்தின் கிளையில் அமர்ந்தது. நிகழ்ந்ததென்னவென்று அப்போதும் அறியாது நிலைத்துறைந்த மீனின் விழிகளை அவன் பார்த்தான். இறுதிச் சொல் உறைந்திருந்த திறந்த வாயின் பற்கள் புன்னகை எனத் தெரியக்கண்டு பதைத்து நின்றான்.

வால் சுழற்றித் துள்ளும் மீனின் கண்களைக் கொத்தியது கொக்கு. பின் அதை கவ்வித் தூக்கி கழுத்து வளைத்து நேராக்கி அலகுக்குள் செலுத்தி கிளையிறங்கும் நாகமென தலை நெளித்து விழுங்கியது. கொக்கின் கழுத்துக்குள் துடித்தபடி செல்லும் மீனை அவன் கண்டான். கைகால்கள் வலிப்புற மல்லாந்து விழுந்தான். வாயோரம் நுரை வழிய விழிகள் மேலெழுந்து செல்ல தரையில் கிடந்தவனை செவிலியர் ஓடிவந்து தூக்கி மடியிலிட்டு நீர் தெளித்து கன்னம் பற்றி உலுக்கினர்.

மேலே செருகிய விழி மீண்டதும் அள்ளி அன்னையைப்பற்றி அவள் முலைக்குவடுகளுக்குள் முகம் புதைத்து உடல் குலுங்க விசும்பி அழுதான். “என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்று செவிலியர் அவனை தேற்றினர். பிறர் அவனைத் தொடும் ஒவ்வொரு தொடுகைக்கும் உடல் அதிர்ந்து கூசி அட்டையென வளைந்தொடுங்கிக்கொண்டான். அள்ளி அவனை கொண்டுசென்று வெண்பட்டுச் சேக்கையில் படுக்க வைத்தனர். அவன் சித்தத்தை திருப்பும்பொருட்டு பொன் வளையல்கள் குலுங்க கைகொட்டி கொஞ்சினர். அவன் உடல் தொட்டு கூச்சமூட்டினர். அன்னை அவன் தலையை தன் மடியில் எடுத்துவைத்து புன்தலை மயிரை விரலால் அளைந்தபடி “ஒன்றுமில்லை மைந்தா, ஒன்றுமில்லை” என்றாள்.

அவன் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. இரு கைகளும் விரல் ஒன்றுடனொன்று ஏறிப்புரண்டு இறுகியிருந்தன. கழுத்து வலிபட தூக்கில் தொங்குபவன் போன்று அவன் கால்கள் இழுபட்டிருந்தன. ஏழு நாட்கள் ஒளியை அஞ்சி இருளுக்குள்ளேயே கிடந்தான். சிற்றறையின் கதவு சற்றே திறந்து செவிலி உள்ளே வரும் ஒளி விழிபட்டபோதே அலறியபடி எழுந்து இருண்ட மூலைக்கு ஓடி ஒடுங்கிக்கொண்டான். அறியாத எவரைக் கண்டாலும் அஞ்சி கண்களை மூடிக்கொண்டு மெத்தையில் உட்புறமாகக் கவிழ்ந்து புதைய முயன்றான். “அன்னையே அன்னையே அன்னையே” என்ற ஒரு சொல்லன்றி எதுவும் அவன் நாவில் எழவில்லை.

அரண்மனை மருத்துவர்கள் அவனை நோக்கியபின் “எதைக் கண்டோ அஞ்சினார் இளவரசர்” என்றனர். நிமித்திகர் அவன் நாளும் கோளும் நோக்கியபின் “அவர் முன் ஏதோ இருட்தெய்வம் எழுந்து முழுதுரு காட்டியது, அரசி” என்றனர். கவடி நிரத்தி சோழி பரப்பி பன்னிருகளக் கணக்குகள் இட்டு மீண்டும் மீண்டும் கலைத்து நோக்கியும் அத்தெய்வம் ஏதென்று அறியக்கூடவில்லை. இருட்தெய்வங்கள் எழுந்தால் பன்னிருகளத்தின் நான்கு முனையிலும் வைத்த அகல்சுடர்கள் அணையுமென்றும் தொட்டுவைத்த மஞ்சள் பொட்டுகள் குருதிச் சிவப்பு கொள்ளுமென்றும் நூல்கள் கூறின.

ஆனால் மங்கலத்தெய்வம் எழுந்ததுபோல சுடர் புகையற்று அசைவிழந்து நின்றது. மஞ்சள் பொன்னொளி கொண்டது.  அஞ்சி நடுங்கி உடல் வலிப்புற்று சேக்கையில் கிடந்த மைந்தனை நான்கு சேடியர் தூக்கிக்கொண்டு வந்து பன்னிருகளம் முன் இடப்பட்ட மான்தோல் மஞ்சத்தில் அமர்த்துகையில்  அவர்கள் அறிந்திராத இன்மணமும் எழுந்தது. “களத்தில் எழுந்துள்ளது நற்தெய்வமே” என்றார் நிமித்திகர். ஆனால் பற்கள் கிட்டிக்க, நீல நரம்புகள் சென்னியில் புடைத்து கழுத்தில் இறங்கி தோள்பரவி மணிக்கட்டில் பின்னி கைவெள்ளையில் தெளிய, கண்கள் சுழன்று மேலேற, உடல் துள்ளி விழ அப்பெருந்துயரம் அச்சிற்றுடலில் ஏன் எழுகிறது என அவர்களுக்கு புரியவில்லை.

அந்நாளில் அங்கு வந்த மாமுனிவராகிய துர்வாசரின் காலடியைத் தொட்டு சென்னிசூடி அன்னை கேட்டாள் “அருளுரையுங்கள் முனிவரே, மைந்தனை ஆட்கொண்ட அத்தெய்வம்தான் எது?” அவர் அன்னையின் விழிநீர் கண்டு உளம் இளகினார். “நன்று! நான் நோக்கி உரைக்கிறேன்” என்றபடி மைந்தனை வைத்த இருளறைக்குச் சென்றார். துயர்கொண்ட முகத்துடன் அன்னையும் தந்தையும் உடன் வந்தனர். “மைந்தன் மீண்டெழுவானா, முனிவரே? எங்கள் குல நிமித்திகரும் மருத்துவரும் பூசகரும் அவன் எஞ்சுவது அரிது என்கிறார்கள்” என்றார் அவன் தந்தை ஹிரண்யபாகு.

“இவன் விண்ணாளும் தெய்வமரபில் புதன் மைந்தனாக இளையின் கருவில் பிறந்தவன் என்றார்கள் நிமித்திகர். இவன் பிறந்ததுமே இனி இப்புவியாளும் அரசகுலமெலாம் இவன் குருதியில் பிறக்குமென்று உரைத்தனர் வருங்காலம் உய்த்தறிந்த ஏழு தொல் நிமித்திகர். வாள் வலி கொண்டு புவி வென்று முடிசூடி அமரும் மாவீரன் என்று இவனை எண்ணினேன். மானுடரைக் கட்டி நிறுத்தும் அச்சமும் ஐயமும் அறத்தயக்கமும் முற்றிலும் இல்லாத உளம்கொண்டவன் என்று கருதினேன். இவனோ கருகி உதிர்ந்த மலர்போல் இருக்கிறான்” என்று அவன் தந்தை சொன்னார்.

அன்னை விம்மியபடி “என் மைந்தன் நாடாளவேண்டியதில்லை. அரசக்கொடிவழிகள் இவனில் பிறந்தெழவும் வேண்டியதில்லை. என் மடி நிறைத்து பிறந்து முலையுண்டு வளர்ந்த என் மைந்தன் நான் வாழும் காலம் வரை கண் நிறைய என் முன் திகழ்ந்தால் மட்டும் போதும். அருள் புரிக, தவத்தோரே” என்றாள்.

மைந்தன் கிடந்த சிற்றறையின் வாயிலில் நின்றிருந்த சேடி தலைவணங்கி “துயில்கிறார்” என்று மென்குரலில் சொன்னாள். நன்று என தலையசைத்தபின் கையசைவால் அன்னையையும் தந்தையையும் வெளியே நிற்கச்செய்து துர்வாசர் உள்ளே நுழைந்தார். காலடி ஓசையின்றி அணுகி இளமைந்தனின் முகம் நோக்கி அமர்ந்து திரும்பி அவர் விழிகாட்ட சேடி கதவை மூடினாள். அறைக்குள் இருள் நிறைந்தது. கதவின் கீழிடுக்கு வழியாக தரையில் விழுந்த வாள் என மின்னிய ஒளியில் மெல்ல அறையிலுள்ள அனைத்தும் துலங்கின. மைந்தனின் நெற்றிப்பொட்டில் கைவைத்து தன் உளம் குவித்தார் துர்வாசர்.

கனவுக்குள் அவன் அவரைக் கண்டான். அவர் கை பற்றி உலுக்கி கண்ணீருடன் “சொல்க, சொல்க முனிவரே, இது ஏன் இவ்வண்ணம் நிகழ்ந்தது? இங்கு ஓருயிருக்கு பிறிதுயிருடன் என்ன பகை? ஒன்று பிறிதை அழிப்பதில் எழும் அப்பேருவகையின் பொருள்தான் என்ன? மீனெனத் துடிதுடிக்கையில் என் உள்ளத்தின் ஒரு பாதி கொக்கென சுவையறிந்தது ஏன்?” என்றான்.

“கொல்லுதலும் கொலையுறுதலும் இங்கு ஒழியுமொரு கணமில்லை. அவ்விரு செயல்களின் சரடுகளால் ஊடுபாவென நெய்யப்பட்டுள்ளது இப்புடவி” என்றார் துர்வாசர். அக்கொக்கை சேற்றுச்சுனை ஒன்றின் கரையில் முதலை ஒன்று பாய்ந்து கவ்வி  சிறகு படபடக்க, நீரில் அலைகொந்தளிக்க, உள்ளிழுத்து மறையும்  காட்சியை அவனுக்கு காட்டினார். வீறிட்டலறியபடி அவரை அள்ளிப்பற்றி கைகால்களால் இறுக்கிக்கொண்டு அவர் தொடையில் முகம் புதைத்து கூவியழுதான்.

“அந்த முதலையும் உண்ணப்படும். அச்சேற்றில் அதை உண்ணும் பல்லாயிரம் சிறுபுழுக்களின் மூதாதையர் பிறந்துவிட்டனர். இவையனைத்தும் ஒரு நிலையில் உள்ளமும் அறிவும் ஆழமும் கொண்ட உயிர்க்குலங்கள்.  பிறிதொரு முறையில் அன்னத்தை உண்டு அன்னமென்றாகும் வெறும் பருப்பொருட்கள். நிகர் நிலையொன்றுண்டு. அதில் நின்றிருக்க மட்டுமே நம்மால் இயலும்” என்றார் துர்வாசர்.

“சொல்க, நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “நானறிந்ததெல்லாம் நாம் நம்மை ஆள்வதைப்பற்றி மட்டுமே. நம் கைகளால் கொலை செய்யாதிருப்பது. நம் உள்ளத்தால் அறம் மீறாதிருப்பது. இளையோனே, நமது விழைவுகள் முறை மீறாதிருக்கட்டும். நமது கனவுகளும் கரைகண்டு அமைவதாகுக! மானுடர் இப்புவியில் ஆற்றுவதற்கு பிறிதொன்றுமில்லை.” அவன் பெருமூச்சுடன் “ஆம். ஆனால்…” என்றான். “ஆமென்பது உன் உறுதி, அதை கொள்க! ஆனால் என்பது ஒரு வினா. இறுதிநீர் அடிநாவில் குளிரும் வரை அது தொடர்க! அவ்வாறே ஆகுக!”

அவன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான். பின்னர் “ஆம்” என்றான். “இளையோனே, நீ என்றும் துலாமுள் என அறத்தட்டுகள் நடுவே நிற்கப்போகிறவன். ஆணும் பெண்ணும் கருச்சுமந்து பெற்றனர் உன்னை. நீ அறியாத ஒன்றும் இங்கு இருக்கப்போவதில்லை” என்று உரைத்தபின் எழுந்து கதவைத் திறந்து வெளிவந்த துர்வாசர் சேடியரிடம் “துயிலட்டும். நாளை மீண்டுவிடுவார்” என்றார்.

மறுநாள் முதற்புலரியில் அனைவரும் அயர்ந்து துயில் கொண்டிருக்கையில் எழுந்து அவன் கதவைத் திறந்து வெளியே சென்றான். குளிரிலும் நோய்மெலிவிலும் உடல்நடுங்க மெல்ல கால்வைத்து நடந்தான். ஒவ்வொரு நாளும் விழித்திருக்கும்போதெல்லாம் நினைவிலும் கனவிலும் அவன் கண்டு அஞ்சிய அணிச்சுனை அருகே சென்று நின்றான். அதில் புதிய மீன்கள் வெள்ளித் தெறிப்பென எழுந்து விழுந்தன. புதிய மலர்கள் மொக்கவிழ்ந்து வண்ணம் காட்டின. புதிய வெண்கொக்குகள் இரண்டு வந்து அஞ்சனமரத்தின் கிளைகளில் அமர்ந்தன.

MAMALAR_EPI_16

கைகூப்பியபடி கிழக்கே தெரிந்த முதற்கதிரை பார்த்து நின்றான். பொன்னொளி எழுந்து வந்து அவன் உடலை குளிப்பாட்டியபோது கைகளைக்கூப்பி அவன் கால் மடித்து அமர்ந்திருந்தான். மஞ்சத்தறையில் அவனைக்காணாத சேடியர் தேடிப்பதைத்து ஓடி அலைகையில் சேடி ஒருத்தி அவனைக் கண்டு திகைத்து ஓசையின்றி கைகாட்டினாள். அரண்மனை மகளிரும் காவலரும் பின் அரசனும் அரசியும் வந்து அவனைச் சுற்றி நின்று நோக்கினர். யாரோ ஒரு முதுகாவலர் “எந்தையே!” என்று ஒலியெழுப்பி கைகூப்ப அனைவரும் அவனை வணங்கினர். தந்தையும் தாயும் கைகூப்பினர். பேரறத்தான் என்று அவன் அதன்பின் அழைக்கப்பட்டான்.

பின் எப்போதும் அவன் ஊன் உண்டதில்லை. படைக்கலம் பயின்று தேர்ந்தான். வாள் கொண்டு வெல்லவும் வில் கொண்டு விழி எல்லைவரை தொடவும் தேர்ந்தான். நிகரற்ற வீரன் என்று அவன் குலம் அவனை கொண்டாடியது. ஆனால் ஒரு களத்திலும் ஒருபோதும் பகைவனை அவன் கொல்வதில்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர். கொல்லாநெறி நின்றதால் அவனை பேரளியின் மைந்தன் என்று வணங்கினர். தென்திசை முதல்வனின் வடிவில் கல்லால மரத்தின் கீழ் கால் மடித்தமர்ந்திருக்கும் தோற்றத்தில் அவனுக்கு சிலையெழுப்பி தங்கள் தென்திசை சிற்றாலயங்களில் அமர்த்தி வழிபட்டனர்.