கிராதம் - 66

[ 7 ]

விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே எனத் தெரிந்த பாதையில் ஒற்றை நிரையென உடல் கண்ணாக்கி, தங்கள் காலடியோசையையே கேட்டுக்கொண்டு நடந்தனர். மலைப்பாறைகளில் ஏறி அனல்மூட்டி அந்தி உறங்கினர். விடிவெள்ளி கண்டதுமே எழுந்து சுனைகளில் நீராடி முந்தைய நாள் எச்சம் வைத்திருந்த சுட்ட கிழங்குகளையும் காய்களையும் உண்டு நடக்கலாயினர். எங்கிருக்கிறோம் என்று தெரியாததனால் அன்னையின் ஆலயம் அணுகிவருகிறதா என்றே அறியமுடியாமலிருந்தது.

ஓங்கிய இலுப்பை மரத்தின் அடித்தடியின் பட்டை கீறி எழுதப்பட்டிருந்த குழூஉக் குறிகளை விரல்தொட்டு வாசித்த சண்டன் “அருகில்தான் அன்னையின் ஆலயம்” என்றான். அச்சொல் அவர்களை முதலில் தளரச்செய்தது. பைலன் மூச்சிரைத்தபடி ஒரு வேர்க்குவையில் அமர்ந்தான். பிறரும் அவன் அமரக்கண்டதும் கால் தளர்ந்தனர். சண்டன் “அருகில்தான்… செல்வோம்” என்றான். “ஆலயங்களை காடுகளுக்குள் வைப்பதேன் என்று தெரியவில்லை” என ஜைமினி முணுமுணுத்தான். “மானுடர் காடுகளுக்குள் தங்கள் தெய்வங்களை விட்டுவிட்டு நிரைநிலங்களுக்கு இறங்கிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்” என்றான் சண்டன்.

மலை என முகடு எழுந்து ஓர் ஆலயம் பச்சை இலைப்படப்பிற்கு அப்பால் தெரியும் என்று பைலன் எதிர்பார்த்தான். எனவே சண்டன் கை சுட்டி “அதோ!” என்று காட்டியபோது அவன் விழிகள் சற்று அண்ணாந்தே அலைந்தன. “அங்கு” என்று மீண்டும் சண்டன் சொன்னான். விழிதடுமாற “ஆலயமா?” என்று பைலன் கேட்டான். அதற்குள் ஜைமினி அதை பார்த்துவிட்டிருந்தான். “சிறிய ஆலயம்… இலைகளுக்குள் அதோ” என்றான்.  ஒழுங்கற்ற பாறைப்பாளங்களை நட்டு சுவரென்றாக்கி அதன் மேலே பாறைகளை அடுக்கி எழுப்பப்பட்ட அவ்வாலயம் ஓர் ஆள் உயரத்திற்கே அமைந்திருந்தது. அதன்மேல் காட்டுமரங்களின் இலைகளும் அவற்றின் நிழல்களும் பொதிந்திருந்தன.

அங்கு மானுடர் வந்து நெடுங்காலம் ஆகிவிட்டதனால் அதன் மேல் குற்றிலைக் கொடிகளும் கூம்பிலைப் பசலைகளும் பதுப்பு பச்சைப்பாசியும் படர்ந்து மூடியிருக்க பச்சைக்குள் ஒரு பச்சை வடிவெனத் தெரிந்தது. “பசுந்தவளை இலையடர்வுக்குள் இருப்பதுபோல” என அக்கணமே ஜைமினி ஒப்புமை சொன்னான். அதன் நின்ற நீள்சதுர வடிவ வாயில் கரிய திரைத் தொங்கலெனத் தெரிந்ததைக் கொண்டே அது அங்கிருப்பதை முதலில் விழி அறிந்தது. “மிகத்தொன்மையான ஆலயம்” என்றான் சண்டன். “மானுடக் கைகள் உளியேந்தத் தொடங்குவதற்கு முன்பு  கட்டப்பட்டது. மானுட மொழி இலக்கணம் கொள்வதற்கு முன்னரே வகுக்கப்பட்ட கதைகொண்டது.”

அவர்கள் உளக்கிளர்ச்சியுடன் அவ்வாலயத்தை நோக்கி நடக்க சுமந்து “இன்றும் இமயமலைச்சாரலில் சில பழங்குடிகள் இதைப்போன்ற ஆலயத்தைக் கட்டுவதை பார்த்திருக்கிறேன். இயல்பாகவே பிளவுபட்டிருக்கும் பாறைப்படிவங்களை கண்டடைகிறார்கள். அப்பிளவுகளுக்கு நடுவே உலர்ந்த மர ஆப்புகளை அடித்து அதன் மேல் நீரூற்றி ஊறவைக்கிறார்கள். ஆப்பு ஊறி உப்பும்போது மிக மெல்ல பாறை பிளந்து தனித்தெழும். நடுவே மரநெம்புகோல்களை செலுத்தி நெம்பி மெல்ல பிளந்தெடுக்கிறார்கள். பாறைத்தோல் உரிப்பதுபோலிருக்கும்.”

சண்டன் “கல்லில் உரித்த நார்” என்றான். “ஆம்” என்றான் சுமந்து. “உருளை மரங்களில் அப்பலகைகளை ஏற்றிக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். கொடிகள் கட்டி பலநூறுபேர் நின்று எறும்புக்கூட்டம் இரை தூக்குவதுபோல எளிதாக எடுத்து அடுக்குகிறார்கள்.”  அக்கோயிலை மேலும் அணுகி நோக்கியபடி “ஆனால் இத்தனை காலம் இச்சிற்றாலயம் இங்கிருப்பது வியப்புதான்” என்றான் வைசம்பாயனன். சண்டன் “நின்றிருக்கும் கற்பாளங்கள் ஒவ்வொன்றும் இதே அளவுக்கு மண்ணுக்குள்ளும் சென்றிருக்கும். தொல்குடிகள் எதிர்காலம் என்பதை எட்டாமை என்று எண்ணப் பயின்றவர்கள். அவர்களின் பெரும் நடுகற்கள் நினைப்புக்கு அப்பாலுள்ள தொன்மை முதல் இங்கு நின்றிருக்கின்றன. அவை இம்மலைப்பாறைகளைப்போல காலம் இறந்தவை” என்றான் சண்டன்.

அவர்கள் அச்சிற்றாலயத்தின் முகப்பை அடைந்தனர். பல மாதங்களுக்கு முன்பு அங்கு வந்தவர்கள் அதன் முற்றத்தை அரைவட்டமாக கொடியும் செடியும் வெட்டி சீரமைத்திருந்தனர். அதற்குப்பின் எழுந்த புதர்களும் செடிகளும் மண்டி பச்சை இலைகளால் ஆன ஒரு முற்றம் அங்கு அமைந்திருந்தது. அதைக் கிழித்து கடந்து அவர்கள் ஆலய முகப்பை அடைந்தனர். அவர்களின் காலடிகேட்டு சிறுதவளைகள் எம்பிக்குதித்தன. ஒரு பச்சைப்பாம்பு உயிர்கொண்ட இலைத்தண்டென தலைமொட்டுடன் சுருண்டு வளைந்து நாநீட்டியது. தலைக்குமேல் ஆள்காட்டிப்பறவை கூவிக்கொண்டே சென்றது. அவர்களை அது புதருக்குள் இட்ட முட்டையிலிருந்து விலக்கும்பொருட்டு கூவியபடியே  நிலத்தில் விழுந்து சிறகடித்துப்புரண்டு அவர்களின் நோக்கை தன்மேல் வாங்கிக்கொண்டு எழுந்து பறந்து அப்பால் சென்றது.

ஆலயத்தின் கருவறைக்குள் பெயர்த்தெடுத்த கருங்கல் பாளமொன்றின் மேல் ஆளுயர நிலைக்கல்லென சண்டகௌசிகையின் சிலை அமைந்திருந்தது. அதன் மேலும் பச்சைப் பாசி படிந்திருந்தமையால் அது ஒரு வெறும் கற்பாளம் என்றே தோன்றியது. அவர்கள் இருநிரையென கைகூப்பி பணிந்து நிற்க சண்டன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி அப்படியே முழந்தாளிட்டு விழுந்து கையும் தலையும் மார்பும் இடையும் காலும் நிலம் படிய அன்னையை வணங்கினான். “கரியவளே, மூத்தவளே, முழுத்தவளே, என்றும் இருப்பவளே, எங்கும் என்று ஆனவளே, என் சொல்லில் அமர்க! என் முழவில் ஒலி ஆகுக! என் எண்ணங்களில் ஒளியென்று நிறைக! என் உணர்வுகளில் அனலாகுக!” என்று வாழ்த்தினான். பின்பு சிற்றாலயத்தின் சிறு நடையைத் தொட்டு சென்னி சூடி உள்ளே நுழைந்தான்.

உள்ளே குவிந்திருந்த ஓநாயின் எச்சங்களையும் பாதி மட்கிய முடிகளையும்  உண்டு எஞ்சிய எலும்புகளையும் கையால் அள்ளி வெளியே போட்டான். பின்னர் அருகிருந்த எண்ணை வற்றி மையென எஞ்சிய தேங்காயோட்டு  அகல் ஒன்றை எடுத்து அதைக்கொண்டு அன்னையின் பாறை வடிவை மெல்ல சுரண்டினான்.  பசும்பரப்பாக படர்ந்துமூடியிருந்த  பாசி அகன்றபோது மெல்லிய பதிவோவியச் சிற்பமாக அன்னையின் உருவம் விழிமுன் எழுந்தது. பைலன் அருகே குனிந்து நோக்கி “சிற்பமா? ஓவியமா?” என்றான். “உலோகங்கள் பழகாத காலத்தில் வரையப்பட்டது இது. கல்லில் பிறிதொரு கல்லால் அடித்து உருவாக்கப்பட்ட பள்ளத்தால் ஆன சிற்பம்” என்றான் சண்டன். “இதை பதிக்கை என்பது தென்மொழி வழக்கம்.”

விரல் தொட்டு “இது அன்னையின் முகம். இவை பதினாறு  தடக்கைகள். இவை சிலம்பணிந்த கால்கள்” என்று அவன் சொன்ன அக்கணமே அனைவரும் அன்னையின் முழு உருவை பார்த்துவிட்டனர். கணம் கணமென அது தெளிவும் பொலிவும் கொண்டு எழுந்தது. கல் மறைந்து அங்கே அன்னை நின்றிருந்தாள். “வியப்புதான்” என்றான் சுமந்து. “இப்போது என் முன் சண்டகௌசிகை உடல் கொண்டு நின்றிருப்பதாகவே தோன்றுகிறது.” சண்டன் புன்னகைத்து “சிற்பங்கள் அனைத்தும் மானுடக் கற்பனையின் கல்லிலேயே செதுக்கி எடுக்கப்படுகின்றன, அந்தணரே” என்றான். சற்றுநேரத்தில் அகவை முதிர்ந்த அன்னை ஒருத்தி அவர்கள்முன் விழிகூர்ந்து நோக்கி நின்றிருப்பதாகவே உணர்ந்தனர்.

“அன்னையை நீராட்டி மலர் சாத்தி படையலிட்டு பூசெய்கை முடித்து கிளம்புவோம்” என்றான் சண்டன். ஜைமினி தரையை நோக்கி “வலப்பக்கமாக சரிந்திறங்குகிறது நிலம். அங்கொரு ஓடை இருக்க வாய்ப்புண்டு” என்றான். பின்னர் கண்களை மூடி தலையை மெல்லத் திருப்பி “ஆம் அங்கு நீரொலியும் எழுகிறது” என்றான். “இருவர் சென்று நீருடன் வருக! இருவர் புதுமலரும் படையலுக்கு உணவும் கொண்டு மீள்க!” என்றான் சண்டன். அவர்கள் பிரிந்து காட்டிற்குள் சென்றனர்.

சண்டன் அன்னையின் உருவை வெளியே இருந்த அரப்புல்லை பறித்து உரசி நன்கு துலக்கினான். வெளிவந்து அங்கு நின்றிருந்த ஈச்ச மரக்கன்றொன்றின் இலைகளைப் பற்றி வெட்டி துடைப்பமாக்கி ஆலயத்தின் உட்பகுதியை தூய்மை செய்தான்.  ஜைமினியும் சுமந்துவும் கோட்டிய கமுகுப்பாளைத் தொன்னையில் நீருடன் வந்தனர். அதை அன்னை மேல் விட்டு முழுக்காட்டி கழுவினர். ஏழுமுறை அவர்கள் நீர் கொண்டு வந்தனர். இறுதி தொன்னை நீரை அன்னை முன் வைத்தார்கள்.

வலைக்குடலையில் காட்டுப்பூக்களும் பிடுங்கிய புதுக்கிழங்குகளுமாக வைசம்பாயனனும் பைலனும் வந்தனர். தன் தோல்பைக்குள் இருந்து அரணிக்கட்டையை எடுத்து உரசி நெருப்பூட்டி காய்ந்த புல்லை எரித்து சிறு அனல் குழிக்குள் குவித்த விறகை எழுப்பினான் சண்டன். அதில் கிழங்குகளைச் சுட்டு அவை வெடித்து வெண்நகை கொண்டபோது எடுத்து கையால் உடைத்து புது வாழைத்தளிர் நாக்கில் படைத்து அன்னை முன் வைத்தான். வைசம்பாயனனும் பைலனும் மலர்களைத் தொடுத்து மாலையாக்கினர். செவ்வரளியும் செங்காந்தளும் செந்தெற்றியும் செண்பகமும் கலந்து அமைந்த மாலையை  அன்னையின் கழுத்தில் மாட்டினான் சண்டன்.

பதினாறு பெருங்கைகளில் படைக்கலங்களும், பன்றித்தேற்றையும் தெறிவிழிகளும் கொண்டிருந்த அன்னை அச்செம்மையால் ஒளி கொண்டாள். எரியும் அனற்களத்திலிருந்து ஒரு விறகை எடுத்து அச்சுடரை மும்முறை சுழற்றி மும்முறை எதிர் சுழற்றி அன்னைக்கு அனலாட்டு காட்டினான் சண்டன். பின்னர் வெளிவந்து இடக்கால் மடித்து அமர்ந்து தன் உடுக்கை எடுத்து மீட்டி அன்னையின் ஆயிரம் பெயர்கள் அமைந்த தொல்பாடலைப் பாடினான். ஒவ்வொரு சொல்லாக அவன் சொல்லச் சொல்ல அச்சொற்கள் உதிர்ந்து அன்னை அவள் மட்டுமே என அங்கு நிற்பதுபோல பைலனுக்குத் தோன்றியது.

பூசனை முடித்து அவர்கள் முற்றத்தில் வளைந்தமர்ந்து அன்னைக்குப் படைத்த கிழங்கை பகிர்ந்துண்டு அவள் அடிகளில் படைத்த நீரை அருந்தினர்.  ”அன்னையை இக்குலங்கள் கரிய மண்ணின் வடிவமென்று வழிபடுகின்றனர்” என்றான் சண்டன். “ஆடிப்பட்டம் அமைந்ததும் வயலொருக்கி வைத்துவிட்டு  விதைகளுடன் இங்கு வருவார்கள். இந்நிலத்தில்  இருந்து கரிய மண்ணை அள்ளி ஒரு தொன்னையில் நிரப்பி அதில் விதைகளிட்டு நீரூற்றி  அன்னை முன் வைப்பார்கள். மூன்று நாட்கள் இங்கே சுற்றிலும் குடில் அமைத்து தங்குவார்கள். அவ்விதைகள் முளைத்து ஈரிலை விட்டு எழுந்ததும் அன்னையை வணங்கி அவள் அருளிய கொடை என அதை கொண்டுசென்று தாங்கள் உழுது மரமோட்டி செம்மைப்படுத்தி வைத்திருக்கும் வயலில் நடுவார்கள்” என்றான் சண்டன்.

சண்டன் “எருவும் தழையுமிட்டு மும்முறை உழுது நீர்த்தேக்கிவிட்டு வந்த வயல் அப்போது செந்நிறத் தீற்றலென பாசி படிந்து இனிய ஊன் மணம் கொண்டு காத்திருக்கும். வயல் பூப்பது என்று அதை சொல்வார்கள்.  அது அன்னையின் கருக்குருதி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அன்னையின் அருள்கொண்ட செடிகள் ஒன்று நூறு மேனியென பெருகும் என்பது குலநம்பிக்கை. என்று இத்தெய்வம் இங்கமர்ந்ததென்று எவருமறியார். காட்டுக்குள் அன்னை அமர்ந்திருப்பது வரை ஊர்களில் கழனிகளில் அமுது விளையுமென்று தொல்பாடல்கள் சொல்கின்றன” என்றான்.

அன்னையின் அருளுணவை உண்டு ஒழிந்த இலையுடன் எழுந்த ஜைமினி இயல்பாகத் திரும்பி கருவறையை நோக்கிய உடனே வியப்பொலி எழுப்பி உடலதிர்ந்தான். “என்ன?” என்றான் சண்டன். “ஒருகணம் அன்னையின் கண்களை என் கண்கள் சந்தித்தன” என்றான் ஜைமினி. “ஆம், நான் கருவறை நுழைகையிலேயே அவளுடன் விழிதொட்டேன்” என்றான் சண்டன். அவர்களை மாறி மாறி நோக்கிய சுமந்து திரும்பி கருவறையை நோக்கியபின் “நோக்குந்தோறும் உயிர் கொண்டு எழுகிறாள்” என்றான். “ஆனால் நம் சித்தம் இது கல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. சித்தம் கரையும் ஓர் அறியாக்கணத்தில் கல்லை திரையெனச்சூடி உள் அமர்ந்திருக்கும் அன்னை எழுந்து வந்துவிடுகிறாள்” என்றான் சண்டன்.

KIRATHAM_EPI_66

வியப்புடன் அவர்கள் நால்வரும் கருவறையை நோக்கினர். “நோக்குகிறேன் எனும் உணர்வு வந்ததுமே அவள் கல்லுக்குள் சென்று நின்றுவிடுகிறாள்” என்றான் வைசம்பாயனன். “நாம் விழி விலக்கியதுமே அவள் எழுந்து நோக்கு கொள்கிறாள் போலும்” என்று சுமந்து சொன்னான். “செல்வோம்! இருளுக்குள் நாம் கௌசிகக்காட்டைவிட்டு விலகிச்சென்றுவிடவேண்டும்” என்றான் சண்டன். அவர்கள் கை கழுவி மீண்டு வந்து அன்னையின் காலடிகளை விழுந்து வணங்கி புறம்காட்டாது நடந்து விலகி மீண்டும் காட்டுப்பாதையை அடைந்தனர்.

ஜைமினி “சிற்பநூல் முறைப்படி பீடமென்பது இவ்வுலகம். அதன் மேல் விண்ணுருக்கொண்டு அமர்ந்திருக்கின்றன தெய்வங்கள். யோகநூலின் கூற்றுக்களின்படி அப்பீடம் புறமும் அகமும் ஆன ஜாக்ரத். அதில் துரியாதீதமாக எழுந்தவையே தெய்வங்கள்” என்றான். “சண்டரே, தெய்வங்களை அப்பீடத்தில் நிலை நிறுத்துவது வேதம். இவ்வன்னையை பீடத்தில் நிலை நிறுத்தும் வேதம் எது?” சண்டன் “வேதமொன்று உள்ளது, இல்லையேல் அன்னை இங்கு அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. எங்கோ அது நாளும் உரைக்கப்படுகிறது. எவ்வனலிலோ அவியளிக்கவும் படுகிறது. அது நாமறியாத வேதம்” என்றான்.

“அந்தணர்களே, இப்புவி நம் நினைப்புக்கும் எட்டாது விரியும் வெளி. இதில் நாம் நடந்து நடந்து அறிவது பாரதவர்ஷம் என்னும் நிலம் ஒன்றே. நூறுநூறு நிலவர்ஷங்கள் அடங்கியது இப்புவி. பல்லாயிரம்கோடி புவிகள் அடங்கியது வான்வெளி. வானென்று சூழ்ந்தமைபவையே தெய்வங்கள். ஒற்றை ஒரு கணத்தில் ஓராயிரம்கோடிகோடி நாவுகள் வேதமோதி அன்னையை வாழ்த்துகின்றன என்று ஒரு கவிதைவரியுண்டு. பெருமழையின் ஒருதுளியே வேதமென்று நம் எளிய மொழியில் சிக்கியது. மொழி பலவாகி விரிந்துள்ள இங்கெங்கும் பரவி பெய்து கொண்டிருக்கிறது வேத மாமழை. ஒருவிதையையும் அது முளைக்காமல் எஞ்சவிடுவதில்லை என்கின்றனர் கவிஞர்.”

ஜைமினி தன் உளச்சொற்களில் உழன்றபடி தலைகுனிந்து நடந்தான். “இரண்டு வேதங்கள்” என்று அவன் தனக்குள் என சொல்வதைக்கேட்டு சுமந்து “என்ன?” என்றான். “பொன்னுருக்கொண்ட ஹிரண்யம். மண்ணுருக்கொண்ட கிருஷ்ணம்” என்றான் ஜைமினி. “ஒவ்வொரு வேதத்திற்கும் கரிய கிளையொன்று உள்ளது. அதை ஏன் கிருஷ்ணசாகை என்கின்றனர் என இப்போது அறிகிறேன்.” அச்சொற்களை ஒவ்வொருவரும் தங்கள் எண்ணத்தில் விரித்துவிரித்து பொருள் கொண்டபடி நடந்தனர். அவர்களின் காலடியோசைகள் அவ்வெண்ணங்களுக்கு தாளம் அமைத்தன.

சண்டன் அக்காட்டை விழிகளால் துழாவியபடி தனக்குள் இயல்பாக எழுந்த வரியொன்றை முனகியபடி கடந்தான். அது என்ன வரி என்று பைலன் செவிகூர்ந்தான்.

“சர்வ கல்விதமேவாகம் *நான்யாஸ்தி சனாதனம்****!***

அவன் அதை உணர்ந்ததை விழிதிருப்பி நோக்கியதும் சண்டன் புன்னகைத்தான். “தொன்மையானது என பிறிதொன்றில்லை” என்றான் பைலன். மேலும் விரிந்த புன்னகையுடன் “அதுவே  இவையனைத்தும்” என்றான் சண்டன்.

[ 8 ]

அவர்கள் காட்டின் விளிம்பைக் கடந்து விரிந்த மேய்ச்சல்வெளியொன்றை அடைந்தனர். தொலைவிலேயே கன்றுகளின் கழுத்துமணியோசையை பைலன் கேட்டான். “இனிய ஓசை” என்றான். “காட்டுக்குள் வரும் முதல் ஊரின் ஒலி கழுத்துமணிதான்” என்று சண்டன் சொன்னான். “வேறெந்த ஒலியும் காட்டிலும் எழ வாய்ப்புள்ளது. உலோகமணியை ஊரார் மட்டுமே எழுப்பமுடியும்.” நெருங்கநெருங்க அந்த ஓசை பெருகிவந்தது. “உலோகமணிகளின் மழை” என்றான் ஜைமினி. “இவர் எப்போதுமே காவியங்களுக்குள்தான் இருக்கிறார். காட்டையும் ஊரையும் அங்கே இழுத்துவைத்துக்கொள்கிறார்” என்றான் சுமந்து.

நூற்றுக்கணக்கான மாடுகள் அந்தியொளியில் நிழல்நீள புல்வெளியில் நின்று மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் வால்கள் சுழல மொய்த்த பூச்சிகள் செவ்வொளியில் சிறகுசுடரப் பறந்தன. ஜைமினி ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கிக்கொண்டன. “சொல்லுங்கள், அந்தணரே! எவர் என்ன சொன்னாலும் குயில் பாடாமலிருக்கிறதா?” என்றான் சண்டன். “இது பகடி என்றாலும் உண்மை. நான் எண்ணுவதைச் சொல்வதனூடாக இருக்குமிடத்திலிருந்து ஒரு கணுவேனும் மேலேறுகிறேன்” என்றான் ஜைமினி. “என்ன எண்ணினீர்?” என்றான் பைலன். “அனலை வீசும்போது பொறிகிளம்புவதுபோல” என்றான் ஜைமினி. “நன்று” என்றான் சண்டன்.

அவர்கள் புல்வெளியில் காலெடுத்துவைத்தபோது அப்பால் ஒரு சிறிய ஒற்றைக்காளை மாட்டுவண்டி செல்வதைக் கண்டனர். “வணிகர்களா?” என்றான் ஜைமினி. “இல்லை, அவர்களும் சூதர்களே. பக்கத்தண்டில் முழவும் யாழும் மாட்டப்பட்டுள்ளது. உள்ளே விறலி அமர்ந்திருக்கிறாள்” என்றான் சண்டன்.. வண்டியின் நுகமுகப்பில் அமர்ந்திருந்தவன் தெரிந்தான். “நம்மைப்போலவே கிராத சூதன், நன்று” என்று சண்டன் சொன்னான். “எப்படி தெரியும்?” என்றான் பைலன். “குழலைக் கட்டி எலும்புகொண்டு கோத்திருக்கிறான். மானுட எலும்பு.” அவர்கள் உடனே அதைக் கண்டனர். “ஆம், முழங்கை” என்றான் வைசம்பாயனன்.

புல்மேல் வண்டி மெதுவாகவே சென்றது. அவர்கள் வண்டியை அணுகினார்கள். உள்ளிருந்து ஒரு கன்னங்கரிய உடல்கொண்ட சிறுவன் எட்டிப்பார்த்தான். மூன்றுவயதான குழந்தை. வலப்பக்கம் சாய்ந்த சிறிய குடுமியும் காதில் கல்லாலான கடுக்கனும் அணிந்திருந்தான். பால்பற்கள் தெரிய  ”தந்தையே, ஒரு பாசுபத சூதர்” என்றான். “பேசாமலிரு, யார்?” என்று அவன் அன்னை அவனை பிடித்தாள். “என்ன?” என்றான் அவன் தந்தை. அவனைநோக்கி சண்டன் “பாசுபதன் என எப்படி அறிந்தாய்?” என வியப்புடன் கேட்டான். “உங்கள் கையின் பாம்புவிரலில் நாகக்கணையாழி உள்ளதே” என்றபடி சிறுவன் குதித்து கீழே இறங்கினான். “உக்ரா, என்ன செய்கிறாய்?” என்றாள் அவன் அன்னை. “அவனைப்பிடி, அறிவிலியே. அடிக்கொருதரம் வண்டியிலிருந்து குதிக்கிறான் மூடன்” என்று அவன் தந்தை சினந்தபடி கயிற்றை இழுத்து வண்டியை நிறுத்தினான்.

சிறுவன் கண்களை சுருக்கியபடி நால்வரையும் நோக்கி தனக்கே என கைசுட்டிக்கொண்டான். பின்னர் சண்டனிடம் “இவர்கள் அந்தணர்கள். இவர்களை நீங்கள் கொன்று உண்ணப்போகிறீர்களா?” என்று ஆர்வமாக கேட்டான். “ஆம், நான் தென்குமரி வரை செல்கிறேன். வழியில் உணவு இல்லாமலாகக்கூடாது அல்லவா? இவர்களில் எவரை முதலில் உண்ணலாம்?” என்றான் சண்டன். அவன் நால்வரையும் மாறி மாறி நோக்கியபின் வைசம்பாயனனை சுட்டிக்காட்டி “இவரை” என்றான். வெடித்துச்சிரித்து “ஏன்?” என்றான் சண்டன். ஜைமினியை சுட்டிக்காட்டி “இவர்தானே கொழுத்தவர்?” என்றான்.

சிறுவன் “ஆம், ஆனால் இவர் மட்டுமே உங்கள் மேல் ஐயம் கொண்டிருக்கிறார்” என்றான். சண்டன் வைசம்பாயனனை நோக்கிவிட்டு “ஆம், அதனால் அவரை உண்ணவேண்டுமா?” என்றான். “ஐயம் கொள்பவரின் ஐயத்தை உண்மையாக்குவதுதானே சிறந்தது?” என்றான் சிறுவன். சண்டன் அவன் தலையை வருடியபடி “இவன் கருவறைக்குள் இருந்தே மொழியுடன் எழுந்திருக்கிறான் போலும்” என்றான். “நான் கருவறைக்குள் இருக்கும்போது என் அன்னை காவியம் படித்தாள், அவளே சொன்னாள்” என்றான் சிறுவன்.

வண்டியோட்டிய சூதன் இறங்கி வந்து வணங்கி “பொறுத்தருள்க, சூதரே! இவன் என் ஒரேமைந்தன். இன்னொரு குழந்தை அவன் அன்னை வயிற்றில் இருக்கிறது. இவன் சற்று துடுக்குமிக்கவன். பல இடங்களில் எனக்கு அடிவாங்கி தந்திருக்கிறான்” என்றான். “உண்மையில் கூர்மபிருங்கத்தில் ஒரு அந்தணர் இல்லத்துக் காவலர்களிடம் வாங்கிய அடி இன்னும் என் உடலில் வலிக்கிறது. அங்கிருந்து நேராக இங்கே வந்தேன். அடுத்தவேளை உணவை இனிமேல்தான் தேடவேண்டும். தேள் நினைக்கும் முன்னரே கொடுக்கு சென்று கொட்டிவிடும் என்பார்கள். இவன் என் தேள்கொடுக்கு” என்றான். “கொடுக்கு இருப்பதனால்தானே அதை தேள் என்கிறோம்?” என்று சிறுவன் கேட்டான்.

“நாங்கள் அயலூர் சூதர். என் பெயர் சண்டன். இவர்கள் வைதிகர்குலத்து இளையோர்” என்றான் சண்டன். சூதன் கைகூப்பி “பொறுத்தருள்க! நான் முதலில் என்னைப்பற்றி சொல்லியிருக்கவேண்டும். தொல்சூதர் மரபான மாயூரத்தில் சகரன் மைந்தனாகப்பிறந்த என்பெயர் கிருதன். குலமுறையாகவே  மாவிரத நெறிகொண்டவன். வண்டிக்குள் இருப்பவள் என் மனையாள். மார்ஜாரகுலத்தவள். காட்டில் பிறந்துவளர்ந்தவள். காலகரின் மகளான  அவள் பெயர் சுதை” என்றான். “இவன் என் துணைவிக்கு மலாலோமகுலத்து முனிவரான லோமஹர்ஷணரில் பிறந்த மைந்தன். இவன் பிறந்தபோது பெருங்குரலெழுப்பியமையால் தந்தையால் உக்ரசிரவஸ் என்று பெயரிடப்பட்டான். உண்மையிலேயே இவன் தொண்டை மும்மடங்கு ஆற்றல்கொண்டது” என்றான்.

“சொல்லாற்றல் ஐந்து மடங்கு என நினைக்கிறேன்” என்றான் சண்டன். கிருதன் “உண்மையிலேயே இவனை எண்ணி நான் அஞ்சிக்கொண்டிருக்கிறேன், சண்டரே. ஏழுமாதங்களிலேயே நன்றாக பேசத்தொடங்கிவிட்டான். இரண்டுவயதுக்குள் ஆயிரம் பாடல்களை பாடம்கொண்டுவிட்டான். உலகநடைமுறையை அறியும்முன்னரே மொழியும்நூலும் கைவருவதன் அனைத்து இடர்களையும் அடைந்துகொண்டிருக்கிறான்” என்றான் கிருதன். “இவன் உலகமே அறிந்தோர் அறியாதோர் என இரண்டாகப் பிரிந்துவிட்டது. அறியாதோர் இழிந்தோர் என எண்ணுகிறான். இவ்வுலகில் அறியாதோரை அண்டியே அறிந்தோர் வாழவேண்டுமென்று இன்னமும் புரிந்துகொள்ளவில்லை” என்றான்.

“நீங்கள் அறிந்தோர்” என்று உக்ரன் கைசுட்டி சொன்னான். “எப்படி தெரியும்?” என்று பைலன் சிரித்துக்கொண்டே குனிந்து அவனிடம் கேட்டான். “அறிந்தோர் விழிகளில் ஒரு நகைப்பு உள்ளது. அறியாதோர் எவை கொண்டிருந்தாலும் எங்கிருந்தாலும் விழிகளில் உள்ளது ஒரு பதைப்பு மட்டுமே” என்றான் உக்ரன். ஜைமினி குனிந்து அவனைத் தூக்கி தன் தோளில் அமர்த்திக்கொண்டான். “எடையே இல்லாமலிருக்கிறான். ஒருவயதுக்குழந்தை அளவுக்கே உடல் உள்ளது” என்றான். சுதை எட்டிநோக்கி புன்னகைத்தபடி  “அவன் எதையுமே உண்பதில்லை. துயிலும் நேரம் தவிர்த்து பிறபொழுதெல்லாம் பேச்சுதான். பேசத்திறந்த வாய்க்குள் ஏமாற்றி உணவை ஊட்டவேண்டும். அதையும் துப்பிவிடுவான்” என்றாள்.

“அந்தணர்கள் சூதர்களை தூக்கலாமா?” என்று பைலன் கேட்டான். “இவன் கலைமகளின் மைந்தன்” என்றான் ஜைமினி. “இல்லை நான் சுதையின் மைந்தன். என்னை சௌதி என்றே சொல்லவேண்டும்” என்றான் மேலிருந்தபடி உக்ரன். “இது சிற்றூர். ஆனால் மலையடிவாரம் என்பதனால் சூதர்கள் அடிக்கடி வருவதில்லை என நினைக்கிறேன். ஆகவே நமக்கு அளிக்க இவர்களிடம் பொருளும் உளமும் இருக்கக்கூடும்” என்றான். “ஆம், இன்னும் காடு எஞ்சியிருக்கும் ஊர்” என்றான் சண்டன். அவர்கள் ஊரை நோக்கி சென்றனர்.

உக்ரன் “அந்தணரே, ஓர் ஊரார் வருபவர்களிடம் கேட்கவிழையும் முதற்செய்தி என்ன?” என்றான். ஜைமினி “நல்ல மழை, நல்லரசு, வெற்றிகள், வேள்விகள்” என்றான். “இல்லை, அனைவருமே கேட்பது அவர்கள் ஊரைப்பற்றி நாம் எப்படி அறிந்தோம் என்றே. நெடுந்தொலைவிலேயே அவ்வூரைப்பற்றி நம்மிடம் பலர் சொன்னார்கள் என்று நாம் சொன்னால் மகிழ்வார்கள். காட்டுக்குள் ஒளிந்து எவருமறியாது கிடக்கும் சிற்றூர்கூட கண்டடையபப்படவேண்டுமென்றே ஏங்குகிறது” என்றான். “ஆம், உண்மை” என்றான் சண்டன். “நான் எப்போதும் அதைத்தான் சொல்கிறேன்.” வைதிகர் நால்வரும் சிரித்தனர். பைலன் “நுண்மையாக உணர்ந்திருக்கிறான்” என்றான். “அந்த விழைவையே சரடெனக்கொண்டு அவர்களை தங்களை நோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது நாடும் முடியும்” என்றான் வைசம்பாயனன்.