கிராதம் - 10

[ 9 ]

இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார்.

செல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும்  உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை செய்து தனிமையில் வாழ்வதாகவும் எவரையும் சந்திப்பதில்லை என்றும் வழிப்போக்கனாக சந்தித்த சூதன் சொன்னான்.

சப்தஃபலத்தின் வாயிலில் அவரைத் தடுத்த காவலர்தலைவன் சதமன் “எவரும் தன்னை சந்திக்க வேண்டியதில்லை என்று இளைய யாதவரின் ஆணை, முனிவரே” என்றான். காலவர் தன்னை அவ்வாறு ஒரு காவலன் தடுப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய முதல்மாணவன்  சலஃபன் முன்னால் சென்று “கௌசிககுலத்து காலவ முனிவரை அறிந்துகொள்க! யாதவ அரசருக்கு அருள்புரியும்பொருட்டு இங்கு வந்துள்ளார்” என்றான். “எவராயினும் உள்ளே செல்ல ஒப்புதலில்லை” என்று சதமன் சொன்னான். “நீங்கள் தேடிவந்த இளைய யாதவர் உள்ளே இல்லை என்று மட்டும் அறிக!”

“நான் சந்திப்பதற்கு பிறிதொருவரும் இல்லை. அதன்பொருட்டே வந்தேன், சந்தித்த பின்பே மீள்வேன்” என்றார் காலவர். சதமன் “எனக்களிக்கப்பட்ட ஆணைகளை நான் மீறலாகாது, முனிவரே. என்மீது நீங்கள் முனிந்தாலும் நன்றே” என்றான். “சிறிதோ பெரிதோ தவமே என் வழி” என புன்னகையுடன் சொன்ன காலவர் அக்காவல் நிலைக்கு வெளியே முற்றத்தில் தன் மாணவர்களுடன் அமர்ந்தார். “இதனால் பயனில்லை, முனிவரே” என்றான் சதமன். “தவத்திற்கு கொடுந்தெய்வங்களும் இரங்கியாகவேண்டும்” என்றார் காலவர்.

முதிய காவலரான கலிகர் வந்து பணிந்து “புரிந்து கொள்ளுங்கள், முனிவரே. தமையனுடன் கொண்ட உளப்பிரிவால் நிலையழிந்திருக்கிறார் அரசர். இங்கு முழுத் தனிமையில்  புற்றுசூழ்ந்த தவநெறியர்போல் அமர்ந்திருக்கிறார். அமைச்சரோ சுற்றமோ அவரை அணுகுவதில்லை. தேவியருக்கும் அவரைப் பார்க்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இங்கிருப்பவர் காலமுகம் கொண்ட கடுஞ்சைவரைப்போல இங்குள அனைத்திற்கும் புறம் காட்டியவர்” என்றார்.

“எவ்வுருக்கொண்டாலும் இப்புவியில் எனக்கென இருப்பவன் அவன் ஒருவனே” என்றார் காலவர். கண்களை மூடி மடியில் கைவைத்து அமர்ந்தார். நீரும் உணவுமின்றி மூன்று நாட்கள் அக்காவல் முற்றத்தில் அவரும் மாணவர்களும் காத்திருந்தனர். அஞ்சியும் பதறியும் சப்தஃபலத்தின் யாதவர் அவர்களை வந்து பார்த்துச்சென்றனர். “அரசரிடம் சென்று சொல்வதா?” என்றான் சதமன். “அவருக்கு இன்று செவிகளே இல்லை” என்றார் கலிகர். “தவத்தோர் முனிந்து சொல்லேவினால் இச்சிற்றூர் அழியும். அவர் எரிசினத்துக்குப் புகழ்பெற்ற விஸ்வாமித்திரரின் சொல்மைந்தர்” என்றான் சதமன். “அவர் தன் தவத்தால் அரசரை அவர் வாழும் இருளுக்குள் இருந்து எழுப்பினால் அது நன்றே” என்றார் கலிகர்.

மூன்றாவது நாள் காலையிருளுக்குள் இலைகள் சூடிய பனித்துளிகள் உதிரும் ஒலி மட்டும் எழுந்துகொண்டிருந்த வேளையில்  நுண்அழைப்பு ஒன்றால் இழுத்துவரப்பட்டவர் போல திறந்து கிடந்த கோட்டைக்கதவு வழியாக நகருக்குள் இருந்து கரிய உடலுடன் தளர்ந்த நடையுடன் இளைய யாதவர்  வெளியே வந்தார். முன்னரே கண்டிராதபோதும் தொலைவிலேயே அவர் யாரென உணர்ந்து காலவர் எழுந்து கைகூப்பினார். அதன்பின்னரே அவரைக் கண்ட காவலர் காலைத்துயில் கலைந்து எழுந்து நின்று தலைவணங்கினர்.

எலும்புகள் புடைத்து கரியும் அழுக்கும் படிந்த தோலுக்குள் அசைந்தன. தேம்பிய தோள்களில் பரவிய குழலில் சருகுப்பொடியும் புழுதியும் படிந்திருந்தன. ஒட்டடைபோன்ற தாடி முகத்தை மூடியிருந்தது. தளர்ந்து நனைந்த இமைகளுக்குள் கண்கள் நிலம் நோக்கி சரிந்திருந்தன.  அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது. காலவர் “யாதவர்க்கரசே, நீ எவரென உணர்ந்தபின்னரே வந்தேன்” என்றார்.

“இங்கு நான் அரசு துறந்து அமைகிறேன். யாதவ மன்னனாக தங்களுக்கு நான் அளிக்கும் எதுவும் இல்லை. துவாரகையை ஆள்பவள் யாதவப் பேரரசி சத்யபாமை” என்றார் இளைய யாதவர். அவர் திரும்பிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பினார். காலவர் “நான் பார்க்க விழைந்தது யாதவனை அல்ல” என்றார். இருவரும் ஒருகணம் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். அவர் நெஞ்சு திடுக்கிட்டது. “நான் காண விழைந்தது பெருங்காலத் தோற்றம் கொண்டெழும் விராடனையே” என்று அவர் சொன்னார். “உம்” என இளைய யாதவர் உறுமினார்.

பந்த ஒளியில் அவர் நிழல் நீண்டு விழுந்து கிடப்பதை அப்போதுதான்  காலவர் கண்டார். அவர் விழிகள் விரிந்தன. திரும்பி அவர் முகத்தை நோக்கி  கைகூப்பி “எனக்கு அருள்க, இருளே! என் பழி நீக்குக, பேராற்றலே!” என்றார். அவர் விழிகள் மெல்ல காலவரை ஏற்றுக்கொண்டன. “உம்” என மீண்டும் உறுமியபடி அவர் தலையை அசைத்தார். “சொல்க!” என்றார். அவரை அஞ்சி காலவரின் மாணவர்கள் விலகி நின்றனர். எழுந்த காற்றில் பந்தச்சுடர் ஒன்று நீண்டுபறக்க எதிர்த்திசையில் எழுந்த பெருநிழலைக் கண்டு ஒருவன் அஞ்சி “ஆ!” என்றான்.

காலவர் “என் மூதாதையின் பெயர் கொண்ட இழிவை நீ அறிந்திருப்பாய். ஷத்ரியக்குருதி என்று இன்றும் வேதச்சொல்லவைகளில் நாங்கள் இரண்டாம் நிரையில் அமரவைக்கப்படுகிறோம். அச்சொல்லை வளர்க்கும் செயலொன்று நிகழ்ந்தது. அப்பழியை தீர்க்க வேண்டுமென்று கோருகிறேன்” என்றார். அவர் “உம்” என முனகினார். நிகழ்ந்ததை காலவர் சொன்னார். “அவன் செய்தது ஏனென்று நானறியேன். என் குலக்குறையின் பொருட்டே நான் இழிவு படுத்தப்பட்டேன் என்று உணர்கிறேன்.”

கருகிய இதழ்கள் பல்காட்டி விரிய இளைய யாதவர் புன்னகைத்தார். “நான் அறிவேன்” என்றார். காலவர் “எப்படி?” என்றார். “நான் அதை நிகழ்த்தினேன்” என்று அவர் சொன்னார். அவர் உதடு அசையவில்லை என்று அவர் விழிமயங்கியது. அவர் பின்னமர்ந்து பிறிதொருவர் பேசியதுபோலத் தோன்றியது. “என் இரு கைகளையும் விரித்து சூரியனுக்கு நான் அளித்த நீர்மேல் காறி உமிழ்ந்தான் அவன். அவனைக் கொன்று எரித்து அச்சாம்பலைச் சூடாது இனி நான் தவம் இயற்றுவதில்லை என்று உறுதி கொண்டேன்.”

“இளையோனே, முனிவரின் தவம் பேணுதல் அரசரின் கடமை என்று நீ அறிந்திருப்பாய். என் தவக்காவலனாக உன்னைத் தெரிவு செய்தேன்” என்றார் காலவர். “ஆம்” என்று அவர் நீள்மூச்சுடன் சொன்னார். அவர் விழிகளை நோக்குவதையே தவிர்த்தார். உடலெங்கும் பிறிதொன்று நின்று தவிப்பதுபோல் ஒரு அசைவு ஓட எழுந்துகொண்டார். “உன் சொல் தேடுகிறேன், யாதவனே” என்றார் காலவர். “அவனை எரித்தழிப்பேன். உங்களுக்கு நீறளிப்பேன்” என்று அவருக்குப் பின்னாலென ஒரு குரலெழுந்தது.

இளைய யாதவர் திகைத்தவர் போல காலவரை நோக்கி “என்ன?” என்றார். “அவனை எரித்தழிப்பதாக சொல்லளித்தாய்” என்றார் காலவர். விழிகள் சற்று சுருங்க தலை நடுநடுங்க கூர்ந்து நோக்கிய இளைய யாதவர் “அவன் யார்?” என்றார். வியப்புடன் ஒருகணம் எண்ணி பின் எழுந்து காலவர் “சித்ரசேனன் என்று பெயர் கொண்ட கந்தர்வன். விண்முகிலில் வாழ்பவன். அங்கு தன் இரு தேவியருடன் குலாவி அமைந்து விழித்தெழுந்தபோது என் மேல் எச்சில் உமிழ்ந்தான்” என்று புதியவனிடம் என மீண்டும் சொன்னார்.

“நன்று” என்றார் இளைய யாதவர். அவர் விழிகள் நிலையற்று உருண்டு கொண்டிருந்தன. விரல்கள் அறியாத எதையோ தொட்டுத்தொட்டு மீட்டுவன போல் அசைந்து கொண்டிருந்தன. “தங்கள் ஆணையை சென்னி சூடுகிறேன். அவனைக் கொன்று அனலூட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். இது என் வஞ்சினம்” என்றார். காலவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடவேண்டுமென்னும் உணர்வையே அடைந்தார். “உன் சொற்களை நிலம் சான்றாக்கி ஏற்கிறேன்” என்றார்.

அவர் திரும்பிச்செல்லும்போது காலவர் ஓர் அடி முன்னால் வைத்து “இன்று பதினேழாவது நாள். நாற்பத்தொரு நாள் முடிவில் அவனை எரித்த சாம்பலை என் உடல் அணியவேண்டும். இல்லையேல் நான் எரிபுகுந்து மறைவேன்” என்றார். இளைய யாதவர் திரும்பாமல்  ”அது என் வஞ்சினமும் கூட” என்றார். தலைவணங்கி “என் குரு மரபும் சொல் மரபும் உனக்குத் துணை நிற்கும், யாதவனே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் காலவர்.

தலைவணங்கி அவ்வாழ்த்தை ஏற்காது, திரும்பி ஒரு சொல்லும் பேசாது அவர் திரும்பிச் சென்றார். அருகே நின்றிருந்த முதல் மாணவன் சலஃபன் “அவரால் வெல்ல முடியுமா?” என்றான். “அவனால் மட்டுமே வெல்ல முடியும்” என்றார் காலவர். “ஆசிரியரே, தாங்கள் சொன்னதை அவர் சரியாகக் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன். தன்னுள் உழலும் ஒன்றுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்தவர் தாங்கள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே சொல்லளித்து எழுந்துவிட்டார்” என்று சலஃபன் தயங்கியபடி சொன்னான்.

“ஆம், தான் அளித்த வாக்கு என்ன என்று இன்னும் அவன் அறிந்திருக்கவில்லை. வாக்களித்தது அவனல்ல” என்றார் காலவர். “சித்ரசேனன் எவர் என்று அறிந்த பின்னரே அவன் முழுதுணர்வான். ஆனால் அவன் சொல் நின்றிருக்கும்.” புன்னகையுடன் சலஃபனின் தோளில் கை வைத்து “ஒருவேளை அதுவும் நன்றென்றே ஆகலாம். இன்று அவன் இருக்கும் செயலற்ற நிலையிலிருந்து மீள்வதற்கு இப்போர் ஒரு வழியாக ஆகக் கூடும். யாரறிவார்? இவையனைத்தும் அதன் பொருட்டே என்றிருக்கவும்கூடும். செயலும் விளைவும் மறுசெயலும் என பின்னிச் செல்லும் இப்பெரு வலையில் ஒரு கண்ணியை உணர அனைத்தையும் உணர்ந்தாக வேண்டும் என்பர்” என்றார்.

அன்றே தன் மாணவர்களுடன் சித்ரகூடத்திற்கு திரும்பிச்சென்றார் காலவர். தன் முன் அனலவனை எழுப்பி “இங்கு திகழ்க, எரியே! என் வஞ்சினம் நிறைவேற்றும் மானுடனை கண்டுகொண்டேன். துவாரகையின் இளையோன் சொல்பெற்று மீண்டுள்ளேன். என் குடிமேல் விழுந்த எச்சிலின் பொருட்டு விண்ணாளும் கந்தர்வனை எரித்தேன். அச்சாம்பலைச் சூடி எழுந்தேன். இனி வேள்விக்களங்களில் எல்லாம் இந்நிகழ்வுக்கு நீயே சான்று” என்றார்.

“ஒருவேளை என் சொல் திகழவில்லை என்றால் வெஞ்சாம்பலாக ஆகி மறைபவன் நான். என் ஊனுடலை உனக்கு அவியாக்குவேன். எரிந்தெழுந்து என் மூதாதையர் வாழும் உலகுக்கு என்னை கொண்டுசெல்க!” என்றபின் புலித்தோலை விரித்து அதன்மேல் மலரமர்வில் உடல் நிறுத்தி அமர்ந்து விழிமூடினார்.

[ 10 ]

மாலைக்கதிர் கடலில் பெய்து அணைந்ததும் தன் மென்முகில் சேக்கையில் சித்ரசேனன் துயிலெழுந்தான். முன்னரே எழுந்த அவன் தேவி சந்தியை பூத்த காட்டில் பரவி மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து அவனுக்குச் சுற்றும் பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்பியிருந்தாள்.  புன்னகையுடன் எழுந்து அமர்ந்து கைதூக்கி சோம்பல்முறித்தபடி தோன்றி ஒளி கொள்ளத் தொடங்கியிருந்த முழுநிலவைப் பார்த்தான்.

சந்தியை கந்தர்வநாளின் புலரிவேள்விக்கென அனைத்தும் அமைத்து காத்திருந்தாள். பனித்துளி எடுத்து நீராடி, நிலவொளி தொட்ட வெண்முகில் கீற்றொன்றை ஆடையாய் புனைந்து வேள்விக் குளத்தருகே வந்தமர்ந்தான். தன் அச்சங்களையும் ஐயங்களையும் வஞ்சங்களையும் விறகென எரிகுளத்தில் அடுக்கி விழைவை அதில் நெய்யாக்கினான். இரு கைகளின் சுட்டுவிரல் தொட்டு மின்கதிர் எழுப்பி வேள்விக்குளத்தில் அனலூட்ட முயன்றான்.

பன்னிருமுறை முயன்றும் அனலெழாமை கண்டு குழப்பத்துடன் தன் தேவியை நோக்கினான். அவளுக்கும் நிகழ்வதென்னவென்று புரியவில்லை. மீண்டும் ஒரு முறை முயன்றதும் அனலோன் தன்னை தவிர்க்கிறான் என்று புரிந்துகொண்டான். தன் நெஞ்சில் கைவைத்து “என்னிலூறும் இசையின் முதல் துளியை சான்றாக்கி ஆணையிடுகிறேன். எழுக, அனலவனே!” என்றான்.

அனல் மூலையிலிருந்து எரியின் குரல் எழுந்தது. “என்னை பொறுத்தருள்க, கந்தர்வனே! இன்று உன் வேள்விக்குளத்தில் நான் தோன்ற மாட்டேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களுக்குள் உன்னை எரித்தழிக்கும் ஆணையை பெறப்போகிறேன். இதுநாள்வரை உன் வேள்விக்குளத்தில் தோன்றி நீ அளித்த அவியும் வேதச்சொல்லும் பெற்று விண்ணவருக்கும் திசை தெய்வங்களுக்கும் அளித்தவன் நான். அந்த நன்றிக்கடன் இதை உன்னிடம் சொல்லச் செய்கிறது. இனி உன்னிடம் இருந்து அவி பெறுவது முறையல்ல.”

“யார்? நீயா என்னை எரித்தழிப்பது? ஏன்?” என்றான் சித்ரசேனன். “நானல்ல. அணைகட்ட முடியாத ஆற்றல் கொண்ட ஒருவன் உன்னை எரித்தழிப்பதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்” என்றான் கனலோன். “யார் அவர்? புடவியாளும் மூவரா? தேவருக்குத் தலைவரா? திசை நால்வரா?” என்றான் கந்தர்வன். “இல்லை, இவன் மண்ணில் வாழும் ஓர் அரசன். துவாரகையின் யாதவன்” என்றான் அனலோன்.

திகைப்புடன் “அவனுக்கேது அவ்வாற்றல்?” என்றான் கந்தர்வன். “மண்ணில் வாழ்பவருக்கு ஆற்றல் அளிப்பது வேதம். நான்கு வேதங்களும் கொண்ட மெய்ப்பொருளை ஒற்றைச் சொல்லென ஆக்கி தன் நாவில் சூடியவன் அவன். அவன் உன்னிடம் போருக்கெழுந்தால் நீ அரைக்கணமும் எதிர் நிற்க முடியாது என்றறிக!”

“நான் என்ன செய்ய வேண்டுமென்று அறியேன். என்ன பிழை செய்தேன்?” என்றான் சித்ரசேனன். “நீ காமமயக்கில் உமிழ்ந்த எச்சில் காலைத்தவம் செய்யக் கைநீட்டிய காலவரின் உள்ளங்கை குழியில் விழுந்தது. அது தன் குலத்தின் மீதான எள்ளலே என்று அவர் எண்ணிக்கொண்டார். அவருடைய ஆறாச்சினமே இளைய யாதவனின் வஞ்சினமாக மாறியது” என்றான் அக்னி. “அது நான் அறியாது செய்த பிழை. அன்று என்னுள் கூடியதென்ன என்று நான் இன்றும் அறியேன். தெரியாப்பேய் ஒன்று என் சேக்கையை வென்றது என்றே உணர்கிறேன்” என்று சித்ரசேனன் சொன்னான்.

“பேய்கள் எழுவது உள்ளமெனும் இருளுக்குள் இருந்தே” என்று அனலோன் சொன்னான். “நான் செய்யவேண்டியது என்ன?” என்று சித்ரசேனன் கேட்டான். “இனி நீ செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. உரைத்த வஞ்சினங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்த ஒருவனின் சொல் இது. அது உரைக்கப்பட்டபோதே அச்செயல் முடிந்துவிட்டதென்று நான் கொண்டேன்” என்றான் எரியன்.

“நான் காலவரை அணுகி அவர் கால்களில் பணிந்து பொறுத்தருளும்படி கோருவேன். அவர் ஆணையிடும் அனைத்தையும் செய்து முடிப்பேன். ஆயிரமாண்டுகாலம் அவர் வேள்விக்கு காவலனாக நின்றிருப்பேன்” என்றான் சித்ரசேனன். “இவை அனைத்தும் அவர் அவ்வஞ்சினத்தை இளைய யாதவனிடமிருந்து பெறுவதற்கு முன் செய்திருக்க வேண்டியவை. இன்று நீ செய்வதற்கொன்றே உள்ளது. நிகர் வல்லமை கொண்ட பிறிதொருவரிடம் சரண் அடைக! அவன் படைக்கலத்தால் காக்கப்படுவாய்.”

“ஆம், நான் மூன்று தெய்வங்களிடம் செல்வேன். தேவர் கோமகனிடம் செல்வேன்” என்றான் சித்ரசேனன். “அவர்கள் எவரும் அவ்விளைய யாதவனிடம் நின்று போரிட முடியாது. வேதச்சொல்லை வல்லமை என்று கொண்ட மானுடன் அவன். வேதக்காட்டை விதையென்றாக்கும் ஊழ்நெறி கொண்டு வந்தவன்” என்று எரியன் சொன்னான். “தன் எதிர்நிற்பவனிடம் அவனே கருணை கொண்டால் மட்டுமே அவனை தடுக்க முடியும். ஒவ்வொரு அம்புக்கும் ஒருதுளி அருளையும் அவன் எவனுக்கு அளிப்பானோ அவன் மட்டுமே இளைய யாதவன் முன் நிற்க முடியும்.”

“யாரவன்? அவன் மூத்தோனா? நான் பலராமனிடம் சென்று அடிபணிவேன்” என்றான் கந்தர்வன். “இல்லை சுபத்திரையா? வசுதேவனா? அவன் மைந்தர்களா? எவராயினும் இதோ செல்கிறேன்.” அனலோன் புன்னகைத்து “இல்லை. குருதியென்பது உறவல்ல என்பதை இளைய யாதவனே உணர்ந்துகொண்டிருக்கும் தருணமிது. அது கடமை மட்டுமே என்று அறிந்ததன் சுமையால் அவன் சித்தம் இருண்டுள்ளது. மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு கணத்தில் உணரும் அக்கசந்த உண்மையே பேயுருக் கொண்டு அவனை ஆள்கிறது இன்று” என்றான்.

“பின்பு யார் அவனுடன் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவன்?” என்றான் சித்ரசேனன். “இளைய பாண்டவன் பார்த்தன். ஊழால் இணைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் சொல் கைமாறிப் பிரிந்து சில நாட்களே ஆகின்றன. இளைய யாதவன் வஞ்சினம் உரைத்ததை இளைய பாண்டவன் அறிவதற்குள்ளாகவே சென்று தாள் பணிக! அவனிடமிருந்து அடைக்கலம் பெறுக!” என்றான் அக்னி.

“ஆம், இக்கணமே” என்று எழுந்தான் கந்தர்வன். அக்னி “அதற்கு நீ செல்வதைவிட உன் துணைவி மட்டும் செல்வதே உகந்தது” என்று அறிவுறுத்தினான். “பார்த்தன் இன்றிருப்பது யக்‌ஷவனத்தில். அவன் தமையன் அளித்துச்சென்ற அறத்தின் கோல்சூடி அமர்ந்திருக்கிறான். அவனை வெல்ல அறமெனும் சொல்லே வழியாகும். உன் துணைவி திருமிகுக் கோலத்தில் செல்லட்டும்.”

[ 11 ]

யுதிஷ்டிரர் கந்தமாதன மலையேறிச் சென்றபின்னர் யக்‌ஷவனத்தின் தனித்த தவக்குடிலில் பாண்டவர் நால்வரும் காத்திருந்தனர். அர்ஜுனன் பகலும் இரவும் அங்கிருந்த கூம்புமரக்காட்டுக்குள் வில்லம்புடன் உலவினான். உள்ளைக் குவிக்க வெளிக்குறி ஒன்றை தேர்வதே அவன் வழியென்றாகியிருந்தது. விடுபட்ட அம்புடன் எழுந்து பறந்து இலக்கைத் தொட்டதும் அவன் உள்ளம் ஒரு வட்டத்தை முழுமை செய்தது. முற்றிலும் தனித்தவனாக அலைவதற்கு காடே உரியதென்று அறிந்த விடுதலை அவன் உடலில் திகழ்ந்தது.

மாலை சிவந்து விண்முகில்கள் எரிசூடத் தொடங்கிய பொழுதில் விண்ணில் சுழன்று சென்ற இறகுப் பிசிர் ஒன்றை தன் அம்பில் கோத்து குறி நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் பெண்குரல் அழுகை ஒலி கேட்டு வில் தாழ்த்தி திரும்பிப் பார்த்தான். அங்கே மலர் உதிர்த்து மேடையிட்டு அதன்மேல் நின்றிருந்த மரம் ஒன்றின் அடியில்  பொன்னிற உடல்கொண்ட அழகியொருத்தியை கண்டான். மங்கலக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது அவள் தலைக்குமேல் எழுந்த கிளையில் அமர்ந்த பறவை. அவள் தனித்து வந்திருப்பதை உணர்ந்தபின் அருகே வந்து “யார் நீ?” என்று அவன் கேட்டான்.

இளமுலைகள் மேல் விழிநீர் வழிய அவள் அவன் முன் வந்து நின்றாள். “வீரரே, எடுத்த வீரர் எவராயினும் தங்கள் அம்பின் எல்லைக்குள் அவர் அரசரே என்கின்றன நூல்கள். செல்வதறியாது அழுதுகொண்டு இக்காட்டுக்குள் நுழைந்தேன். உங்கள் நாணொலி கேட்டு அடைக்கலம் வேண்டி வந்திருக்கிறேன். என் துயருக்கு நீங்களே காப்பு” என்றாள்.

“சொல்க!” என்றான் அர்ஜுனன். “விண்வாழும் கந்தர்வனாகிய சித்ரசேனனின் துணைவி நான். இசையன்றி படைக்கலம் ஏதுமில்லாதவன் என் கொழுநன். கருதாப்பிழை ஒன்றுக்காக எம் கணவனை எரித்து அழிப்பதாக அரசனொருவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான். அவன் எரிந்தழிவான் என்றால் அச்சிதையிலேயே நானும் அழிவேன். என் மங்கலநாணுக்கு நீங்களே காவல். என் கற்பின் மீது ஆணை” என்றாள்.

“என்ன பிழை?” என்று அர்ஜுனன் கேட்டான். “காதலின் மயக்கில் அவன் வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்தான். அது மண்ணில் நின்றிருந்த முனிவர் ஒருவர் மேல் விழுந்தது. தன் குலம் மீதான இழிவென அவர் அதைக் கொண்டார்” என்றாள் அவள். அர்ஜுனன் “அவன் காதலாடுகையில் உடனிருந்த துணைவி யார்?” என்றான். “நானே. மங்கலம் அன்றி பிறிதெதையும் சூடாதவள் நான்” என்று அவள் சொன்னாள்.

அவளை ஒருகணம் நோக்கியபின் “தேவி, உடனிருந்தவர் தாங்கள் என்றால் அவர் அறிந்தொரு அமங்கலம் செய்திருக்க வாய்ப்பில்லை. அக்கருதாப்பிழைக்காக உங்கள் கொழுநனை எவரும் கொன்று அழிக்க நான் ஒப்பேன்” என்றான்.  “இளவரசே, புவிதொட்டு அவ்வாணையை எனக்கு அளியுங்கள்” என்றாள் சந்தியை.  குனிந்து மண் தொட்டு “ஆணை” என்றான் அர்ஜுனன்.

அவள் கைகூப்பி “உங்கள் வில்லை நம்பி மீள்கிறேன்” என்றாள். புன்னகையுடன் விழிநீர் ஒப்பியபடி திரும்பியவளிடம் “வஞ்சினம் உரைத்த அரசன் யார்?” என்றான் அர்ஜுனன். “துவாரகையை ஆளும் இளைய யாதவன்” என்றாள் சந்தியை. திகைத்து “அவரா? ஏன்?” என்றான் அர்ஜுனன். சந்தியை “சூதுச்சொல் வழியாக அம்முனிவரால் அவரது வஞ்சினம் பெறப்பட்டது” என்றாள்.

அர்ஜுனன் “அவ்வண்ணமெனில் அஞ்ச வேண்டியதில்லை. இப்புவியில் என் சொல்லே இறுதியென எண்ணுபவர் அவர்.  அவரிடம் உண்மை என்ன என்று நானே உரைக்கிறேன். உங்கள் கணவரை அவ்வஞ்சினத்திலிருந்து விடுதலை செய்கிறேன்” என்றான்.