கல்பொருசிறுநுரை - 42

பகுதி நான்கு : அலைமீள்கை – 25

ருக்மியின் அறையிலிருந்து வெளிவந்தோம். இளையவன் விசாரு என்னை தொடர்ந்து வந்தான். அவன் மிகவும் குழம்பிப்போய் இருப்பதை அவன் உடலசைவுகளிலேயே உணர்ந்தேன். என்னையே நான் வெறுத்து கசந்துகொண்டேன். அவன் மிக மிக எளிமையானவன். ஒரு பெரிய சூழ்ச்சியை அறிவிக்க அவனை அனுப்பமாட்டார்கள். அவனாகவே ஏதும் சொல்லத்தேவையில்லாத, ஆனால் ஓர் ஓலையிலோ ஒற்றனிடமோ அனுப்பமுடியாத ஒரு செய்திக்காகவே அனுப்பியிருப்பார்கள். அதை நான் உணர்ந்திருக்கவேண்டும்.

ஆனால் அத்தருணத்தில் என் உள்ளம் எழுந்து தாவியது. அது ஏன் என்று எண்ணி எண்ணி நானே வகுத்துக்கொண்டிருக்கிறேன். தந்தையே, அது முதன்மையாக அச்சூழலினால் என்று எனக்கு பட்டது. நான் அங்கே களைப்புடன் சென்றேன். முன்னரே எதையும் வகுத்து தொகுத்துக்கொள்ளவில்லை. புதியதாக எழுந்த சூழ்நிலையை என்னால் முழுக்க உணர முடியவில்லை. ஆனால் அது எளிதான ஒன்று, அதை நான் கடந்திருப்பேன். அத்தகைய தருணங்களை கடப்பதற்குரிய தற்கோப்புநிலை என்னுள் எப்போதும் உண்டு.

அதைவிட சிக்கலானது ருக்மியின் இயல்பு. அவர் எளியவர், நேரடியானவர். ஆகவே அச்சூழலை அவர் நான் எண்ணியிராதபடி கொண்டுசென்றார். சற்றேனும் அரசுசூழ்தலை அறிந்த ஒருவர் அவனையும் அவைக்கு அழைத்து இருவரையும் அருகருகே நிறுத்தி எவர் சொன்னது உண்மை என உசாவிக்கொண்டிருக்கமாட்டார். அது ஒரு தந்தை தன் இரு மைந்தரை நிறுத்தி அவர்களில் எவர் பொய்சொன்னார் என ஆராய்வதுபோல் இருந்தது. அதிலிருந்த அப்பட்டமான தன்மையை என்னால் கையாள முடியவில்லை. தந்தையே, ஆழ்கடலில் நீந்துபவர்கள் முழங்காலளவு நீரில் தடுமாறிவிடக்கூடும்.

ஆனால் அனைத்தையும்விட முதன்மையானது நான் அச்சூழலை மதிப்பிட்டது. பெரிய மருத்துவர்கள் இந்தப் பிழையை செய்வதை கண்டிருக்கிறேன். அவர்கள் மாபெரும் மருத்துவர்கள், இடர்மிகு நோய்களை கையாள்பவர்கள். ஆகவே எளிய நோய்களை அவர்கள் மிகைப்படுத்திக்கொள்வார்கள். எதிரி தனக்கு இணையானவனாக இருக்கவேண்டும் என்ற விழைவால் எளிய எதிரியை தனக்கு இணையான பேருருவனாக எண்ணுவதுபோல. அவ்வண்ணம் அச்சூழலை நான் மதிப்பிட்டேன். என் மதிநுட்பத்தால் கையாளவேண்டிய ஆழ்ந்த தருணமாக.

வெளியே செல்லும்போது நான் கசந்திருந்தேன். என்னையே வெறுத்துக்கொண்டிருந்தேன். அதைவிட கண்ணுக்குத் தெரியாத பெரிய எதிரி ஒன்றை எங்கோ கண்டு அஞ்சிவிட்டிருந்தேன். அது என்னை வெற்றிகள் வழியாக கொண்டுசென்றது. என்னை வீங்க வைத்தது. இத்தருணத்தை உருவாக்கி நொறுங்க வைத்தது. எதையோ அது திட்டமிட்டிருக்கிறது. அது பேரழிவேதான். ஆக்கம் துளித்துளியாக நிகழ்கிறது. ஆக்கத்தில் மானுட ஆற்றலே துலங்கித்தெரிகிறது. வீழ்ச்சியில்தான் ஊழின் பேராற்றல் வெளிப்படுகிறது. ஊழ்தான் தவிர்க்கமுடியாததாக, வெல்லமுடியாததாக, புடவிப்பெருநெறிகளால் இயக்கப்படுவதாக தோன்றுகிறது.

விசாரு என்னிடம் “மூத்தவரே, தாங்கள் தூது வரும் செய்தியை அறிந்தேன். ஆனால் மூத்தவர் சுதேஷ்ணனுக்கும் தங்களுக்குமான உறவை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை” என்றான். “உண்மையில் அவையில் அதை கேள்விப்பட்டபோது நான் திகைத்துவிட்டேன். ஆகவே என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை” என்றான். நான் அவனிடம் “உனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது மிக தற்செயலாக இந்த அவையில் வெளிவந்தது. இங்கு நீ இருப்பாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எவ்வகையிலாயினும் இதை நீ அறிந்தது நன்று” என்றேன். “நான் சுதேஷ்ணனிடம் இதை எதிர்பார்க்கவில்லை, நிலைகுலைந்துள்ளேன், மூத்தவரே” என்று அவன் சொன்னான். “இதில் குழம்ப ஏதுமில்லை. நன்றே நிகழும்” என்றேன்.

“அனைத்தும் நன்றாக முடியவிருக்கிறது என எண்ணினேன். ஒவ்வொன்றும் சிக்கலாகப்போவதாக இப்போது தோன்றுகிறது. சுதேஷ்ணன் இவ்வண்ணம் எண்ணுபவரா?” என்றான் விசாரு. “இது அரசுசூழ்தலில் இயல்பான ஒன்று. உகந்த ஒன்றும்கூட. இன்று நாம் இருவருமே சுதேஷ்ணனின் செய்தியுடன் வந்துள்ளோம். விதர்ப்பத்தின் அரசர் நம்மை ஆதரிப்பார் என்றால் சுதேஷ்ணன் வென்று அரியணை அமர்வார். அது எனக்கும் நலம் பயப்பதே” என்றேன். “ஒருவகையில் இயல்பாக நீயும் உள்ளே வந்திருக்கிறாய். சுதேஷ்ணன் உனக்கும் உகந்ததை செய்தாகவேண்டும். அதன்பொருட்டு நீ மகிழ்ச்சி அடையலாம்.”

“இல்லை. எவ்வகையிலும் நான் என் மூத்தவர் பிரத்யும்னனுக்கு எதிராக திரும்ப இயலாது. நான் அவருக்கு அணுக்கமான இளையோன். அவரை வழிபடுபவன்” என்றான் விசாரு. “ஆனால் என்னால் நம்பவே முடியவில்லை. என்னைப் போலவே மூத்தவரை வழிபடுபவர் என்றே சுதேஷ்ணனை பற்றி எண்ணியிருந்தேன்.” அவன் நிலையழிந்து தலையை அசைத்தான். “ஆனால் உண்மையில் இந்த உளப்பதிவு எனக்கு இருந்திருக்கிறது என இப்போது உணர்கிறேன். சென்ற சற்றுநேரத்தில் என்னுள் ஏற்கெனவே நிகழ்ந்த நூற்றுக்கணக்கான தருணங்கள் ஓடின. சுதேஷ்ணனின் விழைவையும் ஏமாற்றத்தையும் உண்மை என்று என் அகம் சொல்கிறது.”

அது எனக்கு நம்பிக்கையை அளித்தது. அவனுள் துளி ஐயமிருந்தால் போதும், அதை பெருந்தழலாக ஆக்கமுடியும். “சுதேஷ்ணன் தனக்காக இதை செய்யவில்லை. அவருடைய எண்ணம் துவாரகையில் அசுரர் நிலைகொள்ளக்கூடாது என்பதே” என்றேன். “ஆனால் ஃபானு முடிசூட்டிக்கொண்டால் அசுரர் எவ்வண்ணம் ஆளமுடியும்?” என்றான் விசாரு. “பிரத்யும்னனுக்கு தென்னகம் சொல்லளிக்கப்பட்டுள்ளது. ஷத்ரியர் மேல் ஏறி அசுரர் முடிகொள்வதல்லவா அது?” என்றேன். “ஆனால் பிரத்யும்னன் எந்தையின் மைந்தர்” என்று விசாரு சொன்னான். “தன் வடிவாகவே அவர் முன்நிறுத்திய மைந்தர் அவரே.”

“ஆம், ஆனால் ஷத்ரியக்குருதி…” என்று நான் தொடங்க “எவருடைய குருதி என்று முடிவெடுக்கும் இடத்தில் நாம் இல்லை. மூத்தவர்கள் எடுக்கும் முடிவுகளை பின்தொடர்பவர்களே நாம். தந்தையின் முடிவை மூத்தவர் எடுக்கிறார். மூத்தவரை தந்தை என எண்ணுபவன் நான்” என்றான். “ஆம், நாம் இதைப்பற்றி பிறகு பேசலாம்” என்று நான் கூறினேன். பிறகு இருவரும் பேசவில்லை. தங்களுக்குள் ஆழ்ந்து நடந்தோம். எங்கள் காலடிகள் ஒலித்து உடன் வந்தன. நம் காலடிகளைக் கேட்கும் தருணங்கள் நம் வாழ்க்கையில் அரிதானவை. அப்போது நாம் அகம் குவிந்திருக்கிறோம்.

என் உள்ளத்தின் விரைவை நானே எண்ணி வியந்துகொண்டிருந்தேன். உள்ளம் விரைவு கொள்கையில் ஆற்றல் குவிகிறது. ஆற்றல் குவிகையில் மேலும் விசை கொள்கிறது. விரைந்து செயல்படுகையிலேயே உள்ளத்தின் அனைத்து கற்பனைத் திறன்களும், சொல்லடுக்குத் திறன்களும் நினைவுத் தொகையும், கனவு ஆழமும் திரள்கின்றன. உருக்கொண்டு எழுந்து கையருகே வருகின்றன, கருவிகளாகின்றன. ஓய்ந்திருக்கையிலேயே உள்ளம் தன் அனைத்துத் திறன்களையும் இழந்து சிதறி திரிகிறது. சரிந்த நிலத்தில் செல்கையில் நதி ஆற்றல் கொள்வதைப்போல.

நான் அவனை ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தேன். அவனை முன்னரே எனக்கு தெரியும். இளையவன், ஆகையால் எந்த அவையிலும் இல்லாதவன் போலிருப்பவன். உண்மையில் அவன் அவனுக்கு நேர்மூத்தவன் சாருசந்திரனின் நிழலென வாழ்பவன். சாருசந்திரனும் எவ்வகையிலும் அவை முதன்மை கொள்பவன் அல்ல. விளையாட்டுகளில்கூட அவர்களின் குரலை நான் கேட்டதில்லை. அவ்வண்ணம் ஒருவன் இருப்பதே அப்பதின்மருக்கு அப்பால் எவருக்கும் தெரியாது. ஆகவேதான் அவனை தூதனுப்பியிருக்கிறார்கள். அவன் வந்த செய்தி எவருக்கும் தெரியாது.

அவன் அரசு சூழ்ச்சி அறியாதவன். ஆகவேதான் அவையில் நான் உரைத்த சூழ்ச்சிச் சொற்களைக் கேட்டு திகைத்து உளம் அழிந்திருக்கிறான். சற்றேனும் அரசியல் சூழ்ச்சியை அறிந்தவன் ஒருபோதும் என்னிடம் அதைப் பற்றி நேரடியாக பேசியிருக்க மாட்டான். தனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று என்னிடம் காட்டியிருக்கவும் மாட்டான். ஆனாலும் இந்த நிலத்திலிருந்து இவன் கிளம்பும்போது எனக்கான இடர் தொடங்குகிறது. இங்கு நான் சொன்னவை எவ்வகையிலேனும் பிரத்யும்னனை சென்றடைந்தால் அவரிலிருந்து ஃபானுவை சென்றடைந்தால் நான் உயிர் வாழ இயலாது.

இதை நான் கடந்தாக வேண்டும். அதற்கு ஒருவழியே உள்ளது. இவனை அழைத்துக்கொண்டு சேர்ந்து திரும்பிச்செல்லலாம். செல்லும் வழியில் இவன் உளம் நம்பும்படியான ஒரு கதையை சொல்லலாம். மெல்லமெல்ல கரைத்து இங்கு நிகழ்ந்தவற்றை சுதேஷ்ணனிடமும் கூறாமல் ஆக்கிவிடலாம். அது எனக்கு ஓர் அறைகூவல். அத்தருணத்தில் அத்தனை தோல்விகளுக்குப் பின்னரும் நான் என் ஆற்றலை நம்பி மேலும் ஊக்கம் கொண்டேன். இந்த எளியவனை நம்பவைக்க என்வயமாக்க என்னால் இயலும். அதையே ஓர் ஆடலெனக் கொள்ளலாம். என் திறனை நானே மதிப்பிட்டுக்கொள்ளும் ஒரு தருணம்.

அதை எவ்வண்ணம் செய்வது என்று எண்ணி நான் சொல் தொகுக்கத் தொடங்கினேன். இவனை நம்பச் செய்வது எளிது. அதற்கான சொற்களை உரிய முறைப்படி அமைக்கவேண்டும். இளையோனே, இங்கு ருக்மியின் அவையில் நான் சொன்னது சுதேஷ்ணனின் எண்ணம், ஆனால் சுதேஷ்ணன் அதை அவரே பிறஇளையோரிடம் கூறவில்லை. ஆகவே தங்களுக்கு அது தெரியும் என்று பிற இளையோர் அவரிடம் காட்டாமலிருப்பதே முறை. அவரே கூறும்வரை காத்திருக்கலாம். தனக்கு தேவையில்லாத இடங்களில் சென்றதையோ சொல்லறிந்ததையோ வெளிக்காட்டாமலிருப்பதுதான் அரசுசூழ்தலின் நெறி. அவ்வண்ணமே இங்கே நிகழ்ந்தவற்றை மறந்துவிடு. நினைவுகூரும் தருணம் வரும், அப்போது நினைவுகூர்.

பிரத்யும்னனிடம் அவன் இதை சென்று கூறலாம். உண்மையில் அது அவனுடைய கடமை. ஆனால் அதன் விளைவாக எழுவது பிரத்யும்னனுக்கும் சுதேஷ்ணனுக்குமான பூசல். பிரத்யும்னன் சினந்தெழுந்து சுதேஷ்ணனை கொன்றால் அதன் முழுப்பொறுப்பும் விசாருவுக்கே. இத்தருணத்தில் அப்படி உடனடியாக எதையும் செய்யக்கூடாது. சுதேஷ்ணனை பிரத்யும்னனிடம் அடையாளம் காட்டுவதென்றால்கூட அதற்கான தருணம் அமையவேண்டும். ஆகவே இப்போது அதை கூறாமலிருப்பதே முறை.

அதற்கு பிறிதொரு தருணம் வரும். அப்போது முறையாக அறிவிக்கலாம். ஃபானு முடிசூட்டிக்கொண்ட பிறகு, எண்பதின்மரும் ஒன்றாக நின்று அந்நிகழ்வை நிறைவடையச் செய்த பின்னர், அனைவரும் ஓய்ந்திருக்கையில் இவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததென்று பிரத்யும்னனிடம் கூறினால் அவர் சுதேஷ்ணனிடம் காட்டக்கூடிய சினம் சற்று குறைந்திருக்கும். இச்சிக்கல் மிக எளிதாக அவிழும். அன்றி இயல்பாக இச்செய்தியை அவன் எவரிடம் கூறினாலும் இடரே நிகழும்.

அத்துடன் ஒன்று, அவன் சுதேஷ்ணனின் சூழ்ச்சியை அறிந்திருந்தான் என சுதேஷ்ணன் அறிந்தால் அவர் அவனை கொல்லவும்கூடும். அவன் அறிந்துவிட்டான் என்பது என் வழியாக சுதேஷ்ணனை உடனடியாக சென்று சேரும். அச்சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவன் அல்ல அவன். இப்படி ஒரு சூழ்ச்சி ருக்மியின் அவையில் தனக்கு தெரிந்தது என்று எந்நிலையிலும் அவன் நாவிலிருந்து எழவேண்டியதில்லை. அதை நாவிலிருந்தே அழித்துவிடுக! எல்லைகள் எதையும் கடந்ததாக எண்ணிக்கொள்ளாதொழிக! அதுவே இத்தருணத்தில் உகந்தது.

அவ்வாறு சொல்லடுக்கிக்கொண்டதும் நான் நிறைவடைந்தேன். அதை என்னால் உரிய சொற்களில் சொல்லி அவனை நம்பவைத்துவிட முடியும். அங்கிருந்து துவாரகை வரை செல்வதற்கு ஓரிரவும் இரண்டு பகல்களும் இருக்கின்றன. நெடுநேரம் நான் சொல்லவேண்டியதை பலமுறை திருப்பித் திருப்பி சொல்லி நிறுவலாம். அத்துடன் மேலும் கூடுதலாக அவனை கட்டும் ஒரு தளையும் தேவை. தான் அறிந்ததை அவன் சுதேஷ்ணனிடமோ பிறரிடமோ கூறினால் அவனுக்கு தனிப்பட்ட முறையில் ஓர் இடர் வருமென்பதையும் உறுதியாக்க வேண்டும்.

அதற்கான வழியை நான் எண்ணி கண்டடைந்தேன். சுதேஷ்ணன் ருக்மியின் மகள் ஊஷ்மளையை மணந்தவர். சுதேஷ்ணன் மணிமுடி சூடினால் பட்டத்தரசியாக அமரவிருப்பவர் ஊஷ்மளையே. ஊஷ்மளையின் வயிற்றில் பிறந்த மைந்தன் சந்தீபன் துவாரகையின் முடிகொள்வான். ஆகவே ருக்மி பிரத்யும்னனுக்கு மேலாக சுதேஷ்ணனை ஆதரிக்கவே வாய்ப்பு. விசாருவும் ருக்மியின் மகள் காத்யாயினியை மணந்தவன். அவனை சுதேஷ்ணனின் அணுக்கனாக, ருக்மியின் மருகனாகவே பிரத்யும்னன் எண்ணுவார்.

ஆகவே அவன் இவ்வாறு நடந்ததென்று பிரத்யும்னனிடம் கூறினால்கூட அது சுதேஷ்ணனின் சூழ்ச்சியாக பிரத்யும்னன் எடுத்துக்கொள்ளக்கூடும். அவனை சுதேஷ்ணனின் தரப்பை சார்ந்தவன் என்று ஐயுறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இயல்பாகவே உள்ளன. அவ்வாறு ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்கு நான் தயங்கப்போவதுமில்லை. பிரத்யும்னனிடம் விசாரு சுதேஷ்ணனுடன் இணைந்து பிரத்யும்னனுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை நேரில் கேட்டதாகவே நான் சொல்வேன், ஏனென்றால் அது எனக்கு என்னை காப்பதற்கான வழி. அவன் சுதேஷ்ணனிடம் சென்று நிகழ்ந்ததை சொன்னால் அச்செய்தியால் பிரத்யும்னனின் பகை எழும். பிரத்யும்னனிடம் சொன்னால் சுதேஷ்ணனின் பகை மிகும். ஆனால் அவ்வாறொன்று உண்மையில் தனக்கு தெரியாதென்று சொல்லுகையிலேயே இந்த இடர்கள் அனைத்திலிருந்து அவன் முழுமையாக வெளியேறலாம்.

இவ்விரு சொற்கோட்டைகளுக்கும் அப்பால் அவன் செல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நான் நிறைவடைந்தேன். என் உள்ளம் மெல்லமெல்ல அமைதி கொண்டது. கடந்துவிடலாம். மிக எளிதுதான். அஞ்சி குழம்பி இதை பெரிதுபடுத்திக்கொள்ள வேண்டியதில்லை. “இளையோனே, நான் இன்றே கிளம்பலாமென எண்ணுகிறேன். இங்கே நாம் நீடு தங்குதல் நன்றல்ல. நம் தூது முடிந்தது. நீ என்னுடன் வருகிறாயா?” என்றேன். “ஆம், நானும் உடன் வருகிறேன்” என்று அவன் சொன்னான். “நன்று, சற்று ஓய்வுகொள்க! நானும் ஓய்வெடுக்கிறேன். மாலையிலேயே ருக்மியிடம் விடைசொல்லிவிட்டுக் கிளம்புவோம்” என்று நான் சொன்னேன். “அவரை மீண்டும் சந்திக்கவேண்டியதில்லை. நம் வணக்கத்தை அவர் அமைச்சரிடமே தெரிவித்துவிடுவோம்.” அவன் “ஆம்” என்றான்.

எங்கள் இருவருக்கும் ஒரு கூடாரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று நான் ஆடை மாற்றிக்கொண்டேன். முகம் கழுவி உணவு உண்டு கூடாரத்தில் மூங்கில்கள் நடுவே இழுத்துக் கட்டப்பட்டிருந்த தூளியில் படுத்து கண்மூடி ஓய்வு கொண்டேன். கண்களை மூடியதுமே புலன்களை விழித்துக்கொள்ள வைப்பது என் வழக்கம். நான் கண்களை மூடிக்கொண்டிருப்பதனாலேயே எதையும் அறியாமலிருக்கிறேன் என்று அவன் எண்ணுவான். ஆனால் ஓசைகளினூடாக அவனுடைய நடத்தையை, பதற்றத்தை நான் அறிந்துகொண்டிருந்தேன். அவன் குழம்பியிருக்கிறான் என்று தெரிந்தது.

அவன் நிலைகொள்ளாமல் கூடாரத்தை விட்டு வெளியே சென்றான் மீண்டும் உள்ளே வந்தான். அவன் என்னிடம் பேச விழைகிறான். ஆனால் இப்போது நான் பேசலாகாது. உடனடியாக அவனை கூட்டிக்கொண்டு துவாரகை கிளம்பலாம். ஆனால் உடனே சென்றால் அது ருக்மியிடம் ஐயத்தை உருவாக்கும். எனக்கும் சற்று ஓய்வு தேவைப்பட்டது. ஆகவே துயின்று எழுந்து அந்தியில் கிளம்பலாம் என்று நான் முடிவெடுத்தேன். உடனடியாக கிளம்புவதற்கான எல்லா சூழ்நிலையும் துவாரகையில் இருந்தன. இங்கு பேசப்பட்டதை உடனடியாகச் சென்று சொல்லியாகவேண்டும்.

நான் கண்களைத் திறந்து “இளையோனே, நான் செல்கையில் நீயும் உடன் வருகிறாய், ஓய்வெடு” என்றேன். “நான் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன். நாம் இருவரும் தனித்தனியாக அல்லவா வந்தோம்” என்றான். “ஆம், தூது முடிந்த பிறகு சேர்ந்து செல்லலாம். அதிலொன்றும் பிழையில்லை. இங்கே இயல்பாக சந்தித்துக்கொண்டோம், அதிலென்ன பிழை?” என்றேன். “ஆம், நான் வருகிறேன்” என்று அவன் சொன்னான். ஆனால் அவன் முகத்தில் மேலும் குழப்பம் இருந்தது. “நன்று” என்றபின் புன்னகையுடன் நான் ஒருக்களித்தேன்.

கண்மூடிய பின் அவன் காட்டிய அந்த முகபாவனையை என்னுள் அசையாமல் பெரு ஓவியமெனத் தீட்டி அவன் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சிறு அசைவை கண்டேன். அவன் எதையோ ஒளிக்கிறான் என்று தெரிந்தது. எதை? அவன் என்னிடமிருந்து எதையோ அப்பால் கொண்டு செல்கிறான். எதை? என் உள்ளம் கூர்கொண்டு தேடியது. சற்றுநேரம் கழித்துத்தான் அவன் குடிலுக்குள் இல்லை என்பதை உணர்ந்தேன். ஓசையின்றி எழுந்து நின்றபோது கால்கள் மரத்தரையை தொட்டதுமே என்னவென்று தெரிந்துவிட்டது. அவனிடம் புறா ஒன்று இருக்கிறது. அவன் அதை அனுப்பவிருக்கிறான். இங்கு நிகழ்ந்த செய்தியை இதற்குள் அவன் மந்தணச் சொற்களில் எழுதிக்கொண்டிருப்பான். இன்னும் சற்று நேரத்தில் புறா இங்கிருந்து கிளம்பும். சிறகடித்து அது எழுந்துவிட்டதென்றால் எதுவும் செய்ய இயலாது.

நான் உடைவாளை எடுத்து உடைக்குள் வைத்தபடி ஓசையிலாது வெளியே சென்றேன். இரு கூடாரங்களுக்கு நடுவே இருந்த சிறு இடைவெளியில் மணலில் அமர்ந்து தொடையில் ஓலையை வைத்து எழுத்தாணியால் அவன் மந்தணச் சொற்களை விரைவாக எழுதிக்கொண்டிருப்பதை பார்த்தேன். உடைவாளை உருவி கையில் வைத்துக்கொண்டு அவனை பார்த்தபடி நின்றேன். அவனால் விரைவாக எழுத முடியவில்லை. அவன் உள்ளத்தை நான் நன்கறிந்தேன். அவன் குழம்பிக்கொண்டிருந்தான். ஆனால் எழுதத் தொடங்கியதுமே அவன் உள்ளம் கூர்கொண்டது. அவனுக்கு எல்லாமே தெரிந்துவிட்டது.

அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. முகம் உணர்வுகளால் மாறிக்கொண்டிருந்தது. இளையோர் தங்கள் வாழ்வில் முதல் முறையாக மிகக் கூர்கொண்ட செயலொன்றை செய்யும்போது எழும் பதற்றம். அவ்வுணர்வுகளை அவ்வுடல் தாங்கவில்லை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அத்தருணத்தில் நான் செய்யக்கூடுவது ஒன்றே. அந்த ஓலை அங்கிருந்து செல்லலாகாது. அந்த ஓலையை பிடுங்கிவிடவேண்டும். அதை உடனே செய்ய முடியும். ஆனால் அது போதாது. அந்த ஓலையை அவன் எழுதிவிட்டான். ஆகவே இனி எந்நிலையிலும் அவன் அதை சொல்லாமல் இருக்கமாட்டான்.

அக்கணம் என்ன நிகழ்ந்தது என பலமுறை எண்ணி எண்ணி வியந்துள்ளேன். அத்தகைய தருணங்களில் மானுடர் பிறிதொரு உடலின் உறுப்பாக ஆகிவிடுகிறார்கள். விரல் செய்வதற்கு விரல் பொறுப்பல்ல அல்லவா? நான் பிறிதொன்று எண்ணாமல் மூன்றடி முன்வைத்து வாளை ஓங்கி அவன் தலையை வெட்டினேன். வாளின் வீச்சொலி எழுந்த கணம் அவன் திடுக்கிட்டுத் திரும்பி என்னை பார்த்தான். அந்தப் பார்வையையே என் வாள் இரண்டாக வெட்டியது. அவ்வுணர்வு அவ்வண்ணமே மலைத்து உறைந்து நின்ற விழிகளுடன் அவனுடைய துண்டுபட்ட தலை கழுத்தில் இருந்து சரிந்து தசைத் தொடர்பொன்றால் தொங்கியது.

குருதிக்கொப்பளிப்பின் ஒலி எழுந்தது. குருதியின் கனவுத்தன்மைகொண்ட மணம். அவன் பக்கவாட்டில் விழுந்து கால்களும் கைகளும் மணலில் துழாவித் துழாவி தவிக்க உடல் துடிக்கத் தொடங்கியது. குருதி கொப்பளித்து கொழும்சரடுகளென மணலில் இறங்கி வற்றி மறைந்தது. அவன் துடித்துக்கொண்டிருந்த மெல்லிய ஓசை என் உடலை கிளரச் செய்தது. மெய்ப்புகொண்டு என் கண்களில் நீர் நிறைந்தது. என் பற்கள் கிட்டித்திருந்தன. தந்தையே, என் உடல் காமம் கொண்டதுபோல் கிளர்ந்திருந்தது.

நான் அவன் கையிலிருந்த ஓலையை எடுத்துக்கொண்டேன். அவனை கூர்ந்து பார்த்தபின் சுருட்டி என் இடைக்கச்சையில் வைத்தேன். எவரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்தேன். பின் சிற்றடி வைத்து மெல்ல கூடாரத்திற்குள் நுழைந்து என் பயணப்பையை எடுத்தேன். பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மெல்ல வெளியே வந்தேன். என் புரவி அருகேதான் நின்றிருந்தது. அதன் கழுத்தில் கொள்ளு போடப்பட்ட பை தொங்கியது. அதில் ஏறிக்கொண்டேன். அதை தட்டி மெல்ல நடக்கச்செய்து கூடாரங்களின் நடுவிலூடாக எல்லை நோக்கி சென்றேன். என் முகத்திலும் முழங்கையிலும் குருதி தெறித்திருந்தது. மேலாடையால் அதை துடைத்துக்கொண்டேன்.