கார்கடல் - 60

ele1துரியோதனன் புரவியில் பாய்ந்து சென்று படைமுகப்பை அடைந்து கர்ணனின் அருகே புரவியிலிருந்து இறங்கி மூச்சிரைக்க அவன் தேரை அணுகினான். அவனுக்குப் பின்னால் வந்த துச்சாதனன் அவனை கூவி நிறுத்தவேண்டுமா என எண்ணிக்குழம்பி தவிப்புடன் உடன் இறங்கி கூடவே சென்றான். தொடையில் அறைந்து வெடிப்பொலி எழுப்பிய துரியோதனன் உடைந்த பெருங்குரலில் “இங்கு ஏன் வந்து நின்றிருக்கிறீர்கள், அங்கரே? தாங்கள் தங்கள் பாசறைக்கே மீளலாம். கதிரவன் மைந்தருக்கு இரவில் என்ன வேலை? இன்று பகல் முழுக்க எனக்காக போரிட்டிருக்கிறீர்கள். பாண்டவ குலத்து இளையோனின் அம்புகளை ஏற்று உங்கள் உடல் களைத்திருக்கிறது. செல்க, சென்று மருத்துவம் செய்துகொள்ளுங்கள்! மதுவருந்தி ஓய்வெடுங்கள். நாளை இங்கு எவரேனும் எஞ்சினால் வந்து சேர்ந்துகொள்ளுங்கள். எங்களுக்காக நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள வேண்டியதில்லை” என்றான்.

அச்சொற்கள் கர்ணனை துணுக்குறச் செய்தாலும் அவன் உடனே தன்னை திரட்டிக்கொண்டான். அவன் விழிகள் துரியோதனனை வந்து தொட்டதுமே அவனது உணர்வுகள் என்ன என்று புரிந்துகொண்டான். அவன் சற்று விழி சுருங்க உதடுகள் அசைந்து அரைச்சொல்லொன்றை எழுப்ப முயன்றன. ஆனால் அவனால் பேசமுடியவில்லை. அவனை மறித்த துரியோதனன் “நீங்கள் சொல்லவிருப்பதென்ன என்று எனக்கு புரிகிறது. எனக்காக வந்திருக்கிறீர்கள். அங்கநாட்டுப் படையனைத்தையும் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக. நண்பன் என்று தோள்தழுவி என்னுடன் களத்தில் நின்றிருப்பதற்காக. இதோ அதை உலகோர் அனைவரும் பார்த்துவிட்டார்கள். சூதர்கள் அனைவரும் பாடத்தொடங்கிவிட்டார்கள். பொற்தேரில் நீங்கள் களத்திற்கு வந்து நின்றதே ஒரு காவியத்திற்கு போதுமானது. முதல் நாள் போரில் வெல்லற்கரியவராக இங்கேயே நின்று பெருகியதும் காவியத் தருணங்களே. உங்கள் புகழ் நீடுவாழ்வதற்கு அதுவே போதும். செல்க!” என்றான்.

உரத்த குரலில் பெரிய கைகளை விரித்தபடி “இனி என்ன? இதோ எஞ்சியிருக்கும் இளையோருடன் நான் இக்களத்தில் நின்று அக்கீழ்மகன்களின் அம்பினால் உயிர்துறக்கிறேன். அது பிறிதொரு காவியம். அதைப் பாடும் சூதர்களுக்கு எங்கும் அவை அளிக்கப்படாது. அவர்களுக்கு பொன்னும் வெள்ளியும் ஈவதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். ஆயினும் அவர்கள் பாடுவார்கள். புறநகர்களின் மதுவிடுதிகளில், காட்டாளரின் குடியிருப்புகளில் முழவொலித்து அவர்கள் என்னை பாடுவார்கள். ஒலிக்கும் இடத்தை இருளச்செய்யும் மங்கலமழிந்த காவியம். நம்பிய ஆசிரியர்களாலும் தோழர்களாலும் கைவிடப்பட்டு ஓர் அறிவிலா அரசன் களத்தில் மடிந்ததை சொல்வது. அக்காவியம் உங்கள் புகழ்க்காவியத்துடன் கலக்காமலிருக்கட்டும். கிளம்புக!” என்றான்.

“நீங்கள் நிலைகுலைந்திருக்கிறீர்க்ள், அரசே” என்றான் கர்ணன். “ஆம், நிலைகுலைந்திருக்கிறேன். ஏனெனில் சற்று முன்னர் என் அணுக்கனாகிய இளையோனை அனலில் இட்டுவிட்டு இங்கு வந்தேன். அவன் எரியத்தொடங்குகையில் உணர்ந்துகொண்டேன், உங்கள் உள்ளம் என்னவென்று. அவன் உள்ளம் எப்போது திரிந்தது தெரியும் அல்லவா? அவர்கள் வாரணவதத்தில் எரிந்ததாக செய்தி வந்த அன்று. அன்று முதல் அவன் எனக்கு தம்பியல்லாதானான். என்னை வெறுத்து அழித்து தன்னுள் எழுந்த எதையோ நிகர் செய்துகொள்ள துடித்தான். அது தன்னால் இயலாதென்று கண்ட பின்னர் தன்னையே அழித்துக்கொள்ளலானான். இன்று இதோ எலும்புக்குவையென சிதையிலிருந்து எரிகிறான். என் இளையோன். என் நெஞ்சில் வளர்ந்த மைந்தன். அவனில் எரிந்த அனலும் நானே… அவனிலிருந்து என்னை வெறுத்தவனும் நானே.”

“அங்கரே, அன்றுதான் உங்கள் விழிகளிலும் நான் ஒன்றை பார்த்தேன். அவன் விழிகளில் எழுந்த ஒன்று. அதுதான் உங்களை இத்தனை உளம் திரிபடையச் செய்திருக்கிறது. அவனும் நீங்களும் ஒன்றே. அவன் என்னை வெறுக்க எண்ணி இயலாதவனானான். நீங்கள் என்னை விரும்ப எண்ணி இயலாதான ஒருவர். இன்று இக்களத்தில் என்னை பழி தீர்க்கிறீர்கள். எதற்கு பழி தீர்க்கிறீர்கள் என்பதை நீங்களும் அறிவீர், நானும் அறிவேன். என் பிணம் மீது நின்று தருக்குங்கள். என் முகத்தில் உமிழ்ந்து உங்கள் அழல் களைந்துகொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் உங்களை வெறுக்காமல் விண்ணுலகுக்கு ஏறிச்செல்ல முடியும்…” என்றான் துரியோதனன். “இத்தகைய பேச்சுகளுக்கான இடம் அல்ல இது, அரசே. நாம் சொற்களால் இங்கு ஒருவரை ஒருவர் புண்படுத்திக்கொண்டு அடையப்போவதென்ன? அவர்கள் இரவுத்தாக்குதலுக்கு வரக்கூடும் என்று அஸ்வத்தாமர் ஆணையிட்டதன் பேரில் இங்கு நான் வந்திருக்கிறேன். இன்றைய படைசூழ்கையை இன்னமும் நாம் வகுக்கவில்லை. எவ்வண்ணம் அவர்கள் எழப்போகிறார்கள் என்று அறிந்த பின்னரே அதை வகுக்க முடியும். அதற்கு குறைவான பொழுதே இருக்கிறது” என்றான் கர்ணன்.

“எத்தனை படைசூழ்கை அமைத்தாலும் அதில் நின்று போரிடுபவர் உளம் கொண்டாலொழிய அது வெற்றியென்று ஆவதில்லை” என்று துரியோதனன் சொன்னான். “இன்று பகல் முழுக்க நீங்கள் போரிட்டது வெற்றிக்காகவா? சொல்க!படைசூழ்கைக்கு உங்கள் பங்குதான் என்ன? அனைத்துப் போர்முனைகளிலும் ஏன் தோற்று பின்னடைந்தீர்கள்? பீமசேனனை வெல்ல இயலாத வில்லவரென்றால் பரசுராமரிடம் நீங்கள் பெற்றதுதான் என்ன? உங்கள் பேராற்றல் மிக்க அம்புகள் எங்கு போயின? அங்கரே, இன்று அந்திப்போருக்கு அவர்கள் ஏன் எழுகிறார்கள்? ஏனென்றால் பகல் போரில் உங்களை வென்று புறந்தள்ளியிருக்கிறார்கள். வில்லவனென்று ஒருபோதும் அறியப்படாத ஒருவனால் ஏழுமுறை அம்பால் அடித்து பின்னடையச் செய்யப்பட்டிருக்கிறீர்கள். இன்று அர்ஜுனன் வில்லுடன் எழுகையில் நீங்கள் அஞ்சிய முயலென சிதறி ஓடுவீர்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.”

கர்ணன் கொந்தளிப்புடன் கைதூக்க தன் கையசைவால் தடுத்து “அது உண்மை! அது உண்மை!” என துரியோதனன் கூச்சலிட்டான். “நீங்கள் அஞ்சுகிறீர்கள் என்று நான் எண்ணவில்லை. ஆம், அங்கர் அஞ்சமாட்டார் என்பதை பிற எவரையும்விட நான் அறிவேன். ஆனால் அங்கர் என்மேல் வஞ்சம் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். என்னை பழி தீர்க்கவே களத்தில் நின்றிருக்கிறார் என்பதை தெள்ளிதின் அறிவேன்.” கர்ணன் “அரசே, நம் நட்பு எல்லைகடந்தது என்றாலும் சொல்லெடுப்பதற்கு ஓர் எல்லையுண்டு” என்று சீற்றத்துடன் கூவினான். “ஆம், எல்லையுண்டு. அதனால்தான் இதுநாள்வரை இச்சொற்களை நான் சொன்னதில்லை. இன்று இறப்பின் கணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இனி எனக்கு எந்த அணுக்கமும் இல்லை. எவரிடமும் எனக்கு தயக்கமும் இல்லை. நீங்கள் என்னை கைவிட்டது வஞ்சத்தினால்தான். வஞ்சத்தினாலேயேதான். வேறில்லை. வேறெதுவும் இல்லை.”

“நான் அறிவிலி. நட்பும் அன்பும் நெறிகளும் நன்றியும் அனைத்தும் குருதிமுன் பொருளற்றவையாகுமென்பதை அறியாத அடுமடையன். குருதி மட்டுமே இக்களத்தை ஆள்கிறது. எந்நிலையிலும் என்னுடன் நின்று மடிந்து சிதையில் எரிபவர்கள் குருதியால் என்னுடன் கட்டப்பட்டவர்கள் மட்டும்தான். அச்சரடை அறுப்பதற்காக தன் வாழ்நாளெல்லாம் சொல்திரட்டி வஞ்சம் கூட்டியவன் அறுக்க இயலாத குருதியை களத்தில் சிந்தி தன் உடன்பிறந்தாருடன் கட்டித்தழுவி அங்கு எரிந்துகொண்டிருக்கிறான். அதையன்றி பிறிதெதையும் நான் நம்பியிருக்கலாகாது. அதையன்றி பிற அனைத்தையும் நம்பியதால்தான் யாருமின்றி இக்களத்தில் நின்றிருக்கிறேன். கைவிடப்பட்டவனாக, வஞ்சிக்கப்பட்டவனாக, இழிவடைந்தவனாக, தன்னந்தனியனாக நின்றிருக்கிறேன்.”

கர்ணன் உதடுகள் துடிக்க கைகளால் விஜயத்தை இறுகப் பற்றியபடி “அரசே, என் சொற்களை செவிகொள்ளுங்கள். இன்றேனும் நான் முழுதுளம் திறக்க ஒப்புக!” என்றான். “உளம் திறக்க உங்களால் இயலாது. வாழ்நாள் முழுக்க எப்போதேனும் எவரிடமேனும் உளம் திறந்திருக்கிறீர்களா? உங்கள் துணைவியரிடமோ மைந்தரிடமோ? உங்கள் உயிர்பகிர்வதாக நீங்கள் சொன்ன என்னிடமோ? நீங்கள் ஏன் களத்தில் பின்னடைகிறீர்கள் என்று அறியாமல் நான் இங்கு அரியணை அமர்ந்திருக்கவில்லை. உங்களை வந்து சந்தித்தது யார் என்றும் நீங்கள் அவர்களுக்கு அளித்த சொல்லுறுதி என்னவென்றும் நான் அறிவேன்” என்றான் துரியோதனன். “ஆம், நான் நன்கறிவேன். நீங்களே அதை என்னிடம் வந்து சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். சொல்லமாட்டீர்கள் என பின்னர் உணர்ந்தேன். சொல்லாதொழிய உங்களுக்கு உரிமை உண்டு என என்னை அமைதிப்படுத்திக்கொண்டேன்.”

கர்ணன் நடுங்கத்தொடங்கினான். “முதலில் அதை ஒற்றர்கள் சொன்னபோது அவ்வாறு சொல்லளிக்கும் உரிமை உங்களுக்கு உண்டென்றும் அதை தடுக்கலாகாதென்றும்தான் என் ஆழம் சொன்னது. ஏனெனில் அளித்துப் பழகிய கைகள் உங்களுடையவை. அளிகொண்ட நெஞ்சத்தவர் நீங்கள். வாழ்நாள் முழுக்க நீங்கள் உளம் நிறைத்து வழிபட்ட ஒருவர் வந்து கேட்கும்போது இறுதித்துளிவரை அளிக்காமலிருக்க உங்களால் இயலாது. இதோ நின்றிருக்கிறான் என் இளையோன், உடனே திரும்பி இவனிடம் நான் சொன்னேன், எங்கு இறுதியாக வென்று நிமிர வேண்டுமோ அங்கு வென்றுவிட்டார் அங்கர் என்று. உடன் வென்று எழுந்தவன் நண்பனாகிய நானே என்று. ஆனால்…” என்றபின் குரல் மீண்டும் உடைந்து தழைய, விழிநீர் கோக்க துரியோதனன் சொன்னான் “என் உடன்பிறந்தார் ஒவ்வொருவராக களம்படுகையில் அவர்களுக்கு வில்வேலியென நின்றிருப்பீர்கள் என்று நான் நம்பிய நீங்கள் தோற்றுப் பின்னடைகையில் என்னால் பிறிதெதையும் எண்ண இயலவில்லை, அங்கரே. என்னை பொறுத்தருள்க!”

விழிநீரைத் துடைத்தபின் துரியோதனன் தொடர்ந்தான் “நீங்கள் அளித்த சொல் எதுவாயினும் ஆகுக! ஆனால் களத்தில் பின்னடையாதீர்கள். அளிகூர்ந்து இச்சொல்லை கொள்க, களத்தில் விழவேண்டாம்! நின்று பொருதுக! வேண்டுமென்றால் உயிர் கொடுங்கள். கதிரவன்போல் கைகள்கொண்ட வள்ளலுக்கு அதுவும் உகந்ததே. அருள்கூர்ந்து இழிவடையாதீர்கள். உங்கள் இழிவால் ஏழுமுறை இழிவடைபவர்கள் நானும் என் தம்பியரும்” என்றபின் “திரும்புக!” என்று அருகே நின்ற துச்சாதனனிடம் சொல்லி புரவியை திருப்பினான். கர்ணன் பின்னால் அழைத்த குரலை அவன் கேட்கவில்லை. புரவி விரைய அவன் குழல்கற்றைகள் அவிழ்ந்து பறந்தன. அவன் உடல் தளர்ந்து நிலையழிய புரவியின் கழுத்தை பற்றிக்கொண்டான்.

விரைவுத்தேரில் அவனை நோக்கி வந்த அஸ்வத்தாமன் வளைந்து நிலைத்து உடன்வந்தபடி “அனைத்தும் ஒருங்கிவிட்டன, அரசே. அங்கருக்கும் தந்தைக்கும் எனக்கும் மட்டும்தான் இருளில் ஒலியால் போர்செய்யும் சப்தஸ்புடம் எனும் கலை தெரியும். ஆகவே எங்களுடன் அசுரர்களின் நிரை தேவையில்லை. பிற அனைத்துப் படைப்பிரிவுகளுடனும் அசுரர்கள் பிரிந்து இணைந்துகொள்ளும்படி அமைத்துவிட்டேன். அசுரர்களின் முழவோசை கேட்டும் ஒளியாணையைக் கண்டும் ஷத்ரியர்கள் போரிடவேண்டும். நிலவு கீழ்த்திசையிலுள்ளது. அது மேலெழுகையில் பாண்டவர்கள் தாக்குவார்கள் என்று எண்ணுகிறேன்” என்றான். “உங்கள் தந்தை இப்போரை ஏற்கிறாரா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம், அவரிடம் பேசிவிட்டேன்” என்றான் அஸ்வத்தாமன்.

“நன்கு தெளிவுறுக! களமெழுந்தபின் அவர் நெறிபேசக்கூடும். எவரைக் கொல்வதென்றும் எவரைப் பேணுவதென்றும் அங்கு நின்று முடிவுகள் எடுக்கக்கூடும்” என்று துரியோதனன் சொன்னான். அதிலிருந்த சினக்குறிப்பை புரிந்துகொண்டு அஸ்வத்தாமன் சீற்றம்கொண்டு “தாங்கள் பேசுவது எனக்கு புரிகிறது. ஆனால் இப்போரை இங்கு முன்நின்று நடத்திக்கொண்டிருப்பவர் தந்தை. அதை மறக்கவேண்டாம்” என்றான். “ஆம், மறக்கவில்லை. அவர் ஒவ்வொருநாளும் இங்கு புகழ்பெற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய எதிரியை பலமுறை வென்றுவிட்டார். அவனுக்கு உயிர்க்கொடை அளித்து மேலும் பெருகிவிட்டார். பிறர் கொல்லப்பட்டால் அவருக்கென்ன?” என்றான் துரியோதனன். “நான் அவருடன் பேசியாகவேண்டும். உடனே பேசியாகவேண்டும்.”

அஸ்வத்தாமன் குரல் மாறுபட்டு “வேண்டாம், பொறுங்கள்!” என்றான். துரியோதனன் புரவியை முடுக்கி படைகளினூடாக பாய்ந்து சென்று துரோணரை அணுகினான். அஸ்வத்தாமனும் துச்சாதனனும் அவனுக்குப் பின்னால் வந்தனர். சுபாகு மேலும் பின்னிலிருந்து விசைகூட்டி அருகே வந்து “அங்கரிடம் பேசுகையிலேயே உங்கள் நிலையை முற்றாக இழந்துவிட்டீர்கள், மூத்தவரே. அரசர் பேசும் சொற்களல்ல அவை” என்றான். “ஆம், இவை கீழ்மகன் பேசுபவை, கல்லாக் களிமகனோ காட்டு அசுரனோ பேசுபவை. அரசனாக நின்று சலித்துவிட்டேன். என் ஆழத்தில் நான் எவனோ அவன் எழட்டும். சில சொற்களை அவரிடம் சொல்லாமல் நான் செல்லலாகாது” என்றான் துரியோதனன். “அவை என் தம்பியருக்காக… அவற்றை அவர் செவிகொண்டே ஆகவேண்டும்.” அஸ்வத்தாமன் துயருடன் தளர்ந்து புரவிமேல் அமர்ந்தான்.

குதிமுள்ளை அழுத்தி புரவியை கனைத்துப் பாயச்செய்து துரோணரை அணுகிய துரியோதனன் உரத்த குரலில் “ஆசிரியரே, இன்று இரவுப்போரிலும் உங்கள் முன் எழப்போகிறவன் உங்கள் அன்புக்குரிய மாணவனே. உங்களால் அவனை எதிர்க்க இயலாது எனில் எதற்கு இந்தப் போர்க்கோலம்? செல்க, இப்போரை நாங்களே நடத்திக்கொள்கிறோம்!” என்றான். துரோணர் திடுக்கிட்டு “என்ன சொல்கிறாய்?” என்றார். துரியோதனன் “நான் சொல்ல விரும்பியது இதுவே. செல்க, இப்போரை நீங்கள் நடத்த வேண்டியதில்லை! நீங்கள் நடத்துவீர்கள் என்றால் ஒவ்வொரு கணமும் அர்ஜுனன் முன் நமது படைகள் ஆற்றல் இழந்து மடிவதையே நான் காணவேண்டியிருக்கும். செல்க, இப்போரை நாங்கள் நிகழ்த்துகிறோம்! நாங்கள் வென்றாலும் தோற்றாலும் அது எங்கள் இறுதிக்குருதி வரை போரிட்டதாகவே இருக்கும். எங்கள் மேல் அகல்வு கொண்டவரை நம்பி நெஞ்சுடைந்து களத்திலிறந்தால் வீண்பேயுருவாக விண்ணிலெழுவோம். செல்க!” என்று கூவினான்.

“நீ நிலைமறந்து பேசுகிறாய்!” என்று சினத்தை அடக்கியபடி துரோணர் சொன்னார். “நிலை என ஒன்று இப்போது எனக்கில்லை. இதோ என் இளையோனின் சிதையின் அருகிலிருந்து இங்கு வருகிறேன். என் தங்கைகொழுநன் இன்று களம்பட்டான். என் நெஞ்சுக்கினிய பூரிசிரவஸ் கொல்லப்பட்டான். இன்று களத்தில் இப்புவியில் இனியோரென நான் கருதிய அனைவருமே மறைந்துவிட்டார்களென்று உணர்கிறேன். அவர்களுக்கு அங்கரையும் உங்களையும்தான் வேலியென்று அமைத்திருந்தேன். வேலி நெகிழ்ந்து எதிரிக்கு இடம்கொடுக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை.” துரோணர் சீற்றத்துடன் “நீ அறிவாய், முழு விசையுடன், சினத்துடன் நான் இன்று போரிட்டிருக்கிறேன்” என்றார். “வஞ்சம்கொண்டு எழுந்து அனைத்து நெறிகளையும் மீறிச்சென்று பொருதியிருக்கிறேன்.”

“இல்லை. நீங்கள் கொள்ளும் சீற்றம் எதிரியிடமல்ல, உங்களிடம்தான். உங்கள்மேல்தான். ஏனென்றால் உங்களால் உங்கள் முதல் மாணவனை வெல்ல இயலவில்லை. அவனை நீங்கள் வென்றால் நீங்கள் அளித்த கல்வியை வெல்கிறீர்கள். நீங்கள் ஆசிரியரென தோற்கிறீர்கள். இங்கு களத்தில் உங்களுக்கு இருக்கும் உளப்போராட்டம் வீரனென வெல்வதா ஆசிரியனென வெல்வதா என்பதே. ஆசிரியரென்றே உங்கள் உள்ளம் உங்களை தேர்வு செய்கிறது. ஒருபோதும் உங்கள் முதல் மாணவனை நீங்கள் கொல்லப்போவதில்லை. முதல் மாணவனை என்ன, இளைய பாஞ்சாலனையே உங்களால் கொல்ல இயலவில்லை. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், எத்தனை முறை திருஷ்டத்யும்னன் உங்கள் முன் வந்தான்? ஒருமுறையாவது அவனைக் கொல்லும் அம்பை அவன் முன் எடுத்தீர்களா? இல்லை, பொய்யுரைக்க வேண்டாம். உங்கள் விழிகளில் நான் காண்கிறேன், உங்களால் அவனை கொல்ல இயலாது. நீங்கள் கொல்லப்போவதில்லை.”

குரல் தழைய “அவனை நான் கொல்கிறேன்” என்றார் துரோணர். “கொல்லமாட்டீர்கள். எந்நிலையிலும் அவனுக்கெதிராக உங்கள் பேரம்புகள் எழா. இதை அறியாத எவரும் இந்தப் படையில் இல்லை” என்று துரியோதனன் உரக்கக் கூவினான். “இன்று உங்கள் கையில் வில்லிருந்தும் ஏன் ஜயத்ரதன் களத்தில் விழுந்தான்? ஏன் பூரிசிரவஸ் கையறுந்து இறந்தான்? என் இளையோர் ஏன் மண்படிந்து கிடந்தனர்? உங்கள் உளம் எங்களுக்காக கனியவில்லை. உங்கள் உள்ளாழத்தில் நீங்கள் எங்களுடன் இல்லை. இன்றல்ல, மாணவனாக உங்கள் குருநிலையில் பயில வந்தபோதே நான் உணர்ந்த ஒன்று, நான் உங்கள் உள்ளத்தில் இல்லை என்பது. இந்தப் போரில் கௌரவர் வெல்வதனால் நீங்கள் அடையப்போவது எதுவும் இல்லை. போருக்குப் பின் மைந்தனுக்காக உத்தரபாஞ்சாலத்தை பேசி வாங்குவதற்கு உங்களால் இயலும். கைம்மாறு செய்ய உங்கள் மாணவர்கள் உங்களுடன் நிற்பார்கள்” என்றான்.

துரோணர் கடும்சினத்துடன் வில்லை எறிந்து “அறிவிலி! இச்சொற்களுக்காக உன் நாவை அறுப்பேன்!” என்றார். “ஆம், இது ஒன்றைத்தான் எதிர்பார்த்தேன். இத்தனை வஞ்சக் கரவுடன் என் தரப்பில் நின்று போரிடுவதைவிட வில்லெடுத்து என்னை எதிர்த்து வாருங்கள். என் நெஞ்சக்குலை பிழுதெடுத்து வீசுங்கள். அதுவே உங்கள் மாணவனுக்கும் உகந்ததாக இருக்கும்” என்று சொன்னபடி நெஞ்சு நிமிர்த்தி துரோணருக்கு எதிராக சென்றான் துரியோதனன். “மூத்தவரே!” என்று தோள்பற்றிய துச்சாதனனை தட்டிவிட்டுவிட்டு “நீங்கள் என்னை கொல்லலாம். ஆனால் என் உள்ளத்தில் எழுந்த இந்தச் சொற்கள் உங்கள் ஆத்மாவை அறைந்தபடிதான் இருக்கும். உங்கள் ஆற்றலின்மையால் அல்ல, உங்கள் அன்பின்மையால் கொல்லப்பட்டவர்கள் என் இளையோரும் ஜயத்ரதனும் பூரிசிரவஸும். உங்கள் மாணவர்கள் வென்றெழ வேண்டுமென்று உங்களால் கைவிடப்பட்டவர்கள் அவர்கள்” என்றான்.

“இதோ எதுவும் நடவாதவர்போல் நீள்தாடியை நீவியபடி தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த நடிப்பு எதற்காக? இது போர்! இங்கு ஒருகணத்தில் அனைத்தும் திரை கலைந்துவிடுகின்றன. உங்கள் தவமும் சீற்றமும் இருவகை நடிப்பென்று காட்டிக்கொடுத்துவிடுகின்றது உங்கள் தயக்கம்” என்றான் துரியோதனன். “என்னை இழிவு செய்யும்பொருட்டு இங்கு வந்திருக்கிறாயென்று எண்ணுகின்றேன். அவ்விழிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. செல்க!” என்றார் துரோணர். “எவருக்கும் இழிவு செய்ய நான் வரவில்லை. இங்கு நான் வணங்கும் அனைவரும் என்னை இழிவு செய்வது எப்படி என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்று துரியோதனன் கூவினான். “சொல்லுங்கள்! உங்களை மீறி இன்றைய அழிவுகள் நிகழ்ந்ததென்றால் நீங்கள் கற்ற விற்கல்வியின் பொருள் என்ன? உளம்தொட்டுச் சொல்லுங்கள், இங்கே அஸ்வத்தாமன் அம்புபட்டு வீழ்ந்திருந்தால் உங்கள் நிலை இப்படியா இருந்திருக்கும்?”

அவன் அவரை நோக்கிச் சென்று நெஞ்சை நிமிர்த்தி “என் விழிதொட்டுச் சொல்லுங்கள் ஆசிரியரே, அஸ்வத்தாமனைக் கொல்வதில்லை எனும் சொல்லை நீங்கள் இளைய பாண்டவனிடமிருந்து பெற்றீர்களா இல்லையா?” என்றான். “ஆம், பெற்றேன்” என்றார் துரோணர். சினத்துடன் முன்னெழுந்து வந்த அஸ்வத்தாமன் “தந்தையே, என்ன இது! நீங்கள் வாழ்நாள் முழுக்க என்னைத் தொடரும் பெரும் சிறுமையை என்மேல் ஏற்றிவிட்டீர்கள்” என்றான். “ஆம், நான் தந்தை. தந்தையன்றி பிறிதேதுமில்லை. நாடும் கலையும் நெறியும் தெய்வங்களும்கூட என் மைந்தனுக்குப் பின்னரே எனக்கு ஒரு பொருட்டு. இப்போருக்கு எழுவதற்கு முன்னரே அவனிடம் சொல்பெற்றேன், ஒருபோதும் அவன் என் மைந்தனை கொல்லலாகாதென்று. ஒருநாள் அவர்கள் இருவரும் களம்நின்று போரிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆகவே நான் அதை கோரிப்பெற்றேன்” என்றார் துரோணர்.

துரியோதனன் “அதற்கு மாறாக நீங்கள் அவனுக்கு அள்ளி அள்ளி அளித்துக்கொண்டிருக்கிறீர்கள் இக்களத்தில். எங்கள் உயிரை, உங்கள் இனியவர்களின் உயிரை, இந்தப் படைப்பிரிவின் அத்தனை பேரையும் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். எங்கள் அத்தனை பேரையும் அந்த அடியிலாத பெரும்பிளவில் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான். துரோணர் “இல்லை, அதற்கு நிகராக நான் எதுவும் அவனுக்கு சொல்லளிக்கவில்லை” என்று கூவினார். “இந்தப் பெரும்பழியை நீ என் மேல் சுமத்தலாகாது. நான் தந்தையென்றே இக்களத்தில் நிற்கிறேன். என் மைந்தனை காத்துக்கொண்டே போரிடுகிறேன். ஆம், பிற எவரையும்விட என் மைந்தன் எனக்கு முதன்மையானவனே. ஆனால் ஒருகணமும் இப்போரில் நான் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. என் முழு ஆற்றலுடன் இக்களத்தில் நிற்கிறேன். நீயே அறிவாய் இந்த இரு நாட்களில் நான் இழைத்த அழிவு என்னவென்று.”

“நீங்கள் ஒரு பெருவீரனைக்கூட அவர்கள் தரப்பில் கொல்லவில்லை” என்று துரியோதனன் சொன்னான். “துருபதரையோ திருஷ்டத்யும்னனையோ பாண்டவர்களில் ஐவரில் ஒருவரையோ. ஏன் சாத்யகியையோ சிகண்டியையோகூட. ஆசிரியரே, பாண்டவ மைந்தரில் ஒருவர்கூட உங்கள் கைகளால் கொல்லப்படவில்லை. சாத்யகியிடம் தோற்று நீங்கள் பின்னடைந்த செய்தியை கேட்டதுமே எண்ணினேன், அது சாத்யகியின் வெற்றி அல்ல உங்கள் தோல்வி என்று. நீங்கள் தோற்றது உங்கள் உளவீழ்ச்சியின் முன்” என்றான். “சாத்யகியிடம் நான் தோற்கவில்லை” என்று துரோணர் சொன்னார். “அவனை அப்போதே நான் கொன்றிருக்க முடியும். ஆனால் அவன் விழிகளில் இருந்த நீர் என்னை தடுத்தது. அவன் தன் மைந்தருக்காக அழுதுகொண்டிருந்தான்.”

துரியோதனன் “எதுவானாலும் பின்னடைந்தீர்கள் என்பதே உண்மை. சாத்யகியிடம் துரோணர் தோற்றுவிட்டார் என்றால் அவர்கள் எதைத்தான் இனி அஞ்சவேண்டும்?” என்றான். அஸ்வத்தாமன் உரத்த குரலில் ஊடே புகுந்தான். “அரசே, தந்தை அளித்த அச்சொல்லைப் பற்றி எனக்குத் தெரியாது. அச்சொல்லால் நூறுமுறை சிறுமைகொண்டு கீழ்மகனென நின்றிருக்கிறேன். இது என் வஞ்சம், இப்போரில் இனி நான் நெறியென்றும் அளியென்றும் எதையும் எண்ணப்போவதில்லை. எப்பழி கொண்டாலும் தயங்கப்போவதில்லை” என்றான். “மைந்தா!” என்றபடி அவன் சொற்களை தடுத்தார் துரோணர். “வஞ்சினங்கள் உரைக்காதே. வஞ்சினங்களுக்கப்பால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இப்போர்” என்றார். அஸ்வத்தாமன் தளர்ந்து “என் வஞ்சம் ஒருநாளும் அழியாது. என் மேல் என் தந்தை சுமத்திய கீழ்மையை இறவாதொழிந்து பிறவாது நிலைத்து இந்நிலத்தில் நின்று நீக்கிக்கொண்டிருப்பேன்” என்றபின் தலைகுனிந்து கண்களை அழுத்தி விழிநீரைத் துடைத்து தேரைத் திருப்பி விரைந்து சென்றான்.

துரோணர் “நான் உன்னிடம் என்னதான் சொல்வது? இந்தப் போரில் நான் என் இறுதி அம்புடன் போரிடுவேன். இங்கு திருஷ்டத்யும்னனையும் துருபதனையும் கொல்வேன். இக்களத்தில் ஓர் அம்பையும் மிச்சம் வைக்கமாட்டேன். இதற்கப்பால் ஒரு சொல்லை உனக்கு நான் அளிப்பதற்கில்லை” என்றார். துரியோதனன் உடல் தளர்ந்து “சொற்கள் எதையும் நம்பும் நிலையில் நானில்லை. அனைத்துச் சொற்களிலிருந்தும் உயிரை உறிஞ்சிக்கொள்கிறது இக்களம். வெற்றுச் சொற்கள், வெற்றுத் திட்டங்கள், வெற்றுக் கனவுகள். வீண், இக்களத்தில் நான் கொண்ட அனைத்தும் வீணாகிக் கிடக்கின்றன” என்றபின் புரவியைத் திருப்பி விரைந்து சென்றான். துச்சாதனனும் சுபாகுவும் அவனை தொடர்ந்தனர்.

தொலைவிலிருந்து அவனை நோக்கி வந்த கர்ணன் தேரைத் திருப்பி எதிரே நின்று “அரசே, உங்கள் சொற்கள் எந்த அனலிலிருந்து எழுந்தன என்று எனக்குத் தெரியும். நான் ஒன்றே சொல்வதற்கிருக்கிறது” என்று உரத்த குரலில் சொன்னான். “ஆம், நான் அளித்த சொற்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன். ஆகவேதான் களத்தில் தோற்றேன். இம்முறை முழுதூக்கத்துடன் எழுவேன். இன்று பாண்டவர்களை களத்தில் வெல்வேன். அர்ஜுனனை இன்று கொல்வேன். இன்றே என் நச்சம்பை கையிலெடுப்பேன். இது என் ஆணை!” என்றான்.

துரியோதனன் “நான் உங்களை மீறிய சொல்லெதையும் உங்களிடமிருந்து பெற விரும்பவில்லை” என்றான். “இல்லை. இது என் உளம் எழுந்து நான் அளிப்பது. நானே சினந்து எடுக்கும் வஞ்சினம். இன்றைய போரில் நான் என் முழு அம்புகளுடன் வெளிப்படுவேன். இன்று பாண்டவர் களத்தில் தாங்கள் ஒருநாளும் காணாத பேரழிவை காண்பார்கள்” என்றான். துரியோதனன் திரும்பி நேர்விழியால் நோக்கி “இன்று உங்கள் அரவம்பு எழுமா?” என்று கேட்டான். “ஆம், எழும். ஐயமே வேண்டாம், இன்று அரவம்பு எழும்” என்றபின் கர்ணன் திரும்பிச்சென்றான்.