கார்கடல் - 40

ele1அஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்தில் ஏகாக்ஷரின் கதை கேட்டு அமர்ந்திருந்த காந்தாரி மெல்லிய சீறல் ஒலியுடன் தலை குனிந்து விழிநீர் பெருக்கினாள். அவள் கண்களைக் கட்டியிருந்த நீலப் பட்டுத் துணியை நனைத்து அவ்விழிநீர் ஊறிப்பரவியது. காந்தாரியின் அருகே நின்றிருந்த சத்யசேனை குனிந்து அவள் தோளைப் பற்றி மெல்ல தட்டி “அரசி! அரசி!” என்றாள். காந்தாரி இரு கைகளாலும் கன்னத்தை அழுந்தத் துடைத்து மூச்சை இழுத்து சீராகி “ம்” என்று முனகினாள். போதும் என்பதுபோல் சத்யசேனை கைகாட்டினாள். அதை நோக்காமலேயே உணர்ந்து மேலும் சொல்லும்படி காந்தாரி கையசைவால் ஏகாக்ஷருக்கு ஆணையிட்டாள். ஏகாக்ஷர் மீண்டும் சொல்லத் தொடங்கினார்.

பேரரசி, அபிமன்யு கொல்லப்பட்டதை அறிவித்து காந்தாரரின் முரசுகள் முழங்கத் தொடங்கின. அச்செய்தியை நம்ப இயலாததுபோல் பிற முரசுகள் நெடுநேரம் அமைதி காத்தன. பின்னர் ஈர விறகு பற்றிக்கொள்வதுபோல் அச்செய்தி பிற முரசுகளிலும் எழத்தொடங்கியது. முரசொலிகள் இணைந்து “இளைய பாண்டவ மைந்தர் களம்பட்டார்! வீழ்ந்தார் அபிமன்யு. விண்ணுலகேகினார் இந்திரனின் பெயர்மைந்தர்” என்று முழங்க அதற்குள் அச்செய்தி பாண்டவப் படைகள் முழுக்க சென்றடைந்துவிட்டிருந்தது. பிற ஒலிகளோ வாழ்த்தொலிகளோ இன்றி பாண்டவப் படை குளிர்ந்து உறைந்து ஓசைகள் நின்றிருந்தது.

யுதிஷ்டிரர்தான் முதலில் நிலை மீண்டார். தன் உடலில் குடியேறிய துடிப்புடன் பாய்ந்திறங்கி நிலத்தில் நின்று “இளையோனே!” என்றார். “இளையோரே! எங்கே நகுலன்? சகதேவன் எங்கே? உடனே அழைத்து வருக அவர்களை!” என்று தன் ஏவலருக்கு ஆணையிட்டார். அவர்கள் அங்குமிங்கும் ததும்பி விலக “அழைத்து வருக இளையோரை! இப்போதே… உடனே” என்று கூச்சலிட்டு என்ன செய்வதென்று அறியாமல் காலில் தடுக்கிய வில் ஒன்றை எடுத்து அப்பால் வீசினார். அவரை நக்க வந்த புரவியின் தலையை அறைந்தார். அதற்குள்ளாகவே இருபுறத்திலிருந்தும் நகுலனும் சகதேவனும் அவரை நோக்கி பாய்ந்துவந்து இறங்கினர்.

சகதேவன் அவரை அணுகி தலைகுனிந்தான். “செல்க! சென்று இளையோன் அருகே நின்றுகொள்க!” என்று யுதிஷ்டிரர் ஆணையிட்டார். பதற்றத்துடன் தேரில் ஏறி உடனே மீண்டும் இறங்கி “இன்னும் சற்று நேரத்தில் நான் அங்கு வருகிறேன். இங்கு சில ஆணைகள் எஞ்சியிருக்கின்றன. அதுவரை அங்கு நிலைகொள்க!” என்றார். மூச்சு இரைக்க நகுலனை நோக்கி “நமது படைகள் உளம் சோர்ந்திருக்கின்றன. இத்தருணத்தில் அவர்கள் முழு விசையுடன் தாக்கினால் நாம் முற்றழிவோம். திருஷ்டத்யும்னனிடமும் சாத்யகியிடமும் படைத்தலைமை கொள்ளும்படி எனது ஆணையை அறிவியுங்கள். இளையோர் எவரும் இத்தருணத்தில் படைநடத்த இயலாதென்று அவரிடம் சொல்லுங்கள்” என்றார்.

நகுலன் தலைவணங்கி கிளம்பிச்செல்ல யுதிஷ்டிரர் தன் ஏவலருக்கு தன்னை தொடரும்படி கைகாட்டிவிட்டு விரைந்து சென்று புரவியிலேறிக்கொண்டார். அருகிலிருந்த காவல்மாடத்தின் மீதேறி நின்று பாண்டவப் படைகளை பார்த்தார். அவர் எண்ணியது போலவே பாண்டவப் படைகள் அனைத்து ஒழுங்குகளையும் இழந்து வெறும் திரளென்று மாறியிருந்தன. அதுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போர்முடிச்சுகள் அவிழ்ந்து நீண்ட தையல் பிரிவதுபோல இரு படைகளும் அகன்றன. இரண்டுக்கும் நடுவே ஓர் இடைவெளி உருவாகி அகன்று வருவதை அவர் பார்த்தார். “அவர்கள் பின்னடைகிறார்கள். தம்மை தொகுத்துக்கொண்டு முழு விசையுடன் நம்மை தாக்கவிருக்கிறார்கள்” என்று கூவினார். “திருஷ்டத்யும்னனிடம் சென்று சொல்க! நமது படைகள் அனைத்து ஒழுங்குகளையும் இழந்துவிட்டன. இனி ஐவிரல்சூழ்கை பயனற்றது. நாம் இன்று அந்தி வரை களத்தில் நம்மை காத்துக்கொள்வதொன்றே செய்யக்கூடுவது. அதற்குரிய புதிய சூழ்கை ஒன்றை அமைக்கச் சொல்க! அது வெறும் கவசக்கோட்டையாக இருந்தாலும் சரி” என்று ஆணையிட்டார்.

அவருடைய ஆணைகளை ஏற்று ஏவலர்கள் காவல்மாடத்திலிருந்து விரைந்திறங்கினார்கள். மெல்ல நகர்ந்துகொண்டிருந்த காவல்மாடத்தில் நின்றபடி அவர் அந்தப் படைவிரிசலை பார்த்துக்கொண்டிருந்தார். அது எதையோ சொல்ல விரிந்த உதடுகள்போல் அவருக்கு தோன்றியது. பின்னர் வெட்டுண்ட தசைப் பிளவுபோல. அதை நோக்குவதை தவிர்த்து விழி திருப்பிக்கொண்டார். பெருமூச்சுடன் அவர் காவல்மாடத்தின் படிகளில் இறங்கியபோது திருஷ்டத்யும்னனின் முரசொலிகள் எழுந்துகொண்டிருப்பதை கேட்டார். “அணி திரள்க! அணி திரள்க! படையினர் ஒருவரோடொருவர் தொடுத்துக்கொள்க! நீள்சரடென்று ஆகுக! நூற்றுவர் நூற்றுவர்களுடன் பொருந்துக! ஆயிரத்தவர் தொகுத்துக்கொள்க!” என்று முரசுகள் ஒலித்தன.

திருஷ்டத்யும்னன் ஒரு கேடயப் பெருஞ்சுவரை அமைக்கவிருக்கிறான் என்று யுதிஷ்டிரர் புரிந்துகொண்டார். கீழே நின்ற புரவியிலேறிக்கொண்டு “செல்க!” என்றார். அதற்கு முன்னால் நின்றிருந்த படைவீரன் அவர் எண்ணுவதை புரிந்துகொண்டு தன் புரவியிலேறிக்கொண்டு வழிவிலக்கி முன்னால் சென்றான். அவருடைய புரவி எப்போதுமே வழிவிலக்குபவனை தொடரும் பயிற்சி கொண்டது. குழம்பி ஒருவரோடொருவர் முட்டி வெற்றொலிகள் எழுப்பியபடி மீண்டும் அணி திரண்டுகொண்டிருந்த பாண்டவப் படைகளின் நடுவினூடாக அவரது புரவி சென்றது. பாஞ்சாலப் படைப்பிரிவுகளின் உள்ளே தொலைவில் அவர் அர்ஜுனனின் குரங்குக்கொடி பறப்பதை பார்த்தார். அதைக் கண்டதும் அவர் நெஞ்சு பதைப்பு கொண்டது. புரவியிலேயே தோள்தொய்ந்து தலைகுனிந்து அமர்ந்தார்.

புரவியிலிருந்து இறங்கி மெல்ல நடந்தபோது தரையிலமர்ந்திருந்த அர்ஜுனனை கண்டார். நடையை சீராக்கியபடி அவனை நோக்கி சென்றார். அவனருகே இளைய யாதவர் நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் அங்குதான் இருந்தார்கள். யுதிஷ்டிரர் புரவியிலிருந்து இறங்கி அர்ஜுனனை அணுகினார். அத்தருணத்தில் சொல்ல வேண்டிய சொற்களை தன்னுள்ளிருந்து எடுத்து கோத்துக்கொள்ள முயன்றார். ஒவ்வொரு சொல்லும் பிசின் பரவிய பளிங்குருளைகளைப்போல வழுக்கிச்சென்றது. அர்ஜுனன் தரையில் விழுந்து எழுந்தவன்போல் இரு கைகளையும் கால்களையும் பரப்பி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கட்டவிழ்ந்த குழல்கற்றைகள் அவன் முகத்தை மறைத்தபடி தொங்கின. அவன் விக்கலெடுப்பதுபோல் அவருக்குத் தோன்றியது.

அவர் அணுகியதும் சகதேவன் அவரை நிமிர்ந்து பார்த்தான். அதிலிருந்த பகைமை அவரை ஒருகணம் திகைக்கச் செய்தது. பின்னர் சீற்றம் எழுந்தது. எதன் பொருட்டு அப்பகைமை என அவர் உள்ளம் வினாவியது. ஆனால் அதைக் கண்ட முதற்கணம் ஏன் என் உள்ளம் ஏற்றுக்கொண்டது என்று உடனே அது குழம்பியது. முழந்தாளிட்டு அர்ஜுனன் அருகே அமர்ந்து அவன் தோளில் கைவைத்து “இளையோனே, ஊழ் அனைத்தையும்விட வலிது” என்றார். அர்ஜுனன் தன் கையால் தோளில் வைக்கப்பட்ட அவர் கையை விலக்கினான். அச்செயலிலிருந்த கசப்பு மெல்லிய தொடுகையிலேயே அவரை வந்தடைந்தது. அவர் உள்ளம் மேலும் இறுக “இப்போரில் நாம் அனைவருமே உயிரை முன்வைத்துதான் ஆடிக்கொண்டிருக்கிறோம். நம் உயிரை மட்டுமல்ல நம் மைந்தரின் உயிர்களையும்” என்றார்.

“நாம் எவரும் மறுகணமே இறப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆகவே இருந்தவர்க்கோ இறப்பவர்க்கோ நாம் துயர்கொள்ள வேண்டியதில்லை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். அர்ஜுனன் அவர் சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கூரிய ஊசியால் குத்தப்பட்டதுபோல் ஓர் விதிர்ப்பு அவன் உடலில் கடந்து சென்றது. யுதிஷ்டிரர் மேலும் எதையேனும் சொல்ல வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அங்கு நின்ற அத்தனை பேருமே அவருடைய சொற்களுக்கெதிராக உளமறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லோ உடலசைவோ எழாமலேயே அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் மேலும் தத்தளித்த பின் எழுந்துகொண்டார்.

அருகே நின்ற இளைய யாதவர் அவரிடம் “தாங்கள் தங்கள் படைக்கு திரும்பலாம், அரசே. இளைய பாண்டவன் இனி படைமுகப்பிற்கு எழ இயலாது” என்றார். யுதிஷ்டிரர் “ஆம், இன்னும் ஒரு நாழிகைக்குள் அந்தி முரசுகள் முழங்கத்தொடங்கிவிடும். அதுவரை நாம் தாக்குப்பிடிக்கவேண்டும்” என்றார். பின்னர் திரும்பி நகுலனிடம் “மந்தன் எங்கே?” என்றார். “அவர் இன்னும் களத்தில்தான் இருக்கிறார், மூத்தவரே” என்றான். “அவனுக்கு செய்தி தெரியாதா என்ன?” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் சற்று பொறுமையிழந்து, பின்னர் மீண்டு “செய்தியறியாத எவரும் இப்போது படையிலில்லை” என்றான். யுதிஷ்டிரர் “எனில் ஏன் அவன் இங்கு வரவில்லை? அவனுடைய இளையோன் மைந்தன் அல்லவா அபிமன்யு? இங்கு வந்து அவன் நின்றிருக்கவேண்டாமா?” என்றார்.

“அவர் படைமுகப்பில் நிற்பதே நன்று. அவரது உளநிலைக்கும் உகந்தது” என்று இளைய யாதவர் சொன்னார். “செல்லுங்கள், அரசே. தாங்களும் படைகளுக்குள்ளேயே நின்றுகொள்ளுங்கள். நான் தங்கள் இளையோனை பார்த்துக்கொள்கிறேன்.” யுதிஷ்டிரர் நகுலனையும் சகதேவனையும் நோக்கி “பார்த்துக்கொள்ளுங்கள். அவன் உள்ளம் எந்நிலையில் இருக்கிறதென்று நாம் அறிவோம். உடனிருப்பது நமது கடன்” என்றார். அவர்களிருவர் விழிகளிலும் தெரிந்த ஒன்று அவரை அச்சுறுத்த தன் விழிகளை விலக்கிக்கொண்டு இளைய யாதவரிடம் “நான் படைகளுக்குள் செல்கிறேன். அவர்கள் நம்மை பெருகிவந்து அறைந்தால் இன்றே போர் முடிந்துவிடும். நாம் முற்றழிவோம்” என்றார்.

இளைய யாதவர் “அவர்கள் நம்மை தாக்கவில்லை” என்றார். “ஏன்?” என்று யுதிஷ்டிரர் திகைப்புடன் கேட்டார். “அவர்களே தயங்கிவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் தாக்குவதென்றால் இதற்குள் தாக்கியிருக்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம், நான் மேலிருந்து பார்த்தபோது இரு படைகளும் விலகி குருக்ஷேத்ரம் மீண்டும் தெளிவதையே கண்டேன்” என்றார் யுதிஷ்டிரர். “ஆனால் நான் அவர்கள் நம்மை தாக்குவார்கள் என்றே எண்ணினேன். ஏன் தயங்கினார்கள் என தெரியவில்லை. மைந்தனின் இறப்பால் நாம் சீற்றம்கொண்டிருப்போம் என அஞ்சியிருக்கலாம்.”

திரும்பி தன் புரவியிலேறிக்கொண்டு “செல்க!” என்றார். மீண்டும் அவருடைய இந்திரப்பிரஸ்த வில்லவர்படை நடுவே வந்து சேர்ந்தார். அங்கே ஆணைகளை இட்டபடி நின்றிருந்த சாத்யகியிடம் “என்ன நிகழ்கிறது?” என்றார். “அவர்களின் படை விலகி ஒருங்கமைவு கொள்கிறது” என்றான் சாத்யகி. “அவர்கள் பெருகிவரக்கூடும்” என்றார் யுதிஷ்டிரர். “பெருகி வந்து பிறிதொரு தாக்குதலை நடத்த இன்னும் பொழுதில்லை. அந்தி மங்கிக்கொண்டிருக்கிறது” என்று சாத்யகி சொன்னான். “என்ன நிகழ்கிறது? ஏன் அவர்கள் தயங்குகிறார்கள்? நாம் சீற்றம் கொண்டு போரிடுவோம் என்று அஞ்சிவிட்டார்களா?” சாத்யகி “அவர்களும் துயருற்றிருக்கலாம்” என்றான். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரர். “அரசே, அபிமன்யு துரியோதனரால் தோளிலிட்டு வளர்க்கப்பட்ட மைந்தன்.” யுதிஷ்டிரர் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு மீண்டும் தன் புரவியிலேறிக்கொண்டு “செல்க!” என்றார். காவலன் அவரை தெற்குக் காவல்மாடத்தருகே கொண்டு சென்றான். அதன் மேல் ஏறிக்கொண்டிருக்கையில் அன்றைய போர் முடிந்துவிட்டது என்று அவருக்குத் தோன்றியது.

காவல்மாடத்தில் நின்று படைகளை பார்த்தபோது இரு படைகளும் முற்றாக சூழ்கை அமைத்து மீண்டு ஒன்றை ஒன்று நோக்கி நின்றிருக்க நடுவே குருக்ஷேத்ரம் வெறித்திருப்பதை யுதிஷ்டிரர் கண்டார். அதில் கொல்லப்பட்டவர்களும் புண்பட்டவர்களும் உடைந்த தேர்களும் புரவிகளுமாக உடல்கள் நெளிய சிற்றலையெழும் ஏரிப்பரப்புபோல தோன்றியது அந்நிலம். இடையில் கைவைத்தபடி அவர் அதை பார்த்துக்கொண்டிருந்தார். அவரருகே நின்ற ஏவலனிடம் “மந்தன் என்ன செய்கிறான்?” என்றார். “சற்று முன்பு வரை அவர் போர்புரிந்துகொண்டிருந்தார். அவரால் பால்ஹிகரை கடக்க இயலவில்லை. நமது முழுப் படையும் பின்னடைந்தபோது கதை தாழ்த்தி மையச்சூழ்கையுடன் வந்து இணைந்துகொண்டார்” என்றான். “ஆம், இன்றைய போர் இத்துடன் முடிந்தது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

தொலைவில் அந்தியை அறிவிக்கும் முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. யுதிஷ்டிரர் சற்று ஆறுதல் கொண்டு நீள்மூச்செறிந்தார். “இன்று பேரழிவில்லாமல் நாம் தப்பியது நல்லூழ் என்றே சொல்லவேண்டும்” என்றார். அந்திமுரசுக்குப் பின்னரும் இரு தரப்புப் படையினரும் கலையாது அசையாது அவ்வாறே நின்றிருந்தனர். படைகள் பின்னடையலாம் என்பதை அறிவிக்கும் முரசுகள் முழங்கத் தொடங்கிய பின்னரும் இரு படைகளும் கலையவில்லை. பின்னர் கௌரவப் படை உருகி மடிந்து உருவழிந்து வற்றி மறைவதுபோல் திரும்பத் தொடங்கியது. அவ்வசைவைக் கண்ட பின்னர் பாண்டவப் படைகளும் பின்னகரலாயின.

ele1யுதிஷ்டிரர் அவைக்குள் நுழைந்தபோது வாழ்த்தொலிகள் எழவில்லை. அவையோர் எழுந்து நின்ற உடையசைவுகளும் அணியசைவுகளும் மட்டுமே எழுந்தன. அவர் எவரையும் நோக்காது கைகூப்பி வணங்கிவிட்டு தன் பீடத்தில் அமர்ந்தார். இளைய யாதவரும் அர்ஜுனனும் வரவில்லை என்பதை பார்த்த பின் திரும்பி சகதேவனிடம் அவை தொடங்கலாம் என்பதை அறிவுறுத்த கையை காட்டினார். சகதேவன் அவைமுறைமையை அறிவித்ததும் குந்திபோஜர் எழுந்து “அரசே, இன்று நாம் இப்போர் தொடங்கிய நாளிலிருந்து நமக்கு நிகழ்ந்த பேரிழப்பொன்றை அடைந்திருக்கிறோம். நம் படைகள் அனைவருமே உளம் தளர்ந்திருக்கிறார்கள். பீஷ்மரை வென்றபோது நாம் அடைந்த அனைத்து ஊக்கங்களையும் இழந்து இப்போர் இனி தொடரத்தான் வேண்டுமா என்ற எண்ணத்தை அடைந்திருக்கிறோம்” என்றார்.

அவையில் பெருமூச்சுகள் எழுந்தன. குந்திபோஜர் “நம் இளையோன் அபிமன்யு அர்ஜுனனின் மைந்தன் மட்டுமல்ல. இந்தக் குலத்தின் மாபெரும் வீரன் அவனே என்பதை நாமனைவரும் அறிவோம். என்றேனும் நம் வேள்விப்புரவிக்கு முன்னால் தனியாக வில்லுடன் அவன் செல்வான் என்று கனவு கண்டிருந்தோம். அவனது கால்படும் நிலமெல்லாம் நம் நிலமாகும் என்றும் அவனது குருதியில் குடி பெருகி பாரதவர்ஷத்தை நிறைக்கும் என்றும் எண்ணியிருந்தோம். அனைத்தையும்விட இந்தப் போர் வெல்ல நாம் நம்பியிருந்த முதன்மை பெருவீரர் மூவரில் ஒருவன் அவன். இவ்விழப்பை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவிருக்கிறோம் என்பதே இந்த அவையில் பேசவேண்டியது” என்றார்.

பீமன் கையைத் தட்டியபடி எழுந்து “அதற்கு முன் இந்த அவையில் பேச வேண்டிய ஒன்றுண்டு” என்றான். “இளையோனும் தனித்தோனுமாகிய அவனை மலர்ச்சூழ்கைக்கு உள்ளே செல்ல ஆணையிட்டது யார்? எந்தப் போர்நெறிகளைக் கொண்டு அவர் அதை செய்தார்?” யுதிஷ்டிரர் சினத்துடன் “ஆம், நான் அதை செய்தேன். அக்கணத்தில் அதை செய்தாகவேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அவர்களின் படைசூழ்கை திறந்து கிடந்தது. அதை மேலும் உடைத்து உள்புகுந்து வெல்ல இயலுமென்று கண்டேன். ஆகவே அவனை முதல் படைவீரன் என்று உள்ளே அனுப்பினேன். நீயும் அர்ஜுனனும் உடன் தொடர்வீர்கள் என்று நம்பினேன். நீங்கள் இவ்வாறு அங்கெங்கோ இருப்பீர்கள் என்று எண்ணவில்லை” என்றார்.

“உங்கள் மைந்தனை பின்தொடர முடியாத அளவிற்கு உங்களை தடுத்து நிறுத்துபவர்களை எதிரில் கொண்டிருக்கிறீர்கள் என்று சற்றும் கருதவில்லை. ஏனெனில் உங்களை மாவீரர்களென்றும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாதவர்களென்றும் கற்பனை செய்தேன். உங்களை நம்பினேன். மைந்தனை காக்கமுடியாதவர்கள் என அறிந்திருந்தால் அவ்வாறு செய்திருக்கமாட்டேன்” என்றார். “மூத்தவரே, படைசூழ்கை குறித்து எதுவும் அறியாதவர் நீங்கள். மலர்ச்சூழ்கை என்பது அதன் மையத்தில் இருக்கும் ஒன்றை நோக்கி எதிரியை ஈர்த்து உள்ளழைத்து மூடிக்கொள்வது. நீங்கள் கண்ட அந்த விரிசல் என்பது உண்மையில் பொறியின் வாய்திறப்பு. அதற்குள் பயிலா இளைஞனாகிய அபிமன்யுவை எப்படி அனுப்பினீர்கள்? அவனுக்கு அப்படைசூழ்கையை உடைத்து வெளிவரத் தெரியுமா என்பதை அறிந்தீர்களா? முதலில் அப்படைசூழ்கை என்றால் என்னவென்று அறிந்தீர்களா?” என்றான் பீமன்.

யுதிஷ்டிரர் “படைசூழ்கைகளை அறிந்தவர்கள்தான் இங்கு போரிடுகிறார்களா? நான் போர்க்கலை அறியேன். நான் நெறியறிந்தவன் மட்டுமே. போர்க்கலை அறிந்தவன் அவன் என்று சூதர்கள் பாடுகிறார்கள். நான் அவனை சூதர் சொல் வழியாக மட்டுமே அறிவேன். அவனுக்கு வெளிவரத் தெரியாதென்று எனக்கு எப்படி தெரியும்?” என்றார். குந்திபோஜர் “சூழ்கைகளிலிருந்து வெளிவருவது முற்றிலும் வேறு கலை. அதை பொதுவாக இளையோர் ஆழ்ந்து கற்று நினைவில் கொள்வதில்லை. எங்கும் வென்றுமீளமுடியும் என்று மட்டுமே அவர்கள் எண்ணுகிறார்கள். வெளிவரும் முறையை கற்ற இளைஞர் எவருமில்லை. ஐயமிருந்தால் இந்த அவையிலேயே கேட்டுப்பாருங்கள்” என்றார். துருபதர் “ஆம், வெளிவரும் முறையை முதலிலேயே எண்ணிச்சூழ்ந்துவிட்டு உள்ளே செல்ல எண்ணுவது நடுஅகவை கடந்தவர்கள் மட்டுமே” என்றார்.

“அதை நான் அறியேன், அவனை மாவீரன் என எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவனைக் கொன்றது நீங்கள். அப்பொறுப்பை நீங்கள் இந்த அவையில் ஏற்றுத்தான் ஆகவேண்டும்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று சீற்றத்துடன் எழுந்த யுதிஷ்டிரர் உடனே உளம்தளர்ந்து அமர்ந்து “ஆம், அவனை மட்டுமல்ல, அஸ்தினபுரியின் படைகளுக்கு முன்னால் நெஞ்சு உடைந்தும் தலை சிதைந்தும் விழுந்த அத்தனை இளைஞர்களையும் கொன்றவன் நான்தான். அப்பொறுப்பை நான் ஏற்றாகவேண்டும். விண்ணவர் முன்னும் மூதாதையர் முன்னும் அதற்கான மறுமொழியை நான் உரைக்கவேண்டும். அப்பொறுப்பிலிருந்து நான் எவ்வகையிலும் விலகவில்லை” என்றார்.

“மழுப்பும் சொற்கள் தேவையில்லை. அரசரென்று நீங்கள் ஆணையிடுவது வேறு, படைத்தலைவன் என்று தாளா பொறுப்பை ஏற்று நீங்கள் ஆணையிட்டது பிறிதொன்று” என்று பீமன் சொன்னான். சகதேவன் “மூத்தவரே, இனி அப்பேச்சை வளர்ப்பதில் பொருளில்லை. பிழை நிகழ்ந்துவிட்டது. இழப்பு நம் குடிக்கே என்பதனால் நாம் அதை பொறுத்துக்கொள்வோம்” என்றான். “நம் அனைவருக்கும் அப்பிழையில் பொறுப்புண்டு. அரைநாழிகைப் பொழுது நீங்கள் முந்தி வந்திருந்தாலும் அபிமன்யுவை காத்திருக்க இயலும். இளையவரும் நீங்களும் தனித்தனியாக மலர்ச்சூழ்கையின் இதழ்களை தாக்கியதற்கு மாறாக ஒற்றைப்படையென்றாகி ஒரு புள்ளியில் தாக்கியிருந்தால் உடைத்து உட்புகுந்து அவனுக்கு துணை சென்றிருக்க இயலும். அதுவும் அத்தருணத்தில் உங்களுக்குத் தோன்றவில்லை.”

“போர் என்பது அரசர் சொன்னதுபோல் ஊழின் விளையாட்டே” என அவன் தொடர்ந்தான். “அனைத்தும் எண்ணி சூழ்ந்து இயற்றப்படுவதாகவே தோன்றும். எண்ணம் சூழ்ந்து இயற்றப்படுவதற்கு அப்பால் பிறிதொன்றே முடிவுகளை சமைக்கிறது என்பது பின்னர்தான் தெரியும்.” பீமன் “நான் சொல்விளையாட இங்கு வரவில்லை. இளையோன் எங்கும் தன்னை மறந்து பாய்ந்து நுழைபவன் என்பதை நாமனைவரும் அறிவோம். இந்தப் படைக்கு வந்தபோதே ஒவ்வொரு கணமும் உயிர்கொடுக்கத் துடிப்பவன் போலிருந்தான் அவன். அவனை முன்னிறுத்தலாகாதென்று நான் பலமுறை எண்ணினேன். ஒவ்வொரு முறையும் அவனுடன் இருபுறமும் சதானீகனும் சுருதசேனனும் நின்றிருக்க வேண்டுமென்று அறிவுறுத்தினேன். சுருதகீர்த்தியிடம் எப்போதும் அபிமன்யுவுடன் அமையவேண்டுமென்று ஆணையிட்டிருந்தேன்” என்று சொன்னான்.

அவன் குரல் இடறியது. “இன்று நாம் அவனை இழந்துவிட்டு நிற்கிறோம். நாம் மறுமொழி சொல்லவேண்டியது அர்ஜுனனிடமல்ல, பாண்டுவிடம், விசித்திரவீரியனிடம், சந்தனுவிடம் பிரதீபனிடம்.” அவன் குரல் குன்றி விம்மல் போலாகியது. “படைத்திறன் கொண்ட தந்தையரும் உடன்பிறந்தாரும் பெரும்படைத்திரளும் இருந்தும் தன்னந்தனியாக நின்று போரிட்டு தலையுடைந்து விழுந்தான் என் மைந்தன். ஆம், அதற்கு முதற்பொறுப்பை நானே ஏற்கிறேன். முதற்பொறுப்பை நானே ஏற்கிறேன்!” என்று அவன் ஓங்கி நெஞ்சில் அறைந்தான். முழங்கிய குரலில் வஞ்சினம் உரைத்தான்.

“இந்த அவையிலிருக்கும் அனைவரும் அறிக! என் மூதாதை அறிக! தெய்வங்கள் அறிக! இதற்குப் பிழைநிகராக நான் ஒரு பொழுதும் அரசஇன்பங்கள், களியாட்டுகள் எதிலும் இனிமேல் கலந்துகொள்வதில்லை. அரசனாகவோ அஸ்தினபுரியின் குடியாகவோ எந்தச் சிறப்பையும் சூடமாட்டேன். இனி என் வாழ்க்கையில் இன்னுணவையோ நல்லாடையையோ கொள்ளமாட்டேன். நான் இக்கணத்திலிருந்து வெறும் காட்டாளன் மட்டுமே. இது என் நோன்பு. இங்கிருந்து சென்ற பின் விண்புகுந்து என் மைந்தனிடம் சொல்கிறேன், பொறுத்தருள்க என்று. அவன் பொறுத்தருள்செய்த பின்னரே என் மூதாதையரிடம் சென்று நிற்பேன்.” உடல் நடுங்க சில கணங்கள் நின்றுவிட்டு பீமன் எடையுடன் பீடத்தில் அமர்ந்தான்.

அவை முழுக்க மெல்லிய அழுகை நிறைந்திருந்தது. யுதிஷ்டிரர் நிலைகுலைந்தவர்போல தன் பீடத்தின் கைகளை தடவிக்கொண்டிருந்தார். தலையை அசைத்தபடி தனக்குள் பேசியபடி எக்கணமும் எழுந்து அகன்றுவிடுவார் என்று உடல் கூடியபடியும் இருந்தார். சகதேவன் “நாம் இங்கு துயரை பரிமாறுவதற்காக கூடியிருக்கவில்லை. இழப்பு பெரிதே. அதை நாமனைவருமே நன்குணர்ந்துமிருக்கிறோம். இனி படைசூழ்கை அமைத்து இப்போரை வெல்வதொன்றே நம் இலக்கு. இறந்த மைந்தனுக்கு நாம் ஆற்றும் கடன் இப்போரை வென்று முன்னெழுவதே” என்றான்.

திருஷ்டத்யும்னன் “ஆம், இந்த இழப்பிலிருந்து இரு மடங்கு விசையுடன் நாம் எழுந்தாகவேண்டும். நாளை நாம் சோர்ந்து தளர்ந்து இருப்போம் என்று எண்ணி அவர்கள் வருகையில் ஏழு முறை தீட்டப்பட்ட வாள் போல் நமது படை எழுந்து நின்றாகவேண்டும். அது ஒன்றே நாம் இயற்றவேண்டியது. விண்ணில் நின்று அவன் நம்மை நோக்குகிறான் என்றால் அவன் உளம் மகிழ்வது அதன்பொருட்டாகவே இருக்கும்” என்றான். அவையினர் “ஆம்! ஆம்!” என்றனர். சாத்யகி “நாம் வென்றாகவேண்டும். அவர்களின் நெஞ்சை மிதித்து நின்று இளவரசனை நினைவுகூர்ந்தாகவேண்டும்” என்றான். “ஆம்! ஆணை! பழிநிகர் செய்யவேண்டும்!” என அவை முழக்கமிட்டது.

யுதிஷ்டிரர் சகதேவனை நோக்கி “இளையோனே, அபிமன்யு களம்படுதலை இங்கு அறிவித்தபோது இயல்பாக உன் நாவில் எழுந்தது பீஷ்மர் படுகளத்திற்குப் பின் இது நிகழ்ந்துள்ளது என்று. உன்னை அறியாமலேயே இணைவைத்துவிட்டாய். ஏனென்றால் அதுவே மெய். அவர்கள் தரப்பில் பிதாமகர் அவ்வாறு களம் விழுவாரெனில் நம் தரப்பில் ஒரு மைந்தன் ஏன் இவ்வண்ணம் விழலாகாது? துலாவின் தட்டில் நாமும் ஈடுவைத்துவிட்டோம். இப்போது இருதரப்பும் நிகராகிவிடும். புதிதென நாளை போரை தொடங்குவோம்” என்றார்.

பீமன் பெருத்த ஓசையுடன் பீடம் நகர்ந்து பின்னால் சரிந்து விழ எழுந்து கையை வீசியபடி அவையிலிருந்து வெளியே சென்றான். அவன் நடந்து அகல்வதை யுதிஷ்டிரர் அடக்கப்பட்ட சீற்றத்துடன் பார்த்திருந்தார். பின்னர் எதுவும் நிகழாததுபோல் திரும்பி அவையினரிடம் “நாம் இயற்றவேண்டுவதென்ன என்பதை சூழ்க!” என்றார்.