கார்கடல் - 31

ele1பாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு விளிம்புகளும் எழுந்து வருகையில் பின்பக்கமாக வளையும் பிறை. திருஷ்டத்யும்னன் பிறைசூழ்கையை அமைத்தபோது துருபதர் நிறைவுகொள்ளவில்லை. “இது மிக எளியது…” என்றார்.

“எளிய சூழ்கைகளும் ஆற்றல்மிக்கவையே. கடினமான சூழ்கையை அமைக்கையில் நாம் அடையும் நிறைவை அவை அளிப்பதில்லை என்பதனால் அவை பயனற்றவை என்றாவதில்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இயற்கையில் உள்ள வடிவுகளிலிருந்து எழும் சூழ்கைகள் எளிய அமைப்பு கொண்டிருக்கும். ஆனால் அவற்றுக்குப் பின்னால் அவ்வடிவுகளை சமைக்கும் இயற்கைவிசைகளின் ஆற்றல் அமைந்துள்ளது.”

துருபதர் “மலர்ச்சூழ்கை எளியதே” என்றார். “அவ்வாறு தோன்றுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. எளிய வடிவங்களை ஒன்றன் மேல் ஒன்றென அமைத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறது இயற்கை. மலர்களின் தொடுப்பு எளிய வட்டமே. ஒன்றன்மேல் ஒன்றென மலரடுக்கு அமைந்து புல்லிவட்டத்தில் இணைகையில் அது சிக்கலானதாக ஆகிறது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சாத்யகி “நாம் மலர்சூழ்கையை அமைக்கலாமே?” என்று கேட்டான். “தாமரைச்சூழ்கை மிகமிக ஆற்றல்கொண்ட பொறி என்பார்கள்.”

திருஷ்டத்யும்னன் “ஏன்?” என்றான். “அவர்கள் நம் அரசரை கவர முயல்வார்கள் என்று அறிவோம். அவரையே தாமரைச்சூழ்கையின் நடுவே நிறுத்துவோம். அரசரைக் கவர அங்கர் வருவார்… நம் முதன்மை எதிரி அவரே. அனைவரும் சூழ்ந்து அவரை வீழ்த்துவோம்.” திருஷ்டத்யும்னன் “அவர் அவர்களில் முதன்மையானவர். ஆனால்…” என்றான். சாத்யகி “அவரே அவர்களின் முதன்மை ஆற்றல். நேற்றைய போரில் நம்மை முழுமையாக தோற்கடித்தவர். இன்று இளைய பாண்டவர் படைக்கு எழவியலா நிலையில் இருக்கிறார். நாம் உளம்சோர்ந்திருக்கிறோம். இன்று பிற அனைவரும் சேர்ந்து அங்கரை வீழ்த்தினோம் என்றால் நாம் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்வோம். நாளை இளைய பாண்டவர் எழுந்தால் மூச்சை ஊதியே கௌரவப் படையை சரித்துவிடுவார்” என்றான்.

பீமன் “அது தேவையில்லை” என்றான். “ஒருவனை அனைவரும் சூழ்ந்து தாக்குவதென்பது நம் அனைவருக்கும் இழிவு.” சாத்யகி “அவர் ஒருவரே நம் அனைவரையும் தாக்கி அழிப்பதைவிட அது குறைவான இழிவே” என்றான். “வெல்லமுடியாவிடில் சாவது மேல். சூழ்ந்து தாக்குவதை ஒழிக! அவ்வாறு வென்று என் தமையன் அரியணை அமரவேண்டியதில்லை” என்றான் பீமன். சாத்யகி “நாம் நேற்று சிதறடிக்கப்பட்டோம். இன்று என்ன நிகழுமென்று தெரியவில்லை. நம் முதன்மைவீரர் அம்புபட்டு கிடக்கிறார்” என்றான். பீமன் “நான் களத்தில் எந்த இரக்கத்தையும் காட்டப்போவதில்லை. ஆனால் ஒருவனை சூழ்ந்துகொண்டு அனைவரும் தாக்கினோம் என்னும் இழிவை எனக்காக சூடிக்கொள்ள மாட்டேன்” என்றான்.

யுதிஷ்டிரர் “அவன் சொல்வதும் மெய்யே. அத்தகைய சூழ்கை நமக்குத் தேவையில்லை. பிறைசூழ்கையே சிறப்பாக உள்ளது” என்றார். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் தன் எண்ணத்தை சொல்லட்டும்” என்றான். “எல்லா சூழ்கைகளும் நன்றே” என்றபின் இளைய யாதவர் எழுந்துகொண்டு “நான் செல்லவேண்டியிருக்கிறது” என்று சால்வையை சுற்றிக்கொண்டார். “பிறைசூழ்கையே போதும்” என்றார் யுதிஷ்டிரர். அவையில் இருந்து ஏற்பொலிகள் எழுந்தன. பீமன் “நாம் உளம்சோர வேண்டியதில்லை. நமக்கு அவன் யார் என இப்போது தெரிந்திருக்கிறது. இன்று நான் அவனை நேருக்குநேர் எதிர்கொள்வேன். எண்ணிக்கொள்க, அவர்கள் இன்று பெருந்தோல்வியுடனேயே திரும்பிச்செல்வார்கள்!” என்றான்.

இளைய யாதவர் குறுகிய மூங்கில் கணுப்படிகளினூடாக வண்டுபோல் தொற்றி கீழிறங்கி வந்தார். அவரது மேலாடை காற்றில் பறந்தமையால் விண்ணிலிருந்து இறகு விரித்துப் பறந்து இறங்கி மண்ணில் நிற்பவர் போலிருந்தார். அங்கு காத்து நின்றிருந்த ஏவலன் அவரை அணுகி “அரசி தன் மாளிகை மீண்டுவிட்டார்” என்றான். “சொல்” என்று இளைய யாதவர் சொல்ல ஏவலன் அரசியின் சொற்களை மெல்ல முணுமுணுத்தபடி அவருடன் வந்தான். அவர் நின்று அவன் செல்லலாம் என்று கைகாட்டினார்.

இருளில் புரவியில் ஏறிக்கொண்டு தனியாக சீர்நடையில் சென்று அர்ஜுனனின் மருத்துவநிலையை அடைந்தார். வாயிலில் அரைத்துயிலில் இருந்த மருத்துவ ஏவலர்கள் காலடியோசை கேட்டு விழித்து திரும்பி அவரைப் பார்த்து பதறி எழுந்து நின்று தலைவணங்கினர். இளைய யாதவர் அணுகி வந்து தாழ்ந்த குரலில் “எப்படியிருக்கிறார்?” என்றார். “இன்னும் அதே நிலையில்தான்” என்று இளமருத்துவன் சொன்னான். முதிய மருத்துவர் உள்ளிருந்து பேச்சொலி கேட்டு எழுந்து வெளிவந்தார். தலைவணங்கி “இளைய யாதவருக்கு வணக்கம். நான் கலிககுலத்தோனாகிய கர்வடன், இங்கே தலைமை மருத்துவன். அரசே, இளைய பாண்டவரின் நான்கு மலர்களும் இன்னமும் இதழ் குவிந்தே உள்ளன” என்றார். இளைய யாதவர் தலையசைத்து அவரை வெளியே செல்லும்படி கைகாட்டினார். மருத்துவர்கள் வெளிவர அவர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

அர்ஜுனனின் அருகணைந்து அவர் தலையருகே அமர்ந்தார். அர்ஜுனனின் முகம் வெந்ததுபோல் காய்ச்சல் கொண்டிருந்தது. உதடுகள் உலர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. மூடிய இமைகள் வீங்கி ஆற்றுருளைக்கல்போல் தெரிந்தன. தாடிமயிர்கள் நனைந்து திரிகளாக படிந்திருக்க வாய் சற்றே திறந்து மெல்லிய மூச்சு ஓட அதுவரை ஒருவிளிப்பாடு அகலே காத்து நின்றிருந்த முதுமை அவ்வுடலில் வந்து முழுமையாக படிந்திருப்பதுபோல் தோன்றியது. இளைய யாதவர் அர்ஜுனனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு குனிந்து அவன் காதில் “பார்த்தா!” என்று அழைத்தார். அர்ஜுனன் அதை கேட்கவில்லை. “பார்த்தா!” என்று அவர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது அவனுக்குள்ளிருந்து மெல்லிய சுடரொன்று நடுங்கியது. “பார்த்தா!” என்று அவர் மூன்றாம் முறை அழைத்தபோது இமைகள் நலுங்கின. அவன் “ம்ம்” என்று மறுவிளி கேட்டான்.

காலஇடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்களைச் சூழ்ந்து நீரோசையும் காற்றோசையும் நிறைந்திருந்தன. “இது பிறிதொரு காலம், பாண்டவனே” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்று சென்று நின்று நான் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ எழ விழைகிறாயா? இங்கு இன்னும் எஞ்சியுள்ளதா?” என்றார். “ஆம். எனக்கு ஆணையிடப்பட்டதை நான் இன்னும் முடிக்கவில்லை” என்றான் அர்ஜுனன். “அனைத்தையும் செய்து முடித்தவன் ஆவநாழி ஒழிந்தவனும்கூட” என்று இளைய யாதவர் சொன்னார். “ஒழிந்து இங்கு அனைத்திலிருந்தும் பறந்தெழவே விழைகிறேன். இப்பிறவியில் இங்கு எச்சமென எதுவும் இருக்கலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நோக்குக, இவ்வினிய நீர்! இவ்விளங்காலை. இக்குளிர்காற்று. இங்கு அனைத்தும் எத்தனை இனிமை கொண்டுள்ளன! அமுதென்பதென்ன, புலன்கள் தொடுகையில் ஐம்பருக்களும் கொள்ளும் கனிவுதான் அது. மானுடன் உணரும் இன்பத்தையே விண்ணில் அமுதென வாற்றி வைத்திருக்கிறார்கள். பாற்கடல் என்பது என்ன? இவ்வனைத்திலும் பிரம்மத்தை உணரும் ஒருவனின் உள்ளப்பெருக்கு அல்லவா அது? அதை கடைந்தெடுக்கும் சுவை தெய்வங்களுக்கு உகந்தது. தேவர்களை அழிவற்றவர்களாக்குவது. பாண்டவனே அறிக, அந்த அமுது இங்கு அனைத்திலும் உள்ளது! மரத்தில் வேர்முதல் இலைவரை தேன் மறைந்திருப்பதைப்போல” யாதவரின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றான்.

“சிறிய வாழ்வில் புழங்குந்தோறும் இன்பமும் துன்பமும் இனிமையும் கசப்புமென இவ்வுலகு நிலைமாறி அலைகொள்கிறது. இங்கு செயல்யோகியென ஒருவன் மாறுகையில் துன்பங்கள் மீதும் கசப்பின் மீதும் ஆளுகை கொள்கிறான். இன்பத்தை தனித்தறியத் தொடங்குகிறான். ஞானத்தால் தவத்தால் அவன் வீடுபேறடையுந்தோறும் இனிமை மட்டுமே எஞ்சுகிறது. அமுதொன்றே எஞ்சும் ஒரு நிலையும் உண்டு. அதில் அமர்ந்தோர் யோகிகள். அவ்வமுதனைத்தையும் உதறி இங்கிருந்து செல்பவனே வீடுபேறடைபவன்” என்றார் இளைய யாதவர். “உன் நெற்றியின் ஊற்றுக்கண் திறந்து இனிமைப் பெருக்கு எழுந்து உடலின் ஒவ்வொரு கணுவும் உவகை கொள்ளும் தருணம் ஒன்றிலிருந்து முற்றிலும் உதறி மேலெழ இயலுமா உன்னால்?”

“ஆம், இக்கணம் அதை என்னால் உறுதியாக சொல்ல இயலும். இங்கிருக்கும் பேரின்பங்கள் அனைத்தும் திரண்டு ஒரு துளியென ஆகி என் நாவிற்கு எட்டும் தொலைவில் முழுத்திருந்தாலும் ஒதுக்கிவிட்டு முன்செல்லவே விழைவேன்.” இளைய யாதவர் நகைத்து “எனில் சொல்க, மீண்டெழ விழைகிறாயா? இப்போது இறப்பின் விளிம்பிலிருக்கிறாய். உன் ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க!” என்றார். தயக்கமில்லாமல் “மீண்டெழவே விரும்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “இனிய மலர். தெய்வங்கள் அமர்ந்தருளும் நறுமணப்பீடம் கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் இதழ்களால் சூழப்பட்டது. உள்ளே செல்லும் வழி விரியத் திறந்திருக்கிறது. அதனுள் உள்ளன அனைத்து அழகுகளும் இனிமைகளும். காற்றில் எழுந்து பரவி அனைத்து சித்தங்களுக்குள்ளும் நுழைந்து அருகே இழுக்கின்றது அதன் நறுமணம்.”

“உள்ளே நுழைவது எளிது. அங்கு நுழைந்துள்ளது இனிய மது. பார்த்தா, உள்நுழைவோரில் பல்லாயிரத்தில், பல லட்சங்களில், பல கோடிகளில் ஒருவரே வெளியேற இயல்கிறது. மீண்டும் உள்நுழைய விழைகிறாயா?” என்றார் இளைய யாதவர். “ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க! நான் வெளியேறும் வழி எது?” இளைய யாதவர் அவனருகே குனிந்து “அங்கு உனது ஒரு துளியை நீ எஞ்சவிட்டுச் செல்லவேண்டும். பல்லி தன் வாலை அறுத்து உதிர்த்துவிட்டுத் தப்புவதுபோல. அதுவே ஒரே வழி” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “உனது மிகச் சிறந்த பகுதியை. நீ மிக விரும்பும் ஒரு பகுதியை” என்றார் இளைய யாதவர். “அது உனக்கு பிறிதொரு இறப்பென்றே ஆகும். அப்பேரிழப்பால் நீ அதை கடந்து செல்ல இயலும்.”

அர்ஜுனன் “ஆம், நான் அதற்கு ஒருக்கமே” என்றான். “எனில் எழுக!” என்று சொல்லி இளைய யாதவர் அவன் நெற்றிப்பொட்டை தன் கைவிரலால் தொட்டார். அவன் வலக்கால் இழுத்துக்கொண்டது. முகம் கோணலாகி உதடு வளைந்து எச்சில் வழியத்தொடங்கியது. உடலெங்கும் சென்ற வலிப்பு மேலும் மிகவே அவனிடமிருந்து முனகலோசை ஒன்று எழுந்தது. இளைய யாதவர் எழுந்து தன் ஆடையை சீர் செய்து கதவைத் திறந்து வெளிவந்தார். முதிய மருத்துவர் எழுந்து வணங்கி நிற்க “விழித்துக்கொண்டார். புலரி எழுகையில் எழுந்து படைமுகப்பிற்கும் வருவார். உரிய மருந்தும் உணவும் கொடுங்கள்” என்றபின் நடந்தார்.

ele1துரோணர் முந்தைய நாளிரவு முற்றிலும் துயில்நீத்திருந்தார். பருந்துச்சூழ்கையின் இடச்சிறகில் அதன் இறகுமுனைகளில் ஒன்றாக தன் தேர்மேல் நின்றிருக்கையில் அவ்வப்போது வெண்முகில்போல அவருடைய தன்னுணர்வின் மேல் துயில் வந்து மூடி மெல்ல கடந்துசென்றது. தன்னுணர்வை தக்கவைத்துக்கொள்ள அவர் முயன்றபோது குளிரலைபோல வந்து அறைந்து தூக்கி கொண்டுசென்று பிறதெங்கோ நிறுத்தி திகைப்புற்று மீளச் செய்தது.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வாழ்வில் திகழ்ந்து மீள்வதை அவரே விழித்தெழுகையில் வியப்புடன் நோக்கினார். நூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த மலைச்சிற்றூரான பிரமதத்திற்கு அவர் கிருபியுடன் வந்திறங்கினார். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டு வந்து கிராமங்கள் தோறும் விற்கும் வணிகனான கலிகன். தேன்மெழுகு பூசிய ஈச்சம்பாய்களால் பொதியப்பட்ட உப்புக்குவை மீது அமர்ந்து கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் அவர் சற்றுநேரம் வாழ்ந்து வாழ்ந்து மீண்டார். “என்ன எண்ணம்?” என்றாள் கிருபி. துரோணர் “மானுடனுக்கு ஒரு வாழ்க்கை மட்டும்தானே அளிக்கப்பட்டுள்ளது?” என்றார். கிருபி நகைத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றி “ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது” என்றாள்.

கிருபியை அவர் அவளுடைய சிற்றூரின் குடிலில் சந்தித்தார். அவள் முதுமையால் இறுகிவிட்டிருந்தாள். அவர் உத்தரபாஞ்சாலத்தில் அவளுடைய ஊரைத் தேடி வந்திருந்தார். தன் குடில்வாயிலில் விறகுகளை பிளந்துகொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் நடைதளர்ந்தார். முறத்தில் காய்கள் உலரவைக்கப்பட்டிருந்தன. அப்பால் மூங்கில்பாயில் நெல் காய்ந்தது. காகங்களை ஓட்டும்பொருட்டு கரிய மரவுரி ஒன்றை கழுகுவடிவில் செய்து நிறுத்தியிருந்தாள். அவர் அணுகுவதன் நிழலசைவைக் கண்டு நிமிர்ந்தாள். அவரைக் கண்டதும் முகத்தில் எந்த உணர்வுமாற்றமும் உருவாகவில்லை. அவர் முற்றத்தில் ஏறியதும் “வருக!” என்றாள்.

அவர் சாணிமெழுகிய திண்ணையில் களைப்புடன் அமர்ந்தார். அவள் உள்ளே சென்று கொப்பரையில் இன்நீருடன் வந்தாள். அவர் அதை வாங்கி அருந்தியபோது அந்தச் சுவை எத்தனை பழகியதாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டார். அவள் அவரைவிட்டுப் பிரிந்து நெடுநாட்களாகிவிட்டிருந்தது. அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தின் அரசனானதுமே அவள் அவனுடன் சென்றாள். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே அச்சிற்றூருக்குச் சென்றுவிட்டாள். அஸ்வத்தாமன் அவளை அரண்மனையில் தங்கவைக்க விழைந்தான். “நான் அரசி அல்ல, அந்தணப்பெண். அரசியாவது என்னால் இயலாது. ஆவேன் எனில் அது வீழ்ச்சி” என கிருபி சொன்னாள்.

அஸ்வத்தாமன் அவளுக்கு அளித்த எதையுமே அவள் பெற்றுக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக கிளம்பி அவன் அமைத்துக்கொடுத்த அக்குடிலுக்கு சென்றாள். அங்கே தனியாகவே தங்கினாள். அச்சிற்றூரின் தலைவர் அவளுக்குத் தேவையானவற்றை கொண்டுவந்து அளித்தார். அவள் அங்கே சிற்றூரின் சிறுமியருக்கு நெறிநூல்களை கற்பித்தும் பெண்களுக்குரிய வேள்விகளை இயற்றியும் வாழ்ந்தாள். அஸ்வத்தாமன் அவ்வப்போது வந்து அவளைப் பார்த்து மீண்டான். துரோணர் அவளை பார்க்கச்செல்வது குறைந்தது. அவர் வருவதை அவள் விரும்பவில்லை என்று தோன்றும். அவள் கண்களில் கனிவு இருக்காது. வாழ்க்கையை கடந்துசென்றுவிட்ட முதுமகள்களுக்கு விழிகளில் ஒரு கடுமை தோன்றுவதுண்டு. புருவங்களில் இருந்த நரைமயிர்கள் விழிகள்மேல் விழுந்துகிடக்க அவள் அவர் அறியாத நோக்கொன்றை கொண்டிருந்தாள்.

“நான் வரும்போது எண்ணிக்கொண்டேன், முன்பு நீ சொன்னதை. ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது என்று” என்றார். கிருபி “வாழ்க்கையை ஒரு துளியைக் கொண்டே நிறைத்துவிடமுடியும்” என்றாள். “ஆம், இங்கு வரும்போதெல்லாம் நான் அதையே உணர்கிறேன். இங்கே வந்து தங்கவேண்டும் நான்” என்றார் துரோணர். “இங்கே வில்லுடன் தங்க இயலாது” என்று கிருபி சொன்னாள். “ஆம், அதை உதறிவிட்டு வரவேண்டும்” என்று துரோணர் சொன்னார். “வில் உங்கள் கைப்பழக்கம்” என்று கிருபி சொன்னாள். அவர் திடுக்கிட்டு நோக்கினார். தன்முன் விரிந்திருந்த பாண்டவப் படைகளை உணர்ந்ததும் சற்றே நிலைநழுவியிருந்த வில்லை இறுகப்பற்றிக்கொண்டார்.

இத்தருணத்தில் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்கிறோமா? ஒரு வஞ்சத்தின் பொருட்டு இவையனைத்தையும் இழந்திருக்கிறோம். வஞ்சம் கொள்பவரிடம் தெய்வங்கள் கேட்கின்றன, எத்தனை? எவ்வளவு? எதுவரை? ஒவ்வொன்றும், அனைத்தும், இறுதிவரை என்று உரைக்கில் மட்டுமே வஞ்சத்தில் வெற்றியை அளிக்கின்றன. வஞ்சநிறைவின் இனிமையை அளிக்கின்றன. வஞ்சநிறைவு என்பது மூக்குற்றிப்பூவின் தேன். துளியினும் துளி. சிறுதேனீயால் மட்டுமே அதை அறிந்து தொட்டு எடுக்கமுடியும். வஞ்சம் கொண்டவனுக்கு வஞ்சமன்றி பிறிதெதுவும் எஞ்சுவதில்லை. வஞ்சத்திற்கு பின் வஞ்சமும் எஞ்சுவதில்லை. எத்தனை நூல்கள் மீளமீளச் சொல்கின்றன இவற்றை. எவரேனும் உளம்கொள்கிறார்களா? இயலாமையால் அன்றி எதன்பொருட்டேனும் வஞ்சத்தைக் கைவிட்ட மானுடர் உண்டா?

வஞ்சமும் இல்லையேல் எதைக்கொண்டு என் வாழ்க்கையை நிறைத்துக்கொள்வேன்? அந்தணனாக வாழவியலாதா என்ன? அதை கிருபி உணர்ந்திருந்தாளா? அன்று அவள் குடிலின் திண்ணையில் அமர்ந்திருந்தபோது பெருஞ்சினம் மூண்டெழ நீ உரைத்த ஒரு சொல்லில் இருந்து எழுந்தது என் ஆறாப் பெருவஞ்சம் என்று சொல்ல எண்ணினார். ஆனால் அச்சொல்லில் இருந்த சிறுமையை அவரால் தாளமுடியவில்லை. ஒரு பசுவுக்காகவா நீ துருபதனை தேடிச்சென்றாய் என்று அவள் கேட்கக்கூடும். கேட்பவள்தான் அவள். அவரால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. நெடுந்தொலைவு கடந்து அங்கே வந்திருந்தார். ஆனால் உடனே திரும்பிவிடவேண்டும் என்று தோன்றியது. கிளம்புகிறேன் என அவர் சொன்னபோது கிருபி ஒன்றும் சொல்லவுமில்லை. அவர் திரும்பி அந்த பொய்க்கழுகை பார்த்தார். புன்னகையுடன் நடந்தார்.

வானில் முகில்கள் ஒளிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தன. கரிய இரும்பு உரசப்பட்டு மெருகேறுவதுபோல. கீழ்வானில் சில பறவைகளின் சிறகசைவு. அவர் பெருமூச்சுடன் இத்தனை மெல்ல காலம் ஒழுகும் ஒரு தருணத்தை முன்பு உணர்ந்ததே இல்லை என எண்ணிக்கொண்டார். இது இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதியின் கரையில் பிலக்ஷவனம் என்னும் காடு. இந்த இடைவழியில் இந்தக் காலையில் பதியும் முதற்காலடி என்னுடையதா என்ன? மழை பெய்துகொண்டிருந்தது. ஆஷாட மாதத்து இளமழை. சரத்வானின் மலைக்குடிலுக்கு நேர்கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடியது.

கண்ணீர் வழியும் முகத்தைத் தூக்கி துரோணர் கேட்டார் “என்னுள்ளும் அத்தகைய வஞ்சம் குடியேறுமா என்ன? அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா? என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா?” அவர் தோளை மெல்ல தொட்டு இளைய யாதவன் சொன்னான் “வில் என்பது ஒரு புல் மட்டுமே. என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம்.” அவர் திகைப்புடன் அவனை நோக்கி “என்ன சொல்கிறாய்? நீ எப்படி இங்கே வந்தாய்?” என்றார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்?” என்றான் இளைய யாதவன். துரோணர் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றார்.

மீண்டுமொரு கணம் விழித்துக்கொண்டு அப்போதும் புலரிமுரசு முழங்கவில்லை என்று உணர்ந்தார். எங்கிருக்கிறேன்? இது குருக்ஷேத்ரம். ஆனால் நான் இதோ என் மைந்தனுடன் இளவெயிலில் அம்பு பயின்றுகொண்டிருக்கிறேன். பொன்வெளிச்சத்தில் காலையிலெழுந்த சிறுபூச்சிகள் சுடர்களாக சுழல்கின்றன. இலைப்பரப்புகள் பளபளத்து அசைகின்றன. மிக அப்பால் ஆலயமணியின் ஓசை எழுகிறது. அம்புபயிலும் இளையோரின் சிரிப்பொலிகள். அவ்வண்ணம் சிரிக்க அதன்பின் எப்போதுமே மாணவர்களால் இயல்வதில்லை. மாணவர்களுடன் இருப்பதே என் உவகை. மாணவர்களுக்கு அளிக்கையில் நான் ஆசிரியன். மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கையில் நான் தந்தை. ஆசிரியன் என்பவன் என்றும் இளமை மாறாத மைந்தரின் தந்தை.

மாணவருடன் சிறு சொல்லாடி நகைத்தபடி ஆலமரத்தடியில் அமர்ந்தார். “அம்பைத் தொட்டதுமே அதை உணர்பவன் அதமன். அவன் உடல் பயிற்சியை பெற்றிருக்கிறது. அம்பருகே கைசென்றதுமே அதை உணர்ந்துகொள்பவன் மத்திமன். பயிற்சியை அவன் அகமும் பெற்றிருக்கிறது. அம்பென எண்ணியதுமே அம்பை அறிபவன் உத்தமன். அவன் ஆன்மாவில் தனுர்வேதம் குடியேறியிருக்கிறது.” அவர் முன் அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் கர்ணனும் ஏகலவ்யனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களை நோக்கியபடி அவர் சொன்னார். “எந்த ஞானமும் உபாசனையால் அடையப்படுவதே. அதன் நிலைகள் மூன்று. ஞானதேவியிடம் இறைஞ்சி அவளை தோன்றச்செய்தல் உபாசனை. அவளை கனியச்செய்து தோழியாகவும் தாயாகவும் தெய்வமாகவும் தன்னுடன் இருக்கச்செய்தல் ஆவாகம். முழுமை என்பதுதான் அவளேயாதல். அதை தன்மயம் என்றனர் மூதாதையர்.”

விழித்துக்கொண்டு அது கனவென்று உணர்ந்தார். “தந்தையே!” என்று அம்புடன் வந்த மைந்தனிடம் “செல்க!” என்று படபடப்புடன் சொன்னார். “இது பெரும்போர்க்களம். நான் புலரியில்  வில்லுடன் காத்து நின்றிருப்பதாக உணர்கிறேன்.” அஸ்வத்தாமன் திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்தான். எவர் எவரிடம் போரிடுகிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. வலப்பக்கம் நின்றிருந்த துருபதனை திரும்பி நோக்கி “இது எந்தப் போர்?” என்றார். துருபதன் நகைத்து “போருக்கு எழுந்த பின்னரும் போரை அறியாமல் இருக்கிறீர், துரோணரே. இது தேவர்களும் அசுரர்களும் அமுதின் பொருட்டு நிகழ்த்தும் பெரும்போர்” என்றான். “அது முன்பு நிகழ்ந்ததல்லவா?” என்று அவர் கேட்டார். “அது என்றும் நிகழ்வது. முடிவற்றது” என்று துருபதன் சொன்னான்.

“பாஞ்சாலனே சொல்க, நாம் எவர் தரப்பில் நின்று போரிடுகிறோம்? நாம் யார்?” என்று துரோணர் உரக்க கேட்டார். “இதிலென்ன ஐயம்? நாம் அசுரர்களின் பொருட்டு போரிடுகிறோம். அதோ நம்முன் பெருகி நின்றிருப்பவர்கள் தேவர்கள். அமுது அங்கிருக்கிறது. இன்னமும் அது எவராலும் முழுக்க வெல்லப்படவில்லை” என்றான் துருபதன். போர்முரசுகள் முழங்கத்தொடங்கின. துரோணர் தன் வில்லை கையிலெடுத்து துருபதனிடம் “நீ என்னருகே நில். நீ உடனிருந்தால் நான் வெல்லப்பட இயலாதவன்” என்றார். “நான் உங்கள் வலது கை என என்றும் உடனிருப்பேன்” என்று துருபதன் கூறினான். முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. அவர் விழித்துக்கொண்டு காற்றில் பறந்த தன் மேலாடையை எடுத்து சுற்றிகொண்டார். ஆனால் கவசங்கள் எடையுடன் உடலை அழுத்துவதாக உணர்ந்தார். அது அவருடைய கொடியின் படபடப்பென உணர்ந்ததும் விழிப்பு முழுமையாகியது.

கையுறைகளை இழுத்து சீரமைத்தார். என்ன கனவு அது? அதை முழுக்க தொகுக்க இயலவில்லை. கனவுகளின் பொருளின்மை எப்போதுமே துணுக்குறச் செய்கிறது. பொருந்தா பெருந்தொலைவுகளை அவை பறந்து தாவிச் சென்று இணைத்துவிடுகின்றன. இனிய நாட்களை நினைவுறுகிறேனா? அல்லது அவ்வினிய நாட்களில் எய்தாது எஞ்சியிருந்த சிலவற்றையா? அவர் தன் இடக்கையருகே ஒருவர் நின்றிருப்பதை உணர்ந்தார். எப்போது அவ்வுரு தன் தேரிலேறிக்கொண்டது என்று திகைத்து “யார்?” என்றார். அது ஒரு பெண் என்று உணர்ந்ததும் “இப்போர்க்களத்தில் எப்படி வந்தாய்? விலகு!” என்றார். அவள் தன் கையிலிருந்த கரிய சிறு மொந்தையை அவரை நோக்கி நீட்டினாள். “இது என்ன?” என்று அவர் கேட்டார். “இது அமுது. என்றும் நீங்கள் விழைந்தது” என்றாள்.

“இல்லை, நான் விழைந்தது இது அல்ல!” என்று அவர் சொன்னார். “இதுதான். இதை மூத்த அமுது என்பார்கள். உங்களுக்குரியது இதுவே” என்று அவள் அதை அவரிடம் நீட்டினாள். அதை கைகளில் வாங்கிக்கொண்டார். “உன்னை பார்த்திருக்கிறேன்… நீ யார்?” என்று அவர் கேட்டார். “என்ன சொல்கிறீர், ஆசிரியரே?” என்ற திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மனின் குரல் கேட்டு அவர் விழித்துக்கொண்டார். சுசர்மன் தன் கையிலும் ஒரு மொந்தையை வைத்திருந்தான். “அகிஃபீனா கலந்த இனிய மது. போரில் ஊக்கத்தை அளிக்கும்” என்றான். “தாங்கள் தேர்தட்டில் சோர்ந்திருப்பதாகத் தோன்றியது ஆகவே அமுதுடன் நானே வந்தேன்.”

துரோணர் அந்த மதுவை அருந்தினார். அதில் கந்தகமணம் இருப்பது போலிருந்தது. “எரிமணம்” என்றார். “ஆம், நம் குருதியை எரியச்செய்யும்” என்றான் சுசர்மன். “ஆசிரியரே, உங்கள் வஞ்சம் அனலாகட்டும். இன்று அறம், நெறி, முறை என எதையும் நீங்கள் கருத்தில் கொள்வதில்லை என்று சொன்னதைப்போல எங்களை ஊக்கமடையச் செய்யும் பிறிதொன்றில்லை. அதையே எங்களுக்கும் சொல்லிக்கொண்டோம். அர்ஜுனன் இன்று படைமுகம் எழப்போவதில்லை. ஒருவேளை அவன் வந்தாலும் பதறாக் காலில் நின்று அசையா வில் கொள்ளப்போவதில்லை. இன்று நாம் அவன் உயிரை கொள்வோம்.” அவன் மதுக்கலத்தைத் தூக்கி அருந்தி “இன்று பாரதவர்ஷத்தின் பெருவீரனின் கதை முடிகிறது. அவனை பயிற்றுவித்த ஆசிரியராலேயே அவன் அழிகிறான்” என்றான்.

துரோணர் “ஆம்” என்றார். மொந்தையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு “இன்று நான் பிறிதொருவன். மூத்தவளின் அருள் என்னுடன் திகழ்க!” என்றார். சுசர்மன் களிமயக்கில் உரக்க நகைத்து கைகளைத் தூக்கி தன் தம்பியரை நோக்கி “மூத்தவள் துணையெழுக! மூத்தவள் அருள்க!” என்றான். சம்சப்தர்கள் அவனுடன் சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டு நகைத்தார்கள்.