இந்திரநீலம் - 27

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 8

புன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண் விரும்புதல் இயல்பு. உடலே புன்னகை என்றானவனை என்ன செய்வது? அவனை தன் விழி இரண்டால் பார்த்து முடிக்கவில்லை பாமா. அவன் செம்மைசேர் சிறு பாதங்களை, வில் என இறுகிய கால்களை, ஒடுங்கிய இடையை, நீலக்கல்லில் நீரோட்டம் என விரிந்த மார்பில் பரவிய கௌஸ்துபத்தை, மீன்விழிச் சுடர்களை நக முனைகளெனக் கொண்ட கைவிரல்களை, மென்நரம்பு தெரியும் கழுத்தை, முலையுண்ட குழந்தை என குவிந்த உதடுகளை, நெய்ப்புகைப் படலமெனப் படிந்த மென்மயிர் தாடியை, தேன் மாந்தி குவளை தாழ்த்தியபின் எஞ்சியதுபோன்ற இளமீசையை, நீள் மூக்கை, நடு நெற்றி விழிபூத்த குழலை மீண்டும் மீண்டும் என நோக்குவதே அவள் நாளென ஆயிற்று.

ஒவ்வொரு கணமும் துள்ளித்திமிறும் கைக்குழந்தையை ஒக்கலில் வைத்திருப்பது போல, கன்றுக்குட்டிக் கயிற்றைப்பிடித்து தலையில் பால் நிறை குடத்துடன் நடப்பது போல, கை சுடும் கனலை அடுப்பிலிருந்து அடுப்புக்கு கொண்டு செல்வது போல, அரிய மணி ஒன்றை துணி சுற்றி நெஞ்சோடணைத்து கான்வழி செல்வது போல ஒவ்வொரு கணமும் அவள் அவனுடன் இருந்தாள். பதற்றமும் அச்சமும் பெருமிதமும் அவற்றுக்கு அப்பால் இருந்த உரிமை உணர்வுமாக அவனை அறிந்தாள். ஒவ்வொரு அடியிலும் தன்னை நோக்கி வருபவனென்றும் தன்னைக் கடந்து செல்பவனென்றும் அவன் காட்டும் மாயம்தான் என்ன என்று வியந்தாள்.

காற்றில் பறக்கும் மென்பட்டாடை என அவன் அவளை சுற்றிக்கொண்டான். அள்ளும் கைகளில் மைந்தன் என குழைந்தான். கை தவழ்கையில் நெளிந்தான். ஒரு கணமேனும் பிடி விலகுகையில் எழுந்து பறந்தான். அப்பதற்றம் எப்போதுமென அவள் முகத்தில் குடியேறியது. அவனைப் பார்க்கும்போதெல்லாம் புருவம் சுழித்து விழி கூர்ந்து பிழை செய்த மைந்தனை கண்டிக்கும் அன்னையின் பாவனை கொள்ளலானாள். ”இங்கிரு!” என்றோ, ”எங்குளாய்?” என்றோ, ”அங்கு ஏன்?” என்றோ அவள் வினவுகையில் அவனும் அன்னை முன் சிறுமைந்தனென விழி சரித்து புன்னகை அடக்கி மென் குரலில் மறுமொழி சொன்னான். அவர்களின் நாளெலாம் ஊடலென்றே ஆயிற்று. ஊடலுக்குள் ஒளிந்திருக்கும் மெல்லிய புன்னகை என்பது அவர்கள் அறிந்த கூடலென்று இருந்தது.

”என்னடி இது? அவன் உன் கொழுநன். நீ இன்னும் அன்னையாகவில்லை” என்று மஹதி அவளை அணைத்து சொன்னாள். முகம் சிடுசிடுத்து ”சொன்ன சொல் கேட்பதில்லை. எங்கிருக்கிறான் என்றறியாமல் ’எப்படி இருக்கிறேன்?’ என்று அவன் அறிவதில்லை. நானென்ன செய்வேன்?” என்றாள் பாமை. ”ஆண் என்பவன் காற்று. அவனைக் கட்டி வைக்க எண்ணும் பெண் காற்றின்மையையே உணர்வாள். வீசுகையிலேயே அது காற்றெனப்படுகிறது” என்றாள் மஹதி. “நீ அறிந்த காற்றுகளேதும் அல்ல அவன். சிமிழுக்குள் அடங்கத்தெரிந்த புயல் என அவனை உணர்கிறேன்” என்றாள் பாமா. “நீ அவனை அடிமையாக்குகிறாயடி. ஆணை அடிமையாக்கும் பெண் அடிமையானதுமே அவனை வெறுக்கிறாள்.” “நான் அவனை அணைகிறேன்” என்றாள். “இல்லை, நீ அவனை ஆள்கிறாய்!” சினம் கொண்டு ”சொன்ன சொல் கேட்காமல் விளையாடுபவனை என்னதான் செய்வது?” என்று பாமா கேட்டாள். மஹதி சலிப்புடன் ”யானொன்றறியேனடி. இதுவோ உங்கள் ஆடலென்றிருக்கக்கூடும் விண்ணாளும் தெய்வங்கள் மண்ணில் ஒவ்வொரு காதலிணைக்கும் ஒருவகை ஆடலென்றமைத்து மகிழ்கிறார்கள் என்றறிந்துளேன். நீ கொண்ட பாவனை அன்னை என்று இருக்கலாகும்” என்றாள்.

ஆயர்பாடியில் அவர்கள் புது இரவு நிகழ்ந்தது. மஹதி அவளுக்கென ஈச்சமர ஓலைகளை தனித்தமர்ந்து தன் கைகளால் முடைந்து அமைத்த சிறு குடில் மலை அடிவாரத்தில் புல்வெளி நடுவே அமைந்திருந்தது. ”என்னடி இது புதுப்பழக்கம்? அன்னையர் இல்லத்தில் கரவறையில் மணஇரவு கூடுவதன்றோ ஆயர் முறை?” என்று மாலினி கேட்டாள். “அவர்கள் ஆயர்கள் அல்ல. மண்ணிலிருந்து விண் விளையாடச்செல்லும் கந்தர்வர்கள்” என்றாள் மஹதி. சிரித்து ராகினி சொன்னாள் “பறந்து விண்ணுக்கு ஏறிவிடுவார்கள் என்றுதான் நானும் எண்ணினேன். அவர்கள் இங்கிருக்கவே இல்லை அன்னையே!” மாலினி “தன்னந்தனிய இடம். இரவில் புலி வரும் வழி அது” என்றாள். ராகினி ”அவனறியாத புலிக் கூட்டமா என்ன?” என்றாள்.

“எனக்கொன்றும் புரியவில்லையடி! நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லும் அவன் அல்ல இவன் என்று எண்ணுகின்றேன். அறியாச் சிறுவனாக, களியாடும் குழந்தையாக இங்கு நம் மன்று நின்றிருக்கிறான். இவனையா பாரதவர்ஷத்தை ஆளும் பெருமுடி கொண்டவன் என்கிறார்கள்?” என்றாள் மாலினி. ”அரசி! விளையாடாதவன், பாரதவர்ஷமென்னும் இப்பெருங்களத்தை ஆள்வதெப்படி?” என்று மஹதி சொன்னாள். ”நீங்கள் ஒவ்வொருவரும் அவனைப் போல் பேசத் தொடங்கிவிட்டீர்கள். ஒரு சொல்லும் விளங்காமல் எங்கோ தனித்து நின்றிருக்கிறேன்” என்றாள் மாலினி.

பதினைந்து நாள் உணவின்றி சிவமூலிப்புகை மயக்கில் இருந்த உடல் மெலிந்து நடுங்க மெல்ல சுவர் பற்றிச் சென்று சாளரம் வழியாக வெளியே ஆய்ச்சியர் மகளிர் நடுவே ஆடி நின்ற தன் மகளையும் அருகு நின்ற ஆயனையும் நோக்கினாள். அவன் அவள் குழலை ஒரு மலர்ச்செடியில் கட்டி வைத்து விலக அவள் திரும்பி குழலை இழுத்து சினந்து சீறி குனிந்து தரை கிடந்த மலரள்ளி அவன் மேல் வீசி கடுஞ்சொல் உதிர்ப்பதை கண்டாள். என்னவென்றறியாத உள எழுச்சியால் கண்ணீர் சோர சாளரக் கதவில் தலை சாய்த்து விம்மும் நெஞ்சை கைகளால் அழுத்தி கண் மூடினாள்.

மலையோரத்து பசுங்குடிலை பகல் முழுக்க நின்று தன் கைகளால் அமைத்தாள் மஹதி. துணை நின்ற ராகினியும் மூதாய்ச்சியர் பன்னிருவரும் ஒவ்வொரு கணமும் தங்கள் நினைவில் எழுந்த காலங்களால் மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அறிந்த மணமேடை, மணியறை, அணிப் பந்தல் மஞ்சம். ஒரு போதும் மீளாத ஆழ்கனவு. மாவிலைத் தோரணம் கட்டிய விளிம்பு. மென்பலகை சாளரக் கதவுகள். வெண்பட்டுத் திரைகள் நடுவே மரவுரி மஞ்சம். அதன்மேல் மலர்த் தலையணைகள். தூபம் கனிந்து புகையும் களம். ”இனி இங்கு எழ வேண்டியது நிலவொன்றுதான்” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. “இரவு கொணரும் ஓசைகளும் மலர் மணமும் குளிரும் பின்னிரவில் சரிந்த மென் மழையும் அவர்களுக்கு துணையாகுக!” என்றாள் இன்னொருத்தி.

மாலை சிவந்து வருகையில் அவளை ஏழு ஆய்ச்சியர் கரம் பற்றி அழைத்துச் சென்று யமுனையில் நீராட்டினர். புன்னை மலர்கள் படலமென வளைந்து வந்து அவளைச் சூழ்ந்தன. அவள் குழலிலும் மெல்லுடலிலும் நறுமணப்பசை கொண்ட புன்னை மலர்கள் பற்றிக் கொண்டன. ”தேனீக்கள் போல” என்று சொல்லி அவள் அவற்றை உதறினாள். “இத்தனை பேரில் மலர்கள் உன்னை மட்டுமே நாடி வந்திருக்கின்றன. எங்கோ நின்று பூத்த மலர் மரம் உன்னை அறிகிறது” என்றாள் ஆய்ச்சியரில் ஒருத்தி. யமுனை நீராடி எழுந்து ஈரம் களையாமல் நடந்து இல்லம் மீண்டாள். ஆடை அகற்றி அவளை அறை இருத்தி ஆய்ச்சியர் சூழ்ந்தனர். மருத்துவச்சி அவள் உடலை முழுமை செய்தாள்.

சூழ்ந்தமர்ந்து அவளை சித்திரமென வரைந்தெடுத்தனர். செம்பஞ்சுக் குழம்பு கால்களை மலரிதழ்களாக்கியது. தொடைகளிலும் மேல் வயிற்றிலும் எழுந்த முலைக்குவைகளிலும் சரிந்த விலாவிலும் குழைந்த தோள்களிலும் தொய்யில் எழுதினர். நகங்கள் செம்பவளம் போல் வண்ணம் கொண்டன. இதழ்களில் செங்கனிச்சாறு பிழிந்து வற்றியெடுத்த சிவப்பு. மென் கழுத்திலும் கன்னத்திலும் நறுமணச்சுண்ணமும், நெற்றியில் பொற்பொடியும், நீள் கருங்குழலில் மலர் நிரையுமென அவளை அணி செய்தனர். இளஞ்சிவப்புப் பட்டாடை, பொன்னூல் பின்னலிட்ட மேலாடை, தொங்கும் காதணி, நெற்றி சரிந்த பதக்கம், இதழ் மேல் நிழலாடும் புல்லாக்கு, முலை மேல் சரிந்தசையும் வேப்பிலைப் பதக்கமாலை, விழிகள் சொரிந்ததென மின்னும் மணியாரம், கவ்விய தோள் வளை, குலுங்கும் கைவளை அடுக்குகள், மெல் விரல் சுற்றிய ஆழிகள் என முழுதணிக்கோலம் கொண்டாள். இருள் எழுகிறதா என்று இரு ஆய்ச்சியர் முற்றத்தில் நின்று நோக்கினர். ஒருத்தி திரும்பி வந்து அவள் காதில் “எங்கோ அவனும் அணி கொள்கிறானடி! இக்கணம் உனக்கென ஒருங்குகிறது அவனுடல்” என்றாள்.

சொல் கேளா ஆழத்தில் கிணற்று நீர் போல் சிலிர்ப்புற்றுக் கொண்டிருந்தது அவள் உள்ளம். சரிந்த விழிகளுக்குள் கருவிழிகள் ஓடிக் கொண்டிருந்தன. ”நிலவெழுவதா? முல்லை மணம் வருவதா? எது தொடங்கி வைக்கிறது இரவை?” என்று ஆய்ச்சி ஒருத்தி கேட்டாள். ”இவ்விரவைத் தொடங்கி வைப்பது சூழ்ந்திருக்கும் இக்காடென்றே ஆகுக! இரவெழுவதை காடு சொல்லட்டும்” என்றாள் மஹதி. காட்டுக்குள் பறவைகள் எழுந்து வானில் சுழன்றன. இலையடர்வுக்குள் இருந்து பதிந்த காலடியுடன் வந்த சிறுத்தை ஒன்று அவர்கள் அமைத்த மலர்க்குடிலை அணுகி பாதம் ஒற்றி ஒற்றி புல்வெளி மேல் நடந்து சுற்றி வருவதை தொலைவில் நின்று கண்டனர் ஆய்ச்சியர். ”மலைச்சிறுத்தை!” என்று ஒருத்தி குரலெழுப்ப கூடி நின்று அதை நோக்கினர்.

கொன்றையின் பொன்னிற சிறுமலரிதழொன்று காற்றில் தாவி புதர் மேல் ஒட்டி பின் பறந்து செல்வது போல சிறுத்தை பசுந்தழைப்பில் மறைந்தும் எழுந்தும் அக்குடிலை சுற்றி வந்தது. முகர்ந்து நோக்கி தன் முன்னங்கால்களால் தட்டியது. பின்பு நீள் வாலைத்தூக்கி ஆட்டி உறுமியது. புதர்மேல் பாறைகளை தழுவித்தாவும் நீரலையின் ஒளிமிக்க வளைவுகளுடன் துள்ளி மறைந்து கானுக்குள் புதைந்து சென்றது. அதன்வால் சுழன்று மறைந்தபின்னர் உள்ளே ஒரு சிறுகுருவி ‘சென்றது! சென்றது!’ என்றொலித்து எழுந்து சிறகடித்தது. ”கானகம், அக்குடிலை ஏற்றுக் கொண்டுவிட்டது. இரவென்று அறிவித்துவிட்டது” என்றாள் மஹதி. ஆய்ச்சியர் கூடி குரவையிட்டனர். சிரிப்பொலி கூட அவளை கை பற்றி மெல்லிய காலடி தூக்கி வைத்து மூன்று படிகளிறங்கி முற்றத்துக்கு கொண்டு சென்றனர்.

குரவையொலி சூழ, பெண்கள் சிரிப்பொலியும் கைப்பாணி ஒலியும் கூட அவளை அழைத்துச் சென்று அப்பந்தலிலிட்ட வெண் மரவுரி மஞ்சத்தில் அமர்த்தினர். “காலடிகேட்டு விழி திருப்பாதே! முதற்சொல் சொல்லாதே! முதற்புன்னகை அளிக்காதே! பெண்ணென்று பொறை காத்துக்கொள்! அந்தகக் குலமென்று அங்கே நில்!” என்று அவள் காதில் சொன்னாள் மூதாய்ச்சியொருத்தி. ”தருக்கி தலை நிமிர அவளுக்கு தனியாகவேறு கற்றுத்தர வேண்டுமா?” என்றாள் இன்னொருத்தி. ஒவ்வொருவராக நகை மொழி கூறி அவள் கன்னம் தொட்டு தலை வைத்து வாழ்த்தி விலக மஹதி மட்டும் எஞ்சினாள். குனிந்து அவள் விழிகளை நோக்கி ”காதலனுடனாட பெண்ணுக்கு அன்னையோ, தோழியோ, தெய்வங்களோ கற்றுத்தர வேண்டியதில்லையடி. சென்ற பிறவியில் அவனை தன் மைந்தனென அவள் மடி நிறைத்து ஆடிய அனைத்தும் அகத்தில் எங்கோ உறைகின்றது என்பார்கள். வாழ்க!” என்று சொல்லி நெற்றி வகிடைத் தொட்டு வாழ்த்தி விலகிச் சென்றாள்.

அங்கிருந்தாள். அம்மஞ்சத்தில் என்றும் அவ்வண்ணம் அவனுக்கென காத்திருந்ததை அப்போது உணர்ந்தாள். களிப்பாவையை மடியிலிட்டு ஆடும் குழவிக்காலம் முதல் ஒவ்வொரு நாளும் அவ்வண்ணம் அவன் கால் ஒலி கேட்டு செவி கூர்ந்திருந்தாள் என்றறிந்தாள். அப்போது அவள் விழைந்ததெல்லாம் அத்தனிமையை முழுமையாக்கும் ஒன்றைத்தான். பருவுடல் கொண்டு பீலி சூடி பொற்பாதம் தூக்கி வரும் அவன் என்னும் அவ்வுடலேகூட அத்தனிமையை கலைத்துவிடுமோ என அஞ்சினாள். காற்றென ஒளியென காணும் அனைத்துமென தன்னைச் சூழ்ந்திருந்தவன் வெறுமொரு மானுடனாக வந்து தோள் பற்றுவது ஒரு வீழ்ச்சியென்றே உள்ளம் ஏங்கியது. இக்கணத்தில் உடலென அவனை அடைந்துவிட்டால் புவியென விண்ணென அவனை இழந்துவிடுவோம் என்று நெஞ்சம் தவித்தது. ‘இவனல்ல! இவனல்ல!’ என்று சொல்லிக் கொண்டது.

‘இன்று இக்கணம் நானிழப்பதை மீண்டும் ஒருபோதும் அடையப்போவதில்லை!’ என்றறிந்தாள். எழுந்து விலகி இல்லம் திரும்பி தன்னறைக்குள் புகுந்து மீண்டுமொரு இளம் குழவியாக ஆகி கண் மூடி ஒடுங்கிக்கொள்ள வேண்டுமென்று விழைந்தாள். இருளில் கான்புகுந்து உடல் களைந்து வெறுமொரு காற்றலைப்பாகி புதர் தழுவிப்பறந்து அப்பால் குவிந்திருக்கும் குகையொன்றுக்குள் புகுந்து மறைந்துவிட வேண்டுமென்று விழைந்தாள். ‘என்னை உடலென்று நீயறிந்தால், உளமென்று இங்கிருக்கும் அனைத்தையும் அழித்தவனாவாய். கள்வனே! இத்தருணம் நீ வாராதிருப்பதையே விழைந்தேன். உன் கை வந்து என் தோள் தொடுவதை வெறுக்கிறேன். உன் குவியும் இதழ் என் கன்னம் தொடுவதை, உன் மூச்சு என் இமை மேல் படுவதை, உன் சொல் வந்து என் செவி நிறைப்பதை வெறுக்கிறேன். கன்னியென்றானபின் நானறிந்த கனவுகள் அனைத்தும் முடியும் கணம் இது என்றுணர்கிறேன். விலகு! விலகிச்செல்! கண்ணனே! மாயனே! ஆயர்குலத்து நீலனே! கருணை செய்! இத்தருணம் இங்கு வாராதொழிக’ என்று அவள் வேண்டிக் கொண்டாள்.

அவன் கால் வைத்து வரும் வழியை விழி நோக்கினாள். புல்வெளியின் வகிடு என அங்கு நீண்டு கிடந்தது அது. வான் இருள, விழி இருள, புல்வெளி நிழல் வடிவமாக மாற அது மட்டும் ஒரு வெண் தழும்பென தெரிந்தது. காட்டுக்குள் இருந்து முல்லை மணம் காற்றில் வந்து குடிலெங்கும் நிறைந்தது. கூடணைந்த பறவை ஒன்று தன் மகவுடன் கூவி எழுந்து காற்றில் சுழன்று மீண்டும் அமைந்தது. இரவின் ஒலி மூச்சுவிடாது இசைக்கும் பாணனின் சீங்குழலென வளைந்து வளைந்து சென்றது. பின் எங்கோ ஒரு கணத்தில் திகைத்து நின்று ‘ஆம்’ என வியந்து அமைதி கொண்டது. ‘எனினும் இனி?’ என மீண்டும் தொடங்கியது. இருண்ட வானில் ஒவ்வொரு விண்மீனையாக அள்ளிவிரித்தபடி சென்றது கண் காணா கரம் ஒன்று. செவ்வாய் செஞ்சுடர் என எரிந்து அருகே இருந்தது. சனி மிக அப்பால் இளநீலத் தழலென எரிந்தது. விண்மீன்கள் ஒவ்வொன்றாய் பற்றிக்கொள்ள வான் எங்கும் எழுந்த பெருவிழவை அவள் கண்டாள். தென்றலில் இலை மணம் கலந்திருந்தது. இலை உமிழ்ந்து நீராகி மூச்சை நிறைத்தது.

ஒவ்வொன்றும் இனிதென அமைந்த இவ்விரவு தனிமையாலன்றி எங்ஙனம் முழுதணையும்? ஒவ்வொரு சொல்லும் உதிர்ந்து எஞ்சும் பெருவிழைவால் விழைவில் கனிந்த ஏக்கத்தால் அன்றி எங்ஙனம் இதை மீட்ட முடியும்? மாயனே! நீயறியாததல்ல. உன் குழலறியாத தனிமையில்லை. இங்கு உன் இசையன்றி என்னை ஏதும் வந்து சூழ வேண்டியதில்லை. வாராதொழிக! என்னை வந்து தீண்டாதமைக! நீள்வழியில் அவன் கால் விழவில்லை என்பதை நோக்கி அங்கமர்ந்திருந்தாள். மெல்ல ஒரு மலரிதழ் உதிர்வது போல தன் தோள் தொட்ட கையை உணர்ந்தாள். பின் நின்று தன் கன்னம் வருடி இறங்கி கழுத்தில் அமைந்த மறு கையை அறிந்தாள். நிமிராது குனிந்து சிலிர்த்தமர்ந்திருந்தாள். இரு கைகள் தழுவி இறங்கி அவளை பின்நின்று புல்கி உடல் சேர்த்தன. அவன் “காதலின் தனிமையைக் கலைக்காதது காற்றின் தீண்டல் மட்டுமே” என்றான்.

”எங்ஙனம் வந்தாய்? நான் காணவில்லையே?” என்றாள். ”நீ காண வருவது உன் கன்னிமைத் தவத்தை கலைக்கும் என்றறியாதவனா நான்? காற்றென வந்தேன். மலைச்சுனைகள் காற்றால் மட்டுமே தழுவப்படக் கூடியவை தோழி!” என்றான். தன் உடலை கல் என ஆக்கிக் குறுக்கி ஒவ்வொரு வாயிலாக இழுத்து மூடி ஒடுங்கிக் கொண்டாள். அவள் குழையணிந்த காது மடல் மேல் அவன் இதழ்கள் அசைந்து உடல் கூச மெல்ல பேசின. ”ஏன் உன்னை இவ்வுடலுக்குள் ஒளித்துக் கொள்கிறாய்?” ”தெரியவில்லை.” கண்டெடுக்கப்படும் இன்பத்தை விழைகிறேனா என்று எண்ணிக் கொண்டாள். ”ஆம்! கண்டெடுக்கப்படும் இன்பத்தை நீ விழைகிறாய்” என்றான். ”இல்லை” என்று சொல்லி சினத்துடன் தலை தூக்கினாள். வெல்லப்படுவதற்கு ஒருபோதும் ஒப்பேன் என்று எண்ணிக் கொண்டாள். “சரி, வென்று செல் என்னை!” என்று அவன் சொன்னான். ”வீண் சொல் இது. பெண்ணென்று நான் உன்னை வெல்வது எங்ஙனம்?” என்று அவள் சொன்னாள். ”வெல்வதற்கு வந்த பெண்ணல்லவா நீ?” என்றான் அவன்.

“விலகு! செல் அப்பால்! உன் சொற்களால் என் கன்னிமையை கலைக்கிறாய். என் நீள்தவத்தில் வெறும்விழைவை நிறைக்கிறாய்” என்றாள். அவன் கைகளை தட்டிவிட்டு ஆடை ஒலிக்க எழுந்தோடி சென்று குடிலுக்கு வெளியே காற்று சுழன்ற சிறு திண்ணையில் நின்றாள். சிறகெனப் பறந்தெழுந்த ஆடையை இருகைகளாலும் பற்றி உடல் சுற்றிக் கொண்டாள். அறைக்குள் மஞ்சத்தில் கால் மடித்தமர்ந்து அவன் இடைக் கச்சையிலிருந்து தன் குழலெடுக்கும் ஓசையை கேட்டாள். அக்குழலின் மாயங்கள் நானறிந்தவை. அவற்றுக்கப்பால் உன் விழி நிறைந்திருக்கும் புன்னகையை நான் கண்டிருக்கிறேன். விழி திருப்பமாட்டேன், உடல் நெகிழ மாட்டேன் என்று அவள் நின்றாள். நீலாம்பரியின் முதல் சுருள் எழுந்தபோது மலர்விழுந்த சுனை நீர்ப்படலமென தன்னுடலை உணர்ந்தாள்.

‘அருகே வா! என் அழகியல்லவா!’ என்றது நீலாம்பரி. ‘உன் அடிகள் என் நெஞ்சில் படலாகாதா?’ என்று ஏங்கியது. ‘என் முடி தொட்டு மிதித்தேறி என் விண்ணமர்க தேவி!’ என்று இறைஞ்சியது. ‘என் விழி புகுந்து நெஞ்சமர்க!’ என்று கொஞ்சியது. கைவிட்டு திரும்புபவளை பின்னின்று இடை வளைத்துப் புல்கி புறங்கழுத்தின் மென்மயிர்ச்சுருள்களில் முகமமர்த்தி ‘அடி, நீ என் உயிரல்லவா?’ என்று குலவியது. மெல்ல மென்பலகைக் கதவைத் திறந்து உள்ளே நோக்கினாள். அவன் புன்னகை எரிந்த முகம் அவள் நெஞ்சு அமைந்ததென அருகிலிருந்தது. நீலாம்பரி நிலவிலிருந்து ஏரியின் அலைநீரில் விழுந்து கால்நோக்கி நீண்டுவரும் பொற்பாதையென அவள் முன் கிடந்தது. அதில் கால் வைத்து அவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள். சேக்கையருகே நின்றாள். பின் இடை குழைந்து அதில் அமர்ந்தாள். கை நீட்டி அவன் கால்களைத் தொட்டாள். குழல் தாழ்த்தி அவள் இடை வளைத்து தன் மடியமர்த்தி முகம் தூக்கி விழி நோக்கி கேட்டான் ”இக்கணத்தை நான் வெல்லலாமா?” என்று.

இடை வளைத்து தோள் தழுவி குழல் வருடி விரல் பின்னி தன்னை அறியுமிக்கணம் அவன் அறிவது உடலையல்ல. உடலென்றாகி நின்ற விழைவையுமல்ல. விழைவூறும் அக விழியொன்றை என்று அவள் அறிந்தாள். இசையென்ற வடிவென்றானதே யாழ். யாழ் தொடும் விரல் இசை தொடும். உளி தொடாத சிலை ஒன்றில்லை. கல் திரை விலக்கி சிற்பம் வெளிவரும் கணம். உளி தொட்டு ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தாள். குழலை, கன்னங்களை, இதழ்களை, தோள்களை, குழைந்த முலைகளை, நெகிழ்ந்த இடையை, எழுந்த தொடைகளை, கனிந்த அல்குலை. ஏதுமின்றி அவன் நுழைந்து அவனாகி அங்கிருந்தான். முழுதளிப்பதனூடாகவே முழுதடையும் கலையொன்றுண்டு என்றறிந்தாள்.

மஞ்சத்தில் அவன் துயில மெல்லிய காலடி வைத்து எழுந்து குனிந்து அவனை நோக்கினாள். எங்கோ செல்பவன் போல ஒருக்களித்திருந்தான். முன்னெடுத்த கால்களில் ஒளிவிட்ட நகங்களை ஒவ்வொன்றாக தொட்டாள். மேல் பாதம் மீது புடைத்த நரம்பை, கால் மூட்டை, மென்மயிர் படர்ந்த தொடையை, மயிர்ப்பரவலை, உந்தியை, மார்பை என கை தொட்டு சென்று அவன் குழலணிந்து விழிவிரித்த பீலியை அறிந்தாள். அதன் ஒவ்வொரு தூவியாய் தொட்டு நீவினாள். “துயில்கையில் விழித்திருக்கும் நோக்கே! நீ நேற்றறிந்தாய் என்னை” என்றாள். நீலம் இளம் காற்றில் மெல்ல சிலிர்த்தது. இமையாதவை! அனைத்தறிந்த விழி3

ஆடை அள்ளி உடல் சுற்றி எழுந்து மெல்ல நடந்து சாளரத்தை அணுகி வெளியே நோக்கி நின்றாள். அவள் அகம் எழுந்த விழைவை அறிந்தது போல மெல்லிய ஓசையுடன் எழுந்து இலைகளைத் தழுவி மண்ணில் பரவி சூழ நிறைந்தது புலரி மழை. இளநீல மென்பெருக்கு.