இமைக்கணம் - 4

இரண்டு : இயல்

wild-west-clipart-rodeo-3கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி ஓடிய பாதையில் இருந்த ஒற்றைப்புள்ளியில் ஒருகணத்தில் கிழக்காகத் திரும்பியது.

சத்யயுகத்தில் முதல் சௌனக முனிவர் அதன் கரைக்காட்டில் தவம்செய்கையில் நீர் விளிம்பில் வேள்விசாலையை அமைத்து வேதியரையும் முனிவரையும் அழைத்து அகாலயக்ஞம் என்னும் பெருவேள்வி ஒன்றை ஒருக்கினார். காலத்தை நிறுத்தி அதிலெழும் மெய்மையில் அமர்தலை வேட்டார். வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அவிக்கொடை அளித்த சௌனகர் பிறிதொன்றென ஏதும் அகத்திலெஞ்சாமல் வேதச்சொல்லென்றே உளம் அமைந்தார். நடுவே அவிசொரியும்பொருட்டு மரக்குடத்தை எடுத்து அருகே ஓடிய நதியின் நீரை அள்ளப்போனார். தனக்கு இடப்பக்கம் மேற்கே ஓடிய நதியை வலப்பக்கம் கிழக்கென அவர் அகம் மயங்கியிருந்தது. மைந்தன் கைநீட்ட அவன் வேள்விக்குச் செவிலியென உடனிருந்த அன்னை அக்கணமே தன்னையறியாமல் கிழக்கே திரும்பி ஒழுகி அருகணைந்தாள்.

நீரள்ளி வேள்விமுடிக்கும் வரை சௌனகர் அதை அறியவில்லை. அருகிருந்த அந்தணர் சொல்மறந்து திகைத்தனர். வேள்விமுடித்தெழுகையில் நதி திசைமாறி ஒழுகிய செய்தியை அவரிடம் அந்தணர் சொல்ல அவர் “பிறிதொன்று எண்ணுவாளோ அவள்?” என்று மட்டுமே உரைத்தார். அன்னை கனிந்த அக்கணத்தை அழியாது நிறுத்த அதன் கரையிலமைந்த காட்டுக்கு இமைக்கணக்காடு என்று முனிவர் பெயரிட்டார்.

நைமிஷாரண்யம் அதன் பின்னரே தேவர்களுக்கு இனியதும் சூரியனுக்கு உரியதுமாக ஆகியது. காலத்தை நாட்களெனப் பகுத்து அறிகாலம் சமைக்கும் கதிரவன் அங்குள்ள அந்நிமிஷத்தை வலம்வந்து வணங்கிச் சென்றான். விசைகொண்டு சுழன்ற காலநிகழ்வு அதை தன் அச்சுப்புள்ளியென்று கொண்டது. மாறும் அனைத்தும் அம்மாறாமையால் தங்களை அளந்துகொண்டன.

சத்யயுகத்தின் இறுதியில் முனிவர்கள் பிரம்மனிடம் சென்று “தந்தையே, காலமின்மையில் நிற்பது எதுவோ அதுவே மெய்மையும் அறமும் வேதமும் ஆகும். காலத்தைக் கட்டிநிறுத்தும் கலைதிகழ்வதனாலேயே இதை சத்யயுகம் என்றனர். இனிவரும் யுகங்களில் காலம் மேலும் மேலும் விசைகொள்ளும். கிருதயுகத்தில் காலம் இருமடங்கு விரைவடையும், மானுடர் உயிர்க்காலம் பாதியெனக் குறையும். திரேதாயுகத்தில் அது மேலும் ஒருமடங்கென்றாகும். துவாபரயுகத்தில் இன்னொருமடங்காகும். கலியுகத்தில் பிறிதொருமடங்காகி வாழ்வகவை சுருங்கும்” என்றனர்.

“வாழ்வே மெய்மையை அறமெனச் சமைக்கிறது. காலம் உருமாறும்போது அறம் திறம்பிழைக்கலாகுமா? அன்று பன்னிருகால்கொண்டு பாயும் அப்புரவியில் அமர்ந்திருக்கையில் நாங்கள் காலமின்மையை எப்படி உணர்வோம்? எங்கு சென்று அகாலத்தின் பீடத்தில் அமர்ந்து யோகம் பயில்வோம்?” என்று கேட்டனர்.

பிரம்மன் காலத்தை பன்னிரு ஆரங்களாகவும், மெய்மையை அதன் மைய அச்சாகவும், செயல்விளைவுச்சுழலை விளிம்புவட்டமாகவும் கொண்ட மனோமயம் என்னும் தன் ஆழியை உருட்டிவிட்டார். “இது எங்கு சென்று அமைகிறதென்று நோக்குக! அது காலமிலியில் அமையும் காடென்று அறிக! அங்கு ஓர் இமைக்கணமே முடிவிலாக் காலமென்று உறைந்திருக்கும். அங்கே தவம்செய்து அதுவாக எழும் மெய்மையை அறிக!” என்றார்.

பிரம்மனின் மனோமயம் பெருவெளியை அறிந்தது – அறியப்படவேண்டியது என இரண்டாகப் பகுத்தபடி உருண்டு உருண்டு செல்ல முனிவர் அதன் பின்னால் விரைந்தோடினர். சரஸ்வதி மண்புகுந்தபின், அவள் நூறு மகள்களில் ஒருத்தியாகிய கோமதியால் அமுதூட்டப்பட்டு செழித்திருந்த பசுங்காட்டின் மையமென அமைந்த மனோஹரம் என்னும் வட்டவடிவமான குளிர்ச்சுனையின் நடுவே எழுந்திருந்த மனோசிலை என்னும் கரிய பெரும்பாறையை தன் அச்சுப்புள்ளியெனக் கொண்டு அவ்வாழி வந்தமைந்தது.

அதுவே நைமிஷாரண்யம் என உணர்ந்து அங்கே முனிவர்கள் குடியேறினர். அதன் தெற்குமூலையில் சௌனகரின் ஆலயம் அமைந்தது. அதன் எல்லைகளை திசைத்தேவர்கள் காத்தனர். அதன் எல்லைக்கு வெளியே பன்னிரு பூதங்கள் காவல்நின்றன. அங்கே பருவமாறுதல்களை அறியாத மரங்களும் செடிகளும் தழைத்தோங்கின. அவற்றில் காலம் ஒழுகுவதென்பதையே அறியாத பறவைகளும் பூச்சிகளும் குடியேறின. அங்கு வாழ்ந்த விலங்குகளின் காலடிகளால் காலம் அளக்கப்படவில்லை. அவற்றின் கால்தடங்கள் எவையும் எஞ்சவில்லை.

நைமிஷாரண்யத்தில் இலைகளும் இமைப்பதில்லை. அங்குள்ள பறவைகள் விலங்குகள் அனைத்தும் மீன்விழிகளே கொண்டிருந்தன. அருந்தவம் இயற்றிய முனிவர்களே அங்கு நுழையலாகும். அதற்குள் நுழைபவர் அக்கணமே இமையார் ஆயினர். தேவர்களுக்குரிய அனைத்தும் அவர்களுக்கு கையகப்பட்டன. அமுதுண்டு அழியாமை கொண்டவர், எடையை வடிவை வண்ணத்தை மாற்றத்தெரிந்தவர். விசைகளால் அலைக்கழிக்கப்படாதவர். அகம்நிலைத்தவர்.

இமைக்கையில் உலகம் அழிந்து பிறிதொன்று பிறக்கிறது. இமைக்கண உலகங்களைக் கோத்து நிலையுலகு சமைப்பது மாயை. அதை அகற்றிய அங்குள்ள முனிவர் எதுவும் அழிவதில்லை என்பதை உணர்ந்தவர். நிலை என்பது மாயை என்றும் மாற்றமென்பது அதன் அடியிலிருக்கும் மாமாயை என்றும் தெளிந்தவர். காலத்தைக் கடந்து நிற்கும் மெய்யைத் தேடும் வேள்விகள் அங்கே இயற்றப்படவேண்டும் என்று வகுத்தனர். காலமிலியில் அமர்ந்த காவியங்கள் அங்கே சொல்லப்படவேண்டும் என்றாயிற்று. அங்கே எழும் ஒவ்வொரு சொல்லும் மறுகணம் என ஒன்றின்றி என்றுமென நிலைகொள்ளும் என்று நிறுவப்பட்டது.

wild-west-clipart-rodeo-3இறுதிக் கோரிக்கையும் மறுக்கப்பட்டு வெற்றுக்கைகளுடன், வெறுமையில் எழுந்த புன்னகையுடன், அஸ்தினபுரியில் இருந்து பாண்டவர்கள் வாழ்ந்த உபப்பிலாவ்யத்திற்கு திரும்பிவந்த யாதவராகிய கிருஷ்ணன் அங்கே அரசர் கூடிய அவையில் எழுந்து “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, அரசர்களே. போர் நிகழ்க என்பதே மூதாதையரும் தெய்வங்களும் ஊழும் இடும் ஆணை. அது நிகழ்க!” என்றார். ஒவ்வொரு கணமும் போரையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அச்சொல்லால் அனைவரும் சோர்வுற்றவர்கள்போல சொல்லின்றி வெறுநோக்கு கொண்டு அமர்ந்திருந்தனர்.

அஸ்தினபுரியில் போர்முன்னெடுப்புகள் வீச்சுகொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். புருஷமேதவேள்வியில் அந்தணரைப் பலியளித்து தெய்வங்களை துணைகொண்டிருந்தனர். பாரதவர்ஷத்தின் முதன்மை ஷத்ரியர்கள் அனைவரும் படைகொண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தனர். பிதாமகரும் ஆசிரியரும் என பெருவீரர்கள் படைக்கலம் ஏந்தியிருந்தனர். வெல்லற்கரிய அப்படைபோல் பிறிதொன்று பாரதத்தில் அமைந்ததில்லை என்று அவர்களிடம் சூதரும் புலவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.

அவையில் அமைதி நீடிக்கவே பேரரசியாகிய குந்தி எழுந்து “நன்று, இனி போரைத் தவிர்ப்பதைப் பற்றி ஒருசொல்லும் எண்ணப்பட வேண்டியதில்லை. போர் நிகழும் என்றான பின்னர் அவ்வாறு எண்ணுவது ஆற்றலை குறைக்கும். இனி கணம்தோறுமென நம் போர்விழைவு மூண்டெழுக! நம் படைக்கலங்கள் நாளும் கூர்கொள்க! நம் வஞ்சங்கள் அனல்சூடுக! நம் நம்பிக்கைகள் உறுதிப்படுக! நாம் வெல்வோம். மண்மகளும் பொன்மகளும் புகழ்மகளும் நம்மை வந்தணைவார்கள். அம்மூவரால் மண்ணில் வாழ்த்தப்பட்டவர்கள் எச்சமில்லாது உளம்நிறைந்து மண்நீங்குவர். அவர்களை விண் வந்து அழைத்துச்சென்று தேவருலகில் அமரச்செய்யும். அவ்வாறே ஆகுக!” என்றாள்.

அவள் உரைத்த சொற்களிலில் இருந்து அவை மெல்ல பற்றிக்கொண்டு மேலெழுந்தது. பீமன் “ஆம், இதுவரை நாம் பேசிய அமைதிச்சொற்களால் கோழைகள் என்று பெயரீட்டிவிட்டோம். இனி அஞ்சாமையால், தயங்காமையால் அவ்விழிவைக் கடந்தாகவேண்டும்” என்றான். யுதிஷ்டிரர் “மந்தா, அமைதிச்சொல் எடுத்தது நமக்கு பெருமையே. நாம் இறுதிவரை முயன்றோம் என்பதை நம் கொடிவழிகள் அறிக! போரின் அழிவுகளுக்காக அன்னையரும் சான்றோரும் அந்தணரும் முனிவரும் நம்மை பொறுத்தருள்வார்கள். உயிர்க்குலங்கள் அனைத்திடமும் நாம் பொறைகோர அச்செயலே நமக்கு அடிப்படை” என்றார்.

அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் பேசிப்பேசி தங்களை எரியூட்டிக்கொண்டனர். “ஐந்து சிற்றில்களும் அளிக்கவியலாதென்று சொன்னவன் கொண்ட மண் அனைத்தையும் நாம் வென்றெடுக்கவேண்டும். இல்லையேல் நமக்கு பெருமையேதுமில்லை” என்று துருபதர் சொன்னார். விராடர் எழுந்து “எங்கள் கொடிவழிகள் அந்நிலத்தை எதிரிலாது ஆளவேண்டும். இந்திரனின் மின் கொண்ட அக்கொடியை வளமிக்க குருதிச்சேற்றில் ஆழ நடுவோம்” என்றதும் அவையமர்ந்திருந்தோர் எழுந்து வெறிப்போர் கூச்சலிட்டனர்.

அபிமன்யூ “என் வில்லுக்கு இரையாகுக அஸ்தினபுரியின் நரிபெற்ற குருளைக்கூட்டம்” என்றான். அவையில் எழுந்த அரசர்கள் களிவெறி கொண்டு கைவீசி நடனமிட்டனர். சாத்யகி “எவர் அரசரென்று உணரட்டும் யாதவ ஆத்திரள். அவர்களை ஆளட்டும் ஒளிமிக்க படையாழி!” என்றான். அவையில் என்ன நிகழ்கிறதென்றே தெரியாத கொந்தளிப்பு நிறைந்திருந்தது.

திருஷ்டத்யும்னன் எழுந்து தன் தொடையை ஓங்கி அறைந்து “என் குலக்கொடியை அவைச்சிறுமை செய்தவனின் நகர் எரிகொள்வதைக் கண்டபின்னரே இனி என் நெஞ்சக் கவசத்தை கழற்றுவேன்” என்றான். அச்சொல்லால் அனைவரும் நிகழ்ந்தவற்றை மீளுணர்ந்து நெஞ்சவிந்தனர். அவையெங்கும் அமைதி சூழ்ந்தது.

சகதேவன் எழுந்து “என் வஞ்சம் அவ்வண்ணமே உள்ளது. சூதுக்கள்வன் சகுனியைக் கொன்று குருதிகாண்பேன்” என்றான். அவை ஆர்ப்பரிக்க நகுலன் எழுந்து “ஒருகணமும் சோர்வின்றி போர்முகப்பில் நிற்பேன். எத்தருணத்திலும் அளிகொண்டு என் வஞ்சத்தை மறக்கமாட்டேன்” என்றான்.

அனைவரும் அர்ஜுனனை நோக்க அவன் கைகளைக் கட்டியபடி அசையாது அமர்ந்திருந்தான். பீமன் அவனை நோக்கியபடி சிலகணங்கள் பொறுத்தபின் தன் தோள்களை அறைந்து அவையை நடுக்குறச் செய்தபடி எழுந்தான். ஓங்கிய குரலில் “அனைவரும் அறிக! என் இளையோன் வில்விஜயன் கையால் மறைவர் பிதாமகர்களும் ஆசிரியர்களும். வஞ்சக் கர்ணனையும் இழிமகன் ஜயத்ரதனையும் அவன் கொன்று களத்திலிடுவான். இது அவனுக்கு என் ஆணை!” என்றான்.

அவையமர்ந்த அரசர்கள் கண்ணீருடன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டபடி அலைகொள்ள பீமன் “கேட்கட்டும் அவை, அறிக மூதாதையர், ஆணைகொள்க தெய்வங்கள்! கௌரவர் குலம் முற்றழிப்பேன். அவர்களின் முதல்வனை தொடைபிளந்து மாய்ப்பேன். அவன் இளையோன் நெஞ்சு போழ்ந்து குருதியுண்பேன். குலாந்தகனாகிய பீமன் நான்! காலப்பேருருவன். என் குலக்கொடியை சிறுமைசெய்தவர்கள் எவரும் மண்ணிலெஞ்சமாட்டார்கள். கொழுங்குருதியால் தங்கள் கடன்நிகர் செய்வார்கள். ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

அரியணையில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் கைகூப்பி கண்ணீர் மல்கினார். அருகமைந்த திரௌபதி அசைவிலா கருஞ்சுடர் என தெரிந்தாள். அவை தன்னைத் தான் கிளர்த்தி உச்சத்தை சென்றடைந்தது. வாள்களையும் வேல்களையும் தூக்கி ஆர்ப்பரித்தனர். வெற்றிவேல் வீரவேல் என்னும் முழக்கம் ஓய்ந்து ஓய்ந்து மீண்டும் மீண்டுமென எழுந்தது. பின்னர் மெல்ல அது அடங்கி அனைவரும் அமர்ந்தபோதுதான் அவர்கள் இளைய யாதவரை நோக்கினர். அவர் விழிகளை நிலம்நோக்கித் தாழ்த்தி அமர்ந்திருந்தார்.

யுதிஷ்டிரர் எழுந்து தன் கோலைத்தூக்க அவையினர் அவர் சொல்லுக்கு செவியளித்தனர். “இதோ அரசாணை! இக்கணம் முதல் பாண்டவப்பெரும்படையின் முதன்மைப் படைத்தலைவராக மாமன்னர் துருபதர் நிறுத்தப்படுகிறார். அவருக்குத் துணைநிற்பவன் என் இளையோனாகிய பீமசேனன். அவர்களின் ஆணைப்படி இங்கு அனைத்தும் அமைக!” என்றார் யுதிஷ்டிரர். அவர் சொற்களை ஏற்று அவைச்சங்கம் ஆம் ஆம் ஆம் என முழங்கியது.

துருபதர் எழுந்து தன் வாளைத் தூக்கி மும்முறை ஆட்டி “இனி நமக்கு பொழுதில்லை. பிசிறுகளும் உதிரிகளும் இன்றி நம்மால் ஆகக்கூடிய அனைத்துப் படைகளையும் ஒன்றென்றாக்கவேண்டும். அவற்றை நிரைவகுத்து அட்டவணையிட்டு அக்ரோணிகளாக அனீகினிகளாக பிருதனைகளாக வாகினிகளாக கணங்களாக குல்மங்களாக சேனாமுகங்களாக பத்திகளாக பிரிக்கவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தலைவர்களும் கொடிகளும் ஒலிக்குறிகளும் ஒளிக்குறிகளும் அறிவிக்கப்படவேண்டும். ஏழுமுறை போர் ஒத்திகை நிகழவேண்டும். பன்னிருமுறை பிரித்து இணைக்கவேண்டும்” என்றார்.

“போருக்கென உணவும் விலங்குத்தீனியும் படைக்கலங்களும் தேர்களும் சுமைவண்டிகளும் ஒருக்கப்படவேண்டும். போரெழுகைக்கான வேள்விகள் நிகழவேண்டும். பலிக்கொடைகள் நிறைவேற்றப்படவேண்டும். சூதர்களுக்கும் அந்தணர்களுக்கும் பரிசளித்த்து சொல்கோரப்படவேண்டும்” என அவர் தொடர்ந்தார் “இனி நமக்கு ஒவ்வொரு கணமும் பணியுள்ளது. இனி ஐயமும் மறுவினாவும் இல்லை. தயக்கமும் சோர்வும் அறவே இல்லை. எழுக, என் குடியே! என் உறவுப்பெருக்கே! என் நட்பே! பாரதவர்ஷத்தின் உயிர்விசைகளே! நாம் வெற்றிநோக்கி இதோ கிளம்புகிறோம்.”

அவை முழங்கி அதிர அவர் சொன்னார் “இதுவே பெருங்கணம். எதன்பொருட்டு நம் மூதாதையர் வேலும் வில்லும் வாளும் கதையும் பயின்றார்களோ அது அணுகிவிட்டது. இக்கணம் முதல் நிகழ்வன அனைத்தும் அழியாது சொல்லில் வாழும். இங்கிருந்து எழுவனவே இனி இப்புவியை வகுக்கும். வென்றால் மண்புகழ வாழ்வோம். அமைந்தால் விண்புகுந்து நிறைவோம். வெல்க நம் குடி! நிறைக நம் மூதாதையர்! அருள்க நம் தெய்வங்கள்! நம் சொல் என்றும் நின்றுவாழ்க!” என்றார் துருபதர். “வாழ்க! வாழ்க! வாழ்க!” என்று அவையினர் போர்க்கூச்சலிட்டனர்.

பீமன் “இக்கணத்திலிருந்து ஆணைகள் எழும். ஒவ்வொருவருக்கும் அதுவே இறையாணை என்றாகுக!” என்றான். அனைவரும் “ஆம்! ஆம்! ஆம்!” என்று ஓசையிட்டனர். அமைச்சர் சௌனகர் கைகாட்ட வெளியே காத்திருந்த முரசுக்காவலர் பெருமுரசுகளை முழங்கலாயினர். ஒன்றுதொட்டு ஒன்று ஒலிகொள்ள அச்சிறுநகரில் அமைந்த நூற்றெட்டு காவல்மாடங்களின் உச்சிகளில் அமைந்த போர்முரசுகள் ஒத்தொலிக்கத் தொடங்கின. நகரைச் சூழ்ந்து நெடுந்தொலைவு வரை பரந்திருந்த பாண்டவர்களின் படைகளின் நடுவே அமைந்த முரசுமேடைகள்தோறும் போர்முரசுகள் ஓசையிட்டன.

அதற்கெனக் காத்திருந்த பல்லாயிரம் படைவீரர்கள் தங்கள் வேல்களையும் வாள்களையும் தூக்கிச் சுழற்றி போர்க்கூச்சலெழுப்பினர். கற்பரப்புகள் நீர்ப்படலமென அலைவுறும் விசைகொண்டிருந்தது அவ்வோசை. அது எழுந்தெழுந்து அலைகளாக அங்கிருந்த அனைத்தையும் அறைந்து அதிரச்செய்தது. ஒவ்வொருவரையும் ஒற்றைப்பெருநதி என அள்ளி அடித்துச்சென்றது அவ்வுணர்ச்சி.

உபப்பிலாவ்யத்தின் இல்லங்களிலிருந்து பெண்டிரும் சிறுவரும் முதியோரும் வெளியே இறங்கி தங்கள் தலையாடையையும் மேலாடையையும் வீசி வாழ்த்தொலி எழுப்பினர். நகரின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்கத் தொடங்கின. சங்கொலிகள் உடன் இணைந்துகொண்டன. அந்தணர் எழுப்பிய அதர்வவேதச் சொல்லோசையும் ஆலயங்களில் முழவோசையும் நதிப்பெருக்கில் குங்குமமும் மஞ்சளும் என அதில் கலந்தன.

உடல் மெய்ப்புகொள்ள, கைகளால் மார்பைப் பற்றியபடி அமர்ந்து, குந்தி விம்மியழுதாள். அவையிலிருந்த அனைவருமே விழிநீர் கொண்டிருந்தனர். அவைக்கலைவை அறிவிக்க சுரேசர் கைகாட்டினார். அவைச்சங்கம் மும்முறை முழங்கியமைந்தது. யுதிஷ்டிரர் எழுந்து தன் மணிமுடியைக் கழற்றி ஏவலரிடம் அளித்துவிட்டு அருகே நின்றிருந்த முதல் மைந்தன் பிரதிவிந்தியனின் தோளைப்பற்றியபடி தளர்ந்த கால்களுடன் நடந்து அவைநீங்கினார். தோளசையா சீர்நடையில் திரௌபதி உடன் சென்றாள்.

அவையினர் கலையத் தொடங்கியதும் இளைய யாதவர் எழுந்து மேலாடையை அணிந்துகொண்டு மெல்ல நடந்தார். அவருக்குப் பின்னால் சாத்யகி சென்றான். பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மைந்தர்கள் சூழ அவைநீங்கினர். அந்தப் பொழுதில் அனைவரும் தங்கள் மைந்தர்களுடன் இருப்பதையே விழைந்தனர். தனித்து வெளியே வந்த இளைய யாதவரை அணுகிய சௌனகர் “தாங்கள் ஆற்றுவதென்ன என்று அறிய விழைகிறேன், யாதவரே. தாங்கள் அளித்த சொல்லுறுதியின்படி படைமுயற்சிகள் எதிலும் தாங்கள் ஈடுபடலாகாது” என்றார்.

“ஆம்” என்று இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆனால் தாங்கள் அரண்மனையில் தங்குவதில் பிழையேதுமில்லை. படைதிரட்டல், வகுத்தல் குறித்து சொல்லென ஏதும் எடுக்காமலிருந்தால் போதும்” என்று சௌனகர் சொன்னார். “ஆனால் என் முகக்குறியே அறிவுறுத்துவதாகும். அதுவே நெறிப்பிழை” என்றார் இளைய யாதவர். “நான் இங்கிருந்து எங்கேனும் சென்று அமைய விழைகிறேன், சௌனகரே. இங்கு போர் முன்னெடுப்புகள் முழுமைகொண்டபின் என் பாஞ்சஜன்யத்துடன் திரும்பி வருகிறேன்.”

“தாங்கள் செல்வது எதற்காக?” என்று சௌனகர் கேட்டார். இளைய யாதவர் “அறிந்தவை எண்ணியவை உணர்ந்தவை அனைத்தையும் ஒற்றைப்புள்ளியில் திரட்டிக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளேன். நானன்றி பிறிதெவரும் இன்றி அமையும் ஓர் இடம் தேவை” என்றார். சௌனகர் “அதற்குரிய இடம் நைமிஷாரண்யம் மட்டுமே. வடக்கே கோமதிநதிக்கரையில் அமைந்துள்ளது அது. என் குலமூதாதையரான சௌனக மாமுனிவரை சரஸ்வதி வலம் வந்த இடம். அங்கேதான் தொல்வியாசர் நால்வேதங்களையும் தொகுத்திணைத்து தன் நான்கு மாணவர்களுக்கு கற்பித்தார். நிலைகொள்ளவேண்டிய சொல் எதுவும் அங்கேதான் எழவேண்டும் என்பார்கள்” என்றார்.

“ஆம், அதை நானும் அறிந்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “அங்கு ஒவ்வொரு சொல்லும் முன்பின்னின்றி முழுதமைகின்றன என்கிறார்கள். என்னுள் சொற்கள் முளைவிட்டு பெருகிக்கொண்டிருக்கின்றன. நான் சென்றமையவேண்டிய இடம் அதுவே.” சௌனகர் “அதற்குரிய அனைத்தையும் ஒருக்குகிறேன், யாதவரே. உங்கள் செலவு நிறைவின் இனிமை கொள்க!” என்றார்.

“சாத்யகி இங்கு என் சொல்போல் நின்றிருக்கட்டும். அவனுடைய படைத்திறன் பாண்டவருக்கு உதவட்டும்” என்றார் இளைய யாதவர். “நான் உடனின்றி நீங்கள் செல்வதை எண்ணி துயருறுகிறேன்” என்றான் சாத்யகி. “எவரும் உடனிருக்காத தருணங்கள் மானுடருக்குத் தேவை” என்று அவன் தோளில் கைவைத்து இளைய யாதவர் புன்னகைத்தார். சாத்யகி தலைகுனிந்து பெருமூச்செறிந்தான்.

சௌனகர் ஒருக்கிய எளிய தேரில் இளைய யாதவர் தனித்து நிமிஷக்காட்டுக்கு சென்றார். செல்லும் வழியெல்லாம் படைப்பெருக்கு போர்க்களிகொண்டிருப்பதை கண்டார். அவர் செல்வதுகூட அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. படைகள் ஆடலும்பாடலுமாக மகிழ்ந்திருந்தன. தீட்டித்தீட்டி ஒளிஏற்றப்பட்ட வாள்களும் அம்புகளும் தெய்வங்களின் விழிக்கூர் கொண்டிருந்தன. நிழல்களென ஆழுலகத்து இருப்புகள் எழுந்து அவர்களுக்குள் கலந்து குருதிவிடாய் கொண்டு நெளிந்தாடின.

நைமிஷாரண்யத்தின் எல்லையில் அமைந்த பூதங்களின் ஆலயங்களில் பலியளித்து பூசனை செய்து அவரை உள்ளே அனுப்பியபின் உடன்வந்த சுரேசர் திரும்பிச் சென்றார். இளைய யாதவர் தன் படையாழியையும் ஐங்குரல்சங்கையும் தெற்குமுகப்பிலிருந்த யமனின் ஆலயத்திலேயே கைவிட்டுவிட்டு அக்காட்டின் பசிய இருளுக்குள் புகுந்து நடந்துசென்றார். அவருடைய இமைகள் அசைவிழந்தன. காட்சிகளை ஒற்றைநிகழ்வென்று சித்தம் அறிந்தது.

கணப்பெருங்காட்டின் நடுவே அமைந்த மனோஹரம் என்னும் சுனையின் நடுவே எழுந்த மனோசிலையைக் கண்டு அதை சிவக்குறி என கொண்டு காட்டுமலரிட்டு வழிபட்டார். அச்சுனைக்கு வடமேற்கே கொன்றைச்சோலை ஒன்றை அடைந்து நான்கு மரங்களை மூங்கிலால் இணைத்து சிறுகுடில் ஒன்றை கட்டிக்கொண்டு அங்கே தங்கினார். ஆடைகளைந்து தழைகளை அணிந்துகொண்டார்.

ஒவ்வொருநாளும் புலரியெழுவதற்கு முன்னரே எழுந்து மனோஹரத்தில் குளிர்நீராடி மனோசிலையை வணங்கி தன் குடிலுக்கு மீண்டபின் அவர் ஒருமுறைகூட வெளியே செல்வதில்லை. முந்தையநாள் அந்தியிலேயே சேர்த்து வைத்திருக்கும் கனிகளையும் கிழங்குகளையும் சேர்த்துச் சமைத்து உச்சியில் ஒருவேளை உண்டபின் குடில்முகப்பில் எப்போதும் கதிரொளி தன் முகத்தில் படும்படி அமர்ந்திருந்தார். வெயில் உடலில் பட்டு தோலை ஊடுருவி குருதியில் பரவுவதை உணர்ந்தார். பின் எண்ணங்களில் கனவுகளில் அது கடந்துசென்றது. அங்குள அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்தது.

ஓரிருநாட்களிலேயே அவர் தன்னுள் குவிந்திருந்த அனைத்துச் சொற்களையும் அடுக்கி நிரைப்படுத்தினார். அவற்றைத் திரட்டி மையமாக்கினார். ஒற்றைச் சொல்லென்றாக்கி அதை ஊழ்கநுண்சொல்லெனக் கொண்டார். அதை எரிகுளத்து அனலென தன்னில் தழைக்கவிட்டு அங்கே அமர்ந்திருந்தார்.