இமைக்கணம் - 39

wild-west-clipart-rodeo-31திரௌபதி வியர்வையில் நனைந்தவளாக மீண்டு வந்தாள். சதோதரி அவளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இடமுணர்ந்ததும் அவள் திகைத்தவள்போல எழுந்தாள். பின்பு மீண்டும் அமர்ந்தாள். தலையை அசைத்தபடி “இது வெறும் உளமயக்கு. என்னைப்பற்றிய சூதர்கதைகளை என் உள்ளத்திலேற்றுகிறாய்” என்றாள். “இவை உங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை அல்லவா?” என்றாள் சதோதரி. “ஆம், ஆனால் இவ்வகையில் அல்ல” என்றாள் திரௌபதி. அழுத்தமான குரலில் “இவ்வகையிலும்தான்” என்றாள் சதோதரி.

அதனால் எரிச்சல்கொண்டு “சரி, இப்போது என்ன? நான் காமம் கொண்டவள். பிறவிகளின் பெருங்காமத்தை சுமந்தலைகிறேன், அல்லவா? அதன்பொருட்டு என் குலத்தை முற்றழிக்கவிருக்கிறேன், வெறுமையை சென்றடைவேன். அவ்வெறுமையிலிருந்து மீண்டும் இந்த ஊழை அடைவேன்… அதைச் சொல்லவா வந்தாய்?” என்றாள். “நான் என்ன செய்யவேண்டும்? காமத்தை முழுதும் துறக்கவேண்டுமா? என் உள்ளத்தை எரித்தழித்து பாலையாக்க வேண்டுமா? அதை செய்தால் என் குலம் வாழுமா? இவையனைத்தும் சீரடையுமா?”

அவள் குரல் மேலெழுந்தது. “ஆயிரமாண்டுகளாக இவர்களின் நெறி ஒன்றே. பெண்காமத்தைப் பழித்தல். இவர்கள் அடைந்த வீடுபேறெல்லாம் பெண்ணை வென்று கடந்து எய்துவது. ஒவ்வொரு வீடுபேறுக்குப் பின்னாலும் ஒரு பெண் தீச்சொல் கொண்டு நின்றிருக்கிறாள்.” மூச்சிரைக்க “அவர்களின் வீடுபேறு எனக்கொரு பொருட்டே அல்ல என்று சொல்வேன். என்னிலெழும் பெருங்காமம் இல்லையேல் இப்புவி எனக்கென்ன பொருட்டு? அவர்கள் சென்றடையும் அவ்வீட்டின்பொருட்டு நான் ஏன் இதை கைவிடவேண்டும்?” என்றாள்.

சதோதரி “ஆம், பெண்கள் காமத்தை கைவிட இயலாது” என்றாள். “பெண்காமம் உடல்முழுமைக்கும். காமத்தின் பொருட்டு திரண்டது பெண் உடல். காமம் உணர்வென்றாகி அவள் உள்ளமென விரிவது. காமத்தை அழித்தவர் உலகம் மீதான பற்றை அழிக்கிறார். அன்பற்றவராகி உலர்கிறார். அது அன்னையரின் வழி அல்ல. பேரன்னையர் பெருகிவிரியும் அன்புகொண்டவர். முலைநிறைந்தவர். மடிவிரிந்தவர். அன்னையரை ஆக்குவது காமமே” என்றாள் சதோதரி. திரௌபதி “நான் காமம் கொண்டிருக்கிறேன் என அறிவேன். ஆனால் அதன்பொருட்டு ஒரு கணமும் குன்றியதில்லை” என்றாள். “மண் என அனைத்தையும் அள்ளி என்னுள் அடக்கும் விழைவு அது என்றே உணர்ந்திருக்கிறேன்.”

“ஆம், மண்ணில் புதைந்த கருக்களெல்லாம் உயிர்கொண்டெழுகின்றன” என்றாள் சதோதரி. “குழவியரைப் பெற்று உணவூட்டி வளர்த்தெடுக்கும் பெண்கள் ஒவ்வொரு கணமும் நாற்றிசையும் வளர்பவர்கள். மூவியல்பு கொண்டு பின்னி விரிந்துகொண்டிருக்கும் முதலியற்கை. மாயையை துணைகொண்டு புடவிசமைக்கும் சக்தி. நிலம், கடல், நதி, காடு, நாடு, நகர்கள். குலமகள் இல்லம் அமைத்துக் காப்பதுபோல் ஆற்றுவோள் ககனத்தை அமைத்து காக்கிறாள். முதல்முழுமை அவளுக்குள் இன்மையென திகழமுடியாது. எழுக எனும் ஆணைகொண்ட கருவென்றே அமையமுடியும்.”

தன் குருதியில் ஒரு குமிழி பிறிதொரு உயிரெனப் பிறந்து புதிய புடவியென எழுமென அறிந்த பெண் தன்னை தனிமையில் உணரமுடியாது. ஒடுக்கிக் குவிய இயலாது. அரசி, பெண்ணுக்குள் பிறக்கவிருக்கும் குழந்தை அழியாது வாழ்கிறது. பெருகிச் சூழ்ந்திருக்கும் புறவுலகு அவளுக்கு அக்குழவியின் களிப்பாவைத் திரள் மட்டுமே. தன் உடல் அவளுக்கு அக்குழவிக்கு ஊர்தியாகும் பாவைத்தேர். அணிகொள்ளல், மங்கலம்பொலிதல், இனிமையாதல் என்றே அவள் உள்ளம் விரியலாகும். சுவையிலாமல், அழகில்லாமல் பெண் இல்லை.

ஆனால் உங்கள் வேதங்கள் முதல்முழுமையின் இன்மையின்மையின்மையெனப் பெருகும் இன்மைப்பெருக்கின் மேல் சொல்லெழுந்து அமைந்தவை. அவை இங்குள அனைத்தும் மெய்மயக்கு என்று சொல்கின்றன. காமத்தைத் தொடர்ந்தால் அழிவு. அழகைத் தொடர்ந்தால் துயர். வளர்தல் அழிவு. விரிதல் ஆணவம். வேதமெய்மை பெண்ணுக்குரியதல்ல. அதில் எந்நிலையிலும் பெண் பழிக்கப்பட்டவளே. கருப்பை கொண்டிருப்பதனால், முலையூறுவதனால், விழிமலர்ந்திருப்பதனால். எல்லா தீச்சொற்களையும் பிறவியிலேயே பெற்று எழுபவள் அவள்.

நீ பெண் என்று கைசுட்டிச் சொல்லாத நூல்கள் உள்ளனவா உங்களுக்கு? பெண்ணெனும் விழைவு. பெண்ணெனும் பொறி. பெண்ணிலூடாக உலகை அடைந்து பெண்ணை விலக்கி உலகைக் கடந்து அடைவதே வேதநெறியின் வீடு. எனில் பெண்ணுக்கு எது வீடுபேறு? பெண்ணென்று கொண்டுள்ள எவ்வியல்பும் சிறையே என்கின்றன உங்கள் நெறிகள். பெண்மையை உதறிய பின்னரே பெண் முழுமைகொள்ள இயலுமென்றால் அது பெண் கொள்ளும் முழுமை அல்ல. முழுமுதல் இன்மையிலிருந்து எழும் இவையனைத்தும் பொய்யென்றால் பொய்யிலாடுவதையே தன்னியல்பெனக் கொண்டவள் பெண். அவளுக்குரியதல்ல இப்புடவிநெறி என்கின்றது வேதமுடிபு.

மனைதுறந்து செல்பவருக்குரிய மெய்மை மனைமகளிருக்கு எதை அளிக்கவியலும்? மனையமர்ந்து உண்டு புணர்ந்து மைந்தரை ஈன்று இவ்வுலகக் கடன் நிறைத்து துறந்து சென்று முழுமையடைவர் முனிவர். அவர்களுக்கு மனைபடைத்து சமைத்தளித்து காதல்கொடுத்து குடிபெருக்கிய பின் அடுமனையிருளில் சுருங்கி மறையவேண்டும் இல்லாள். எழு விசை ஆண். அமையும் பீடம் பெண். அது எழுபவர்களுக்கு மட்டுமே உரிய நெறி என்றால் மானுடரில் பாதிக்கு அதன் மறுமொழி என்ன? பிறவிநோற்று ஆணெனப் பிறவிபெற்று அடையவேண்டுமா வீட்டை?

நான் உடலல்ல என்று எந்தப் பெண் சொல்லமுடியும்? தன் மைந்தர் தானல்ல என்று சொல்லும் அன்னை எவள்? நானென்பது இல்லை என்று உணர்ந்த பெண்ணின் உடலில் முதலில் வற்றுவது முலை. அதன்பின் அவள் ஊற்றிலாத பாறைமலை. வறண்டுசென்று அடையும் மெய்மை வளம்கொண்டு பெருகும் பெண்ணுக்குரியதல்ல.

அரசி, முனிவரொருவர் இல்லத் திண்ணையில் வேள்வி இயற்றினார். வேதமுடிபு உசாவி நூல்தவமிருந்தார். பின் நுண்சொல் பெற்று ஊழ்கத்திலமர்ந்தார். வெறுமையில் ஏறி இன்மையிலமர்ந்து அதுவானார். அவர் இல்லத்து அகத்தளத்தில் அவரை நோக்கிக்கொண்டிருந்தாள் மனைவி. கோடி மலர்களில் ஒரு மலரை மட்டும் அறிந்த தேனீயின் முனகலென அவள் வேதத்தை கேட்டாள். தேனை கசப்பென உணர்ந்தமையின் சலிப்பென ஊழ்கத்தை வகுத்தாள். அவர்மேல் இரங்கி மேலும் அன்னம் சமைத்து அருகிருந்து ஊட்டினாள். துயிலச்செய்து விழித்திருந்தாள்.

அடுமனைகளில் எழும் ஆயிரம் சுவைகளை அவள் அறிவாள். மலர்களில், அணிகளில், ஆடைகளில் விரியும் பல்லாயிரம் வண்ணங்களை அவள் அறிவாள். இசையில், மணத்தில் அவள் புவிகொள்ளும் நுண்பருவங்களை உணர்ந்தாள். நேற்று வந்த கீரை இன்று வந்த கீரையில் எங்ஙனம் மாறுபடுகிறதென அறிந்தவளுக்கு பிரம்மம் ஒருமையல்ல. ஓர் இலைபோல் இல்லை பிறிதொன்று என நோக்குபவளுக்கு புடவி சுருங்கி ஒற்றைப்புள்ளியாவதில்லை.

மைந்தர் பேசும் மழலையில் மொழிகொள்ளும் அழகுகளின் முடிவிலியை அறிந்தவளுக்கு வேதச்சொல் வெறும் பேதைமொழியே. நஞ்சென்றும் அமுதென்றுமான ஒன்று, நன்றென்றும் தீதென்றும் ஒருங்கமையும் ஒன்று, இன்மையென்றும் இருப்பென்றும் சமையும் ஒன்று அவள் சித்தத்திற்கு சிக்குவதில்லை. தன் குழவிக்கு உணவென்றும், மருந்தென்றும், அணியென்றும், பாவையென்றும் கைநீட்டுபவள் அமுதை, நன்றை, இருப்பை மட்டுமே நாடுவாள். அவளுக்குரிய மெய்மை எங்கே உங்கள் வேதப்பெருநெறியில்?

விண்நோக்கி விரிந்தவை உங்கள் வேதங்கள். மண்நோக்கி இறங்குபவை நாகவேதங்கள். அழகென்றும் வளமென்றும் முழுமையை உணர்பவை. கைவிடும் முடிவிலிப்பெருக்கல்ல, தாங்கிக்கொள்ளும் நிலமே எங்கள் தெய்வங்களின் இடம். எங்கள் முழுமுதல் தெய்வங்கள் பெண்களே. இப்புவியில் புழுவும் விலங்கும் இயல்பாகக் கண்டடைந்த தெய்வம் அன்னையே. அன்னையைத் துறந்து சென்று ஆண்கள் கண்டடைந்த வெறுமையே வேதமுடிபு.

“அரசி, இவன் என் மைந்தன். இவனை தொடுக!” என்று சதோதரி சொன்னாள். திரௌபதி குனிந்து குழந்தையை நோக்கினாள். நாக விழிகளுடன் அவளை நோக்கி கையையும் கால்களையும் அசைத்து எம்பியது. கரிய முகம் காராமணிப் பயறு என மிளிர்ந்தது. மேல்வாய் ஈறில் இரு வெண்பல் துளிகள். திறந்த வாயில் ஊறிச் சொட்டியது வாய்நீர். “இவன் பெயர் கவிஜாதன். ஓயாது அசைந்துகொண்டிருந்தமையால் குரங்குவால் என இவனுக்கு நான் பெயரிட்டேன். வளர்ந்த பின் மரங்களிலாடுவான்” என்றாள் சதோதரி.

திரௌபதி தன் கையை நீட்டினாள். கவிஜாதன் தன் பின்குவைகளை தரையிலிருந்து எழுப்பி கால்களை உதைத்து எம்பினான். அவள் குனிந்து அவனை எடுத்து தன் மடியில் வைத்தாள். அவன் விழிகளை அருகே நோக்கியபோது நெஞ்சில் ஓர் அதிர்வெழுந்தது. சதோதரி மெல்லிய குரலில் “உங்கள் நூல்கள் கண்டது நீங்கள் விரும்புவதை. அரசி, அது விரும்பும் வண்ணம் தன்னைக் காட்டும் முடிவிலா மாயம் கொண்டது. நான் கண்டதுண்டு. கடலில் ஒரு சிறுகுமிழி என. இருண்டவெளியில் நின்று உடைந்தழிவதற்கு முந்தைய கணத்தில்…”

“கருமைப்பெருக்கில் கோடிகோடி சிறு மின்பொறிகள். விண்மீன்கள் என. விண்மீன்களின் இடைவெளியின் இருளிலும் விண்மீன்கள். அவற்றினூடாக மேலும் விண்மீன்கள். விண்மீன்கள் செறிந்த பெருந்திரை. பின்னர் உணர்ந்தேன், அவை ஒரு செதில்பரப்பின் மினுப்புகள். அது அசைந்துகொண்டிருந்தது. கடல் நதியென்றாகி பெருகியோடுவதுபோல. பின் அது சுழல்கிறதென்று தோன்றியது. ஒரு கணத்தில் மின் என உளம் அமைய அறிந்தேன் ஒரு நாகம் என.”

கவிஜாதன் அவள் கழுத்தை கைகளால் சுற்றிக்கொண்டான். நாகத்தின் உடலென வழுக்கி அவளை வளைத்துக்கொண்டன அவை. அவன் அவள் கழுத்தில் முகம் பதித்தான். “முடிவிலாச் சுழி, சுழிப்பெருக்கு ஒருகணத்தில் புரண்டது. வெண்ணிறப் பெருநாகம். மீண்டும் புரண்டு கருமைச்சுழல். வெண்சுழலெழுந்தது மறுகணத்தில்.” கால்களை உதைத்துத் துள்ளிய மைந்தனைப் பிடிக்க திரௌபதி முற்பட்டபோது அவன் அவள் கழுத்தை மெல்ல கவ்வினான். முள் குத்தியதுபோல் அவன் பல்பட்ட உணர்வை அடைந்தாள். அவனை விலக்கி கழுத்தை தொட்டாள். சிறு காயம் ஒன்று இருந்ததுபோல் தோன்றியது.

“அந்நாகங்களைப் பற்றி கதைகளில் அறிந்துள்ளேன்” என்றாள். “ஆம், கத்ருவும் வினதையும். அவர்கள் முடிவிலாது ஒருவரை ஒருவர் நிரப்புவதன் சுழிப்பே ககனம். அன்னையரான கத்ருவும் வினதையும் கணம் கோடி முட்டைகள் இட்டு கணம் கோடி கத்ருக்களாகிக்கொண்டிருக்கிறார்கள். கணம் கோடிகோடியெனப் பெருகும் அன்னையரின் ஒரு கணத்தையே நான் கண்டேன். அவர்கள் முடிவிலாதவர்கள்.” திரௌபதி தனக்குள் அவன் பல்நச்சு ஊறிவிட்டிருப்பதாக உணர்ந்தாள். விழிகள் சொக்கிக்கொண்டிருந்தன. சொற்கள் எங்கோ செல்ல வேறெங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தாள்.

“இப்புவியில் இரு வேதங்களிருந்தன, அரசி. அன்னையின் வேதமே நாகவேதமெனப்படுகிறது. தந்தையருக்குரியது அசுரவேதம். விண்ணிலிருந்து இறங்கிய மூன்றாம் வேதமே உங்களுடையது. பெண்ணென நின்று வீடுபேறடைய வழிகோலுவது நாகவேதமே. அதை உங்களிடம் சொல்லவே நான் வந்தேன்.” அவள் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். “நாகவேதம் காக்க பொறுப்பேற்றுக்கொண்டிருப்பவர் அங்கநாட்டரசர் வசுஷேணர். அவர் வில்லே இனி எங்கள் படைக்கலம்.”

திரௌபதி ஏனென்றறியாமல் மெய்ப்பு கொண்டாள். அவள் மடியில் அக்குழவி நாகமென சுருண்டு நழுவி கீழிறங்கியது. கால்களை சுற்றிப் பிணைத்தது. “ஆம், அதை அறிந்துள்ளேன்” என்றபோது தன் நா சற்று குழறியிருப்பதை அவள் கேட்டாள். “அரசி, உங்கள் முன் ஒரு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு உகந்ததை தெரிவு செய்க!” என்றாள் சதோதரி. “நாகவேதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மணிமுடியும் கணையாழியும் மங்கலநாணும் தளைகள் என்று அறிக! அவற்றைக் கடந்து வாருங்கள். ஒரு காலடி, ஒரு கணம். நீங்கள் உங்கள் ஆயிரம் தலைமுறைப் பெண்கள் அஞ்சி அகன்ற எல்லையை கடந்துவிடுவீர்கள்.”

“அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடிக்கும், உங்களை உளம்தொடரும் இப்பெருநிலத்துப் பெண்டிர் அனைவருக்கும் வழிதிறப்பு. நீர் ததும்பும் ஏரியில் விழும் முதல் விரிசல். அவ்வண்ணம் நிகழாமல்போனால்கூட ஒருவர் தன் எல்லையைக் கடந்தார் என்பதே பெரிதுதான். தெய்வங்கள் அதை அறியட்டும், மானுடர் மறந்தாலும் தெய்வங்கள் மறப்பதில்லை” என்றாள் சதோதரி. “நாகர்குலப் பெண்ணுக்கு உங்கள் குடியின் ஒழுக்கநெறிகள் இல்லை. உங்கள் நூல்கள் சொல்லும் மரபுகளின் பொறுப்பு ஏதுமில்லை. அவள் விழைவுநிறைந்த கலமென தன் கருப்பையை கொண்டிருப்பவள். பெருநாகங்களைப்போல ஈன்றுபெருக்கிப் பேரன்னையாகி அமைபவள். இப்புவியின் அனைத்து அழகுகளும் அவளுக்குரியவை. எதற்கும் அஞ்சவேண்டியதில்லை, எதன்பொருட்டும் நாணவேண்டியதில்லை.”

“ஆம், நான் தளையுண்டிருக்கிறேன். என் தளைகளை நானே எண்ணி எண்ணி பூட்டிக்கொள்கிறேன்” என்றாள் திரௌபதி. “அறுத்தெறிந்து மீள்க! அரசி, நீங்கள் மீள்வீர்களென்றால் இப்போர் இன்றே நின்றுவிடும். பாரதவர்ஷம் ஒரு குடைக்கீழ் உங்களால் ஆளப்படும். உங்களருகே வில்லேந்தி அங்கர் நின்றிருப்பார்” என்று சதோதரி சொன்னாள். “அவருக்கு எதிர்நிற்க இன்று புவியில் எவருமில்லை. அவரில் குறைவது அவருக்கு இடத்துஇணை என அமையவேண்டிய நீங்கள் மட்டுமே.”

“பாஞ்சாலத்தின் படைகள் உங்களுடன் வந்தால், அரக்கரும் அசுரரும் நிஷாதரும் கிராதரும் இணைந்துகொண்டால், பாரதவர்ஷத்தில் புதிய யுகம் பிறக்கும். மண்ணுக்குள் நீர்காத்துக் கிடக்கும் கோடிகோடி விதைகள் முளைக்கும். மண்மறைந்துபோன காடுகள் எழும்” என்றாள் சதோதரி. “அரசி, பிறிதொரு வகையிலும் உங்கள் காமம் நிறையாது. மண்ணென விரிந்து வளம்கொண்டு பெருகி முழுமைகொள்ளமாட்டீர்கள். இவையனைத்தும் இங்குள்ளன, கைநீட்டி எடுங்கள். இவற்றைத் துறந்தால் நீங்கள் அடைவன எதுவும் மண்ணில் இல்லை. விண்ணிலுள்ளன என்னும் பொய், சொல்லில் உள்ளன என்னும் மாயை. இத்தருணம் கடந்தால் மீண்டும் ஒரு வாய்ப்பில்லை. ஒவ்வொரு கணமும் என ஊழின் தருணங்கள் அணுகிவருகின்றன.”

“ஆனால் என் கொழுநர்? என் மைந்தர்?” என்றாள் திரௌபதி. என்ன கேட்டுக்கொண்டிருக்கிறோம் என அவள் அகம் வியந்தது. “அவர்கள் அங்கரை ஏற்பார்கள். அது ஏன் என அனைவருக்கும் தெரியும். நீங்கள் முடிவெடுத்தால் பேரரசி குந்தி முடிவெடுக்க முடியும். அவருடைய சொல்லே இளையோர் அனைவரையும் அங்கர் காலடியில் நிறுத்தும்” என்று சதோதரி சொன்னாள். “அறுவரென்றாலும் அறுநூற்றுவர் என்றாலும் நாகர்குலத்துப் பெண்ணுக்கு ஒன்றே. அவள் தன் குழவிப்பெருக்கால் பொலிவுறுபவள்.”

திரௌபதி “நான் செய்யவேண்டியது என்ன?” என்றாள். “ஆம் எனும் சொல். அதை ஒப்பும்படி உங்கள் அரசக் கணையாழி” என்றாள் சதோதரி. திரௌபதி தன்னுள் பிறிதொருத்தி வந்து அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். புதிய அனல்களும் அறிந்திராத ஊற்றுகளுமாக. “எண்ணும்பொழுதல்ல இது, அரசி. நான் இன்றிரவுக்குள் அங்கநாட்டை அடைவேன்” என்றாள் சதோதரி. “ஆம்” என்றாள் திரௌபதி. ஆனால் மேலும் சொல்லெழாமல் உள்ளம் நிலைக்க அமர்ந்திருந்தாள். “சொல்லளியுங்கள், அரசி” என்றாள் சதோதரி. “என் சொல்” என்று திரௌபதி சொன்னாள். பின்னர் தன் கணையாழியைக் கழற்றி அவளிடம் அளித்தாள்.

“உங்கள் செய்தியை அங்கருக்கு அறிவிக்கிறேன், அரசி. பாரதவர்ஷத்தின் காற்று திசைமாறட்டும்” என்றபடி அவள் அந்தக் கணையாழியை வாங்கிக்கொண்டாள். குழந்தையை திரௌபதியின் காலிலிருந்து தூக்கிக்கொண்டு தலைவணங்கி வெளியே சென்றாள். அவள் செல்லும் காட்சி நீர்ப்பாவை என அலைகொண்டது. தொலைவிலெங்கோ காற்றிலாடும் மரக்கிளையின் ஊசலோசை கேட்டுக்கொண்டிருந்தது. அவளுக்கு பின்னந்தலையில் எடைமிக்க வலியொன்று எழத்தொடங்கியது.

“யாதவரே, அவள் சென்ற சற்றுநேரத்திலேயே நான் மீண்டேன். முதற்கணம் என் காலில் அரவுச்சுற்றலை உணர்ந்து விதிர்த்து கீழே நோக்கினேன். பின்னர் பெருமூச்சுவிட்டபடி எழுந்தேன். இயல்பாக என என் கையை நோக்கி அங்கே கணையாழி இல்லை என்று கண்டேன். திகைப்புடன் தரையிலெங்கேனும் விழுந்திருக்கிறதா என்று தேடியபோது என் கழுத்தில் மெல்லிய வலி எழுந்தது. அங்கு ஏதோ கடித்திருக்கிறது என உணர்ந்த கணம் அனைத்தும் கனவுமீள்வதென நினைவிலெழுந்தன” என்று திரௌபதி சொன்னாள்.

இளைய யாதவர் புன்னகையுடன் “அது கனவென்றே கொள்க!” என்றார். “யாதவரே, சென்ற பல மாதங்களாகவே நான் இங்கிருக்கும் மெய்மையில் இல்லை. ஒன்றிலிருந்து ஒன்றென கனவுகளுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன். இடையூடும் பாதையென நிகழ்வுகளிருப்பதனால் அவையும் கனவுகளின் பகுதியாகிவிட்டன” என்றாள் திரௌபதி. “கனவுகளுக்கும் நனவுகளுக்கும் வேறுபாடு ஒன்றே. நனவுகள் ஒன்றுடன் ஒன்று புறத்தே தொடுத்துக்கொண்டிருக்கின்றன. கனவுகள் தொடுத்துக்கொண்டிருப்பதை நாம் பிறிதொரு கனவில் மட்டுமே அறியமுடிகிறது.”

“தொடர்ச்சியால்தான் நாம் நிகழ்வுகளை வாழ்வென உணர்கிறோம். தொடர்பிலா நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுவாழ்வே. நான் நூறாயிரம் வாழ்க்கைகளினூடாக தன்னுணர்வு மட்டுமே என கடந்துசெல்கிறேன். நிகழ்ந்த ஒவ்வொன்றும் நுரை என இத்தனை கனவுகளை பெருக்கி வைத்திருக்குமென இதுவரை எண்ணியதே இல்லை. நூறுநூறு காம்பில்யங்கள். விண்ணிலும் மண்ணிலும் ஆழத்திலும் இந்திரப்பிரஸ்தங்கள். ஒன்றிலிருந்து ஒன்றென எழுந்துகொண்டே இருக்கும் மனிதர்கள். சொற்களின் அலை. சித்தமென்று ஒன்றில்லை. அது சொற்களைக் கட்டி எழுப்பும் கோட்டை. என் உள்ளே அலை மட்டுமே.”

“எங்கோ நான் சென்றுகொண்டிருக்கிறேன். பேரொழுக்கில் ஒழுகி. திசைகள் கரைந்து மயங்கும் விசை. விசை அனைத்தையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. நாம் கொண்டுள்ள ஒவ்வொன்றையும் அது பின்னால் பிடுங்கி வீசுகிறது. ஒவ்வொன்றும் இறந்தகாலமாகின்றன. கணங்கள் அக்கணமே இறந்தகாலமாகும் விசையில் காலமில்லாமலாகிறது. சென்றடைய இடமில்லாத விசை அசைவற்ற ஓர் உச்சம் மட்டுமே. அல்லது வெறுமொரு பித்துநிலை. தசைகளுருகி அழிய உடல் நீராக மாறி விரிந்து அலைகொள்ள இருத்தலென்பது விரிதலென்றாவது.”

அவள் மேலும் சொல்ல முயன்று பின் கையை அசைத்தாள். “எத்தனை சொல்லெடுத்தாலும் நான் அதை சொல்லிவிட முடியாது” என்றாள். “அது பெண்கள் மட்டுமே செல்லும் ஒரு நிலையாக இருக்கலாம். முதல் குழந்தைப்பேற்றின் பின் அந்தக் களைப்பில் அவ்வண்ணம் ஒரு நிலையில் சற்றுநேரம் இருந்திருக்கிறேன். அரிதாக இசையில். அதனினும் அரிதாக காமத்தில். அப்போதிருக்கும் நான் இந்த உடலின் வடிவாலும் எடையாலும் வகுக்கப்பட்டவள் அல்ல. என் அகம் மரபால், சொல்லால் ஆனதுமல்ல.”

“உணர்கிறேன்” என்று இளைய யாதவர் சுருக்கமாக சொன்னார். “ஆம், நீங்கள் உணரவியலும்” என்று திரௌபதி சொன்னாள். அமைதியில் வெளியே பனித்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும் ஒலி கேட்டது. “உடன் எவர் வந்திருக்கிறார்கள்?” என்று இளைய யாதவர் கேட்டார். “என் அணுக்கச்சேடி” என்றாள் திரௌபதி. “அவள் பெயர் சலஃபை அல்லவா?” என்றார் இளைய யாதவர். திரௌபதி சிரித்துவிட்டாள். பின் செல்லச்சினத்துடன் “சேடியர் குலமுறையையும் விடுவதில்லை” என்றாள். இளைய யாதவர் சிரித்து “இனியவள், அழகி” என்றார். திரௌபதி சினம்காட்ட “ஏனென்றால் அவள் உங்கள் சேடி” என்றார்.

திரௌபதி கையசைத்து “எந்நிலையிலும் உங்களிடம் மாறாமலிருப்பது ஒன்றே” என்றாள். பின்னர் “அரண்மனையிலிருந்து எவருமறியாமல் கரவுப்பாதை வழியாக கோட்டையைக் கடந்தேன்” என்றாள். “உபப்பிலாவ்யத்தில் இன்று கௌரவப்படையே நுழைந்தாலும் எவரும் அறியப்போவதில்லை. நாழிகைக்கு ஒருமுறை நகரம் கலங்கிக்கொண்டிருக்கிறது” என்றார் இளைய யாதவர். அந்த உரையாடல் வழியாக அவள் இயல்படைந்தாள். பெருமூச்சுடன் தன் குழலை சீரமைத்தாள்.

“இங்கு வர ஏன் முடிவெடுத்தீர்கள், அரசி?” என்றார் இளைய யாதவர். “என் செய்தியும் கணையாழியும் சென்றுவிட்டன. அளித்த சொல்லை நான் மீறமுடியாது. யாதவரே, அனைத்தும் பிறிதொரு திசையில் உடைப்பெடுத்து பெருகவிருக்கின்றன. எண்ணுகையில் ஓர் ஆழ்நிறைவை அடைகிறேன். இனியேதும் செய்வதற்கில்லை என்றுணரும் ஓய்வுநிலையில் இருக்கிறது என் அகம். விடிவதற்குள் அங்கர் அச்செய்தியை பெறுவார்.” இளைய யாதவர் அவள் மேலும் சொல்வதற்காக காத்திருந்தார். அவள் தன் சுட்டுவிரலை கட்டைவிரலால் நெளித்தபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தாள்.

“அரசி, அந்நிலையை உங்கள் உள்ளம் ஏற்கிறதா?” என்றார் இளைய யாதவர். “ஆம், அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் என்னுடையதே. மெய் சொல்வதென்றால் அவற்றை அவள் சொன்னாளா, நான் எண்ணினேனா அன்றி இங்கே நானே தொகுத்துக்கொள்கிறேனா என்றே எனக்கு ஐயமாக உள்ளது” என்றாள் திரௌபதி. “வேதத்தை துறக்கவிருக்கிறீர்கள். வேதமுடிபு பிறிதென்று விலக்குகிறீர்கள், அல்லவா?” என்றார் இளைய யாதவர். “அல்ல. அன்னையென நின்று அடையும் விடுதலையை நாடுகிறேன். அழகுருவாக எழும் ஒரு வெளியில் நின்று எனக்குரிய தவத்தை செய்யவிருக்கிறேன். என்னை தளைக்கும் அனைத்திலிருந்தும் கிளம்பப்போகிறேன்” என்றாள் திரௌபதி.

“பிறகென்ன? பொழுதுவிடியக் காத்திருப்பதுதானே?” என்றார் இளைய யாதவர். “யாதவரே, நான் சொல்லாமலே அறிந்திருப்பீர்கள், நான் துறக்கவியலாதவர் நீங்களே” என்று திரௌபதி சொன்னாள். “அதை எண்ணிய கணமே என்னால் அங்கே இருக்க இயலாதென்றாயிற்று. ஒவ்வொரு கணமும் ஒரு சவுக்கடி என விழுந்தது. தாளாமல் கிளம்பி இங்கு வந்தேன்.” இளைய யாதவர் புன்னகைத்தார். நெகிழ்ந்த குரலில் “கிருஷ்ணா, நான் உன்னை துறந்தால் என் உள்ளம் இதுவரை போற்றிய அனைத்து அழகுகளையும் துறந்தவளாவேன். அதை என்னால் எப்படி செய்யவியலும்?” என்றாள் திரௌபதி.