காண்டீபம் - 72

பகுதி ஆறு : மாநகர் – 4

அர்ஜுனனை எதிர்கொண்ட சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் தலைவணங்கி முகமன் கூறினர். சுஷமர் “இந்திரபுரிக்கு இந்திரமைந்தரின் வரவு நல்வரவாகட்டும்” என்றார். சுரேசர் “ஒவ்வொரு முறையும் பிறிதொருவராக மீண்டு வருகிறீர்கள். இம்முறை ஒரு சிற்பியைப்போல் தோன்றுகிறீர்கள்” என்றார். அர்ஜுனன் நகைத்து “ஆம், கலிங்கத்திற்கு சென்றிருந்தேனல்லவா” என்றான். “அஞ்சவேண்டாம், சில மாதங்கள் இங்கிருந்தால் மீண்டும் வெறும் பாண்டவனாக மாறிவிடுவேன்.”

“தங்கள் அறிவு எங்களுக்கு பகிரப்படுகிறது. சுமை அழிந்து கிளை மேலெழுவது போல் இயல்பாகிறீர்கள்” என்றார் சுஷமர். அர்ஜுனன் நகைத்தபடி இடைநாழியில் நடக்க இருவரும் தொடர்ந்து வந்தனர். மரங்களிடையே காட்டில் விழுந்த ஒளிக்குழாய் போல வெண்ணிற உருளைத்தூண்கள் எழுந்து மிக உயரத்தில் மலர்ந்த தாமரைகள் போன்ற உத்தர சட்டத்தையும் அதற்கு மேல் கவிழ்ந்த மலர்க்குவை போன்ற மாடத்தையும் தாங்கி நின்றன. மேலிருந்து தொங்கிய வடங்களில் கட்டபட்ட மூங்கில் கூடைகளில் அமர்ந்தபடி பணியாட்கள் அங்கு சுண்ணத்தை பூசிக் கொண்டிருந்தனர். சுண்ணத்துளிகள் மேலிருந்து முத்துக்கள் போல உதிர்ந்து தரையில் விழுந்து சிதறிப் பரவின.

அர்ஜுனன் “சுண்ணமணம் இன்றி இவ்வரண்மனை ஒருபோதும் இருந்ததில்லை” என்றான். “பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும்” என்றார் சுஷமர். “ஐந்தாண்டுகளாக இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றபடி அர்ஜுனன் நடந்தான். “தாங்கள் இளைப்பாறி அவைக்கு வரலாம்” என்றார் சுஷமர். “இன்று மாலை பேரரசி அவை கூட்டி இருக்கிறார்கள். காலையில் அரசரின் அவை முடிந்தது” என்றார் சுரேசர். அர்ஜுனன் “இப்போது எங்கிருக்கிறார்கள்?” என்று அவர்களை பாராமல் கேட்டான். “ஐந்தாவது இளவரசரின் அரண்மனையில்” என்றார் சுஷமர். “ஐந்தாவது மைந்தனை கருவுற்றிருப்பதாக சொன்னார்கள்.”

அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். சுரேசர் “யாதவ அரசி காலை ஆலயங்களுக்கு சென்று விட்டு சற்று முன்னர்தான் அரண்மனைக்கு மீண்டார்” என்றார். “அன்னை?” என்றான் அர்ஜுனன். “யாதவப்பேரரசி காலையில் நகர் கட்டுமான பணிகளை பார்வையிட மஞ்சலில் ஒரு முறை சுற்றி வருவார். வெயில் வெம்மை கொண்டதும் திரும்பி வந்து நீராடிவிட்டு ஓய்வெடுப்பார். உச்சிப் பொழுது உணவுக்காக விழித்தெழுவார்” என்றார். அர்ஜுனன் “விழித்தெழுந்ததும் என் வருகையை சொல்லுங்கள். நான் முகம் காட்ட வேண்டும்” என்றான்.

“இப்போது எந்த அரண்மனைக்கு?” என்றார் சுரேசர். “எனது தனி அரண்மனைக்கு” என்று சொன்னபின் அர்ஜுனன் நின்று இடையில் கைவைத்து அரண்மனையின் வலப்பக்கத்து பெரிய அவைக்கூடத்தை பார்த்தான். ஆயிரம் தூண்கள் கொண்டது என்று புகழ் பெற்றிருந்த அந்த பேரவைக்கூடம் நீள்வட்ட வடிவில் அமைந்திருந்தது. அவையை வளைத்திருந்த சுதையாலான பெருந்தூண்களுக்கு மேல் செங்கற்களை அடுக்கி மையத்தில் கவிழ்ந்த தாமரை மலர்போன்ற போதிகையில் இணைக்கப்பட்ட பெருமுகடு இளஞ்செந்நிற வண்ணத்தில் மாபெரும் மலர் போல் இருந்தது. அதன் மையத்திலிருந்து வெண்கலச் சங்கிலியில் ஆயிரம் அகல்கள் கொண்ட மலர்க்கொத்து விளக்கு தொங்கியது.

கூடத்தில் அரைவட்ட அலைவளையங்கள் போல குடிகளும் குலத்தலைவர்களும் அமர்வதற்கான மரத்தால் ஆன இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் காப்பிரிநாட்டு குருதிச் செந்நிற தோலுறைகளால் மூடப்பட்டிருந்தன. வலப்பக்கம் வேதியர் அமர்வதற்கான பீடங்கள் சந்தனத்தால் அமைக்கப்பட்டு வெண்பட்டு உறையிடப்பட்டிருந்தன. இடப்பக்கம் அரச குடிப்பெண்கள் அமர்வதற்கான பீடங்கள் வெண்கலத்தால் அமைக்கப்பட்டு செம்பட்டு உறையிடப்பட்டிருந்தன. பெண்கள் நிரைக்கு அருகே அணிச்சேடியருக்கான மேடையும் வைதிகருக்கு அருகே இசைச்சூதருக்கான மேடையும் அமைந்திருந்தன. நேரெதிரே அரசரும் அரசியும் அமர்வதற்கான அரியணை மேடை.

அர்ஜுனன் புன்னகைத்து திரும்பி சுஷமரைப் பார்த்து “எப்போதும் அரசி அங்கிருப்பது போன்ற விழிமயக்கு ஏற்படுகிறது” என்றான். சுஷமர் “ஒரு நாள் கூட அதில் அவர் அமராது இருந்ததில்லை” என்றார். அர்ஜுனன் இடையில் கைவைத்து நின்று அந்த அரியணையை பார்த்தான். மரத்தில் செதுக்கப்பட்டு பொன்னுறையிடப்பட்ட இரண்டு சிம்மச்சிலைகள் குருதித் துளியென ஒளிவிட்ட செவ்வைரங்களை விழிகளாக்கி திறந்த வாயுடன் வலது முன் காலை கூர்உகிர்களுடன் தூக்கி முன்னால் வைத்து நின்றிருந்தன. அவற்றின் பற்கள் அனைத்தும் வெண்ணிற வைரங்களாலும் உகிர் முனைகள் இளநீல வைரங்களாலும் அணி செய்யப்பட்டிருந்தன.

அரியணையின் தலைக்கு பின்பக்கம் பன்னிரண்டு வளைவுகளாக எழுந்த பிரபாவலயத்தில் இளஞ்செந்நிற வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. படிப்படியாக செம்மை அடர்ந்து நுனியில் அவை செந்தழல்நிற வைரங்களாக மாறின. அங்கு நின்று பார்த்தபோது அவ்வரியணை திரையசையும் நூற்றெட்டு பெருஞ்சாளரங்களிலில் இருந்து வந்த ஒளியை எதிரொளித்து துருத்திக்காற்று படும் உலைத்தீ என கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது.

“பிரபாவலயம் பார்வைக்கு அச்சமூட்டுகிறது” என்றான் அர்ஜுனன். “எப்போது இது அமைக்கப்பட்டது?” “தாங்கள் இங்கிருந்து செல்லும்போதே வேசர நாட்டு பொற்கொல்லர் பணி தொடங்கிவிட்டனர். ஆறு மாதங்களாக இங்கிருக்கின்றனர்” என்றார் சுஷமர். “இதற்கு ஆக்னேயபீடம் என்று பெயர். இப்போதே சூதர்கள் இந்த அனலிருக்கை குறித்து பாடல்களை புனைந்திருக்கிறார்கள்.” அர்ஜுனன் விழிகளில் புன்னகையுடன் நோக்க சுஷமரும் புன்னகையுடன் “அதில் அரசியன்றி எவர் அமர்ந்தாலும் எரிந்து சாம்பலாகிவிடுவார்கள். ஒருமுறை அதன் மேல் அமர்ந்த புறா ஒன்று உயிருடன் பற்றி எரிந்ததாம்” என்றார்.

பேரரசிக்கு அருகே சற்று சிறியதாக அரசரின் அரியணை இருந்தது. சிம்மங்களின் விழிகள் நிறமற்ற வைரங்களால் ஒளிவிட்டன. கால்களும் பற்களும் உப்புப்பரல் போன்ற தூய வெண்ணிற வைரங்களால் பதிக்கப்பட்டிருந்தன. இளநீல வைரங்கள் பதிக்கபட்ட பிரபாவலயத்தின் மேலே அறத்தெய்வத்தின் எருமைக்கொம்புச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அர்ஜுனன் பார்ப்பதைக்கண்ட சுரேசர் “அது தர்மபீடம் எனப்படுகிறது. அதில் அரசரன்றி எவர் அமர்ந்தாலும் அன்றே உயிர்துறப்பார்கள் என்கிறார்கள் சூதர்கள்” என்றார். “ஆனால் அரசர் பெரும்பாலும் இதில் அமர்வதில்லை.”

அர்ஜுனன் திரும்பி “ஏன்?” என்றான். “இவ்வரியணை அமைந்த பின்னர் ஒரே ஒரு முறைதான் அமர்ந்தார். வைரங்கள் சூழ அமர்ந்திருப்பது நிலையழிவை உருவாக்குகிறது என்று சொன்னார். அதன்பிறகு அப்பால் அவருக்கென அமைக்கப்பட்ட பிறிதொரு கூடத்திலேயே அவை கூட்டுகிறார். அது இதைவிட மிகச்சிறியது. அனைவரும் நிலத்தில் இடப்பட்ட கம்பளங்களின் மேல் கால்மடித்து அமரவேண்டும். நடுவே அரசரும் புலித்தோல் விரித்த மணையில் கால்மடித்து அமர்வார். அனைவரும் நிகரான உயரத்தில் அமர அவர்களுக்கு முன்னால் அனைவருக்கும் பொதுவாக ஏட்டுச் சுவடிகளும் நறுமணப்பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். தொன்மையான குடியவைகள் அவ்வண்ணம் அமைந்திருந்தனவாம். அரசர் அதையே விரும்புகிறார். பேரரசி எடுக்கும் முடிவுகளும் ஆணைகளும் இங்கு நிகழ்கிறது. தனது எண்ணங்களை அங்கே உரைக்கிறார்.”

அர்ஜுனன் “அவற்றுக்குள் முரண்பாடு இருக்க வாய்ப்பில்லை” என்றான். “ஆம். அன்றாட நீதியை மட்டுமே அவர் பார்த்துக் கொள்கிறார். அயல் உறவையும் நகர் அமைப்பையும் பேரரசியே நிகழ்த்துகிறார்” என்று சுஷமர் மிகக்கூர்ந்து சொல்லெடுத்து உரைத்தார். அர்ஜுனன் சிரித்தபடி நடந்து இடைநாழியின் மறு எல்லையை அடைந்தான். மேலேறிச்செல்லும் படிகளின் கைப்பிடியை வெண்கலத்தால் அமைத்திருந்தனர். இரண்டு ஏவலர் அதை துடைத்துக் கொண்டிருந்தனர். அர்ஜுனனைக் கண்டு அவர்கள் தலைவணங்கினர். இரண்டிரண்டு படிகளாக ஏறி மேலே சென்றான்.

அவனைக் கண்டதும் அவன் அணுக்கப் பணியாளனாகிய அநிகேதன் ஓடி வந்து தலை வணங்கி “தாங்கள் வரும் செய்தி முன்னரே வந்துவிட்டது இளவரசே” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். அவன் சாளரம் வழியாக பார்த்தபோது அவன் நகர் நுழைந்திருப்பதை அறிவிக்கும் குரங்குக்கொடி கோட்டை முகப்பில் ஏறியிருப்பதை காணமுடிந்தது. அவன் வரவை அறிவிக்கும் முரசொலி முழங்க அதை ஏற்று காவல் மாடங்களில் முரசுகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “நான் முதலில் அம்முரசொலியை உணரவேயில்லை. உணர்ந்தபோது ஒரு அன்றாட ஒலி போல் அது ஒலித்தது. தாங்கள் இங்கிருப்பதாகவே இத்தனை நாளும் என் உள்ளம் மயங்கிக் கொண்டிருந்தது” என்றான் அநிகேதன்.

அர்ஜுனன் அவன் தோளில் கை வைத்து “நான் நீராடி உடைமாற்ற வேண்டும்” என்றான். “அனைத்தும் இன்னும் சில கணங்களில் சித்தமாகும்” என்றான் அநிகேதன். அர்ஜுனன் தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்தான். அவன் கிளம்பிச் சென்றபோது எப்படி இருந்ததோ அதே போன்று அது வைக்கப்பட்டிருந்தது. தூசியோ அழுக்கோ இன்றி, நடுவே காலம் ஒன்று இல்லாதது போல். ஒவ்வொரு முறை அங்கு மீளும் போதும் ஒரு கனவிலிருந்து விழித்துக்கொள்வதாகவே எண்ணுவான்.

எழுந்துசென்று தன் அறையின் சாளரத்து ஓரமாக இருந்த தீட்டப்பட்ட உலோகத்தால் ஆன ஆடியில் தன்னை பார்த்துக்கொண்டான். நீண்ட தாடியில் ஓரிரு நரை முடிகள் கலந்திருந்தன. தோளில் விழுந்த குழலில் நரை ஏதுமில்லை. தன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு கண்ட அயலவனை அவன் அறிவான் என்று தோன்றியது. ஆடியிலிருந்து அவனை நோக்கியவனுக்கும் தான் என உணரும் தனக்கும் என்ன வேறுபாடு என்று எண்ணினான். கண்கள் இனிய சிறிய புன்னகையுடன் விலக்கம் கொண்டிருக்கின்றன. எதையும் நம்பாத விழிகள். எங்கும் தன்னை அமைத்துக் கொள்ளாத விழிகள்.

அர்ஜுனன் கைகளை விரித்து உடலை நீட்டி சோம்பல் முறித்தபடி திரும்பினான். மீண்டும் ஆடிப்பாவையை பார்த்து புன்னகைத்தான். கையில் பணமென ஏதுமில்லாது அங்காடிக்குச் செல்பவனின் கண்கள் என எண்ணிக்கொண்டான். சிரித்தபடி மஞ்சத்தில் வந்து அமர்ந்தபோது அநிகேதன் வந்து தலைவணங்கி “நீராட்டறை சித்தமாக உள்ளது அரசே” என்றான். “அறை நான் விட்டுச்சென்றதுபோலவே உள்ளது” என்றான் அர்ஜுனன். “உங்கள் இன்மையும் இங்குள்ள ஒன்றே” என்றான் அநிகேதன். அவன் செல்ல தொடர்ந்து வந்த அநிகேதன் அவனில்லாதபோது நிகழ்ந்தவற்றை சொல்லத்தொடங்கினான்.

நறுமண வெந்நீரில் நீராடி நீண்ட தலைமுடியையும் தாடியையும் வெட்டி சீரமைத்து அர்ஜுனன் திரும்பி வந்தான். இளஞ்செந்நிறப் பட்டாடையை அந்தரீயமாக அணிந்து மேலே பொன்னிறக்கச்சையை கட்டிக் கொண்டான். பொன்னூல் சித்திரப்பணிகள் பரவிய வெண்பட்டுச் சால்வையை தோளிலிட்டான். சிறிய ஆமையோட்டுப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து மணிக் குண்டலங்களை எடுத்து காதிலணிந்தான். மார்பில் இளநீல வைரங்கள் மின்னிய தாரஹாரத்தையும் கங்கணங்களையும் கழல்களையும் அணிந்தான். பித்தளையால் ஆன பாதக்குறடுகளில் கால் நுழைத்து “கிளம்புவோம்” என்று திரும்பி காத்து நின்ற அநிகேதனிடம் சொன்னான்.

அவன் விழிகளில் இருந்த வினாவைப் பார்த்தபின் “யாதவ அரசியை பார்க்க” என்றான். “தங்களுக்காக காத்திருப்பதாக செய்தி வந்தது” என்றான் அநிகேதன். “சற்றுமுன்னர்தான் தூதன் வந்தான்.” அர்ஜுனன் “மைந்தன் இங்கிருக்கிறானா?” என்றான். அநிகேதன் “தங்கள் முகம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காடேகும்போது மைந்தருக்கு ஆறு மாதம். இப்போது சில சொற்களை சொல்லத் தொடங்கியிருக்கிறார்” என்றான். அர்ஜுனன் முகம் மலர “ஆம், என் நெஞ்சில் உள்ள முகம் சிறிய கைக்குழந்தைக்குரியது” என்றான்.

“இப்போது வாயில் கரையாத இரு பால் துளிகள் போல் பற்கள் எழுந்துள்ளன. அரண்மனைச் சேடியரில் அவரது கடி வாங்காத எவருமில்லை. ஒரே நாளில் பதினெட்டு சேடியர் முலைக் கண்களுக்கு மருந்திட்டாள் மருத்துவச்சி” என்றான் அநிகேதன். அர்ஜுனன் வெடித்து நகைத்து “நன்று” என்றான். “தாங்கள் இளமையில் இயற்றியதைவிட சற்று குறைவு என்பதுதான் அரண்மனையில் பேச்சு” என்றான் அநிகேதன்.

அர்ஜுனன் சிரிப்பு தங்கியிருந்த முகத்துடன் இடைநாழியில் நடந்து படியிறங்கியபோது கீழே சுஷமர் நின்றிருப்பதை கண்டான். அவனது புருவ அசைவைக் கண்டு தலைவணங்கி “தங்களுக்கு செய்தி” என்றார். “எவரிடமிருந்து?” என்றான் அர்ஜுனன். “பாஞ்சால அரசியிடமிருந்து. தங்களை சந்திக்க அவர் விழைகிறார்” என்றார். அர்ஜுனன் “சகதேவனின் அரண்மனையில் அல்லவா இருக்கிறார்?” என்றான். “இல்லை, அங்கிருந்து வந்துவிட்டார்கள். இப்போது பேற்றறையில் மருத்துவச்சியுடன் இருக்கிறார். அங்குசென்று அவரை சந்திக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அர்ஜுனன் திரும்பிப் பார்க்க அணுக்கன் “யாதவ அரசியிடம் கூறிவிடுகிறேன்” என்றான்.

சுஷமர் “தங்களை உடனிருந்து அழைத்து வரும்படி ஆணை” என்றார். அர்ஜுனன் இயல்பாக நடந்தபடி “அதாவது பிறிதெங்கும் செல்லாமல் அழைத்து வரப்படவேண்டும்?” என்றான். சுஷமர் ஒன்றும் சொல்லவில்லை. வெளியிலிருந்து வந்த வெளிச்சத்தில் தூண்களின் நிழல்கள் நெடுந்தூரத்திற்கு வரிவரியாக விழுந்துகிடந்த இடைநாழியில் சுடர்ந்து சுடர்ந்து அணைந்தபடி அர்ஜுனன் நடக்க குறடொலியாக தொடர்ந்தபடி சுஷமர் பேசாமல் வந்தார்.

அர்ஜுனன் நின்று மறுபக்கத்தில் சென்ற இடைநாழியை பார்த்து “இது புதிதாக கட்டப்பட்டதா?” என்றான். “ஆம், இது யாதவப் பேரரசியின் அரண்மனையை மைய அரண்மனையுடன் இணைக்கிறது” என்றான். “அன்னை இவ்வழியாக அவைக்கு வருகிறார்களா?” என்றான் அர்ஜுனன். சுஷமர் “இல்லை. அவர்கள் அவைக்கு வருவதே இல்லை” என்றார். அர்ஜுனன் திரும்பி “ஒருபோதுமா?” என்றான். சுஷமர் “அரசியின் அவைக்கு வருவதில்லை” என்றார். அர்ஜுனன் தலையசைத்துவிட்டு நடந்தான்.

பெரிய அரண்மனையிலிருந்து மரப்பட்டை கூரையிடப்பட்ட இடைநாழி ஒன்று கொடியென பிரிந்து பூச்செடிகள் மண்டிய அகன்ற தோட்டத்திற்குள் இறங்கி மறுபக்கம் ஏறி இன்னொரு இடைநாழியின் நடைபாதையை அடைந்து ஆதுர சாலையை சென்று அடைந்தது. ஆதுரசாலை வாயிலிலே காத்து நின்றிருந்த அணுக்கச் சேடி தலைவணங்கி “தங்களுக்காக அரசி காத்திருக்கிறார்” என்றாள். அர்ஜுனன் அவளுடன் உள்ளே சென்றான். சுஷமர் தலைவணங்கி அங்கேயே நின்று விட்டார்.

படிகளில் ஏறி ஆதுரசாலையின் அறுகோண வடிவமான பெருங்கூடத்தை அடைந்தான். எட்டு வாயில்கள் திறந்து திரைச்சீலைகள் காற்றில் நெளியும் அசைவு அரக்குபூசப்பட்ட மரப்பலகைத்தரையில் அலைபாய கிடந்த கூடத்தில் நான்கு வாயில்கள் திறந்திருந்தன. “இவ்வழியே” என்று சேடி அதில் ஒரு வழியாக அழைத்து சென்றாள்.

கடுக்காய் கருகியது போன்ற மணமும் தீயில் சுண்டும் பச்சிலை தைலத்தின் மணமும் கலந்து வந்து கொண்டிருந்தது. தொலைவில் ஏதோ குழந்தை உரக்கக்கூவி சிரிக்கும் ஒலி கேட்டது. உள்ளே புகுந்த சிட்டுக்குருவி ஒன்று சிறகதிர குறுக்காக கடந்து சென்று மறுபக்க சாளரத்தை அடைந்தது. அசைவுகளோ பேச்சொலிகளோ இன்றி முற்றிலும் அமைதியில் ஆழ்ந்து கிடந்தது ஆதுரசாலை. காற்றில் சாளரக்கதவு மெல்ல முனகும் ஒலிகூட அண்மையில் என கேட்டது.

அணுக்கச் சேடி “இவ்வறை” என்று சொல்லி நின்றாள். அர்ஜுனன் சில கணங்கள் கதவருகே நின்று காலடியோசையை எழுப்பியபின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். உள்ளே வெண்பட்டு விரிக்கப்பட்ட தாழ்வான மஞ்சத்தில் உருண்ட நீண்ட தலையணைகள் மேல் இளம்பாளை தோல் வெண்மை கொண்ட பீதர்பட்டு மீது ஒருக்களித்தவளாக திரௌபதி படுத்திருந்தாள். அவன் காலடியோசை கேட்டு நாகம்போல கழுத்தைத் திருப்பி நோக்கினாள். பார்த்த முதற்கணமே பேரழகு என்ற சொல்லாக ஆனது அவன் உள்ளம்.

அவள் உடல் சற்றே சதைப்பூச்சு கொண்டு உறைகீறி எடுக்கப்பட்ட காராமணி விதை போல பளபளத்தது. ஒளிகொண்ட தோள்களிலிருந்து சரிந்த நீண்ட கைகள். தோள்வளை சற்றே நெகிழ்ந்து மென்கதுப்பில் வளையம் பதிந்திருந்த தடம் தெரிந்தது. முலைக்கச்சை நெகிழ்ந்து மேல்விளிம்பு ததும்பிய முலையிடுக்கில் ஒற்றை முத்தாரம் துவண்டு வளைந்து கிடந்தது. தொங்க விடப்பட்ட மறுகையில் இளநீல வைரங்கள் பதிக்கப்பட்ட ஒற்றைக் கடகம் தழைந்து மணிக்கட்டை ஒட்டிக்கிடந்தது. கரிய தோலில் நீல நரம்புகள் தெரிந்தன. மேலுதட்டில் மென்மயிரின் அடர்த்தி சற்றே மிகுந்திருந்தது. கன்னத்தில் இரண்டு புதிய பருக்கள்.

சரிந்து மடியிலிருந்த ஏடொன்றை நோக்கியிருந்த விழியிமைகள் விரிய நீள்விழிகளில் சிறுமியருக்குரிய உவகை எழுந்தது. புன்னகையில் மாந்தளிர் நிற இதழ்கள் விரிய உள்ளே சரமல்லிகையென வெண்பல் நுனிகள் தெரிந்தன. கையூன்றி எழுந்தபோதுதான் அவளுடைய வயிறு சற்று மேடிட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். சுற்றிக்கட்டியிருந்த புடவை அவ்வசைவில் சற்று நெகிழ சற்றே அகன்று ஆழமிழந்த தொப்புளின் அடியில் மெல்லிய அலைகளாக பேற்றுச் சுருக்கங்கள் தெரிந்தன.

“இன்று காலை எண்ணிக் கொண்டேன்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் சில கணங்கள் நின்றபின் அருகே சென்று மூங்கிலால் ஆன குறுபீடத்தில் அமர்ந்தான். “காலையில் முரசொலி கேட்டபோது அக்கனவு நனவானதை உணர்ந்தேன்” என்று அவள் சொன்னபோது மெல்லிய மூச்சிரைப்பும் கலந்திருந்தது. “அதன் பின் ஒருகணமும் என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. தாங்கள் நீராடி விட்டீர்களா என்று பார்ப்பதற்காக சேடியை அனுப்பினேன். அதன் பின் சுஷமரை அனுப்பினேன். பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது” என்றாள்.

அர்ஜுனன் கை நீட்டி அவளை தொடப்போனபின் கைகளை பின்னிழுத்துக் கொண்டான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இளையவனின் நாட்கள்” என்றான். அவள் கை நீட்டி அவன் கையைப் பற்றி பிறிதொரு கையால் பொத்திவைத்தபடி “இன்று நான் உள்ளத்தால் முற்றிலும் உங்களுக்குரியவள்” என்றாள். அர்ஜுனன் அவள் கன்னங்கள் சற்று குருதி கலந்த கருமை கொண்டிருப்பதை கண்டான். கழுத்து மென்மைகொண்டு நிறம் மாறியிருந்தது. “என்ன பார்க்கிறீர்கள்?” என்று அவள் நாணம் கலந்த புன்னகையுடன் கேட்டாள். “கருவுற்றிருப்பது பெண்கள் பேரழகு கொள்ளும் பருவம் போலும்” என்றான்.

அவள் சிரித்து “ஆண்கள் அணுக முடியாத பருவம். அதனால் அப்படி தோன்றுகிறது” என்றாள். “அணுக முடியாதென்றில்லை.” அவள் புரியாது விழிதூக்கிப் பார்த்து உடனே புரிந்து அவன் கையை அடித்து “என்ன பேச்சு இது? சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே பொறுப்பற்ற சிறுவனின் சொற்கள்” என்றாள். “மீண்டும் மீண்டும் இங்கு வந்து அப்படி ஆகிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.  “உங்கள் மூத்தவர் நகர் நீங்கிப்போய் பலமாதங்கள் ஆகின்றன. அவருக்கு முன் நீங்களும் சென்றுவிட்டீர்கள். இங்கு ஒவ்வொன்றும் முன்னரே வகுத்த தடத்தில் பிழையின்றி சென்று கொண்டிருக்கின்றன. அதுவே சலிப்பூட்டுவதாக ஆகிவிட்டது” என்றாள்.

“நீ விரும்புவது ஒழுங்கை அல்லவா?” என்றான். “நான் ஒருத்தி அல்ல, ஐவர். ஒழுங்கை விரும்பும் அரசியும் நானே. கட்டற்று பெருகவிரும்பும் கள்ளியென்றும் என்னை உணர்கிறேன்.” அர்ஜுனன் “இங்கிருந்து இந்நகரம் ஒவ்வொரு கல்லாக மேலெழுவதை பார்க்கும் பொறுமை எனக்கில்லை. சென்று சென்று மீளும்போது இது வளர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த உவகைக்காகவே சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “எனக்கும் இந்நகரம் மாறாமலிருப்பது போல் உளமயக்கு உள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் காலையில் எழுந்து உப்பரிகையில் வந்து நின்று நகரத்தை பார்க்கையில் ஓரிரவில் பூதங்கள் கட்டி எழுப்பிய மாயபுரிக் கதை நினைவுக்கு வருகிறது.”

“பூதங்கள் உள்ளன, மனிதர்களின் கனவில்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் சென்ற நாடுகளில் இதற்கிணையான ஒரு நகரம் கட்டப்படுகிறதா?” என்றாள். “இணையான நகரமென ஏதுமில்லை. ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு வகையானது. துவாரகை பெரு நகரமென்றால் மகதத்தின் ராஜகிருகமும் பிறிதொரு முறையில் பெருநகரமே.” அவள் விழிகள் சற்று சினத்துடன் சுருங்கின. “துவாரகை அளவுக்கு பெரிய நகரம் பிறிதெங்குள்ளது? இந்திரப்பிரஸ்தம் அதைவிடப் பெரியதாக எழுகிறது” என்றாள். “இப்போது இல்லை என்பது உண்மை. இப்பெருநகரம் கட்டப்பட்ட உடனே இதை விஞ்ச வேண்டுமென்ற எண்ணம் பல்லாயிரம் உள்ளங்களில் விதைக்கப்பட்டுவிட்டது. எங்கோ அது முளைத்து எழுந்து கொண்டிருக்கிறது.”

அவள் கண்கள் மேலும் கூர்மை கொள்ள “இல்லை, இந்நகரைவிட பெரிய நகரம் பாரதவர்ஷத்தில் இருக்கப்போவதில்லை” என்றாள். “இருந்தால்…?” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “அது இந்நகரத்தின் துணை நகரமாக மாறும்” என்றாள். அவள் விழிகளின் ஒளியைக் கண்ட அர்ஜுனன் உரக்க நகைத்து “இதனுள் நுழையும்போதே இதைத்தான் எண்ணிக்கொண்டேன். இந்நகரம் உனது ஆணவத்தின் கல்வெளிப்பாடு. இது ஒருபோதும் கட்டி முழுமை பெறப்போவதில்லை. எங்கோ சிற்பிகளின் உளிகள் சிலம்பிக் கொண்டுதான் இருக்கும்” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள். “ஏனெனில் இது ஒரு மறுமொழி. மறுமொழிகளுக்கு முடிவில்லை.” அவள் மெல்ல பீடத்தில் அமர்ந்தபோது முத்தாரம் நெகிழ்ந்து முலைக்கோடுகளின் நடுவே சென்று ஒடுங்கியது. கடகங்கள் மணிக்கட்டை நோக்கி சரிந்து ஒலி எழுப்பின. “நெடுநேரம் அமர்ந்திருக்க முடியவில்லை” என்றாள். “படுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றான் அர்ஜுனன். “படுத்துக் கொண்டால் தலை சுழற்சி கூடுகிறது. கூடுமானவரை அமர்ந்திருக்கவோ நடக்கவோ வேண்டுமென்று மருத்துவச்சிகள் சொன்னார்கள்.”

அர்ஜுனன் “இங்கு என்ன செய்யவிருக்கிறாய்?” என்றான். “மருத்துவக்குளியல், எண்ணெய்ப்பூச்சு, சாந்து லேபனம், வெந்நீராட்டு, நறும்புகையாட்டு, அதன் பின்பு மூலிகை உணவு.” அர்ஜுனன் புன்னகைக்க “அதன்பின் துயின்றால்தான் நன்கு கனவுகள் வருகின்றன” என்று அவளும் புன்னகைசெய்தாள். “எந்தக் கனவு?” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் வாயெடுப்பதற்குள் “பிறிதொரு மாநகரம் அல்லவா?” என்றான். “உங்களுக்கு இது கேலி. ஆனால் இது உங்கள் நகரம். அதை மறக்கவேண்டியதில்லை” என்றாள்.

“ஆம், எங்கு சென்றாலும் வெண்முகில்நகரத்தைப் பற்றியே ஒரு சூதன் பாடிக்கொண்டிருக்கிறான். இந்திரனின் மைந்தனின் நகரம். அக்கூட்டத்தில் ஒருவராக நின்று அதைக் கேட்கையில் பல சமயம் வாய்விட்டு சிரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.” “ஏன்?” என்றாள் சினத்துடன். “விண்ணில் அமராவதியும் மண்ணில் இந்திரப்பிரஸ்தமும்தான் இந்திரனுக்கு உகந்தவை என்கிறார்கள். இந்திரனை அப்படி இரு நகரங்களுக்குள் நிறுத்திவிட முடியுமா என்ன? எங்கு வேந்தனின் கோல் எழுகிறதோ அங்கெல்லாம் எழுந்தாக வேண்டிய தெய்வம் அல்லவா அவன்?”

“அவன் எங்குமிருக்கட்டும். ஆனால் இங்கு அவன் இருந்தாக வேண்டும்” என்று அவள் சொன்னாள். “இன்னும் சில நாட்களில் கட்டுமானம் முடிந்துவிடும். இன்று காலைதான் சிற்பிகள் அனைவரயும் அழைத்து இறுதி ஆணைகளை பிறப்பித்தேன். அரண்மனைப் பணிகள் முடிந்ததும் நகரத்திற்கு மாபெரும் நகரணி விழா ஒன்றை ஒழுங்கு செய்யவேண்டும்” என்றாள். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இப்போதே இந்நகரம் செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?”

“ஆம். அது நாம் செல்வதற்கு பிறிதொரு இடம் இல்லாததனால். ஆனால் இன்னும் இந்நகரத்தின் மிகச்சிறிய பகுதியே மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு நாடுகளையும் அழைத்து ஒரு நகரணிவிழா நடத்துவோம். அவ்விழவை ஒட்டி புலவர்கள் காவியங்கள் எழுதட்டும். சூதர்கள் கலைகளை உருவாக்கட்டும். அச்செய்தி சென்று சேரும்போதுதான் அனைத்து நிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருவார்கள். இங்குள்ள இல்லங்கள் நிறையும். நகருக்கு வடக்கும் தெற்கும் நான் அமைத்துள்ள துணை நகரங்கள் முழுமை பெறும். வணிகப்பாதைகள் அறுபடாது நீர் பெருக்கு போல் பொதிவண்டிகள் வரும்” என்றாள்.

அர்ஜுனன் “நகரம் நன்கமைந்திருந்தால் குடிவருபவர்களுக்கு என்ன?” என்றான். “இங்கு யாதவர்கள் மட்டும் குடிவருவதை நான் விரும்பவில்லை. அவர்கள் வருவதை கட்டுப்படுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் போர் புரியக்கூடியவர்கள் அல்ல. வணிகம் செய்யக்கூடியவர்களும் அல்ல. ஒருங்கிணைந்து பணியாற்றும் எதையும் அவர்களால் நிறைவு செய்ய முடியாது. இங்கு ஷத்ரியர் வரவேண்டும். வைசியர் வரவேண்டும். அதற்குரியவற்றை நாம் செய்வோம். இங்கு ஒரு ராஜசூயம் நிகழவேண்டும். அதன் பிறகொரு அஸ்வமேதம். வைதிகர் வந்தால் ஷத்ரியரும் வைசியரும் வந்து கூடுவார்கள்.”

“அனைத்தையும் முடிவு செய்துவிட்டாய்” என்றான். “அறிஞர்களையும் நிமித்திகர்களையும் அவையமர்த்தி அனைத்து கோணங்களிலும் பேசி முடிவெடுத்தேன். மூத்தவரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டேன். இளையவர்களுக்கு கருத்துகள் ஏதுமில்லை. அன்னை நான் சொல்வதற்கு முன்னரே நான் எண்ணுவதை எண்ணியிருந்தார்.”

அர்ஜுனன் “மூத்தவர் என்ன சொன்னார்?” “வீண்செலவு என்று. வேறென்ன சொல்லப்போகிறார்? இப்பெருநகரமே வெறும் ஆணவ விளையாட்டு என்று அவருக்கு தோன்றுகிறது. அப்படி பார்த்தால் அரசு என்பதே ஆணவத்தின் வெளிப்பாடுதான். அரியணையும் செங்கோலும் வெண்குடையும் ஆணவமேதான். ஆணவமென்பது தனி மனிதர்களுக்குத்தான் இழிவு. அரசு என ஆவது ஆணவமே. பெருங்காவியங்களாவதும் கலைக்கோபுரங்களாவதும் ஆணவமே. அவை தெய்வங்களுக்கு உகந்தவை.”

“இங்கு இழக்கும் செல்வத்தை விண்ணுலகில் ஈட்டிவிடலாம் என்று சொன்னால் ஒருவேளை ஒப்புக் கொள்வார்” என்றான் அர்ஜுனன். “ஒப்புக்கொண்டுவிட்டார். நான் சொல்லும் எதையும் அவரால் மறுக்கமுடியாது. ஆனால் இன்னும் அகம் மலரவில்லை.” அர்ஜுனன் “ராஜசூயத்திற்கு பாரதவர்ஷத்தின் ஆயிரத்தெட்டு வைதிகர் குலங்களில் இருந்தும் பெரு வைதிகர்கள் வருவார்கள். முனிவர்களும் புலவர்களும் பெரும் சூதர்களும் வருவார்கள். அதை அவரிடம் சொல்” என்றான்.

“அதை சொன்னேன். அது ஒன்றே அவருக்கு எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் நீங்களும் உங்கள் மூத்தவரும் இதை விரும்புவதாக ஒரு சொல் சொன்னால் அவரது தயக்கம் முற்றிலும் மறையும்” என்றாள் திரௌபதி. “இதைச் சொல்லவா இத்தனை விரைந்து இங்கு வரச்சொன்னாய்?” என்றான் அர்ஜுனன். “இல்லை. அதற்காக மட்டும் அல்ல” என்றாள். “நீங்கள் துவராகைக்குச் சென்று உங்கள் தோழரை இந்திரப்பிரஸ்தத்தின் நகரணிவிழவுக்கு அழைக்கவேண்டும்.”

“முறைப்படி அழைப்போம்” என்றான் அர்ஜுனன். “பிறரைப்போல அவர் அழைக்கப்படலாகாது. அவர் இங்கு ராஜசூய வேள்வியின் முதன்மைக் காவலராக வாளேந்தி அமரவேண்டும்.” அர்ஜுனன் சிலகணங்கள் அவளை நோக்கியபின் “நான் சொல்கிறேன்” என்றான். “யாதவ அரசியையும் அழைத்துச்செல்லுங்கள். அவளும் துவாரகை சென்று நாளாகிறது. அபிமன்யு சென்றதே இல்லை” என்றாள் திரௌபதி. அர்ஜுனன் “ஆம்” என்றான்.

அவள் புன்னகையில் முகம் மாறி “உங்கள் மைந்தன் உங்களை பார்க்க வேண்டும் என்றான்” என்றாள். “எனது மைந்தனா?” என்று சொன்னதுமே அச்சொல்லில் இருந்த பிழையை அர்ஜுனன் உணர்ந்து “சுருதகீர்த்தியை பார்க்கவேண்டுமென்று இந்நகர் நுழைந்தபோதே நானும் எண்ணினேன்” என்றான்.

அந்த வாயுதிர்சொல்லை அறியாதது போல் கடந்து “ஏனென்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே உங்களைப்பற்றி கேட்டுக் கொண்டிருந்தான். செவிலியர் மாளிகையில் அவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் உங்கள் வில்திறன் கதைகள் அல்லவா?” என்றாள். சிரித்தபடி முகத்தில் சரிந்த கூந்தலை விலக்கி “தானும் இந்திரனின் மைந்தனா என்று ஒருமுறை கேட்டான். இந்திர குலத்தவன் என்று சொன்னேன். வில்பயில வேண்டும் என்றான். உன் தந்தை வருவார். அவர் உனக்கு வில்லும் அம்பும் தொட்டு எடுத்துக் கொடுக்கட்டும் என்று சொன்னேன்” என்றாள்.

பாஞ்சாலி திரும்பி அருகிலிருந்த வெண்கலத் தாலத்தை இருமுறை தட்டினாள். மறு வாயிலில் வந்து நின்று வணங்கிய செவிலியிடம் “இளவரசனை வரச்சொல்” என்றாள். அர்ஜுனன் மெல்லிய நிலையழிவொன்றை அடைந்தான். இளவரசனின் முகம் அவனுக்கு சற்றும் நினைவுக்கு வரவில்லை. நினைவை துழாவத் துழாவ எங்கெங்கோ பார்த்த ஏதேதோ முகங்கள் நினைவுக்கு வந்தன. அந்த தத்தளிப்பை அவள் அறிந்துவிடக்கூடாதே என்று முகத்தசைகளை இழுத்து மலர்த்திக் கொண்டான். ஆனால் அதற்கு பயனேதும் இல்லை. அவள் அவன் உள்ளத்தை மிக அணுக்கமாக தொடரக் கற்றவள் என்று அறிந்திருந்தான். திரும்பி அவளை பார்த்தபோது மிகுந்த உவகையுடன் அவள் கிளர்ந்து சிவந்திருப்பதை கண்டான். அது நடிப்பல்ல உண்மை என்று தோன்றியது.

வாயிலில் குழந்தையின் குரல் கேட்டது. “எங்கிருந்து வந்திருக்கிறார்?” சிறியபறவைகளுடையது போன்ற சில்லென்னும் சிறுகுரல். “கலிங்கத்திலிருந்து” என்று செவிலி சொன்னாள். கதவைத் திறந்து சுருதகீர்த்தி இருகைகளையும் விரித்தபடி ஓடி வந்து அவனைப் பார்த்ததும் தயங்கி பக்கவாட்டில் காலெடுத்து வைத்து பீடத்தின் விளிம்பை பற்றியபடி நின்றான். அர்ஜுனன் எட்டி அவன் கையைப் பற்றி தன் அருகே இழுக்க உடலை வளைத்து காலை ஊன்றி எதிர்விசை அளித்தான். அர்ஜுனன் அவனை அருகே அழைத்து தன் முழங்கால் மூட்டுகளுக்கு நடுவே நிறுத்திக்கொண்டு இரு சிறுகரங்களையும் பற்றி குனிந்து அவன் முகத்தைப் பார்த்து “நான்தான் உன் தந்தை. கலிங்கத்திலிருந்து வருகிறேன்” என்றான்.

“கலிங்கத்தில் பெருங்கலங்கள் உண்டா?” என்று அவன் கேட்டான். “மிகப்பெரிய கலங்கள் உண்டு. பீதர்களின் கலங்கள் இந்நகரின் பாதியளவுக்கு பெரியவை” என்றான் அர்ஜுனன். “இந்நகர் அளவுக்கா? இந்த அரண்மனை அளவுக்கா?” என்றான் சிறுவன். அவன் புருவங்கள் அடர்த்தியாக இருந்தன. “இந்நகர் அளவுக்கு” என்றான் அர்ஜுனன். ஐயத்துடன் அவன் தன் அன்னையை பார்த்தான். அவள் இதழ்கள் விரிய புன்னகை செய்துகொண்டிருந்தாள். “பெரிய கலங்கள்” என்று அவன் வியப்புடன் சொல்லி “மிகமிகப்பெரியவை… கோட்டை அளவுக்கு!” என்று அர்ஜுனனிடம் சொன்னான்.

அர்ஜுனன் மைந்தனின் நீண்ட குழலைத் தடவி காதுகளைப் பற்றி இழுத்தான். அவன் அர்ஜுனனின் மயிரடர்ந்த கைகளை பற்றிக்கொண்டு உடலை அவன் கால்களில் உரசியபடி நெளிந்து “நான் கப்பலில் செல்வேன்” என்றான். “மறுமுறை செல்லும்போது உன்னை அழைத்துச் செல்கிறேன். நீ கப்பலில் செல்லலாம்” என்றான் அர்ஜுனன். “கப்பலில் பெரிய பாய்களிருக்கும். அவற்றை வானிலிருந்து மாருதர்கள் குனிந்து…” என்று சொன்னபின் உதட்டை குவித்து ஊதி “பூ பூ என்று ஊதுவார்கள்” என்றான். “ஆம், அப்போது அவை பறவைகளைப்போல நீர் மேல் பறந்து செல்லும்” என்றான் அர்ஜுனன்.

“பறவைகளை போல” என்று அவன் கைகளை விரித்தான். “நான் பறவைகளை போல பறப்பேன். அதற்கான மந்திரத்தை சொல்லித்தருவதாக என் செவிலி சொன்னாள். ஆனால் பன்னிரண்டு நாள்…” என்றபின் நான்கு விரல்களை காட்டி “பன்னிரண்டு நாட்கள் மறுப்பே சொல்லாமல் உணவுண்ண வேண்டும். படுக்கச் சொன்னவுடன் படுத்து கண்களை மூடி இப்படியே தூங்கிவிட வேண்டும்” என்றான். “எத்தனை நாட்களாக அதை செய்தாய்?” என்றான் அர்ஜுனன். அவன் குழப்பத்துடன் தாயை பார்த்தபின் “நெடுநாட்களாக” என்றான். “அப்படியென்றால் சரி” என்றான் அர்ஜுனன்.

அவன் மேலும் உளவிசையுடன் “ஆனால் பதினான்கு நாட்கள் ஆனவுடன் அந்த மந்திரத்தை எனக்கு அவள் சொல்லித் தருவாள். அதன்பிறகு நான் இந்த மாளிகையின் மேலேறி இதன் குவை மாடத்திலிருந்து சிறகடித்து மேலே எழுந்து பறப்பேன்” என்றான். அவன் கையை மூக்கின் உள்ளே செலுத்தி எண்ணங்களில் சற்று அழுந்தி விழிதிரும்பி “இந்த மாடத்திலிருந்து முகடில் இருக்கும் கூம்பை பற்றி மாடத்தை தரையிலிருந்து தூக்கி விடுவேன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “ஆனால் கீழே போட்டுவிடக்கூடாது. உடைந்துவிடும் அல்லவா?” என்றான். “கீழே போட மாட்டேன். அதற்குள் அல்லவா அன்னை இருக்கிறார்கள்” என்றான்.

திரௌபதி நகைத்தபடி “அந்த அளவுக்கு கருணை இருக்கிறதே, நன்று நன்று” என்றாள். அர்ஜுனன் “போர்களில்தான் இளையோர் அனைவரும் தங்கள் நிறைவை கற்பனை செய்து கொள்கிறார்கள்” என்றான். “பேருருவம் கொள்ளுதல், அது ஒன்றே அவர்களின் எண்ணத்தை இயக்குகிறது” என்று திரௌபதி சொன்னாள். “இவர்களுக்கு ஒரு துணைவன் வந்திருக்கிறான், அஸ்தினபுரியிலிருந்து” என்றாள். அர்ஜுனன் “அஸ்தினபுரியிலிருந்தா?” என்றான். “ஆம், இளைய கௌரவர் சுபாகுவின் மைந்தன் சுஜயன். ஒரு சேடி அவனுடன் இங்கு வந்திருக்கிறாள்.”

அர்ஜுனன் புருவம் சுருக்கி பார்த்தான். “சிறிய உடல்கொண்ட குழந்தை. பெரும் கோழையாக இருந்திருக்கிறான். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆகவே கங்கைக் கரைக்காட்டில் உங்கள் பழைய முதுசெவிலி மாலினியின் குடிலில் கொண்டு வைத்திருந்திருக்கிறார்கள். மூன்று மாத காலம் அங்கே காட்டில் உங்கள் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறான். அச்சம் நீங்கி ஆண்மை கொண்டுவிட்டானாம். உங்களை ஒருமுறை நேரில் பார்க்கவைக்கலாம் என்று மாலினி எண்ணியிருக்கிறார். ஓராண்டாகவே தூதுவர் வந்துகொண்டே இருந்தனர். அழைத்து வரும்படி சொன்னேன். இரண்டு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பி வருவதற்காக காத்திருந்தார்கள்.”

அர்ஜுனன் “நான் அவனை பார்க்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி “சுஜயன் அண்ணா நன்கு விளையாடுகிறார். அவருக்கு நான் மூன்று கற்களை பரிசாக கொடுத்தேன். நாங்கள் இருவரும் ஒரு படகை எடுத்துக்கொண்டு யமுனை வழியாக கலிங்கத்துக்கு செல்வோம்” என்றான். அர்ஜுனன் “எதற்காக?” என்றான். “கலிங்க இளவரசியை திருமணம் செய்து கொள்வதற்காக” என்றான் சுருதகீர்த்தி. “இருவருமா? ஒரு இளவரசியை மணக்கவா?” என்றாள் திரௌபதி. அவன் குழப்பமாக இருவரையும் பார்த்தபடி “இல்லை” என்றபடி ஒரு விரலைக் காட்டி “ஆம், ஒரு இளவரசி” என்றான்.

அர்ஜுனனை ஓரக்கண்ணால் நோக்கியபின் சிரிப்பை அடக்கி “ஒரு இளவரசிக்கு எத்தனை கணவர்கள்?” என்றாள் திரௌபதி. இருவிரல்களைக் காட்டி “மூன்று” என்றான் அவன். “அபிமன்யு வருவதாக சொன்னான்.” அர்ஜுனன் சிரித்து “இன்னும் இருவரை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றான். திரௌபதி அவன் கைகளை மீண்டும் அழுத்தி “என்ன பேச்சு இது?” என்றாள். “எப்போதும் சொற்களில் சித்தம் இருப்பதில்லை உங்களுக்கு” என்றாள். அர்ஜுனன் சிரித்தான்.

சுருதகீர்த்தி விழிகள் சரிய சிந்தித்து “நாங்கள் மூத்தவர் இருவரையும் சேர்த்துக் கொண்டால் ஐவராகிவிடுவோம் அல்லவா?” என்றான். அர்ஜுனன் “ஆகா… முழுமையாகவே திட்டமிட்டிருக்கிறார்கள்” என்றான். திரும்பி எழுந்துகொண்டு “நான் சுபத்திரையை பார்க்க சென்று கொண்டிருந்தேன்” என்றான். “நான் அறிந்தேன். அதற்கு முன் என்னை நீங்கள் பார்க்க வேண்டுமென்றுதான் சுஷமரை அனுப்பினேன்” என்றாள். “ஏன்?” என்றான். “ஒன்றுமில்லை. அவள் அறியவேண்டுமல்லவா?” என்றாள்.

அர்ஜுனன் “ஒவ்வொரு முறையும் அறிந்துகொண்டே இருக்கவேண்டுமா?” என்றான். “பெண்ணுக்கு இது ஒன்றை மட்டும் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் முகம் கூர்மைகொள்வதைக் கண்டு புன்னகத்து “இப்போது நான் சென்று பார்க்கலாமா?” என்றான். “பார்க்கலாம்” என்றபின் “இவனையும் அழைத்துச் செல்லுங்கள். சுஜயன் அங்குதான் இருக்கிறான் என்றார்கள். அவர்கள் இணைந்து இளவரசியரை மணப்பதைப் பற்றிய திட்டங்களை முழுமைபடுத்தட்டும்” என்றாள். அர்ஜுனன் நகைத்தபடி “பார்ப்போம்” என்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்