முதற்கனல் - 49

பகுதி பத்து : வாழிருள்

[ 1 ]

ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து சில சிறுவர்கள் கிருஷ்ணையின் நீர்ப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணையின் மறுபக்கம் நகருக்குச் செல்லும் பாதை தொடங்கியது. அதற்கு இப்பால் புஷ்கரவனத்துக்குள் நாகர்களின் பன்னிரண்டு ஊர்கள் மட்டுமே இருந்தன. நாகர்குலத்தவர் மட்டுமே அந்தத்துறையில் படகோட்ட ஒப்புதல் இருந்தது. நாகர்களல்லாத எவரும் அங்கே நதியைத் தாண்டுவதில்லை. பாறைகள் நிறைந்த அப்பகுதியில் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட நாகர்களின் படகுகளன்றி பிற நீரிலிறங்கவும் முடியாது.

சாலையின் மறுபக்கம் நான்குநாகர்களின் படகுகளும் காத்திருந்தன. காலையில் சந்தைக்குச் சென்ற நாகர்கள் மாலையில் திரும்புவது வரை பொதுவாக அப்பகுதியில் படகுகள் கிருஷ்ணையில் இறங்குவதில்லை. பயணிகளும் இருப்பதில்லை. கரையில் நின்றிருந்த மருதமரத்தின் அடியில் படகுகளை நீரிலிறங்கிய வேரில் கட்டிவிட்டு நாகர்கள் அமர்ந்திருந்தனர். வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். இருவர் இளைஞர்கள். தூரத்தில் தெரியும் அசைவுகளை நோக்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நின்றனர்.

சற்றுநேரத்தில் புதர்களுக்கு அப்பால் ஆஸ்திகன் தெரிந்தான். இளைஞர்கள் இருவரும் எழுச்சிக் கூச்சலிட்டபோது முதியவர்கள் எழுந்துகொண்டனர். ஓர் இளைஞன் நேராக தன் படகைநோக்கி ஓடி அதை இழுத்து வழியருகே வைத்து “இதுதான்…இந்தப் படகுதான்” என்றான். முதியவர் புன்னகையுடன் “ஒரு படகே போதும். ஒருவர் நான்கு படகுகளில் ஏறமுடியாது” என்றார்.

ஆஸ்திகன் சடைமுடிகள் இருபக்கமும் தோள்வரை தொங்க செம்மண்போல வெயில்பட்டுப் பழுத்த முகமும் புழுதிபடிந்த உடலுமாக வந்தான். அவன் சென்றபோது இருந்தவையில் அந்த விழிகள் மட்டுமே அப்படியே மீண்டன. அவனைக் கண்டதும் நான்கு படகோட்டிகளும் கைகூப்பி வணங்கி நின்றனர். ஆஸ்திகன் நெருங்கி வந்ததும் முதியவர் இருவரும் அவன் காலடியில் விழுந்து வணங்கினர். அதைக்கண்டபின் இளைஞர்கள் ஓடிவந்து அவனைப் பணிந்தனர். அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்.

முதியவர் “எங்கள் குடில்களுக்கு மீண்டு வரும் ஆஸ்திகமுனிவரை நாகர்குலம் வணங்குகிறது” என்று முகமன் சொல்லி படகுக்குக் கொண்டுசென்றான். ஆஸ்திகன் ஏறியபடகு கிருஷ்ணையில் மிதந்ததும் அப்பால் ஆலமரத்து உச்சியில் இருந்த சிறுவர்கள் உரக்கக் கூச்சலிட்டனர். சிலர் இறங்கி கிருஷ்ணைநதிக்கரை நோக்கி ஓடத்தொடங்கினர்.

கிருஷ்ணை அங்கே மலையிடுக்கு போல மண் குழிந்து உருவான பள்ளத்துக்குள் நீலப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சரிவில் வேர்களையே படிகளாகக் கொண்டு அவர்கள் மேலேறி வந்தனர். அவர்கள் வரும் வழியெங்கும் கொன்றைமலர்கள் பொன் விரித்திருந்தன. அரசமரத்தின் இலைகள் கேளா மந்திரத்தில் துடித்தன.

முதுபெண்டிர் ஊர்மன்றிலும் வேலிமுகப்பிலும் கூடி நின்றனர். சிலர் மானசாதேவி வெளியே வருகிறாளா என்று பார்த்தனர். அவள் இல்லமுகப்பில் ஏழுதிரியிட்ட மண்ணகல் விளக்குகள் சுடருடன் நின்றன. ஆஸ்திகன் சிறுவர்களும் நாகர்குலத்து மூத்தாரும் புடைசூழ வேலிமுகப்பை அடைந்ததும் பெண்கள் குலவையிட்டனர். முதுநாகினி கமுகுப்பாளைத் தாலத்தில் நிறைத்த புதுமுயலின் குருதியால் அவனுக்கு ஆரத்தி எடுத்தபின் அந்தக்குருதியை தென்மேற்குநோக்கி மரணத்தின் தேவர்களுக்கு பலியாக வீசினாள். அவன் நெற்றியில் புதுமஞ்சள் சாந்து தொட்டு திலகமிட்டு அழைத்துவந்தார்கள்.

குடில்முன்னால் ஆஸ்திகன் வந்தபோது உள்ளிருந்து கையில் ஒரு மண்பானையுடன் மானசாதேவி வெளியே வந்தாள். ஆஸ்திகன் அவளைப்பார்த்தபடி வாயிலில் நின்றான். “மகனே, இதற்குள் உனக்காக நான் வைத்திருந்த அப்பங்கள் உள்ளன. இவற்றை உண்டுவிட்டு உள்ளே வா” என்று அவள் சொன்னாள். அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான்.

“அன்னையே, உங்கள் மைந்தன் இன்னும் விஷமிழக்காத நாகனே” என்று அவன் சொன்னதும் மானசாதேவி முகம் மலர்ந்து “இது உன் இல்லம். உள்ளே வருக” என்றாள். ஆஸ்திகன் குடிலுக்குள் நுழைந்ததும் அவன் குலம் ஆனந்தக்கூச்சலிட்டது. மூதன்னையர் குலவையிட்டனர். ஆஸ்திகன் அன்று கிருஷ்ணையில் நீராடி தன் சடையையும் மரவுரியையும் களைந்தபின் முயல்தோலால் ஆன ஆடையையும் ஜாதிக்காய் குண்டலத்தையும் அணிந்து தலையில் நீலச்செண்பக மலர்களையும் சூடிக்கொண்டான்.

ஆஸ்திகன் தன் இல்லத்தில் சாணிமெழுகிய தரையில் அமர்ந்து அன்னை அளித்த புல்லரிசிக்கூழையும் சுட்ட மீனையும் உண்டான். அதன்பின் அன்னை விரித்த கோரைப்பாயில் படுத்து அவள் மடியில் தலைவைத்துத் துயின்றான். அவன் அன்னை அவனுடைய மெல்லிய கரங்களையும் வெயிலில் வெந்திருந்த காதுகளையும் கன்னங்களையும் வருடியபடி மயிலிறகு விசிறியால் மெல்ல வீசிக்கொண்டு அவனையே நோக்கியிருந்தாள்.

அன்றுமாலை ஊர்மன்றில் நாகர் குலத்தின் பன்னிரண்டு ஊர்களில் வாழும் மக்களும் கூடினர். பசுஞ்சாணி மெழுகிய மன்றுமேடையில் புலித்தோலாடையும் நெற்றியில் நாகபட முத்திரையிட்ட முடியுமாக அமர்ந்த முதியநாகர்கள் முதுநாகினிகள் பரிமாறிய தேன்சேர்த்து புளிக்கவைக்கப்பட்ட கடுங்கள்ளை குடுவைகளில் இருந்து அருந்தினர். கூடியிருந்த சிறுவர்கள் பூசலிட்டு பேசிச் சிரித்துக்கொண்டு கிழங்குகளை சுட்டமீன் சேர்த்து தின்றனர். ஆஸ்திகன் தன் அன்னையுடன் வந்து மன்றமர்ந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன.

முதுநாகர் எழுந்து அனைவரையும் வணங்கினார். “‘விண்ணகமாக விரிந்த ஆதிநாகத்தை வணங்குகிறேன். அழியாத நாகங்களையும் அவர்களை ஆக்கிய முதல் அன்னை கத்ருவையும் வணங்குகிறேன். ஒருவருடம் முன்பு இத்தினத்தில் அஸ்தினபுரியின் வேள்விக்கூடத்தில் நம் குலத்தின் இறுதிவெற்றியை நிகழ்த்தியவர் நம் குலத்தோன்றல் ஆஸ்திக முனிவர். இது ஆடிமாத ஐந்தாம் வளர்பிறைநாள். இனி இந்நாள் நாகர்குலத்தின் விழவுநாளாக இனிமேல் அமைவதாக. இதை நாகபஞ்சமி என்று நாகர்களின் வழித்தோன்றல்கள் கொண்டாடுவதாக” என்றார்.

VENMURASU_EPI_49_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அங்கிருந்த அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி அதை ஆதரித்தனர். நாகர்குலத்தலைவர்கள் தங்கள் கோல்களை தூக்கி மும்முறை ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர். முதுநாகர் “ஆதிப்பெருநாகங்கள் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை கூடிப்பெற்ற ஆயிரத்து எட்டு பெருங்குலங்கள் பாரதவர்ஷத்தில் உள்ளன. அவற்றில் முதுபெருங்குலமான நம்மை செஞ்சு குடியினர் என்றழைக்கிறார்கள். நாம் வாழும் இந்த மலை புனிதமானது. தவம்செய்யாதவர் இங்கே காலடிவைக்கமுடியாது. ஆகவே இது முனிவர்களால் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது.”

“பெருந்தவத்தாரான ஜரத்காரு முனிவர் தனக்குகந்த துணைவியைத் தேடி இங்கு வந்தார். இந்த ஸ்ரீசைலத்தின் கரையில், கிருஷ்ணை நதிக்கரையில் அவர் நம் குலத்துப்பெண்ணை மணந்து ஆஸ்திக முனிவரின் பிறப்புக்குக் காரணமாக ஆனார். அப்பிறவிக்கான நோக்கமென்ன என்பது இன்று நமக்குத் தெளிவாகியிருக்கிறது. நாகர்களே நம் குலம் பெருமைகொண்டது. இம்மண்ணில் நாகர்குலம் வாழும்வரை நம் பெருமை வாழும்.” அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர்.

“ஜரத்காருவின் துணைவியாகிய நம் குலத்து தவப்பெண் மானசாதேவி நாகங்களின் தலைவனான நாகபூஷணனை எண்ணி தவம்செய்து அவன் வரம் பெற்றவள். அவன் வாழும் கைலாசத்துக்குச் சென்று மீண்டவள். அவளை பாதாளநாகமான வாசுகி தன் சோதரியாக ஏற்றுக்கொண்டார். ஜனமேஜயமன்னரின் வேள்வியில் பாதாளநாகங்கள் அழியத்தொடங்கியபோது இங்கே அவரே வந்து தன் தங்கையிடம் அவள் மகனை அனுப்பும்படி ஆணையிட்டார். மண்ணைப்பிளந்து மாபெரும் கரும்பனை போல வாசுகி எழுந்த வழி இன்னும் நம் வனத்தில் திறந்திருக்கிறது. அந்த அஹோபிலத்தை நாம் இன்று நம் ஆலயமாக வணங்குகிறோம். அதனுள் செல்லும் கரிய இருள் நிறைந்த பாதைவழியாக பாதாளநாகங்களுக்கு நம் பலிகளை அளிக்கிறோம்.”

“நாகர்களே ஜனமேஜயன் என்னும் எளிய மன்னர் ஏன் பாதாளவல்லமைகளாகிய நாகங்களை அழிக்கமுடிந்தது?” என்று முதுநாகர் கேட்டார். “நாகங்கள் மீது அவர்கள் மூதன்னை கத்ருவின் தீச்சொல் ஒன்றிருக்கிறது நாகர்களே. நாககுலத்தவராகிய நம்மனைவர்மீதும் அந்தத் தீச்சொல் உள்ளது.” முதுநாகர் சொல்லத்தொடங்கினார்.

முதற்றாதை தட்சகரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க!

ஊழிமுதல்காலத்தில் அன்னை ஆயிரம் மகவுகளை முட்டையிட்டுப் பெற்றாள். அவை அழியாத நாகங்களாக மாறி மூவுலகையும் நிறைத்தன. அந்நாளில் ஒருமுறை மூதன்னை கத்ரு விண்ணில் நெடுந்தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி போல நகர்ந்து சென்ற இந்திரனின் புரவியான உச்சைசிரவஸின் பேரொலியைக் கேட்டாள். அவளுடைய சோதரியும் வெண்ணிறம் கொண்ட நாகமும் ஆகிய அன்னை வினதையிடம் அது என்ன என்று வினவினாள். பேரொலி எழுப்பும் அதன் பெயர் உச்சைசிரவஸ். இந்திரனின் வாகனமாகிய அது இந்திரநீலம், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன், சிவப்பு நிறங்களில் அமைந்த தலைகளுடன் விண்ணில் பறந்துசெல்கிறது” என்று வினதை பதில் சொன்னாள்.

“அதன் வால் என்ன நிறம்?” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும்? இருட்டே முழுமுதன்மையானது. வண்ணங்களை உருவாக்கும் முடிவற்ற ஆழம் கொண்டது. அங்கிருந்தே புவிசமைக்கும் ஏழு வண்ணங்களும் வருகின்றன” என்றாள் மூதன்னை கத்ரு. அதை பார்த்துவிடுவோம் என அவர்கள் இருவரும் முடிவெடுத்தனர். அப்போட்டியில் வென்றவருக்கு தோற்றவர் அடிமையாக இருக்கவேண்டுமென வஞ்சினம் கூறினர்.

உச்சைசிரவஸ் விண்ணாளும் பேரொளிக்கதிர். அதன் ஏழுவண்ணங்களும் இன்மையில் இருந்தே எழுந்தன. அதை ஒளியாகக் காணும் கண்கள் வினதைக்கும் இருளாகக் காணும் கண்கள் அன்னை கத்ருவுக்கும் முடிவிலா புடவிகளை வைத்து விளையாடும் முதற்றாதையால் அளிக்கப்பட்டிருந்தன. அங்கே வாலென ஏதுமில்லை என உணர்ந்த அன்னை தன் ஆயிரம் மைந்தர்களிடமும் அங்கே சென்று வாலாகத் தொங்கும்படி ஆணையிட்டாள். அவர்களில் விண்ணில் வாழ்ந்த நாகங்கள் அன்றி பிற அனைத்தும் அதைச்செய்ய மறுத்துவிட்டன. “அன்னையே நாங்கள் மும்முறை மண்ணைக்கொத்தி உண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று ஆணையிட்டிருக்கிறோம். நாங்கள் பொய்யைச் சொல்லமுடியாது” என்றன.

விண்ணக நாகங்கள் கார்க்கோடகன் என்னும் நாகத்தின் தலைமையில் அன்னையிடம் “அன்னையே நன்றுதீது உண்மைபொய் என்னும் இருமைகளுக்கு அப்பால் உள்ளது அன்னையின் சொல். உன் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றன. அவ்வண்ணமே அவை பறந்துசென்று விண்ணில் நீந்தி உச்சைசிரவஸின் வாலாக மாறி பல்லாயிரம் கோடி யோஜனை தொலைவுக்கு இருள்தீற்றலாக நீண்டு கிடந்தன.

உச்சைசிரவஸைப் பார்ப்பதற்காக மூதன்னையர் இருவரும் அது செல்லும் வானகத்தின் மூலைக்குப் பறந்து சென்றனர். விண்மீன்கொப்புளங்கள் சிதறும் பால்திரைகளால் ஆன விண்கடலைத் தாண்டிச்சென்றனர். விண்நதிகள் பிறந்து சென்றுமடியும் அந்தப் பெருங்கடலுக்குள்தான் ஊழிமுடிவில் அனைத்தையும் அழித்து தானும் எஞ்சாது சிவன் கைகளுக்குள் மறையும் வடவைத்தீ உறைகிறது. அதன் அலைகளையே தெய்வங்களும் இன்றுவரை கண்டிருக்கிறார்கள். அதை அசைவிலாது கண்டது ஆதிநாகம் மட்டுமே. அது வாழ்க!

அப்பெருங்கடல்மேல் பறந்தபடி மூதன்னையர் கத்ருவும் வினதையும் உச்சைசிரவஸ் வான்திரையைக் கிழிக்கும் பேரொலியுடன் செல்வதைக் கண்டனர். அதன் வால் கருமையாக இருப்பதைக் கண்ட வினதை கண்ணீருடன் பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக்கொண்டாள். ஆயிரம்கோடி வருடம் தமக்கைக்கு அடிமையாக இருப்பதாக அவள் உறுதி சொன்னாள். அன்னையரின் அலகிலா விளையாட்டின் இன்னொரு ஆடல் தொடங்கியது.

நாகர்களே, தன் சொல்லைக் கேட்காத பிள்ளைகளை கத்ரு சினந்து நோக்கினாள். “நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். நான் என நீங்கள் உணரும்போதெல்லாம் அந்த ஆணவம் உங்களில் படமாக விரிவதாக. ஆணவத்தின் முகங்களாகிய காமமும் குரோதமும் மோகமும் உங்கள் இயல்புகளாகுக. பறக்கும் திறனை நீங்கள் இழப்பீர்கள். தவழ்ந்துசெல்லும் வேகம் மட்டுமே கொண்டவர்களாவீர்கள். உங்களுக்குரியதென நீங்கள் கொண்டுள்ள அறத்தால் என்றென்றும் கட்டுண்டவர்களாவீர்கள். எவனொருவன் காமகுரோதமோகங்களை முற்றழிக்க முயல்கிறானோ அவன் முன் உங்கள் ஆற்றல்களையெல்லாம் இழப்பீர்கள். உங்கள் தனியறத்தால் இழுக்கப்பட்டவர்களாக நீங்களே சென்று அவன் வளர்க்கும் வேள்விநெருப்பில் வெந்து அழிவீர்கள்” என்று அன்னை தீச்சொல்லிட்டாள்.

“நாகர்குலமக்களே, நாமும் நம் காமகுரோதமோகங்களால் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். நாமும் நமது அறத்தின் அடிமைகளாக வாழ்கிறோம். மூதன்னையின் தீச்சொல் நம்மையும் யுகங்கள்தோறும் தொடர்கிறது” முதுநாகர் சொன்னார். “அன்று அந்தத் தீச்சொல் கேட்டு நடுங்கி நின்ற மைந்தர்களை நோக்கி முதற்றாதை காசியபர் சொன்னார். மைந்தர்களே நீங்கள் அழியமாட்டீர்கள். புடவி என ஒன்று உள்ளவரை நீங்களும் இருப்பீர்கள். எந்தப்பேரழிவிலும் எஞ்சியிருக்கும் ஒருதுளியில் இருந்து நீங்கள் முழுமையாகவே மீண்டும் பிறந்தெழுவீர்கள்.”

“அவ்வாறே இன்று ஜனமேஜயன் வேள்வியில் பெருநாகங்கள் எரிந்தழிந்தன. நம்குலத்தின் சொல்லால் அவர்களில் மண்ணாளும் பெருநாகமான தட்சன் மீட்கப்பட்டார். அவரிலிருந்து அழியாநாகங்களின் தோன்றல்கள் பிறப்பர். நிழலில் இருந்து நிழல் உருவாவது போல அவர்கள் பெருகி மண்ணையும் பாதாளத்தையும் நிறைப்பர். ஆம் அவ்வாறே ஆகுக!” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம்! ஆம்! ஆம்’ என ஒலியெழுப்பினர்.

நாகங்களுக்கான பூசனை தொடங்கியது. மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள்பூசி நீலமலர்மாலைகள் அணிவித்து கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீலநீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பூசையிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளைப் பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த மானசாதேவியின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையாவிழிகளாக ஆயின. அவள் மூச்சு சர்ப்பச்சீறலாகியது.

“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீலநீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர்.