பகுதி நான்கு : அணையாச்சிதை
[ 2 ]
உருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் “எங்கே பீஷ்மர்? எங்கே அவர்?” என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே வாள் ஒன்றை தீட்டிக்கொண்டிருந்த பீஷ்மர் இமைகளை மட்டும் தூக்கி அவனை ஏறிட்டுப்பார்த்தார். “எடுங்கள் உங்கள் ஆயுதத்தை….” என்றான் விசித்திரவீரியன். பிடிக்கத்தெரியாமல் அவன் வைத்திருந்த வாள் கோணலாக ஆடியது. அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது.