மழைப்பாடல் - 31

வசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவலனிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன் நிலைகொள்ளாதவனாக படகின் கிண்ணகத்திலேயே பாய்க்கயிறுகளைப் பற்றியபடி நடந்துகொண்டிருந்தான்.

படகுக்காரன் கயிற்றை இழுத்து முடிச்சை அவிழ்த்ததும் புகைப்படலம் மேலேறுவதைப்போல வெண்ணிறப்பாய்கள் விம்மி ஏறுவதைக் கண்ட அவன் மனமும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு விடுதலைபெற்றது. காற்றில் துடித்து விம்மி விரிந்து கருவுற்ற பசுக்களைப்போல ஆன பாய்களையே முகம் மலர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபின் படகின் உள்ளறைக்குச் சென்று அங்கே புலித்தோல் மஞ்சத்தில் களைப்புடன் படுத்திருந்த பிருதையின் அருகே அமர்ந்தான்.

பிருதை ரதத்திலும் பின்னர் படகிலும் நாலைந்துமுறை வாயுமிழ்ந்திருந்தமையால் சோர்ந்திருந்தாள். வசுதேவன் அவளிடம் “பிருதை, நான் என்றுமே பெண்ணுடல் கொண்ட வசுதேவன் என்றே உன்னை எண்ணிவந்திருக்கிறேன். நீ செய்யவிருந்த பிழையை நானே செய்ததாக உணர்ந்தமையால்தான் என்னால் அதைத் தாளமுடியவில்லை” என்றான். “நான் உங்களை அழைத்ததும் அதனால்தான் மூத்தவரே” என்றாள் பிருதை. “யாதவர்களுக்குக் கன்றும் மைந்தரும் செல்வங்கள். அவற்றை அழிக்க நெறிகள் ஒப்புவதில்லை. பசுக்களும் பெண்டிரும் கருவுறுதலை தெய்வங்களின் ஆடலென்றே நாம் கருதுகிறோம்.”

“நான் அஞ்சிவிட்டேன்” என்றாள் பிருதை. “எதை?” என்றான் வசுதேவன். அவள் சிலகணங்கள் விழிவிலக்கி அமர்ந்திருந்தபின் திரும்பி “நான் அஞ்சியது என் தந்தையின் உளச்சோர்வைக்குறித்தே” என்றாள். வசுதேவன் “ஆம், நானும் அதையே எண்ணினேன். குந்திபோஜரின் நிலையறிந்தபின் நாம் இச்செய்தியை அவருக்கறிவிப்போம்” என்றான்.

பிருதை தலையசைத்தாள். “நாம் மதுராபுரிக்குச் செல்லவில்லை” என்றான் வசுதேவன். “அங்கே உன்னை வைத்திருந்தால் அது செய்தியாக மாறும். ஆரியவர்த்தமே அறிந்துகொள்ளும்.” பிருதை தலையை அசைத்தாள். “நாம் உத்தரமதுராபுரிக்குச் செல்கிறோம். அங்கே தேவகரின் அரண்மனையில் நீ இருக்கலாம்.” அரைக்கணத்துக்கும் குறைவாக வசுதேவனின் கண்களை பிருதையின் கண்கள் வந்து சந்தித்துச் சென்றன. அவள் முகத்தைத் திருப்பி சாளரம் வழியாகத் தெரிந்த யமுனையின் ஒளிமிக்க நீரைப்பார்த்தபடி “அங்கே கன்னிமாடம் இருக்கிறதா என்ன?” என்றாள்.

அவள் உய்த்தறிந்துவிட்டதை உணர்ந்த வசுதேவன் “ஆம்” என்றான். பின்பு மெல்லிய குரலில் “தேவகரின் மகள் தேவகியை நான் அறிவேன்” என்றான். பிருதை தன் மெல்லிய கைவிரல்களால் மேலாடைநுனியை சுழற்றிக்கொண்டிருப்பதை வசுதேவன் உணர்ந்தான். அவள் என்ன கேட்கப்போகிறாள் என அவன் உள்ளம் வியந்தகணத்தில் அவள் இயல்பான பாவனையில் “அழகியா?” என்றாள்.

வசுதேவன் தனக்குள் புன்னகைசெய்தபடி “அவளும் என்னிடம் உன்னைப்பற்றி இப்படித்தான் கேட்டாள்” என்றான். பிருதையின் விழிகள் வந்து அவனைத் தொட்டு மீண்டன. “உன்னைவிட அழகி என்று நான் அவளிடம் சொன்னேன்.” பிருதையின் இதழ்கள் அகல்சுடர் எழுந்தமர்வதுபோல புன்னகையில் சற்று விரிந்து உடனே மீண்டன. காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியபடி மேலும் இயல்பான குரலில் “அவள் ஏன் கன்னிமாடத்தில் இருக்கிறாள்?” என்றாள். “அவளது பிறவிநூலில் பன்னிரு கட்டங்களில் ஒன்றில் அரவுக்குறை இருப்பதாக நிமித்திகர் சொன்னார்களாம்” என்றான் அவன். “அங்கே நீ எவரும் அறியாமல் இருக்கலாம்.”

“எவருமறியாமல் என்றால்?” என்று பிருதை அவன் கண்களைப்பார்த்துக் கேட்டாள். “குழந்தையை அனைவரும் அறிந்தாகவேண்டுமே.” வசுதேவன் அவளைத் தவிர்த்து “ஆம், ஆனால் நாம் என்னசெய்வது. குந்திபோஜரையும் அவர் அமைச்சர்களையும் எப்படி சமன்செய்து அனைத்தையும் வெளிப்படுத்துவது என்று சிந்திக்கவேண்டும். அதற்குச் சற்று காலம் எடுத்துக்கொள்ளலாம்…” என்றான்.

பிருதை “மூத்தவரே, நம்முடைய யாதவகுலம் ஷத்ரியர்களைப்போலவோ வேளாண்குலங்களைப்போலவோ தந்தைவழி குலமுறைமை கொண்டதல்ல. இங்கே பெண்களே குலத்தொடர்ச்சியை உருவாக்குகிறார்கள். ஆகவேதான் குந்திபோஜர் என்னை தத்தெடுத்திருக்கிறார். என் வயிற்றில் பிறக்கும் குழந்தை குந்திபோஜரின் போஜர்குலத்தைச் சேர்ந்த யாதவன் என்றுதான் நம் குலநெறிகள் வகுக்கும்” என்றாள். “அன்னைக்கும் நீருக்கும் விதிகள் இல்லை என்று நம் குலத்தில் பழமொழி உண்டல்லவா?”

“ஆம்…” என்றான் வசுதேவன். “ஆனால் யாதவர்கள் அனைவருமே ஷத்ரியர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். யாதவகுலங்கள் ஷத்ரியக்குருதியை விழைகின்றன. யாதவப்பெண்கள் எங்கும் எவரிடமும் கருவுற நெறிகள் ஒப்புதலளிக்கின்றன. ஷத்ரியர்களோ பெண்ணின் கருவறையை நாட்டின் கருவூலத்தைவிட பெரிய காவலுடன் பேணுபவர்கள்…” பெருமூச்சுடன் “குந்திபோஜர் உன்னை மகள்கொடை பெற்றதே அதற்காகத்தான்” என்றான்.

“ஆம்… ஆனால் நான் எப்போதும் யாதவப்பெண்தான்… ஷத்ரியன் என்னை மணந்தால் அவன் யாதவமுறைப்படி என் குழந்தையுடன் என்னை மணக்கட்டும். என் குழந்தைக்கு அவனுடைய குலத்தின் பெயரை அளிக்கட்டும். இல்லையேல் என் மகன் போஜனாக வளரட்டும்…” என்றாள் பிருதை. “என் மகன் யாதவகுலத்தின் வெற்றிவீரன். அதை நான் ஒவ்வொரு கணமும் மேலும்மேலும் உறுதியாகவே உணர்கிறேன்.”

அதன்பின் வசுதேவன் ஒன்றும் சொல்லவில்லை. உத்தரமதுராபுரியின் படித்துறையை அவர்கள் அடைந்தபோது வசுதேவன் முன்னரே விரைவுப் படகுவீரனிடம் செய்தியனுப்பியிருந்தபடி மூடுதிரையிட்ட கூண்டுவண்டி வந்து கரையில் காத்திருந்தது. பிருதை இறங்கி உறை உருவப்பட்ட வாளென ஒருகணம் இளவெயிலில் மின்னி உடனே அந்த வண்டிக்குள் நுழைந்துகொண்டாள். அனகையும் பின்னால் ஏறிக்கொண்டாள்.

வசுதேவன் வண்டிக்குப்பின்னால் குதிரையில் வந்தான். வண்டி வடக்குப்பக்கமாகத் திரும்பி யமுனையின் கரையிலேயே சென்ற பெரிய அரசபாதையில் ஓடி கன்னிமாடம் இருந்த சாயாதலம் என்ற சோலையை அடைந்தது. அடர்ந்த வேங்கையும் கொன்றையும் கொங்கும் மருதமும் நிறைந்த சோலை சுற்றிலும் உயர்ந்த மூங்கில்வேலிகளால் காக்கப்பட்டிருந்தது. கன்னிமாடத்துக்குள் அரண்மனைப்பெண்களும் சேடிகளுமன்றி எவரும் அனுமதிக்கப்படவில்லை.

முதற்காவல்முனையிலேயே வசுதேவன் நின்றுவிட்டான். திரைச்சீலையை அணுகி உள்ளே இருந்த பிருதையிடம் “நான் தேவகியிடம் அனைத்தையும் சொல்லியிருக்கிறேன். அவளிடம் என் தூதுப்புறாக்கள் ஒவ்வொரு நாளும் வந்துசேரும். நீ இங்கிருப்பதை நான் குந்திபோஜருக்கோ நம் குலத்துக்கோ சொல்லப்போவதில்லை” என்று சொல்லிவிட்டு விலகினான்.

பிருதை வண்டி உள்ளே செல்வதை ஓசைகள் வழியாகவே அறிந்தாள். வண்டி கன்னிமாடத்தின் முற்றத்தை சென்றடைந்ததும் உள்ளிருந்து முதியசேடி தொடர வந்த மெல்லிய சிறியபெண்தான் தேவகி என்று திரைவிலக்கி இறங்கும்போதே பிருதை புரிந்துகொண்டாள். தேவகி புன்னகையுடன் வந்து “மார்த்திகாவதியின் இளவரசியை வாழ்த்துகிறேன். இந்த கன்னிமாடம் தங்களால் மகிழ்கிறது” என முறைப்படி முகமன் சொன்னாள். அவளுக்குப்பின்னால் வந்த சேடியிடம் இருந்து மங்கலப்பொருட்கள் கொண்ட தட்டை வாங்கி பிருதை முன் நீட்டினாள். பிருதை அதைத் தொட்டுவிட்டு “உத்தரமதுராவின் இளவரசிக்கு வணக்கம். தங்கள் அன்பினால் உள்ளம் மகிழ்கிறேன்” என்றாள்.

தேவகியின் கண்களைச் சந்தித்ததுமே பிருதை அவளை விரும்பினாள். அக்கண்கள் நாய்க்குட்டிகளின் கண்கள் போல தூய அன்புமட்டுமே கொண்டவையாக இருந்தன. இந்தப்பெண் எந்த அரசையும் தலைமை தாங்கக்கூடியவளல்ல, எந்த அரசியல்சூழ்ச்சியையும் அறிந்துகொள்ளக்கூடியவளுமல்ல என்று பிருதை புரிந்துகொண்டாள். மதுராபுரியின் அமைச்சராக இருக்கப்போகும் வசுதேவனுக்கு உகந்த துணைவிதான் அவள். அவனுடைய எளிய பிள்ளைகளை பெற்றுத்தரப்போகிறவள். வசுதேவனைப்போன்ற மதியூகி எப்படி இத்தனை தூயமனம் கொண்ட பெண்ணைத் தெரிவுசெய்தான் என அவள் அகம் வியந்தது. அடுத்தகணமே அதுவல்லவா இயல்பு என்ற எண்ணமும் எழுந்தது.

கன்னிநோன்புக்காக தேவகி வெண்ணிற ஆடைகள் அணிந்து அணிகளேதுமில்லாமல் இருந்தாள். நீண்ட வெண்ணிறமுகத்தின் இருபக்கமும் கருங்குழல்கள் சுருண்டு தொங்கின. வெண்பளிங்காலானவைபோன்ற கன்னங்களிலும் மெல்லியகழுத்திலும் தோள்களிலும் நீலநரம்புகளும் தாமரைக்கொடிகள் போன்ற கைகளும் சிறிய குமிழ்முலைகளும் உள்ளடங்கிய வயிறும் கொண்ட தேவகியின் அகலமான உதடுகளுக்குள் இருந்து மேல்வரிசைப்பல்லின் கீழ்நுனி முத்துச்சரம்போல எப்போதும் தெரிந்துகொண்டிருந்தது. அது அவள் எப்போதும் புன்னகையுடன் இருப்பது போலத் தோன்றச்செய்தது.

முதல்நாளிலேயே அவர்களுக்குள் நல்லுறவு அமைந்தது. தேவகி பிருதையை வியந்த கண்களுடன் பார்த்தாள். வால்சுழற்றி கூடவே வரும் நாய்க்குழவியின் பாவனைகள் தன்னிடம் பேசும்போது அவளிடமிருந்ததை பிருதை கண்டாள். பேதையான தங்கையைப்பெற்ற தமக்கையின் பாவனையை ஒரேநாளிலேயே பிருதை அடைந்தாள். தாய்மையும் நிமிர்வும்கொண்ட தமக்கையிடம் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொள்ளும் தங்கையாக தேவகி தன்னை அமைத்துக்கொண்டாள்.

மூன்றாம்நாள் கன்னிமாடத்தை ஒட்டியிருந்த கொடிமண்டபத்தில் பிருதையுடன் தனித்திருக்கையில் தேவகி அவள் வசுதேவனை முதன்முதலாக மதுராபுரியில் விண்ணவர்கோன் விழவு நிகழ்ச்சியில் கண்டதைப்பற்றியும் அவன் அவளுக்கு ஒரு மலர்மாலையை பாங்கனிடம் கொடுத்தனுப்பியதைப்பற்றியும் சொன்னாள். அதன்பின் இயல்பாக பிருதை எப்படி கருவுற்றாள் என்று கேட்டாள். அது வசுதேவன் சொல்லி அவள் கேட்பது என்பதை பிருதை புரிந்துகொண்டாள்.

VENMURASU_EPI_81_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“நான் குந்திபோஜருக்கு மகளாக அரண்மனைக்கு வந்தேன். அங்கே எனக்கு பொன்னும் மணியும் பட்டும் பல்லக்கும் இருந்தன. அரண்மனையும் சேவகரும் இருந்தனர். ஆனால் நான் சிறைப்பட்டிருப்பதை விரைவிலேயே அறிந்துகொண்டேன். எங்குசென்றாலும் என்முன் மங்கலச்சின்னங்களை ஏந்திய சேடிகளும் கோலேந்திய நிமித்திகனும் செல்லவேண்டும். பின்பக்கம் கவரியுடன் தாசியர் வரவேண்டும். அறிவிப்பில்லாமல் நான் எங்கும் செல்லமுடியாது. அரசமுறைமைகொண்ட சொற்களை மட்டுமே சொல்லவேண்டும். நான் சற்றும் விரும்பாதவர்களிடமெல்லாம் முகமனும் முகப்புகழ்ச்சியும் சொல்லவேண்டும்” என்றாள் பிருதை.

சில நாட்களிலேயே நான் சலித்து களைத்துப்போய்விட்டேன். எனக்கு உவப்பாக இருந்தது அங்கே எனக்களிக்கப்பட்ட கல்விதான். எனக்கு செம்மொழியும் கணிதமும் கற்பிக்கப்பட்டன. அவற்றில் நான் தேறியதும் அரசுநூல்களும் பொருள்நூல்களும் அறநூல்களும் கற்பிக்கப்பட்டன. அரசுநூல் என்னை ஆட்கொண்டது. சென்றகாலங்களில் பேரரசர்கள் செய்த அரசியல்சூழ்ச்சிகளைப்பற்றிய புராணங்களை நான் பேரார்வத்துடன் கற்று அவற்றையே எண்ணிக்கொண்டு அரண்மனையில் உலவினேன். மாவீரனை மணந்து மைந்தர்களைப் பெறுவதைப்பற்றியும், யாதவக்குருதி பாரதவர்ஷத்தை ஆள்வதைப்பற்றியும் கனவுகள் கண்டேன்.

அந்நாளில்தான் முதல்முறையாக உத்தரவனத்தில் கானூணுக்காகச் சென்றோம். காட்டுக்குள் நுழைந்ததுமே காற்றில் ஆடைகள் பறந்துவிலகுவதுபோல என்னிலிருந்து மார்த்திகாவதியின் அரசி மறைந்துபோவதையும் கட்டுகளற்ற ஆயர்குலச்சிறுமி வெளியே வருவதையும் கண்டேன். காட்டுக்குள் சேடியரை விலக்கி நானே உலவினேன். மரங்களில் இருந்து மரங்களுக்குத் தாவினேன். உச்சிப்பாறை ஏறி நின்று சுற்றிலும் விரிந்த ஒளிமிக்க பசுமையைக் கண்டேன். என் மூத்தவரும் நானும் மதுவனத்தில் அலைந்து திரிந்து அறிந்த அனைத்தையும் நினைவுகூர்ந்தேன். தேனீக்களின் முரளலைக்கொண்டு எங்கே குகையிருக்கிறதென அறிந்தேன். காதில் மோதும் நீராவியைக்கொண்டு நீர்நிலையிருக்கும் திசையை உணர்ந்தேன். தரையின் நகத்தடங்களைக்கொண்டு சிறுத்தைகள் எத்திசையில் உள்ளன என்று கணித்தேன். காட்டில்தான் நான் பிருதையாக இருந்தேன்.

மீண்டும் அரண்மனைக்குச் சென்றபோது குந்தியாக மாறினேன். அதன்பின்னர் என்னால் காட்டை விலக்கவே முடியவில்லை. இளவரசியர் காட்டுக்குசெல்ல ஒரு வழி உள்ளதை கண்டடைந்தேன். மார்த்திகாவதியின் போஜர்களுக்குரிய காட்டுதெய்வங்களை நூல்களிலிருந்தும் சூதர்களிடமிருந்தும் அறிந்தேன். அத்தெய்வங்கள் என் கனவில் வந்து பலியும் பூசனையும் கேட்பதாக என் தந்தையிடம் சொன்னேன். கான்பூசனைக்காக செல்லும்போது என் தளைகளைக் களைந்து பிருதையாக மாறினேன். பிருதைக்கு மன்னர்குல நெறிகள் இல்லை. அவளை எந்நேரமும் கண்காணிக்கும் விழிகள் இல்லை. குளியலறைக்குள் மட்டுமே கன்னியர் அறியும் விடுதலை ஒன்று உண்டு. அதை நானறிந்தது காட்டில்தான்.

துர்வாசர் எனக்கு அந்த மந்திரத்தை அளித்தபோது நான் குந்தியாக இருந்தேன். ஆனால் மறுநாள் அனகையுடன் காட்டுக்குள் சென்றபோது பிருதையாக மாறினேன். இளைய காட்டுமிருகமாக என்னை உணர்ந்து சிரித்துக்கூவியபடி இலைகள் நடுவே ஓடி பாறைகளில் தாவி ஏறி முகடில் நின்றபோது துர்வாசரின் மந்திரத்தை நினைவுகூர்ந்தேன். அப்போது அது முதியவரின் வெற்றுக்கற்பனையாகத் தோன்றியது. அரசும் மைந்தரும் அரியணையும் புகழும் எல்லாம் கேலிக்குரியனவாகத் தெரிந்தன.

அனகையிடம் “இதோ என்னிடம் ஒரு மந்திரமுள்ளது….இதைச்சொன்னால் எனக்கு தேவர்கள் மைந்தர்களாகப் பிறப்பார்கள் தெரியுமா?” என்று சொன்னேன். “நான் சூரியனை ஒருமைந்தனாகப் பிறக்கவைப்பேன். அதன்பின்னர் கனிகளை பழுக்கவைக்கும் பொறுப்பு அவனுக்குரியது. வாயுவை இன்னொருமைந்தனாக்குவேன். அவன் என் தேர்களை இழுப்பான். அக்னியை மைந்தனாக்கி சமையலுக்கு நிறுத்துவேன்” என்றேன். அனகை “இந்திரனை என்னசெய்வீர்கள் இளவரசி?” என்றாள். நான் உரக்கச்சிரித்துக்கொண்டு “இந்திரனை விடவே மாட்டேன். என் மஞ்சத்தின் காலில் கட்டிப்போட்டு சேவைசெய்யவைப்பேன்” என்றேன். இருவரும் உரக்கச் சிரித்தோம்.

நான் அப்போது என்னுடைய செம்புரவி அங்கே திகைத்து விழித்தபடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதையோ கண்டு அஞ்சியதுபோல அதன் தோல் அதிர்ந்துகொண்டிருந்தது. கழுத்தைத் திருப்பி மெல்லக் கனைத்தபடி அது எங்களைப்பார்த்தது. தன் உடலை மரங்களில் தேய்த்துக்கொண்டு கால்களால் மண்ணை அறைந்தது. “அதோ என் குதிரை….காட்டின் தழல் அது” என்று கூவியபடி ஓடிப்போய் அதன்மேல் ஏறிக்கொண்டேன். அதன் மீது கடிவாளமோ சேணமோ இல்லை. “இளவரசி அது கட்டற்றதாக இருக்கிறது” என்று அனகை கூவினாள். நான் “நானும் கட்டற்றவளே” என்றேன். “நான் காட்டரசி. இந்தக்காட்டின் விதிகளே எனக்கும். பெண் வேங்கை. பிடியானை. மடமான். அன்னப்பேடை” என்று கூவியபடி புரவியைத் தட்டினேன்.

கட்டற்ற புரவிமீது அதன் பிடரிக்கூந்தலைப் பற்றி பயணம்செய்வது எனக்கு முன்னரும் வழக்கம்தான். எங்கள் ஆயர்குடியில் அது அனைவருமறிந்த வித்தை. ஆனால் அந்தப் பெண்குதிரை அன்று ரஜஸ்வலையாக இருந்தது. ஆகவே சிலகணங்களிலேயே அதனுள்ளிருந்து அதன் விண்ணகதெய்வங்களின் விரைவு வெளிவந்தது. கால்கள் பெருமுரசுக்கோல்கள் போல மண்ணை அறைய, வால் தீக்கதிரின் நுனி என சுழல, கழுத்தை வடதிசை நாரை போல நீட்டி அது பாய்ந்தோடியது. நான் அதை இறுக்கிப்பிடித்துக்கொண்டு அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்த முயன்றேன். அது மரங்களை பாம்புபோல வளைந்து கடந்து, சிற்றாறுகளையும் பள்ளங்களையும் குருவிகளைப்போல தாண்டி, பாறைகளில் குளம்புகள் அதிர ஓடி, முன்னால் சென்றுகொண்டே இருந்தது.

மூன்றுநாழிகை நேரம் சற்றும் விரைவு குறையாமல் ஓடியது புரவி. நான் களைத்து அதன்மேல் இறுகப்பற்றியபடி கண்மூடி ஒண்டியிருந்தேன். யமுனையின் வெள்ளத்தில் செல்லும் மரக்கட்டையைப் பற்றிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். பின்னர் புரவி கனைத்தபடி சுழன்று நின்றபோது கண்விழித்தேன். என் முன்னால் புரவியளவே உயரம்கொண்ட கரிய இளைஞன் ஒருவனைக் கண்டேன். அவன் அதன் காதுகளை இறுகப்பிடித்து கழுத்தை வளைத்து மரத்தோடு சேர்த்து அழுத்தி நிறுத்திவிட்டதை அறிந்தேன்.

அவன் என்னிடம் “புரவியில் சேணமில்லாமல் ஏறுவதற்கு நீ என்ன வேடர்குலத்துப்பெண்ணா? அரசியின் காதணிகளுடன் இருக்கிறாய்?” என்றான். அவனுடைய உயரத்தையும் கரிய நிறத்தையும் ஒளிமிக்க கண்களையும்தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என் பார்வையை உணர்ந்ததும் வேறுபக்கம் திரும்பி “இறங்கிக்கொள்…என் புரவியின் சேணத்தை இதற்கு அணிவிக்கிறேன்” என்றான். நான் இறங்கி அவனுடன் சென்றேன். அவன் என் குதிரையின் காதுகளைப் பிடித்து அதை இழுத்துக்கொண்டு வந்தான்.

அந்தக் காட்டுக்குள் இருந்த சிறிய குகைக்குள் அவன் தன் உடைமைகளை வைத்திருந்தான். அந்தக் குகையிருந்த பாறைக்கு முன்னால் நீலநீர் தேங்கிய பெரிய தடாகம் இருந்தது. அதைச்சுற்றியிருந்த காட்டிலிருந்து வேங்கைமரங்கள் நீரைநோக்கிக் குனிந்து தங்கள் ஆடும் நிழல்களை கிளைநுனிகளால் வருடிக்கொண்டிருந்தன. அவன் குகைக்குள் வைத்திருந்த பொன்னாலான பிடிகொண்ட உடைவாளிலிருந்து அவன் அரசகுலத்தவன் என்று அறிந்துகொண்டேன்.

என்னை குகைமுன் அமரச்செய்துவிட்டு அங்கே நின்றிருந்த தன் வெண்குதிரையின் சேணத்தைக் கழற்றி என்னுடைய குதிரைக்கு அணிவித்தான். “நீங்கள் எப்படி ஊர்திரும்புவீர்கள்?” என்று நான் கேட்டேன்.”மரப்பட்டைகளால் சேணம் செய்ய எனக்குத்தெரியும். மதியம் தாண்டிவிட்டது. இருட்டுக்குள் நீ உன் இல்லத்துக்குச் செல்” என்று அவன் சொன்னான்.

நான் தாகத்துடனிருப்பதைக் கண்டு அவன் “இரு, உனக்கு நீரள்ளி வருகிறேன்” என தன் குதிரையின் விலாவில் தொங்கிய வெண்ணிறமான மரக்குடுவையுடன் தடாகத்தை நோக்கி படிகளில் இறங்கிச்சென்றான். வேங்கையின் நடையை அழகுறச்செய்வது அதன் பின்னங்கால்களும் முன்னங்கால்களும் ஒன்றுடனொன்று தொடர்பேயற்றவை போல இயங்குவதுதான் என்று நினைத்துக்கொண்டேன். அவன் இறங்கியபோது கால்களுக்கும் இடைமுடிச்சுக்கு மேலிருக்கும் உடலுக்கும் தொடர்பேயில்லாததனால்தான் அது வேங்கையின் நடையாகத் தெரிந்தது என்று உணர்ந்தேன்.

அப்போது என் குதிரை அவனுடைய வெண்குதிரையுடன் கழுத்துபிணைத்து முகமுரசி பெருமூச்சுவிடுவதைக் கண்டேன். தாழைமடலவிழ்வதுபோலவோ இளம்பாகு புளித்ததுபோலவோ ஒரு மனமயக்கும் வாசனை எழுந்தது. அது நாகப்பாம்புகளின் முட்டைகள் விரியும் மணம் என பின்னர் அறிந்துகொண்டேன். நான் என்னை வெறும் பெண்ணாக அறிந்தேன். உடனே ஒரு எண்ணம் எழுந்தது. அது குந்தி என்ற இளவரசியின் எண்ணம் அல்ல. பெண் மழைபோன்றவள், அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்து மண்ணை காடாக்கவேண்டியவள் என்று இளமையிலேயே கற்பிக்கப்பட்ட யாதவப்பெண்ணின் எண்ணம்.

நான் துர்வாசர் கற்றுத்தந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன். அது பொருளற்ற ஓர் ஒலியாகவே இருந்தது. அதை மும்முறை சொன்னதுமே அதில் காலையின் முதல்கரிச்சானின் இசை இருப்பதை அறிந்துகொண்டேன். காலைப்பறவைகளின் குரல், முதல்கதிரொளியில் பறக்கும் சிறுபூச்சிகளின் மீட்டல், மலர்கள் மொக்கவிழும் வெடிப்பு, ஒளிர்ந்து சொட்டும் பனியின் தட்டல் என அனைத்தையும் தொகுத்து சுருக்கி ஒரு துளியாக்கியதாக இருந்தது அந்த மந்திரம்.

அது என்னுள் நிறைந்தபோது நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்தேன். என்னுடைய அகத்தின் ஒவ்வொரு துளியும் ஒளியால் நிறைந்தது. என் உடலே படிகத்தாலானதுபோல ஒளிகொண்டது. காற்றில் பறக்கும் பஞ்சுவிதை போல எடையற்றவளாக, சுடர்கொண்டவளாக உணர்ந்தேன். அவனுடைய அசையும் முதுகையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவன் திரும்பி என்னை நோக்கினான். என் சொற்களனைத்தையும் அவன் கேட்டான். அவனுடைய விழிகள் விரிவதை அவ்வளவு தொலைவிலும் கண்டேன். அவன் என்னை நோக்கி காற்றில்பறக்கும் திரைச்சீலையின் ஓவியம்போல ஓசையின்றி மிதந்துவந்தான்.

இளையவளே, இது என் உளத்தோற்றமா என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அந்த இடமெங்கும் பேரொளி நிறைவதைக் கண்டேன். இலைகளின் பரப்புகளெல்லாம் ஆடித்துண்டுகளாயின. அடிமரங்களெல்லாம் பளிங்காயின. நிலம் நீர்ப்பரப்பு போல மின்னியது. பாறைகள் உயிருள்ள தசைகளென அதிர்ந்தன. அந்தத் தடாகம் ஒரு வேள்விக்குளம்போல செவ்வொளி கொண்டதாகியது. அந்த ஒளி ஏறி ஏறி வந்து கண்களை கூசச்செய்தது. செஞ்சூரியன் தன் கதிர்களுடன் மண்ணில் விழுந்தது போல அந்தத் தடாகம் அங்கே ஒளிகொண்டு திகழ்ந்தது.

அதன் நடுவிலிருந்து வருவதுபோல அவன் என்னை நோக்கி வந்தான். நெருங்க நெருங்க அவனுடைய உடல் வைரக்கல்போல ஒளிகொண்டிருப்பதைக் கண்டேன். ஆயிரம்கரங்கள் போல அவனுடலில் இருந்து ஒளிக்கதிர்கள் நான்குபக்கமும் எழுந்தன. அவனுடலின் விளிம்புகள் செம்பிழம்பாக தகதகக்க, நடுவே அவன் கரிய உடல் நீலப்பரப்பாகத் தெரிந்தது. விழிகளை விரித்து நோக்கினேன். வானில் சூரியன் தென்படவில்லை. வெளியெங்கும் ஒருபோதும் கண்டிராத தூயபச்சைக்கதிர் மட்டும் நிறைந்திருந்தது. தொலைதூரத்து மலையடுக்குகளும் மேகக்குவைகளும் அனைத்தும் ஒளிவிடும் மணிப்பசுமை கொண்டிருந்தன.

அக்கணம் நான் எனக்குள் தாளவியலாத அச்சத்தை அடைந்தேன். என்னசெய்துவிட்டேன், என்னசெய்துவிட்டேன் என என் அகம் அரற்றியது. “தேவா, திரும்பிச்செல்லுங்கள். உங்கள் தவப்பயணத்தை எளியவளாகிய நான் என் விளையாட்டுத்தனத்தால் கலைத்துவிட்டேன். என்னைப்பொறுத்தருள்க. தங்கள் ஒளிமணித்தேருக்குத் திரும்பியருள்க” என்று கைகூப்பினேன். அவன் புன்னகைக்கும் உடலுடன் “நீ அழைத்ததன்பொருட்டே வந்தேன். காதலைத் தேடிவராத ஆண்மகன் எங்குள்ளான்?” என்றான்.

“நான் எளியவள். தங்கள் ஒளியை என்னால் தாளமுடியவில்லை” என்றேன். “விண்ணகத்தில் விரையும் பெருங்கோள்களில் எல்லாம் என் ஒளியே படைப்பாக ஆகிறது. மண்ணில் நெளியும் சிறுபுழுக்களை ஊடுருவி கருவுறச்செய்வதும் நானே. என் ஆற்றல் அளவிறந்தது என்றாலும் எந்தச் சிறுமலரும் என் முன் தலைகுனிவதில்லை. புன்னைகைக்கும் வண்ணங்கள் காட்டி என்னை அள்ளி அள்ளி உண்ணவே அவை எழுகின்றன” என்றான். என் கண்களுக்குள் அவன் ஒளி புகுந்ததும் நான் இமயத்துப் பனிக்கட்டி என ஒளியுடன் உருகலானேன். பிருதை விழிமலர்ந்து, குரல் தழைந்து சொல்லிக்கொண்டிருந்தாள்.